அத்தியாயம் 27(2)
கிரில் கேட்டை சாத்திவிட்டு, தங்கள் அறைக்குள் மிருதுளா வர, கௌதமை காணாததும், பால்கனி சென்று பார்க்க, கோபமாக வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தான் அவன். மெதுவாக அவன் அருகில் சென்றவள், “என்னங்க?!” என்று அழைக்க, அவனிடம் எந்தப் பதிலும் இல்லை. மீண்டும் கொஞ்சம் சத்தமாக இவள் அழைத்ததும், திரும்பி இவளை பார்த்தவன், மீண்டும் அந்தபக்கம் திரும்பிக் கொண்டு “சொல்லு ரிது.“ என்றவனின் குரலில், என்ன இருந்தது என்று இவளுக்குத் தெரியவில்லை.
மெதுவாக அவன் அருகில் சென்றவள், அருகில் மண்டியிட, இருந்தும் கெளதம் இவள் முகத்தைப் பார்க்கவில்லை. “என்னங்க. ப்ளீஸ் என்னைப் பாருங்க.“ என்று மிருதுளா சொல்லியும், அவன் திரும்பாமல் இருக்க, அவனின் முகத்தைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பியவள், “இப்போ என் புருஷனுக்கு என்ன கோபம்?!“ என்று கொஞ்சுவது போலக் கேட்க, அவனின் கோபம் லேசாகக் குறைந்தது. அதைக் கண்டுக்கொண்டவள், “கௌதமுக்கு என்மேல என்ன கோபம்?!” என்று சற்றே கிண்டல் குரலில் கேட்க, அவள் தன் பெயரை அழைத்தது, கௌதமின் மனதிற்குள் ஜில்லென்று இருந்தது.
திரும்பி மனைவியை பார்த்தவன், அவள் கை பிடித்து எழுப்பி, தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டவன், அவள் இடுப்பை சுற்றி கைகளை வளைத்துக் கொண்டபடி, “அவன் உன் கையைப் பிடிக்கிற அளவுக்கு ஏன் விட்ட அம்மு?? பேச வரும்போதே, பாப்பாவை தூக்கிட்டு, திரும்பி வந்துட வேண்டியது தான. தேஜா அவன் கையில எப்படிப் போனா?!!“ என்று ஆதங்கத்துடன் கேட்க, கௌதமின் கழுத்தை சுற்றி தன் கைகளைப் போட்டவள், தேஜா பொம்மையைத் தூக்க சென்றது முதல், கெளதம் வருவதற்கு முன்பு வரை நடந்ததைச் சொன்னவள், “நான் என்ன செய்யட்டுங்க. அவன் பாப்பாவை கையில வச்சுக்கிட்டு பேசிட்டே போனான். பாப்பாவை வாங்கலாமேன்னு கிட்ட போனேன், திடீர்ன்னு அவன் அப்படிச் செய்வான்னு நான் எதிர்பார்க்கல.” என்று சற்றே உள்ளே போன குரலில் சொல்ல, “என்னையாவது கூப்பிட்டு இருக்கலாமே அம்மு.“ என்று இவன் குறைபட்டான்.
“அவனைப் பார்த்தா நீங்க டென்ஷன் ஆகிடுவீங்கன்னு தான் கூப்பிடல. அத்தோட நானே பேசிடலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.” என்றவள், கெளதம் என்ன சொல்ல போகிறானோ என்றபடி அவன் முகத்தைப் பார்க்க, தற்பொழுது மீண்டும் அவன் முகத்தில் கோபம் வந்திருந்தது. “என்ன தைரியம் இருந்தா, உன்னைக் கூப்பிடுவான். எனக்கு வர கோபத்துக்கு அங்கேயே அவன அடிச்சிருப்பேன். கடைன்றதால விட்டுட்டேன்.” என்றவனின் கை இறுகுவதை உணர்ந்தவள், அவனைச் சாந்தப்படுத்தவேண்டி, அவனின் நெற்றியில் இதழ் பதித்து, “அவன்லாம் ஒரு ஆள்ன்னு, அவன் பேசுனதை எல்லாம் பெரிய விஷயமா எடுத்துக்காதீங்க. ஏதோ உளறிட்டு போறான்னு விடுவீங்களா.“ என்று மிருதுளா கூறியும், அவனின் கோபம் அடங்கவில்லை.
