அத்தியாயம் 6
பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு வந்த சேர்ந்த மிருதுளா, தன் தங்கையிடம் நடந்ததைக் கூறினாள். “அவரைப் பார்த்தா ரொம்ப நல்லவர் மாதிரி தெரியுது அம்மு.” என்றாள் கௌதமை குறிப்பிட்டு. அதை ஆமோதித்த ஆரா, “ஆமா அக்கா. அங்க யாருக்காவது ஏதாவது உதவி தேவைனா, முதல் ஆளா செய்வாரு. எனக்குமே நிறைய ஹெல்ப் செஞ்சிருக்காரு.” என்றாள் பதிலுக்கு. அதன்பின் மேலும் சில நிமிடங்கள் பேசிய ஆரா, கதவை தாழ் போட்டுக்கொண்டு பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டு வைத்தாள்.
அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை, வழக்கம் போல வேலைக்கு வந்த பொன்னம்மா, வீட்டில் புதிதாக ஆட்கள் இருப்பதைப் பார்த்து கேட்க, அவர்களை அறிமுகம் செய்த ஆரா, இனி சமையல் தவிர மற்ற வேலைகள் மட்டும் பார்க்கும்படி அவரிடம் கூறினாள். அவரும் சரி எனச் சம்மதித்தவர், பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு சென்றார்.
காலை உணவை முடித்துக்கொண்டு சில மணிநேரம் கழித்து, சகோதரிகள் இருவரும் நித்யாவின் அறையில், அவள் விட்டுச் சென்றிருந்த அவளுடைய பொருட்களை எல்லாம் பேக் செய்து பரண் மேல் போட்டனர். அவள் இங்கு வர நேர்ந்தால் அவளிடமோ இல்லை ரகுவிடமோ கொடுத்துவிடலாம் என்று நினைத்திருந்தனர். ஒருவர் படுக்ககூடிய கட்டில் தான் அங்கு இருந்ததால், வீட்டிற்குச் சில பொருட்கள் வாங்க ஷாப்பிங் சென்றனர். பார்வதி மட்டும் வீட்டில் இருந்தார்.
ஷாப்பிங் சென்றவர்கள், டபிள் பெட் கட்டில், மெத்தை தலகாணி, போர்வை என்று படுக்கை அறைக்குத் தேவையான சில பொருட்களையும், சமையில் செய்வதற்குத் தேவையான சில பொருட்களுக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டு, அந்த மாலில் இருந்த உணவகத்திற்கு ஸ்நாக்ஸ் சாப்பிட சென்றனர். ஆர்டர் கொடுத்துவிட்டு இருவரும் ஒரு ஓராமாக அமர்ந்து கொண்டனர். ஆரா அவளின் மொபைலில் மூழ்கிவிட, மிருதுளா சுற்றும் முற்றும் தன் பார்வையைச் சுழலவிட்டாள்.
அப்பொழுது சற்றி தள்ளி இருந்த டேபிளில் உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தவள், தான் காண்பது உண்மையா பொய்யா என்று நம்ப முடியாமல் மீண்டும் கூர்ந்து பார்க்க, அவனே தான், என்று தெரிந்து கொண்டவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்க தொடங்கியது. அன்றைய தினம் பைலை தனது முகத்தில் விசிறி அடித்துவிட்டு அவன் பேசிய வார்த்தைகள் இன்று மீண்டும் இவள் காதுகளில் ஒலித்தது. “ச்சே! நீயெல்லாம் ஒரு பொண்ணா! உன்னால எல்லாப் பொண்ணுங்களுக்கும் கெட்ட பேரு.” என்று கூறியவனின் பார்வையில் அவ்வளவு அருவருப்பு.
