அத்தியாயம் 20(2)
அரண்மனை போல இருந்த அந்த வீட்டில் மாடியில் இருந்த சந்துருவின் அறையில், அன்று இரவே, சடங்கு ஏற்பாடு செய்யபட்டிருக்க, பால் சொம்புடன் அறைக்குள் நுழைந்த மிருதுளாவின் வெட்கத்தில், மயங்கி போன சந்துரு, ஆசையுடன் அவளை அணைத்துக் கொண்டான். அடுத்த இரண்டு நாட்கள் அங்கேயே தங்கிய மிருதுளாவின் குடும்பத்தினர், அதன் பின் மிருதுளாவை மறு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அலுவகத்தில் பத்து நாட்கள் விடுமுறை எடுத்திருந்த சந்துரு மிருதுளாவை அழைத்துக்கொண்டு ஹனிமூன் சென்று வந்தான். அதன் பின் மனமே இல்லாமல் அவளை தாய் வீட்டில் விட்டுவிட்டு, சென்னை புறப்பட்டுச் சென்றான்.
தினமும் காலை, இரவு என்று நேரம் தவறாமல் மிருதுளாவை தொலைபேசியில் அழைத்துப் பேசுபவன், சனிக்கிழமை அதிகாலையே வீட்டிற்கு வந்துவிடுவான். அவர்கள் இருவருக்கும் சந்தோஷமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, இதோ, மிருதுளா திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது.
அவர்கள் வீட்டில் அனைத்துக்கும் வேலை ஆட்கள் இருந்ததனால், மிருதுளாவிற்கு வெறும் மேற்பார்வை பார்க்கும் வேலை தான். சில சமயம் அவளும் சமையல் செய்வாள். மாமியார் மருமகள் உறவும் ஓர் அளவுக்கு நன்றாகச் சென்று கொண்டிருந்தது. மிருதுளா பொதுவாகவே அமைதியான குணம் என்பதால், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்துவிடுவாள்.
மிருதுளாவின் அந்தக் குணம் மீனாட்சிக்கு இன்னும் வசதியாகப் போயிற்று. எங்கே வரபோகிறவள், தன் இடத்தை இந்த வீட்டில் பிடித்துவிடுவாளோ என்று பயந்துக் கொண்டிருந்தவருக்கு, மிருதுளாவின் இந்த அமைதியான குணம், கூடுதல் கர்வத்தைத் தான் குடுத்தது. அதுவே அவரின் செயல்களிலும் வெளிப்படும். கொடுமை என்று சொல்ல முடியாது. ஆனால் எந்த விஷயத்திலும், அவரின் சொல் தான் முடிவு என்பது போலத் தான் நடந்துகொள்வார். மிருதுளா விஷயத்திலும் அப்படிதான். அவளிடம் அவிப்பிராயம் எல்லாம் கேட்கமாட்டார். ‘செய்யவேண்டியது இதுதான். முடித்துவிடு.’ இதுதான் அவரின் செயல்பாடாக இருக்கும். எங்கேயும் வெளியே செல்வதென்றால் கூட, இவர் சொல்லும் புடவையைத் தான் மிருதுளா உடுத்த வேண்டும். இதை உடுத்தாதே, இதைப் பேசாதே, இப்படி நடந்துகொள்ளாதே என்று அவளின் ஒவ்வொரு செயலையும் இவரது கட்டுபாட்டிற்குள் வைத்திருந்தார். மிருதுளாவும் அதன்படியே நடந்துகொள்வது அவருக்குக் கூடுதல் வசதியே. இவர் எது சொன்னாலும், “சரிங்க அத்தை. அப்படியே செஞ்சுடறேன்.” என்று பணிந்து போய்விடுவாள்.
அந்த மாதம் அவர்கள் ஊரில் திருவிழா என்பதால், சந்துருவின் சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்திருந்தனர். இளையவளான மீனா மிருதுளாவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசுவாள், ஆனால் மூத்தவள் சுஜாதாவின் பார்வையே மிருதுளாவை மட்டம் தட்டுவதாகத் தான் இருக்கும். இதை அறிந்தும், மிருதுளா அவளிடம் எதையும் காட்டிக்கொள்ள மாட்டாள்.
