அத்தியாயம் 22
கீழே விழுந்த அந்தக் கருப்பு நிற பொருளை கையில் எடுத்த ஆரா, “என்னதிது?!!” என்று பார்க்க, அதன் அமைப்பை பார்த்தவளுக்கு என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி இப்படி அந்தப் பொருளை திருப்பிப் பார்த்தவளுக்கு, ஒன்றும் புரியாமல் போக, “அக்கா!!” என்று மிருதுளாவை அழைத்தாள். கிட்சனில் ஏதோ வேலையாக இருந்த மிருதுளா, தங்கையின் குரலில், அறைக்குள் வர, ஆரா கையில் என்னவோ இருப்பதைப் பார்த்தாள்.
ஆரா அவளிடம், “இது என்னது அக்கா?! பரனை சுத்தம் பண்ணும்போது கீழே விழுந்துது.” என்று கூறியபடி அதை அவளிடம் நீட்ட, வாங்கிப் பார்த்த மிருதுளாவுக்கு, இதை எப்பொழுதோ பார்த்தது போல இருந்தது. எங்கே என்று தான் நியாபகம் இல்லை. யோசிக்க யோசிக்க, சில மாதங்களுக்கு முன்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், இதைப் பார்த்தது போலத் தோன்றியது. என்னவாக இருக்கும், என்றவளுக்கு அப்பொழுது தான் ஏதோ புரிவது போல இருக்க. உள்ளுக்குள் அதிர்ந்தவள், தன் உணர்வுகளை வெளியில் காட்டாமல், “இது என்னனு தெரியலையே ஆரா. அத்தான் லேப்டாப் ரிப்பேர்லாம் நெட்ல பார்த்து அவரே செஞ்சுகுவாறு. ஒரு வேளை அது சம்பந்தமா எதவாதா இருக்கும் நினைக்கிறன்.” என்றவள், பக்கத்தில் இருந்த டிராயரில் வைக்கப் போக, அவளைத் தடுத்த ஆரா, “இல்லக்கா. இது ஏதோ ஒன்னு. நான் எங்கையோ பார்த்து இருக்கேன்னு நினைக்கிறன். இரு என்னனு பார்க்கலாம்.” என்று சொல்ல, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ஆரா. அத்தானோடதா தான் இருக்கும். அப்புறம் பொருள் காணலைன்னா கோவபடுவாறு.” என்று இவள் பதில் சொல்ல, ஆராவோ, மீண்டும் அதையே பேச, “ஆரா!! சொன்னா கேளு.” என்று தன்னைமீறி கத்திய மிருதுளா, அதை டிராயரில் போட்டுவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றாள்.
எந்த விஷயத்திற்கும், கோபப்படாத தன் சகோதரி, இப்பொழுது மட்டும், ஏன் இப்படிக் கத்திவிட்டுச் செல்லவேண்டும் என்று நினைத்த ஆராவிற்கு, அவள் அப்படிச் சத்தம் போடும் பொழுது, அவளின் முகத்தில் தெரிந்த ஒரு வித அச்சமும், தப்புச் செய்தவர்கள் போலத் தெரிந்த ஒரு நடுக்கமும், இவளுக்குள் சந்தேகத்தை உருவாக்க, ‘ஒருவேளை, இந்தப் பொருளில் ஏதேனும் இருக்குமோ?!’ என்று யோசித்தவளுக்கு, ‘ஏதோ இருக்கிறது‘ என்று தோன்ற, அந்தப் பொருளை எடுத்துப் பார்ப்பது என்று முடிவு செய்தவள், மிருதுளா எங்கிருக்கிறாள் என்று அறையின் வெளியே எட்டிபார்க்க, அவளோ கிட்சனில் இருந்தாள்.
மிருதுளா வருவதற்குள், பார்த்துவிடவேண்டும் என்று நினைத்தவள், சத்தம் எழுப்பாமல், டிராயரை திறந்து, அந்தக் கருப்பு பொருளை எடுத்தவள், தனது செல்போனை எடுத்து அதைப் புகைப்படம் எடுத்தவள், கூகிளில் இமேஜ் சேர்ச்சில் தான் எடுத்த புகைப்படத்தை அப்லோட் செய்துவிட்டு, சேர்ச் பட்டனை அழுதுவிட்டுக் காத்திருக்க, கிடைத்த விடையில் அதிர்ந்து போனாள்.
