அப்போது அவந்திகா
“நான் பைட் எல்லாம் டிவியில தான் பார்த்திருக்கிறேன். வாங்கடி. வாங்கடி சண்டையை நேராக பார்க்கலாம்.” என்று அழைத்தாள்.
“வேண்டாம்.” என்று கீதா கூறுவதை பொருட்படுத்தாமல் அவந்திகா பிடித்து இழுக்க மாற்ற இருவரும் மனமில்லாமல் அவளைப் பின் தொடர்ந்தனர்.
மூவரும் கூட்டத்துக்குள் நுழைந்து அருகில் சென்றனர்.
இப்போது அந்த ஆண்கள் ஓரளவுக்கு தெரிந்தனர்.
அப்போது கீதா “மது. அங்க பாரேன். ஒருத்தன் கத்தி விற்கிற கடையில் இருந்து ஒரு கத்தியை யாருக்கும் தெரியாமல் எடுக்கிறான்.”. என்று பயத்துடன் கூறினாள்
“ என்னடி சொல்ற? எவன்?” என்று கேட்டபடி எட்டிப் பார்த்தாள் மதுமிதா.
“முகம் தெரியல. ஆனால் ப்ளூ கலர் ஃபுல் ஹேண்ட் ஷர்ட் போட்டு இருக்கான்.” என்றாள் கீதா.
மதுமிதா அந்த ஆண்களில் யார் நீல நிற சட்டை அணிந்து இருக்கிறார்கள் என்று பார்த்தாள்.
அதில் இரண்டு பேர் நீலநிற சட்டை அணிந்து இருந்தார்கள். ஆனால் அவர்களது முகம் தெரியவில்லை.
இவளுக்கு முதுகு காட்டி ஒருவன் நின்று கொண்டிருக்க அவனது சட்டையை பிடித்து அடித்துக் கொண்டிருந்தான் இன்னொருவன். இருவருமே நீல நிற சட்டை அணிந்திருந்தார்கள். இருவரின் முகத்தையும் அவளால் பார்க்க முடியவில்லை. இவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்ததால் ஒருவனின் முகம் அவளுக்கு தெரியவில்லை. இன்னொருவனின் முகத்தை இவன் பின்னந்தலை மறைத்துக் கொண்டிருந்ததால் அவனது முகமும் அவளுக்கு தெரியவில்லை.
அங்கு சண்டை போட்டுக் கொண்டிருந்த ஆண்களில் மூன்று முகங்கள் மட்டுமே அவளுக்கு தெரிந்தது.
அப்போது கீதா,
“ மது அவந்திகா வரலன்னா பரவாயில்லை. வா நாம போகலாம்.” என்று அவளது கையை பிடித்து இழுத்தாள்.
“கீதா ஒரு நிமிஷம். நான் நினைக்கிறேன் நேத்து பொண்ணுங்ககிட்ட பிரச்சனை பண்ணது இவனா தான் இருக்கணும். இல்லன்னா மற்றவர்கள் எல்லாரும் வெறும் கையால் பைட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது இவன் மட்டும் ஏன் கத்தியை எடுக்கணும்?” என்று கேட்டாள் மதுமிதா.
“இரு. நான் கத்தி எடுத்தவனை மட்டும் பாத்துட்டு வரேன்.” என்று 2, 3 அடி முன்னே வைத்து அவனைப் பார்ப்பதற்காக முன்வந்தாள் மதுமிதா.
அதே கணம் ஒரு கத்தி அவளை நோக்கி வரவும் அந்த கணம் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றாள்.
அடுத்த கணம் அந்த கத்தி அவள் நெற்றியை கிழித்து இருந்தது.
“என்ன நடந்தது?” என்று புரிந்துகொள்ளும் முன்பே அவள் நெற்றியில் கத்தி பட்டு ரத்தம் வழிந்தது.
தன்னை நோக்கி வந்த கத்தியையும் தன் நெற்றியில் இருந்து வழிந்த ரத்தத்தையும் பார்த்த மதுமிதா அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள்.
அதற்குப் பிறகு அவள் கண்விழித்தபோது மருத்துவமனைப் படுக்கையில் இருந்தாள்.
அவள் நெற்றியில் கட்டுப் போட்டு இருந்தது. பக்கத்தில் கீதா பதட்டத்துடன் நின்றுகொண்டிருந்தாள்.
“கீதா” என்று அவளைப் பார்த்து லேசாக முனகினாள் மதுமிதா.