தான் இவ்வளவு சொல்லியும், அவனின் கோபம் இறங்கவில்லையே என்றவளுக்கு ஒருவேளை தான் சந்துருவை நினைத்துக் கொண்டிருப்பதாகக் கெளதம் நினைக்கிறானோ என்று நினைத்தவள், தன் மனதில் நினைத்ததைக் கேட்டாள். “ஒருவேளை அவன் சொன்னதும், அவன் பின்னாடி போய்டு….” என்று மிருதுளா சொல்லி முடிக்கவில்லை, தன் மடியில் இருந்தவளை கிட்டதட்ட தள்ளிவிடாத குறையாக, விலக்கி நிறுத்தியவன், வேகமாக இருக்கையில் எழுந்து, “லூசு மாதிரி பேசுன, அப்புறம் அவன் மேல இருக்கிற கோவத்துல உன்னை அடிச்சிட போறேன். நான் எதுக்குக் கோபபடுறேன்னு கூடவா புரிஞ்சிக்க முடியல உன்னால.” என்றவன் கோபத்துடன் அந்தப் பக்கம் திரும்பி நிற்க,
அவன் முன் சென்று நின்றவள், “ப்ளீஸ்ங்க சாரி. நா….நான் அப்படி நினைச்சு கேட்கலை….” என்றவள் எப்படிச் சொல்ல என்று தயங்கி நிற்க, பல நிமிட அமைதிக்குப் பின் இவள் பக்கம் திரும்பிய கெளதம், “ என் பொண்டாட்டி டி நீ. சந்துருவே இருந்தாலும் சரி, எவனும் உன்னை மனசால கூட நினைச்சு பார்க்க கூடாது. அது எனக்குச் சுத்தமா பிடிக்காது. என்ன தைரியம் இருந்தா, இன்னமும் அவன் மனசில இப்படி ஒரு எண்ணம் இருக்கும். உன் பேரை சொல்ல கூட அவனுக்கு யோக்கியதை கிடையாது. அப்படி இருக்கச்ச, எந்தத் தைரியத்தில அவன் உன்னைப் பார்த்து அப்படிப் பேசுனான். இனி அவன் என் கண்ணுல மாட்டுனான், அதுக்கு அப்புறம் நான் பொறுமையா இருக்கமாட்டேன். இதுக்கு மேல இதைப் பத்தி பேசவேண்டாம் ரிது. இந்த விஷயத்தைப் பத்தி பேசுறது எனக்குச் சுத்தமா பிடிக்கல.” என்றவன் விறுவிறுவென்று தன் வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டான்.
அதன் பின் இரவு உணவு முடிந்து, தூங்க சென்ற பின்னும் கௌதம் முகத்தைத் தூக்கி வைத்திருக்க, தேஜா மூலம் தூது அனுப்பினாள் மிருதுளா. கட்டிலில் இவளுக்கு முதுகு காட்டி அவன் படுத்திருக்க, அவன் அருகில் குழந்தையுடம் அமர்ந்தவள், “குட்டிமா, அப்பா ரொம்ப நேரமா நம்ம என்கிட்ட பேசல. ஒரு வேலை மவுன விரதமான்னு கேட்டு சொல்லு.” என்று கூறி, தேஜாவிடம் ‘போ’ என்பது போலச் சைகை செய்ய, குழந்தையோ தத்தி தத்தி நடந்து கெளதம் அருகில் சென்று, அவனின் தோளை தட்ட, இவர்களின் பேச்சுக் காதில் விழுந்தும், அவன் அமைதியாக இருக்க, தந்தை திரும்பாததால், குழந்தை திரும்பி தன் அன்னையைப் பார்க்க, மிருதுளாவோ, ‘அடி’ என்பது போலச் சைகை செய்ய, இப்பொழுது கெளதம் அருகே நெருங்கி சென்று உட்கார்ந்த தேஜா, “ப்பா…..அப்ப்ப்ப்ப்பா..!” என்று கத்திக்கொண்டே, பொம்மையை வைத்து அவன் தோளில் அடிக்க, சிறுது நேரம் வரை பொருத்துக் கொண்டவன், ஒரு கட்டத்தில் வலிக்கவே, பட்டென்று எழுந்து அமர்ந்தவன், ஒரு கையில் தேஜாவை தூக்கி மடியில் உட்கார வைத்துக்கொண்டு, மறு கையால் மிருதுளாவின் இடுப்பை வளைக்க, சிரிப்புடனே அவன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
“என் பொண்ணை விட்டே, என்னை அடிக்கிறியா அம்மு. உன்னை..” என்றவன் அவள் கன்னத்தில் இதழ் பதிக்க, “ஐயோ! விடுங்க பாப்பா இருக்கா.“ என்று அவள் வெட்கத்துடன் பதில் சொல்ல, “ என்னடி. எப்போ பாரு யாராவது இருக்காங்கன்னு சொல்லி சொல்லியே எஸ்கேப் ஆகுற…!” என்றவன், அவளை இன்னும் தன்னோடு நெருக்கி வளைத்து, அவள் கழுத்தில் முகம் புதைக்கப் போக, மிருதுளாவோ, அவனின் முகத்தை விலக்கியவள், கண்களால் குழந்தை இருப்பதைக் காட்ட, கெளதமோ, தேஜாவின் பொம்மையை எடுத்து அவள் கைகளில் கொடுத்துவிட்டு அவளை அந்தப் பக்கம் திருப்பி உட்கார வைத்தவன், ‘இப்போ எப்படி!‘ என்பது போல, மிருதுளாவிடம் கண்ஜாடை செய்தவன், அவள் இதழ்களில் அழுத்தமான முத்தத்தைப் பதித்தான்.
