அத்தியாயம் 36 (1)
தன் கன்னத்தில் விழுந்த அறையில், அக்காவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஆராவிற்கு, மிருதுளாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் மனதுக்குள் என்ன உணர்கிறார்கள் என்றும் புரிந்தது. என்ன இருந்தாலும் இருபத்தைந்து ஆண்டுகள் ஒன்றாக வளர்ந்தவர்கள் ஆகிற்றே. இதுகூடத் தெரியவில்லை என்றால்?? ஆனால் இதுவரை கோபப்பட்டுப் பார்த்திராத அக்கா, இன்று அறைந்தது, அதுவும் தன் கணவன், அத்தான் முன்பு அறைந்தது, அவளுக்கு உள்ளுக்குள் மிகவும் வருத்தமாக இருந்தது. கூடவே ஒரு மாதிரி கஷ்டமாக இருக்க, தன்னைத் தாங்கி இருக்கும் கணவனின் தோளோடு ஒண்டி நின்றிருந்தவளுக்குக் கண்களில் மொழுக்கென்று நீர் நிறைந்து விட்டது.
கண்களில் நீரோடு, ‘நான் உண்மையை மறைத்ததால் எதுவும் பாதிப்பு உண்டானதா அக்கா, இல்லையே அத்தான் போல ஒரு நல்லவருடன், நல்ல வாழ்க்கை தானே அமைந்திருக்கிறது. அதைத் தானே நம் வீட்டில் எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். உன் வாழ்க்கை இப்படியே பட்டு போயிடுமோ என்று எத்தனை நாள், நான் உள்ளுக்குள் மருகி இருப்பேன். உனக்காக, என் அக்காவுக்காக இப்படிச் செய்தது தப்பா?!!’ என்று, மனதுக்குள் நினைத்துக்கொண்டு, கண்களில் கேள்வியோடு மிருதுளாவை இமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
இங்கே மிருதுளாவை பின்னோக்கி இழுத்த கெளதம், “நான் நேத்து எல்லாம் சொன்னப்போ, புரிஞ்சிடுச்சுன்னு சொன்னியே ரிது. இப்போ எதுக்கு ஆராவை அடிச்ச. அவ என்ன தப்பு பண்ணா?! உனக்கு நல்லது செஞ்சது தப்பா!! ஏன் உனக்கு இந்தக் கோபம்?!! தப்பு ரிது. இப்படி நீ நடந்துகிறது ரொம்பத் தப்பு. அவ உன்கிட்ட முன்னாடியே உண்மையைச் சொல்லல. ஒத்துகிறேன். ஆனால் அப்படிச் சொல்லி இருந்தா, என்ன நடந்திருக்கும் யோசி. எங்களை விட உனக்குத் தான் ஆராவை பத்தி நல்லா தெரியும். அப்படி இருக்கும்பொழுது, ஆரா ஏன் உண்மையை உன்கிட்ட மறைச்சான்னு, உனக்குத் தான் மொதல்ல தெரியனும் ரிது.” என்றான் சற்றுக் கோபமாக.
கெளதம் சொன்னது காதில் விழுந்தாலும், அவன் வார்த்தைகளில் இருந்த உண்மையை இவள் மனம் உணர்ந்தாலும், ஏனோ மிருதுளாவிற்கு ஆரா மேல் ஒரு ஆதங்கம். கோபம் இல்லை, மாறாக உண்மை தெரிந்தும், என்னைத் தவிக்க விட்டு விட்டாளே. எத்தனை நாள் அழ விட்டுவிட்டாள் என்ற கழிவிறக்கம். எத்தனை நாள் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன், அப்படி ஒருவேளை செய்திருந்தால், இன்று என் குழந்தை அனாதையாகி இருக்குமே! என்ற ஆதங்கம். பெற்ற தாய் நான் உயிரோடு இருந்தும், தன் குழந்தை, பசியாற்ற கூட ஆள் இல்லாமல் கஷ்டப்பட்டதை நினைக்கையில், தன் மேலேயே கோபம். குழந்தையைக் கண்முன் பார்த்தும், அவளுக்குத் தான் தான் தாய் என்று தெரியாமல் மூன்றாம் மனுஷியாகப் பழகிய வேதனை. திருமணம் முடிந்தும், இதோ இந்த நொடி வரை கூட, சொல்லவில்லையே என்ற அதிர்ப்தி.
