தன் முன் ஒன்றும் அறியாத பாவத்துடன் தலைக்குனிந்து நின்றிருந்தவனின் கன்னத்தில் ‘பளார்’ரென அறைந்திருந்தார் ஜெயதேவன் என்கிற ஜெய்தேவ்.
தன் ஆசை மகன் அடிவாங்குவதை கண்டதும், “என்னங்க?” என பதறிக்கொண்டு ஓடிவந்தார் தெய்வானை. அவரை அருகே வரவிடாது, தன் சீற்றப்பார்வையால் தடுத்து நிறுத்திய ஜெயதேவ், “ஏன்டா என் மானத்தை வாங்கனும்ன்னே, முடிவோட இருக்கியா நீ?” என்றார் ஆத்திரத்துடன்.
இறுதி வருட படிப்பை முடித்துக்கொண்டு தோழிகளுடன் வெளியே சென்றிருந்த அவ்வீட்டின் கடைக்குட்டி மதுதேவா, வீட்டிற்குள் நுழைகையில் கண்ட காட்சியில், “இன்னைக்கு என்னப்பா செஞ்சான் அண்ணன்?” என்றாள் இலகுவாய். என்றாவது ஓர்நாள் இப்படி நடந்தால் தானே அதிர்ச்சியோ, படபடப்பபோ வருவதற்கு?!
“சொல்றமாறி காரியமா இது? இவனுக்கு மட்டும் ஏன்தான் புத்தி இப்படி போகுதோ? நிக்குறான் பாரு, ஒன்னும் தெரியாதவனாட்டம்… இவனை பார்க்க பார்க்க, அப்படியே இழுத்து வச்சு அறையணும் போல இருக்கு!” என மீண்டும் அவனை அறையப்போக, “ஏங்க, என்னனு சொன்னாதானே தெரியும்? சும்மா சும்மா அடிக்கப்போறீங்க அவனை?” என குறுக்கே வந்தார் தெய்வானை.
“வர வர அவனை அடிக்குறதுக்குன்னே ஏதாவது காரணம் தேடுவீங்க போல” மேலும் அவர் சொல்ல, ஜெயதேவிற்கு சீற்றம் மேலேறியது.
“எனக்கென்ன பைத்தியமா? இவனை அடிச்சுட்டே இருக்க? தோளுக்கு மேல வளர்ந்தவனை கை நீட்டக்கூடாதுன்னு நான் நினைச்சாலும் இவன் விடுறானா?” மீண்டும் அவர் பார்வை எதிரில் கைக்கட்டி தலைக்குனிந்து பவ்வியமாய் நின்றிருந்தவனின் மீது விழ, அவன் நிற்கும் தோரணையை பார்த்து அவர் ரத்தம் கொதித்தது.
“உங்களுக்கு பைத்தியம் தாங்க! பொறுப்பா கம்பனியை கவனிச்சுட்டு இருந்தவனை படிக்க போடான்னு அனுப்புனீங்க, வெளிநாடு போறேன்னு ஆசையா கேட்டப்போ, அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை கம்பனியை கவனின்னு இங்கேயே உட்கார வச்சீங்க! அடுத்து கல்யாணம் பண்ணு, கல்யாணம் பண்ணுன்னு இதுநாள் வரை அவனை போட்டு பாடாப்படுத்தி, போன வாரம் கூட ஒரு பொண்ணு பார்த்து பேசிட்டு தானே வந்தோம்!?
நீங்க சொல்ற எல்லாம் தான் செய்றானே! முப்பது வயசுல எந்த பையன் இப்படி அப்பா பேச்சை கேட்டுக்கிட்டு, அவர்க்கிட்ட அடியும் வாங்கிக்கிட்டு இப்படி கையை கட்டி நிக்குறான்?” தெய்வானை மகனுக்காய் பரிந்துக்கொண்டு வந்தார்.
