Skip to content
Post Views: 2,753
கற்பனை அத்யாயம் 10
திருமணம் முடிந்து விளையாடும் சில விளையாட்டுகளில் கூட திருமகளுக்கு விட்டுத் தரவில்லை நிவாஸ்.மோதிரம் குடத்துக்குள்ளிருந்து மூன்று முறையும் அவனே எடுக்க,அங்கிருந்த பாட்டி சும்மாக இல்லாமல்,”என்ன ..திரு,இனி உங்க வீட்டுல மாப்புள ராஜியம் தானா?”என்று கேட்டு வைக்க நிவாஸின் முகம் புன்னகை புரிந்தது என்றால் திருமகளின் முகம் வெளிறிப் போனது.
Advertisement
‘ச்சை ,என்ன இது?எதற்க்காக இப்படி நடுங்குகிறேன்.பக்கத்தில் இருப்பவன் என் கணவன் தானே!ஏதோ சிங்கம்,புலியை அருகில் பார்த்தது போல் இப்படி இருக்கிறேனே என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டவள் சற்று நிமிர்ந்து உட்கார்தாள்.
அவளின் முக பாவனைகளை உள்வாங்கியவனுக்கு இன்னமும் சிரிப்புக் கூடிப்போனது. அவனது சிரிப்பை கண்டு தானும் சிரித்தாள் திரு. மதியம் சாப்பாட்டு அறையில் மணமக்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விடுங்கள் என்று நிவாஸின் அம்மா சொன்னபோது மறுப்பேதும் சொல்லாதவன் அவளுக்கு முதலில் வாய் வரை கொண்டு சென்றவன் வேண்டுமென்றே இனிப்பை அவள் புடவையில் சிந்திவிட்டு,”ப்ச்..இன்னும் வாயை ஒழுங்கா திறக்க கத்துக்கலையா திரு?பாரு,இவ்ளோ காஸ்டலி புடவை,அதுவும் முகூர்த்த புடவை. எண்ணெய் கறை விடுமா?” என்று அவளை குற்றவாளியாக்கினான்.விக்கித்துதான் போனது பெண்.
Advertisement
Advertisement
எதற்க்காக இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என்பது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனும் சம்மதம் சொல்லித்தானே இ இந்த திருமணம் நடந்து கொண்டிருக்கிறது.இன்னும் தாலி முடிந்து அரை நாள் கூட ஆகவில்லையே!இவனுடன் எப்படி நான் வாழப் போகிறேன் என்று கேள்வி கேட்ட மனதிடம் என்ன சொல்லி அவள் சமாதானப் படுத்துவாள்?
அவள் இனிப்பை ஊட்டுவதற்காக சற்று நேரம் வாயை திறந்து காட்டியவன், “திரு,அதுக்குள்ள என்ன கனவு உலகத்துக்குள்ள போயிட்ட ,உனக்காக மாமா வைட்டிங் “என்றவாறே அவள் கையில் இருந்த இனிப்பை தானே சென்று வாங்கிக்கொண்டான்.
Advertisement
அங்கே இருந்த நிவாஸின் அக்காவுக்கு திருவை பார்த்து பாவமாகிப்போனது. இன்னும்,இவனுடன் எவ்வளவு இருக்கிறது என்று அவள் மனதில் தோன்றாமல் இல்லை. அவளது எண்ணம் புரிந்தவனாக அவள் கணவன்“இங்கே இன்னும் கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டிருதா எனக்கு பிரஷர் ஏறிடும்“என்று மனைவியின் காதில் முணுமுணுத்துவிட்டு அவ்விடம் விட்டு வெளியே சென்றான்.கணவன் சென்று சில நிமிஷங்களில் நிவாஸின் அக்காவும் வெளியே சென்றுவிட்டாள்.
ஏற்கனவே,நிவாஸிடம் அவனது அக்கா அதிகம் வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கிறாள். அதனாலேயே அவள் எதுவும் வாயைத் திறப்பதும் இல்லை. பிறந்த வீட்டு விஷயங்களில் அதிகம் தலைக்கொடுப்பதும் இல்லை. ஆனாலும்,மனைவியிடமாவது ஒழுங்காக நடந்துகொள்வான் என்று நினைத்திருந்தால்,அதிலும் ம்ஹும்..ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.
வெளியே வந்த மனைவியிடம்,”உன்னோட தம்பி பத்தி பொண்ணு வீட்டு ஆளுங்களுக்கு புரியும் முன்ன கல்யாணத்த முடிச்சு அவ வாழ்க்கையை கெடுத்து விட்டீங்க டி,பொண்ணு பாவம் பொல்லாது” என்று நிவாஸின் அக்காவிடம் அவள் கணவன் சொன்னது சாருவின் அம்மா காதுகளில் விழுந்தது.ஆனால்,சரியாக தமிழ் புரியாததாலும் ,பேசுபவர்கள் யார் என்று முழுதாக தெரியாததாலும் அவர் யாரிடமும் ஒன்றும் சொல்லவில்லை.