இப்படி எல்லாம் சேர்ந்து, தன் குழந்தைக்குத் தான் தாயாக இருக்க முடியவில்லையே, அவள் முதன் முதலில் கண் விழித்ததை, அவளின் சிரிப்பை, அழுகயை, அவளின் குழந்தை பருவத்தைப் பார்க்க முடியவில்லையே, என்ற ஏக்கத்தை உருவாக்கி இருக்க, அந்த ஏக்கமே கோபமாக மாறி, ஆராவை அடிக்க வைத்துவிட்டது.
ஆனால், கெளதம், “அவ உனக்கு நல்லது தானே செஞ்சா! ஆரா உண்மையை மறைச்சது எதுக்குன்னு, எங்களை விட நீ தானே புரிஞ்சு வச்சிருக்கணும். உண்மையைச் சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும்ன்னு நீயே யோசி!“ என்று சொன்னதும், உண்மை தெரிந்திருந்தால், ஒருவேளை குழந்தையை நான் அழைத்து வந்திருந்தால், தான், கெளதம், தேஜா உட்பட மூவருமே நிம்மதியில்லாமல் இருந்திருப்போமே!! தகப்பன் யார் என்று தெரியாத குழந்தையைப் பெற்றெடுத்த என் நிலைமை தெரிந்தும், கெளதம் மாதிரி ஒரு நல்லவனோடு என் வாழ்க்கை அமைத்திருக்க வாய்ப்பில்லையே! போன்ற உண்மைகள் உரைக்க, ஆரா உண்மையை மறைத்தால், தன் மகளுக்குத் தான் தாயக இருக்க முடியாமல் போய்விட்டதே என்று அந்த நேரம் வரை, மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த கேள்விகள் எல்லாம், தவிடு பொடியாக, அடுத்த நொடி, தனது மூத்த மகளை, தன் செல்ல தங்கையை அடித்துவிட்டோமே என்று கலங்கியவளுக்கு, கண்களில் நீருடன் ஆரா தன்னையே பார்ப்பதை பார்த்ததும், கண்களில் நீர் நிறைந்துவிட்டது.
அதே நேரம் ஆராவும், மிருதுளாவின் அருகில் வந்தவள், “உன்கிட்ட உண்மையை மறைச்சதுக்கு என்னை மன்னிச்சிடு அக்கா. பாப்பாகூட இருக்க முடியலையேன்னு நினைச்சு கஷ்டபடுறதை, என்னால புரிஞ்சிக்க முடியுது. அன்னைக்கு அப்பா உன்கிட்ட சொன்ன பொய்யை நினைச்சுகிட்டு நீ ரொம்பவே கஷ்டபட்டிருக்க அக்கா. அது எனக்கு நல்லாவே தெரியும். அந்த வருத்தத்தில, நைட் யாருக்கும் கேக்காம, நீ அழுததை நான் நிறையத் தடவை பார்த்து இருக்கேன் க்கா. அதுவும் அன்னைக்கு நீ தூக்க மாத்திரை………” என்று சொன்னவளுக்கு அன்றைய நாள் நினைவில் தொண்டை அடைத்துக்கொள்ள,
சிறு இடைவெளிக்குப் பின், “அன்னைக்கு நாங்க எல்லாம் எவ்வளோ பரிதவிச்சு போனோம் தெரியுமா க்கா. உயிர் போய் உயிர் வந்தது எங்களுக்கு. அன்னைக்கு நடந்ததாவது வீட்டில எல்லோருக்கும் தெரியும். ஆனா அதுக்கு அப்புறமும் ஒரு நாள், நைட் யாருக்கும் தெரியாம, கிட்சன்ல போய்க் கத்தியை எடுத்து, கைகிட்ட வச்சுக்கிட்டு, அதையே ரொம்ப நேரமா பார்த்துட்டு இருந்தியே, அது எனக்கு மட்டும் தான் அக்கா தெரியும்.” என்று சொல்லிவிட்டு அமைதியாக, ஆராவின் பேச்சில், மிருதுளாவிற்கு இதயம் சுக்கு நூறாக உடைந்து கொண்டிருந்தது. கண்களில் நீர் வழிய ஆரம்பிக்க, தன் தங்கையைத் தான் பார்த்துக்கொண்டு நின்றாள் அவள்.