தாயும் தந்தையும் வாக்குவாதம் நடத்த, மதுதேவா தனது ஆப்பிள் டேபை எடுத்து வீடியோ காலை இயக்கியிருந்தாள். மறுமுனையில் “ஹாய் குட்டிமா! என்ன காலைலேயே கூப்பிட்டுருக்க?” என டையை தன் கழுத்தோடு பிணைத்துக்கொண்டே சிரித்த முகமாய் கேட்டான் கிருஷ்ணதேவ். அவ்வீட்டின் மூத்த வாரிசு!
“அண்ணா, உனக்கு தான் மார்னிங்! இங்க எவனிங் ஆறு மணி தான் ஆகுது!” என்ற மது, “இன்னைக்கும் நம்ம வீட்ல ஒரு பஞ்சாயத்து! அதை அமெரிக்கால இருக்க உனக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ணலாம்ன்னு தான் கூப்பிட்டேன்!” என சொல்லும்போதே, கையில் தன் ஒரு வயது குழந்தையை சுமந்தபடி திரைக்குள் தலையை நீட்டினாள் திவ்யா.
“வாவ்! இன்னைக்குமா? எங்கே காட்டு காட்டு!!” என அவள் ஆர்வமாய் கேட்க, “என் தம்பி திட்டு வாங்குறது உங்களுக்கெல்லாம் என்ஜாய்மென்ட்டா இருக்கா?” என மெலிதாய் முறைத்தான் கிருஷ்ணா.
கையில் டேபை எடுத்துக்கொண்டே ஹாலுக்கு சென்ற மது, “இதென்ன இன்னைக்கு நேத்தா நடக்குது? உஷ்! நான் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன்! சோ, அமைதியா வேடிக்கை பாருங்க” என்றாள் கிசுகிசுப்பாய்.
தன் உடன்பிறந்தவன் திட்டு வாங்குவதை பார்க்க, தன் தங்கையும், மனைவியும் காட்டும் ஆர்வத்தை கண்டு சலித்தாலும், ‘இன்னைக்கு என்னத்த செஞ்சு திட்டு வாங்குறான்னு தெரியலையே’ என காரணத்தை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம், அவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதையும் தாண்டி, கிருஷ்ணாவை வேடிக்கை பார்க்க வைத்தது.
இருகைகளையும் நெஞ்சின் அருகே கட்டிக்கொண்டு, சற்றே முன்புறம் குவிந்த தோள்களுடன் தலையும் தொங்கிப்போய் அவன் நின்ற கோலம் கிருஷ்ணாவுக்கே சிரிப்பு மூட்டுகையில், திவ்யாவும் மதுவும் வெளிப்படையாகவே சத்தமின்றி சிரித்தனர்.
‘நிக்குறான் பாரு, பச்சப்புள்ள மாறி!’
ஜெயதேவோ, “கல்யாணமே பண்ண மாட்டேன்னு மூணு வருஷமா உயிரை எடுத்தான்! இந்த லவ்வு கிவ்வாது ஏதாவது இருந்தா சொல்லித்தொலன்னு கேட்டா, நாய்க்கு அதுக்கு கூட வக்கு இல்ல” என அவர் சொல்கையில், என்ன முயன்றும் மதுவும் திவியும் சிரித்துவிட்டது வெளியில் கேட்டுவிட, நின்றுக்கொண்டிருந்தவன், சட்டென திரும்பி மதுவை முறைத்ததில், “அங்க என்னடா பார்வை? அங்க என்ன பார்வை!” என அவன் தலையிலேயே தட்டினார் ஜெயதேவன்.
“சரி, நம்மலாவது ஒரு பொண்ணைப்பார்த்து கட்டிவச்சுடலாம்ன்னு நினைச்சா, ஒருத்திக்கும் உன்னை பிடிக்கல! பொண்ணு பார்க்க போறதும், அந்த பொண்ணு ‘வேண்டாம்’ன்னு சொல்றதுமாவே போய்க்கிட்டு இருந்துச்சு!
