இரவின் கொடூர பார்வையிலும், மேகங்கள் இருண்டு வானில் பரவியதால் எழுந்த குளிர்காற்றும் குடந்தையை எச்சரித்து சமிக்கை செய்தன. அடுத்து வரப்போகும் மணித்துளிகள், பெருமழையை மட்டுமல்ல, பெருத்த மாற்றங்களையும் குடந்தைக்கு கொண்டு வரப்போகின்றது என குறிப்பு கூறின. குடந்தைவாசிகள் யாவரும் உறக்கத்தில் மூழ்க ஆயத்தம் செய்து கொண்டிருந்த இரண்டாம் ஜாமத்தின் தொடக்கம். வானில் அவ்வப்போது எழுந்த மின்னல் கீற்றுகளும், இடியின் ஓசையும் குடந்தை மீது கோபத்தில் இருந்தன போல்.
ஆம், வரலாற்றுப் பிழை ஒன்றை செய்ய, சோழத்தின் அரியணை ஏறப்போகும் ஒரு இளவரசன் முயல்வதை சோழ அரசர்களின் இறந்த ஆத்துமாக்கள் விரும்பவில்லை போலும், இடித்துக் காட்டியும், மின்னல் வெட்டியும் எதிர்ப்பு காட்டியதாக இங்கே கொள்ள வேண்டும்.
நெடுங்கிள்ளி… சோழதேசத்தின் பட்டத்து இளவரசன். மது போதையும், துர்போதனையும் சிறுமூளையில் ஏறி, பெருமூளை முழுக்க வியாபிக்க நின்றுகொண்டு இருந்தான். சீத்தலையாரின் பெரும் மாளிகையின் உப்பரிகையில் இருந்த, ஆடம்பர அறையின் பட்டு பஞ்சணையில், பட்டுப்போன முல்லைக்கொடியென்று கிடந்த வேல்விழியை வேட்டையாடி, தன் சபதத்தை தீர்த்துக்கொள்ள துடித்த, வெறிபிடித்த ஐந்தறிவு கொண்ட மிருகமாக நெடுங்கிள்ளி நின்று கொண்டிருந்தான். அவனது கண்கள் காதலில் அல்ல காமத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.
அறையின் மேலே மாட்டப்பட்டிருந்த ஒரு கொக்கியில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு தொங்கவிடப் பட்டிருந்தான், நலங்கிள்ளி. அவன் எவ்வளவோ திமிறியும், சங்கிலிகளில் இருந்து விடுத்துக் கொள்ள முடியவில்லை. நெடுங்கிள்ளி தன் கைகளில் வைத்திருந்த திருமாங்கல்யம் ஒன்றை, வேல்விழியின் கழுத்தில் அணிவித்து, அவளை மனைவியாக மாற்றிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான்.
“நீ ஒரு ஆண்மகனா?!! உனக்கெல்லாம் சோழத்தின் மணிமுடி ஒரு கேடு… பெண்ணை வேட்டையாட அவளின் கைகளையும் கால்களையும் கட்டிவைத்து விட்டு, பெண்டாள துடிப்பவனே, கயமையின் தூதனே! நீ சுத்த வீரன் என்றால், என்னை விடுவித்து விட்டு அவளை தொடடா பார்க்கலாம். உன்னுடைய ஆண்மைத்தனத்தை என்னிடம் காட்டு, அதைவிடுத்து பெண்ணை வெறிகொண்டு கடிக்கத் துடிக்கும் உனக்கு எல்லாம், அரசநீதி குறித்து தெரியுமா? என்று சீறினான், நலங்கிள்ளி.
