அத்தியாயம் 28 (2)
நேற்று தன் கணவன் அவ்வளவு சொல்லியும் சந்துரு வீட்டுகே வந்திருக்கிறானே என்று நினைத்தவளுக்கு, இரவு கெளதம் சொன்னது நியாபகம் வர, அவனைத் தவிர்க்கும்பொருட்டு உடனே கதவை மூட போனாள். அதற்குள் சந்துரு, “மிருதுளா, ப்ளீஸ் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று சொல்லவும், “உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை.” என்று பதிலுக்கு முகத்தில் அடித்தாற்போலக் கூறியவள், கதவை அடைக்கப் போக, குறுக்கே கையை நீட்டியவன், “உன்னோட குழந்தை சாகல மிருதுளா. உயிரோட தான் இருக்கு. அதைப் பதித்தான் பேசணும்.” என்று படபடவென சொல்லிவிட, ஒரு நொடி, ஒரே நொடி சிலையென நின்றவள், அடுத்த நொடி இவன் பேச்சை நம்பாது, “பொய் சொல்லாதீங்க. நீங்க மொதல்ல இங்க இருந்து கிளம்புங்க.” என்று கூற, மிருதுளாவிற்கு உண்மை தெரியவில்லை என்று நினைத்து உற்சாகம் அடைந்தவன், இந்தச் சந்தர்ப்பத்தை விடக்கூடாது என்று மனதுக்குள் உறுதி எடுத்துக்கொண்டவன், “நான் பொய் சொல்லல மிருதுளா. இது என் அம்மா மேல சத்தியம். என்னை நம்பு.” என்று இவன் ஏக்கமாகப் பதில் கூற, இப்பொழுது கோபமாக அவனை முறைத்து பார்த்த மிருதுளா, “பேசனுன்றதுக்காக, எதுவேணா சொல்லுவீங்கலா? இதுக்கு என்ன ஆதாரம். இனிமேலும் நான் உங்களை நம்புறதா இல்லை.” என்று பட்டென்று சொல்லிவிட,
தன் பாக்கெட்டில் இருந்து, ஒரு பேப்பரை எடுத்து அவள் முன் நீட்டியவன், “இது தான் என்கிட்டே இருக்கிற ஆதாரம். உன் குழந்தை வேற யாரும் இல்லை. இப்போ நீ யாருக்கு அம்மாவா இருக்குறியோ அவ தான் உன்னோட உண்மையான குழந்தை. நீ உன் வயத்துல சுமந்து பெத்த பொண்ணு. உன் குழந்தை செத்து போய்டுச்சுன்னு பொய் சொல்லி, அந்தக் குழந்தையை உங்க அப்பா அனாதை ஆஸ்ரமத்தில போட்டுட்டு வந்துட்டாரு. இந்த உண்மை ஆராவுக்கும் தெரியும். அந்தக் குழந்தையைத் தான், நீ புருஷன்னு சொல்லிட்டு இருக்குறியே கெளதம், தத்தெடுத்து வளர்க்கிறான். அனேகமாக இந்த உண்மை உங்க கல்யாணத்துக்கு முன்னமே கௌதமுக்குத் தெரிஞ்சிருக்கும். மே பீ, அதால கூட அவன் உன்னைக் கல்யாணம் செஞ்சு இருக்கலாம்.” என்று இவன் பாட்டுக்குக் கூறிக்கொண்டே செல்ல,
அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்றவள், சட்டென்று அவனிடம் இருந்து அந்தச் சீட்டை வாங்கிப் பார்க்க, அது இன்னாருக்கு, இன்னைய தேதியில், குழந்தை அடாப்ஷன் கொடுக்கப்பட்ட விவரத்தை தெரிவிக்கும் சர்டிபிகேட். அதில் இருந்த தேதி, அந்த ஆஷ்ரம விலாசம் எல்லாம் இவளுக்குள் சிறு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்த போதும், அவளால் முழுதாக இதை நம்ப முடியவில்லை. தேஜா, தன் குழந்தை என்பதைக் கூட இவளால் நம்ப முடியவில்லை, ஆனால் அவன் சொல்வது போல ஒருவேளை தேஜா கௌதமால் தத்தெடுக்கபட்ட குழந்தையா?? என்ற அதிர்ச்சி அவளுக்குப் பெரிதாக இருந்தது. இதுநாள் வரை, அப்படி எந்த ஒரு அறிகுறியும் இவள் கண்களுக்குத் தெரியவில்லை. யோசிக்க யோசிக்க, இவளுக்குக் குழம்புவது போல இருக்க, பல நிமிடங்கள் கழித்தே, அன்றொரு நாள், தேஜா என்று பெயர் போட்ட பைல் ஒன்றை பரணில் பார்த்த நியாபகம் வந்தது.