இப்போதான் என் பிசினெஸ் கலீக் ஒருத்தன் அவனே முன்வந்து பொண்ணு தரேன்னு சொன்னான்! நானும் ஜாதி குலம் மொழின்னு எதையும் பார்க்காம தலையாட்டுனேன்! பொண்ணு பார்க்க போனது தான்! வழக்கம் போல பொண்ணு இவனை பிடிக்கலன்னு சொல்லிடுச்சு!” என அவர் முடிக்கையில்,
“இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்லி அவன் மனசை கஷ்டப்படுத்துறீங்க? என் பையன் அழகுக்கு என்ன குறைச்சல்? ஒருத்திக்கும் கண்ணு தெரியல! அதுக்கென்ன பண்றது?” என்றார் தெய்வானை.
“இத்தனை நாளா நானும் அப்படிதானே நினைச்சுட்டு இருந்தேன்! இப்போதானே எதனால பொண்ணுங்க எல்லாம் இவனை வேண்டாம்ன்னு சொல்றாங்கன்னு தெரியுது!” என அவனை வெறித்தபடி சொல்ல,
“பில்ட்அப் தான் பலமா குடுக்குறீங்களே தவிர, என்னன்னு சொல்ல மாட்டேங்குறீங்க!” தெய்வானை சலித்துக்கொண்டு சோபாவில் அமர, “இன்னைக்கு நான் ஒரு பிசினஸ் பார்ட்டிக்கு போனேன்!” என ஜெயதேவன் ஆரம்பித்ததும்,
“நான்தானே புது கோட் எடுத்து உங்களுக்கு மாட்டிவிட்டு அனுப்புனேன்! அப்புறம் ஏன் புதுசா ஆயா வடை சுட்டுச்சுன்னு கதை சொல்றீங்க” என்றார் தெய்வானை. ஜெயதேவிற்கு கோவம் சுறுசுறுவென ஏற, அதை அவர் முகமே காட்டிக்கொடுத்தது.
கிருஷ்ணா, “ஹையோ, இந்த அம்மா கொஞ்சம் பேசாம இருந்தா தான் என்ன?” என புலம்ப, “உங்களைத்தவிர உங்க குடும்பத்துல எல்லாருக்கும் ஓட்டை வாய் தானே!!” என கிளுக்கி சிரித்தாள் திவ்யா. கிருஷ்ணா முறைக்க, “அண்ணீ…!!!” என பொய் கோவம் காட்டினாள் மது.
ஜெயதேவனுக்கு கோவம் ஏறுவதை கண்டதும், “சரி மேல சொல்லுங்க, பார்ட்டிக்கு போனீங்க, அங்க என்ன ஆச்சு?” என்றார் தெய்வானை தணிவாய்.
“போன இடத்துல சில பேரு என்னைப் பார்த்து நக்கலா சிரிச்சமாறியே இருந்துச்சு! என்னோட பிரம்மைன்னு நான் நினைச்சா, கொஞ்ச நேரத்துல ஒவ்வொருத்தரா வந்து என்கிட்ட துக்கம் விசாரிக்குறானுங்க! அதுவும் எகத்தாளமா! அந்த பட்டாணிக்காரங்க மத்தில ஒரு தொழிலதிபரா நான் வளர்ந்து நிக்குறப்போ, என்னைப்பார்த்து அவனுங்க சிரிக்க இவன் ஒரு காரணமா இருக்கலாமா?” என அவர் ஆவேசமாய் பேசிக்கொண்டிருக்க,
அவர் கோவத்துக்கு காரணமானவனின் அலைபேசி ‘வர வர நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்லை தா…ங்க முடியலைடா சாமி!!’ என கவுண்டமணி கவுண்டரில் அலற, அவசரமாய் அதை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து, அணைத்துவிட்டு ‘பெக்க பெக்க’ என விழிப்பவனையும், அதற்கு ஜெயதேவின் முறைப்பையும் கண்டு, திரையில் இருந்த திவ்யா அடக்க மாட்டாமல் சிரித்தாலென்றால், நேரில் பார்த்துக்கொண்டிருந்த மதுவுக்கு சிரித்து சிரித்து கண்ணில் நீரே கோர்த்துக்கொண்டது.
