அத்தியாயம் 39 (1)
ஆட்டோ சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பின் இருக்கையில் கெளதம் அமர்ந்திருக்க, அவனது தோளில் தலை சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தாள் மிருதுளா. அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொத்தி வைத்திருந்தான் கெளதம். கண்களை மூடி சாய்ந்திருக்கும் அவள் அழவில்லை. ஆனால் உள்ளுக்குள் எல்லா உணர்வுகளையும் அடக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள் என்று இவன் அறிவான். அவளை அமைதிபடுத்தும் பொருட்டே, தன் கைகளுக்குள் இருக்கும் அவளது கைகளை அவ்வபொழுது, தட்டி கொடுத்துக்கொண்டே இருந்தான்.
சிறிது நேரத்தில், வீடு வரவும், ஆட்டோவிற்குப் பணம் கொடுத்துவிட்டு, மேலே வந்து சாவியைக் கொண்டு வீட்டை திறக்கும் வரை, பிரம்மை பிடித்தவள் போல இருந்த மிருதுளா, வீட்டுக்குள் சென்றதும், அப்படியே தொப்பென்று தரையில் அமர்ந்தவள், வாய்விட்டு கதற ஆரம்பித்துவிட்டாள்.
அந்த நிமிடம் வரை அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தமும் வெடித்துக் கிளம்பியது அவளுக்குள். எதற்கு அழுகிறோம் என்றே தெரியவில்லை, ஆனால் வாழ்க்கை மொத்தத்திற்கும் அப்பொழுதே சேர்த்து அழுதுவிட வேண்டும் போல இருந்தது. இத்தனை நாள், மற்றவர்களுக்காகத் தனக்குள் மறைத்து வைத்திருந்த துக்கம், மன அழுத்தம் எல்லாம், மேகத்தைக் கிழித்துக் கொண்டு கொட்டும் மழை போல, அவள் உள்ளத்தில் இருந்து கண்ணீராக வெளியே வந்து கொண்டிருந்தது.
தன் மனைவியைப் பார்த்து பதறிய கெளதம், கதவை சாத்திவிட்டு, “அம்மு!!! என்னடா இது!!!” என்றபடி அவள் அருகில் அமர, அவனின் சட்டையைக் கொத்தாகப் பற்றியபடி, அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்தவள், “ஏங்க!!! ஏன் கடவுள் நம்ம ரெண்டு பேர் வாழ்கைளையும் இவ்ளோ கஷ்டத்தைக் கொடுத்தாரு?? யாழினி மாதிரி ஒரு நல்ல வாழ்கையை உங்களுக்குக் கொடுத்து, அவங்களை உங்ககிட்ட இருந்து பிரிச்சு, சந்துரு மாதிரி ஒருத்தரோட என் வாழ்கையை முடிச்சு போட்டு, ஒவ்வொரு நொடியும் நரகத்தை அனுபவிக்க வச்சு, இப்…..இப்போ நம்ம ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்து, இன்னைக்கு இவ்ளோ பெரிய உண்மையைத் தெரிஞ்சிக்க வச்சாரு?? நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையோட ஏன் விளையாடினாரு?? நம்மளை பாடாபடுத்தி இவ்ளோ கஷ்டத்தைக் கொடுத்து, இப்போ இப்படி ஒரு சந்தோஷத்தை கொடுக்கணும்?? என்…………என்னால இதை முழுசா ஜீரணிக்க முடியலைங்க.” என்று மீண்டும் மீண்டும் புலம்பியபடி மிருதுளா வாய்விட்டு கதற, கௌதமிற்கோ, தன் மனைவியின் அழுகையைப் பார்த்து, அவனையும் மீறி கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
மிருதுளாவின் இந்தக் கதறலுக்குக் காரணம், அவள் அடி ஆள் மனதில், தேஜா தந்தை பேர் தெரியாமல் பிறந்த குழந்தை, என்ற எண்ணம் பதிந்திருந்தது. இந்த உண்மை தெரிந்தும், கெளதம் தன்னைத் திருமணம் செய்ததோடு, தேஜா மேல் இருக்கும் பாசமும் குறையாமல், தங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தையாகவே அவளைப் பார்ப்பது, மிருதுளாவுக்குள் சிறிய, மிகச் சிறிய உறுத்தலை உண்டாக்கி இருந்தது. இப்பொழுது, அந்த உறுத்தல் அடிப்பை இல்லாதது, அர்த்தமற்றது என்ற உண்மை தெரிய வந்ததின் வெளிபாடு தான் இந்தக் கண்ணீர். அதனால் ஏற்பட்ட நிம்மதி அவளுள்.