சில நிமிடங்கள் கழித்தே தன்னிடம் இருந்து விலகியவனிடம், “இப்போ உங்க கோபம் போயிடுச்சா.“ என்று மிருதுளா கேட்க, அவள் கேள்வியில் சில நொடிகள் அமைதியாக இருந்தவன், அதன்பின், “இனி, நீ இப்படி இருக்கக் கூடாது அம்மு. யாரா இருந்தாலும் சரி, தைரியமா பேசு. இனிமே அவன் உன் பக்கம் வர கூடாது. சப்போஸ் எங்கையாவது பார்க்க நேர்ந்தா, அவன் முகத்தைக் கூடப் பார்க்காத. அப்படியும் அவன் உன்கிட்ட எதாவது பிரச்சனை பண்ணா, உடனே என்னைக் கூப்பிடு.“ என்று சீரியசாக இவன் சொல்ல, எல்லாவற்றுக்கும் இவள் ‘சரி’ ‘சரி’ என மண்டையை உருட்ட, அதில் பட்டென்று சிரித்தவன், அவள் கன்னத்தைப் பிடித்து ஆட்டி, குழந்தைக்கு விளையாட்டு காட்டியபடி, புன்னகையுடனே, மனைவி மகளுடன் உறங்கி போனான்.
அடுத்த நாள் காலை, குளித்துத் தயாராகி வந்த ஆராவிற்கு அனைவரும், தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பரிசையும் கொடுக்க, மகிழ்ச்சியில் திளைத்தாள் அவள். அதிலும் கெளதம், மிருதுளா வாங்கிக்கொடுத்த கம்மலை பார்த்தவள் உற்சாக மிகுதியில் மிருதுளாவை கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் பட்டென்று முத்தம் ஒன்றை வைத்தாள். ஜெய் நேற்றே அவளை அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்றவன், அவளுக்குப் பிடித்த சிம்பிள் டிசைனர் நெக்லசை பரிசாக வாங்கிக் கொடுத்திருந்தான். இருந்தும் இன்று அவன் கண்களில் தெரிந்த, ஒரு வித குறும்பு, ஆராவிற்கு யோசனையாக இருந்தது. ஆனால் அவனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
மிருதுளா வாங்கிக்கொடுத்த புடவை, மற்றும் நகைகளைப் போட்டுக்கொண்டு ஜெய்யுடன் அலுவகம் சென்றுவிட்டு, மாலை வீடு வரும்வரை ஜெய் எதுவும் ஆராவிடம் சொல்லவில்லை. மாலை வீடும் வரும் பொழுது, இவளின் பிறந்தநாளை முன்னிட்டு வீடு முழுவதும் அலங்காரம் செய்யபட்டிருக்க, கேக் வெட்டி ஆராவின் பிறந்தநாள் கொண்டாடபட்டது.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும், ஆராவின் கண்களைப் பின்பக்கம் இருந்து மூடியபடி தங்கள் அறைக்கு அழைத்து வந்த ஜெய், உள்ளே வந்ததும், அவள் கையில் ஒரு கவரை வைக்க, அதைப் பிரித்துப் பார்த்தவள், உள்ளே இருந்ததை எடுத்துப்பார்க்க, அது, அந்தமான் தீவிற்க்கான பத்து நாள் ஹனிமூன் பேக். அதைப் பார்த்ததும், உற்சாகத்தில், தன் கணவனை இறுக அணைத்துக் கொண்டவள், “தேன்க் யு ஜெய். தேன்க் யு சோ மச். இது எப்போ ஜெய் புக் செஞ்சீங்க?! எனக்கு அந்தமான் பிடிக்கும்ன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?!” என்றவளின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.