தெய்வானை எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “அப்பா சீரியஸா பேசுறப்போ என்னடா இது விளையாட்டுத்தனம்?” என கண்டித்து(!?)விட்டு, “நீங்க மேல சொல்லுங்க, எதுக்கு சிரிச்சாங்க எல்லோரும்?” என்றார்.
மேசை மீதிருந்த நீரை எடுத்து ஒரு மூச்சில் அருந்தியவர், தன்னை சமன் செய்ய முயன்றபடி, “உங்க பையனுக்கு ‘ஆண்மை’ இல்லையாமே! அதனால தான் இன்னும் கல்யாணம் செய்யாம இருக்கீங்களாமே? எதாவது நல்லா டாக்டரா பார்த்து ட்ரீட்மென்ட் எடுக்கலாமேன்னு கேட்குறாங்க!” என அவர் சொல்லி முடிக்க, அங்கிருந்தவர்களின் முகத்தில் இருந்த சிரிப்பு அப்படியே உறைந்துப்போனது.
திரைக்குள் இருந்த கிருஷ்ணா அதிர்ச்சியில் இருக்க, திவ்யாவின் சிரித்த முகம் அப்படியே இருண்டுப்போனது.
அதற்குமேல் ஜெயதேவன் பேசுவதற்குள், “நம்ம பையனை பத்தி ஒருத்தன் தப்பா சொன்னா நீங்க கேட்டுட்டு வந்து நிக்குறீங்க? இந்நேரம் இதை கிளப்பிவிட்டவனை கண்டுப்பிடிச்சு நாலு அறை விடுறது இல்லையா?” என தெய்வானை எகிற,
“அதைத்தாண்டி நான் செஞ்சுட்டு இருக்கேன்!!” என ஜெயதேவன் சொன்னது விளங்க, சில நிமிடங்கள் பிடித்தது.
புரிந்த பின்னோ, அப்பாவிப்போல நின்றிருந்தவனின் மீது ஆத்திரம் பொங்கியது தெய்வாவிற்கு. தனக்கு முதுகுக்காட்டி நின்றவனை ஒரே திருப்பலில் தன் பக்கம் திருப்பி, “அப்பா சொல்றது உண்மையாடா? நீதான் இப்படி சொன்னியா?” என கேட்க, சற்றும் தாமதிக்காமல், ‘ஆம்’ என தலையசைத்தான் அவன்.
அடுத்த நொடி, தெய்வாவின் கரம் அவன் கன்னத்தில் வேகமாய் இறங்க, அவரை வார்த்தைக்காக கூட ஒருவரும் தடுக்க முனையவில்லை.
“எதுக்குடா இப்படி சொன்ன?” அவன் சட்டையை பிடித்து கோவமாய் வினவினார் தெய்வானை. மனைவியின் கோவமுகம் கண்ட பின்னரே ஜெயதேவின் சீற்றம் இறங்கியது.
திரையில் இருந்த கிருஷ்ணனும் சத்தமாய், “சொல்லுடா! எதுக்காக இப்படி செஞ்ச?” என கேட்க, “எனக்கு பொண்ணு பிடிக்கல!” என்றான் அவன் மெலிதாய்.
மதுதேவா, “பொண்ணு பிடிக்கலன்னா எங்கக்கிட்ட சொல்லலாம்ல? இப்படி யாரு உன்னை தப்பா சொல்ல சொன்னது?” என தமையனையே அதட்ட, “சொன்னது அத்தோட போயிருந்தாக்கூட பரவால்ல! அந்த பொண்ணு அவ அப்பன்க்கிட்ட சொல்ல, அவ அப்பன் அதை நாலு பேருக்கிட்ட சொல்லன்னு விஷயம் பிசினஸ் சர்க்கிள் முழுக்க பரவிடுச்சு! எப்போடா விழுவான், பரிகாசம் பண்ணலாம்ன்னு காத்துகிட்டு இருக்க கூட்டம் இப்போ விஷயம் கிடைச்சதும் இதைவச்சே என்னை மட்டம் தட்டுறானுங்க” என்றார் ஜெயதேவ் ஆற்றாமையுடன்!
