அத்தியாயம் 26(1)
ஒரு மாதம் கடந்திருந்தது. சந்துருவை பார்க்க நேர்ந்த நிகழ்வும், அதைத் தொடர்ந்து, தன் கடந்த காலத்தைக் கெளதமுடன் பகிர்ந்துகொண்ட அன்றைய இரவின் தாக்கத்தில் இருந்தும், மெல்ல மெல்ல தன்னை வெளிக்கொண்டு வந்திருந்தாள் மிருதுளா. அன்று பார்டியில் அவன் பேசிய வார்த்தைகளை, அவன் கேட்ட மன்னிப்பையும் அறவே மறந்திருந்தாள்.
அன்றொரு நாள், விடுமுறை தினம். மாலை வேளை, தேஜாவை, குளிப்பாட்டி முடித்துவிட்டு, கட்டிலில் உட்கார வைத்து, உடை போட்டு கொண்டிருந்தாள் மிருதுளா. உடையைப் போட விடாமல் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கவே, அவள் வழக்கமாக விளையாடும் பொம்மையை, அவள் கைகளில் கொடுத்துவிட்டு, இவள் உடைபோட்டுக் கொண்டிருக்க, குழந்தையோ அந்தப் பொம்மையைக் ஆட்டிக்கொண்டு, “வ்வ்வ்!” என்று குழறிக் கொண்டிருக்க, அப்பொழுது, “ம்ம்ம்..ம்மாம்மா….ஆம்ம்ம்ம்…ம்மா” என்று குழந்தை சொல்ல, சட்டையைப் போட்டுக் கொண்டிருந்த மிருதுளா, தான் செய்யும் வேலையை அப்படியே விட்டுவிட்டு, ஆனந்தத்தோடு, குழந்தையின் வாயை பார்த்துக்கொண்டிருந்தவள், “அம்முகுட்டி!! இப்போ என்ன சொன்னீங்க?!!!” என்று ஆச்சரியத்துடன் கேட்க, குழந்தை இப்பொழுது தெளிவாக, “அம்மம்மா….” என்று வார்த்தைகளை இழுத்து சொல்லவும், குழந்தையின் இரண்டு பக்க கன்னத்திலும் மாறி மாறி இதழ் பதித்தவள், “என்னங்க!! இங்க ஓடிவாங்க!!” என்று சத்தமாகக் கௌதமை அழைத்துக்கொண்டு வீடு முழுவதும் தேடி அலைந்தவள், கடைசியில் தங்கள் அறை பால்கனியில் சென்று பார்க்க, அங்கே இருந்த சேரில், மடியில் லேப்டாப்பை வைத்துக்கொண்டு அலுவக வேலை பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்.
நேரே அவனிடம் சென்றவள், அவன் மடியில் இருந்த லேப்டாப்பை மூட, “ரிது என்ன பண்ற! முக்கியமான வொர்க்.” என்றவனின் பேச்சை எதுவும் காதில் வாங்கிக்கொள்ளாமல், அவன் மடியில் இருந்து லேப்டாப்பை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு, அவனை எழுப்ப, அவனோ, “என்னம்மா சொல்லு?!” என்று எழுந்து கொள்ளாமல் கேள்வி கேட்க, “ம்ப்ச்! மொதல்ல என் கூட வாங்க.” என்று இவள் உற்சாகத்துடன் பதில் சொல்ல, “என்ன ரிதுமா?! என்ன இருந்தாலும் இங்கேயே சொல்லு. எனக்கு வேலை இருக்கு.” என்று அவன் சலித்துக்கொள்ள, “அட!! வாங்கன்னா, வரணும்.” என்று போலியான கோபத்துடன் சொன்னவள், அவனின் கை பிடித்து எழுப்பி, அவனை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றவள், கட்டிலின் அருகில் சென்று நிறுத்திவிட்டு, “பாப்பா, இப்போ என்ன சொன்னா தெரியுமாங்க?!” என்று கேட்டவளின் முகத்தில் இருந்த ஆயிரம் வாட்ஸ் பலப் வெளிச்சம், இவனையும் தொற்றிக்கொள்ள, “என்ன அம்மு? பாப்பா என்ன சொன்னா?!!” என்று மகிழ்ச்சியுடன் கேட்டான்.
