அத்தியாயம் 2
பைகளை எடுத்துக்கொண்டு மேலே தங்களது ப்ளாட்டிற்கு வந்த ஆராதனா, தனது தாய் சித்ராவிற்கு அழைத்துத் தாங்கள் நல்லபடியாக வந்ததைத் தெரியப்படுத்தினாள். அப்பொழுது அவர்,
“தனா, இன்னைக்கு மூஹூர்த்த நாள். நல்ல நாள் மா. ரெண்டு பேரும் தலைக்குக் குளிச்சிட்டு, பக்கத்தில கடைக்குப் போய்ப் பால் வாங்கிப் பால் காய்ச்சிடு மா.” என்றார்.
“என்னமா, அதெல்லாம் புதுசா வீடு கட்டி போறவங்க செய்றது. இது பழைய வீடுதான மா. எதுக்கு?” என்று இவள் சோம்பேறித்தனம் பட,
“புது வீட்டுக்கு தான் செய்யணும்னு இல்ல மா. பழைய வீடா இருந்தாலும் நாம மொத மொத குடி இருக்க ஒரு வீட்டுக்கு போனா, பால் காய்ச்சனும். அதுலாம் ஒரு சம்பிரிதாயம் தனம். அதுல சில அர்த்தம் இருக்கு. பால் பொங்கி வர்ற மாதிரி அந்த வீட்டில செல்வம், மகிழ்ச்சி, நிம்மதி பொங்கவும், ஏற்கனவே அந்த வீட்டில இருக்கிற கெட்டது, தரித்திரம், நோய், தீய சக்தி இந்த மாதிரி எதிர்மறை எல்லாம் வெளிய போய், பால் போல வீடு சுத்தம் ஆகணும்னு செய்றது. வயசு பொண்ணுங்க வேற இருக்கீங்க. அதனால் கட்டாயம் செஞ்சுடுங்க. சரியா தனம்?!” என்று கேள்வியாக அவர் நிறுத்த,
இவளோ சலிப்புடன், “சரி ம்மா. செஞ்சுடுறோம்.” என்று பதிலளித்தாள்.
“அப்போ சரி. கரண்ட் அடுப்பு எடுத்துட்டு போயிருக்கல, அதிலேயே செஞ்சுடுங்க. பார்த்துப் பத்திரமா செய்யணும். நம்ம ரகு கிட்ட உங்களுக்குக் காஸ் கனக்க்ஷனுக்கு வாங்குறதுக்குச் சொல்லிடு. அப்படியே…” என்றவர் அதைச் செய் இதைச் செய் என்று பல அறிவுரைகளை வழங்க, கிட்டத்தட்ட அரைமணிநேரம் கழித்துப் போன் பேசிவிட்டு வைத்தவள் தோழி நித்யாவை தேட, அவளும் அதே நேரம் அவளின் பெற்றோரிடம் பேசிவிட்டு வந்தாள். வந்தவளும் அதே சொல்ல, சரி என்று இருவரும் குளித்து முடித்து, அவர்கள் அபார்ட்மென்ட் காம்பவுண்டிற்குள் இருக்கும் கடையைத் தேடி சென்றனர்.
இவர்கள் இருவரும், வரும் திங்கள்கிழமை அன்று வேலையில் சேர வேண்டிய நாள். ஆதலால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து புறபட்டால், அலுவலகம் செல்ல முடியாமல் போகும். சனிக்கிழமை கிளம்பலாம் என்று தோழிகள் எண்ணியிருக்க, இருவீட்டு பெரியவர்களோ, சனிக்கிழமை நல்ல நாள் இல்லை. தூர பயணம் புறப்பட வேண்டாம், என்றும் வியாழக்கிழமை புறப்பட்டால் வெள்ளிகிழமை அங்குப் போய்ச் சேரலாம். அன்று நல்ல நாள் என்பதால் சின்னதாகப் பால் காய்ச்ச உகந்ததாக இருக்கும் என்று முடிவாகக் கூறிவிட, அதன்படியே தோழிகள் இருவரும் வியாழக்கிழமை சென்னையில் இருந்து புறப்பட்டு அன்று வெள்ளிகிழமை பெங்களூரு வந்திருந்தனர்.
