அத்தியாயம் 18(2)
அடுத்த நாள், அதிகாலை எழுந்ததும் தான், இவர்களைக் காணவில்லை என்று தெரிந்துகொண்ட பெரியவர்கள் மண்டபத்தின் எல்லா இடங்களில் தேட, எங்கும் அவர்கள் கிடைக்காமல் போக, இறுதியில், ஜெய் சென்று சீர்வரிசை இருந்த ரூமை திறந்து உள் அறைக்குச் சென்று பார்க்க, கீழே தரையில் கெளதம் படுத்திருக்க, அவன் மார்பில் மிருதுளா தலை சாய்த்திருக்க இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஜெய்க்குச் சங்கடத்தில் சிரிப்பு வந்துவிட்டது. உடனே வெளி பகுதிக்கு வந்தவன், தன் தந்தைக்கு ஃபோன் செய்து அவர்கள் இங்கிருக்கிறார்கள் என்பதைச் சொல்லிவிட்டு வைத்தவன், இருவரையும் எப்படி எழுப்புவது என்று யோசிக்க, அடுத்த நொடி தன் போனில் அலாரம் செட் செய்துவிட, சில நொடிகளில் அலாரம் அடிக்கவும், அந்தச் சத்தத்தில் பதறியடித்து எழுந்தனர், மிருதுளாவும் கௌதமும். அவர்கள் எழுந்து வரவும், ஜெய்யும் தான் தான் என்று கூற இருவருக்கும் சங்கடமாகப் போயிற்று.
அதற்குள் எல்லோரும் கிளம்பிக் கொண்டிருக்க, இவர்களும் அறைக்குச் சென்று வேகமாகக் கிளம்பி வர, முகூர்த்த நேரமும் நெருங்கி இருந்தது. பெரியவர்கள், பஞ்சபூதங்கள், தேவர்கள் என்று அனைவரின் ஆசீர்வாதத்தோடு ஆராவின் கழுத்தில் மூன்று முடிச்சையும் தானே போட்டு அவளைத் தன்னில் சரி பாதியாக்கிகொண்டான் ஜெய். தாலி கட்டி முடிந்ததும் அவன் முகத்தில் ஒரு நிறைவு. தன்னவள் தன் மனைவியாகிவிட்டாள், இல்லை மனைவி ஆக்கிக்கொண்டேன் என்ற நிம்மதி.
மற்ற சடங்குகள் எல்லாம் அடுத்தடுத்து நடக்க, மதியத்துக்கு மேல், வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் புதுமணத் தம்பதியர். அடுத்து பால், பழம் கொடுக்கப்பட்டு, சில பல கேலி கிண்டகளுடன் அன்றைய மாலை பொழுது கழிய, இரவு நேரம் வந்தது.
எளிமையாக ஆராவை பெரியவர்கள் அலங்கரிக்க, கைகளால் அவள் முகத்தைத் திருஷ்டி கழித்த பார்வதி, “என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும் கண்ணு.” என்று சொல்லி ஆசீர்வதித்துவிட்டு, மிருதுளாவிடம் அவளை அழைத்து வருமாறு சொல்லிவிட, பெரியவர்கள் அங்கிருந்து சென்றனர். அனைவரும் சென்றதும், ஆராவிடம் பால் சொம்பை கொடுத்த மிருதுளா, “எதையும் மனசில போட்டு குழப்பிக்காத அம்மு. ஜெய் உன்னை ரொம்ப லவ் பண்றார். அதை மட்டும் மனசில வச்சுக்கோ.” என்று சொல்லிவிட்டு அவள் கன்னத்தில் இதழ்பதித்து, ஜெய்யின் அறையில் அவளை விட்டுவிட்டு சென்றாள்.
ஒரு வித எதிர்பார்ப்புடனும், கொஞ்சம் பயத்துடனுமே ஜெய்யின் அறைக்குள் ஆரா நுழைய, பட்டு வேட்டி சட்டையில், கட்டிலில் அமர்ந்து மொபைலை நோன்டி கொண்டிருந்தவன், அவள் வந்ததும் மொபைலை வைத்துவிட்டு, எழுந்து சென்று அறை கதவை தாழ்போட்டான். பின்னர் அவளிடம் வந்தவன், “நீ இந்தப் பக்கம் படுக்கிறியா இல்லை அந்தப் பக்கம் படுத்துகிறியா ஆரா?” என்று கேட்க அவளோ புரியாத பார்வை பார்த்தாள். அவளின் முகபாவனையில், “என்ன ஆரா?! ஏன் அப்படிப் பாக்குற?! டைம் ஆச்சுல. தூங்க வேண்டாமா? அதான் நீ எந்தச் சைட் படுக்கிறன்னு சொல்லிட்டா, நான் ஆப்போசிட் சைட்ல படுத்துப்பேன்.” என்றான்.