காற்று பலமாக நிவாஸின் பக்கம் அடிக்கிறதே!வேறு என்ன சொல்ல முடியும்?
அன்று மாலை மணமக்கள் சாம்பசிவம் வீட்டுக்கு வந்து பால் பழம் சாப்பிட்டுவிட்டு ,நிவாஸின் வீட்டுக்கு சென்று விட்டார்கள். நிவாஸின் அக்கா நேரே தனது குடும்பத்துடன் கல்யாண மண்டபத்திலிருந்தே கிளம்பிவிட்டாள்.வேறெதுக்கும் அங்கே தங்க அவளுக்கு இஷ்டம் இல்லை. திருமணம் முடிந்து திரும்ப வீட்டுக்கு வந்தவர்கள் நிவாஸின் பெற்றோர் ,நிவாஸ் அவனுடன் திருமகள் மட்டுமே!
திருவை கொண்டு வந்து விட சாம்பசிவமும் கண்மணியும் அவர்கள் காரில் பின்னாலேயே வந்தார்கள். அவர்கள் இருவருக்கும் நிவாஸின் அக்கா கூட இவர்களுடன் வராதது அதிசயமாக இருந்தது. மகள் நல்லபடிக்கு வாழவேண்டும் என்று அவர்களது பிரார்த்தனை.
நிவாஸின் வீட்டில் வலது கால் எடுத்து வைத்து உல் நுழைந்து ,பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு ,அன்றே வீட்டினருக்கு பாலும் காய்ச்சி கொடுத்தாள் திருமகள். அவள் அப்பா அம்மா இருவருக்கும் திருப்தியாய் இருந்தது.அவர்கள் கிளம்பிய பிறகு, கீழறையில் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு இரவு ஒன்பது மணிக்கு நிவாஸின் அறைக்கு செல்ல தயாராகச் சொல்லிவிட்டு நிவாஸின் அம்மா தங்கள் அறைக்கு சென்று விட்டார்.
விடியற்காலையில் எழுந்ததும்,ஹோமப்புகையுமாக இருந்ததில் திரு நன்றாக தூங்கிவிட்டாள். நிவாஸ் அவளிருக்கும் அறைக்கு வந்ததையோ ,வெகுநேரம் யோசனையாக அவளை பார்த்துவிட்டு சென்றதையோ அவள் அறிந்திருக்கவில்லை.ஆனால் ,மகன் ,மருமகள் உறங்கும் அறையிலிருந்து வெகுநேரம் கழித்து வெளியே வருவதை நிவாஸின் அம்மா அசூயையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
திரு நன்றாக தூங்குவதை சற்று நேரம் முன்னர்தான் அவர் சென்று பார்த்துவிட்டு வந்தார். மகனை எதுவும் சொல்ல முடியாது.அதனால் மௌனம்.எப்படியும் அவர்கள் இருவரும் இன்னும் ஒரு மாதத்தில் கிளம்பி சென்று விடுவார்கள்.அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை,அவர்கள் பாடு என்று மனதில் நொடித்துக்கொண்டே திருமண மண்டபத்திலிருந்து எடுத்துக்கொண்டு வந்தவற்றை ஒதுக்கி வைக்கத் தொடங்கினார். அவருக்கு உதவி செய்ய நிவாஸின் அப்பா. இன்று வேலைக்காரர்கள் யாரும் வரமாட்டார்கள்.எல்லாவற்றையும் இவர்கள்தாம் பார்க்க வேண்டும். நாளை காலையில் ரெஜிஸ்டர் ஆபீஸ் சென்று திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்.
அதற்க்கான ஏற்பாடுகளை சாம்பசிவம் ஏற்கனவே செய்து விட்டதால் ,நிவாஸ் வீட்டுக்காரர்களுக்கு கொஞ்சம் ஆஸ்வாசம்.
அன்று இரவு இரவு உணவு முடித்துவிட்டு,தனது மாமியார் தந்த நீலநிற மைசூர் சில்க் புடவையை வாங்கிக் கொண்டு தனக்கு கொடுக்கப் பட்டிருந்த அறைக்கு வந்தவள் மனதில் மெல்லிய படபடப்புடன் கூடிய சலனம். தன் கூட தோழிகளும் இல்லை,நம் வீட்டினரும் இல்லை. நாமே ஒப்பனை செய்துக்கொள்ள வேண்டியதுதான் என நினைத்துக்கொண்டே குளித்து முடித்தவள் மெல்லிய ஒப்பனைகளுடன் அந்த புடவையையும் உடுத்திக் கொண்டாள்.