அப்பொழுது உண்மையில், தேஜா கௌதமின் சொந்த குழந்தை இல்லையா? என்று யோசிக்கும் பொழுதே இவளுக்கு அதிர்ச்சி. ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ?? அவரின் கடந்தகாலம் தனக்குத் தெரியாததால், ஒருவேளை இது உண்மை என்றாலும், இத்தனை நாளில் ஏன் கெளதம் தன்னிடம் இந்த உண்மையைச் சொல்லவில்லை?? ஒருவேளை நான் அவளை என் பிள்ளையாக நடத்தமாட்டேன் என்று நினைத்தாரோ?? ஆனால் தேஜாமேல் நான் வைத்திற்கும் பாசம் அவருக்குத் தெரியவில்லையா?? இத்தனை நாளுக்குப் பிறகும், இப்பொழுதும் என்னிடம் சொல்ல தோன்றவில்லையா?? என் மேல் அவருக்கு நம்பிக்கை இல்லையா?? என்று பல கேள்விகள் அவள் மனதில் உதித்த அதே நேரம், அப்படிச் சந்துரு சொல்வது உண்மையாக இருந்தாலும், தேஜா தன் குழந்தை என்பதற்கு என்ன சாட்சி?? அவள் வேறு யாரோடைய குழந்தையாகக் கூட இருக்கலாமே!! இதற்கு என்ன ஆதாரம்?? என்று கேள்விகள் அவள் மனதை குழப்ப ஆரம்பித்தது.
அதைச் சந்துருவிடமே கேட்டாள், “நீங்க சொல்றது உண்மைன்னாலும், தேஜா என் குழந்தைன்றதுக்கு என்ன ஆதாரம்? அதை எப்படி நான் நம்ப முடியும்?? ஏன், நீங்க பொய் கூடச் சொல்லலாமே??”
“நான் இதுவரைக்கும் உன்கிட்ட பொய் சொன்னதில்லைன்னு உனக்கே தெரியும் மிரு. எதுன்னாலும் உண்மையைச் சொல்லிடுவேன். ஈவன் குடிச்சிட்டு வந்தாகூடச் சொல்லிடுவேன். என்ன, எனக்குக் கொஞ்சம் அதிகமா சந்தேகப் புத்தி இருந்தது உண்மை தான். அதனால தான் உன்னைக் கஷ்டபடுதினேன். ஆனா இந்த விஷயத்தில உன்கிட்ட பொய் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்லை மிருதுளா. நான் சொல்றது பொய்ன்னா, சரி நீ என்னை நம்பவேண்டாம். ஆராவுக்குப் போன் போட்டு கேளு. அவ மட்டும் இல்லைன்னு சொல்லிட்டா, நான் இனி உன் முகத்தில கூட முழிக்க மாட்டேன்.” என்று உத்தமன் போலச் சந்துரு பேச, அவன் அவ்வளவு உறுதியாகச் சொன்னது, இவள் மனதை குழப்ப, பல நிமிட யோசனைக்குப் பின்பே ஆராவிற்குப் போன் போட்டாள்.
மூன்று முறை முழுவதுமாக ரிங் அடித்த பின்பே, ஆரா அழைப்பை ஏற்க, எடுத்த எடுப்பிலேயே மிருதுளா அவளிடம், “ஆரா, ஹாஸ்பிட்டல்ல என்னோட குழந்தை செத்து போச்சுன்னு அப்பா சொன்னது உண்மையா?!” என்று கெட்டவள் குரலில், துக்கம், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி, ஏமாற்றம், எனப் பல உணர்வுகளை உள்ளடக்கியிருந்தது.
மிருதுளாவின் கேள்வியில் அந்தப் பக்கம், அதிர்ந்து போன ஆரா, “என்ன க்கா, ஏன் திடீர்ன்னு இப்படிக் கேட்கிற??” என்று பதில் கேள்வி கேட்க, “மொதல்ல, நான் கேட்ட கேள்விக்கு உண்மையா பதில் சொல்லு ஆரா!!” என்றவளின் குரலில் கொஞ்சம் கோபம் வந்திருந்தது. ஆனால் ஆராவோ, “இப்போ இந்தப் பேச்சு எதுக்கு க்கா?! யார் உன்கிட்ட இதெல்லாம் பத்தி பேசுனா??” என்றாள் பதிலுக்கு.