அது, சிறிய வகை பென் கேமரா. இந்த வகை கேமராக்களை, சிறிய துளை இருக்கும் எந்த ஒரு இடத்திலும் பயன்படுதலாம். சமீபத்தில் கூட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இது சம்பந்தமான தொழில்நுட்பம் தெரிந்தவர்கள், இந்தச் சாதனத்தைப் பற்றிய டெமோ விளக்கத்தைத் தெரிவித்திருந்தனர். சுவர் கடிகாரத்தில் உள்ள கருப்பு எழுத்துகள் பின் கூட இதை மறைத்துவைத்து வீடியோ ரெக்கார்ட் செய்யலாம். வீடியோ எடுப்பதைச் சேமித்து வைக்கவென்று அதனுடனே பென்டிரைவ் இணைக்கபட்டிருக்கும். சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை செயல்படும் வகையில், திறன் ஆற்றல் கொண்டது. அதிலும் ஆரா கையில் வைத்திருக்கும் கேமராவோ, ஒரு வாரம் வரை சார்ஜ் தாக்குபிடிக்கும் வகையைச் சேர்ந்த அட்வான்ஸ்ட் டிவைஸ் ஆகும்.
விவரங்களைப் படிக்க, படிக்க, ஆராவிற்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. இந்தப் பொருள் அக்காவின் வீட்டில் எப்படி வந்தது?! முதலில் அக்காவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்தால், நிச்சயம் அவளுக்கே இது இங்கு இருப்பது தெரியாது என்பது போலத் தான் தோன்றுகிறது. அப்படி இருக்கையில் இதை யார் பரண் மேல் வைத்திருப்பார்?! ஒருவேளை அக்கா சொல்வது போல அத்தான் தான் இதை இங்கே வைத்திருக்கிறாரா?! அப்படி என்றால்!!! இந்தப் படங்களில், செய்திகளில் வருவது போல மனைவியைத் தவறாகப் படம் பிடிக்கும் ஆண்களைப் போன்றவரா?!! இல்லை இப்படிச் செய்து அக்காவை ஏதேனும் மிரட்டுகிறாரா?!! இல்லை அக்கா மேல் சந்தேகப்பட்டு இப்படி எல்லாம் செய்கிறாரா?!! என்று அடுக்கடுக்கான கேள்விகள் அவள் மனதை குடையை, அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் மூளை மரத்துப் போனது போல இருந்தது ஆராவிற்கு. ஆனால் இதை இப்படியே விட அவளுக்கு விருப்பம் இல்லை. அத்தான் தான் செய்தாரா? ஆம் என்றால் எதற்குச் செய்தார்? போன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்தே ஆகவேண்டும்.
தனது குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் இருந்து வெளியே வந்தவள், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க, முதலில் இதில் என்ன உள்ளது என்று பார்க்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டவள், நெட்டில் பார்த்து முதலில் அதன் இயக்கத்தை ஆப் செய்தாள். அடுத்து அதில் இருந்து பென்டிரைவை எப்படிக் கழட்டுவது என்று நெட்டில் பார்த்து தெரிந்து கொண்டவள் அதன்படி செய்ய, அடுத்து, மிருதுளாவிடம் சென்று, அவசரமாக மெயில் ஒன்று அனுப்பவேண்டும் என்று சொல்லி அவளின் லேப்டாப்பை வாங்கியவள், அதில் இந்தப் பென்டிரைவை போட்டு, அதில் இருந்த பைலை ஓபன் செய்து பார்க்க, அவள் சந்தேகப்பட்டது உண்மை என்று தெரிந்தது.