தெய்வானை, “புள்ளையாடா நீயெல்லாம்? இதுவரைக்கும் சின்ன சின்னதா ஏதாவது செஞ்சு அப்பாக்கிட்ட திட்டு வாங்கும்போதெல்லாம் உன்னை காப்பாத்தி விட்டு, நான் தப்பு பண்ணிட்டேன்! நான் குடுத்த செல்லம் தான் எதையும் யோசிக்காம இப்படி உன்னை செய்ய வச்சுருக்கு! இது என்ன உன்னோட போய்டும்ன்னு நினைச்சியா? அடுத்து உனக்கொரு தங்கச்சி இருக்கா! அவளுக்கு மாப்பிள்ளை பாக்கணும்ன்னா இந்த பிசினஸ் சர்கிள் தாண்டி நம்ம ரேஞ்சுக்கு எங்க போய் தேட முடியும்! அதை விடு! இனி எவனாவது உனக்கு பொண்ணு குடுப்பானாடா? அப்படியே குடுக்க வந்தாலும், காத்து வாக்குல இந்த விஷயம் அவங்க காதுக்கு போறப்போ யாருதான் துணிஞ்சு பொண்ணு தரேன்னு நிப்பா?”
கிருஷ்ணா தன் பங்கிற்கு, “நீ தப்பு பண்ணிட்டு மாட்டுறப்போ எல்லாம் உனக்கு நாங்க சப்போர்ட் பண்ணது இதுக்கு தானாடா? கல்யாணம் வேண்டாம்ன்னா நேரா சொல்லணும்! இது என்ன மட்டமான ஐடியா? ச்சை நீயெல்லாம் ஒரு தம்பி எனக்கு!!” என்றவன் இணைய அழைப்பை கோவத்துடன் துண்டித்துவிட்டான்.
மதுதேவா அசூயைக்கொண்ட முகத்துடன், “அந்த ரீனா, தீப்தி எல்லாம் இனி என்கிட்ட இதை கேக்குறப்போ நான் எப்படி பேஸ் பண்ணப்போறேனோ தெரியல! என் முன்னாடியே நக்கலா பேசுவாங்க! என்னால எதுவுமே சொல்ல முடியாது” என சொல்ல,
“இனி… இப்படி.. செய்ய மாட்டேன்” என தட்டுத்தடுமாறி சொன்னான் அவன்.
“இனி இப்படி செய்ய மாட்டியா?” என சினமாய் வினவிய ஜெயதேவன், “இனி இந்த வீட்ல நீ இருந்தா தானே? ஒவ்வொரு முறையும் உன்னை மன்னிச்சு மன்னிச்சு விட்டதால தானே உனக்கு கொழுப்பு ஏறிக்கிட்டே போகுது! இந்த முறை பத்து நாள், ஒரு மாசம் இல்லை! ஒரு வருஷம் ஆனாலும் சரி, இந்த வீட்டுக்கு இனி நீ வரக்கூடாது! உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்றார் உறுதியாய்.
“அ..ப்…பா…” அவன் விக்கித்து அழைக்க, “இந்த முறை நான் உனக்காக பேசப்போறது இல்லை! அவர் முடிவு தான் என் முடிவும், முதல்ல இந்த வீட்டை விட்டு வெளில போ நீ! அப்போதான் வாழ்க்கைன்னா என்னனு புரியும்! உருப்புடவும் செய்வ நீ!” என தெய்வானையும் சொல்லிட, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான் அவன்.
“அ…ம்…மா…” அவன் அழைக்க, அவன் முகத்தைக்கூட பாராது திரும்பிக்கொண்டார் தெய்வானை.
மதுதேவா, “நீ செஞ்ச வேலைக்கு அப்பா உன்னை வெளில போன்னு மட்டும் சொல்றதே பெருசு! அதனால ஒழுங்கா இங்கிருந்து போய்டு! இன்னும் இந்த ஊருல நின்னுக்கிட்டு அவரை அவமானப்படுத்தாத!” என்றாள்.