கௌதமிற்கோ, இத்தனை நாள், உயிரையே வைத்திருந்த தன் மகள், வேறு யாரோ அல்ல, தன்னுடைய உதிரத்தில் பிறந்த குழந்தை தான் என்ற உண்மை, அவனை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்தது. முன்பு குழந்தையைப் பிரிய நேருமோ என்று மனதுக்குள் இருந்த பயம், மிருதுளாவுடனான திருமணத்தில் அடிபட்டு போனாலும், இப்பொழுது புதிதாகச் சந்துருவால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையால், நேற்றில் இருந்து மீண்டும் அந்தப் பயம் அவன் மனம் முழுவதும் வியாபித்திருந்தது.
தத்து எடுத்ததைத் தவிரத் தேஜாவிடம் தனக்கு என்ன உரிமை இருக்கிறது. குழந்தையைப் பெற்றவள் மிருதுளா, அதுவும் பெண் குழந்தை. நாளைக்கே மிருதுளாவை பிரிய நேர்ந்தாள், தேஜாவை அவளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் என்றால், மனைவியையும் பிரிந்து, மகளையும் பிரிய நேரிடுமோ என்ற கவலை அவனை மிகவும் அழுத்திக் கொண்டிருந்தது. வெளியே தைரியமாக இருப்பது போல காட்டிக்கொண்டாலும், மனதளவில் ரொம்பவே சோர்ந்து போயிருந்தான்.
ஆனால் இப்பொழுது, அவன் மனதில் இருந்த எண்ணங்கள் எல்லாம், தண்ணீர் பட்ட, அழுக்கு போலக் கரைந்து காணாமல் போய்விட்டது. இனி என்ன ஆனாலும் சரி, சந்துருவை ஒரு கை பார்த்துவிடுவேன் என்ற உத்வேகத்தை இவனுக்குள் விதைத்திருந்தது. “மிருதுளா என் பொண்டாட்டி டா. தேஜா எனக்குப் பிறந்தவ டா. அவ என் பொண்ணு! உன்னால என்ன புடுங்க முடியுமோ புடிங்கிக்கோ டா!” என்று சந்துருவை பார்த்து இப்பொழுதே கத்த வேண்டும் போல ஒரு வெறி. அந்த ஆனந்ததில், திளைத்தவன், தன் மனைவியை இன்னும் இறுக அணைத்து, தனக்குள் புதைத்துக் கொண்டான்.
அதே நேரம், “அழுதுடு, மனசில இருக்கிற பாரம் எல்லாம் குறைஞ்சிடும்.“ என்று சொல்வார்களே, அது போல மிருதுளா மனதில் இத்தனை நாள் இருந்த குழப்பங்கள், வேதனைகள், பயங்கள், மன அழுத்தங்கள் எல்லாம், முற்றிலும் போகும்வரை அவள் அழட்டும் என்று விட்டுவிட்டான்.
வெகு நேரம் அழுது கரைந்த மிருதுளா, திடீரெண்டு நினைவு வந்தவளாக, கௌதம் நெஞ்சில் இருந்து நிமிர்ந்தவள், “எனக்குப் பாப்பாவை உடனே பார்க்கணுங்க. வீடியோ கால் போடுங்க ப்ளீஸ்!” என்று கேட்க, கெளதமோ, “இந்த நேரத்தில வேண்டாம் டா, உன் முகத்தைப் பாரு. அழுதழுது வீங்கி இருக்கு. அத்தை, மாமா பார்த்தா என்னனு கேட்ப்பாங்க. இங்கயே விஷயத்தைச் சொல்ல வேண்டாம். அங்க போய்ச் சொல்லலாம்.” என்று இவன் மறுக்க, “இல்லங்க, எனக்குப் பாப்பாவை இப்போ உடனே பார்க்கணும். ப்ளீஸ்ங்க!” என்று அவள் மீண்டும் மீண்டும் கெஞ்ச, சரி என்றவன், “நீ கொஞ்சம் முகத்தைத் துடைச்சுக்கோ டா. முகம் ரொம்ப வாடி இருக்கு.” என்று சொல்லவும், சிட்டாகப் பறந்து சென்று முகத்தைக் கழுவிவிட்டு ஓடோடி வந்தாள்.