ஆனால் அவளோ, “இந்தப் பாலை அம்மா கொடுக்கச் சொன்னாங்க.” என்று தயங்கி தயங்கி சொல்லவும், “ஒஹ்! இப்படி ஒன்னு இருக்கோ!” என்றவன் அவள் கையில் இருந்த பால் டம்ப்ளரை வாங்கிப் பாதிக் குடித்தவன், மீதியை அவளிடம் கொடுத்தான். அவள் குடிப்பதற்குள், கட்டிலை சரி செய்தவன், பீரோவில் இருந்து அவளுக்கு ஒரு போர்வையை எடுத்துவந்து கொடுத்தான். “சரி ஆரா. நீ இப்படிப் படுத்துக்கோ.” என்றுவிட்டு அவன் படுக்கபோக, “ஜெய்!” என்று இவள் அழைக்க, பதிலுக்கு ‘என்ன’ என்பது போல அவன் பார்க்க, “என்ன மன்னிச்சிடுங்க ஜெய். எனக்கு உங்க கோபம் புரியுது. நான் செஞ்சது தப்பு தான். ஆனா…” என்று மேல பேச போனவளை, கை காட்டி தடுத்தவன், “இப்போ இது தேவை இல்லாத விஷயம் ஆரா. நீ மொதல்ல தூங்கு.” என்று சொல்ல, “ப்ளீஸ் ஜெய். நான் சொல்லவறதை கேளுங்க…” என்று அவள் மறுபடியும் பேசப்போக, கோபமுற்றவன்,
“என்ன புரிஞ்சிக்கணும்ன்னு சொல்ற ஆரா. சத்தியமா எனக்குப் புரியல. பேசுற மாதிரியா நீ செஞ்சுருக்க. மனசுக்குள்ள அவ்வளவு லவ்வை வச்சுக்கிட்டு, எப்படி ஆரா உன்னால அப்படிச் செய்ய மனசு வந்தது. பெரிய தியாகியா நீ. ஹம். நீ அப்படிச் செய்றதுனால உன்னோட மனசு மட்டும் தான் கஷ்டப்படும்ன்னு நினைச்சியா! என்னைப் பத்தி நினைச்சு பார்த்தியா ஆரா?! நீயாவது வாயை திறந்து உன்னோட லவ்வை சொல்லல இன்னிவரைக்கும். ஆனா நான், உன்கிட்ட எத்தனை தடவை ப்ரொபோஸ் செஞ்சேன். அப்போ எந்த அளவுக்கு உன்னை லவ் செஞ்சுருப்பேன். அப்படி இருக்கச்ச, எப்படி டி, என் மனசை நோகடிக்க உனக்கு மனசு வந்துது. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்னு நினைச்சு பார்த்தியா! எனக்காக விட்டு கொடுத்தேன்னு மட்டும் சொல்லாத டி. எந்த ரிலேஷன்ஷிப்லையும் அடுத்தவங்க நல்லா இருக்கணும்னு விட்டுக்கொடுக்கிறது இருக்கலாம். ஆனா காதல்ல மட்டும் அந்த விட்டுக்கொடுத்தல் இருக்ககூடாது. ஒருத்தரை ஒருத்தர் உண்மையா விரும்புனா, நிச்சயம் போராடியாவது ஒன்னு சேரனும். அதை விட்டுட்டு, என் லட்சியம் நிறைவேறனும், எனக்குப் பணக்கார பொண்ணு கிடைக்கும்னு, உன்னோட லவ்வை விட்டுக்கொடுக்கிறது, அதுக்குப் பேரு உண்மையான லவ் இல்லை. இதுவே, நாளைக்கு எனக்கு எதாவது ஆகி, நான் நொண்டியா போய்ட்டா….” என்று அவன் சொல்ல, பதறி துடித்தவள், “ப்ளீஸ் ஜெய். அப்படிலாம் சொல்லாதீங்க.” என்று கண்கலங்க, “வாய் வார்த்தைக்காகச் சொல்றதுனால ஒன்னும் ஆகிடாது ஆரா. நான் சொல்றதை கேளு. சப்போஸ் நான் ஹான்டிகேப் ஆகிட்டா, நீ நல்லா இருக்கணும்னு, உன்கிட்ட வேற ஒருத்தனை ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகோன்னு சொன்னா, நீ ஒத்துக்குவியா டி?!” என்று கோபமாகக் கேட்க, அவளோ அழுகையுடன் ‘இல்லை’ என்பது போலத் தலை அசைக்க, “ஹம். அப்போ நீ செஞ்சது மட்டும் நியாயமா டி! என்னை உயிரோட கொலை பண்ண பார்த்துட்டு, இப்போ வந்து சாரி கேட்கிற. போய்த் தூங்குடி.” என்று கத்த, அவளோ, “இப்போ நான் என்ன செஞ்சா உங்க கோபம் போகும்.” என்று குற்ற உணர்வுடன் கேட்க, விறுவிறுவென்று அவள் அருகில் வந்தவன், அவளை அப்படியே கைகளில் ஏந்திக்கொண்டு கட்டிலுக்குச் சென்று, தொப்பென்று அவளைக் கட்டிலில் போட்டுவிட்டு, “மொதல்ல தூங்கு.” என்றவன், மறுப்பக்கம் திரும்பி, “ஃபஸ்ட் நைட்ல மனுஷனோட அவஸ்தை புரியாம, பேசிட்டே இருக்கா.” என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன், “நான் போய் ட்ரெஸ் சேன்ஞ் செஞ்சுட்டு வரேன். நீயும் வேணும்ன்னா சேன்ஞ் செஞ்சுக்கோ.” என்றுவிட்டு, அடுத்த ஐந்து நிமிடத்தில் உடை மாற்றிவிட்டு , அவள் அருகில் வந்து கண்களை மூடி படுத்துக்கொண்டான்.
அவள் மேல் இருக்கும் அன்பை வெளிக்காட்ட வேண்டும் என்று அவனுக்கும் ஆசை இருந்தாலும், அன்றைய பெண்பார்க்கும் படலம், அவன் மனதை ரொம்பவே கூறுபோட்டு இருந்தது. அவள் மனதில் தன் மேல் அன்பு உள்ளது என்று உறுதியாக நம்பினான் ஜெய். என்றாவது ஒரு நாள் அந்த அன்பை வெளிக்கொண்டு வந்துவிடலாம் என்று மலைபோல் நம்பி இருந்தான். ஆனால் அன்று அண்ணன் சம்மதமா என்று கேட்டதற்கு, ஆரா அமைதியாக இருந்தது, அவனின் நினைப்பில் இடியை இறக்கியது. எப்படியோ போராடி இன்று அவளைக் கரம் பிடித்திருந்தாலும், ஒருவேளை தான் இல்லாத சமயத்தில் உண்மையாக யாரேனும் பெண் கேட்டு வந்திருந்தால், இந்நேரம் அவள் வேறு ஒருவனுக்கு மனைவியாகி இருந்திருப்பாள். இதை நினைக்கையில் தான் அவனுக்கு ஆரா மேல் கட்டுகடங்காத கோபம் வருகிறது. ‘அப்படி ஒரு முடிவை அவள் எடுக்கத் துணிந்துவிட்டால் என்றால், தான் இல்லாமல் இருந்துவிடுவாளா அவள்?! என்று நினைக்கையில், தான் மனதளவில் பட்ட கஷ்டத்தை அவள் படட்டும் என்று எண்ணம் எழுந்து அவனை இப்படி நடந்துகொள்ள வைக்கிறது. இந்த எண்ணங்களுடனே அவன் உறங்கி போக, உறங்கிகொண்டிருக்கும் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ஆராவோ, ஒருவித மன பாரத்துடனே கண்ணயர்ந்தாள்.
அடுத்த நாள் காலை ஆராவிற்கு முன்பே எழுந்துகொண்ட ஜெய், தன் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டிருக்கும் ஆராவின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். கன்னத்துக்கு அடியில் உள்ளங்கையை வைத்துகொண்டு, லேசாக வாய் திறந்த மாதிரி அவள் படுத்திருக்க, முடிகற்றையோ அவள் முகத்தைப் பாதி மறைத்திருந்தது.
