அத்தியாயம் 38
அடுத்த நாள் காலை விடிந்ததும், முதல் ஆளாக எழுந்துகொண்ட மிருதுளாவிற்கு, மறந்திருந்த கவலைகள் எல்லாம் நியாபகம் வர, மனதுக்குள் மீண்டும் ஒரு பாரமும், பயமும் சூழ்ந்துகொண்டது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற கவலை ஏற்பட, பக்கத்தில் படுத்திருக்கும் தன் கணவனின் முகத்தைப் பார்த்தவளுக்கோ, சொல்ல முடியாத ஒரு திடீர் குழப்பம். ஏதாவது நடந்து இவரைப் பிரிய நேரிடுமோ என்ற அச்சம். கெளதம் முகத்தை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் அலாரம் அடிக்கவும், தன் நினைவில் இருந்து வெளியே வந்தாள். அதற்குள் கௌதமும் எழுந்துகொள்ள, அவனிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி அவனையும் கஷ்டபடுத்த விரும்பாமல், அமைதியாக எழுந்து குளிக்கச் சென்றாள்.
அடுத்து நேரம் வேகமாக ஓட, இருவரும் குளித்து, தயாராகப் பின் கெளதம் சென்று பக்கத்து ஹோட்டலில் இருந்து காலை உணவை வாங்கி வர, இருவரும் சாப்பிட்டு முடித்து, வீட்டை பூட்டிவிட்டு, ஆட்டோ பிடித்துக் கிளம்பினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணத்துக்குப் பின், வக்கீல் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்து சேரும் பொழுது நேரம் பத்தை தாண்டியிருந்தது.
தனி பங்களா என்று சொல்லுமளவிற்கு, சுற்றிலும் தோட்டம் நிறைந்த பெரிய வீடு. ஆட்டோவை விட்டு இறங்கியதும், வாட்ச்மேனிடம் தன் பெயரையும், நண்பனின் பெயரையும் சொல்லி வக்கீலை பார்க்க வந்திருக்கும் விவரத்தை கெளதம் கூற, இவர்களைக் கையேடு உள்ளே அழைத்துச்சென்ற காவலாளி, வேலையாளிடம் சொல்லி, அவர்கள் வீட்டு எஜமானியிடம் சொல்ல சொல்லிவிட்டுப் போனான்.
இவர்கள் இருவரையும் ஹாலில் உட்காரை சொல்லிவிட்டு, பக்கவாட்டில் இருந்த ஒரு அறையில் நுழைந்த வேலையாள், சில நிமிடங்களில் வெளியே வந்து இவர்களை உள்ளே போகச் சொல்ல, ஒரு வித பயத்தில், கௌதமின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் மிருதுளா. அவனும் கைகளை அழுத்தப் பிடித்துக்கொண்டான்.
நேரே அந்த அறைக்குள்ளே செல்ல, படங்களில் வருவது போல, அறை முழுவதும் செல்ப்களில் சட்ட புத்தகங்கள் அழகாக வரிசையாக அடுக்கி வைக்கபட்டிருக்க, தரை முழுவதும் கார்ப்பெட் போடபட்டிருக்க, நடுநாயகமாகப் பெரிய டேபிள் சேர் இருக்க, நீட்டாகப் பின் குத்தப்பட்டு உடுத்தப்பட்ட காட்டன் புடவையில் புன்னகை முகமாக, இவர்களை வரவேற்று இருக்கையில் அமர சொன்ன, வக்கீல் ராஜேஸ்வரி, பொதுவான நல விசாரிப்புக்கு பிறகு,