மிருதுளாவின் படுக்கை அறைக்குள் நடந்திருக்கும் அத்தனை நடவடிக்கையையும் அந்தக் கேமரா ரெகார்ட் செய்திருந்தது. பாஸ்ட் பார்வர்ட் செய்து பார்க்க, மிருதுளா உடைமாற்றும் காட்சிகளும் அதில் இருந்தது. இதையெல்லாம் பார்த்து அருவருப்பும் அதிர்ச்சியும் அடைந்த ஆரா, “அக்கா!!!!” என்று மிருதுளாவை சத்தமாக அழைக்க, அவளோ என்னமோ ஏதோவென்று வேகவேகமாக ஓடிவந்தாள்.
மிருதுளா அறைக்குள் வந்ததும், லேப்டாப்பை அவள் பக்கம் திருப்பிய ஆரா, “என்னது க்கா இதெல்லாம்??!!” என்று கோபமாகக் கேட்க, திரையில் ஓடிக் கொண்டிருந்த காட்சியில், முகத்தில் அதிர்ச்சியைக் காட்டிய மிருதுளா, தான் சந்தேகப்பட்டது சரி என்ற குற்ற உணர்ச்சியுடன் தலை குனிய, அவள் அருகில் வந்த ஆரா, அவள் முகத்தை நிமிர்த்தி, “சொல்லுக்கா, என்னது இதெல்லாம்??!!” என்று குரல் உயர்த்த, அதில் கலங்கியவள், அப்படியே கட்டிலில் தொப்பென்று அமர்ந்து, முகத்தை மூடிக்கொண்டு தேம்பியவள், “தெரியல ஆரா….நான் என்ன பாவம் செஞ்சேன்னே தெரியல. இப்படி ஒரு அசிங்கமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன்.” என்று கதறியவள், இதுநாள் வரை நடந்த அனைத்தையும் தங்கையிடம் கூறினாள்.
மிருதுளா சொல்லச் சொல்ல, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடைந்தவளுக்கு, திருமணத்தின் போது பார்த்த சாந்தமான அத்தானா இப்படிச் செய்தது என்று ஆச்சரியமாக இருந்தது. அத்தோடு இவ்வளவு நடந்திருக்கிறது, தங்களிடம் அக்கா ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தவளுக்கு இப்பொழுது சந்துருவை விட, மிருதுளா மேல் தான் கோபம் வந்தது. அதையே அவளிடம் கேட்டவள், கோபத்துடன், “இனி நீ ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கக் கூடாது க்கா. மொதல்ல எழுந்துச்சு வா. போலிஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்போம். இப்படி ஒருத்தர் கூட நீ வாழணும்னு அவசியம் இல்லை. மொதல்ல எழுந்துரு.“ என்று அவளின் கைகளைப் பிடித்து எழுப்ப, மிருதுளாவோ, தன் கைகளைப் பிடித்திருந்த தங்கையின் விரல்களைப் பிரித்தெடுத்தவள், “போலிஸ் போகணும்னு நினைச்சா, முன்னாடியே போயிருக்க மாட்டேனா ஆரா.” என்று நிதானமாகச் சொல்ல,
“அதான் நானும் கேட்கிறேன். நீ ஏன் இதை முன்னாடியே எங்ககிட்ட சொல்லல?!”
“சொல்லி?! சொல்லி என்ன செய்யச் சொல்லற ஆரா?!!! “
“என்னக்கா இப்படிச் சொல்ற!! நீ என்ன அனாதையா, போகுறதுக்கு இடம் இல்லாம இருக்க. நாங்க உனக்கு இல்லையா? உன்னை அப்படியே விட்டுடுவோமா?!
“வீட்டுக்கு வந்து வாழாவெட்டியா இருக்கச் சொல்றியா ஆரா. அதுவும் நம்ம சொந்தகாரங்கலை பத்தி தெரிஞ்சும்……உனக்குத் தெரியாதா, அப்பா இந்தக் கல்யாணத்தையே லோன் போட்டுத்தான் செஞ்சு வச்சாருன்னு. அந்த லோன் இன்னும் பாதிக் கூடக் கட்டி முடிக்கல. இதுல இன்னும் உனக்குன்னு ஒரு நகை நட்டு எதுவும் சேர்த்து வைக்கல. இதுல நான் வேற அங்க வந்து உட்கார்ந்துட்டா, உன்னோட கல்யாணத்துக்கு இடைஞ்சலா இருக்காதா?”