அந்த வார்த்தைகளைத் தற்பொழுது நினைத்து பார்த்தவளுக்கு, அன்றைய தினம் போல இன்றும் அதிர்ச்சியிலும், பயத்திலும், அவமானத்திலும் கைகள் நடுங்க ஆரம்பிக்க, மயக்கம் வருவது போல இருந்தது. தலையை அப்படியே குனிந்துக் கொண்டாள். இருந்தும் அவளையும் மீறி, சில கண்ணீர் துளிகள் டேபிளில் விழ, லேசாக விசும்பல் சத்தம் அவளிடம்.
அந்தச் சத்தத்தில் நிமிர்ந்த ஆரா, பக்கத்தில் இருந்த அக்காவை பார்க்க, அவள் அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது தெரிந்தது. அதைப் பார்த்து பதறியவள், “அக்கா!! என்ன ஆச்சு க்கா?!!! ஏன் அழற?!” என்று கேட்க, அவளின் விசும்பல் அதிகமானது. அதில் மேலும் கலக்கம் அடைந்த ஆரா, “அக்கா! ப்ளீஸ் அழாத!! என்ன ஆச்சுனு சொல்லுக்கா?!” என்றவள் அவளின் முதுகை மெதுவாகத் தடவி கொடுக்க, மெல்ல மெல்ல மிருதுளாவின் அழுகை குறைந்தது.
அதன் பின் மிருதுளாவிடம் என்ன விஷயம் என்று ஆரா கேட்க, இவள் நிமிர்த்து அந்த டேபிளை பார்க்க, அவள் பார்த்த நபர் தற்பொழுது அங்கு இல்லை. அங்கும் இங்கும் பார்த்தவளின் கண்களில், பில் கௌண்டரில் அவன் நிறப்து தெரிந்தது. மிருதுளா நிமிர்ந்து யாரையோ தேடுவதைப் பார்த்ததும் ஆராவும் சுற்றிலும் பார்வையை ஓட்ட, அவன் நிற்பதை பார்த்துவிட்டாள். அதிர்வுடன் திரும்பி, மிருதுளாவை பார்க்க, அவளின் கண்களில் கலவையான உணர்வுகள்.
“அக்கா!!!!” என்று ஆதரவாக அவளின் தோள்களைத் தொட, “இங்க இருந்து போகலாம் அம்மு. ப்ளீஸ்.” என்று கெஞ்சியவளின் குரல் அப்படியே அவமானத்தில் சிறுத்திருந்தது. தன் சகோதரியின் நிலைமையைப் பார்த்து கோபமுற்ற ஆரா, “நீ ஏன்க்கா இப்படி இருக்க?! தப்பு அவங்க மேல. நீ இந்த மாதிரி உன்னையே அசி…..” என்று ஏதோ சொல்ல போனவள், பேச்சை மாற்றி, “நீ இங்கேயே இருக்கா. நான் போய் அவர்கிட்டே நாக்கை புடிங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன்.” என்று வேகமாக எழ போனவளின் கைகளை இழுத்துப் பிடித்துத் தடுத்த மிருதுளா, “ப்ளீஸ் அம்மு, நாம போகலாம். நீ பேசினா என் மானம் தான் போகும். ப்ளீஸ்.” என்று கண்களால் இறைஞ்ச, “மப்ப்ச்!!!!!” என்று சலிப்புடன் அமர்ந்துவிட்ட ஆரா, கைவிரல்களை அழுத்த மூடி தனது கோபத்தைக் கட்டுபடுத்த முயன்றாள். சில நொடிகள் கழித்து நிமிர்ந்தவள், “போகலாம் க்கா.” என்று எழுந்துகொள்ள, கண்களைத் துடைத்துக்கொண்ட மிருதுளாவும் அவளுடன் சென்றாள். இவர்கள் வருவதற்குள் அவன் சென்றிருந்தான். கௌண்டரில் ஆர்டரை கான்சல் செய்துவிட்டு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர்.