“நேத்து தான் பரத் போன் செஞ்சு விவரத்தை சொன்னான் ப்பா. ஆஸ் அ லாயர், உங்க பக்கத்து விவரத்தை கேட்காம நான் மேற்கொண்டு ப்ரோசீட் பண்ண முடியாதுல. அதான் ரெண்டு பேரையும் வர சொன்னேன்.” என்றவர் மிருதுளா பக்கம் திரும்பி, “நீ தான் மிருதுளாவா மா?” என்று கேட்க, “ஆமாம் மேம்.” என்றாள் அவள். “சந்துருன்றவர், தான் உன்னோட ஹஸ்பண்டா?” என்று அடுத்தக் கேள்வி அவர் கேட்க, திரும்பி கௌதமை சங்கடமாக ஒரு பார்வை பார்த்தவள், “இல்லை மேம். அவர் என்னை விட்டு பிரிஞ்சு போயிட்டாரு. அதுக்கு அப்புறம் இவரும் நானும் கல்யாணம் செஞ்சுகிட்டோம். இவர் தான் என்னோட ஹஸ்பன்ட்.” என்று கொஞ்சம் அழுத்தமாகவே கூற,
“ஓஹ்! இஸ் இட்!!” என்று ஆச்சரியபட்டவர், சந்துரு தன்னிடம் கூறிய விவரத்தை கூறினார். அதாவது, மிருதுளாவிற்கும் அவனுக்கும் சண்டை என்றும், அதில் கோபித்துக்கொண்டு மிருதுளா தாய் வீடு சென்று விட்டதாகவும், பின் தான், மனம் மாறி அவளைத் திரும்ப அழைக்க அவள் தாய் வீடி சென்றபொழுது, அவர்கள் வீடு பூட்டி இருந்ததாகவும், அதன் பின்பே இவர்கள் பெங்களுரில் இருப்பது தெரிந்து, அங்கே சென்று பார்க்க, மிருதுளாவை கெளதம் சட்டத்துக்குப் புறம்பாகத் திருமணம் செய்துருப்பதும் தெரிந்தது என்றும், அதற்காகக் கௌதமை தான் தட்டிகேட்க, கெளதமோ, அவள் என் மனைவி, இதற்கு மேல் எங்கள் வழியில் வந்தால், தன்னைக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும், அவனை மீறி மிருதுளாவை தன்னால் சந்திக்க முடியவில்லை என்றும் கூறியவன், பஞ்சாயத்தில் இவர்கள் இருவரும் பிரிந்த விஷயத்தை மறைத்து, இவர்களின் திருமணச் சான்றிதழை காட்டி, அவளையும், அவளிடம் இருக்கும் குழந்தையும் மீட்டு தரும்படி, இவரிடம் வந்து கேஸ் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறான்.
வக்கீல் சொன்னதைக் கேட்டதுமே, கௌதமுக்கு மீண்டும் கோவம் தலைக்கேறியது. இருந்தும் மிருதுளா தான் இவனைப் பொறுமையாக இருக்கும்படி கண்களால் சைகை செய்தாள். அதன் பின், வக்கீலிடம் சந்துருவை திருணம் முடித்ததில் இருந்து அவன் தனக்குச் செய்த கொடுமைகள் உட்பட நடந்த அனைத்தையும் சொன்னவள், இறுதியில் பஞ்சாயத்தில் வைத்து, சந்துரு தான், தானாக முன்வந்து, நிறையப் பேர் சாட்சிகளின் முன், இரு வீட்டுப் பெரியவர்கள் சம்மதத்தோடு, தன்னிடம் இருந்து விடுதலை வாங்கிக்கொண்டான், என்று விவரமாகச் சொன்னவள், அன்றைக்குப் பஞ்சாயத்தில் இவளுக்குக் கொடுக்கப்பட்ட, பான்ட் பேப்பரை எடுத்து காண்பித்தாள். அதில் இனி இவளுக்குத் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, மிருதுளாவும் நாளைக்கு என்றைக்கும் தன் வாழ்கையில் நுழைந்து தொந்தரவு செய்யகூடாது என்ற வாசங்களின் கீழ், இவளும் அவனும் கையெழுத்துப் போட்டிருக்க, கூடவே இரண்டு பக்கமும் சாட்சி கையெழுத்துகளும் சில இருந்தது.