அவன் அப்படியே நிற்க, அவன் கழுத்தைப்பிடித்து, “போடா வெளில” என தெய்வானையே தள்ளிவிட, வாசலில் சென்று விழுந்தவனை கண்டு கொஞ்சமும் இறங்காது, திறந்திருந்த கதவை ‘முகத்தில் அறைவதை’ போல அடித்து சாற்றினாள் மதுதேவா.
‘விடுகதையா இந்த வாழ்க்கை!!!
விடைத்தருவார் யாரோ?
உனது ராஜாங்கம் இதுதானே, ஒதுங்கக்கூடாது நல்லவனே!
தொண்டுகள் செய்ய நீ இருந்தால், தொல்லை நேராது தூயவனே!’
விழுந்தவன் மெல்ல எழுந்து சென்றான்.
அவன்…. ஆதித்ய தேவ்!
“தேவா செராமிக்ஸ்” சின்ன முதலீட்டில் தொடங்கி, இந்நிலைக்கு சமுதாயத்தில் ஜெயதேவனை தொழிலதிபராய் உயர்த்தியிருக்கும் வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனம்.
‘பூஞ்சோலை’ எனும் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர், திருமணத்தின் பின்னே தன் நண்பனுடனான சொத்துத்தகராறில் ஊரை விட்டு வந்து, மொழித்தெரியாத ‘வடமாநிலத்தில்’ இத்தொழிலை துவங்கி வெற்றிகரமாய் அதை நடத்திக்கொண்டிருப்பவர்.
வெளியே நவநாகரிகமாய் தெரிந்தாலும், அவர் தன் வீட்டிலும், மனதிலும் இன்னமும் கிராமத்தான் தான்! தன் மூன்று பிள்ளைகளையும் அப்படியே தான் வளர்த்திருந்தார்.
மூத்தவன் கிருஷ்ணதேவ் தந்தை சொல் மட்டுமல்ல, யார் சொல்லும் தட்டாதவன். பொறுப்புள்ள பிள்ளையை யாருக்கு தான் பிடிக்காமல் போகும்? அவன் இஷ்டப்பட்ட படிப்பு முதல், இஷ்டப்பட்ட பெண் வரை அத்தனையும் ஜெயதேவன் அமைத்துக்கொடுக்க, தந்தை தொழிலை விடுத்து, சில வருடங்கள் வெளிநாட்டில் வேலைப்பார்க்க வேண்டும் என அவன் சொன்னதும் உடனே ‘சரி’ என சொல்லி அனுப்பி வைத்தார்.
கடைக்குட்டி மதுதேவா ஆளுக்கு தகுந்தார்ப்போல சமத்தாய் நடந்துக்கொண்டு ‘நல்லப்பிள்ளை’ என்ற பெயரை எளிதில் வாங்கிவிடும் திறமைசாலி. நான்கு வருட பொறியியல் படிப்பை கடந்த மாதம் முடித்தவள், சில வருடங்கள் தந்தையை தொழிலில் பங்கெடுக்க விரும்புவதாய் சொல்ல, அவள் திருமண பேச்சு இப்போதைக்கு வேண்டாம் என அவள் போக்கிற்கு விட்டுக்கொடுத்தார் ஜெயதேவன்.
பிள்ளைகளின் விருப்பதை பிரதானமாய் நினைக்கும் ஜெயதேவன், தன் நடுப்பிள்ளையான ‘ஆதித்யதேவிற்கு’ மட்டும் ‘எம்டனாக’ இருப்பது அவனது நடத்தையால் மட்டுமே!
இவர் ‘தெற்கு’ என்றால், அவன் ‘வடக்கு’ என்று நிற்பதே சிறுவயது முதல் வாடிக்கை என்பதால், தெய்வானை தான் எப்போதும் இருவரின் நடுவே வந்து தீர்ப்பு சொல்லி சமாதானம் செய்யும் ‘ரெப்ரீ’ வேலையை முப்பது வருடமாய் சலிப்பின்றி செய்து வருகிறார்.