“ஆனா, நீ எதுவும் செய்துக்கல, நானும் செய்ய விட்டுருக்க மாட்டேன். அன்னைக்கு முடிவு செஞ்சேன். உன்னை இப்படியே விடக்கூடாது. ஏதாவது ஒரு வேலையில உன்னோட கவனத்தைத் திருப்புனா தான், நீ கொஞ்சமாவது உன்னோட நினைப்புல இருந்து வெளிய வருவ. அது பத்தி அப்பாகிட்ட பேச, அவர் ரூமுக்கு போனப்போ தான், பாப்பா உயிரோட இருக்கிறது எனக்குத் தெரியும். உடனே நான் முடிவெடுத்தேன், எப்படியாவது பாபாவை உன்கிட்ட சேர்த்திடனும்ன்னு. பாப்பாவால தான் உன் மனசுக்கு அமைதியை, உன் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பை, சந்தோஷத்தை கொடுக்க முடியும்ன்னு நினைச்சேன். ஆனா அப்பா பாப்பாவை விட்டது அநாதை ஆஷ்ரம்ன்றதால, குழந்தை அங்க இருக்குமா?? இல்லை யாரவது தத்து எடுத்து இருப்பாங்களான்னு எனக்குள்ள நிறையக் கேள்வி. அதனால தான் உடனே உன்கிட்ட சொல்லி உன் மனசில ஆசையை வளர்த்திட கூடாதுன்னு, நானே புறப்பட்டு அந்த ஆஸ்ரமத்துக்குப் போனேன். அங்க போய்த் தான் பாப்பா கெளதம் அத்தான் கிட்ட இருக்கிறது எனக்குத் தெரிஞ்சுது.”
“அப்போ கூட, அது அத்தான்னு தெரியாது. யாரோன்னு தான் நினைச்சு வேலை வாங்கிப் பெங்களூர் வந்தேன். இங்க வர வரைக்கும் கூட எனக்கு எந்த எண்ணமும் இல்லை அக்கா. எப்படியாவது பாப்பாவை வச்சு இருக்கிறவங்க கிட்ட, பேசி, கைல கால்ல விழுந்தாவது குழந்தையை வாங்கிட்டு வரணும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அத்தனை பார்த்ததும், யாழினி அக்கா இறந்ததையும் கேள்வி பட்டதும் தான், நீயும் அத்தானும் கல்யாணம் செஞ்சுகிட்டா நல்லா இருக்கும்ன்னு எண்ணம் வந்தது. எண்ணம்ன்னு சொல்றதை விட, ஒவ்வொரு செகண்டும் மனசுக்குள்ள கஷ்டபடுற நீயும், பாப்பா மேல பாசமா இருக்கிற அத்தானும் வாழ்கையில ஒன்னு சேரணுமன்னு விருப்பப்பட்டேன். பாப்பாக்காகவாவது நீங்க ஒன்னு சேரணும்னு ஆசைப்பட்டேன்.”