வீடு வந்ததும் மிருதுளா அறைக்குள் சென்று முடங்கிக்கொள்ள, அவளின் முகத்தைப் பார்த்து பதறிய பார்வதி, “என்ன கண்ணு!! அக்கா முகம் ஏன் வாடிபோய் மாதிரி இருக்கு?!!” என்று கேட்க, “ஒன்னும் இல்லை ஆச்சி. அக்காக்கு தலை வலி.” என்று ஆரா பதிலளிக்க, அதில் கொஞ்சம் அமைதியானவர், “ரொம்ப வலியா கண்ணு? நான் வேணா கஷாயம் செஞ்சு கொண்டுவரவா?” என்று கேட்க, “இல்லை ஆச்சி. தூங்கி எழுந்தா சரி ஆகிடும்.” என்று பதிலளித்தவள் “ஹம்!! வாசனை தூக்கலா இருக்கு. என்ன சமையல் ஆச்சி? “ என்று பேச்சை மாற்றினாள்.
அறைக்குள் வந்த மிருதுளாவிற்கு, சில வருடங்களாகத் தனது வாழ்வில் நடந்தவை எல்லாம் நினைவு வர, கூடவே தனது தலையில் இடியை இறக்கிய அன்றையை நாளும் நியாபகம் வந்தது. அவன் பேசிய வார்த்தைகளின் கூர்மை இன்றும் அவளைத் தாக்க, அப்படியே கூனி குறுகி சுருண்டு கட்டிலில் படுத்துக்கொண்டாள். கண்கள் நீரை சுரந்து கொண்டிருந்தது. ‘எப்படி?! எப்படி?! என்னைப் பார்த்து அவரால அப்படிப் பேச முடிஞ்சது?!’ என்று நினைக்க நினைக்க, வேதனை அதகரிக்க, வாய் விட்டு அழவேண்டும் போல இருந்தது. ஆனால் பார்வதிக்கு தெரிந்தால், தன்னை நினைத்து புலம்ப ஆரம்பித்து விடுவார், என்பதால் வாய்பொத்தி சத்தத்தைக் குறைக்க முயற்சி செய்தாள். அன்றைய தினம் தான், அவனைக் கடைசியாய்ப் பார்த்தது. அதன் பிறகு அவன் எங்கோ வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாகச் செய்தி கேள்விபட்டாள் அவ்வளவே. அதற்கடுத்து இன்றுதான் மீண்டும் பார்க்கிறாள்.
இங்கே இவள் அழுதழுது ஓய்ந்து போய்க் கிடக்க, சில மணிநேரங்கள் கழித்து ஆரா வந்து இவளை சாப்பிட அழைத்தாள். அப்பொழுதும் தன் அக்காவிற்குப் பல அறிவுரைகளை வழங்கினாள். தங்கையின் பேச்சில் தெளிந்தவள், குளியலறை சென்று தனது முகத்தைக் கழுவிவிட்டு சாப்பிட வந்தாள்.
பேத்தியின் முகம் வீங்கி இருப்பதைப் பார்த்ததுமே, ஏதோ சரி இல்லை என்று நினைத்த பார்வதி, என்ன விஷயம் என்று கேட்க, “ஒன்னும் இல்லை ஆச்சி. உடம்பு கனகன்னு இருக்கு. ஜுரம் வர மாதிரி இருக்கு. இங்க இருக்கிற தண்ணி ஒத்துக்கலை போல.” என்று கூறி சமாளித்தாள் மிருதுளா. இதற்கே பதறி போனவர், உடனடியாகக் கஷாயம் செய்து அவள் சாப்பிட்டதும் குடிக்க வைத்த பின்பு தைலம் தேய்த்துவிட்டு அவளை ஓய்வு எடுக்கவைத்த பின்பே அமைதியானார். அதன் பின் தானும் உறங்க சென்றார் பார்வதி.