“என்ன சொன்னா தெரியுமா??” என்று பீடிகை போட்டவள், “என்னை அம்மான்னு கூப்பிட்டாளே!!!” என்றாள் வானளவு உற்சாகத்துடன்.
“அம்மான்னா சொன்னா!!!” என்று கௌதமும் உற்சாகத்துடன் கேட்க, “ஆமாங்க.“ என்றவள் தேஜா பக்கம் திரும்பி, “புஜ்ஜுகுட்டி, அம்மா சொல்லுங்க…..அம்மா..” என்று உதடுகளை அசைத்துக்காட்ட, குழந்தையோ, ‘பே!’ என்று கண்களை விரித்து, பேந்த பேந்த முழித்துக்கொண்டு இவளின் முகத்தைப் பார்க்க, அதில் பட்டென்று சிரித்துவிட்ட கெளதம், சிரிப்புடனே, “நல்லா தெரியுமா ரிதுமா, இவ அம்மா சொன்னாளா?!” என்று சொல்லிவிட்டு, விழுந்து விழுந்து சிரிக்க, திரும்பி இவனை முறைத்து பார்த்தாள் மிருதுளா.
அவள் பார்த்ததும், கப்பென்று வாயையை மூடிக் கொண்டவனுக்கு, இருந்தும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய் மூடியபடியே சத்தமில்லாமல் சிரிக்க, அவளோ முகத்தை அழுவது போலக் கொண்டுபோக, “ம்ப்ச்!! அம்முகுட்டி!!” என்றவன், மிருதுளாவை அணைத்துக்கொள்ள, அவளோ, கணவனின் கைகளை எடுத்துவிட முயற்சிக்க, முடியாமல் போகவே, அப்படியே அமைதியாக நின்றுகொண்டாள். “இப்போ ரிது பாப்பா, எதுக்கு இப்படிச் செய்றீங்க.“ என்றவன், மிருதுளாவின் முகத்தை நிமிர்த்தி, கை அணைப்பிலேயே குழந்தை பக்கம் திருப்பியவன், தேஜாவின் முகத்தைப் பார்த்து, “குட்டி மா, அம்மா சொல்லுங்க.” என்று இவனும் சொல்ல, தேஜாவோ, இவர்களைக் கண்டு கொள்ளாமல், தன் விளையாட்டில் மும்முரமாக இருந்தாள்.
அதில் மறுபடியும் கௌதமிற்கு லேசாகச் சிரிப்பு வர, “வேற ஏதாவது சொல்லி இருப்பா ரிதுமா. உன் காதுல அம்மான்னு விழுந்து இருக்கும்.” என்று சொல்ல, மொழுக்கென்று மிருதுளாவின் கண்களில் கண்ணீர் கோர்த்து விட்டது. தேஜா எப்பொழுது ‘அம்மா’ என்று தன்னை அழைப்பாள் என்று வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, இப்போதைய குழந்தையின் ‘அம்மா’ என்ற விழிப்பு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்திருந்தது.