அன்று சனிக்கிழமை என்பதால், ஜெய் மொபைலுக்கு அழைத்து, தேஜாவை மிருதுளா பார்க்க வேண்டும் என்று சொன்ன கெளதம், வீடியோ கால் வர சொல்ல, அடுத்த ஐந்து நிமிடத்தில் வீடியோ காலில் வந்தான் ஜெய்.
தொடு திரையில் தோன்றிய பச்சை பொத்தானை இழுத்துவிட, “ம்மா!!” என்றபடி ஒரு கையில் பொம்மையை வாயில் வைத்தபடி, மற்றொரு கையை ஸ்க்ரீனை நோக்கி நீட்டிய தேஜாவை பார்த்ததும், மிருதுளாவிற்கு உதடுபிதுங்கி மொளுக்கென்று கண்களில் கண்ணீர் வழிந்தோட, “அண்ணி என்னாச்சு!!” “அக்கா, என்ன ஆச்சு!!!” என்று ஜெய்யும், ஆராவும் பதற, உடனே கெளதம், மிருதுளாவின் கையை அழுத்தி கொடுக்க, சட்டென்று அவள் தன் கண்களைத் துடைத்துக் கொள்ள, கெளதமோ, “அதெல்லாம் ஒன்னும் இல்லடா, முத தடவை பாப்பாவை விட்டுட்டு வந்திருகோம்ல, அதான் பாப்பா நினைப்பா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா. இப்போ அவளைப் பார்த்ததும் அழுதுட்டா.” என்று சொன்னவன், மிருதுளாவிடம் திரும்பி, “அம்மு, என்ன நீ!! கண்ணைத் துடைச்சுக்கோ மா!!” என்று சொல்லவும், தன் முகத்தைக் கஷ்டப்பட்டுச் சிரித்தபடி வைத்துக் கொண்டாள் மிருதுளா.
அதன் பின் கெளதம் தான், பேசிக்கொண்டு இருந்தான். மிருதுளாவோ, தேஜாவை இப்பொழுது தான் முதன்முறை பார்ப்பது போல, அவள் முகத்தை அங்குலம் அங்குலமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண், மூக்கு, உதடு, முகம் எல்லாம் யாரை போல இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். முன்பே குழந்தை தன்னுடையவள் என்று தெரிந்தாலும், இதே போல முகத்தை எல்லாம் கூர்ந்து கவனித்து இல்லை. ஆனால் இன்று தன் கணவனின் சாயல் தன் மகளிடம் இருக்கிறதா என்று தேடினாள்.
கோலிகுண்டு கண்களும், பேனா கொண்டு வரைந்தது போன்ற செப்பு உதடுகளும் மிருதுளாவை போல இருந்தாலும், அந்த மூக்கு கௌதமுக்கு இருப்பது போல, நுனியில் சற்றே விரிந்து அழகாக இருந்தது. முகத்தை மொத்தமாகப் பார்க்கும்பொழுது இருவரின் சாயலும் சரிசமமாகத் தெரிந்தது. குழந்தையின் முகத்தில் ஆழ்ந்திருந்தவள், “அம்மு!!” என்று கெளதம் இரண்டு முறை அழைத்த பிறகே, “ஹான்!! என்னங்க??” என்று தன் நினைவுகளில் இருந்து வெளியே வந்தாள்.
“என்ன அக்கா ஆச்சு, உனக்கு?!! பாப்பா எவ்ளோ நேரமா உன்னைக் கூப்பிடுறா. நீ ஏதோ யோசனையில இருக்க…!” என்று ஆரா கேட்கவும், “ஒன்னும் இல்ல டா. ஏதோ யோசனை.” என்று இவள் பதிலளிக்க, ஜெய்யோ, “கேஸ்ல எதுவும் பிரச்சனையா அண்ணா?!! அண்ணி முகம் ரொம்பக் கவலையா இருக்கு.” என்று தன் சந்தேகத்தைக் கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல டா. நான் பார்த்துக்குறேன்னு ஆண்டி சொல்லிட்டாங்க. எதுவும் பிரச்சனை வராதுன்னு நினைக்கிறன். ரிதுக்குப் பாப்பா நினைப்பு. அதான் முகம் வாடி இருக்கு.” என்று கூறி சமாளித்தான்.