“ஆனா, நான் நினைச்சது நடக்குமா நடக்காதா இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா நடக்கும்னு மனசு அடிச்சு சொல்லுச்சு. அந்த உறுதியில தான், உங்களை இங்க வரவச்சேன். அதே நேரம், நீயும் அத்தானும் பாப்பாக்காக ஒன்னு சேர்றதை விட, உங்களுக்குள ஒரு அன்பு வந்து, அதால உங்க கல்யாண பந்தம் உருவானா, உங்க லைப் நல்லா இருக்கும்னு நிyனைச்சேன். ஆனா உங்களுக்குள்ள ஒரு லவ் வர்றதுக்கு முன்னாடியே, உங்க கல்யாணம் நடந்திடுச்சு. பாப்பா மேல நீ வச்சிருந்த பாசத்தைப் பார்த்த பிறகு, கல்யாணத்துக்குப் பிறகு உன்கிட்ட உண்மையைச் சொல்லி, அத்தானுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பலை அக்கா. உனக்காவது பாப்பா இருக்கிறது தெரியாது. ஆனா அத்தான் பாப்பாக்கு அப்பாவா வாழ்ந்திட்டு இருக்காங்க. ஒருத்தர் இல்லைன்ற வருத்தத்தை விட, பழகி பிரியிற வருத்தம் ரொம்பக் கஷ்டம் இல்லையா அக்கா. அப்படி ஒரு வருத்தத்தை அத்தானுக்குக் கொடுக்க நான் விரும்பல.” என்று சொல்லி முடித்தவள், கண்கள் கலங்க, நிமிர்ந்து மிருதுளாவின் பார்த்து,
“நீ ஒவ்வொரு செகண்டும் வருத்தபடுறதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா அக்கா!! பாப்பாவை நினைச்சு நீ உன்னையே கஷ்டபடுத்திக்கிறதை பார்த்துட்டு அப்படியே விட்டுட முடியுமா!! உனக்கு ஒரு வாழ்க்கை அமைச்சு கொடுக்க நினைச்சது தப்பா அக்கா?! நீ அழறதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லை க்கா.” என்று சொல்லிவிட்டு உடைந்து அழ,
தன் மூத்த மகளின் அழுகையில், முற்றிலுமாக உடைந்து போன மிருதுளா, “அம்மு!!!” என்ற கதறலுடன் ஆராவிடம் விரைந்தவள், அவளை இறுக அணைத்துக் கொண்டு, கண்ணீர் சிந்தியவள், “அம்மு என்னை மன்னிச்சிடு டா. உன்னைப் புரிஞ்சிக்காம, ஏதோ எண்ணத்தில அடிச்சிட்டேன் டா. உன்னை ரொம்பக் கஷ்டபடுத்திட்டேன் அம்மு. இந்த அக்காவை மன்னிச்சிடு டா. ப்ளீஸ் டா. அழாதடா.” என்று திரும்பத் திரும்பக் கூறியவள், ஆராவை நிமிர்த்தி அவளின் கண்களைத் தன் சேலை நுனியால் துடைத்துவிட்டு, தேம்பி கொண்டு இருக்கும் அவளின் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவள், “அம்மு, நீ அழறதை என்னால பார்க்க முடியாது டா. ப்ளீஸ் டா அம்மு. இந்த அக்காவை மன்னிச்சிடு டா. லூசு மாதிரி செஞ்சுட்டேன்.” என்று அழுகையுடன் கெஞ்ச, கொஞ்சம் கொஞ்சமாக ஆராவின் அழுகை மட்டுப்பட்டது.
யார் சொன்னது, அக்கா என்பவள் மட்டும் தான் இன்னொரு தாய் என்று, தங்கையும் ஒரு தாய்க்கு சமம் தான். இதோ, பெற்ற குழந்தையைப் பறிகொடுத்துவிட்டு நடைபிணமாக இருத்த தனக்கு, பிள்ளை வரம் கொடுத்த தாய் இவள். பட்டை மரமாக இருந்த தனக்கு, கெளதமுடன் வாழ்க்கை அமைத்து கொடுத்த தந்தை இவள். ஆராவின் செயலை நினைக்க நினைக்க, சந்தோசம், பெருமை என்று பல்வேறு உணர்வுகள் ஆக்ரமிக்க, உணர்ச்சி வயப்பட்டிருந்தாள் மிருதுளா. கெளதம் மற்றும் ஜெய்யும் தத்தம் மனைவிமாரின் உணர்வுகளைப் பார்த்துக் கண் கலங்கியபடி நின்றிருந்தனர்.
பல நிமிடங்கள் கழித்தே தெளிவடைந்த ஆரா, “என்னை மன்னிச்சிடு அக்கா, உன்கிட்ட உண்மையைச் சொல்லாம விட்டதுக்கு.” என்று சொல்ல, அவளின் உதடுகளை விரல் வைத்து தடுத்தவள், “நான் தாண்டா உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும். என் கூடப் பிறந்தவ நீ. உன்னை நானே புரிஞ்சிக்காம பேசிட்டேனே. அக்காவா மன்னிச்சிடு அம்மு.” என்று பதில் சொல்ல, “என்னக்கா நீ, என்கிட்டே சாரி கேட்டுகிட்டு. என்னால உன்னோட உணர்வை புரிஞ்சிக்க முடியுது அக்கா. பாப்பாவை பிரிஞ்சு இருந்துட்டோமேன்ற வலில தான் நீ இப்படிப் பேசின. நீ என்னைக்கும் எனக்கு அம்மாவா தான இருந்திருக்க. என் அம்மா அடிச்சா நான் கோபபடுவேனா. உனக்கு ஒரு நல்ல வாழ்கை அமையணும்னு ஆசைப்பட்டேன். அது நடந்துடுச்சு. எனக்கு அது போதும் அக்கா.” என்றவள் கௌதமை பார்த்து, “தேங்க்ஸ் அத்தான்.” என்றாள் புன்னகையும் அழுகையும் கலந்த முகபாவனையில்.