மனைவியின் உற்சாகம் இவனையும் தொற்றிக் கொள்ள, அவளின் கன்னத்தில் இதழ் பதித்தவன், “எல்லாம், அண்ணிகிட்ட கேட்டு தான் தெரிஞ்சுகிட்டேன். சின்ன வயசுல இருந்தே உனக்கு அங்க போறதுன்னா ரொம்பப் பிடிக்குமாம். பட் இது வரை போனதில்லைன்னு அண்ணி தான் சொன்னங்க. பொண்டாட்டிக்கு பிடிச்சதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் செய்யாம இருப்பேனா, அதான் கல்யாணத்துக்கு நாம ரொம்ப லீவ் போடலைல, சோ அதுக்குச் சேர்த்துவச்சு இந்த ஹனிமூன் பேக். ஆபிஸ்ல ஏற்கனவே லீவ் சொல்லிட்டேன். நாளைக்கு நாம கிளம்பனும்.” என்று பதில் கூறினான் ஜெய்.
“அப்படியே அக்கா, மாமாவையும் கூட்டிட்டு போகலாமே ஜெய். எல்லாரும் ஒன்னா போனா ஜாலியா இருக்கும்ல.” என்று இவள் குறைபட, “இது எனக்குத் தெரியாதா என் அசை பொண்டாட்டி. அண்ணாகிட்டையும் அண்ணிகிட்டையும், நீங்களும் வாங்கன்னு எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன். ஆனா அவங்க தான், நாங்க வரல, நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க. அத்தோட பாப்பாக்கு அடுத்தடுத்து சில இன்ஜெக்க்ஷன் போடணுமாம். சோ பின்னாடி பார்த்துக்கலாம். நீங்க என்ஜாய் செஞ்சுட்டு வாங்கன்னு சொல்லிட்டாங்க.” என்று நடந்ததைக் கூறினான்.
அதன் பின் இருவரும் தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொள்ள, அடுத்த நாள், அனைவரிடமும் விடைபெறும் பொழுதும், மிருதுளாவிடம், அவள் வராததைப் பற்றிச் சொல்லி ஆரா வருத்தப்பட, “நாங்க அப்புறம் போய்க்குறோம் அம்மு. நீ மொதல்ல எதையும் பத்தி நினைக்காம, உன்னோட ஹனிமூன் ட்ரிப்பை நல்லா என்ஜாய் செஞ்சுட்டு, பத்திரமா திரும்பி வா.” என்றவள், சில அறிவுரைகளுடன், கெளதமுடன் இருவரையும் ஏர்போர்ட் சென்று வழியனுப்பிவிட்டு வந்தாள்.
ஜெய், ஆரா இருவரும் கிளம்பி சென்று சில நாட்கள் ஆகி இருந்தது. அன்றொரு நாள், தன் அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு தூங்குவதற்காக அறைக்குள் வந்த கௌதமின் கண்களில், தேஜாவின் கிரிப் அருகில் இருக்கும் ஒற்றைச் சோபாவில், அமர்ந்த வாக்கில், அசந்து போய்த் தூங்கிக் கொண்டிருந்த மிருதுளாவின் சோர்வான தோற்றம் பட்டது. அதிலும் அவள் கால்கள் லேசாக வீங்கி இருப்பது போலத் தெரிந்தது. அவளின் முகத்தில் தெரிந்த களைப்பு, இவனை வருத்தப்படச் செய்ய, சத்தமில்லாமல் லேப்டாப்பை அதன் இடத்தில் வைத்தவன், மிருதுளாவின் அருகில் சென்று, அவள் காலுக்கு அருகில் அமர்ந்துகொண்டு, மெல்ல அவளது கால்களை எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டவன், அவளது குதிகால் பகுதியை மிருதுவாகப் பிடித்துவிட்டான்.