போன் பேசிவிட்டு கீழே வந்த தோழிகள், அங்கிருந்த காவலாளியிடம் விசாரித்துக் கொண்டு, பக்கத்து பிளாக்கின் பின்பக்கம் இருந்த ரோட்டின் வழியே செல்ல, அங்கே ஒரு கடை இருந்தது. ஏதோ சின்னக் கடையாக இருக்கும் என்று தோழிகள் நினைத்திருக்க மாறாக, மினி சூப்பர் மார்கெட் என்று சொல்லுமளவுக்குக் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், பரிசு பொருட்கள், ஸ்டேஷனரி, பேக்கரி என்று அனைத்தும் இருந்தது. நல்லவேளை வெளியே எங்கும் செல்லவேண்டாம் என்று நினைத்து நிம்மதி அடைந்தனர்.
இருவருக்கும் நன்றாகச் சமைக்கத் தெரியாது. இங்கே யாரிடமாவது சொல்லி சமைக்க ஆள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று நினைத்திருந்தனர். ஆதலால் பால் பாக்கெட், மாகி நூடில்ஸ், கொறிப்பதற்குப் பிஸ்கட், ஸ்நாக்ஸ் என்று தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வீடு வந்தார்கள்.
ரகு ஏற்கனவே அந்த அபார்ட்மெண்ட்டில் வேலை செய்யும் பெண்மணியிடம் சொல்லி வீட்டை சுத்தம் செய்து கழுவி வைத்திருந்ததால், சற்று முன்பு வாங்கி வந்திருந்த துடைப்பத்தால் இருவரும் வீட்டை பெருக்கிவிட்டு, பெற்றோர் சொன்னது போல, கடவுள் படம், சில பூஜை சாமான்களைக் கிட்சன் ஷெல்பில் அடுக்கிவிட்டு, விளக்கை ஏற்றியவர்கள், சாமி கும்பிட்டுவிட்டு பாலை காய்ச்சினர். அதன் பின் ஏனோ பெரிய வேலையை முடித்தது போல, ஹாலில் போர்வையை விரித்துத் தோழிகள் இருவரும் ரெஸ்ட் எடுக்க அமர்ந்துவிட்டனர்.
அந்த அபார்ட்மென்ட்டில் ஒவ்வொரு தளத்திலும் நான்கு வீடுகள் இருந்தது. படிகளில் ஏறி வந்ததும் இடப்பக்கம், வலப்பக்கம் இரண்டு வீடுகள் இருக்க, எதிரில் இரண்டு வீடுகள் அருகருகே அமைந்திருந்தது. இடப்பக்கம் இருந்த வீட்டில் தான் ஆராதனாவும் நித்யாவும் குடி வந்துள்ளனர். இவர்கள் ஹாலில் நின்று பார்த்தால், எதிர் வீட்டின் ஹால் நன்றாகத் தெரியும்.
இப்பொழுதும் அப்படிதான் தரையில் அமர்ந்திருந்த ஆராதனாவின் கண்களில் எதிர் வீட்டு ஹால் தெரிந்தது. அந்த வீட்டின் கதவு திறந்து இருக்க, கிரில் கேட் மட்டும் சாத்தப்பட்டிருந்தது. தோழியிடம் இவளின் வாய் பேசினாலும், கண்கள் அந்த வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. வழக்கம் போல ஆராவின் கண்கள் யாரையோ எதிர்பார்த்துப் பின் ஏமாந்து போக, அப்பொழுது சட்டென்று அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது.
உடனே தோழியிடம் திரும்பியவள், காய்ச்சிய பாலை பக்கத்தில் இருக்கும் வீடுகளுக்குக் கொடுக்கலாம் என்று சொல்ல, அவளை ஒரு தினுசாகப் பார்த்தாள் நித்யா.
“என்னடி அப்படிப் பாக்குற?!” என்று குழப்பமாக ஆரா கேட்க,
“இல்ல, நல்ல காத்துக் கருப்பு எதுவும் உன்னை அடிச்சிடுச்சான்னு பாக்குறேன்.” என்றாள் நித்யா.
“லூசு, பால் காச்சுன நாள் அதுவுமா என்னடி பேச்சு இது. வந்தேன் வச்சுக்கோ இழுத்து வச்சு உம்மா கொடுத்துடுவேன்.” என்றாள் கண்களை உருட்டி.
அவர்கள் பாஷையில் ‘உம்மா’ என்றால், நாலு அப்பு அப்புவது.