“அதுக்கு உன்னை இந்த நரகத்தில அப்படியே விட்டுட சொல்றியா க்கா. அப்படிலாம் முடியாது. எனக்குக் கல்யாணம் எல்லாம் தேவை இல்லை. எனக்கு நம்ம பாமிலி போதும். என் படிப்பு முடிய, இன்னும் ரெண்டு வருஷமோ என்னமோ தான் இருக்கு. அதுக்கு அப்புறம் நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிடுவேன். சீக்கிரம் அப்பாவோட லோனை அடைச்சிடலாம். இதுக்காக எல்லாம் உன்னை இப்படியே விட முடியாது. மொதல்ல நீ என்னோட கிளம்பு.”
“சும்மா சின்னபிள்ளை தனமா பேசாத ஆரா. நீ பேசுறதை எல்லாம் கேட்டுகிட்டு எதுவும் செய்ய முடியாது. புரிஞ்சிக்கோ. என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறதை பத்தி தான் பேசுற. ஆனா அதுக்கு அப்புறம் நடக்கபோறதை பத்தி உனக்குப் புரியாது ஆரா. இதை விட அங்க நரகமா இருக்கும். போற வரவங்க எல்லாம் நம்ம வீட்டை பத்திதான் பேசுவாங்க. எதுக்கு வீட்டுக்கு வந்துருக்காளோ? என்ன பிரச்சனையோன்னு, என்னைத் தான் தப்பா பேசுவாங்க அம்மு. ஏற்கனவே ரெண்டு வருஷம் ஆகப் போகுது, இன்னும் குழந்தை இல்லைன்னு பார்க்கிறவங்க எல்லாம் கேட்கிறாங்க. இந்த நேரம் நான் வீட்டுக்கு வந்துட்டா, என் மேல ஏதோ குறை இருக்கு போல. அதான் இவ புருஷன் வீட்டை விட்டு துரதிட்டான்னு சொல்வாங்க. அதுக்கு மேல இன்னும் நாக்குல நரம்பு இல்லாம எதுவேணா பேசுவாங்க அம்மு. அதையெல்லாம் அம்மா அப்பாவால கேட்டுகிட்டு நிம்மதியா இருக்க முடியுமா சொல்லு? அவங்க நொந்துபோக மாட்டாங்க? அப்படி உங்க எல்லாரையும் தினம் தினம் கஷ்டபடுத்துறதுக்கு நான் இங்கயே இருந்துட்டுப் போய்டலாம்.”
“லூசு மாதிரி பேசாத க்கா. அதுக்காக, இப்படி ஒருத்தர் கூட உன்னைத் தினம் தினம் கஷ்டப்பட விட்டுட்டுப் போகச் சொல்றியா. நீ எப்படி இருக்க, என்னன்னனு எனக்குக் கவலையா இருக்காதா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை அம்மு. நீ என்னைப் பத்தி கவலை பட வேண்டாம். நாளைக்கே ஒரு குழந்தை பிறந்துசுன்னா, எல்லாம் நலபடியா ஆகிடும். அத்தான் நல்லவிதமா மாறிடுவாரு. ஏதோ தேவை இல்லாததை மனசில போட்டுக்கிட்டு இப்படி எல்லாம் நடந்துகிறாரு. போகப் போக எல்லாம் சரி ஆகிடும். நீ அம்மா அப்பாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவங்களுக்குத் தெரிஞ்சுதுன்னா ரொம்ப வருத்தபடுவாங்க.” என்று சொல்லி முடித்துவிட்டு அவள் நகரபோக, “அக்கா ப்ளீஸ் க்கா. நான் சொல்றதை கேளு. வீட்டுக்குப் போய்டலாம்.” என்று மீண்டும் ஆரா முதலில் இருந்து ஆரம்பிக்க, “போதும் அம்மு. நீ சின்னப் பொண்ணு. உனக்குத் தெரியாது. வேற எதுவும் பேச வேண்டாம். அக்காவை காப்பாத்துறேன் அது இதுன்னு எதுவும் முட்டாள் தனம் பண்ணாத. அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது.” என்றவள், ஆராவிடம் இருந்து கேமராவையும் பென்டிரைவையும் வாங்கிப் பீரோவில் வைத்துவிட்டு, கனத்த மனதுடன் தன் வேலைகளைக் கவனிக்கச் சென்று விட்டாள். ஆனால் அவளுக்குத் தெரியாது, குழந்தையால் தான் சந்துருவின் நடத்தை இன்னும் மோசம் அடையைப் போகிறது என்று.