குழந்தை இல்லாதவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும் என்பார்கள். அதன்படி தான், தன்னை ‘அம்மா‘ என்று கூப்பிட ஆள் இல்லையே, இல்லாமலே போய்விடுமோ என்று நினைத்திருந்தவளுக்கு, அட்சய பாத்திரமாக அவள் வாழ்கையில் நுழைந்திருந்தாள் தேஜா. அப்படிப்பட்டவள், சற்றுமுன்பு ‘அம்மா’ என்று அழைத்ததும், மிருதுளாவின் தாயுள்ளம் மகிழ்ச்சி கடலில் திளைத்ததோடு இல்லாமல், பல பல கற்பனைகளுக்கும் சென்றிருக்க, இப்பொழுது அதெல்லாம் கற்பனையோ என்ற எண்ணம் எழுந்திருக்க, இதில் கௌதமின் கிண்டல் வேறு அவளுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க, அந்த நினைவில், அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
தன்னவளின் கண்கள் கலங்கியதை பார்த்த கெளதம், “அம்மு என்ன இது? சும்மா விளையாட்டுக்கு சொன்னா..ம்ப்ச்….” என்றவன் அவளைத் தன் பக்கம் திருப்பி, அவளது கண்களைத் துடைத்துவிட்டவன், “சொல்லுவா அம்மு. அவளுக்கு நீதான அம்மா. உன்னைக் கூப்பிடாம, வேற யாரை கூப்பிட போறா. கூடிய சீக்கிரம் கூப்பிடுவா. அவ கூப்பிடறது இருக்கட்டும். மொதல்ல நீ இப்போ என்னைப் பார்த்துக் கெளதம் சொல்லு.” என்று அவளை வம்பிழுக்க, அவளோ முடியாது என்பது போலத் தலை அசைக்க, “சொல்லு ரிது. இல்லை, இந்த லிப்சை கடிச்சு வச்சுடுவேன்.” என்று அவன் மீண்டும் கேட்க, அவள் புன்னகையுடம் மறுபடியும் இல்லை என்று தலை அசைக்க, “முடியாதா…இதோ கடிச்சு வைக்கிறேன்.” என்றவன் அவள் இதழ்களை நோக்கி குனிய, அவள் இதழ்களுக்கு வெகு அருகில் இவன் நெருங்கும் நேரம், “அப்பப்பப்பா…..” என்ற தேஜாவின் குரல் கேட்க, சட்டென்று நிமிர்ந்தவன், “ரிது, இப்போ உனக்கு எதாவது கேட்டுச்சா!!” என்று ஆச்சரியத்துடன் கேட்க, “இல்லையே!” என்று வேண்டும் என்றே சொன்னவள், கள்ள சிரிப்பு சிரிக்க, அதைக் கண்டுகொண்டவன், “இல்லை அம்மு. இப்போ பாப்பா என்னை அப்பான்னு கூப்பிட்டா..” என்றவன் மிருதுளாவை விடப் பலமடங்கு மகிழ்ச்சியைக் குரலில் காட்ட, இப்பொழுதோ, தேஜா, “அம்மம்மா …..அப்பப்பப்பா..”என்று கூற, உற்சாகத்தில் துள்ளிக்குதிக்காத குறையாக, தேஜாவை இருவரும் மாறி மாறி தூக்கி போட்டு கொஞ்ச, அதிலும் மிருதுளா, “ரொம்பப் புத்திசாலிங்க, ஒரே நேரத்தில, அம்மா அப்பான்னு சொல்லிட்டா. சுப்பர்ல!” என்று உற்சாகத்துடன் சொல்ல, “பின்ன இருக்காதா, அவ என்னை மாதிரி புத்திசாலி அண்ட் ஸ்மார்ட்.” என்று காலரை தூக்கிவிட்டுகொள்ள, “அப்படியா, அப்போ நேத்து, உங்க பீரோவில் ஒரு சர்டிபிகேட் பார்த்தேனே. அதுலகூட, ஜஸ்ட் பாஸ் போட்டு இருந்தது. யாரோடதுங்க அது?” என்று கிண்டலாகக் கேட்க, “அட அது நான் இல்லை அம்மு. அது வேற கெளதம். என் கிளாஸ்மேட்.” என்று சமாளிக்க, “ஓஹோ, அப்படியா. சரிங்க. எதுக்கும் நான் மாமாகிட்ட கேட்கிறேன்.” என்று கள்ள சிரிப்புடன் சொல்ல, “ஐயையோ! வேண்டவே வேண்டாம். அப்புறம் அவரு, ஒரு லெக்சரை ஆரம்பிச்சிடுவாரு.” என்று சொல்லிவிட்டு கெஞ்ச, மிருதுளாவோ, “இதோ இப்போவே போய் மாமா கிட்ட நீங்க சொன்னதைச் சொல்றேன்.” என்று சொல்ல, கௌதமோ, அவள் கால்களில் பட்டென்று விழப்போக, மிருதுளா, அலறலுடன் நகர, அந்தச் சத்தத்தில் அங்கே வந்த மற்றவர்களிடம், தேஜா பேசியதை சொல்ல, அவர்களும் கூதுகலப்பட, உடனே மிருதுளா, எல்லாருக்கும் கேசரி செய்துகொடுக்க, எல்லோரும், இனிப்பு உண்டு, மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
தேஜா என்ற பூங்காற்று மிருதுளா கெளதம் வாழ்கையை அழகிய பூங்காவனமாக மாற்றியது. தினமும் மாலை அலுவகம் முடிந்து வரும் கெளதம், மனைவி குழந்தையுடன் தான், இரவு வரை நேரத்தை செலவழிப்பான். இருவரும் சேர்ந்து, தேஜாவிற்கு, தமிழ் எழுத்துக்களை, வார்த்தைகளைச் சொல்லிக்கொடுக்க முயற்சிக்க, அதுவே பெரிய காமடியாக அங்கே அரங்கேறும். சில சமயம் ‘அம்மா’ என்று சொல்லாமல், ‘உம்மா’ என்று சொல்ல, உனக்கு அம்மா வேண்டாமா, உம்மா தான் வேணுமா என்று பதில் சொல்லும் கெளதம், அவள் வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டி, அவளைச் சிரிக்க வைக்க, இப்படியே சந்தோஷமாக நாட்கள் கழிந்தது.