“ஹாஆஆஆ..ஆஹ்ஹா… அடேய்.. நீயா வீரம் குறித்துப் பேசுகின்றாய்? என் தந்தை செய்த தவறில் வந்து உதித்த இழிமகனே!! ஆவூரோடு உன்னுடைய பிரதாபங்களை நிறுத்திக்கொள்ள கூறினேன். நீ கேட்கவில்லை. அரசனாக விரும்பி என்னை எதிர்த்தாய். சோழத்து சட்ட திட்டங்கள் படி நானே பெருவளத்தான் ஈன்றெடுத்த நிஜ வாரிசு. நீ பின்கட்டு வழியே பிறந்தவன். உன்னை வாழ்நாள் முழுதும் சிறையில் அடைத்து, சித்திரவதை செய்வேன்.இதோ இவளை உன் கண்முன்னே மனைவியாக ஆக்கிக் கொண்டு, முதலிரவை தொடங்கப் போகின்றேன். முடிந்தால் தடுத்துக் கொள். இது என்னுடைய சாம்ராஜ்யம்” என்று கொக்கரித்தான் நெடுங்கிள்ளி.
வேல்விழி கட்டப்பட்டிருந்த தன்னுடைய கைக் கட்டுகளை அவிழ்க்க பலமுறை முயன்று தோற்றாள். நெடுங்கிள்ளி தாலிகொடியுடன் வேல்விழியை நெருங்கவும், அவன் பின்னந் தலையை ஒரு தடி தாக்கவும் சரியாக இருந்தது. போரிடஸ் வேகமாக உள்ளே வந்தான். அடுத்த நொடியில் பெருமழை கொட்டத் துவங்கியது. இளமாறன் ஆர்ப்பாட்டம் இன்றி உள்ளே வந்தான். தலையில் அடிபட்டு மெத்தைமீது குப்புற கிடந்த நெடுங்கிள்ளியை நிமிர்த்திப் போட்டவன், “போரிடஸ் இவனை சங்கிலியில் பிணைத்து கட்டு” என்றான்.
வேகமாக செயல்பட்டு, நலங்கிள்ளியை பத்திரமாக விடுவித்த இளமாறன், வேல்விழியை விடுவிக்க நலங்கிள்ளியிடம் கூறினான். பர்ஷீத்… என்று இளமாறன் குரல் கொடுக்க, சீத்தலை தொந்தியாருடன் உள்ளே வந்தான் பர்ஷீத். மளமளவென்று சங்கிலியால் இருக்கிப் பிணைக்கப்பட்ட நெடுங்கிள்ளி கொக்கியில் தலைகீழாக தொங்கவிடப்பட்டான்.
நலங்கிள்ளி இளமாறனை தழுவி நன்றி கூறினான். ஆனால், இளமாறன் படப்படத்தான். “மித்ரா நேரமில்லை, வெளியே புரவிகள் தயாராக உள்ளது. நீ, வேல்விழி மற்றும் போரிடஸ் மூவரும் உடனே குதிரைமலை செல்லுங்கள். அங்கே ஆபத்து நன்மாறனுக்கு உள்ளது. நன்மாறனோடு இணைந்து அந்த சதியை முறியடியுங்கள்”, என்றவன் போரிடசிடம்… “போரிடஸ் நன்மாறனும், நலங்கிள்ளியும் என்னுடைய கண்கள். எங்கள் மூவரின் உரிமை சொத்து வேல்விழி… நாளை பொழுது, பாண்டிய தேசத்தை சூழ்ந்துள்ள சதி மேகங்கள், அறவே அகன்று இருக்கவேண்டும். ஜாக்கிரதை. ஒருப்பொறியும் அங்கே இருக்கக்கூடாது. ஆவண செய். நம் வீரர்கள் சிலரையும் உடன் அழைத்து செல்”, என்றான்.
போரிடஸ் யவன பொறிகளை அமைப்பதிலும், அழிப்பதிலும் வல்லவன். கிரேக்கத்தில் பிறந்தவன். சோழத்திற்கு வந்த மரக்கலனில் அடிமை மாலுமியாக வந்த ஒரு ஒப்பற்ற திறமைசாலி. இளமாறனின் தனிப்படையின், தலைமைத் தளபதி. “ம்ம். ஆகட்டும் நேரமில்லை” என்றவன், “இயலுமெனில் விரைவில் நன்மாறனை காண வருவேன்! என்று கூறிவிடு, வேல்விழி” என்றான்.