ராஜேஸ்வரி, உடனே நேற்று சந்துரு கையெழுத்துப் போட்டுகொடுத்த பேப்பரில் இருந்த அவனது கையெழுத்தை எடுத்து ஒப்பிட்டு பார்க்க, இரண்டும் ஒன்றாக இருந்தது. அவருக்குமே இந்தப் பேப்பர் விஷயம் ஆச்சரியமே. இது பற்றிச் சந்துருவை அழைத்து இருபக்க நபர்களையும் வைத்து விசாரித்த பின்பு, அந்த ஊர் பஞ்சாயத்திலும் பேசிய பின்பே அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கமுடியும். ஏனெனில், தப்பான வழக்காக இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய பிறகு, இதனை எடுத்து நடத்தி, தன் பெயரை கலங்க படுத்திக்கொள்ள இவர் விரும்பவில்லை. ஆகவே எல்லாம் விசாரித்துவிட்டு இன்னோர் நாள் உங்களைக் கூப்பிடுவதாகக் கூறியவர், நேரம் மதியத்தை நெருங்கி கொண்டிருந்ததால், மதிய உணவை முடித்துக்கொண்டு செல்லும்படி சொல்ல, “இல்லை பரவால ஆண்டி. நாங்க போற வழில பார்த்துக்கிறோம்.” என்று கெளதம் மீண்டும் மீண்டும் மறுக்கவே, சரி என்று அவர் விட்டுவிட, இவனோ, “அம்மா இங்க இருக்கிறதா பரத் சொன்னானே ஆண்டி. அவங்களைக் காணோம்.” என்று கேட்க, அவர் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குப் பிள்ளைகளுடன் சென்றிருப்பது தெரிந்தது.
சரி இவ்ளோ தூரம் வந்துவிட்டோம் பரத்தின் தாயை பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று முடிவு செய்து கௌதமும், மிருதுளாவும் ஹாலில் காத்திருக்க, அடுத்தப் பத்து நிமிடத்தில் கோவிலில் இருந்து திரும்பி வந்தார், பரத்தின் தாய், லக்ஷ்மி.
கௌதமை பார்த்ததும், “வாப்பா கெளதம்!! நல்லா இருக்கியா?? ரொம்ப நாளா ஒரு போன் இல்லை, மெசேஜ் இல்லை. இந்த அம்மாவை மறந்துட்டியா??” என்று கேலி பேச, “அதெல்லாம் இல்லமா. வொர்க் அது, இதுன்னு டைம் போய்டுச்சு.” என்று இவன் பதில் சொல்ல, அப்பொழுது தான் கெளதம் அருகில் நிற்கும் மிருதுளாவை பார்த்தார். ‘இந்தப் பொண்ணை எங்கையோ பார்த்து இருக்கோமே!!’ என்று குழப்பம் அவருக்கு. (Modafinil) அதே நேரம் மிருதுளாவும் அவரைப் பார்த்துவிட்டவள், ‘அட! இவங்க மதுரைல ப்ரெக்னன்சி டைம்ல நமக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர் ஆச்சே!!’ என்று தோன்ற, அவரிடம் பேசலாமா வேண்டாமா என்ற மிருதுளா யோசிப்பதற்குள், கெளதம் அவரிடம் மிருதுளாவை தன் மனைவி என்று அறிமுகம் செய்து வைக்க, அவருக்கு இவளை நியாபகம் வந்துவிட, அவர் கண்களில் அதிர்ச்சி.
“நீ மதுரைல என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துகிட்ட பொண்ணு தானே மா??” என்று அதிர்ச்சியுடன் கேட்க, “ஆமாம் டாக்டர். என் மாமியார் கூட உங்களைப் பார்க்க வந்திருந்தேன். பேரு மிருதுளா.” என்று இவள் பதில் சொன்னதும் அவர் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி மற்றும் குழப்பம். “அதுக்கு அப்புறம் உன்னைக் காணோம். டெலிவரிக்கு கூட நீ வரலியே மா?? என்ன ஆச்சு?? இப்போ உன் குழந்தை எங்க???” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்க, மிருதுளா கௌதமை திரும்பி பார்க்க, கெளதமோ, நடந்த அனைத்தையும் சுருக்கமாக லக்ஷ்மியிடம் கூறினான்.