அடுத்த நாளில் ஆராவிற்கு அலுவலகம் ஆரம்பித்துவிட, பரபரப்பாகச் சென்றது அந்த வாரம். காலையில் எழுந்துவிடும் மிருதுளா, குளித்துவிட்டு, வீட்டு வாசலை பெருக்கி, அரிசு மாவில் சின்னதாய் கோலத்தைப் போட்டுவிட்டு, சுப்ரபாத பாடலை மியுசிக் சிஸ்டத்தில் போட்டுவிட்டு, ஆராவிற்குக் கொடுத்தனுப்ப சமையல் வேலையை ஆரம்பித்துவிடுவாள். வீட்டிலும் இவள் இப்படிதான். பார்பவர்கள் மிகவும் பொறுப்பான பெண் என்று சொல்லுமளவிற்கு நடக்கக் கூடியவள். ஆரா இவளுக்கு நேரெதிரானவள். இதனாலேயே சித்ராவிடம் அடிக்கடி திட்டு வாங்குவாள் ஆரா.
அன்றும் அப்படிதான், வழக்கம் போல் காலையில் எழுந்துகொண்ட கௌதமின் தந்தை சேகர், கதவை திறந்து பால் பாக்கெட்டை எடுக்கபோக, எதிர் வீட்டில் இருந்து வந்த சுப்ரபாத பாடலில், லயித்து நின்றிருந்தவரின் கண்களில், வழக்கத்துக்கு மாறாக எதிர் வீட்டு வாசலில் கோலம் போடபட்டிருக்கவும் ஆச்சரியம். அதைவிடப் புதிதாக யாரேனும் குடி வந்திருக்கிறார்களா என்ற கேள்வி.
அப்பொழுது அங்கே வந்த பொன்னம்மாவிடம் தன் சந்தேகத்தை அவர் கேட்க, அவரோ, “இல்லை சர், நம்ம ஆராதனா பொண்ணோட அக்காவும், பாட்டியும் வந்திருக்காங்க. அந்தப் பொண்ணு தான் இதெல்லாம் செஞ்சது. சும்மா சொல்ல கூடாது சர். ரொம்பப் பொறுப்பான பொண்ணு. காலையிலேயே குளிச்சு முடிச்சு, பாக்கவே மங்களகரமா இருக்கும். வீட்டையும் சுத்தமா வச்சிருக்கு.” என்று சொல்லிவிட்டு போக, இவருக்கு இறந்துபோன தனது மருமகளின் நியாபகம் வந்தது. அவளும் இப்படிதான். குடும்பத்தைப் பொறுப்புடன் பார்த்துக்கொண்டாள். மருமகள் வந்து காபி கொடுக்காமல் இவருக்கு அந்த நாளே விடியாது. பெண் இல்லாத இந்த வீட்டில், அனைவருக்கும் தாயாக இருந்தவள். தற்பொழுது அவளின் நினைவில் கலங்கிய கண்களை, துடைத்துக்கொண்டவர் குளிக்கச் சென்றார்.
இவருக்கு இப்படி என்றால், கௌதமிற்குச் சொல்லவே வேண்டாம். தினமும் எதிர் வீட்டில் இருந்து கேட்கும் பாடல், அவனுக்கு யாழினியை நினைவூட்டியது. ஆம்! அதுதான் அவன் மனைவியின் பெயர். காதலித்துத் திருமணம் செய்தவன். அலுவலகத்தில் உடன் பணிபுரிந்தவள். அவளின் அமைதி தான் முதலில் இவனை மிகவும் கவர்ந்தது. யாருடனும் அதிகம் நெருக்கம் காட்டமாட்டாள். அனாவசியமான பேச்சுக் கிடையாது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள். அதே நேரம் வேலையிலும் குறை சொல்ல முடியாது. கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்து முடித்து விடுவாள். இந்தக் குணம் தான் கௌதமை அவளைக் காதலிக்க வைத்தது, திருமணத்திலும் முடிந்தது.