“அப்போ கிளம்பி வந்துடேன் ண்ணா. பாபாவை அண்ணி ரொம்ப மிஸ் பண்றாங்க போல.” என்று ஜெய் சொல்லவும், “இல்ல டா. ஆண்டி, இன்னும் ஒன்னு, ரெண்டு நாள்ல பேசிட்டு சொல்றேன் சொல்லி இருக்காங்க. இருந்து பார்த்துட்டு வரோம். அடிக்கடி அங்கயும், இங்கயும் ட்ரேவில் செய்ய முடியாதே.” என்று சொல்லவும், “அதுவும் சரி தான் ண்ணா.” என்று ஜெய் சொல்லிவிட, அதன் பின் வெகு நேரம் பேசிவிட்டு, போனை வைத்ததும், மீண்டும் கௌதமை கட்டிக்கொண்டு அழுது தீர்த்தாள் மிருதுளா.
அழும் தன் மனைவியை, மடியில் சாய்த்துக்கொண்ட கெளதம், அவளைத் தட்டிக்கொடுக்க, உணவு உண்ண கூடத் தோன்றாமல், அந்த நாள் அப்படியே கழிந்தது அவர்கள் இருவருக்கும். எப்பொழுது உறங்கினார்கள் என்று தெரியாமலேயே, உறங்கி போயிருந்தனர் அடுத்த நாள் தங்களுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்.
**********
“மரகதம் எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டீயா?? எல்லாரும் ரெடி ஆகியாச்சா?? தம்பியை எங்க காணோம்!!” என்று கேட்டுக்கொண்டே, தன் கையில் இருந்த பொருட்களை வாசலில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார் அந்த வயதான பெண்மணி. “எல்லாத்தையும் எடுத்து வச்சாச்சு மதினி. உங்க தம்பி இப்போ வந்துடுவாரு.” என்று மற்றொரு பெண்மணி பதில் சொல்ல, கோவில் பூஜைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்களை எல்லாம் இரு பெண்மணிகளும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர்.
“ஆமா, இவ எங்க போனா??” என்று தம்பி மனைவி கேட்க, மூத்தவர், “யாரை கேக்குற மரகதம்?” என்று கேட்க, “யாரை கேட்பேன், எல்லாம் உங்க மருமகளைத் தான்.” என்று மற்றவர் சிரித்துக்கொண்டே பதில் சொல்ல, “அவளா, அவ உள்ளதான் ரெடி ஆகிட்டு இருக்கா.” என்றார் மூத்தவர். அதற்குள் மூத்தவரின் தம்பி அங்கே வந்தவர், “எல்லா ரெடியா அக்கா??“ என்று தன் அக்காவிடம் கேட்க, “எல்லாம் ரெடி வேலு. நீ மொதல்ல அந்த வேன்காரனுக்குப் போன் போட்டு வண்டி எங்க வந்துட்டு இருக்குன்னு கேளு.” என்று இவர் பதிலுக்குச் சொல்ல, அவர் உடனே தனது போனை எடுத்து யாருக்கோ பேசினார்.
அதற்குள் மருமகள் என்று அழைக்கப்பட்ட அந்த இளம்பெண் அங்கே வர, அவளைத் திருஷ்டி கழித்தவர், “என் மருமக எம்புட்டு அழகா இருக்கா. என் ராசாத்தி.” என்று கூற, அவரின் தம்பி மனைவியோ, “ஹம்!! நீங்க தான் மருமக மருமகன்னு சொல்லிட்டு இருக்கீங்க, மாப்பிளை இதுவரை எந்தப் பதிலையும் சொல்லல. எப்போ தான் நாம நினைச்சது நடக்குமோ!!” என்று அலுத்துக்கொள்ள, மூத்தவரோ, “நானும் என்னத்தைச் சொல்ல, எவ்ளோ முறை சொல்லி பார்த்துட்டேன். பிடி கொடுக்க மாட்டேங்குறான். இந்தத் தடவை ஊருக்கு வரட்டும். எப்படியாவது அவனைக் கட்டி வச்சாவது இந்தக் கல்யாணத்தை முடிச்சிடனும்.” என்றார் தன் மகன் செய்து வைத்திருக்கும் வேலை தெரியாமல்.