அன்றைய தினம் அப்படித் தான், மிருதுளா கிட்சனில் இருக்கிறாள் என்பது தெரியாமல், சுஜாதா தன் தாயிடம் பேசிக் கொண்டிருந்தாள். “போயும் போயும் உனக்கு இந்த வீட்டில தான் பொண்ணு கிடைச்சுதா மா. சரியான பிச்சகார குடும்பமா இருக்காங்க. சீருன்னு செஞ்சதே ரொம்பக் கம்மி. இதுல மேற்கொண்டு செய்யவேண்டிய முறை எல்லாம், கணக்கு பார்த்துச் செலவு செய்றாங்க. இவ்ளோ பெரிய சொத்துக்கு என் தம்பிதான் ஒரே வாரிசு. எவ்ளோ பெரிய குடும்பம் நாம, அவனோட பொண்டாட்டி ஊரே மூக்குல விரலை வைக்கிற மாதிரி சீறு சினத்தியோட வர வேண்டாமா! என் மாமியாரு, உன் தம்பி பொண்டாட்டி என்ன கொண்டு வந்தான்னு கேட்கும்போது, எனக்குச் சொல்லவே அவமானமா இருக்கு.” என்று சொல்ல, அதற்கு மீனாட்சியோ, “அடியே கூறுகெட்டவளே! உனக்குத் தெரிஞ்ச விஷயம் எனக்குத் தெரியாதாடி. காரணமாத்தான் நம்மளை விட வசதி குறைச்சலான வீட்டில பொண்ணு எடுத்தேன். இங்கே இருந்து கல்யாணம் செஞ்சு போனியே, நீ அங்க எப்படி இருக்க! உன் மாமியாரையே காலுக்குக் கீழே வச்சுருக்கிற மாதிரி தான மவுசா இருக்க. நம்மளை மாதிரி உன் மாமியார் வீட்டுலையும் வசதி இருந்தும், நீ வைரமும், தங்கமும் கை நிறையச் சீறும் கொண்டுட்டு போனதால தான, உன் மாமியா வச்சுருந்த கொத்துசாவி இப்போ உன் கைல இருக்கு. இதே மாதிரி உன் தம்பிக்கும் பொண்டாட்டி வந்துட்டா, அப்புறம் என் கைல இருக்கிற கொத்துசாவி அவகிட்ட போயடுச்சுனா! அதனால தான், வசதி குறைச்சல்னாலும், அமைதியான இந்தப் பொண்ணைத் தேர்ந்தெடுத்தேன்.” என்று இவர் நீண்ட விளக்கம் கொடுக்க, மகளோ, “அதுதான பார்த்தேன். என்னைப் பெத்தவ, காரணமில்லாம எதுவும் செய்யமாட்டாளேன்னு.” என்று மெச்சி கொண்டாள்.
பரம்பரை பாரம்பரியமாகப் பணக்காரர்கள் என்பதால், கடனை உடனை வாங்கித் திருமணம் செய்யும் கஷ்டம் அவர்களுக்குத் தெரியவில்லை. கையில் நிறையப் பணம் இருப்பதால், எவ்வளவு செலவு செய்கிறோம் என்றே தெரியாமல் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து, வைர தங்க ஆபரணங்களைச் சீராகப் பெற்றுக்கொண்டு சென்ற சுஜாதாவால், மிருதுளாவின் நிலைமை புரியவில்லை. இனி புரியவும் வாய்ப்பு இல்லை.
இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவிற்குக் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. அவை சொட்டுகலாகத் தரையில் விழ, அதைப் பார்த்துவிட்ட சமையல் செய்யும் பெண், “என்ன ஆச்சு மா. ஏன் அழறீங்க?!” என்று கேட்க, சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டவள், “அதெல்லாம் ஒன்னும் இல்லை க்கா. வெங்காயம் ரொம்பக் காரமா இருக்கு போல. அதான் கண்ணுல இருந்து தண்ணி வந்துட்டே இருக்கு.“ என்று சொன்னவள், கண்களைத் துடைத்துக்கொண்டு, வேலை செய்யும் சாக்கில் பின்பக்கம் சென்றுவிட்டாள். அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண், “வசதி வாய்ப்பு அளவுக்கு அதிகமாவே இருந்தும், இந்த வீட்டுப் பொம்பளைங்களுக்குக் குணம் கொஞ்ச கூட இல்லை. போயும் போயும், இந்த வீட்டில இந்தப் பொண்ணு வாழ வந்துருக்கே.” என்று வருத்தபட்டுகொண்டு சென்றார்.