பயந்தவள் போலப் பாவனைச் செய்த நித்யா, பல்லி போலச் சுவற்றோடு ஓட்டிக்கொண்டு, “கன்ஃபார்ம் மச்சி. நிச்சயமா உனக்கு என்னமோ ஆகிடுச்சு.” என்று தலையை உருட்டியபடி சொல்ல, ஆரா எதையோ தேடுவது போல அங்கும் இங்கும் பார்வையைச் சுழற்றினாள்.
“என்ன தேடுற மச்சி? என்னனு சொன்னனா நானும் கூடச் சேர்ந்து தேடுவேன்ல.” என்றபடி நித்யாவும் சுற்றும் முற்றும் பார்க்க,
“இல்ல, அடிச்சா ஒரே அடில மயங்கிடனும். அந்த மாதிரி ஏதாவது பொருள் கிடக்கான்னு தேடுறேன்.” என்றாள் அமைதியாக.
“யாரடி அடிக்கப் போற?!” என்று கேட்ட நித்யா பேய் முழி முழிக்க, இவள் பக்கம் திரும்பிய ஆராதனா, நம்பியார் ரேஞ்சுக்கு தோழியை முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் முறைப்பிலேயே அவள் தன்னைத் தான் கொல்ல பிளான் போடுகிறாள் என்பதைப் புரிந்துகொண்ட நித்யா, எச்சிலை முழுங்கியபடி, முப்பத்திரண்டு பற்களும் தெரியும்படி ‘ஈ’ என்று அசட்டுச் சிரிப்பொன்றை சிரிக்க,
“அட ச்செய்!! வாய மூடுடி. என்னமோ லஞ்சம் கேக்குறவன் தலைய சொறிஞ்சிகிட்டு பல்லை இழிக்கிற மாதிரி இருக்கு. எதுக்கு அப்படிச் சொன்னன்னு ஒழுங்கு மரியாதையா சொல்லிடு……இல்ல கொன்னே போடுவேன்.” என்று ஒற்றை விரலை காட்டி எச்சரித்தாள்.
அவள் சொன்னதும், கப்சிப் என்று வாயை மூடிக்கொண்ட நித்யா, ஆராதனாவை கொலை பழியில் இருந்து காப்பாற்றும் உன்னத எண்ணத்துடன், “காலையில இருந்து ரொம்பப் பொறுப்பா, வீட்டை கிளீன் பண்ணி, சாமிபடம் வச்சு பூஜை செஞ்ச, இப்போ குடும்பஸ்திரீ மாதிரி பக்கத்துக்கு வீட்டுக்கு கொடுக்கலாம்னு சொல்ற. நானாவது வீட்டில நிறைய வேலை செய்வேன்.” என்றவள் ஆராதனாவின் முறைப்பில், வடிவேலு பாணியில் “நாம யாரு வம்பு தும்புக்கும் போறதில்லை. நாம் உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருக்கோம்.” என்று மனதுக்குள் நினைத்தபடி ‘அவ்வவ்‘ என்ற ரேஞ்சில் முகத்தை வைத்துகொண்டு. “அது வந்து நானாவது கொஞ்சமே கொஞ்சம் வேலை செய்வேன். நீ எப்பவும் இப்படிக் கிடையாதே! என்னை விட்டுட்டு எப்போல இருந்து பொறுப்பான பொண்ணா ஆனன்னு அப்படிக் கேட்டேன்.” என்று கேட்டாள்.
“அடியே! இப்போ இது ரொம்ப முக்கியம். புதுசா ஒரு இடத்துக்கு நாம வந்துருக்கோமே, அக்கம் பக்கத்துல தெரிஞ்சு வச்சுக்க வேண்டாமா! அதுக்குத் தான் சொன்னேன்.” என்று கூரியவளின் மனமோ, ‘உண்மையா நீ இவ்ளோ பொறுப்பா எதுக்குச் சொன்னன்னு எனக்குதான தெரியும்.’ என்று அவளை வாரிவிட்டது.
அவளின் பதிலை கேட்ட நித்யா, “எனக்குலாம் இதுல இன்ட்ரெஸ்ட் இல்ல ஆரு. நீயே போய்க் கொடு.” என்று கூறிவிட்டு தனது லேப்டாப்பில் கவனத்தைத் திருப்பினாள்.