அவரிடம் அடிவாங்குவதோ, திட்டுவாங்குவதோ, ஏன் வீட்டை விட்டு வெளியேறுவதோ! எதுவுமே இந்த ஆதித்ய தேவிற்கு புதிதல்ல! ஏனோ இம்முறை தந்தையின் சீற்றம் சற்று அதிகமாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு!
நேரம் கழிந்து, இருள் கவிழத்தொடங்கியது. இரவு மணி பதினொன்றை நெருங்கும் நேரம் ‘தேவா வில்லா’வின் பின்ப்பக்க காம்ப்பவுண்ட் சுவரின் மீது விழுந்தது ஒரு ஏணி!
அந்த ஏணியில் கால் பதித்து கவனமாய் ஏறியது ஓர் உருவம்! மேல்பக்க சுவரை அடைந்ததும், உடைந்த கண்ணாடிகள் போட்டு அபாயகரமாய் இருந்த மதிலில் தோளில் வைத்திருந்த கனமான சாக்கை போட்டு விரிக்க, கீழிருந்து ஓர் குரல்.
“சீக்கிரமா ஏறேன்டி! எவ்வளவு நேரம்?” தெய்வானையின் குரல் அது!
“ப்ச்! அப்போ நீ வந்து ஏறு” என முறுக்கிக்கொண்டது மதுதேவாவே!!
“சரி சரி என் கண்ணுல நீ! சீக்கிரம் போடி” என தெய்வா மகளை கொஞ்ச, மதில் மேல் ஏறி அமர்ந்த மதுவிடம் கீழிருந்து ஒரு பையை நீட்டினார் தெய்வா.
“எட்டலம்மா!!”
“ட்ரை பண்ணுடி”
“ம்ஹும்! எட்டல” மதுவுக்கு அன்னையின் கரம் எட்டாமல் போக, கட்டியிருந்த புடவையை அள்ளி இடுப்பில் சொருகிக்கொண்டு தன் கனத்த சரீரத்தை தூக்கிக்கொண்டு அந்த ஏணியில் ஏறினார் தெய்வா.
பாதி ஏணியில் அவர் ஏறியதும், அவர் கையில் இருந்த பை மதுவின் கரத்தை அடைய, அதை மறுப்பக்கம் சுவரின் கீழே நின்றுக்கொண்டு, “அப்டியே போடு! புடிச்சுக்குறேன்” என சிக்ஸ் பறந்த பாலை கேட்ச் பிடிப்பவன் போல நின்றிருந்த ஆதியின் கைகளில் வீசினாள் மது.
அதை லாவகமாய் பிடித்தவன், “உள்ள ட்ரெஸ், லேப்டாப் எல்லாம் இருக்குல்ல?” என்றான் அதை திறந்துப்பார்த்தபடி.
“எல்லாமே இருக்கு! சார்ஜர், ஹெட்செட், பவர் பேன்க், உன் கிரெடிட் கார்ட்ஸ்…” என மது சொல்லிக்கொண்டே போக, “கிரெடிட் கார்ட் வச்சு நான் என்ன செய்ய? உன் அப்பன் நாளைக்கே என் அக்கவுன்ட் எல்லாத்தையும் ப்ளாக் பண்ணிடுவாரு” என சொல்ல,
பாதி ஏணியில் இருந்த தெய்வா, மல்லுக்கட்டி மீதியையும் ஏறி, சுவரை கைகளால் பற்றிக்கொண்டு கீழே நிற்ப்பவனை எட்டிப்பார்க்க முயன்றபடி, “கார்டு போனா போகுது! இருவதாயிரம் பணம் வச்சுருக்கேன்! இப்போதைக்கு வச்சுக்க! வழக்கம் போல உன் பிரண்ட் எவன் வீட்டுக்காவது போயிட்டு அவன் அக்கவுன்ட் நம்பரை வாங்கி கிருஷ்ணாவுக்கு அனுப்பு, அவன் மாசாமாசம் பணம் போட்டுவிடுவான்” என்றார் பாசமாய்.