சந்துருவிற்கு அலுவகம் இருப்பதால், அவன் திருவிழாவிற்கு வரவில்லை. அன்று மாலை அனைவரும் திருவிழாவிற்குக் கிளம்ப, வீட்டின் மருமகள் என்ற முறையில் போகவேண்டி இருப்பதால், மிருதுளாவும், எளிய பட்டுபுடவையில், குறைந்த அளவு நகைகளுடன் புறப்பட்டுக் கீழே வந்தாள். அவளைப் பார்த்ததும் முகம் சுளித்த சுஜாதா, “இந்த ஊரில, தின புழப்பு புழைக்கிறவன் பொண்டாட்டியே, இதை விட உசத்தியா உடுதுட்டி வருவா. நாட்டாமை வீட்டு மருமவ, வெறும் ஒரு ஆரத்தை போட்டுட்டு வரா. உங்க வீட்டுல பொண்ணு எடுக்கனும்னு எங்க தலையெழுத்து.” என்று அவளுக்குக் கேட்கும்படி சொல்ல, மிருதுளாவிற்குத் திருவிழாவிற்குப் போக வேண்டும் என்ற எண்ணமே விட்டுப்போனது.
அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்த முத்துபாண்டிக்கு, தன் மகளின் பேச்சுக் காதில் விழ, “ஏற்கனவே இந்த வீட்டில, சொத்து பத்துக் கொட்டித்தான் கிடக்கு மகளே. காசு பணத்தை விட நல்ல குணம் தான் நம்ம வீட்டில குறைச்சு இருக்கு. அதுல என் மருமக எல்லாரையும் விட உசத்தி தான்.” என்றார் ‘எல்லாரையும்’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து.
பொதுவாக முத்துபாண்டி வீட்டுக்குள் நடக்கும் விஷயங்களில் தலையிட மாட்டார். ஆனால் மிருதுளாவை அப்படிப் பேசியது, அந்த வீட்டின் மருமகளை, தன் கவுரவத்தைச் சொல்வது போலவே அவருக்குத் தோன்றியது. சொன்னது தன் மகளாகவே இருந்தும், தன் வீட்டில் வாழ வந்திருக்கும் பெண்ணைச் சொல்வதை அவர் ஏற்கவில்லை.
பின் தன் மனைவியை அழைத்தவர், “மீனாட்சி, நம்ம ரூம் பீரோவில, நம்ம குடும்பப் பரம்பரை நகைங்க இருக்குல. அதை எடுத்துட்டு வா.” என்று கட்டளையிட, அவர் சென்று எடுத்து வந்ததும், “இதையெல்லாம் நம்ம மருமககிட்ட கொடு. என்னைக்கு இருந்தாலும் இதெல்லாம் அவளுக்குத் தான் சொந்தம்.” என்றவர் மிருதுளா பக்கம் திரும்பி, “இதுல உனக்கு எது பிடிச்சிருக்கோ, எடுத்து போட்டுட்டு போ தாயி.” என்று சொல்ல சுஜாதுவுக்கோ, சிறு வயதில் இருந்து இந்த நகைகளை எல்லாம் பார்த்து பார்த்து, அதன் மேல் மனதின் ஓரத்தில் ஆசை இருக்க, இப்பொழுது அவற்றை எல்லாம் பெட்டியோடு மிருதுளாவிற்குத் தன் தந்தை தூக்கி கொடுப்பதைப் பார்க்கும்போது, ‘பிச்சைகார குடும்பத்தில புறந்த, இதுக்கு வந்த வாழ்வ பாரு.‘ என்று மனதுக்குள் வயிற்ரெரிச்சலாக இருந்தது.
மீனாட்சிக்கும் அப்படிதான். இதெல்லாம் வீட்டுக்கு வரபோகும் மருகளுக்குத் தான் என்று தெரிந்தும், தன் மகள்களுக்கு இந்த நகைகள் மேல் ஆசை இருப்பது தெரிந்தமையால், மிருதுளா இதெல்லாம் கேட்கவா போகிறாள் என்ற எண்ணத்தில், தன் மகள்களுக்கு ஆளுக்குப் பாதியாகக் கொடுக்கலாம், பின்னாடி தேவைபட்டாள் மருமகளுக்கு வேறு புது நகைகள் வாங்கிக் கொடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் இப்பொழுது தன் கணவர் சொன்னபிறகு அதைச் செய்யாமல் இருக்க முடியுமா, மகளை ஓரகண்ணால் பார்த்துக்கொண்டே அந்தப் பெட்டியை மிருதுளாவிடம் கொடுத்தார்.