கலங்கிய முகத்துடன் செல்லும், தன் சகோதரியையே பார்த்துக் கொண்டிருந்த ஆரா, ‘அக்காவின் வாழ்கை எப்படி ஆகிவிட்டதே?’ என்ற கவலை ஏற்பட, சோர்வுடன் கட்டிலில் அமர்ந்தாள். அடுத்து என்ன செய்வது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அக்கா சொல்வதும் உண்மை. போவோர் வருவோர் என்று எல்லோரும் தங்கள் வீட்டை பற்றிதான் புறம் பேசுவார்கள். இவர்களுக்கு எல்லாம் வேறு வேலையே இல்லையா? யார் என்ன பேசுவார்கள் என்றுதான் வாழ்கையை வாழ வேண்டுமா? தாங்கள் இஷ்டப்பட்டதைச் செய்ய முடியாதா? என்று வெறுப்பாக இருந்தது ஆராவிற்கு. ஆனால் மிருதுளாவை மீறி ஒன்றும் செய்யமுடியவில்லை.
மாலை வீட்டிற்குக் கிளம்பும்பொழுது, “பார்த்துகோக்கா, நான் வீட்டில எதுவும் சொல்லல. இருந்தாலும், எதாவது பிரச்சனைனா, வீட்டுக்கு உடனே கிளம்பி வந்துடு. எதைப் பத்தியும் யோசிச்சிட்டு இருக்காத. அட்லீஸ்ட் எனக்குப் போனாவது பண்ணு. நான் கிளம்புறேன் க்கா.” என்று மிருதுளாவிடம் விடைபெற்றுக் கிளம்பியவளுக்கு அவளை எங்கே காட்டிற்குள் விட்டுசெல்வது போல மனம் பாரமாக இருந்தது.
அடுத்த இரண்டு நாட்களில், ஊரில் இருந்து சந்துரு திரும்பி வந்துவிட, தனது அறைக்குச் சென்றவன், மிருதுளா அறைக்குள் இல்லாததால், அவசர அவசரமாக ஸ்டூல் போட்டு, பரண் மேல் ஏறி, தான் வைத்துவிட்டு போன, கேமேராவை தேட, வைத்த இடத்தில அது இல்லை. இன்னும் கைகளை நீட்டி தேட, அப்பொழுது, “இதையா தேடுறீங்க??” என்ற கேள்வியுடன் அங்கு வந்த மிருதுளா, தன் கையில் இருந்த பொருளை அவனுக்குக் காட்ட, மாட்டிக்கொண்டோம் என்று தெரிந்து அதிர்ந்த சந்துரு, தன் தடுமாற்றத்தை மறைக்கும் பொருட்டு வேகமாக அவள் அருகில் நெருங்கியவன், “எங்கிருந்து இதை எடுத்த நீ?” என்று கோபமாகக் கூறிக்கொண்டே, அவள் கையில் இருப்பதைப் பிடுங்க முயற்சிக்க, அவளோ, சட்டென்று தன் கையை மூடிக்கொண்டு பின்னால் மறைக்க, “வேணாம் மிருதுளா, என்னைக் கோபப்படுத்தாத!” என்று பல்லைகடித்தான்.
