அலெர்ட்டாக இருக்கவேண்டிய நைட் வாட்ச்மேன்களே கண் அசரும் அந்த நேரம், கும்பகர்ணனுக்குக் கொள்ளு பேத்தியை போல் குறட்டைவிட்டு தூங்கும் ஆராவை எழுப்ப அதிகநேரம் பிடித்தது மிருதுளாவிற்கு. “ஆரா!! எழுந்துரு.” என்ற அவளைப் பலமுறை உலுக்கிய பின்னரே, “யாரது, இந்த நேரத்தில. என் கனவில(?!) வந்து டிஸ்டர்ப் பண்றது. ஒரு வேலை செத்துப்போன தாத்தாவா இருக்குமோ?! அவர் எதுக்கு என் கனவுல வராரு? ஆச்சி கனவுல போய் டூயட் பாடாம!! ஒருவேளை பரம்பரை புதையல் ரகசியம் எதுவும் சொல்ல வந்திருப்பாரோ!” என்ற புலம்பலுடன் எழுந்தவளுக்கு அப்பொழுதும், தான் கனவு காண்பது போலதான் தெரிந்தது.
பாதி எழுந்தவள், மீண்டும் படுக்கப்போக, அவளின் பின்னாலேயே ஒன்று போட்டாள் மிருதுளா. அதில் முழுவதுமாகத் தூக்கத்தில் இருந்து விழித்தவள், “யார் என்ன இப்படி அடிக்கிறது. இதோ வரேன்!!!” என்றவள் கண்களை அழுத்தத் தேய்த்துக்கொண்டு திறக்க, இருட்டில் பக்கத்தில் நின்றிருந்த மிருதுளா அவளுக்குக் கருப்பு உருவமாகத் தெரிந்தாள். “அம்மே!!! பேய்!!!!” என்று அலறியவள், “என்னை ஒன்னும் பண்ணிடாத. நான் எதுவும் தப்பு பண்ணல. ஏதோ சின்ன வயசில ஒன்னு ரெண்டு முறை வீட்டுக்கு தெரியாம காசை திருடி இருக்கேன். அவ்ளோதான். ஹான்!! அப்புறம் ஸ்கூல் படிக்கும்போது வீட்டில பொய் சொல்லிட்டு ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குப் போயிருக்கேன். அவ்ளோதான். அப்புறம் சொல்ல மறந்துட்டேன், காலேஜ் கட் அடிச்சிட்டு ரெண்டு தடவை தியேட்டர் போயிருக்கேன். இதுக்கு மேல சொல்றதுக்கு எதுவும் இல்லை. மொதர் ப்ராமிஸ். என்னை ஒன்னும் பண்ணிடாத.” என்று அவள் பாட்டுக்குத் தூக்கத்தில் தன் தவறுகளைச் சொல்லி (உளறி) கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த க்ளாஸ் தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் ‘பொளிச்’ என்று மிருதுளா அடித்த பின்புதான் அவளது கனவு முற்றிலுமாகத் தெளிந்தது. ‘அட நம்ம அக்கா!’ என்று நினைத்துக் கொண்டவள், “எதுக்கும் கால் இருக்கான்னு பார்த்துப்போம். பேய்லாம் உருவம் மாறுமாம். டிஸ்கவரி சேனல் பேய் நிகழ்ச்சியில சொன்னாங்க.” என்று தனக்குள் முனுமுனுத்துக்கொண்டு கீழே குனிந்து அக்காவின் காலை பார்க்க, அவளின் முதுகிலேயே ‘நங்’கென்று ஒரு அடி கொடுத்தாள் மிருதுளா.
“ஸ்ஸ்ஸ்ஆஆஆ!!! ஏன்க்கா இப்படி அடிக்கிற. ஹப்பா!! என்ன அடி!!” என்று ஆரா நிமிர அதற்குள் சென்று லைட்டை போட்டிருந்தாள் மிருதுளா. நிமிர்ந்தவள் அப்பொழுதுதான் பார்த்தாள், அவளின் அக்காவின் முகத்தில் இருந்த கலக்கத்தை.