“எனக்கு எல்லா உண்மையும் தெரியும் ஆரா. தேஜா, நான் பெத்த பொண்ணு, அப்படித்தான!” என்றவளின் குரலில் உள்ளடக்கிய ஆதங்கம் தெரிய, அந்தப் பக்கம் இவள் பேச்சில் மீண்டும் ஒருமுறை அதிர்ந்து போன ஆரா, “அக்கா!!! இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?!!” என்று அதிர்ச்சியுடன் கேட்க, “எப்படியோ தெரியும். இது உண்மையா, அதை மொதல்ல சொல்லு. நீ இப்போ உண்மையைச் சொல்லலைனா, இனி செத்தாலும் உன்கிட்ட பேச மாட்டேன் ஆரா.” என்று இவள் உறுதியாகக் கூறிவிட, அந்தப் பக்கம் அமைதி.
பல நிமிடங்கள் கழித்து, ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்ட ஆரா, “ஆமாம் அக்கா. உன் குழந்தை சாகல. தேஜா தான் நீ பெத்த பொண்ணு. உன்கிட்ட சொல்லகூடா…..” என்று இவள் பேசி கொண்டிருக்கும் போதே, போன் பட்டென்று வைக்கப்பட்டதற்கான அறிகுறியாக, பீப் ஒலி கேட்டது. இதில் பதறி போன ஆரா, மீண்டும் மிருதுளாவின் தொலைபேசிக்கு அழைக்க, ரிங் அடித்துக்கொண்டே இருக்க, போன் எடுக்கப்படவில்லை. இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்த ஆரா, உடனடியாக, கௌதமிற்கு அழைத்து, மிருதுளா பேசிய அனைத்தையும் கூறினாள்.
ஆரா சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனவன், தான் சொல்லலாம் என்று நினைத்திருக்கும் நேரம், அவளுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்று யோசனையைக இருந்தது. ஆராவிடம் பேசிவிட்டு வைத்தவன், மிருதுளாவிற்கு அழைக்க, ரிங் போய்கொண்டே இருந்ததே தவிர, எடுக்கபடவில்லை. ஆரா குடும்பத்தையும், தன்னையும், ஜெய்யையும் தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் யாரும் சொல்லி இருக்கமாட்டார்கள், அப்படி இருக்கையில், யார் செய்த வேலையாக இருக்கும் என்ற யோசனையுடன், உடனடியாக அலுவகத்தில் லீவ் சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தான்.
அதே நேரம், அந்தமானில், ஹோட்டல் அறையில், கௌதமிடம் பேசிவிட்டு வைத்த ஆராவும், வெளியே சென்றிருந்த ஜெய் வந்ததும் விஷயத்தைச் சொல்ல, உடனடியாக அங்கிருந்து புறப்படுவது என்று இருவரும் முடிவு செய்து, பொருட்களை அனைத்தையும் பேக் செய்துவிட்டு, ஹோட்டல் லாபியில் விமான டிக்கெட் பற்றி விசாரிக்க, அடுத்த நாள் காலை எட்டரை மணி பிளைட்டில் தான் டிக்கெட் காலியாக இருப்பதாகத் தகவல் வர, வேறு வழியில்லாமல், அதையே புக் செய்துவிட்டுக் கிளம்பக் காத்திருந்தனர்.
அக்காவிடம் பேசியதை பற்றிப் பெற்றோரிடம் சொல்லலாமா? என்று ஆரா யோசிக்க, ஜெய்யோ, அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அவனுக்குத் தன் அண்ணன் மேலும், மிருதுளா மேலும் நம்பிக்கை இருந்தது. பயப்படும் அளவிற்கு, அவர்கள் இந்தப் பிரச்னையைப் பெரிதாக்க மாட்டார்கள் என்று நினைத்தான். அதைவிட, எடுத்து சொன்னாள் அண்ணி புரிந்துகொள்வார்கள் என்று நம்பினான். அவனின் நம்பிக்கை வெற்றி பெறுமா?