மிருதுளா, சந்துரு பிரிந்தது, குழந்தை பிறந்து அதை அவள் தந்தை அனாதை ஆஷ்ரமத்தில் போட்டது, அதைத் தான் எடுத்து வளர்த்தது, பின் மிருதுளாவை பெங்களூரில் பார்த்தது, திருமணம் செய்துகொண்டது என்று எல்லாவற்றையும் சுருக்கமாகக் கூறினான். மிருதுளாவிற்கோ, இவரைப் பார்த்ததுமே மனதில் முதலில் தோன்றியது, ட்ரீட்மென்ட் என்ற பெயரில், நடந்த கொடுமையும் அதன் மூலம் தேஜா தன் வயிற்றில் உதித்தையும், தேஜாவின் தந்தை யார் என்ற உண்மை, ஒரு மருத்துவராக இவருக்குத் தெரியும் என்பதும்.
ஆனால் இந்த நொடி மிருதுளா எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டாள். இப்பொழுது, பழையதை பற்றிப் பேசவோ, இல்லை தேஜாவின் தந்தை யார் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ளவோ இவள் விரும்பவில்லை. முக்கியமாகக் கௌதமிற்காக. அவன் தான் தன் குழந்தையின் தந்தை என்று மனதளவில் முடிவு செய்துகொண்ட பின்பு, இனி வேறு விவரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மிருதுளா துளியும் விருப்பபடவில்லை. அதனால் அமைதியாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் லக்ஷ்மியோ, கெளதம் சொல்லச் சொல்ல கேட்டு கொண்டவர், முடிவில், “குழந்தையோட அப்பா யாருன்ற உண்மை உனக்குத் தெரியுமா மிருதுளா??” என்று மிருதுளாவிடம் திரும்பி கேட்க, அவளோ, “இல்லை டாக்டர், இப்போ அதைத் தெரிஞ்சிக்கவும் நான் விரும்பல. அவ என் வயித்தில பிறந்தவ, என் பொண்ணு. இப்போ இவருக்கும் எனக்கும் பிறந்த குழந்தையா தான் நான் நினைக்கிறன். அதுபோதும் எனக்கு.” என்று சொல்லவும்,
இருவரையும் ஒரு பார்வை பார்த்தவர், அவளிடம், “நீ நினைக்க வேண்டாம் மிருதுளா. உண்மையாவே, அவ உங்க ரெண்டு பேருக்கும் பிறந்தவத தான்.” என்று சொல்ல, அவர் சொன்னது முதலில் இவர்களுக்குப் புரியவில்லை. சில நிமிடங்கள் கழித்தே அவர் சொன்னது புரிந்தாலும், நம்பமாட்டாமல், “என்ன சொல்றீங்க மா??” என்று அதிர்ச்சியுடன் கெளதம் அவரிடம் கேட்க, “ஆமாம் பா. குழந்தையோட பயோலாஜிக்கல் ஃபாதர் நீ தான். அவ உன்னோட விந்தனுக்கும், மிருதுளாவோட கரு முட்டைக்கும் பிறந்தவ.” என்றவர், “யாழினி கன்சீவா இருந்த புதுசுல, ஒரு நாள் உன்னை அவசரமா கான்டேக்ட் செஞ்சு மதுரைக்கு வர சொன்னேனே நியாபகம் இருக்கா ப்பா??” என்று கேட்க, ‘ஆம்’ என்றவனிடம், நடந்ததை முழுமையாகச் சொன்னார் லக்ஷ்மி.
மிருதுளாவும், மீனாட்சியும், குழந்தையின்மைக்கு, மதுரையில், முதன் முதலில் டெஸ்ட் எடுக்க வந்தபொழுது, அந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக லக்ஷ்மி இருந்தார். அவர் முன்பு தான் மீனாட்சி மிருதுளாவை அவமான படுத்தியது. அதன்பின்பே கிட்டதட்ட சண்டை வராத குறை ஏற்பட, சந்துருவுக்கும், மிருதுளாவிற்கும் டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது என்று முடிவு செய்து டெஸ்டும் எடுக்கபட்டது.