“என்ன ஆச்சு க்கா?! ஏன் இப்படி டென்ஷனா இருக்க. ஆச்சிக்கு எதுவும் உடம்பு சரி இல்லையா?!!” என்று பதறியவள் பக்கத்து அறைக்குச் செல்லப் போக, அவளது கையைப் பிடித்துத் தடுத்த மிருதுளா, “இல்லை அம்மு. ஆச்சிக்கு ஒன்னும் இல்லை. அவங்க நல்லா இருக்காங்க.” என்று சொல்ல, “பின்ன என்ன க்கா?! ஏன் ஒரு மாதிரி இருக்க?!” என்று ஆரா பதிலுக்கு கேட்கவும், தயக்கத்துடன் மெல்ல, “இல்லை அம்மு. பாப்பாக்கு ஏதோ ப்ராப்ளம்ன்னு மனசுல பட்டுட்டே இருக்கு. மதியமே அவளுக்கு லேசா காய்ச்சல் மாதிரி இருந்துச்சு. அதான் இப்போ எப்படி இருக்காளோன்னு பயமா இருக்கு.” என்று மிருதுளா சொல்லவும், “ஏன்க்கா, உடனே பக்கத்தில இருக்கிற டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போய்க் காட்டி இருக்கலாம்ல!” என்று ஆரா கொஞ்சம் டென்ஷன் ஆக, “இல்லை அம்மு. ஆச்சிதான், கண் திரிஷ்டின்னு சொல்லி சுத்திபோட்டுக் கஷாயம் செஞ்சு கொடுத்தாங்க. அதுக்கு அப்புறம் சரியா போய்டுச்சு.” என்றாள் மிருதுளா.
“அப்புறம் என்னக்கா. ஆச்சிக்கு தெரியாத வைத்தியமா. அதெல்லாம் ஒன்னும் இருக்காது. நீ போய்ப் படு. பாப்பா தனியாவா இருக்கா, அவ அப்பாவோட தான இருக்கா. அவரு பார்த்துப்பார்.” என்று ஆரா தன் அக்காவை சமாதனம் செய்ய, எந்தச் சமாதானத்திற்கும் அவள் மனம் அமைதியாகவில்லை.
“இல்லை அம்மு. ஒரு தடவை போய்ப் பார்த்துடலாம். ப்ளீஸ் டா.”
“என்னக்கா விளையாடுறியா?! மணி இரண்டாகப் போகுது. இப்போ போய் அவங்களை எப்படி டிஸ்டர்ப் செய்றது. இயர்லி மார்னிங் எழுந்ததும் போய்ப் பார்த்துடலாம்.” என்று சொல்லிவிட்டு ஆரா தூங்கபோக, அவளை மிருதுளா விட்டால்தானே.
மிருதுளா மீண்டும் மீண்டும் தன் மன சஞ்சலத்தைச் சொன்னபிறகு சரி என்றவள், “வேணும்னா மொதல்ல கெளதம் சாரோட தம்பிக்கு போன் செஞ்சு கேட்கலாம். எடுக்கலைனா அப்புறம் வீட்டுக்கு போவோம்.” என்றவள் ஜெய்யிற்குப் ஃபோன் போட, ரிங் போய்கொண்டே இருந்தது. மீண்டும் ஒருமுறை முயன்று பார்த்தவள், ஃபோன் எடுக்கப்படவில்லை என்று உதடு பிதுக்க, அதற்கு மேல் அமைதியாக இருக்க முடியவில்லை மிருதுளாவாள். “ப்ளீஸ் வா. அம்மு. ஒரு தடவை போய்ப் பார்த்துட்டு வந்துட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்.” என்று அவள் உறுதியாகச் சொல்ல, “சரி வாக்கா.” என்று ஆரா சொல்லவும், இருவரும் கதவை திறக்கச் சென்றனர்.
கதவு அருகில் சென்றதும் தான், ஆராவிற்கு ஒன்று நியாபகம் வந்தது, “ஒரு நிமிஷம் இருக்கா. நைட் டைம். தனியா வெளிய போககூடாது. நான் போய் ஸ்டிக் எடுத்துட்டு வரேன்.” என்று கூறிவிட்டு அவள் உள்ளே சென்றுவிட. அதுவரை கூடப் பொறுத்துக்கொள்ள முடியாமல், கதவை திறந்து கௌதமின் வீட்டு வாசலுக்குச் சென்ற மிருதுளா, காலிங் பெல்லை அடிக்க ஆரம்பித்துவிட்டாள்.
