நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
“சொல்ல சொல்ல இனிக்குதடா! முருகா! உள்ளமெல்லாம்
உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா!” என்ற பாட்டு சத்தம் திருச்சி நகரத்தின் பக்கத்தில் அமைந்திருந்த அந்த அழகிய கிராமத்து வீட்டினில் கேட்டது. (expertseoinfo.com)
வீட்டின் முன்பு ஒரு அழகிய தாமரை பூ கோலம் போட்டு முடித்து விட்டு எழுந்து வந்து கொண்டிருந்தாள் மலர் .
“மலர் ” என்ற குரல்கேட்டு ஓட்டமும் நடையுமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள் மலர் .
“மலர் இன்னிக்கி முள்ளங்கி போட்டு சாம்பார் வைத்து விடு. அப்புறம் பூசணிக்காய் கூட்டு, புதினா துவையல், ரசம், கொஞ்சம் மோர். ரெடியா வச்சிடு.” என்று அன்று மதியத்திற்கு செய்யவேண்டிய உணவு பதார்த்தங்களை கூறினார் பார்வதி.
“இன்னிக்கு சஷ்டி. வேலையெல்லாம் முடிச்சுட்டு நாம ரெண்டு பேரும் சாயந்திரம் பக்கத்துல இருக்கிற முருகர் கோயிலுக்கு போயிட்டு வரலாம். சரியா மலர் ?” என்று கேட்டார் பார்வதி
“சரிங்க அத்தை. நாம சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வரலாம்.” என்று கூறியவள் கூறியதோடு மட்டும் நிற்காமல் பம்பரமாய் சுற்றி சுற்றி அந்த சமையலறையில் வேகவேகமாக அனைத்து வேலையையும் முடித்து விட்டாள்.
அவள் அளவிற்கு வேகவேகமாக செய்ய முடியாவிட்டாலும் பார்வதியும் தன்னால் முடிந்த அளவிற்கு அவளுக்கு உதவி செய்தார். காலை 9 மணி அளவில் சமையல் வேலை அனைத்தையும் மாமியாரும் மருமகளும் முடித்துவிட்டு இருந்தனர்.
ஒரு தட்டில் கொஞ்சம் பொங்கல் மற்றும் சட்னியை எடுத்துக்கொண்டு சமையல் அறையில் செய்த வேலையினால் நெற்றியில் வழிந்த வியர்வையை தன் முந்தானையால் துடைத்தபடி
ஹாலிற்கு வந்தாள் மலர் .
“டேய் ஆதி. சீக்கிரம் கெளம்புடா. ஸ்கூல் பஸ் வர டைம் ஆயிடுச்சு.” என்று தன் ஐந்து வயது மகன் ஆதித்யாவை கிளப்பிக் கொண்டிருந்தாள் மலர் .
அவன் சட்டை பட்டனை மிகப் பொறுமையாக தூங்கி வழிந்தபடியே போட்டுக்கொண்டிருந்தான்.
மலர் தன் கையில் இருந்த தட்டை மேசை மீது வைத்துவிட்டு ஆதித்யாவை தன் பக்கம் பிடித்து திருப்பி சட்டை பட்டனை போட்டு விட்டாள்.
“அம்மா இன்னிக்கு கண்டிப்பா நான் ஸ்கூலுக்கு போயே ஆகணுமா?” என்று சிணுங்கியபடி கேட்டான்.
அவன் “என்ன? என்னடா கேட்ட? ஸ்கூலுக்கு கண்டிப்பா போயே ஆகணும். படிப்பு ரொம்ப முக்கியம் டா.” என்று கூறி அவன் வாயில் பொங்கலை வேகவேகமாக திணித்தாள்.
“ மலர் பார்த்து பார்த்து. குழந்தைக்கு அடைக்க போகுது.” என்று பேரன் மீது அக்கறையுடன் கூறிக்கொண்டே அங்கு வந்தார் அண்ணாமலை.
“டைம் ஆயிடுச்சு மாமா. இவன் என்னடான்னா பொறுமையா கிளம்பிட்டு இருக்கான். ஸ்கூல் பஸ் போய் விடும்.” என்று சிறிது வருத்தம் காட்டி கூறினாள் மலர் .
“ஸ்கூல் பஸ் போனால் என்னமா? நான் தான் இருக்கேன் இல்ல? நான் ஸ்கூலுக்கு போய் விட்டுட்டு வரேன்.”
“உங்களுக்கு எதுக்கு மாமா சிரமம்? நீங்க வேற கடைக்கு போகணும்.”
“அதெல்லாம் பரவாயில்லை மா. நடராஜ் காலையிலேயே கடை சாவியை வாங்கிட்டு திறக்க போயிட்டான் .