அந்த டெஸ்ட் ரிசல்ட்டில், உண்மையில் குறை சந்துருவிடம் தான் இருந்தது. அதாவாது, கல்லூரி நாட்களில் இருந்து, இவர்களின் திருமணம் வரை, சில பல வேண்டாத பாலியல் பழக்க வழக்கங்களால் அவனுக்கு விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது. அதிலும், motile sperm, அதாவது, கருப்பையில் நீந்தி சென்று, falloppian tube யில், கருமுட்டையை fertilize செய்யகூடிய திறன் மிக்க விந்தணுக்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைந்திருந்தது டெஸ்டில் தெரியவந்தது. இவர்களுக்குக் குழந்தை பிறப்பது மிக மிக அரிது. பல ஆண்டுகள் ட்ரீட்மென்ட் எடுத்து வந்தால், குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு.
இப்படி ஒரு ரிசல்ட் முடிவு வரவும், சம்பந்தப்பட்ட தம்பதிகளை வரவழைத்து அவர்களிடம் சொல்லலாம் என்று லக்ஷ்மி நினைத்திருக்க, அதற்குள் சரண்யா, எப்படியோ பேசி, அந்த டெஸ்ட் ரிசல்ட் பைலை வாங்கி, மீனாட்சியிடம் சொல்லி, அதன் பின், சந்துருவின் குறையை மறைத்து, மிருதுளாவிடம் பொய் சொல்லி, அவளை IUI க்கு சம்மதிக்கவைத்து, மருத்துவரிடமும், சந்த்ருவிற்கு ட்ரீட்மென்ட் செய்து அதன் பின் குழந்தை பிறக்கும்வரை அவர்கள் காத்திருக்கத் தயாராக இல்லை. என்று ஏதேதோ பொய் சொல்லி லக்ஷ்மியையும் சம்மதிக்க வைத்த பின், sperm டோனரை தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது.
எப்பொழுதும், இந்த மாதிரி ட்ரீட்மென்ட்களில், நல்ல திறன்மிக்க அதாவது, MOTILITY, HEALTH, PREVIOUS SUCCESS RATE போன்றவை பார்த்து தான் sperm டோனரை தேர்ந்தெடுப்பார்கள். அப்படி ஒருவரை லக்ஷ்மி தேர்ந்தெடுத்து வைத்திருக்க, கடைசி நேரத்தில், அவசர வேலை என்று அவர் வெளிநாடு செல்ல வேண்டியதாகப் போயிற்று. எப்பொழுது வருவார் என்று சொல்லமுடியாத சூழ்நிலை அவருக்கு. இது தெரிந்திருந்தால், சில நாட்களுக்கு முன்பே, அவரிடம் இருந்து விந்தணுவை வாங்கி, பதபடுத்தி வைத்துருப்பர்.
திடீரென முளைத்த இந்தப் பிரச்சனை, லக்ஷ்மி அவர்களுக்கு மிகவும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம் மீனாட்சி. டெஸ்ட் வேண்டாம் என்று அன்று சொன்னதற்கே, தாம் தூம் என்று குதித்தவர், இப்பொழுது ட்ரீட்மெண்டை தள்ளிவைக்கச் சொன்னால், எப்படி ரியாக்ட் செய்வார் என்று இவருக்குத் தெரியவில்லை. அத்தோடு சரண்யா வேறு உடனடியாக இதைச் செய்தாக வேண்டும் என்று கூறி இருந்தது வேறு லக்ஷ்மியை யோசிக்க வைத்தது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது தான், இவருக்குக் கௌதமின் நியாபகம் வந்தது.
ஆம்! லக்ஷ்மி, மதுரை மருத்துவமனையின் சென்னை பிரான்சில் தான் முதன் முதலில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்பொழுது பரத்தும், கௌதமும் காலேஜ் இறுதி வருடம் படித்துக் கொண்டிருந்தனர். நண்பனின் தாய் என்ற முறையில், லக்ஷ்மியிடம் நிறையத் தடவை பேசி இருக்கிறான் கெளதம். அத்தோடு ஒரு சில முறை அவர் வீட்டிற்கும் சென்று வந்திருக்கிறான். அந்த நெருங்கிய பழக்கத்தினால் தான், அவரையும் ‘அம்மா’ என்றே அழைப்பான்.