மூவரும் சென்றபின், சீத்தலையாரை அழைத்துக்கொண்டு, கீழே சென்ற இளமாறனும் பஷீரும், பூஜை அறைக்குள் சென்றனர். இளமாறன் சிந்தனை, அவன் சிறைப் பிடிக்கபட்ட நாளில் நிகழ்ந்தனவற்றை திரும்ப காட்சிப்படுத்தியது. சற்று யோசித்தவன்….
“என்ன ஜோதிடரே, தங்களுக்கு சோழம் பூர்வீகம் இல்லை போலிருக்கிறதே”? என்றான் இளமாறன்.
“உனக்கு பதில் சொல்லவேண்டிய தேவை எழவில்லை. அதை நான் வெறுக்கவும் செய்கின்றேன்”, என்றார் சீத்தலை தொந்தியார்.
“ஒஹ்ஹ்… அப்படியா? ஜோதிடரே! தங்கள் சுருதி, பாவங்கள், தோரணை எல்லாம் சாதாரண ஜோதிடருக்கு இருப்பது போல இல்லையே??!! மிகவும் உயர்ந்த பதவியில் உள்ளவர்களுக்கு உரிய குணமல்லவா தெரிகின்றது? சரி போகட்டும் ஈசனுக்கு பின்பு இருக்கும் ரகசியம் என்ன? கூறுங்கள் பார்க்கலாம்” என்றான் இளமாறன்.
“இளமாறா போதும் நிறுத்து. நீ என்னுடைய மாளிகையிலேயே அமர்ந்து கொண்டு, என்னையே கேள்வி கேட்கின்றாய்? என்னை அதிகாரம் செய்ய உனக்கு அதிகாரம் கொடுத்தது யார்?”, என்றார் சீத்தலையார்.
“சரி சரி, தங்களுக்கு என்னுடைய அதிகாரம் குறித்து தெரிய வேண்டுமா? காட்டிவிட்டால் போகின்றது. காட்டிய பிறகு, அதல்ல இது என்றெல்லாம் பேசக்கூடாது, சரியா?”, என்றவன் தன் கையில் அணிந்திருந்த களையானியை அவர் கண்களில் காட்டினான். சீத்தலையாரின் விழிகள் அகன்று விரிந்தன.
“இரும்பிடைவல்லனா!!??? இதென்ன புது குழப்பம்” என்று வார்த்தைகளை உதிர்த்தார், சீத்தலையார்.
“பார்தீர்களா? பார்த்தீர்களா? இதற்குத்தான் முன்பே கூறினேன்!!. நீங்கள் இப்படி விக்கித்து, விதண்டா வாதமெல்லாம் செய்யக் கூடாது. இதோ இங்கு நிற்கும் பர்ஷீத், ஒரு கொடுமைக்காரன். அவர்கள் ஊரில், ஏதோ ஒரு விதமான புழு ஒன்று உள்ளதாம். அதை கண்களில் ஊர்ந்திட வைத்தால், கண்வழியே உள்ளே சென்று, சிறு மூளையை சாப்பிட்டுவிட்டு, காது வழியே காத்து வாங்க, வெளியே எட்டிப் பார்க்குமாம்!!!. வேண்டுமென்றால் அவனிடமே கேளுங்கள்!!??…என்ன பர்ஷீத் அப்படித்தானே?”, என்றான் இளமாறன்.
“ஆம் தலைவரே, வேண்டுமென்றால், இந்த பானை வயிற்று மூஞ்சுருவுக்கு, இதை தொப்புளுக்குள் விட்டு சோதிக்கவா?” என்று கூறி இடையில் இருந்த ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக் காட்டினான், பர்ஷீத். அதற்குள் கறுப்பு நிறத்தில் நீளமாகவும் விகாரமாகவும், ஆள்காட்டி விரல் தடிமனிலும், சில புழுக்கள் நெண்டிக் கொண்டிருந்தன.
சீத்தலையாருக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டத் தொடங்கியது. “அந்த புழு நம் வயிற்றுக்குள் சென்றால்!!??? அய்யோ”, குலை நடுங்கினார் சீத்தலையார்.
