அத்தியாயம் 27(1)
நாளை ஆராவிற்குப் பிறந்த நாள். இன்று விடுமுறை தினம் என்பதால், அவளுக்குப் பரிசு வாங்குவதற்காக, கெளதமை அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்றிருந்தாள் மிருதுளா. திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால், ஆராவிற்குப் புடவையும், அவள் வெகு நாளாக ஆசைப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்புக் கற்கள் பதித்த ஜிமிக்கி கம்மலையும் அவளுக்குப் பரிசளிக்க முடிவு செய்திருந்தாள்.
ஆரா சற்று பூசினார் போன்ற உடல் அமைப்பு என்பதால் அவளுக்கு எப்பொழுதும் ஹெவி வெயிட் பட்டு புடவையை விட, லைட் வெயிட் புடவை அல்லது சிப்பான், ஜார்ஜெட் புடவைகள் தான் பிடிக்கும். நாளை ஆரா அலுவகம் செல்ல வேண்டியதால், கண்ணனுக்கு உறுத்தாத, வகையில், குறைந்த வேலைபாடுகள் கொண்ட, அவளது நிறத்தை கூடுதலாக எடுத்துக்காட்ட கூடிய, அரக்கு நிற லைட் வெயிட் பட்டு புடவையை மிருதுளா தேர்ந்தெடுக்க, கெளதமோ தன் பங்குக்கு மிருதுளா சொன்ன கம்மலை வாங்கினான்.
இரண்டையும் வாங்கிவிட்டு வெளியே வர, குழந்தைக்கு உடை மற்றும் சில பொருட்கள் வாங்கவேண்டி இருந்ததால், கௌதமும் மிருதுளாவும் பக்கத்தில் இருந்த அந்தக் குழந்தைகளுக்கான பிரத்யேக கடைக்குள் சென்றனர்.
அதே நேரம், உடை வாங்க நண்பனுடன் அந்தக் கடைத்தெருவுக்கு வந்திருந்தான் சந்துரு. நண்பனுடன் பேசிக்கொண்டே எதேர்ச்சையாகத் திரும்பி பார்த்தவனின் கண்களில் மிருதுளாவும் கௌதமும் அந்தக் குழந்தைகளுக்கான கடைக்குள் செல்வது கண்ணில் பட்டது. தன் நண்பனிடம் திரும்பி, தெரிந்தவர்களைப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு தானும் அந்தக் கடைக்குள் சென்றான்.
இங்கே கடைக்குள் சென்ற மிருதுளாவும் கௌதமும், தேஜாவிற்குச் சில ஆடைகளை வாங்கியவர்கள், அப்படியே அவளுக்கு நடை பழகப் பயன்படும் கிட் வால்கர் ஒன்றையும், வெளியே வாக்கிங் செல்லும்பொழுது அவளையும் உட்கார வைத்து அழைத்துச் செல்ல, ஸ்ட்ரோளர் ஒன்றையும் வாங்கிக் கொண்டனர். மேலும் சில விளையாட்டு சாமான்களையும் வாங்கியதும், மிருதுளாவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டுக் கெளதம் பில் போட சென்றுவிட,
இங்கே மிருதுளா தேஜாவுடன் கடையைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் தேஜா அவள் கைகளில் இருந்து திமிறி கீழே இறங்கியவள், தத்தி தத்தி நடந்து சென்று, சற்று தள்ளி இருந்த ஷெல்பில், அடுக்கிவைக்கபட்டிருந்த டெட்டி பியர் பொம்மைகளில் இருந்து ஒன்றை பிடித்து இழுக்க, அதைப் பார்த்த மிருதுளா அவள் அருகில் செல்வதற்குள், தேஜா பொம்மையை இழுத்துவிட, ஷெல்பில் இருந்த மற்ற பொம்மைகள், மொத்தமும் அவள் மேல விழ போக, அதைப் பார்த்து பதறிய, மிருதுளா, “அம்மு, என்ன பண்ற நீ!” என்றபடி தேஜாவை நெருங்குவதற்குள், இரண்டு கைகள், குழந்தையைத் தூக்கிவிட, பொம்மைகள் அனைத்தும் கீழே விழுந்து சிதறியது.
குழந்தைக்கு அடிபடவில்லை என்று நிம்மதி மூச்சு விட்ட மிருதுளா, “தேங்க்ஸ்!“ என்றபடி குழந்தையை நோக்கி கைகளை நீட்ட, தேஜாவை கைகளில் ஏந்தியபடி, அவள் பக்கம் திரும்பினான் சந்துரு. அவனை அங்கே எதிர்பார்க்காத மிருதுளா, அதிர்ச்சியடைய, அவனோ இவளை பார்த்துச் சிநேகமாகப் புன்னகைத்தான்.