இங்கே ஆரா – ஜெய் வாழ்கையும் இனிப்பை போலத் தித்திப்பாகச் சென்று கொண்டிருந்தது. இருவரும் ஒன்றாகவே அலுவகம் சென்றுவந்தனர். சில சமயங்களில் வீடு திரும்பும்பொழுது, கிடைக்கும் நேரங்களில், ஆராவை எங்கையாவது, சினிமா, பார்க், ரெஸ்டாரன்ட் என்று வெளியே அழைத்துச் செல்வான் ஜெய். அப்படிதான் ஒருநாள், அலுவகம் முடிந்து வீட்டிற்கு வந்து ரெப்ரெஷ் செய்துவிட்டு, மிருதுளாவிற்கு உதவவென, கிட்சனில் ஆரா நின்றுகொண்டிருக்க, அன்று இரவு காட்சி சினிமாவிற்குப் போகவென ஏற்கனவே இரண்டு டிக்கெட் எடுத்து வைத்திருந்தான் ஜெய். சர்ப்ரைசாக ஆராவிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் அவளோ கிட்சனில் நின்றுகொண்டிருக்க, எப்படி அவளிடம் சொல்வது, என்று இவன் குட்டி போட்ட பூனை போலக் கிச்சனையே சுற்றி வர, அவனின் செயலை பார்த்துக் கொண்டிருந்த கெளதம், “என்ன ஜெய்?! என்ன ஆச்சு?! ஏன் இப்படி அங்கயும் இங்கயும் நடந்திட்டு இருக்க?!” என்று கேட்டுவிட, திருதிருவென முழித்தவன், “அ..அது ஒன்னும் இல்லை அண்ணா.” என்று அவன் சமாளிக்க, கௌதமிற்கு என்ன விஷயம் என்று ஓர் அளவுக்குப் புரிந்தது.
நமட்டு சிரிப்புடன் எழுந்து அறைக்குச் சென்றவன், அங்கிருந்தே மிருதுளாவை அழைக்க, “இதைக் கொஞ்ச நேரம் வதக்கிட்டு இரு அம்மு. அவர் கூப்பிடுறாறு.” என்று ஆராவிடம் சொன்ன மிருதுளா, கௌதமை தேடி அறைக்குள் சென்றுவிட, இது தான் சாக்கென்று, கிச்சனுக்குள் சென்ற ஜெய், ஆராவை பின்னில் இருந்து அணைக்க, திடிக்கிட்டு திரும்பியவள், “என்ன ஜெய் நீங்க. அக்கா இப்போ வந்துடுவா.” என்று சங்கடத்துடன் நெளிய, அவனோ, “அண்ணி, அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீ மொதல்ல சீக்கிரம் கிளம்பு.” என்று அவசரபடுத்தினான்.