“அப்பனே இளமாறா!!.. உனக்கு என்ன தெரியவேண்டும்” என்று பணிவுப் பாதைக்கு பக்குவமாக திரும்பினார் சீத்தலையார்.
“அற்புதம் போங்கள் ஜோதிடரே! உங்களின் இந்த ஒத்துழைப்பு மனப்பான்மைக்கு, மிக்க நன்றி. ஈசன் பின்பு, அன்று ஒளிந்து நின்ற வண்டிக்காரன் யார்? அவன் எப்படி உங்கள் பூஜை அறைக்குள் பிரவேசித்தான்? அவனுக்கும் உங்களுக்குமான சம்மந்தம் என்ன? இதை முதலில் சொல்லுங்கள் பார்க்கலாம்?”, என்றான் இளமாறன்.
“அது… !!! அவன்….!! என்னுடைய ரதமோட்டி. பூஜை அறையை சுத்தம் செய்ய கூறியிருந்தேன். செய்து கொண்டு இருந்திருப்பான். இளவரசர் வந்த மகிழ்விலும், அவருக்கு ஈசனின் அருளை பெற்றுத் தருவதிலும் இருந்த ஆர்வத்தில் அதை மறந்து விட்டேன்” என்றார் சீத்தலையார்.
சற்று அவருடைய விழிகளை உற்று நோக்கிய இளமாறன், “பர்ஷீத் இவருக்கு ஒரு புழு போதாது. ஒன்றை காதிலும், ஒன்றை தொந்தியிலும் விடு… பார்க்கலாம்!!”, என்ற இளமாறன் முகத்தை திருப்பி பர்ஷீத்தை பார்க்க, அவன் கண்ணாடிக் குடுவையை திறக்கத் தொடங்கினான்.
சீத்தலையாருக்கு புரிந்து விட்டது. “இனி எதேனும் பொய்யான தகவலை கூறினால், விபரீதம் ஆரம்பம் ஆகிவிடும். எல்லாவற்றையும் துல்லியமாக கவனித்து அறிந்து இருக்கின்றான் இந்த இளமாறன். இந்த பெருச்சாளி உள்ளே புகுந்து அனைத்தையும் உருட்டுவதற்குள், கொஞ்சம் உண்மை கூறி இவனை திசைத் திருப்பிவிடலாம்” என்று மனதிற்குள் திட்டமிட்டார் சீத்தலையார்.
ஆனால் அதற்குள் பர்ஷீத் அவரை நெருங்கியிருந்தான். “அய்யய்யோ வேண்டாம் இளமாறா…!!!! உண்மையை கூறிவிடுகின்றேன். அவன் எனக்கும் இரும்பிடையாருக்கும், இடையே தூது செல்லும் ஒற்றன். இப்போது கூட ஒரு விஷயமாக அவனை காந்தளூர்ச்சாலைக்கு அனுப்பியுள்ளோம்”, என்றார் சீத்தலையார்.
“ஒஹ்… அப்படியா? எப்படி சென்றான் அவன்? என்று ஈசன் விக்கிரகத்தை சுற்றி வந்த இளமாறன் கேட்டான்.
“அது ஒரு புரவியை ஏற்பாடு செய்து கொடுத்தனுப்பினேன்” வேறு எப்படி செல்லமுடியும்?” என்று கேட்டார் சீத்தலையார்.
“சரியாக சொன்னீர்கள் ஜோதிடரே, நீங்கள் கூறுவதெல்லாம் உண்மையென்று ஏற்றுக்கொள்வோம்”, என்ற இளமாறன் சட்டென்று சீத்தலையாரின் கழுத்தை தன் புயங்களில் சுற்றி வளைத்து அழுத்தியபடியே, ஈசனின் பின்புறமிருந்த விசை ஒன்றை மறைத்துக்கொண்டு, இருந்த தட்டை தள்ள, விசை இப்போது தெளிவாக தெரிந்தது.