அந்தச் சமயம் தான், செயற்கை கருத்தரித்தல் முறைகள், விந்தணு தானம், கருமுட்டை தானம், வாடகை தாய் முறை போன்றவற்றைப் பற்றி, லக்ஷ்மி வேலை செய்யும் மருத்துவமனையும், ஒரு தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்தரங்கின் மூலம் இவற்றைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன் முக்கியத்துவத்தையும், கண், மூளை, போன்ற உடல் உறுப்புத் தானத்தை விட, இந்த மாதிரி தானம், ஒரு வரம் என்று புரிந்து கொண்டான் கெளதம்.
கடவுளுக்கு நிகராகக் குழந்தை இல்லாத தம்பதியர்க்கு குழந்தையைக் கொடுக்கக் கூடிய ஒரு பிரம்மாஸ்திரம் போன்றது இந்தத் தானம். குழந்தை இல்லை என்று எத்தனையோ கணவன்மார்கள், மனைவிமார்கள், சில சமயம், இருவரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு, இந்தச் செயற்கை முறை, புது வாழ்க்கை கொடுப்பதற்குச் சமம் என்றும், அது அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை இவன் உணர்ந்து கொண்டான்.
அதன் பலன், கல்லூரி முடிந்து சில மாதங்கள் கழித்து, லக்ஷ்மியிடம் சென்று தானும் விந்தணு தானம் செய்ய விருப்பபடுவதைப் பற்றிச் சொல்ல, முதலில் தயங்கியவர் பின்பு சரி என்று ஒத்துக்கொண்டார். அதன் பின்பு, வருடத்திற்கு ஒன்று, இரண்டு முறை இப்படிச் செய்து வந்தான் கெளதம். தானாக முன்வந்து அவன் செய்யும் செயலை நினைத்து பாராட்டிய லக்ஷ்மிக்கு, அவனுடைய விந்தணுவின் மூலம் செய்யப்படும் கருத்தரிப்பு முறை அனைத்தும், வெற்றி அடைந்துள்ளது என்பது, ஒரு மருத்துவராக அவருக்குக் கூடுதல் திருப்தி.
அதன் பின் கௌதமிற்குத் திருமணம் ஆகி சில ஆண்டுகள் கழித்து, இவர் மதுரைக்கு மாற்றாலாகி வந்தார். வந்த புதிதில் தான், மிருதுளாவின் கேஸ் இவரிடம் வந்து, எதிர்பார்த்த ஆள் வெளிநாடு சென்று என்று சிக்கல் ஏற்பட, வேறு வழியில்லாமல், கௌதமை தொடர்ப்புக் கொண்டார். அந்த நேரம் யாழினி கன்சீவ் ஆகி இருந்தாள்.
கௌதமை தொடர்பு கொண்டவர், அவனை மதுரை வரச் சொல்ல, அவனோ யாழியை நினைத்து தயங்க, அவனிடம், மிருதுளாவின் பெயரை சொல்லாமல், மீனாட்சியால் அவள் படும் கஷ்டத்தைச் சொல்ல, இறுதியில் சரி என்று சம்மதித்த கெளதம், அன்றே கிளம்பி மதுரை வந்தவன், லக்ஷ்மி கேட்டதைச் செய்து கொடுத்துவிட்டுச் சென்றான். ஆக கௌதமின் விந்தணு தான் மிருதுளாவின் கருப்பபையில் செலுத்தப்பட்டது.