பதிலுக்குத் தன் முகத்தில் எதையும் காட்டிகொள்ளாத மிருதுளா, “தேஜா, அம்மாகிட்ட வா.” என்று சொல்ல, அவனோ குழந்தையை இவளிடம் கொடுக்காமல், “ஏன் மிருதுளா, நான் என்ன தீண்டத்தகாதவனா, என்னோட முகத்தைக் கூடப் பார்க்க மாட்டேங்குற?!” என்று பேச்சை வளர்க்க, மிருதுளாவோ எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
தன் முகத்தைக் கூடப் பார்க்காத மிருதுளாவின் செயலில் தன் முகத்தைச் சோகம் போல வைத்துக்கொண்ட சந்துரு, உடைந்துபோன குரலில், “தெரியும் மிருதுளா, நான் உன்னை ரொம்பக் கொடுமை படுத்தி இருக்கேன். அதையெல்லாம் நினைக்கும்பொழுது எனக்கே என் மேல வெறுப்பா, கோபமா வருது. எந்தப் புருஷனும் பொண்டாட்டி கிட்ட நடந்துக்கக் கூடாத மாதிரி உன்கிட்ட நான் நடந்துகிட்டேன். அது உன்னை ரொம்பவும் பாதிச்சு இருக்கும்ன்னு எனக்குத் தெரியும் மிரு. நீ என்னை விட்டு பிரிஞ்சு போன பிறகு தான், உன்னோட அருமை எனக்குப் புரிஞ்சுது மா. இதுல, அம்மா உனக்குச் செஞ்ச கொடுமை தெரிஞ்ச பிறகு நான் எவ்ளோ உடைஞ்சு போனேன் தெரியுமா மிரு. நான் உங்கிட்ட ஒழுங்கா நடந்திருந்தா, அவங்களுக்கு இப்படி ஒரு செயலை செய்யத் தைரியம் வந்திருக்குமா?! எல்லாமே என் தப்புதான்.” என்றவன், குரலில் அவ்வளவு சோகத்தையும் காட்ட, மிருதுளாவோ அங்கிருந்து நகரமுடியாமல் கையைப் பிசைந்துகொண்டு நின்று கொண்டிருந்தாள்.
குழந்தை அவன் கையில் இருக்க, அவனோ இவளிடம் தருவது போலத் தெரியவில்லை. அவனிடம் சண்டைப்போட்டு, குழந்தையைப் பிடுங்கவா முடியும், அப்படிச் செய்து வீணாக இங்கே தான் காட்சி பொருளாகவோ, கௌதமுக்கு வருத்தத்தைக் கொடுக்கவோ இவள் விரும்பவில்லை.
“பழசை நினைச்சு இப்போ எந்தப் பிரயோஜனுமும் இல்லை. நீங்க அதை எல்லாம் மறந்துட்டு வேற வாழ்க்கை அமைச்சுக்கோங்க.” என்று பதிலுக்கு அவனுடனான பேச்சை கத்தரிப்பது போல, மிருதுளா சொல்ல, “எப்படி மிரு மறக்க முடியும். நானும் நீயும் புருஷன் பொண்டாட்டி. அவ்வளோ சீக்கிரத்தில என்னால மறக்க முடியல மிரு.” என்றவன், தன் பேன்ட் பொக்கெட்டில் இருந்து, தான் அவளுக்குக் கட்டிய தாலிக்கொடியை எடுத்து காட்டியவன், கலங்கிய கண்களுடன், “இதை எப்பவும் என்கூடத் தான் வச்சுட்டு இருக்கேன் மிரு. அப்படியாவது நீ என்கூட இருக்கிற மாதிரி இருக்காதான்னு ஒரு ஆறுதல். நீ எனக்குக் கிடைச்ச வைரம் மிரு. உன் அருமை தெரியாம, உன்னை அசால்ட்டா தூக்கி போட்டுட்டேன்.” என்று அவன் சொல்ல, அந்தத் தாலியை பார்த்ததும், இவளுக்குப் பழையது நியாபகம் வர, அன்றைய அவமானம் இன்று இவள் கண்களில் நீராய்த் தேங்கியது.