‘அவரிடம் எப்படி பேசுவது,இதுவரை அதிகமாக நான் அவருடன் பேசியதில்லையே,இப்போது தனிமையில் சந்திக்க வேண்டும்‘ என என்னென்னவோ எண்ணக் கலவைகள். ஒரு ஆணுடன் தனது தனிமையை,இளமையை பகிர்ந்து கொள்ளவேண்டும். அவன் எனது கணவன் என்று சிரித்துக்கொண்டவள் நிதானமாக வெளியே வந்து தனது மாமியார் மாமனார் இருவரையும் வணங்கி விட்டு,நேரே தனது கணவன் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள் .
அவளை மேலே கீழே பார்த்தவன் ,”யூ லுக் கர்ஜியஸ்‘ , என்று அவளை லேசாக அணைத்து விடுவித்தான். பிறகு ,”எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு. தூங்கலாமா.. ” என்றவன் நிஜமாகவே தூங்க ஆரம்பித்தும் விட்டான். என்னென்னவோ எதிர்ப்பார்ப்புகளுடன் உள்ளே வந்தவளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசனை ஓடியது.
தூங்குபவனை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தானும் கட்டிலின் அடுத்த பக்கம் போய் படுத்துக்கொண்டாள்.
அடுத்த நாள் காலை எந்த மாற்றமும் நிகழாமல் தான் திருமகளுக்கு விடிந்தது. அருகில் உறங்கியவன் கூட விடிகாலையிலேயே எழுந்து தனது ஜிம்முக்கு சென்றுவிட்டான். தனது துணிகளுடன் குளியலறைக்குள் புகுந்தவளுக்கு,ஏமாற்றம் தாக்க அழுது தீர்த்தாள். இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது என்று அவளுக்கு தெரியவில்லை.
ஒருவேளை, திருமணம் நிகழ்ந்து ஒரு நாள் கூட ஆகாதாதால் இப்படி இருந்திருக்கலாம் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக்கொண்டாள்.அவள் மனது அவளை கேட்டது , “உன்கிட்ட கலந்து பேசி, ரெண்டு பேருமா எடுக்க வேண்டிய முடிவு இது.அவர் பாட்டுக்கு தூங்கறேன்னு சொல்லிட்டு தூங்கி போனா,புது இடம்.புது மனுஷங்க.இவ எப்படி எடுத்துப்பான்னு தோணலியா“
மூளையோ,அப்போ நீ ***** அதையெல்லாம் எதிர்பார்த்தியா ?என்றது. இது பற்றிய கன்னிப்பருவத்து எதிர்பார்ப்புகள் ஒன்றும் தவறில்லையே! ஒருவழியாக தன்னை தயார்படுத்திக்கொண்டு வெளியே வந்தவள் கண்கள் கணவனைத் தேடி களைத்துப் போனது. ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தவன் தனக்கான ப்ரோட்டீன் ஷேக்கை குடித்துவிட்டு தனது அறைக்குள் புகுந்துவிட்டான் .
இதோ இன்னும் சற்று நேரத்தில் இருவரும் சார் பதிவாளர் அலுவலகம் சென்றாக வேண்டும்.அங்கே வேலையை முடித்துவிட்டு அடுத்து திருமகள் வீட்டுக்கு மறு விருந்துக்கு செல்லவேண்டும். இரண்டு நாட்கள் அங்கே தான்.திருமகளுக்கு சற்றே சந்தோசம் எட்டிப் பார்த்தது. காலை சிற்றுண்டியை முடித்தவள் வேகமாக வெளியே செல்வதற்குத் தயாரானாள்.
சார் பதிவாளர் அலுவலகத்தில் சாம்பசிவமும் கண்மணியும் வந்திருந்தார்கள்.சாருமதியின் பெற்றோர் வந்திருப்பதால் அவளும் நரேந்திரனும் வீட்டிலேயே தங்கிவிட்டார். வேலை முடிய மணி பதினொன்றாகி விட்டது. மகனுடன் மறுவீட்டு விருந்துக்கு வந்த நிவாஸின் பெற்றோர் விருந்து முடிந்து கிளம்பிவிட, அங்கேயே தங்கிவிட்டார்கள் மண மக்கள்.
நிவாஸால் இயல்பாய் அங்கே பொருந்தி இருக்க முடியவில்லை. சாரு வீட்டுப்பெண்ணாய் உபசரிக்க,தான் அந்நியப்பட்டுப் போனதாய் உணர்ந்தாள் திருமகள். நரேந்திரன் தனது தங்கையையோ,அவள் கணவனையோ பெரியதாக கண்டுகொள்ளவில்லை.மதியம் உணவு முடிந்தவுடன் அலுவலகம் புறப்பட்டுச் சென்றுவிட்டான். அவன் செய்கையில் சாம்பசிவத்திற்கு கோவம்தான்.ஆனால் ,எப்படியோ இப்போதுதான் அவன் சென்னை வந்திருப்பதும் இங்கே தங்கியிருப்பதும் சாத்தியமாகியுள்ளது.ஏதாவது சொல்லப் போய் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டால் என்ன செய்ய முடியும்?என்று வாயைத் திறக்காமல் இருந்து விட்டார்.