பின் அவளது கால்விரல் பகுதியில் லேசாக மசாஜ் செய்ய, அந்தச் செயலில் கண்திறந்த மிருதுளா, தன் அருகில் அமர்ந்து கெளதம் செய்வதைப் பார்த்ததும், பதறி போய், “என்னங்க நீங்க! என் காலை பிடிச்சிக்கிட்டு.“ என்றவாறு தன் கால்களை இழுத்துக்கொள்ள முயற்சிக்க, “என்ன அம்மு. இதுல என்ன இருக்கு. நீ அமைதியா உட்காரு. எவ்ளோ டயர்டா இருக்கப் பாரு.” என்றவன், அவளைத் தடுக்க, “நீங்களே ஆபீஸ் வொர்க் செஞ்சு டயர்டா இருக்கீங்க. இதுல இந்த வேலை எதுக்குங்க. மொதல்ல எழுந்துருங்க. போய்த் தூங்குங்க.” என்று அவள் எவ்வளவோ சொல்லியும், நகரவே இல்லை கெளதம்.
“அம்மு, எனக்கு என்ன டயர்ட். ஒன்னும் இல்லை. நாள் பூரா ஏசி ரூம்ல உட்கார்ந்து வொர்க் செஞ்சுட்டு வரேன். இதுல என்ன கஷ்டம் இருக்கு எனக்கு. ஆனா வீட்டில எல்லா வேலையையும் நீ தான் செய்ற. ஒரு நிமிஷம் கூட உனக்கு ரெஸ்ட் இல்லை. ஆம்பளை எங்களுக்காவது, ஒரு வயசுக்கு அப்புறம் ரிட்டையர்மென்ட் இருக்கு. ஆனா பொண்டாட்டிங்க உங்களுக்குத் தான், 24×7 வொர்க் தான். கடைசிக் காலம் வரைக்கும் எவ்வளவோ கஷ்டத்துக்கும், உடல் வலிக்கும் நடுவுல எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்றீங்க. இதுல, பீரியட்ஸ், ப்ரேக்நன்சி, டெலிவரி, பாப்பாவை கவனிச்சுக்கிறதுன்னு எவ்வளவோ இருக்கு. இதை எல்லாம் அட்ஜஸ்ட் செஞ்சுகிட்டு, வீட்டையும் பார்த்துகிட்டு, பல மனைவிங்க வேலைக்கும் போறாங்க. உண்மையில நீங்க எல்லாம் கிரேட் அம்மு. எங்களுக்குச் சில சமயம் ஆபிஸ்ல டென்ஷன்ஸ், வொர்க் பிரஷர் இருக்கும். ஆனா அந்தப் பிரச்சனை முடியிற வரைக்கும் தான் டென்ஷன் எல்லாம். ஈவன் அந்த டென்ஷனையும் வீட்டில உங்க மேல தான் காட்டுறோம். ஆனா நீங்க எதையும் வெளிய காட்டாம, கஷ்ட நஷ்டம் எல்லாத்தையும் உங்களுக்குள்ளே வச்சுக்குட்டு, அந்த மைன்ட் செட்லையும், முகம் சுழிக்காம, கோபபடாம வீட்டில ஒவ்வொருத்தருக்கும் என்னென்ன வேணும்ன்னு பார்த்து பார்த்து செய்றீங்க.”
“ஒரு புருஷன், தான் மட்டும் பொண்டாட்டிகிட்ட இருந்து சுகத்தை அனுபவிச்சிட்டு, தன்னோட கஷ்டத்தை, கோபத்தை அவ மேல காட்டிட்டு, தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்தா, அப்புறம் எதுக்கு அம்மு, கல்யாணத்தில அக்னி சாட்சியா, சுக துக்கத்தில கூட இருப்பேன்னு சத்தியம் செய்யணும். வெறும் வாய்வார்த்தையா சொல்றதுக்குப் பேரு, சத்தியம் இல்லை அம்மு. அதுபடி நடந்து காட்டனும்.”