இங்கே ஆராவிடம் பேசிவிட்டுப் போனை வைத்த மிருதுளா, இடிந்து போய்ச் சோபாவில் அமர, அவள் பின்னோடு வாசல் அருகில் சென்று நின்ற சந்துரு, “நான் பொய் சொல்லல மிருதுளா, நான் முன்ன மாதிரி இல்லை. இப்போ மாறிட்டேன். உன்பக்க உண்மை தெரியாம, அம்மா செஞ்ச சதியில உன்னைப் பத்தி தப்பா பேசி, உன்னை உதறித் தள்ளிட்டேன். உண்மை தெரிஞ்ச பிறகு, எப்படியாவது உன்னைத் தேடி வந்து உன்கிட்ட மன்னிப்பு கேட்டு, உன்னையும் நம் பொண்ணையும் கூட்டிட்டு போகலாம்ன்னு நினைச்சு உன்னை எப்படித் தேடினேன் தெரியுமா மிரு. ஆனா, அதுக்குள்ள உனக்கு இன்னொரு கல்யாணம் நடந்திடுச்சு. சரி, உன் குழந்தையோட நீ சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சுச் சந்தோஷபட்டேன். ஆனா, எப்போ குழந்தையைப் பற்றிய உண்மை எனக்குத் தெரிஞ்சுதோ, அப்போவோ உன்னைத் தேடி வந்துட்டேன்.” என்று கூறியவன், ஒரு நிமிட அமைதிக்கு பிறகு, குரலை செருமி கொண்டு, “என்ன நடந்தாலும் சரி மிருதுளா, உனக்காக நான் இருக்கேன்னு நியாபகம் வச்சுக்கோ. உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன் மிரு. நம்ம பொண்ணையும்.” என்றவன், குனிந்து தரையில் விளையாடிக் கொண்டிருந்த தேஜாவின் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு, நிமிர்ந்தவன், “நான் போயிட்டு வரேன் மிருதுளா. எந்தச் சூழ்நிலையிலும் நான் உனக்கு இருக்கேன். அதை நியாபகம் வச்சுகோ.” என்று சொல்லிவிட்டுச் சென்றான். ஆனால் அவன் சொன்னது, செய்தது எதுவும் மிருதுளாவின் கருத்தில் பதியவில்லை. சுவற்றில் நிலைகுற்றிய பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.
சந்துரு குழந்தையின் அருகில் சென்றதில் இருந்து, குழந்தை வீரிட்டு அழ ஆரம்பிக்க, அவன் சென்றபின், அழுதுக்கொண்டே எழுந்த தேஜா, தத்தி தத்தி நடந்து மிருதுளாவின் அருகில் சென்றவள், அவள் கையைப் பிடித்து இழுத்த பின்னே, சுயநினைவுக்கு வந்தவள், அழும் குழந்தையின் முகத்தையே இமைக்காமல் பார்த்தவளுக்கு, இப்பொழுது அவள் தன் குழந்தை, தன் ரத்தத்தில் உதித்தவள் என்ற எண்ணம் மூளையில் உரைக்க, அழுகையுடன் குழந்தையைத் தூக்கி நெஞ்சோடு சேர்த்து அனைத்துக் கொண்டவள், பல நிமிடங்கள் அழுது கரைந்தாள்.
உண்மை தெரிந்த இந்த நொடி, குழந்தையின் ஸ்பரிஷம் மிருதுளாவிற்குப் புதிதாகத் தெரிந்தது. இப்பொழுது தான் குழந்தையைப் பிரசவித்தது போல, குழந்தையின் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள். ஒவ்வொரு இதழ் ஒற்றலுக்கும், ‘இவளையா நான் இறந்துவிட்டேன் என்று நினைத்திருந்தேன்!‘, ‘உயிரோடு இருப்பவளை நினைத்தா, இத்தனை நாள் அழுது கரைந்தேன்!‘, பெற்ற குழந்தையையா அடுத்தவர் குழந்தை என்று நினைத்து எட்ட நின்று பழகினேன்!‘ என்று நினைத்து, ஏங்கி துடித்தது அவளது இதயம்.