இவற்றை எல்லாம் லக்ஷ்மி சொல்லி முடிக்க, கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவிற்குக் கிட்டத்தட்ட மயக்கம் வராத குறை. உடம்பெல்லாம் நடுக்கம் பரவி இருக்க, தன் கணவனே தன் குழந்தையின் தந்தை என்ற மிக பெரிய செய்தி, அவளை மகிழ்ச்சி கடலில் திளைக்க செய்ய, மகிழ்ச்சியையும் தாண்டிய ஒரு உணர்வில் அவள் மனம் முழுவதும் மூழ்கி இருக்க, கெளதம் மூலம் தேஜாவை சுமந்த அவள் அடி வயிற்றில், இப்பொழுது, இந்தத் தருணம் ஒருவித சிலிர்ப்பை உணர்ந்தவள், தன் கணவன் கௌதமின் கை விரல்களை எலும்பு முறியும் அளவு இறுக்கி பிடித்தவள், அப்படியே தொப்பென்று சோபாவில் அமர்ந்துவிட்டாள். ஏதோ ஒரு இடத்தில முற்றுப் பெறாமல் இருந்த தங்கள் வாழ்க்கை என்னும் வட்டம், இதோ இந்த நொடி முழுமை அடைந்த வட்டமாக மாறியதை போல உணர்ந்தாள்.
இங்கே கௌதமிற்கோ, எதையோ சாதித்துவிட்ட உணர்வில், உடம்பெல்லாம் ஒரு சிலிர்ப்பு உண்டாக, கைகளின் ரோமம் புள்ளரிக்க, அன்றைக்கு மிருதுளாவின் கர்ப்பத்தில், தனக்கும் ஒரு சின்னப் பங்காவது இருந்திருக்கக் கூடாதா என்று நினைத்து ஏங்கியிருந்தவனுக்கு, இன்று மிருதுளா வயிற்றில் உண்டான குழந்தை தன் வாரிசு. தன் ரத்தத்தில் உண்டானது என்ற உண்மையைக் கேட்கும்பொழுது, தானே பத்து மாதம் சுமந்து, எலும்பு முறியும் வலியை உணர்ந்து, தேஜாவை பெற்றெடுத்ததைப் போல, தாய்மைக்கு நிகரான ஒரு உணர்வை உணர்ந்தான். மிருதுளா வேறு இவள் விரல்களை இருக்கி பிடித்திருப்பது, அந்தக் கற்பனை உணர்வுக்கு உயிர் கொடுத்தது. நொடிகள் செல்லச் செல்ல, மிருதுளாவின் பிடி இன்னும் இறுகியது.
இவர்களின் நிலைமையைப் புரிந்துகொண்ட லக்ஷ்மி, இவர்களுக்குத் தனிமை கொடுக்கும் பொருட்டு, “நான் போய் ஜூஸ் எடுத்துட்டு வரேன் ப்பா. பார்த்துக்கோ.” என்று விட்டு கிட்சனுக்குள் சென்றார். அவர் சென்றதும், மனைவி அருகில் அமர்ந்தவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. வார்த்தையும் வரவில்லை. அதீத மகிழ்ச்சியில் இருந்தான்.
கண்கள் நிலைக்குத்தியிருக்க எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த மிருதுளாவிற்கு அவளையும் மீறி கண்களில் கண்ணீர் வழிந்துக்கொண்டே இருக்க, அதைத் துடைக்கும் நினைவு இல்லாமல் அமர்ந்திருந்தாள். ஆனால் கைகள் மட்டும் தன் கணவனின் விரல்களை விடவில்லை. மிருதுளாவின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கௌதமிற்கு அவளது கண்ணீரை பார்த்ததும் சுயநினைவு வர, இருக்கும் இடம் கருதி, மெல்ல அவள் தோள் தொட்டு அழைக்க, பல நிமிடம் கழித்தே இவன் பக்கம் திரும்பியவள், கதறலுடன் அவன் நெஞ்சில் முகம் புதைத்து, அழ தொடங்கிவிட்டாள்.
ஏன் என்றே தெரியாமல், மூச்சு இருக்கும் வரை அழ வேண்டும் போலத் தோன்ற, ஒரு வார்த்தை பேசாமல் அழுதுகொண்டே இருந்தாள் மிருதுளா. சிறு குழந்தை போல, ஏங்கி ஏங்கி அழுது கரைந்தாள். அவளின் அழுகையைப் பார்த்த கௌதமிற்கே, கண்களில் கண்ணீர் தேங்கிவிட்டது. மவுனமாக அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் அவள் தலையில் இதழ் பதித்தான்.