சில நிமிடங்கள் கழித்தே, கதவு திறக்கப்பட்டது. பனியன், த்ரீ போர்த் பேன்ட்டுடன் கண்களைக் கசக்கிகொண்டு கொட்டாவியை வெளியேற்றியபடி, வந்து கதவை திறந்த கெளதம், மிருதுளாவை அந்த நிமிடம் அங்கே எதிர்பார்க்கவில்லை. அதுவும் தனியாக.
கிரில் கேட்டையும் திறந்துகொண்டு வெளியே வந்தவன், “என்னங்க?!! என்ன ஆச்சு?!! இந்த நேரத்துல வந்து இருக்கீங்க?!! பாட்டிக்கு எதுவும் உடம்பு சரி இல்லையா?!!” என்று பதட்டத்துடன் கேட்க, இவளோ, உள்ளே பார்வையைப் பதித்துக்கொண்டே, “இல்லைங்க. ஆச்சிக்கு ஒன்னும் இல்லை. வந்து, பாப்பாக்கு உடம்பு எப்படி இருக்குன்னு யோசனையா இருந்துச்சு. அவளுக்கு எதுவும் ப்ரோப்ளம் இல்லையே?!” என்று கேள்வியாகக் கேட்டாள்.
அவளை விசித்திரமாகப் பார்த்தவன், “பாப்பாக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லைங்க. அவ நைட்டே சாப்பிட்டு படுத்துட்டா.” என்று பதில் கூற,
“வந்து….மதியமே அவளுக்கு லேசா காய்ச்சல் மாதிரி இருந்துச்சு. அதான். இப்போ எப்படி இருக்கான்னு…..எதுக்கும் நீங்க போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லுங்களேன். ப்ளீஸ்.” என்று கலக்கத்துடன் மிருதுளா சொல்லவும், அவளின் கண்களில் எதைக் கண்டானோ, “சரிங்க.” என்றுவிட்டு உள்ளே சென்றான். மிருதுளாவோ தவிப்புடன் கைகளைப் பிசைந்தவாறு வாசலில் நின்றிருக்க, அப்பொழுதுதான் அங்கு வந்து சேர்ந்தாள் ஆரா.
எதற்காவது உதவும் என்று எப்பொழுதோ, எங்கேயோ வைத்திருந்த கிரிகெட் மட்டையைத் தேடி எடுத்து வருவதற்குள் அவளுக்குப் பல நிமிடங்கள் ஆகிவிட்டது. அதற்குள் மிருதுளா தனியாகக் கதவை திறந்து சென்றது இவளுக்கு எரிச்சலை உண்டாக்கி இருக்க, “என்னக்கா நீ? ஒருநிமிஷம் இருக்கச் சொன்னேன்ல. அதுக்குள்ள எதுக்குக் கதவை திறந்து வெளிய வந்த?? அதுவும் இந்த நடு ராத்திரில. எவனாவது படிகட்டில ஒளிஞ்சு இருந்து கத்தியை காட்டி மிரட்டி இருந்தா என்னவாகி இருக்கும்.” என்று இவள் சொல்லிக் கொண்டிருக்க, இது எதுவும் மிருதுளாவின் காதுகளில் விழவில்லை. கெளதம் எப்பொழுது வருவான் என்று தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வழக்காமாகத் தேஜா, கெளதமுடன் தான் படுத்துக்கொள்வாள். என்றாவது கணினியில் அவனுக்கு வேலை இருக்கும்பட்சத்தில் சேகரோ இல்லை ஜெய்யோ தங்களுடன் அவளைப் படுக்க வைத்துக்கொள்வார்கள்.
அன்றும் அப்படிதான், வேலை இருந்ததால், குழந்தை இரவு உணவு உண்டு தூங்கும் வரை கெளதம் அவளுடன் இருக்க, தேஜா தூங்கியதும் ஜெய்யே தனது அறைக்கு அவளைத் தூக்கிக்கொண்டு சென்றுவிட்டான். குழந்தை தனது அருகில் படுத்திருப்பதால், ஃபோனையும் சைலன்ட் மோடில் போட்டு இருந்தான் ஜெய். அதனாலேயே சற்றுமுன்பு ஆரா கால் செய்யும்பொழுது அவனுக்குக் கேட்கவில்லை.