சீத்தலையார் மொத்தமாக உடைந்து போனார். இந்த இரகசியம் இனி சேரம் வரை செல்லும்…. என்று எண்ணியவருக்கு வியர்த்துக் கொட்டி, உடல் நடுங்கியது. ஆனால் இளமாறன் அவரை இருக்கிக்கொண்டே, “பர்ஷீத் அந்த விசையை திருகு”, என்றான். பரஷீத் விசையை திருக, தரை விலகி நிலவறை ஒன்று தொடங்கி நீண்டது. முதலில் படிக்கட்டுகளாக ஆரம்பித்து, பிறகு உள்ளே மிக நீண்ட சுரங்கமாக சென்றது.
இளமாறன் சீத்தலையாரை பிணத்திருந்த சங்கிலியின் முனையில், எஞ்சியிருந்ததை சுருட்டி சீத்தலையாரின் முகத்தில் குத்து ஒன்றை கொடுத்தான். பர்ஷீத் தன் முஷ்டியை முறுக்கி மடக்கி விட்ட அடுத்த குத்தில் சீத்தலையாரின் வயிற்றில் கர்ணக் கொடூரமான வலி உண்டாகியது. இளமாறன் அடுத்த அடியை கொடுக்க கையை உயர்த்திய நொடியில், சீத்தலை தொந்தியார் வாய்விட்டு கெஞ்சி விட்டார்.
“அய்யய்யோ… வலிக்கிறது இளமாறா வேண்டாம். நான் கூறிவிடுகின்றேன். இது சேரம் செல்லும் சுரங்கம். உள்ளே,இரு வழிகள் உள்ளது. ஒன்று காந்தளூர்ச்சாலைக்கும் மற்றொன்று வஞ்சிக்கும் செல்லும்”, என்றார்.
“உனக்கும் சேரத்திற்கும் என்ன சம்மந்தம்? நீ சேரத்தில் இருந்து இங்கே வந்தவனா? உன்னுடைய பணி என்ன? ஒற்று அறிவதா? அல்லது குழப்பம் விளைவிப்பதா? சொல்…”, என்று உறுமினான் இளமாறன்.
“தான் சேர அரசன் சார்பாக, சோழ தேசத்தில் பிரிவினை ஏற்படுத்த வந்ததாக” கூறினார் சீத்தலையார்.
உன்னை இங்கு பாதுகாப்பதும், இந்த மாளிகையை உனக்கு ஏற்பாடு செய்ததும் யார்? என்ற இளமாறனின் அடிக்கும், பர்ஷீத் கையில் இருக்கும் புழுவுக்கும் அஞ்சிய சீத்தலைநம்பியார், தன்னுடைய பெயர் “அரிகர சூடாமணி” என்றும், சேரத்தின் ராணுவ ஆலோசனை அமைச்சர் என்றும் விளக்கமளித்தார்.
என்றாலும் இளமாறன் அவரை முழுமையாக நம்பவில்லை. “போலி ஜோதிடரே! உம்முடைய சீடன் எங்கு சென்றுள்ளான்? சேரன் திட்டம் என்ன என்று கூறுவிடும். இல்லையென்றால் உன்னை கொன்று இந்த ஈசனுக்கு சமர்ப்பித்து விடுவேன்” என்று இளமாறன் கூறினான்.
“சேரத்தின் பிடியில் சோழத்தின் தலைநகரையும், புகாரையும் அடைவது நோக்கம். அதற்கு இரும்பிடைவல்லன் உதவுவதாக கூறினார். ஆனால் அவருக்கு புகாரை இழக்க விருப்பம் இல்லை. அதற்கு பதிலாக நாகையை கொடுக்க சம்மதித்தார். சேர அரசனுக்கு இரண்டு துறைமுகங்களையும் அடைவதே விருப்பம். அதற்காகத்தான் இந்த சித்து விளையாட்டு நாடகங்கள் என்று பொய்யும் மெய்யுமாக அலறினார் சீதலையார் .