தினம் தினம் தன் அறைக்குள் நுழையும் போதெல்லாம் யாழினியுடன் கழித்த நிமிடங்கள் தான் கௌதமிற்கு நியாபகம் வரும். இருவரும் அலுவகத்திற்குக் கிளம்பும் நேரம், யாழினியை, இவன் சீண்டிக்கொண்டே இருப்பான். கண்ணாடி முன்பு நின்று அவள் தலைவாரும்போது, பின்னால் இருந்து அவளை அணைத்துக்கொண்டு புறப்பட விடாமல் காதல் தொல்லை செய்கையில், அவளோ, ஹேர் ட்ரையரை எடுத்து அவன் முகத்துக்கு நேரே காட்ட, அதில் இருந்து வரும் சூடான காற்றில் திணறுபவன், அவளை விட்டு தள்ளி நின்றுகொண்டு, “என்ன சேட்டையெல்லாம் செய்ற டி. கல்யாணத்துக்கு முன்னாடி இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு, இப்போ என்னடானா அந்தப் பூனையை விடப் பயங்கரச் சேட்டை பண்ற.” என்று இவன் முகத்தைச் சுருக்கி கேட்க, யாழினியோ இவன் அருகில் வந்து நின்றுகொண்டு, தன்னைச் சுட்டிக்காட்டி “இந்த ஜீரோ இப்போ இந்த ஒன்னு கூடச் சேர்ந்து பாத்தாகிடுச்சு. அம்புட்டு தான் மச்சான்.” என்று கூறிவிட்டு அவன் உதடுகளில் சட்டென்று ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு சிட்டாகப் பறந்துவிடுவாள்.
“சரியான வாலு.” என்று கூறிக்கொண்டே இவன் கண்ணாடியை பார்க்க, அப்பொழுதுதான் தெரியும் லிப்ஸ்டிக்கை வைத்து அவள் இவனின் சட்டையில் கிறுக்கி வைத்திருப்பது. “யாழினி!!!!!” என்று இவன் கத்தும் சத்தத்தில், கொடிக்கம்பத்தில் உட்கார்ந்திருக்கும் பறவைகள் எல்லாம் அலறியடித்துக்கொண்டு பறந்துவிடும்.
இப்படியாக அவளுடன் கழித்த, கூடல், காதல், மகிழ்ச்சி, கிண்டல், கலாட்டாக்கள், அழுகை, சோகம், துன்பம், வேதனை, என்று எல்லாம் நியாபகம் வரும்பொழுது, அவனின் ஒரே பிடிப்பு தேஜஸ்வினி தான். குழந்தை, குழந்தை என்று ஏங்கியவள் கடைசியில் அந்த வரம் கிடைத்தும் அதை அனுபவிக்காமல் சென்றுவிட்டாளே என்று நினைக்கையில், அடுத்து இவனுக்குள் அந்த எண்ணம் வரும். அதன் தாக்கத்தால் மனதில் பாரம் எழும் நேரம், தலையை உலுக்கிக்கொண்டு, அந்த எண்ணத்தைத் தூர போட்டுவிட்டு, தனது வேலையில் கவனம் செலுத்தச் சென்றுவிடுவான். அவனுக்குள் உதித்து, அவனை யோசிக்கவைக்கும் அந்த விஷயம் என்னவோ?
இங்கே மிருதுளாவோ, சமையல் செய்துகொண்டே, இருவருக்கும் காபி போட்டு எடுத்துச்சென்று ஆராவை எழுப்பிக் குளிக்கச் சொல்லிவிட்டுப் பார்வதியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் சமையல் வேலை என்று நேரம் போவதே தெரியாது. ஆரா கிளம்பி சென்றதும் இருவரும் சாப்பிட்டு முடித்ததும், ஓய்வாகச் சிறிது நேரம் இருந்துவிட்டு, அதன்பின் துவைக்கவேண்டிய துணிகளையும், பாத்திரங்களையும் எடுத்து வைத்துவிடுவாள். இப்படியாக அவளின் நாட்கள் சென்றுகொண்டிருந்தது.
கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருந்தது. அன்று விடுமுறை தினம். ஆராவின் அலுவலகத்தில் அவுட்டிங் என்று அனைவரும் பக்கத்தில் இருந்த ரெசார்ட்டுக்கு சென்றனர். காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பியவர்கள், ரெசார்ட் வந்துசேர பதினோர் மணிக்கு மேல் ஆகிவிட்டது. வந்ததும் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டவர்கள் குளிர்பானங்கள், ஸ்நாக்ஸ் என்று சாப்பிட்டுவிட்டு உணவு ஹாலில் அமர்ந்திருக்க, பாடல் போடப்பட, ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக நேரத்தை கழித்தனர்.