தன் கழுத்தில், கெளதம் தாலி கட்டிய அந்த நொடியில் தான் தங்களின் பந்தம் தொடங்கியது என்று மனிதர்கள் இவர்கள் இருவரும் நினைத்திருக்க, கடவுளோ, என்றைக்கு மிருதுளா வயிற்றில் தேஜா உருவாகினாலோ அன்றே இவர்கள் பந்தத்தை, கரு என்ற பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்துவிட்டார். சூரிய பகவான் மூலம், கர்ணன் குந்தி தேவியின் வயிற்றில் உதித்தது போல, கெளதம் மூலம் தேஜா மிருதுளாவின் வயிற்றில் கருவாய் உருவாகியிருக்கிறாள்.
இவர்களுக்குள் உண்டானது மாங்கல்ய பந்தம் இல்லை கருவறை சொந்தம்!
பல நிமிடங்கள் அழுது கரைந்தவளை, சமாதானம் செய்தவன், “அம்மு!! அழாதடா. கண்ட்ரோல் யுர்செல்ப். ஆண்டி பார்த்தா கஷ்டப்படப் போறாங்க. ப்ளீஸ் மா.” என்று இரண்டு மூன்று முறை சொன்ன பிறகே, தற்காலிகமாகத் தன்னை ஆஸ்வாச படுத்திக் கொண்டவள், கௌதமை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள். ஆனால் உள்ளுக்குள் இருந்த அதிர்ச்சி, மகிழ்ச்சி, அழுகை போன்ற உணர்வுகள் தேங்கி இருக்கிறது. அது எப்பொழுது வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்கும்.
தன்னை விட்டு விலகி அமர்ந்த மனைவியின் முகத்தைக் கெளதம் பார்க்க, இந்தச் சில நிமிட அழுகையிலேயே அவள் முகம் சிவந்து வீங்கி இருந்தது. அதிலேயே எந்த அளவுக்கு அவள் தன் எண்ணத்தில் மூழ்கி இருந்திருக்கிறாள் என்பது இவனுக்குப் புரிந்தது. அந்த நேரம் லக்ஷ்மி, இரண்டு க்ளாஸ் ஜூசை எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்தவர், மிருதுளாவை சமாதனம் செய்தார்.
“அன்னைக்கு உன்னோட மாமியார் உன்னைப் பேசுன பேச்சை கேட்கும்பொழுது உன்னை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன் மா. இந்தப் பொண்ணுக்கு கடவுள் ஒரு நல்ல வழி காட்ட கூடாதான்னு தோனுச்சு. நான் நினைச்சது நடந்திடுச்சு. அந்தக் கஷ்டத்தில் இருந்து, கைபிடிச்சு வெளிய கூட்டிட்டு வந்து, இன்னைக்கு உன்னை ஒரு நல்ல வழில கொண்டு வந்து விட்ருக்கிறார் கடவுள். இது அவர் போட்ட முடிச்சு. அதான் அந்த நேரத்தில் நாங்க செலெக்ட் செஞ்சிருந்த டோனோர் வர முடியாம போய், கெளதம் மூலமா உன் வயித்தில குழந்தையை உருவாக்கி இருக்கான். இன்னைக்கு அதே கௌதமை உனக்குக் கணவனாவும் ஆக்கியிருக்கான். இனிமே பழசை எதையும் நினைக்காம, எப்போவும் சந்தோஷமா இருக்கணும் மா. நீங்க ரெண்டு பேரும் வாழ்கையில இணைஞ்சதை பார்க்கும்போது, ரொம்பச் சந்தோஷமா இருக்குக் கெளதம்.” என்று தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.
அதன் பின் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அங்கிருந்து கிளம்பினர் கௌதமும் மிருதுளாவும்.
சந்துருவால் ஏற்பட்ட பிரச்சனை அப்போதைக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இந்த மகிழ்ச்சி மட்டுமே அவர்கள் மனம் முழுவதும் நிறைந்திருந்தது.
ஆனால், கூடிய விரைவில், அவர்கள் எதிர்பார்க்காத, ஏன் யாருமே எதிர் பார்க்காத அதிர்ச்சி செய்தி ஒன்று அவர்களுக்காகக் காத்திருக்கிறது.