அதனால் பிரச்சனை இல்லை. நீ ஆதிக்கு திருப்தியா சாப்பாடு ஊட்டிவிட்டு ஸ்கூலுக்கு அனுப்பினால் போதும்.” என்றார்.
“எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் தான். இவன் ரொம்ப படுத்துகிட்டு இருக்கான்.”
“இந்த வயசுல செல்லம் கொடுக்காம வேற எந்த வயசுல செல்லம் கொடுப்பாங்க? அவனை கண்டிக்க வேண்டிய நேரத்திலே கண்டிக்கலாம். இப்போ அவனை ஸ்கூலுக்கு கிளப்புற வழியை பாரு மலர் .” என்றார் பேரன் தலைமுடியை கோதி விட்டபடி.
“தாத்தானா தாத்தா தான்.” என்று தாத்தாவை கட்டிப் பிடித்துக் கொண்டான் ஆதித்யா.
அதேநேரம் பள்ளி பேருந்து வீட்டு வாசலுக்கு வந்து நின்று பாம் பாம் என்று ஹாரன் அடித்தது.
அப்பொழுது அங்கு வந்த ஆதித்யாவின் தந்தை ஆறுமுகம்
“டேய் என்னடா? இன்னுமா சாப்பிடற? போதும் சாப்பிட்டது . எழுந்து வா.” என்று அவனை தூக்கிக்கொண்டு அவனது புத்தக பையையும் எடுத்துக் கொண்டு பேருந்தை நோக்கி நடந்தான்.
பேருந்தின் அருகில் சென்று ஆதித்யாவை ஏற்றிவிட்டான். அப்படியே உள்ளே கண்களால் ஒரு நோட்டமிட்டான்.
ஆறுமுகம் எப்பொழுதும் எச்சரிக்கையாக நடந்து கொள்வான். சில நேரங்களில் பேருந்து உள்ளே சென்று எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா? என்று சரி பார்த்து விட்டு வருவான். ஏதாவது ஒரு நாற்காலி உடைந்து இருந்தால் புகார் கொடுத்து அதனை சரி படுத்திய பின்புதான் அந்த பேருந்தை அவன் எடுக்க விடுவான். இதனாலேயே அந்த பேருந்து எப்பொழுதுமே நல்ல நிலையில் இருந்தது.
ஆறுமுகம் நோட்டம் விடுவதை பார்த்து பேருந்து ஓட்டுனர் முத்து
“ஆறுமுகம் எல்லாமே ஒழுங்கா தான் இருக்கு. உனக்காகவே நாங்க எப்பவுமே இந்த பேருந்தை எந்த குறையும் இல்லாமல் வைத்திருக்கிறோம்.” என்று கூறினான்.
அதற்கு ஆறுமுகம் எனக்காக “அதை செய்யாதீர்கள். உங்கள் பஸ்ல வர்ற குழந்தைகளை மனசுல வச்சிக்கிட்டு அதை செய்யுங்க. அதுவும் இந்த பஸ்சை மட்டும் அப்படி வச்சுக்கிட்டா பத்தாது. எல்லா ஸ்கூல் பஸ்சையும் அப்படித்தான் வச்சிக்கணும்.” என்று கூறிவிட்டு வந்தான்.
வீட்டுக்குள் நுழைந்த ஆறுமுகத்தை பார்த்த அண்ணாமலை
“எதுக்குப்பா இப்படி பயந்துகிட்டு அவனை பஸ்ல அனுப்பனும்? பேசாம நம்ம காரிலேயே அவனை கூட்டிட்டு போய் விட்டுட்டு வரலாமே.” என்றார் அக்கறையாக.
“அதுக்கு இல்லை அப்பா அவன்தான் பஸ்ல போகணும்னு ஆசைப்பட்டான். அதனால நானும் பீஸ் கட்டிட்டேன். இப்போ சீக்கிரம் கிளம்ப கஷ்டப் படுறான். அதுக்காக நாம கார்ல கூட்டிட்டு போய் விட்டுவிட்டு வந்தால் பணத்தோட அருமை அவனுக்கு தெரியாது. அவன் இந்த மாசம் மட்டுமாவது ஸ்கூல் பஸ்ஸில் போயிட்டு வரட்டும். அப்புறமா நாம கார்ல விடுவதை பற்றி யோசிக்கலாம். அதுவுமில்லாம ஸ்கூல் பஸ்சை நான் செக் பண்றது நல்ல விஷயம் தானே. மத்த பசங்க பத்திரமா இருப்பாங்க.” என்றான் பொறுப்பாக.
“உண்மை தான் ஆறுமுகம். சரி இன்னைக்கு நிலத்துல வேலை இருக்கா?”