ஆண்கள் அனைவரும் குத்தாட்டம் போட, பெண்களோ அவர்களுக்கு நிகராக நடனம் ஆடி அசத்திவிட்டனர். அதிலும் ஒரு பையனுக்கும், பெண்ணிற்கும் நடன போட்டி ஏற்பாடு செய்யப்பட, களம் இறங்கிய இருவரில் யார் முதலில் நிறுத்துவார்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு, இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து ஆடினர். இறுதியில் இருவருமே வெற்றி பெற்றவர்கள் என்று அறிவிக்கபட, அனைவரும் “ஊ!!!!!” என்று கத்தி அவர்களை உற்சாகம் செய்தனர். அதன்பின் அடுத்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. இதில் அனைவரும் ஜோடியாகக் கலந்துகொள்ள வேண்டும் என்பது விதி. அதன்படி சீட்டு குலுக்கப்பட, ஜெய்யின் வேண்டுதல்படி ஆராவே அவனுக்கு ஜோடியாக அமைந்தாள். இதற்கும் அவனின் நண்பர்கள் மத்தியில் சிரிப்பலை.
இந்தப் போட்டி என்னவென்றால், ஒரு குடுவைக்குள் பல துண்டு சீட்டுகள் இருக்கும். ஒவ்வொரு ஜோடிக்கும் ஒவ்வொரு சீட்டு குலுக்கி எடுக்கப்படும். அதில் எழுத பட்டிருப்பதை அவர்கள் செய்யவேண்டும். போட்டி ஆரம்பமானதும் ஒவ்வொரு ஜோடியாக முன்னே வர, ஒவ்வொருவராக அவர்களுக்குச் சொல்லப்பட்டதைச் செய்தனர்.
பாட்டு, நடனம், மிமிக்கரி என்று ஒவ்வொரு ஜோடிக்கும் ஒவ்வொன்று வர, அதில் ஒரு ஜோடிக்கு, கோவைசரளா வடிவேலுவை அடிக்கும் காட்சியை நடித்துக் காட்டவேண்டும் என்ற சீட்டு வந்தது. அவர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பே அனைவரின் மத்தியிலும் சிரிப்பலை. அதிலும் அந்தப் பெண் சற்று குண்டாகவும், அந்தப் பையன் ஒல்லியாக இருக்கவும் காட்சி இன்னும் களைகட்டியது.
ஒருகாட்சியில் கோவைசரளா வடிவேலுவை ரூமிற்குள் தலையனையால் அடித்து, லுங்கியை பிடித்து இழுத்து, தரையில் போட்டு அவர் மேல் ஏறி அடிப்பதுபோல வரும் காட்சியை அனைவரும் நடிக்கச் சொல்ல, அந்த ஜோடியும் சரி என்று சம்மதித்தனர். பாவம் அந்தப் பையனுக்குத் தான் ஏதோ மிருககாட்சி பூங்காவிற்குள் நுழைவது போல முகத்தில் அப்படி ஒரு பீதி.
அவனின் மேல் முன்விரோதாமோ, இல்லை உள்ளுக்குள் அப்படி ஒரு எண்ணத்தை அந்தப் பெண் வைத்திருந்தாளோ என்னவோ தெரியவில்லை. ஆனால் காட்சி அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. அவனை அடித்து, பெல்டை பிடித்து இழுத்து, தலைமுடியை பிடித்து ஆட்டி, என்று போர்களத்தில் சண்டையிடுவது போல அந்தப் பெண் நடித்துக் (?) கொண்டிருக்க அந்த இடமே போர்க்களம் போல ஆனது. அதிலும் அந்தப் பெண் அவனின் பெல்ட்டை பிடித்துச் சுழட்டும்போது, பேன்ட் கழன்று கொள்ளாமல் இருக்க அதை இறுக பிடித்துக்கொண்டு அவன்பட்டபாடு அவனுக்குத்தான் தெரியும்.