ஆனால் மிருதுளாவோ, “ஐயோ!! மாமா, இது எல்லாம் எனக்கு எதுக்கு. உங்கிட்டவே இருக்கட்டும். இல்லை அண்ணிங்களுக்குக் கொடுங்க. நான் இதெல்லாம் போட மாட்டேன் மாமா.” என்றாள். பெட்டியை எடுத்து வரும்பொழுதே, சுஜாதாவின் முகம் போன போக்கை வைத்தே, இதில் அவளுக்கு விருப்பம் இல்லை என்பதைப் புரிந்திருந்தாள் மிருதுளா. அத்தோடு இயல்பாகவே அவளுக்கு நகைகள் மேல் ஈடுபாடு இருந்தது இல்லை.
ஆனால் முத்துபாண்டியோ, கட்டாயம் நகைகளை அவள் வைத்துக் கொள்ளவேண்டும் என்று முடிவாகச் சொல்லிவிடவே, பெரியவரின் வார்த்தைக்காகவே, அரை மனதாக அவற்றை வாங்கிக்கொண்டவள், அதில் இருந்து ஒரு அட்டிகையும், பதக்கம் வைத்த செய்னையும், கூடவே வளையல்களையும் போட்டு கொண்டாள். இவளை பார்த்த முத்துபாண்டி, “மாஹாலக்ஷ்மி மாதிரி இருக்க ம்மா.” என்று கூறிவிட்டு சென்றார்.
இப்படியே ஒருவிதமாக நாட்கள் செல்ல, கிட்டத்தட்ட ஐந்து மாதம் கடந்திருந்தது. அன்றொரு நாள், சமையல்கட்டில் நின்றுகொண்டிருந்த மிருதுளாவிற்கு, குமட்டிக்கொண்டு வரவே, கொள்ளைபுறம் சென்றவள் வயிற்றை பிடித்துக்கொண்டு வாந்தி எடுக்க, சமையல் செய்யும் பெண்மணி, ஏதோ நல்ல செய்தி என்று நினைத்தவர், ஓடிசென்று மீனாட்சியை அழைத்துக்கொண்டு வர, ‘ஈ‘ என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டே வந்தவர், மிருதுளாவிடம் கேட்க, “அதெல்லாம் இல்லை அத்தை. நேத்து சாப்பிட்ட சாப்பாடு ஒதுக்கல போல. அதான் வாந்தி வந்துடுச்சு.” என்று அவள் பதில் கூறினாள்.
“ஹுக்கும், ஒன்னும் இல்லையா. ஏதோ நல்ல செய்தியோன்னு சந்தோஷபட்டேன். ஏற்கனவே அஞ்சு மாசத்துக்கு மேல ஆகிடுச்சு. இன்னும் ஒரு புழு பூச்சியைக் காணோம்.” என்றவர், “உனக்கு உடம்புல, குறை ஏதும் இல்லையே?!” என்று வேலை செய்பவர்கள் முன்பு பட்டென்று கேட்டுவிட, மொலுகென்று கண்களில் நீர் நிறைந்துவிட, கூனு குறுகி போய்விட்டாள் மிருதுளா. “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அத்தை.“ என்று பதில் சொன்னவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை. “அப்போ, நீயா எதுவும் தள்ளி போட்டுட்டு இருக்கியா?!” என்று அடுத்த நெருப்பை அவர் வீச, கலங்கி போய் நின்று இருந்தவளுக்கு அழுகையே வந்துவிட்டது.
“அதெல்லாம் எதுவும் செய்யலை அத்தை.” என்று மென்று முழுங்கி வார்த்தையைச் சொன்னவளுக்கு, அங்கு நிற்கவே கசந்தது. “நீயா எதையும் செஞ்சுட்டு இருக்காம, கூடிய சீக்கிரம் புள்ள பெத்துக்குற வழிய பாரு.“ என்று கூறிவிட்டு சென்றார். அவர் சென்றதும் அழுகையுடன் தன் அறைக்குச் சென்றுவிட்டாள் மிருதுளா. ஆயினும் இங்கு நடந்ததைச் சந்துருவிடம் அவள் சொல்லவில்லை.