“ஆரா, எதுக்கு மா எனக்குத் தேங்க்ஸ். நான் தான் உனக்குத் தேங்க்ஸ் சொல்லணும். மிருதுளா மாதிரி ஒரு பொண்ணை என் லைப்ல கொண்டு வந்ததுக்கு. அவ மூலமா தான் எனக்கு இன்னொரு பொண்ணும் கிடைச்சு இருக்கா. ரிது உனக்கு அம்மான்னா, நான் உனக்கு அப்பா தானே. எங்க மூத்த பொண்ணு டா நீ. தேங்க்ஸ் டா மா.” என்று கண்கள் கலங்க கெளதம் பதில் சொல்ல, தன் அண்ணனை தோளோடு அணைத்துக் கொண்டான் ஜெய்.
அதன் பின், அங்கிருந்த குழப்பங்கள், மன சஞ்சலங்கள் அனைத்தும் களையப்பட, மிருதுளாவின் தங்கையாக இருந்த ஆரா, அதன்பிறகு அவளின் மகளாகவே மாறிவிட்டாள். அவ்வளவு பார்த்துக் கொண்டாள் மிருதுளா. முன்பே அவளுக்கு அம்மாபோல இருந்தவள், அன்றைய தினத்தில் இருந்து, அவளைக் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டாள். பல சமயங்களில் தனிமையில் கௌதமிடம், ஆராவை அடித்ததைச் சொல்லி வருத்தபட்டிருக்கிறாள். அப்பொழுதெல்லாம் கெளதம் தான் இவளை சமாதானம் செய்வான்.
இங்கே இப்படிப் பாச போராட்டம் நடந்து கொண்டிருக்க, அங்கே சந்துருவின் வீட்டிலோ, கெளதம் அடித்துச் சென்றதில், முகம், கை, கால் எல்லாம் வீங்கி இருந்ததால், அலுவகத்திற்கு லீவ் போட்டுவிட்டு வீட்டில் இருந்தான் அவன். படுக்கையில் படுத்திருந்தவன், “என்ன தெனாவட்டு இருந்தா, என் வீட்டுக்கே வந்து என்னையே அடிப்பான் அவன். இல்லீகலா கல்யாணம் செஞ்சவ மேலையே இவ்ளோ பைத்தியமா இருக்கான். அவனெல்லாம் லீகலாகக் கல்யாணம் செஞ்சு இருந்தா?? என்னை என்ன அவ்ளோ ஈசியா நினைச்சுட்டானா அவன். என்னை அடிச்சிட்டு நீ சந்தோஷமா இருந்துடுவியாடா அவ கூட!! என்ன சொன்ன, அவ எப்போவும் மிஸ்ஸஸ் கௌதமா!! மொதல்ல அதுக்கு வைக்கிறேன் டா ஆப்பு.” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தான்.
இப்பொழுது அவனுக்கு, எப்படியாவது மிருதுளாவின் மனதை மாற்றித் தன்னுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் மறைந்து விட்டது. ஏனெனில் அவனுக்குப் புரிந்துவிட்டது. மிருதுளா இனிமேல் தன்னிடம் வர மாட்டாள் என்று. அதனால் இப்பொழுது அவன் கோவம் எல்லாம் கெளதம் மேல் தான். எப்படி அவன் என்னை என் வீட்டுகே வந்து அடிக்கலாம்?? என்ற கோபம், வஞ்சம், கௌதமிற்குக் குடைச்சல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
இந்த எண்ணங்களுக்கு நடுவில், முடிந்து போன பழைய விஷயங்களும் ஓட, மிருதுளாவை பிரிந்த அன்றைய நாள், சரண்யாவுடன் பேசியதையும், அதற்கு அடுத்து நடந்தைவையும் நினைத்துப் பார்த்தான் சந்துரு.