காட்சி முடிகையில், மெஷினில் மாட்டிய கரும்பு போல, தலைமுடி எல்லாம் நட்டுக்கொண்டு, கண்ணாடி ஒருபக்கம் உடைந்த நிலையில் நடந்து வந்தவன், தன் நண்பர்களைப் பார்த்து, “நீங்களாம் நல்லா வருவீங்கடா!” என்று ஒருபக்கம் கோணியிருந்த உதட்டை, வலியில் சுருக்கியபடி சொல்ல, அவர்களோ, “மச்சி! இதெல்லாம் உனக்கு ஒரு ப்ராக்டீஸ் மாதிரி டா. நாளைக்குக் கல்யாணம் ஆகி, வரபோற பொண்டாட்டிகிட்ட அடிவாங்க வேண்டாமா. அதுக்குதான் இது.” என்று கூறி தங்களுக்குள் ஹை-பை கொடுத்துக்கொள்ள, “அடேய்!!!” என்று அவர்களை இவன் அடிக்கக் கை ஒங்க, அடுத்த நொடி “அம்மே!!!!!” என்று வலியில் அலறினான். எங்கே கையைத் தூக்க?! அவள்தான் இவன் உடம்பில் இருக்கும் நட்டு, போல்ட்டு எல்லாவற்றையும் நடிப்பு என்ற போர்வையில் கழட்டி இருந்தாளே.
இப்படியாக ஒவ்வொரு ஜோடியாகச் செய்துமுடிக்க, இறுதியில் ஆரா-ஜெய் இருவரின் முறை வந்தது. சீட்டில் என்ன வரபோகிறதோ என்ற ஆர்வத்துடன் அனைவரும் பார்க்க, ஜெய்யின் வேண்டுதல்படி (மறுபடியுமா??) லவ் ப்ரோபோசல் காட்சி நடித்துக் காட்ட வேண்டும் என்று எழுதபட்டிருந்தது.
இதைக் கேட்ட, அவன் நண்பர்கள், “மச்சி! இவன் ஏதும் பில்லி சூனியம் வச்சுட்டானா?! இன்னைக்கு எல்லாமே அவனுக்குப் பிடிச்சதாவே நடக்கு.” என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டு குழம்பி போயினர்.
காட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே, அனைவரும், கைதட்டி உற்சாகப் படுத்த, ஆராவுக்குத் தான் வெட்கமாக இருந்தது. அந்த வெட்கத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான் ஜெய். மெல்ல சென்று பக்கத்தில் வைக்கபட்டிருந்த அலங்கார ஃபளவர் வாஷில் இருந்து, பிளாஸ்டிக் ரோஸ் ஒன்றை எடுத்து வந்தவன், கண்களில் காதலுடனும், உதட்டில் புன்னகையுடனும், ஆரா அருகில் வந்து ஒற்றைக் காலில் மண்டியிட்டவன்,
முதல் முறை உன்னைப் பார்த்தபொழுது!
ஏனோ என் மனதில் புயல் காற்று!
இதுநாள் வரை மோதல் என்று அதை நினைத்திருந்தேன்!
இப்பொழுதுதான் தெரிந்தது, அது காதல் என்று!
இதைத் தெரிந்துகொண்ட பின்,
தென்றல் காற்று வீசும் நந்தவனமாக நான். – என்று
தன் மனதில் இருக்கும் காதலை நாடகம் என்ற போர்வையில். சொல்லிவிட்டு அந்த ரோஜாவை அவள் முன் நீட்டி, “ஐ லவ் யு!” என்றான் அன்று போல இன்றும் கண்ணடித்துக்கொண்டே.