“எங்க கிளம்பச் சொல்றீங்க?!” என்று அவள் கேட்க, “ஹம், நைட் ஷோ புக் செஞ்சு இருக்கேன். அதுக்குத் தான்.” என்று ஜெய் பதில் சொல்ல, “ஹை!! நைட் ஷோவா. சூப்பர் ஜெய். நான் இதுவரை நைட் ஷோ போனதில்லை.” என்றவளின் குரலில் உற்சாகம் இருக்க, “ஆனா, அக்காகிட்ட கேட்கணுமே. அவ ஓகே சொன்னா தான் நான் வருவேன்.” என்று ஆரா சொல்லவும்,
“ எங்களுக்கு எந்த அப்ஜெக்க்ஷனும் இல்லை. நீங்க தாராளமா போயிட்டு வாங்க. “ என்று மிருதுளா, கெளதம் குரல் ஹாலில் இருந்து கேட்கவும், அடித்துப் பிடித்து இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் விலகியவர்கள், “ஹீ!!!” என்று நெளிந்துகொண்டே ஹாலுக்கு வர, “நான் சமயலை பார்த்துக்கிறேன் அம்மு. நீ மொதல்ல சீக்கிரம் கிளம்பு. டைம் ஆச்சு பாரு.” என்று கூறிவிட்டு மிருதுளா கிச்சனுக்குள் சென்றுவிட, கெளதமோ, “பார்த்து போயிட்டு வா ஜெய். ரொம்ப லேட் ஆக்காம, சீக்கிரம் வந்துடுங்க.” என்று கூற, “தேங்க்ஸ் ண்ணா.” என்று உற்சாகத்துடன் சொன்ன ஜெய், சிறிது நேரத்தில் ஆராவுடன் கிளம்பிச் சென்றான். புன்னகையுடன் அவர்களை வழியனுப்பிய மிருதுளாவும் கௌதமும், இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கச் சென்றனர்.
இதற்கிடையே, அன்று புதன்கிழமை, கௌதமின் அத்தை மகளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. வாரநாள் என்பதால், கெளதம், ஜெய், ஆரா மூவரும் அலுவகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தனர். பெரியவர்கள், நேற்றே மண்டபம் சென்றிருக்க, ரிஷப்ஷன் இல்லாததால், காலை திருமணத்திற்கு மட்டும் போனாள் போதும் என்பதாலும், அலுவகத்தில் அன்று மட்டுமே லீவ் கிடைத்துள்ளதாலும் இளையவர்கள், திருமண தினம் அன்று காலை கிளம்பி செல்லலாம் என்று நினைத்திருந்தனர்.
காலை பத்து மணிக்கு மேல் முஹூர்த்தம் என்பதால், காலை எழுந்து கொண்டவர்கள், விரைவாகக் கிளம்பி வர, ஆண்கள் இருவரும் தேஜாவை தூக்கிக்கொண்டு கீழே சென்று காரை எடுக்கச் செல்ல, அதன் பின்னே, பெண்கள் இருவரும் கிளம்பி வர, இதற்கிடையில், பக்கத்துக்கு வீட்டு பெண்மணி, மிருதுளாவிடம் அவசரமாக ஏதோ கேட்க, ஆராவை கீழே அனுப்பிவிட்டு அவருடன் அவர் வீட்டிற்குச் சென்றாள் மிருதுளா.
கீழே, கெளதமோ பரிசு பொருளை மறந்து வைத்துவிட்டதால், மீண்டும் மேலே தங்கள் வீட்டுக்கு வந்தவன், மற்றொரு சாவியைக் கொண்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுவிட, இது தெரியாமல், பக்கத்துக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த, மிருதுளாவும் கீழே சென்றுவிட்டாள். படிக்கட்டில் குழந்தைகள் மேலும் கீழும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, சரியாக மிருதுளா, கார் அருகில் செல்லும்போது, மாடியில் இருந்து, ஒரு சிறுவன், தன் கையில் வைத்திருந்த ஐஸ் கிரீமை டப்பாவை, மிருதுளா மேல் கொட்டிவிட, அந்த டப்பாவில் இருந்த அனைத்தும், மிருதுளாவின் புடவையின் நெஞ்சு பகுதி முழுவதும் கொட்டப்பட்டது.