ஆனால் அவளோ, “ஏன் இப்படிச் செஞ்சீங்க??” என்று கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் பொய்த்துப்போன வலியுடன் கேட்க, “எண்ணத்தைச் செஞ்சுட்டாங்க?” என்று பதிலளித்தான் எகத்தாளமாக. “இப்படிக் கட்டின பொண்டாட்டியை வேவு பார்க்கிறது உங்களுக்குத் தப்பா தெரியலையா?” என்று மிருதுளாவும் விடாமல் கேட்க, “இந்த மாதிரி பார்த்தாதான, உங்க வண்டவாளத்தைத் தெரிஞ்சிக்க முடியும்.” என்றவனின் குரலில் இகழ்ச்சி இருந்தது.
அவன் சொன்னது சுருக்கென்று இருக்க, “என்ன பேசுறீங்க நீங்க? இதுவரை நான் என்ன தப்பு செஞ்சேன்னு இப்படிலாம் பேசுறீங்க?” என்று இவள் கேட்க, “இந்தக் காலத்துப் பொண்டாடிங்களை எல்லாம் நம்ப முடியுமா, ஒரு நியுஸ் பேப்பர், டிவி சேனல் விடாம தினம் நாலு கேஸ் சொல்றானே, இவ அவனைக் கூட்டிட்டு ஓடிட்டா, புருஷனை தலைல கல்லை போட்டு கொன்ற மனைவி, வேறு ஒருவருடன் இருக்கும்போது கையும் கலவமுகா பிடிபட்டாள்ன்னு. நான் வீட்டில இல்லாதப்போ நீ என்ன செய்றன்னு எனக்கு எப்படித் தெரியும்? அதைத் தெரிஞ்சிக்கத் தான் கேமரா செட் பண்ணேன். ஒரு வேலை எனக்குத் தெரியாம, நீ எவனையாவது கூட்டிட்டு வந்து, எதாவது ……” என்று அடுத்து ஏதோ அவன் சொல்லபோக, “ச்சீ!!! வாயை மூடுங்க…..இந்த மாதிரி பேச உங்களுக்கு அசிங்கமா இல்லை.” என்று கோபத்தில் மிருதுளா, சத்தம்போட, அவள் அருகில் நெருங்கியவன், அவள் கழுத்தை பிடித்து, “என்னடி குரல உசத்துற? அசிங்கமா இல்லையான்னா கேக்கிற. நீ எதாவது அசிங்கம் செஞ்சுட்டு வந்து நின்னா, என் மானம் தாண்டி கப்பலேறும். அதான் இப்படிச் செஞ்சேன். இந்தக் கத்துற வேலை எல்லாம் என்கிட்டே வச்சுக்காத. வாயை மூடிட்டு இருக்கறதுன்னா இரு. இல்லை இப்பவே இந்த வீட்டை விட்டு வெளிய போய்டு.“ என்று உருமியவன், அவளை உதறிவிட்டு, தன் வேலையைக் கவனிக்க,
“நீங்க இப்படிச் செய்றீங்கன்னு போலிஸ்ல கம்ப்ளைன்ட் செஞ்சா என்ன பண்ணுவீங்க??” என்று மிருதுளா பதிலுக்குக் கேட்டாள். ஆனால் அவனோ நிதானமாக, “இவ எவனையோ வச்சுருக்கா. அதை நான் கையும் களவுமா பிடிச்சு தட்டிகேட்டதுக்கு, இப்படி என் மேல பொய் கேஸ் போடுறான்னு சொல்வேன். அதுக்குச் சாட்சியும் ஏற்பாடு பண்ணுவேன்.” என்று கூலாகச் சொல்ல, அவன் சொன்ன விதத்தில் அதிர்ந்தவளுக்கு, இந்த அளவுக்குக் கீழ்த்தரமாகப் பேசும் அவனின் சொற்களைக் கேட்டு அவமானத்தில் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்க, குளிப்பதற்குத் துண்டை எடுத்துக்கொண்டு, இவள் அருகில் வந்தவன் இவள் கையில் இருக்கும் கேமராவை பிடுங்கிவிட்டு விஷம சிரிப்புடன் இவளை பார்த்தவன், “ஒழுங்கா என்கூடக் குடும்பம் நடத்துறதா இருந்தா இரு. அதைவிட்டுட்டு உன் பேரை நாரடிச்சகனும்னு நினைச்சனா தாராளமா கிளம்பி போயிட்டே இரு.” என்று சொல்லிவிட்டு குளியல் அரைச் சென்றுவிட, மிருதுளாவோ, ‘இப்படிப்பட்ட ஒருவனிடம் மாட்டி கொண்டோமே’ என்று நினைத்தவள் அதிர்ச்சியில், உடலில் உள்ள சத்து எல்லாம் உரிஞப்பட்டது போல அப்படியே சரிந்து தரையில் தொப்பென்று அமர்ந்தவள், இதற்கு மேல் எதையும் செய்ய முடியாதவளாக, கால்களில் தன் முகத்தைப் புதைத்து அழுது கரைந்தாள்.