பர்ஷீத்திடம் சீத்தலையாரை கொண்டு சென்று தங்கள் இடத்தில் சிறைவைக்க கூறியவன் சுரங்கத்திற்குள் செல்ல தீர்மானித்தான். அதே வேளையில் இந்த சுரங்கவழி யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும், தான் விரைவில் திரும்பி வந்துவிடுவேன் என்றும் கூறினான். குரைமுகன் மூலம் செய்தி தருவதாக கூறிவிட்டு, தன்னுடைய போர் உபகரணங்கள், தீப்பந்தம், மற்றும் மூன்று குரைமுகன்களை உடன் அழைத்துக்கொண்டு சென்றான்.
பர்ஷீத் நிலவறையை முன்போல விசையை திருகி மூடிவிட்டு, அதன் மேலே சில பொருட்களை பரப்பியும் வைத்தான். பின் சீத்தலையாரை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றவன், மாளிகையை விட்டு வெளியே வண்ட் மெல்ல சீட்டிகை ஒலியெழுப்ப, சேந்தன் மரத்திலிருந்து இறங்கி வந்தான். மழை ஓய்ந்து இருக்க குடைந்தையே அமைதியில் திளைத்து கிடந்தது.
“சேந்தா… கவனமாக கேள். தலைவர் முக்கிய அலுவலின் பொருட்டு காந்தளூர்ச்ச்சாலை செல்கின்றார். இந்த போலி ஜோசியனை சிறை வைக்க உத்தரவு. நீ இரும்பிடையான் மயக்கம் தெளியும் வரை காத்திரு. பிறகு இரும்பிடையான் காதுகளில் படும்படி, ஜோதிடர் இளவரசரை தாக்கிவிட்டு வேல்விழியை, கடத்திக்கொண்டு, இரும்பிடையான் வந்த ரதத்திலேயே காந்தளூர்ச்சாலைக்கு தப்பிவிட்டதாக புரளியை பரப்பிவிடு… இவர்கள் இங்கே குழம்புவதற்குள், அங்கே தெளிவு கிடைக்கட்டும் என்று கூறினான். சேந்தன் சரியென்று தலையாட்ட, இரும்பிடையான் ரதத்தில் சீத்தலையாரை ஏற்றிக்கொண்டு சிட்டாக பறந்து மறைந்தான் பர்ஷீத்.
அதே வேளையில், பாண்டிய தேசம் நோக்கி புரவியில் சென்று கொண்டிருந்த மணிமேகலைக்கு, தாகம் எடுக்க அருகில் ஓடிக்கொண்டிருந்த மணிமுத்தாறு நதியின் கரையில் சென்று இறங்கினாள். புரவிக்கும் சற்று இளைப்பாறுதல் கொடுத்துவிட்டு, தானும் இறங்கி நீரைக் கொண்டு நன்றாக முகம் கழுவிவியு நீரை பருகினாள். இன்னும் நூறுகாத தூரம் பயணிக்க வேண்டியது இருக்கும். சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளலாம், என்று எண்ணியவள் ஆற்றை ஒட்டியிருந்த மரத்தின் மீது ஏறி சற்று வசதியாக படுத்துக் கொண்டு கண்ணயர்ந்தாள். அப்போது புரவிகள் ஓடிவரும் சப்தமும், பெரிய வண்டிகள் வரும் சப்தமும் கேட்டது. மரத்தில் இருந்தவாறே எழுந்து அவள் பார்க்க காட்சிகள் தெளிவாக தெரிந்தன.
தீப்பந்தங்கள் பிடித்தபடி குதிரை வீரர்கள் முன்னே வர, பின்னே அராபிய புரவிகளில், கிரேக்க போருடையணிந்த சிலர் வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பின்னே பெரிய பார வண்டிகள் வந்து கொண்டிருந்தன. அவற்றில் பெரிய சுமைகள் இருந்தன.
மணிமேகலையின் கண்களில் அதிர்ச்சியும் வியப்பும் விஞ்சியது. அதே வேளையில் அவளுக்கு பின்னே ஒரு உருவம் மரத்தில் ஏறி அவளை பிடிக்க மெல்ல முன்னேறியது….
தொடரும்.