பல நிமிடங்கள் இப்படியே கரைய, இப்பொழுது இவள் நினைவு கௌதமிடம் வந்து நின்றது. இந்த உண்மை தெரிந்ததனால் தான், தன்னைத் திருமணம் செய்துகொண்டாரா?? உண்மை அவருக்கு ஏற்கனவே தெரிந்ததனால் தான் நேற்று, நான் பேசும்பொழுது, இப்படி எல்லாம் பேசாதே, என்று சொன்னாரா?? என்று நினைத்து குழம்பியவளுக்கு, திருமணமான புதிதில், ஒருநாள் ஆரா, தான் சென்று பேசி மிரட்டியதால் தான், கெளதம் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததாக விளையாட்டுக்கு கூறினாள். அப்பொழுது மிருதுளா, அப்படி என்ன பேசினாய் என்ற அவளிடம் கேட்டதற்கு, அதெல்லாம் மாமா, மச்சினிச்சி சீக்ரட் என்று சிரிப்புடன் கூறினாளே, அப்பொழுது இது தான் அந்தப் பேச்சா?? இந்த உண்மையைத் தான் அன்று கௌதமிடம் சொன்னாளா?? அப்பொழுது, எல்லாம் தெரிந்து தான், தன்னைக் கெளதம் திருமணம் செய்து கொண்டானா??’ என்று தன் போக்கில் உழன்று கொண்டிருந்தவளுக்கு, அன்று அறையைச் சுத்தம் செய்யும்பொழுது பார்த்த பைல் நியாபகம் வர, தேஜாவை தூக்கிக்கொண்டு தங்கள் அறைக்குள் சென்றவள், அவளைக் கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, ஸ்டூலை போட்டு ஏறி, அந்தப் பைலை தேடி எடுத்தவள், கட்டிலில் அமர்ந்து, கைகள் நடுங்க, அதைத் திறந்து பார்க்க, சற்று முன்பு சந்துரு காட்டிய சர்டிபிகேட்டின் ஒரிஜினல் இருந்தது. அதை முழுவதும் படித்துப் பார்த்தவளின் கண்களில், கீழே கெளதம் போட்டிருந்த கையெழுத்துப் பட்டது. அதை அப்படியே வருடியவளின் கண்களில் இருந்து, ஏன் என்று தெரியாமலையே கண்ணீர் வழிந்தது.
பின் அந்தச் சர்டிபிகேட்டை திருப்ப, அடுத்து சில கடிதங்களும், தேஜாவின் சிறு வயது புகைப்படங்களும் இருந்தது. அதில் ஒரு கடிதத்தில், தேஜா என்று குழந்தையின் பெயர் குறிப்பிடபட்டு, அவளைப் பற்றிய சில நல விசாரிப்புகள் இடம் பெற்றிருந்தது. இவற்றை எல்லாம் பார்க்க பார்க்க, இப்பொழுது மிருதுளாவின் மனதில், அனைவரின் மேலும் கோபம் துளிர்விட ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் தான், ஏதோ காரணதிற்காகக் கெளதம் தன்னிடம் உண்மையைச் சொல்லாமல் விட்டுவிட்டான் என்றால், அதற்குப் பிறகாவது தன்னிடம் அவன் சொல்லி இருக்கலாமே!! எத்தனை இரவுகள் குழந்தையை நினைத்து தான் கண்ணீர் விட்டதை ஆரா பார்த்திருப்பாள், ஒரு முறை கூட என் குழந்தை உயிரோடு இருப்பதைப் பற்றிக் கூற அவளுக்குத் தோன்றவில்லையே!! ஒரு ஈ எறும்புக்கு கூடத் துரோகம் செய்யாத நல்லவர்கள் என்று என் பெற்றோரை நினைத்திருந்தேனே, அவர்கள் கூட, நான் பெற்ற மகளை அனாதையாக ஆஷ்ரமத்தில் விடும் அளவுக்குக் கொடிய செயலை செய்திருக்கிறார்களே!! என்று எல்லோர் மீதும் அவள் கோபம் திரும்பியது.
இப்படியே ஏக்கம், துக்கம், கோபம், கழிவிரக்கம், என்று பல நினைவுகளில் மூழ்கி இருந்தவள், அரவம் கேட்டு திரும்பி பார்க்க, வேக மூச்சுகளுடனும், முகத்தில் ஒருவித பீதியுடனும், வேர்த்துக்கொட்ட அறை வாசலில் நின்று கொண்டிருந்தான் கெளதம். அவனைப் பார்த்ததும் இவளுக்குள் இருந்த கோபம் தலைதூக்க, அவனை முறைத்து பார்த்தவள், கையில் பைலோடு, எழுந்து அவன் அருகில் சென்றாள்.