குழந்தை என்பது நம் கையிலா இருக்கிறது. வைத்துக்கொண்டே மறைத்து வைப்பதற்கு. அது இயற்கை நமக்குக் கொடுக்கும் வரம் அல்லவா. யார் யாருக்கு எப்பொழுது என்று அந்த ஆண்டவன் தானே தீர்மானித்து இருக்கிறான். இந்த உலகத்தில் வேறு எந்தப் பொருளையும் பணம் குடுத்து வாங்கிவிடலாம், ஆனால் குழந்தை வரத்தை கோடி கொடியாகக் கொட்டி கொடுத்தாலும் வாங்கமுடியாது. அதிவேகமாக வளர்ந்து வரும் அறிவியல் மருத்துவத்தால் கூட, சில பேருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது இல்லையே. இதை என்னவென்று சொல்ல. குழந்தை என்னும் பொக்கிஷத்தின் சாவி, அந்தக் கடுவுளிடம் மட்டும் தான் இருக்கிறது. அதை எப்பொழுது தரவேண்டுமோ அப்பொழுது நிச்சயம் நமக்குத் தருவார். இதை மீனாட்சி போன்ற மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் முடிந்து ஒரு மாதம் சென்றிருந்த நிலையில், காரில் சென்றுக் கொண்டிருந்த முத்துபாண்டி, விபத்தில் சிக்கி உயிர் இழந்தார். செய்தி கேட்டு மயங்கி சரிந்தார் மீனாட்சி. சந்துரு அலுவகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு உடனே ஊருக்கு கிளம்பி வந்தான். இங்கே மயக்கத்தில் இருந்து தெளிந்த மீனாட்சி, “ஐயோ! நேத்து வரைக்கும் கல்லு மாதிர் இருந்த மனுசன், இன்னைக்கு இப்படிப் போயிட்டாரே. நான் எங்க போய் முறையிடுவேன்.” என்று அழுது கரைந்தவர், மிருதுளா பக்கம் திரும்பி, “எல்லாம் இவ வந்த நேரம். என்னைக்கு இவ இந்த வீட்டில கால் எடுத்து வாச்சாளோ, அன்னையில இருந்து இந்த வீட்டில எதுவுமே சரி இல்லை. அடி பாதகத்தி. நீ நல்லா இருப்பியாடி. என் தாலியை அறுத்துட்டியே.” என்று அவர் இவளை குற்றம் சாட்ட, அதிர்ந்து போனாள் மிருதுளா.
“அத்தை நா…..” என்று பதறி போய்ப் பேச போனவளை, ஆங்கராமாகத் தடுத்தவர், “வாயை மூடுடி. வசதி இல்லைனாலும் போனா போகுதேன்னு உன்னை, என் பையனுக்குக் கல்யாணம் செஞ்சு, கூட்டிட்டு வந்தேனே. ஆனா நீ இப்படி ராசி இல்லாதவளா இருப்பன்னு தெரியாம போச்சே. நீ ராசிகெட்டவ டி. அதனால தான் உன் வயத்துல இன்னும் ஒரு புழு பூச்சி கூட உருவாகல.” என்றவர் மேற்கொண்டு அவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டே போக, மிருதுளாவோ, எதிர்த்து பேச முடியாமல், அழுகையுடன் தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.
காரியம் முடித்து வீட்டிற்கு வந்த சந்துருவிற்கு, யார் மூலமாகவோ இதெல்லாம் தெரியவர, நேரே மிருதுளாவிடம் சென்றவன், அவளது உடமைகளை எல்லாம் பெட்டியில் எடுத்து அடுக்கிவைக்கச் சொல்லிவிட்டு, மீனாட்சியிடம் சென்று, “நான் என் பொண்டாட்டியா சென்னைக்குக் கூட்டிட்டு போறேன்.” என்று சொல்லிட, அதற்கும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர், “என் புருஷனை தான் என் கிட்ட இருந்து பிரிச்சிட்டு போனா. இப்போ என் பையனையும் பிரிச்சிட்டு போறாளே!” என்று மீண்டும் மிருதுளாவை பொரிந்து, வசைபாட, “அம்மா, சும்மா கத்தாத ம்மா. அவளுக்கு உங்களுக்கு ஒத்துபோகல. அவ இங்க இருந்தான்னா உங்களுக்கும் அவளுக்கும் சண்டை தான் வரும். அதனால நாங்க சென்னைக்கே போறோம். கொஞ்ச நாள் கழிச்சு ஊருக்கு வரோம்.“ என்று முடிவாகச் சொன்னவன், அடுத்தப் பத்து நாட்களில் மிருதுளாவை கூடிக்கொண்டு சென்னைக்கே புறப்பட்டுவிட்டான்.
தன் கணவனின் செயலில் நெகிழ்ந்து போனவள், நிம்மதி பெரு மூச்சுடன் அவனுடன் சென்னைக்குக் கிளம்பி போனாள். ஆனால் அங்கே போய் அவனுடையை இன்னொரு முகத்தைப் பார்க்க போகிறோம் என்று அப்பொழுது மிருதுளா எதிர்பார்த்திருக்க மாட்டாள்.