“இருக்குப்பா நான் காலையில 6 மணிக்கு எழுந்து போயி வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதான்னு பார்த்துட்டு வந்தேன். திரும்பவும் போகணும். சரிப்பா நீ அந்த வேலையை பொறுப்பா பார்த்து கொள்வாய். நான் கடைக்கு கிளம்புறேன்.” என்றார் மகனின் பொறுப்புணர்ச்சியை அறிந்த அண்ணாமலை.
“ஆதி ஒழுங்காவே சாப்பிடல. அதுக்குள்ள கூட்டிட்டு போயிட்டீங்க.’ என்று குறைகூறும் குரலில் கணவனைப் பார்த்து கூறினாள் மலர் .
“அதுக்கு அவனை சீக்கிரமா எழுப்பி சாப்பாடு கொடுத்து இருக்கணும்.” என்று மனைவி மீது குறை கூறினான் ஆறுமுகம்.
“அவன் ரொம்ப டயர்டா தூங்கிட்டு இருந்தான். நேத்து நைட்டு ரொம்ப நேரம் விளையாடிட்டு இருந்தா. காலையில் எழுந்திரிக்க லேட்டாயிடுச்சு.”
“அதுதான் எனக்கே தெரியுமே. நேற்று நான் அவனை சீக்கிரமா தூங்க சொன்னேன். அவன் தூங்கவே இல்லை. இப்ப சீக்கிரமா தூங்கலனா என்ன நடக்கும்ன்னு அவனுக்கு புரிஞ்சிருக்கும். நாளையில் இருந்து சீக்கிரமா தூங்கி சீக்கிரமா எழுந்துவிடுவான். சரி நான் போய் சாப்பிடுகிறேன்.” என்று முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான் ஆறுமுகம்.
அவனை முறைத்து கொண்டு நின்று கொண்டிருந்தாள் மலர் .
“விடுமா அவன்தான் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்னு தெரியுமே. காலையில இருந்து வேலை செய்து டயர்டா இருப்ப. நீ போய் ரெஸ்ட் எடு மா.” என்றால்c மருமகள் மீது அக்கறையாக மாமனார்.
“மாமா. ராமுவும் மரிக்கொழுந்தும் இன்னிக்கு வரல. ராமுவுக்கு உடம்பு சரி இல்லையாம். மரிக்கொழுந்து பக்கத்திலிருந்து பாக்கணும்னு வரல. தோட்டத்தில் செடிகள் எல்லாத்துக்கும் தண்ணி ஊத்தனும். நான் போய் அந்த வேலையை பார்க்கிறேன்.” என்று கூறிவிட்டு தோட்டத்துக்கு சென்றாள். மரிக்கொழுந்து, ராமு இருவரும் அந்த வீட்டில் வேலை செய்யும் வேலையாட்கள். மரிக்கொழுந்து வீட்டு வேலை செய்பவள். ராமு தோட்ட வேலை செய்பவன். இருவரும் பின் இருபதுகளில் இருக்கும் கணவன் மனைவி.
சமையலறையில் பார்வதி எடுத்து வைத்த பொங்கலை சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ஆறுமுகம்.
“அம்மா இன்னிக்கு பொங்கல் ரொம்ப டேஸ்டா இருக்கு. தேங்காய் சட்னி பிரமாதம். உங்க கைக்கு ஒரு ஜோடி வளையல் வாங்கி போட வேண்டியது தான்.” என்று வாயார புகழ்ந்தான்.
“அப்படியா அந்த ஜோடி வளையலை உன் பொண்டாட்டிக்கு போடு. ஏனா அவள்தான் இந்த பொங்கலையும் சட்னி, சாம்பாரையும் செய்தது.” என்றார் புன்னகையுடன்.
‘அவனுக்கு தெரியாதா அவனது மனைவியின் சமையல் திறமையை பற்றி. எனினும் தாயை புகழ்வது போல மனைவியையும் சேர்த்து புகழ்ந்தான்.
“சரிமா போட்டுட்டா போச்சு.” என்றான் ஆறுமுகம்.
சாப்பிட்டு முடித்த ஆறுமுகம் தோட்டத்திற்கு சென்றான். அங்கு மலர் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை பார்த்தான்.
அவள் அருகில் சென்று
“இன்னிக்கு பொங்கல் பிரமாதம்.”
என்றான். அவள் பதில் ஏதும் கூறாமல் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தாள்.
“என்ன? பையனை சாப்பிட விடாமல் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டேன்னு என் மேல கோபமா?” என்று அவளது கண்ணம் தொட்டு நிமிர்த்தி கேட்டான்.
“ம்ம்” என்று எங்கேயோ பார்த்தபடி கூறினாள்.