“எங்களை மாதரி தான அம்மு நீங்களும் உங்க அம்மா வீட்டில, ஃப்ரீயா இருந்துருப்பீங்க. அப்படி இருந்துட்டு, கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு எல்லாம் தலைகீழா ஆகிடுது. புது இடம், புது உறவுகள்ன்னு, டோட்டலா உங்க லைப் சேஞ் ஆகுது, ஈவன் நேம் கூடச் சேஞ் ஆகிடுது. ஆனா எங்களுக்கு அப்படி இல்லையே. கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தோமோ அப்படியே தான இருக்கோம். புருஷனுக்காக உங்க சுயத்தையே மாத்திகிட்டு வர உங்களுக்காக, இதுகூடச் செயலனா எப்படி அம்மு. எல்லா விஷயத்திலையும் பொண்டாட்டி தான் தனக்காக, தன் குடும்பத்துக்காக மாறணும்னு நினைக்கிறது தப்பு அம்மு. சில நேரங்களில் அவளுக்காக நாமளும் மாறலாம் தப்பே இல்லை. நம்ம பொண்டாட்டிக்கு நாம செய்யலைனா, வேற யாரு செய்வா.”
“மத்தவங்களுக்கே அப்படினா, என் ரிது மா, எவ்ளோ கிரேட். அப்படிபட்டவளுக்காகக் கால் அமுக்குறது மட்டுமில்லை, கை அமுக்குறது, முதுகு தேச்சு விடுறது, குளிப்பாட்டி விடுறது, ட்ரெஸ் மாதிவிடுறது,….” என்று பேசிக்கொண்டே போனவனின் இதழை மூடியவள், வெட்கத்துடன், “விட்டா எல்லாத்தையும் பேசுவீங்க. மொதல்ல எழுந்துறீங்க.” என்றவள் வலுகட்டாயமாக அவனை எழுப்பிக் கட்டிலில் படுக்க வைத்தவள், அவன் நெஞ்சில் தலை சாய்ந்து அருகில் படுத்துக்கொண்டவள், “நீங்க மட்டும் என்னவாம். என்னைப் பத்தி எல்லாத் தெரிஞ்சும், என்னைக் கல்யாணம் செஞ்சுகுட்டீங்க. என் மேல உயிரையே வச்சிருக்கீங்க. என்னை ராணி மாதிரி பார்த்துருக்கீங்க. பெத்த குழந்தையை எமனுக்குப் பறிகொடுத்துட்டு….“ என்று மிருதுளா அடுத்து சொல்ல போனதை புரிந்துகொண்டவன், தான் பெற்ற மகளைப் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு மிருதுளா எமன், என்று பேசியது, கௌதமிற்குச் சுருக்கென்று இருக்க, பட்டென்று எழுந்தவன், “உன் குழந்தை எங்கையும் போகல அம்மு. நம்ம தேஜா ரூபத்தில தான் அவ இருக்கா. தேஜா உனக்கும் பொண்ணு, எனக்கும் பொண்ணு. மொத்ததில நம்ம பொண்ணு, நீ இப்படிப் பரிகொடுத்துட்டேன், அப்படி இப்படின்னு பேசுறது, எனக்குக் கஷ்டமா இருக்கு. புரிஞ்சிக்கோ. இனி இந்த மாதிரி பேசாத ரிது.” என்று கோபத்துடன் சொல்ல, எங்கே அவன் மறுபடியும் அன்று போல மலை ஏறிவிடுவானோ என்ற பயத்தில், “சரி சரி, இனி இந்த மாதிரி பேசல. நீங்க கோபபடாதீங்க, மொதல்ல படுத்துகோங்க.“ என்று மிருதுளா சமாதனம் சொல்ல, அவளை அணைத்துக்கொண்டு படுத்தவனுக்கு, தூக்கம் வரவில்லை.
நாளையே அவளிடம் தேஜாவை பற்றியை உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். ஆனால் இவன் சொல்வதற்கு முன்பு, சந்துரு மூலம் மிருதுளாவிற்கு உண்மை தெரியவரும் என்று கௌதமிற்குத் தெரியாது. தெரிந்திருந்தால், காலத் தாமதம் செய்யாமல், அப்பொழுதே சொல்லி இருப்பானோ!
அடுத்த நாள், கெளதம் அலுவகம் கிளம்பி சென்றதும், வழக்கம் போல அனைத்து வேலைகளையும் செய்து முடித்தவள், தேஜாவிற்கு மதிய உணவை கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொண்டு, குழந்தையுடன் ஹாலில் வந்து உட்கார, அப்பொழுது வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. ‘இந்த நேரத்தில் யாரு?!’ என்ற எண்ணத்துடன், கதவை மிருதுளா திறக்க, வாசலில் சந்துரு நின்றிருந்தான்.