“மது உனக்கு ஒன்னும் இல்லை. நீ பயப்படாதே. நாம பத்திரமா இருக்கிறோம். நீ கண்ணை மூடி தூங்கு.” என்று கூறவும் மதுமிதா மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்
அதற்குப் பிறகு அவள் எழுந்த பொழுது அவளின் பெற்றோர்கள் மற்றும் மதுசுதன் இருந்தனர் .
மதுமிதா தந்தையை பார்த்து அப்பா என்று அழைத்தாள்.
சிதம்பரம் அவளிடம் “ மது நீ ரிலாக்ஸ்டா இரு. நாங்கள் எல்லாரும் இங்கே இருக்கிறோம் இல்லையா? நீ பயப்படாதே.” என்று கூறினார் .
வள்ளி பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தது தெரிந்தது.
அவள் கண் திறந்து பார்த்து அவளிடம் வந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டார்.
மதுசூதன் இன்னொரு பக்கம் நின்று கொண்டிருந்தான்.
“சரி. நீ தூங்கு மது.”. என்று கூறினான்
அப்பொழுது மருத்துவர் உள்ளே வந்தார்.
“ அவங்கள நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம். அதிர்ச்சியில் மயங்கி இருக்காங்க. நெற்றியில் வெட்டு பட்டிருக்கு. ஸ்டிட்செஸ் போட்டு பெயின் கில்லர் கொடுத்திருக்கிறோம். அரைமயக்கத்தில் இருப்பாங்க. இன்னைக்கு நைட் நல்லா தூங்கினா நாளைக்கு பிரேஷ் ஆயிடுவாங்க. சி எஸ் ஆல் ரைட். பயந்து போய் இருக்காங்க. தைரியம் சொல்லுங்க.” என்று பெற்றோர்களிடம் கூறி விட்டு சென்றார் மருத்துவர்.
அப்போது அங்கு வந்த நர்ஸ்
“என்னமா உன் கழுத்துல போட்டு இருந்த நெக்லஸை காணோம் ? கழட்டி பத்திரமா வைத்து விட்டீர்களா?” என்று கேட்டாள் .
அப்போதுதான் மதுமிதா தன் கழுத்தை தொட்டு பார்த்தாள். அங்கு அந்த நெக்லஸ் இல்லாததை உணர்ந்தாள்.
மதுமிதா கீதா மற்றும் பெற்றோர்களை பார்த்தாள்.
அவளது பார்வையின் அர்த்தம் புரிந்த பெற்றோர்கள்
“நாங்க யாரும் கழட்ட வில்லையே? என்று பெற்றோர்கள் கூறவும் கீதாவும் அதையே கூறினாள்.
“அப்படியா என்னம்மா சொல்றீங்க? காஸ்ட்லி நெக்லஸ் மாதிரி இருந்ததே? ரொம்ப அழகா இருந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நான் பார்த்தேனே.” என்றார் நர்ஸ்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்திங்களா? எப்போ பார்த்தீங்க?” என்று கேட்டாள் கீதா.
“இப்பதான் மா . இந்த பொண்ணை ஒருத்தன் தூக்கிட்டு வந்து அட்மிட் பன்னினான் இல்லை அப்போ பார்த்தேன்.” என்றார் நர்ஸ்.
இதனை கேட்ட மதுமிதா புரியாமல் கீதாவை பார்த்தாள்
சிதம்பரம் “யாரது?” என்று கீதாவை கேட்டார்.
“அவன் கிட்ட கேட்டு பாருங்க.” என்றார் நர்ஸ்.
“அவன் எங்கே?” என்று கேட்டான் மதுசுதன்.
“அவன் அட்மிட் பண்ண ஹெல்ப் பண்ணினான். அவனைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவன் இங்கே தான் இருந்தான். நான் டாக்டர் கேட்ட மருந்து வாங்கிட்டு வருவதற்குள் அவன் எங்கேயோ போய்விட்டான்.” என்று கீதா கூறவும்
நர்ஸ்
“ அப்படியா? அப்போ அவன் உங்களுக்கு தெரிந்தவன் கிடையாதா?” என்று யோசித்தார்.
“இல்லை தெரியாது.”. என்றாள் கீதா
“அப்போ அவன் தான் அந்த நெக்லஸை திருடி இருக்கணும்
வேற யாரும் இந்த ரூமுக்கு வரவே இல்ல. நானும் டாக்டரும் மட்டும் தான் வந்தோம். அதுக்கப்புறம் நீங்க, இவங்க அப்பா அம்மா, அண்ணன் வந்தீர்கள். நகையையும் கானோம் அவனையும் காணோம். அப்போ அவன் தான் எடுத்துட்டு ஓடி இருக்கணும்.” என்று அனுமானித்தார் நர்ஸ்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த மதுமிதாவும் அப்படியே நினைத்தாள்.