அன்றொரு நாளும் இப்படிதான், வீட்டை விட்டு போடி.’ என்று சுலபமாக எந்தவித உறுத்தலும் இன்றிச் சொன்னவன், இன்றும் அதே வார்த்தையைப் பயன்படுத்த, மிருதுளாவிற்கு வாழ்கையின் மேல் இருந்த பிடிப்பே அற்றுப்போனது.
தன் குடும்பத்தையே உதறிவிட்டு கணவனை மட்டும் நம்பி வரும் மனைவிகளின் கதி என்ன? அவள் வேறு ஒரு வீட்டில் இருந்து வந்துள்ளதால், கணவன்மார்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? நினைத்த நேரத்தில் அவளை வீட்டை விட்டு துரத்தலாமா?
இந்த விஷயத்தில் நல்ல ஆண்கள், கெட்ட ஆண்கள், படித்தவர், படிக்காதவர் என்ற விதிவிலக்குக் கிடையாது. குணத்தில், படிப்பில் அவன் எவ்வளவுதான் உயர்ந்தவனாக இருந்தாலும், என்றேனும் ஒரு சின்னச் சண்டை என்று வந்து விட்டால், வாழ்கையில் ஒரு முறையேனும் சட்டென்று அவர்களுக்குக் கூட இந்த வார்த்தை வந்துவிடுகிறது. இந்த நிலைமை திருமணம் செய்து எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும், இருக்கிறது. அப்படி ஒரு எண்ணம் ஆண்கள் மனதில் எங்கோ ஒரு இடத்தில் வேரூன்றி உள்ளது. ஏன்? இவள் வேறு வீட்டுப் பெண் என்பதலா? தங்கள் உடன்பிறந்த சகோதரிகளைக் கூட வெளியே போகச் சொல்லாத ஆண்கள், மனைவிகளைப் பார்த்து மட்டும் எளிதில் அப்படி ஒரு வார்த்தை சொல்லி விடுகிறார்களே ஏன்?
இதன்மூலம் தாங்கள் திருமணம் செய்து அழைத்துவரும் பெண்களுக்கு, ஆண்கள் என்ன பாதுகாப்பு உணர்வை கொடுக்கிறார்கள்? இது என் வீடு என்று என்றைக்காவது பெண்களால் முழுமனதாக உணர முடியுமா? அப்பொழுது அவள் உங்களில் சரிபாதி இல்லையா? இத்தனை ஆண்டுகள் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கை பொய்யா?
நான் எங்கோ கேள்விப்பட்ட விஷயம், அறுபது வயது பெண்மணி சொன்ன வார்த்தைகள் இவை, “எனக்குக் கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட நாப்பது வருஷம் ஆகப் போகுது. இப்போ வரை என்னால முழுமனசா என் வீடுன்னு உரிமையா உணர முடியில. அது ஏன்னு தெரியலை.“
இப்படி ஒரு செக்யுரிட்டி உணர்வு தான் இன்றளவும் எல்லாத் திருமணமான பெண்களுக்கும் இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? கணவன்கள் அந்த உரிமை உணர்வை அவர்களுக்குக் கொடுக்கவில்லையா? ஏன் அப்படி?