ஆராவோ, அந்தப் பூவை வாங்காது அவனையே பார்த்துக்கொண்டிருக்க, “வாங்கு ஆரு! ஆரு கமான்!” என்ற பல குரல்கள் கேட்டதும் நினைவுக்கு வந்தவள், கனவுலகத்தில் மிதந்துகொண்டே அந்தப் பூவை வாங்க, அனைவரும் “ஓஹோ!!!!!” என்று கைதட்டி கரகோஷம் எழுப்பவும், வெட்கத்தில் தன் இருக்கைக்கு ஓடிவிட்டாள். ஜெய்யோ, செல்லும் ஆராவையே பார்த்துக்கொண்டு, சிரிப்புடன் தனது பின்னந்தலையை அழுத்தக் கோதினான்.
மாலை அனைவரும், ரிசார்ட் பார்ட்டி ஹாலில் கரகோஷத்துடன் ஆடல் பாடல்களில் மூழ்கி இருந்தனர். ஆரா ஒரு சேரில் அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, மெல்ல அவள் அருகில் வந்து அமர்ந்தான் ஜெய். திரும்பி பார்க்காமலே அவன் வந்தது தெரிந்தும், திரும்பி பார்க்கவில்லை இவள். சற்று முன்பு நடந்த நிகழ்வு அவளுக்குள் ஒருவித உணர்வை ஏற்படுத்தி இருக்க, மொபைலை நோண்டுவது போல, கீழே குனிந்து கொண்டாள்.
சில நொடிகள் அவளின் முகத்தை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஜெய். பின் மெல்ல அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “சாரி ஆரா, உன்னை டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்னு அன்னைக்குச் சொல்லிட்டு இன்னைக்கு இப்படி நடக்க வேண்டியதா போச்சு.” என்று வருத்ததுடன்(??) சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்த ஆரா, “ இட்ஸ்ஓகே ஜெய்.” என்று கூறிவிட்டு அந்தப் பக்கம் திரும்பியவளின் இதழ்களில் புன்னகை. இவனின் போலியான் வருத்தத்தைக் கண்டுபிடித்து விட்டாளோ!
இங்கே இவர்கள் நேரம் இப்படி இன்பமாகக் கழிந்து கொண்டிருக்க, அங்கே வீட்டிலோ, வேறொரு சூழ்நிலை. அன்றைய தினம் போலியோ சொட்டு மருந்து போடும் தினம் என்பதால், காலையிலேயே கௌதமின் தங்கை, தேஜஸ்வினியை அவன் வீட்டிற்கு வந்து விட்டுவிட்டு மதியத்துக்கு மேல் கிளம்பி சென்றிருந்தாள். அதன்பின், அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று குழந்தைக்கு ஊசி போட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தான் கெளதம்.
ஊசி போடப்பட்ட வலியில் குழந்தை வெகுநேரமாக அழுது கொண்டிருக்க, இவன் எவ்வளவோ சமாதனம் செய்தும் அவள் அழுகையை நிறுத்தவில்லை. வெகுநேரம் பார்த்தவன், சரி காற்றோட்டமாக இருக்கட்டும் என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றான்.
படிகளில் ஏறி மொட்டைமாடி வாசல் அருகில் சென்றவன், உள்ளே மிருதுளா காய்ந்த துணிகளைக் கொடியில் இருந்து எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அங்கே வேறு யாரும் இல்லை. இருப்பதாகவும் இவனுக்குத் தெரியவில்லை. அவள் மட்டும் தனியே இருப்பதால், பிறகு வரலாம் என்று நினைத்து கீழே இறங்குவதற்காக அவன் திரும்ப, ‘தட்!!’ என்று பிளாஸ்டிக் உடைந்தது போலச் சத்தம் கேட்டது. சட்டென்று இவன் திரும்பி பார்க்க, அங்கே மிருதுளா தரையில் மயங்கி கிடக்க, அவள் விழுந்ததில், பக்கத்தல் இருந்த பக்கெட் இரண்டாக உடைந்திருக்க, காயப் போடப்பட்டிருந்த கொடிக் கயிறு துணிகளுடன் அறுந்து அவள் மேல் கிடந்தது.