தற்பொழுது மிருதுளா வந்து சொன்னதும் கெளதம் நேரே தனது தம்பியின் அறைக்குச் சென்று பார்க்க, கட்டிலில் இரண்டு பக்கமும் தலையணையுடன் தேஜா படுத்திருக்க, தரையில் ஜெய் படுத்திருந்தான். சேகர் அவரது தம்பி மகளின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
இரவு விளக்கின் வெளிச்சத்தில் கட்டிலுக்கு அருகில் சென்று, தேஜாவின் நெற்றியில் கைவைத்து பார்த்தான் கெளதம், அடுத்த நொடி அவனுக்குப் பக்கென்றது. ஏனெனில் மிருதுளா சொன்னது போல் குழந்தையின் உடல் நெருப்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அதிர்ச்சியில் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே தெர்மாமீட்டரை எடுத்து வந்து, குழந்தையின் நாக்கிற்கு அடியில் சில நொடிகள் வைத்துவிட்டு, வெளியே எடுத்துப்பார்க்க, அது ஆபாயப் புள்ளியை தாண்டி காட்டியது.
உடனே ஜெய்யை எழுப்பி விஷயத்தைச் சொல்ல, அவனுக்கோ ஆச்சரியம். “நைட் நல்லாதான இருந்தா ண்ணா. அப்புறம் எப்படி?! ச்சே! எனக்குத் தெரியாம போச்சே!!” என்று அவனும் கவலைப்பட, உடனே மருத்துவரிடம் கொண்டுசெல்ல முடிவு செய்துவிட்டு, இருவரும் வேகவேகமாக உடைமாற்றி வந்தனர்.
அண்ணன், தம்பி இருவரும் வேறு உடையில் பதற்றத்துடன் அறையை விட்டு வெளியே வரும்போதே, குழந்தைக்கு ஏதோ பிரச்சனை என்று கண்டுகொண்ட மிருதுளாவிற்கு, கண்கள் கலங்க ஆரம்பித்தது. வேகமாக இருவரும் வெளியே வர, ஜெய் கதவை லாக் செய்து கொண்டிருக்க, கெளதம் மிருதுளாவிடம், “நீங்க சந்தேகப்பட்டது சரிதாங்க. பாப்பாக்கு நல்ல பீவர். தேங்க்ஸ்ங்க சரியான நேரத்தில வந்து சொன்னதுக்கு.” என்றவன், “நானும் ஜெய்யும் ஹாஸ்பிடல் போறோம். நீங்க கொஞ்சம் வீட்டை பார்த்துகோங்க.” என்று சொல்லிவிட்டு நகரப்போக, “நானும் உங்ககூட வரவா? ப்ளீஸ்.” என்று கண்ணீர் கோர்த்த விழிகளுடன் மிருதுளா கேட்க, கெளதம் ஜெய்யை பார்த்தான்.
அதற்குள் இவர்களின் உரையாடலில் இடைபுகுந்த ஆரா, “அக்கா, என்ன சொல்ற நீ!! இந்த அர்த்த ராத்திரியில வெளிய போறேங்குற. ஆச்சிக்கு தெரிஞ்சுது திட்டுவாங்க. அதான் கெளதம் சர் போறார்ல. நாம வேணும்ன்னா அடிக்கடி போன் போட்டு, பாப்பாவோட கண்டிஷன் பத்தி கேட்டு தெரிஞ்சிக்கலாம்.” என்று மிருதுளாவின் காதில் முனுமுனுத்தாள். அவளோ தங்கையின் வார்த்தைகளைக் கவனிக்காமல், கெளதம் என்ன பதில் சொல்ல போகிறான் என்று அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஜெய்யோ, “இல்லை சி…..” என்று சிஸ்டர் என்று பழக்க தோஷத்தில் சொல்லப் போனவன், அந்த வார்த்தையை அப்படியே உள்ளே முழுங்கிகொண்டு, “அதான் நாங்க போறேமே. உங்களுக்கு எதுக்குக் கஷ்டம். நைட் டைம்ல அலைச்சல் வேற. ஆரா சொல்ற மாதிரி நான் வேணும்னா அடிக்கடி ஃபோன் போட்டு பேசுறேன்.” என்றான்.