**********
“சோரா டி இதெல்லாம். மனுஷன் தின்பானா!!” என்ற குரல், ஓடு போட்ட அந்தச் சின்ன வீட்டை அதிர செய்தது. அந்தக் குரலுக்குப் பின், எவர்சில்வர் தட்டு பறந்து தூணில் போய் மோதி, அதில் இருந்த உணவு முழுவதும், நாளா பக்கமும் சிதற, தூக்கி வீசப்பட்ட தட்டோ, ‘நங்’ என்று கீழே விழுந்து, காதை கிழிக்கும் சத்தத்துடன் பல முறை சுழன்று, சத்தம் மெல்ல மெல்ல தேய்ந்து குறைய இறுதியில், பட்டென்று தரையோடு ஐக்கியம் ஆனது.
தட்டை தூக்கி வீசியவனோ, “தாலி கட்டுன மாமனுக்குக் கொஞ்சம் கூட மரியாதை தராளா!! நானும் மாடு மாதிரி தண்டி உழைக்கேன். பணம் பத்தலைன்னு சொன்னா, நான் எங்க போவேன். நாலு வீட்டுல கொள்ளைதான் அடிக்கணும். தினம் ரெண்டு அடி அடிச்சா தான் அடங்குவ நீ! ஒரு வார்த்தை சொல்லாம ராணி மாதிரி வச்சுருக்கேன்ல அந்தத் திமிரு டி உனக்கு. இரு வந்து உன்னை வச்சுகிறேன். மனுஷன் உசுரை வாங்கிகிட்டு.” என்ற புலம்பலுடன், தெரு முனையில் நிறுத்தி வைத்திருந்த தனது வேனை எடுத்துக்கொண்டு புயலென அங்கிருந்து புறப்பட்டான் அவன். மனைவி மேல் இருந்த கோவம் எல்லாம் வண்டியின் ஆக்சிலேட்டரில் காண்பிக்கப்பட, ஸ்பீட் லிமிட்டையும் தாண்டி சீறிப் பாய்ந்தது அந்த வாகனம். இவன் பக்கத்தில் அமர்ந்திருந்த கிளீனர் இளைஞன், “அண்ணே!! மெதுவா போண்ணே. இப்போவே இப்படிப் போற. கோவில் சவாரிக்குப் போகப் போறோம்னே. “என்று மெதுவாகச் சொல்ல, “டேய் பன்னாடை!! அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ வாயை மூடிட்டு இரு.” என்று பதிலுக்கு அவன் எரிந்துவிழ, அந்த இளைஞனோ கப்சிப் என்று தனது வாயை இறுக மூடிக்கொண்டான்.
சிறிது தூரம் சென்றதும், ஊரின் எல்லையில் இருந்த டாஸ்மாக் கடை அருகே வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கி சென்று, மது பாட்டிலை வாங்கிகொண்டு வந்து வண்டியில் எரியவன், தன் கையில் இருந்த பாட்டிலின் மூடியை திருக்கி திறந்து, உள்ளே இருந்தவற்றை ஒரே மூச்சில் வாயில் சரித்துக்கொண்டான். இவன் செயலை பார்த்து பதறிய கிளீனர் இளைஞன், “அண்ணே!! கோவில் சவாரிக்கு போறோம்ன்னே, இன்னைக்குமா!!! வேண்டாம்னே!!” என்று தடுத்தும், முழுவதும் குடித்து முடித்தவன், பட்டென்று அந்தப் பையனின் கன்னத்தில் ஓங்கி அறைய, இதை எதிர்பார்க்காத அந்த இளைஞன், கன்னத்தில் கை வைத்துக்கொண்டு இவனைப் பார்த்து பேய் முழி முழிக்க, அவனோ, ‘வாயை மூடு’ என்பது போலச் செய்கை செய்ய, தஞ்சாவூர் பொம்மை போலத் தலையைத் தலையை ஆட்டியவன், சற்று தள்ளி போய் அமர்ந்து கொண்டான். மெல்ல மெல்ல தன்னை ஆக்ரமிக்கும் போதையோடு கண்களில் ஒருவித மயக்கத்தோடும் வேனை கிளப்பிச் சென்றான்.