மிருதுளாவிற்கு, அன்றைய சம்பவத்திற்குப் பின், நாட்கள் முன்பை விட மோசமாகச் சென்றது. சின்னச் சின்ன விஷயத்தை எல்லாம் பூதாகரமாக்கி பிரச்சனை செய்த சந்துரு, அவள் எதிர்த்துப் பதில் பேசும் சமயம், அன்று வைக்கப்பட்ட கேமராவில் பதிவாகி இருந்த, அவளின் அந்தரங்க விடியோவை காட்டி மிரட்டினான். இதனால் மேலும் மேலும் அவள் வாழ்க்கை நரகமாக ஆரம்பித்தது.
இந்த நிலையில் தான், சந்துருவின் தாய் மீனாட்சி இவர்களைப் பார்க்க சென்னைக்கு வந்தார். அவனின் சித்தப்பா மகளுக்குத் திருமணம் நிச்சயிக்கபட்டிருந்தது. அதன்பொருட்டு, அவனின் சித்தப்பா, சித்தி மற்றும் இன்னும் சிலபேர் சந்துருவை ஊருக்கு அழைக்க வந்திருந்தார். பல மாதங்கள் கழித்து இப்பொழுது தான் தன் மாமியாரை பார்க்கிறாள் மிருதுளா. இன்முகத்துடனே அவர்களை இவள் வரவேற்க, மீனாட்சியோ, இவளை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தார். ஒரு நொடி மிருதுளாவின் முகம் சுருங்கினாலும், அடுத்த நொடி தன்னைச் சரி செய்துகொண்டவள், விருந்தினர்களுக்கு வேண்டியதை செய்தாள்.
மிருதுளாவிடம் இன்முகமாகவே பேசிய சந்துருவின் உறவினர்கள், இருவருக்கும் பத்திரிக்கை வைத்துவிட்டு, அவர்களைக் கட்டாயம் திருமணத்திற்கு வரவேண்டும் என்று அழைத்துவிட்டு சென்றனர். வேறு இடங்களுக்குப் பத்திரிக்கை வைக்கவேண்டும் என்பதால் அவர்கள் கிளம்பிவிட, மாலை ரயிலுக்குக் கிளம்ப உள்ளதால், அதுவரை மகன் வீட்டில் தாங்கி கொள்ளலாம் என்று மீனாட்சி மட்டும் அங்கேயே தங்கினார்.
அவருக்கு உணவு தயார் செய்து, பரிமாறி என்று அனைத்தையும் மிருதுளா பார்த்துக்கொள்ள, அவரோ இவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை. ஏனோ சந்துரு மட்டும் தான் அந்த வீட்டில் இருப்பது போல, அவனிடம் தான் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக மாலை கிளம்பும் நேரம் வரவும், “மறக்காம கல்யாணத்துக்கு வந்துடு. போன தடவை மாதிரி கால்ல சுடு தண்ணியை ஊத்துன மாதிரி வந்தோமா கிளம்புனோமான்னு இல்லாம, ஒரு பத்து நாள் தங்குற மாதிரி லீவ் போட்டுட்டு வா. வரும்போது இவளையும் கூட்டிட்டு வா. மருமக எங்கன்னு கேட்டா, பதில் சொல்லணும். எனக்கு இவ முகத்தைப் பார்க்க கூட இஷ்டம் இல்லை. இருந்தாலும் சபையில நீ தனியா நின்னா, ஊர் காரணவ எதாவது பேசுவானுங்க. அதான். மறக்காம கூட்டிட்டு வந்துடு.” என்று வெகு நேரமாகப் பேசிவிட்டு சந்துருவுடன் கிளம்பி ரயில் நிலையம் சென்றார்.
அவர் இருக்கும் வரை சொந்த வீட்டிலேயே அன்னியமாக இருப்பது போல, உணர்ந்த மிருதுளா அவர் சென்ற பின்பு தான், நிம்மதியாக மூச்சே விட்டாள்.
அதன் பின் நாட்கள் வேகமாகச் செல்ல, திருமணத்திற்குக் கிளம்பி சென்றனர் சந்துருவும், மிருதுளாவும். சென்னைக்குத் திரும்பி வரும்பொழுது தன் குடும்ப வாழ்கையே முடிந்து, தான் மட்டும் தனியாக வருவோம் என்று மிருதுளாவிற்கு அப்பொழுது தெரியாது.