ஆனால் மிருதுளாவோ, கௌதமை பார்த்து, “ப்ளீஸ். அவ…..அவளுக்கு உடம்பு சரி இல்லாம இருக்கும்போது, என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது. தயவு செஞ்சு நானும் உங்ககூட வரேன். எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. இங்க இருந்தன்னா, பாப்பாக்கு என்னமோ ஏதோன்னு பயந்துட்டே இருப்பேன். ப்ளீஸ்.” என்று தழுதழுத்த குரலில் கேட்க, ஒரு நொடி யோசித்தவன், “சரி வாங்க.” என்றான் மிருதுளாவை பார்த்து.
அடுத்த நொடி ஜெய், ஆராதானவிடம் திரும்பி, “கதவை லாக் செஞ்சுக்கோ. ஆச்சிக்கு சொல்லிடு. யார் வந்தாலும் கதவை திறக்காத. நான் அங்க இருந்து கிளம்பும்போது போன் பண்றேன். பத்திரம்.” என்று போகிற போக்கில் ஒருமையில் பேசிவிட்டு செல்ல, ஆராவிற்குத் தான், மற்றவர்கள் இந்த பேச்சை கவனித்து விடுவார்களே என்று பக்கென்றிருந்தது.
மிருதுளா இதைக் கவனிக்கவில்லை. ஆனால் கெளதம் கவனித்துவிட்டான்.
அவனுக்கு ஜெய்யை பற்றித் தெரியும். அவ்வளவு சீக்கிரத்தில் ஒருமையில் பேசுபவன் அல்ல. அவனைவிடச் சிறுவயது நபர்களாக இருந்தாலும், “வாங்க” “போங்க” என்று தான் பேசுவான். ரொம்ப நெருக்கம் ஆகிவிட்ட பின்தான், ‘வா’ ‘போ’ என்பதெல்லாம். அதிலும் அவன் நண்பர்களைத் தவிர வேறு எவரையும் இன்றுவரை இப்படிப் பேசி பார்த்ததில்லை. தற்பொழுது ஜெய் பேசியதை அவன் மனம் குறித்துக்கொண்டது.
அங்கே பார்வதியோ, தலைவலி காரணமாக மாத்திரை போட்டுக்கொண்டு தூங்கியதால், இங்கே நடந்துகொண்டிருந்த நிகழ்வுகள் அவருக்குத் தெரியவில்லை. ஜெய் சொல்லிவிட்டுச் சென்றது போல வீட்டிற்குள் சென்று கதவை லாக் செய்துவிட்டு, உள்ளே வந்த ஆரா, ஹால் பால்கனி வழியாகக் கீழே பார்த்தாள்.
கீழே வந்ததும், ஜெய் வாட்ச்மேனிடம் சொல்லி வீட்டை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு காரை பார்கிங்கில் இருந்து எடுத்துக்கொண்டு வரவும், கெளதம் மிருதுளாவிடம், “பின்னாடி உட்கார்ந்துகோங்க.“ என்று சொல்லிவிட்டு குழந்தையுடன் முன்சீட்டில் அமரப்போக, “பாப்பாவை நான் வச்சுகிறேன். நீங்க கஷ்டப்படவேண்டாம்.” என்று கைகளை நீட்டினாள் மிருதுளா. இவனுக்கு அவளின் அதீத அன்பு, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒன்றும் சொல்லாமல் அவளிடம் குழந்தையைக் கொடுத்து, அவள் பின்சீட்டில் அமர்ந்ததும், கதவை அடைத்துவிட்டு, இவன் முன்சீட்டில் அமர்ந்துகொள்ள, கார் மருத்துவமனையை நோக்கி சீறிபாய்ந்தது.
அங்கே குழந்தையைப் பார்த்துவிட்டு மருத்துவர் சொன்ன முதல் வார்த்தை, “என்னங்க நீங்க? இவ்ளோ சீரியஸா இருக்கும்போது கொண்டு வந்து இருக்கீங்க!!” என்றுதான். அந்த வார்த்தையில் இடிந்துபோய் அமர்ந்துவிட்டாள் மிருதுளா.