அதன் பின் எழுந்து சமையல் அறைக்குச் சென்ற ஆராதனா, ஒரு சின்னச் சொம்பில் காய்ச்சிய பாலை ஊற்றி எடுத்துக்கொண்டவள் அதனுடன், கடையில் வாங்கி வந்திருந்த இனிப்பு, கார தின்பண்டங்களில் கொஞ்சமும், சில காட்பரி சாக்லேட்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வெளியே வந்தவள், மனதில் ஒரு வித குறுகுறுப்புடன் எதிர் வீட்டை நோக்கி சென்றாள்.
கைகள் சில்லிட, மெதுவாகக் காலிங் பெல்லை அடிக்க, சில நொடிகள் கழித்துக் கதவு திறக்கப்பட்டது. அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் கதவை திறந்து, இவளை கேள்வியாகப் பார்த்தவர், “யாருமா?! என்ன வேணும்?!” என்று கேட்டார்.
தனது குரலை செருமிக்கொண்ட ஆராதனா, “வணக்கம் அங்கிள். எதிர்த்த வீட்டுக்கு நானும் என் ஃபிரென்டடும் புதுசா குடி வந்துருக்கோம். இப்போதான் பால் காய்ச்சுனோம். அதான் பக்கத்தில இருக்கிறவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்.” என்று ஒருவாறு சொல்லி முடிக்க, சிரித்த முகத்துடன் இவளை வரவேற்ற அந்தப் பெரியவர், “உள்ள வாம்மா.” என்று கட்டாயபடுத்தி அழைக்க, கண்களை வீட்டுக்குள் சுழற்றியபடி உள்ளே சென்றவள், கையில் வைத்திருந்தவற்றை அவரிடம் கொடுத்தாள்.
அவற்றை வாங்கியவர், இவளை பற்றிப் பொதுவான விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆராதனாவும், தங்கள் சொந்த ஊர் சென்னை என்றும், இங்கே வேலை கிடைத்துள்ளதால், தானும் தன் தோழியும் குடி வந்திருப்பதாகக் கூறினாள். அப்படியே பொதுவாக இருவரும் பேசிக் கொண்டிருக்க, “அப்பா, இன்னைக்கு வர லேட் ஆகும்.” என்று கூறிக்கொண்டு உள் அறையில் இருந்து வெளியே வந்தான் கௌதம். முப்பதுகளில் ஆரம்பத்தில் இருப்பவன். ஆண்களுக்கே உரிய உயரம், அதற்கு ஏற்ற எடை, கோதுமை நிறம், என்று பார்க்க கம்பீரமாக இருந்தான். அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் போல. பார்மல்ஸ் ட்ரெஸ்ஸில் கூடுதல் கம்பீரத்துடன் தெரிந்தான்.
அவனைப் பார்த்த ஆராதனா மனதுக்குள், ‘வாவ்! அத்தான் சூப்பரா இருக்காரு!!’ என்று கண்களை அவன் மேல் இருந்து எடுக்க முடியாமல் பார்க்க, அவள் மனமோ, ‘கூறு கெட்டவளே! அவரு உங்க அக்காவோட ஆளு.’ என்று தலையில் ‘நங்’ என்று கொட்ட, அவளும் பதிலுக்கு ‘அது எனக்குத் தெரியும் நீ மூடு. அத்தான் எனக்கு அண்ணன் மாதிரி. லவ்வரை தான் சைட் அடிச்சு சூப்பரா இருக்குன்னு சொல்வாங்களா?! அண்ணன் தம்பிய, அப்பாவை இந்த ட்ரெஸ்ல சூப்பரா இருக்கீங்கன்னு சொல்ல மாட்டாங்களா?!’ என்று கேட்க, அவளின் நியாயமான பதிலில், அவளின் மனசாட்சி சத்தமில்லமால் கழன்று கொண்டது.
ஹாலில் புதிதாக ஒரு இளம் பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த கெளதம், தன் தந்தையைக் கேள்வியாகப் பார்க்க, அவரோ “எதிர்த்த வீட்டுக்குப் புதுசா குடி வந்திருக்காங்கப்பா. அதான் ஸ்வீட் கொடுத்துட்டு போக வந்துருக்காங்க.” என்று சொன்னவர் இவளிடம் திரும்பி, “என் பெரிய பையன். பேரு கெளதம்.” என்று கூற, அவனைப் பார்த்துச் சிநேகமாகப் புன்னகைத்த ஆராதனா, “ஹாய் சர்! என் பேரு ஆராதனா.” என்று தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாள்.