சாருவாவது வீட்டில் இருக்கிறாளே என்று கணவனிடம் அங்கலாய்த்தாள் கண்மணி. சாருவுக்கும் இவையெல்லாம் காதில் விழுந்தது தான் .ஆனால் ,அவள் எதையும் கேட்டதாக காண்பித்துக்கொள்ளவில்லை. அவளிடமும்,அவள் வீட்டினரும் புகுந்த வீட்டினர் சகஜமாகவும், சரியான மரியாதை கொடுத்தும் நடத்துவதே அவளுக்கு போதுமானதாக இருக்க, எதையாவது பெரியது படுத்தி மன நிம்மதியை கெடுத்துக்கொள்ள அவளுக்கென்ன பைத்தியமா என்ன?
அடுத்த நாள் காலை சாகேத்தின் வீட்டில் பந்தக்கால் நடும் வைபவம். மாலை ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிய நரேன் நேரே சாகேத் வீட்டுக்கு வந்து விட்டான். இருவருமாக பேசியபடிக்கு சாகேத்துக்கு மண்டபத்தில் தேவைப்படுபவற்றை சூட்கேஸில் அடுக்கத் தொடங்கினார்கள். நடுவில் மனைவிக்கு அழைத்து தான் சாகேத் வீட்டில் இருப்பதை தெரியப்படுத்தவும் நரேன் தவறவில்லை. பார்த்துக்கொண்டிருந்த சாகேத் சிரிக்கத் தொடங்கிவிட்டான்.
சாகேத் வீட்டிலேயே நரேந்திரன் இரவு உணவையும் முடித்துவிட்டு கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தான். அவன் முகத்தில் பிடித்தமின்மை அப்பட்டமாய் தெரிய, அண்ணனின் முகம் கண்ட திருவுக்குள் கண்மண் தெரியாத கோவம் வந்தது. வீட்டுக்கு வந்திருக்கும் மாப்பிள்ளையை அண்ணன் மரியாதைக்குறைவாக நடத்துவதாகவே அவளுக்குப் பட்டது.
நிவாஸ் நகைக்கடையில் நரேந்திரனை அவமானப்படுத்த்தியது திருவுக்கு தெரியாது.தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பாளோ! நிவாஸ் இப்போதும் நரேந்திரனை கண்டுகொள்ளவில்லை. நரேந்திரனுடன் பேசவும் முயற்சி செய்தானில்லை.ஹாலில் வெகுநேரம் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தவன் நரேனை பார்த்ததும்,”திரு எனக்கு தூக்கம் வருது.உன்னோட ரூம் போலாம் “என்றுவிட்டு அங்கிருந்து நகர.அனைவருக்குமே சங்கடமாகிப் போய்ட்டு.
நரேந்திரனும் கண்டுகொள்ளாத பாவனையில் தன்னறை புகுந்தான்.சாருவின் பார்வை அவனை ஆயிரம் கேள்விகள் கேட்க, எதற்கும் பதில் சொல்லாதவன் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த அவளது கண்களில் லேசாக முத்தமிட்டான்.அந்த முத்தத்தில் தன்னை தொலைத்தவள் கணவனின் கரங்களில் மாலையானாள் . அன்றைய அவர்களது சங்கமத்தில் அதுவரை காணாத சந்தோசம் ,முழுமை இருந்ததாக இருவருமே உணர்ந்தார்கள் . அன்றைய கூடலின் பரிசு விரைவிலேயே அவர்களுக்கு கிடைக்க கூடும் என்று நினைத்தவாறே இருவரும் உறங்கிப்போனார்கள்.
திரு தன் அறைக்கு செல்லும்பொழுது நிவாஸ் தூங்க ஆரம்பித்திருந்தான். திருமகளின் முகம் யோசனையானது. கணவன் நடந்து கொள்ளும் முறைபற்றி அவளுக்கு லேசான சந்தேகம்.அவனது ஒட்டா தன்மையில் குழப்பம்.இவற்றை தன் பெற்றோரிடம் சொல்லவும் தயக்கம். என்னவென்று சொல்வது என கூச்சம்.திருமகள் இன்னும்கொஞ்சநாள் பார்த்துவிட்டு தீர்மானிக்கலாம் என்று முடிவுசெய்து அமைதியானாள். நேற்று உறங்கியவளால்,இன்று உறங்க முடியவில்லை.
error: Content is protected !!