ஆனால் கீதாவால் அவர் கூறுவதை நம்ப முடியவில்லை.
“இல்லை அவனைப் பார்த்தால் அப்படி எனக்கு தோணல.” என்று ஏதோ கூற ஆரம்பித்த அவளை மதுமிதா தடுத்தாள்.
“அவனைத் தவிர வேறு யாரும் இங்கே வராத போது அவன் தானே எடுத்திருக்க முடியும். யாரவன்?” என்று விசாரித்தாள்.
“அங்க சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள் இல்லையா? அந்த கூட்டத்திலிருந்து ஓடிவந்தான். ப்ளூ ஷர்ட் போட்டிருந்தான். ”
“ஓ அப்படியா? கத்தியால என் நெற்றியை கிழித்துவிட்டு குற்ற உணர்ச்சியால் என்னை தூக்கிட்டு வந்து அட்மிட் பண்ணி இருக்கானா?
அப்ப தானே நாம அவன் மேல இறக்கப்பட்டு போலீஸ் கேஸ் கொடுக்காமல் இருப்போம். அதனால பண்ணி இருப்பான். ஆனாலும் நான் அவன் மேல போலீஸ் கேஸ் கொடுக்க தான் போகிறேன்.” என்று சொன்னவள் சொன்னபடியே செய்தாள்.
அதற்குப் பிறகு அவளது காயம் சரியாக ஒரு மாதம் ஆனது. அதனால் அவளால் சொன்ன நேரத்திற்கு பணத்தை கொடுத்து சாவியை வாங்கி கடையை திறக்க முடியவில்லை.
“மது” என்று குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தாள்.
மதுமிதா கை தன்னிச்சையாக அவள் நெற்றியில் இருந்த தழும்பினை தடவிக் கொண்டிருந்தது .
“என்ன மது ?”என்று அவளை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள் கீதா.
ஒன்னும் இல்லை கீதா.” என்று மறைக்க முயன்றாள் மதுமிதா.
“ நீ யாரைப் பற்றி நினைச்சிக்கிட்டு இருக்கிறேன்னு எனக்கு தெரியும்.”
“என்னடி உனக்கு தெரியும்?” என்று கீதாவின் பக்கம் திரும்பி கேட்டாள் மதுமிதா.
“எனக்கு தெரியும். ஆனால் நான் சொல்ல மாட்டேன். நான் சொன்னா உனக்கு கோபம் வரும்.” என்றாள் மெல்லிய குரலில் கீதா.
“சரி கோபப்பட மாட்டேன் சொல்லு கீதா. அன்னிக்கி திருவிழாவில் நான் பார்த்த அந்த ப்ளூ ஷர்ட் போட்டு இருந்தவனை தானே நினைச்சுட்டு இருக்க?” என்று தயங்கி தயங்கி கேட்டாள் கீதா.
“ஆமாம் கீதா. இந்தப் பிள்ளையாரை பார்த்ததும் எனக்கு அன்னைக்கு நடந்தது ஞாபகம் வந்துடுச்சு.”
இதைக் கேட்ட கீதா லேசாக சிரித்தாள்.
“என்னடி சிரிக்கிற?” என்று சிறிது கோபம் காட்டி கேட்டாள் மதுமிதா.
“இல்லைன்னா உனக்கு ஞாபகமே வராது பாரு!” என்றாள் கீதா கிண்டலாக.
.இப்போது மதுமிதா கீதாவை முறைத்தாள்
“என்னடி முறைக்கிற உண்மையை தானே சொல்றேன்.”
“ஆமாம் கீதா. நீ சொல்றது உண்மைதான். நான் நினைக்க கூடாதுன்னு முடிவு பண்ணினாலும் அவனை என்னால் மறக்கவே முடியல.
டெய்லியும் என்னோட நெற்றியை பார்க்கும்போது அவன் ஞாபகம் வருது.
அந்த ஜிமிக்கி பார்க்கும்போது அவன் ஞாபகம் வருது.
யாராவது கடை வைத்து இதை செய்யக்கூடாதானு கேட்கும் போது அவன் ஞாபகம் வருது.
இப்படி தினமும் யாராவது எப்படியாவது அவனை எனக்கு ஞாபக படுத்தி விடுகிறார்கள். என்னடி செய்யறது?
நான் யாரை வெறுக்கிறேனோ அவனையே எனக்கு எல்லோரும் ஞாபகப்படுத்தறாங்க.” என்று நொந்து கொண்டாள் மதுமிதா.