பதிலுக்கு “ஹாய்!” என்று கூறி புன்னகைத்த கெளதமிற்கு, ‘ஆராதனா’ என்ற பெயரை எங்கேயோ கேட்டது போல இருந்தது. ஒருவேளை அலுவகத்தில் யார் பேராவது இருக்கும் என்று நினைத்துக் கொண்டவன், அவளிடம் பொதுவாக நலம் விசாரித்துவிட்டு தன் தந்தையிடம் திரும்பி, “சரி ப்பா நீங்க பேசிட்டு இருங்க. நான் சாப்பிட்டு கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு ஆராதனாவிடமும் விடைபெற்றுக்கொண்டு டைனிங் டேபிள் நோக்கி சென்றான். அவன் சென்றதும் ஆராதனாவின் பார்வை, சற்று முன்பு கெளதம் வெளியே வந்த அறையை நோட்டம் விட்டது. சில நொடிகள் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் சந்திரசேகரின் [கௌதமின் தந்தை] குரலில் தெளிந்தவள், அவரிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தாள்.
வராண்டாவிற்கு வந்தவள், செருப்பைப் போட்டுக் கொண்டிருக்க, சேகர் உள்ளே சென்றுவிட்டார். அவர் போகும்வரை காத்திருந்தவள், மீண்டும் உள் அறையை நோக்கி பார்வையைச் செலுத்த அந்த நேரம், “எக்ஸ்குயுஸ் மீ!! உள்ள என்ன எட்டி பார்த்துட்டு இருக்கீங்க?!” என்ற கோபமான குரலில் தூக்கிவாரி போட பின்னால் திரும்பினாள்.
ஏதோ திருட வந்தவளை பார்ப்பது போல, இவளை முறைத்தபடி காலையில் பார்த்த பைக் இளைஞன் நின்று கொண்டிருக்க, இவளுக்கோ உள்ளுக்குள் அவமானமாக இருந்தது. ‘ச்செய்! எப்போ பாரு இவன்கிட்ட முறைப்பை வாங்கிறதே வேலையா போச்சு’ என்று எண்ணியவள் அடுத்த நொடி ‘அதைக் கேட்க இவன் யாரு?’ என்று வீரு கொண்டாள். அதே விரைப்புடன், “நீங்க?!” என்றாள் கேள்வியாக. அதற்கு அவனோ, மேலும் கீழும் இவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என் வீட்டு வாசல்ல நின்னுகிட்டு என்னையே கேள்வி கேக்குறீங்க? மொதல்ல நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க. நீங்க யாரு?! எங்க வீட்டுக்குள்ள அப்படி என்னத்தைப் பார்க்குறீங்க?!” என்றான் கோபமாக.
அவன் ‘என் வீடு’ என்று சொன்னதுமே ஆராதனாவுக்கு, ‘வசமா மாட்டிகிட்டோமே! இப்போ என்னத்தைச் சொல்லி சமாளிக்கிறது!’ என்று உதறல் எடுக்க, ‘ஹம்! எதையாவது சொல்லி சமாளிப்போம்.’ என்று தன்னைச் சரி படுத்திக் கொண்டவள், “அது….நாங்க எதிர்த்த வீட்டுக்கு புதுசா வந்துருக்கோம். அதான் உங்க வீட்டுக்கு ஸ்வீட் கொடுத்துட்டு வரேன். சமைக்க ஆள் தேவைபடுது. அதைக் கேட்க மறந்துட்டேன். அதான் கேட்கலாம்னு பார்த்துட்டு இருந்தேன்.” என்று ஒருவாறு திக்கி திணறி வார்த்தைகள் தந்தி அடிக்கச் சொல்லி முடித்தாள்.