இதைப் பார்த்ததும், “டேய்! பார்த்து விளையாட கூடாதா!” என்று ஆரா அந்தச் சிறுவனைப் பார்த்து சத்தம்போட, “பரவால விடு அம்மு. சின்னப் பையன் தான. விளையாட்டு ஆர்வத்தில கொட்டி இருப்பான்.” என்று அவளைத் தடுத்தவள், “நான் போய் வாஷ் செஞ்சுட்டு வரேன்.” என்று மேலே சென்றாள்.
அப்பொழுது தான் காரை எடுத்துக்கொண்டு வந்த ஜெய், மற்றவர்கள் எங்கே என்று கேட்க, நடந்ததைச் சொன்னாள் ஆரா. ஏற்கனவே நேரம் ஆகிவிட்டதே என்று பதட்டத்தில் ஜெய் இருக்க, இதற்கிடையில் “எங்கே இருக்குறீர்கள்?!” என்று நூறாவது தடவையாகக் கால் செய்தார் ஜெய்யின் தந்தை. “இதோ வந்துட்டோம் ப்பா. கிளம்பிட்டோம்.” என்று ஜெய் பதில் சொல்ல, “என்ன ஜெய். எவ்ளோ நேரம் இதையே சொல்ற, கெளதம் போனுக்குப் போட்டா, பெல் அடிச்சிட்டே இருக்கு. இங்க இன்னும் கொஞ்ச நேரத்தில தாலி கட்ட போறாங்க. டைம் ஆச்சு. கொஞ்சம் சீக்கிரம் வாங்க.“ என்று லேசான எரிச்சல் குரலில் பேசிவிட்டு வைத்தார்.
இதற்கிடையில் மேலே கிப்ட்டை எடுக்க வந்த கெளதம், ஒருவழியாக அதைத் தேடி எடுத்துவிட, அதன் பின் ரெப்ரெஷ் செய்ய நினைத்தவன், வாசல் கதவை பூட்டிவிட்டுத் தங்கள் அறைக்குள் சென்றுவிட்டான். அந்த நேரம் மேலே வந்த மிருதுளா கதவை திறந்துகொண்டு தங்கள் அறைக்கு உடை மாற்ற சென்றவள், கண்ணாடி முன்பு நின்று, டிச்சுயு பேப்பரை வைத்து ஐஸ்க்ரீமை துடைத்துப் பார்க்க, ஐஸ்கிரீம் கரை போகவில்லை. இவள் புடவை வேறு லைட் கலர் என்பதால், சாக்கலேட் கறை, மாராப்பு பகுதி முழுவதும் பரவி, பிசு பிசுவென ஆகி இருந்தது.
கறை போகாதாதால், புடவையை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஆகிற்று. சரி என்று, இரண்டு கதவுகளையும் பூட்டிவிட்டு வந்த மிருதுளா, ஆராவிற்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அந்தப் பக்கம் அவள், சற்று முன்பு ஜெய் தந்தை பேசியதை சொல்ல, “அப்போ சரி ஆரா. நீங்க பாப்பாவை கூட்டிகிட்டு மொதல்ல போங்க. நானும் அத்தானும் பின்னாடி பைக்கில வந்துடறோம். அவர்கிட்ட சொல்லிடு.” என்று சொல்ல, அந்த யோசனை சரி என்று பட, “சரிக்கா!” வைத்துவிட்டாள் ஆரா. கௌதமும் மேலே இருப்பதால், அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று, இவர்களே நினைத்துக்கொண்டு, கிளம்பி சென்றுவிட்டனர். பாத்ரூமில் சத்தம் இல்லாததால் மிருதுளாவிற்கு உள்ளே கெளதம் இருப்பது தெரியாமல் போயிற்று.
அதன் பின், வேறு உடைகளை எடுத்துக் கட்டிலில் வைத்துவிட்டு, உடுத்தி இருந்தவற்றைக் கழட்டிவிட்டு, புதியதை போட்டுக் கொண்டவள், புடவையைக் கட்ட ஆரம்பிக்க, அந்த நேரம் பாத்ரூம் கதவை திறந்துகொண்டு அறைக்குள் வந்த கெளதம், மிருதுளாவின் கோளத்தைப் பார்த்து ஒரு நிமிடம் மூச்சடைத்து நின்றுவிட்டான்.