மெல்ல அவள் முடியை எடுத்துவிட்டவன், “சாரி டி. பப்ளி. உன்னைக் கஷ்ட படுத்தணும்ன்னு எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா! ஏன்னு தெரியல, அன்னைக்கு நீ அப்படி அழுதுட்டு அமைதியா நின்னதை, இப்போ நினைச்சாலும் கோபம் வருது. அதை எப்படிக் காட்டணும்னு தெரியாம, இப்படி நடந்துக்கிறேன். மன்னிச்சிடு டி. என் ஆசை பொண்டாட்டி.” என்றவன், குனிந்து அந்தக் குண்டு கன்னத்தில் முத்தமிட்டு, “கன்னத்தைப் பாரு செம்ம சப்பியா. இதுக்காகவே உன்னைப் பப்ளின்னு கூப்பிடலாம் டி.” என்றவனது பார்வை மேலே இருந்து அவளை அணுவணுவாக ரசிக்க, ஒருகட்டத்தில், அவன் பார்வை அவள் இடுப்பில் வந்து நின்றது. ஒரு பக்கமாக அவள் படுத்திருக்க, அவளின் புடவை சரிந்திருக்க, அவளது இடுப்பு பகுதி ‘பெப்பரப்பே’ என்று தெரிந்து, அவனது இதயத் துடிப்பை எகுற வைத்துக்கொண்டிருந்தது.
சில இல்லை பல நொடிகள் கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவன், ஆர்வத்தில் கைகளை அவள் இடுப்பை நோக்கி கொண்டு செல்ல, அடுத்த நொடி சுதாரித்தவன், பூம்பூம் மாடு போலத் தலையைக் குலுக்கிக்கொண்டு, மற்றொரு கையால் முன்னேறிய கையைத் தடுத்து தன் பக்கம் இழுத்துக்கொண்டவன், “நானே இன்னும் அவளை டச் பன்னல. அதுக்குள்ள நீ ட்ரை பண்ற. படவா ராஸ்கல். பிச்சிடுவேன். பிச்சு.” என்று தனது கரத்தை பார்த்து சொல்ல, அதுவோ, “எது, நானா ட்ரை பண்ணேன். சொல்லுவடா. சொல்லுவ. நீயே என்னைத் தள்ளிவிட்டுட்டு, என்னைத் தப்பு சொல்றியா?!” என்று சண்டைக்கு வர, ‘ஈ’ என்று பல்லை காட்டியவன், “மொதல்ல இந்த இடத்தைக் காலி பண்ணும். இல்லனா எசக்கு புசக்கா எதாவது நடந்துடும்.” என்றவன், சொன்னது போலவே அடுத்த நொடி அந்த இடத்தைக் காலி செய்திருந்தான்.
அடுத்து குளித்து முடித்து ஜெய், ஆரா இருவரும் தாயாராகி வர, சித்ரா வீட்டிலேயே அனைவருக்கும் காலை உணவு பரிமாறபட்டது. அப்பொழுது கெளதம், ஜெய்யிடம் ஆராவை அழைத்துக்கொண்டு ஹனிமூன் சென்றுவர சொல்ல, அவனோ, ஆஃபீஸ்சில் முக்கியமான வேலை இருப்பதாகவும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான். அந்த வார்த்தையில் ஆராவின் முகம் சோர்ந்து போய்விட்டது.
இப்படியாக அவர்களுக்குள் ஒருவித கன்னாம்பூச்சி ஆட்டம் போல நாட்கள் சென்று கொண்டிருக்க, இங்கே கௌதமிற்கோ, அந்த ஆண்டின் கம்பனிகள் மீட்டிங் வந்தது. கௌதமின் அலுவகம் சார்பாக, அந்த ஆண்டின் பெஸ்ட் எம்ப்ளாயியாக அவனைத் தேர்ந்தெடுத்திருந்தனர். இதற்காகப் பிரபல ஹோட்டலில் விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அந்த விழாவிற்கு மற்ற பிரபல கம்பனிகளும் வரவுள்ளனர். இந்த விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்ளும்படி கௌதமிற்கு விழா குழு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தங்கள் வாழ்கையின் திருப்பு முனையை, அங்கே சந்திக்கப் போகிறோம் என்பது தெரியாமல், கௌதமும் மிருதுளாவும் விழா நாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.