ஆனால் அவனோ, இவளை நம்பாத பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரம் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தான் கெளதம். தன் தம்பியை பார்த்ததும், “என்ன ஜெய்! ஆபீஸ் கிளம்பி போனவன் இங்க நிக்குற!” என்று ஆச்சரியமாகக் கேட்க, அவனோ “இல்ல அண்ணா, ஐ.டி கார்டு மறந்து வச்சுட்டேன். அதான் எடுக்கலாம்னு வந்தேன்.” என்றவன் ஆராதனாவை ஒரு பார்வை பார்த்து, “இவங்க?!” என்றான் கேள்வியாக. ஆராதனாவோ ‘எங்கே தான் பார்த்துக் கொண்டிருந்ததைச் சொல்லி விடுவானோ’ என்று உள்ளுக்குள் பயந்துக் கொண்டிருந்தாள்.
ஜெய் திரும்பி பார்த்ததுமே, கெளதம் அவனிடம், “இவங்க பேரு ஆராதனா. எதிர்த்த வீட்டுக்கு புதுசா வந்துருக்காங்க. ஏன் கேட்கிற?” என்று கேட்க, “சமைக்க ஆள் தெரியுமான்னு கேட்டுட்டு இருந்தாங்க. அதான் கேட்டேன்.” என்றான் சமாளிப்பாக. அவன் சொல்லி முடித்ததும் தான், ஆராவிற்குச் சீரான மூச்சே வந்தது.
கௌதமோ “ஒஹ்! சரி ஜெய். எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்.” என்றவன் இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான். கெளதம் போனதும், ஆராவும் தன் வீட்டை நோக்கி நகரப் போக, “ஒரு நிமிஷம்” என்று அவளை நிறுத்திய ஜெய், “பொன்னம்மான்னு ஒருத்தவங்க இருக்காங்க. அவங்க தான் இங்க நிறையப் பேர் வீட்டுல வேலை செய்றாங்க. ஈவ்னிங் எங்க வீட்டுக்கு வருவாங்க. அவங்க கிட்ட கேட்டு பாருங்க.” என்ற தகவலை சொல்ல, திரும்பி அவனைப் பார்த்தவள், சின்ன முறுவலுடன் “தேங்க்ஸ்.” என்று கூறிவிட்டு தன் வீடு நோக்கி சென்றாள்.
போகும் அவளையே ஜெய்யின் கண்கள் பின் தொடர்ந்தது. அடுத்த நொடி நெற்றியை அழுத்த தடவிக் கொண்டவன், “இன்னைக்குக் காலையில இருந்து எங்க திரும்புனாலும் இவளே கண்ணுல படுறாளே!!” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், போன் அடிக்கவும், எடுத்துப் பேசிக்கொண்டே வீட்டுக்குள் சென்றுவிட்டான்.
இங்கே ஆராவோ, ஜெய் போகும் வரை வாசல் கதவு இடுக்கில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் போனதும், நெற்றியில் அடித்துக்கொண்டு “மக்கு! மக்கு! அவன் வீட்டு முன்னாடியே நின்னுகிட்டு, அவனையே கேள்வி கேக்குற. ரொம்பத் திமிரு தான் உனக்கு.” என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டவள் “இனிமே அவன் கண்ணுல படவே கூடாது.” என்று சபதம் எடுத்துக்கொண்டாள், பின்னாளில் நடக்கபோவது தெரியாமல்.
அன்று மதியம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக்கொண்ட தோழிகள், இரவு சப்பாத்தி செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டனர். மாலை இவர்கள் வீட்டுக்கு வந்த நித்யாவின் அண்ணன் ரகு, சில நிமிடங்கள் இருந்து பேசிவிட்டுச் சென்றான். அதன்பின் இவர்களைத் தேடி வந்த பொன்னம்மாவிடம், என்னன்ன வேலை, மாத சம்பளம், எல்லாம் பேசி முடித்தனர் தோழிகள். அதன்படி வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வதோடு, அதிகாலை இருவரும் அலுவலகம் கிளம்புவதற்கு முன்பும், இரவும் சமையலும் செய்துதரவும் பேசப்பட்டது. வரும் திங்கள்கிழமையில் இருந்து வேலைக்கு வருவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினார் பொன்னம்மா.
அடுத்த நாளும் ஒருவாறு செல்ல, ஒவ்வொரு நிமிடமும் ஆராவின் கண்கள் எதிர் வீட்டை ஒரு தேடலுடன் பார்த்துப், பின் ஏமாற்றத்துடன் மீண்டது. அவள் எதிர்பார்க்கும் நபர் யாரோ?