அவள் கண்கள் கலங்குவதைப் பார்த்தவன், தன் நினைவால் தான் கலங்குகிறாள் என்று தவறாக நினைத்துக் கொண்டவன், மனதுக்குள் சந்தோஷத்துடனும், வெளியே போலியான துக்கத்தோடும், “நீ இப்படிக் கஷ்டபடுறதை பார்க்கும்போது, எனக்கும் தாங்க முடியல மிரு. தயவு செஞ்சு என் கூட வந்துடு மா. நாம எங்கையாவது கண்கானா இடத்துக்குப் போய்டலாம். யாரும் உன்னைக் கஷ்டபடுத்தாத மாதிரி பார்த்துக்குறேன் மிரு. இதுநாள் வரை நான் உனக்குச் செஞ்ச பாவத்துக்கு, உன்னை ராணி மாதிரி, தலைல தூக்கி வச்சு தாங்கனும்ன்னு, ஆசையா இருக்கு மிரு. நீ சொல்ற மாதிரி நடந்துக்குறேன். இனி செத்தாலும் உன்னைக் கஷ்டபடுத்த மாட்டேன்.” என்று அவன் பாட்டுக்குப் பேசிக்கொண்டே போக, மிருதுளாவிற்கு எரிச்சல் ஆகிவிட்டது. இன்னொருவரை திருமணம் செய்துகொண்ட பெண்ணைப் பார்த்து இப்படித் தான் பேசுவதா?
அதே கோபத்துடன், “அறிவுகெட்ட தனமா பேசாதீங்க. இப்போ நான் இன்னொருத்தருக்கு பொண்டாட்டி. மொதல்ல பாப்பாவை கொடுங்க. எனக்கு நேரம் ஆச்சு. என் புருஷன் வந்தார்ன்னா உங்களுக்கு நல்லதில்லை.” என்றவள், குழந்தையை நோக்கி கையை நீட்ட, சந்துருவோ குழந்தையோடு பின்னோக்கி சென்றவன், “இல்லை மிரு, நீ மொதல்ல நான் சொன்னதுக்குச் சம்மதம் சொல்லு.” என்று சொல்ல, “அசிங்கமா இல்லை உங்களுக்கு. நான் அவ்வளோ சொல்லியும் இந்த மாதிரி கேக்குறீங்க. உங்களை நான் மறந்து எத்தனையோ நாள் ஆச்சு. மொதல்ல என் குழந்தையை என் கிட்ட கொடுங்க. பாப்பா அழறா.” என்று இவள் அவனை நெருங்க, அவனோ சட்டென்று மிருதுளாவின் கையைப் பிடித்துக் குழந்தையின் தலையில் வைத்தவன், “குழந்தை மேல சத்தியமா சொல்லு மிரு, என்னை நீ மறந்துட்டியா??” என்று கேட்க,
அவனின் இந்தச் செயலில், மிருதுளா கோபத்தின் உச்சத்துக்கே சென்றவள், “மொதல்ல என் கையை விடுங்க.” என்று தன் கையை உருவிகொள்ள முயற்சிக்க, அவனோ விடாமல் மீண்டும் மீண்டும் தன் கேள்வியையே கேட்க, மிருதுளாவிற்கு இத்தனை நாள் ஆழ் மனதில் இருந்த எண்ணங்கள் எல்லாம் வார்த்தைகளாக வெளியே வந்தது. “எப்படி உங்களை மறக்க முடியும். நீங்க செஞ்சதை எப்படி மறக்க முடியும். நான் பட்ட அவமானத்தை எப்படி மறக்க முடியும். உங்களை நான் இன்னும் மறக்கல. ஆனா,…” என்று மேலே சொல்ல போனவளை தடுத்தவன், “இது போதும் மிரு. நீ என்னை மறக்கல. இதுவே எனக்குப் பெரிய சந்தோசம். என்கூட வந்துடு மா… “ என்று விடாது சொல்ல, மிருதுளாவோ, தன் கையைப் பிரித்தெடுக்க முயற்சிக்க, இந்தப் போராட்டத்தில், குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்துவிட்டது.
மதிய நேரம் என்பதால், கடையில் கூட்டம் இல்லாமல் இருக்கவே, ஊழியர்களும் ஒரு சிலரை தவிர அனைவரும் மதிய உணவு இடைவேளைக்குச் சென்று இருந்தனர். கடையில் இருந்த சிலரும், கேஷ் கௌண்டரில் நின்று இருந்தனர். அதே போல, இவர்கள் இருவரும் கடையின் கடைகோடியில், டெட்டி பொம்மைகள் இருந்த ரேக்கிற்கு அந்தப் பக்கம் நின்றிருக்க, பொம்மைகள் இவர்களை மறைத்து இருக்க, சந்துரு மிருதுளாவின் கையைப் பிடித்திருப்பது யாருக்கும் தெரியவில்லை.
தன் மகளின் அழுகையில், இன்னுமே பதறியவள், “இப்படிக் கேக்குறதுக்கு உங்களுக்கு அசிங்கமா இல்லை. உங்களை நான் எப்பவோ சுத்தமா வெறுத்துட்டேன். என் பொண்ணும், என் புருஷனும் தான் இப்போ என் உயிர். அனாவசியமா பேசிட்டு இருக்காதீங்க.” என்று இவள் லேசாகக் குரலை உயர்த்தியபடி தேஜாவை நோக்கி அடியெடுத்து வைக்க, அதற்குள் சந்துருவின் பின்னில் இருந்து வந்த கெளதம், அவனின் கையில் இருந்த தேஜாவை லாவகமாகப் பிரித்தெடுத்து தன் கைவளைவில் வைத்துக்கொள்ள, இப்பொழுது தேஜாவின் அழுகை மட்டுப்பட்டது. திரும்பி சந்துருவை எரித்துவிடுவது போலப் பார்த்த கெளதம், “என் பொண்டாட்டி கைய விடுடடா!!” என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்ல, இந்தத் திடீர் செயலில், சந்துருவின் கையில் இருந்து மிருதுளாவின் கை தானாக விடுப்பட்டது.
அதன் பின், சந்துருவின் சட்டையைக் கொத்தாகப் பிடித்துத் தன் அருகில் இழுத்து, அவனை அடித்துவிடும் வெறியுடன் முறைத்தவன், சீற்றத்தை உள்ளடக்கிய அடிக்குரலில், “என்ன தைரியம் இருந்தா, என் பொண்டாட்டி கையைப் பிடிப்ப!! பிடிச்சது மட்டுமில்லாம, அவளை உன்கூட வரசொல்லுவ!! அன்னைக்கே உன்கிட்ட சொல்லிட்டேன். அவ இப்போ மிசஸ் கெளதம். இனி இந்த மாதிரி அவகிட்ட பேசின, பல்லை உடைச்சு கையில கொடுத்துடுவேன். உனக்கும் அவளுக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு. வேலை செஞ்சோமா, சாப்பிட்டோமான்னு, மூடிட்டு இருக்கணும். அதை விட்டுட்டு இனி இப்படி ***** மாதிரி அவகிட்ட பேசுன, அமைதியா பேசிட்டு இருக்க மாட்டேன். அடுத்தச் செகண்ட் ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சுடுவேன். அப்புறம் பேச வாய் இல்லை, பார்க்க கண்ணு கூட இருக்காது.“ என்று சத்தமில்லாமல் கர்ஜித்தவன், அவனை உதறி தள்ள, அதில் பின்னோக்கி சென்ற சந்துரு, தடுமாற்றத்துடன் தன்னைச் சரி படுத்திக்கொண்டு நிற்க, அவனை முறைத்தபடியே, மிருதுளாவுடன் அங்கிருந்து சென்றான் கெளதம்.
கோபத்தை அடக்கியபடி கெளதம் காரை ஓட்டிக்கொண்டிருக்க, பக்கத்தில் தேஜாவை மடியில் வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் மிருதுளா. ஆனால் பார்வை மட்டும் அவ்வபொழுது திரும்பி தன் கணவனைப் பார்த்தது. கௌதமின் கைகளில் புடைத்து தெரிந்த நரம்புகளைப் பார்க்கும்போதே, அவனின் கோபத்தின் அளவு தெரிந்தது இவளுக்கு.
ஒருவழியாக வீடு வந்து சேர்ந்ததும், மிருதுளாவிடம் ஒன்றும் பேசாமல், வாங்கி வந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கெளதம் மாடியேறிவிட, அவன் பின்னோடு சென்றாள் இவள். ஆராவும் ஜெய்யும் வெளியே சென்றிருக்க, கதவை திறந்துகொண்டு நேரே தங்கள் அறைக்குச் சென்ற கெளதம், பொருட்களைக் கட்டிலில் வைத்துவிட்டு, பால்கனி சென்றுவிட, கெளதம் கோபமாக வருவதைப் பார்த்த சேகர் பின்னோடு வந்த மிருதுளாவிடம் என்ன விஷயம் என்று கேட்க, “ஒன்னும் இல்லை மாமா. கடையில சின்னப் பிரச்சனை. நீங்க கொஞ்ச நேரம் பாப்பாவை வச்சுகுறீங்களா.” என்று கேட்க, “சரி மா.” என்றவர் தேஜாவை வாங்கிக்கொண்டு, வெளிய சென்றுவிட்டார்.