அண்ணன் பேரை சொன்னதுமே, “இன்னைக்கு அவன் கொஞ்சம் ஓவரா பேசிட்டான்! இருக்கு அவனுக்கு” என ஆதி கருவ, “ஹாஹா அதுக்கு மேல பேசுனா சிரிச்சு வச்சுடுவோம்ன்னு அவனே கட் பண்ணிட்டான்” என ஏணியில் தொங்கிக்கொண்டே பலமாய் சிரித்தார் தெய்வா.
உடன் சிரித்த மதுவும், “வீட்டை விட்டு போ’ன்னதும், ஒரு ரியாக்ஷன் குடுத்தப்பாரு நீ? ஹாஹா!!!” என நகைத்தவள், அவனைப்போலவே, “அ…ப்…பா!! அ…ம்..மா!!” என திக்கித்திக்கி சொல்ல, ஆதிக்கு அந்த ஸீனை எண்ணி சிரிப்பு பீறிட்டது.
“சிரிக்காம இருக்க நான் பட்டப்பாடு எனக்கு தானே தெரியும்! இதுல அம்மா வேற! ‘வெளில போடா அயோக்ய ராஸ்கல்களா’ன்னு வடிவேலு மாறி என்னை புடிச்சு வெளில தள்ள, செம்ம சிரிப்பு எனக்கு!!” என அவன் சிரிக்கையில் தெய்வாவும் மதுவும் சேர்ந்து அதை நினைத்து நினைத்து சிரித்தனர்.
சிரிப்பினூடே, “இருந்தாலும் நீ வேற எதாவது காரணம் சொல்லி கல்யாணத்தை நிறுத்திருக்கலாம்” என தெய்வா சொன்னதும், “அட ஏம்மா! இதுவரைக்கும் பார்த்த பொண்ணெல்லாம், எனக்கு லவ்வர் இருக்கு, கல்யாணம் ஆகிடுச்சு, புள்ள இருக்குன்னு ஏதாவது சொன்னா மேரேஜ் கால் ஆப் பண்ணிடுவாங்க! ஆனா இந்த வடநாட்டுக்காரி இருக்காளே! எதுக்கும் மசியல! அதான் இப்படி ஒரு பிட்டு!” என சிரித்தான்.
“ஏன்டா யாரையாது லவ் பண்ணாதான் என்ன நீ?” என மது கேட்க, தலைக்கு மேல் கும்பிடு போட்டவன், “ஆளை விடுறா சாமி! எனக்கு எந்த கமிட்மெண்டும் வேண்டாம்ன்னு தான் வரதை எல்லாம் துரத்திட்டு இருக்கேன்! இதுல நானே ஒன்னை புடிச்சு மடில கட்டிக்கனுமா? வேணவே வேணாம்! அதுக்கு நான் இந்த ‘எம்டன்’ கூடவே வாழ்ந்துட்டு போய்டுறேன்” என சொல்ல காரணமே இன்றி சிரித்துக்கொண்டிருந்தனர் மூவரும்.
தெய்வா, “இப்போ யார் வீட்டுக்குடா போவ நீ?”
மது, “அண்ணன் கூப்பிட்டா ஒருத்தனும் போன் எடுக்க மாட்டான்” என சிரிக்க, அதுதானே உண்மை! ஒவ்வொரு முறையும் அவன் வீட்டை விட்டு செல்கையில், ‘இவன் எங்கே நம்மிடம் வந்துவிடுவானோ?’ என அஞ்சும் அளவுக்கு நண்பர்களை ஒரு வழியாக்கிவிட்டு இவன் நிம்மதியாய் சுற்றுவான்.
“இந்தமுறை நான் கொஞ்சம் தூரமா போலாம்ன்னு இருக்கேன்மா, சவுத் பக்கம்” என சொல்ல,
“சென்னைக்காடா?” என்றார் தெய்வா ஆர்வமாய்.
“யெஸ்!!!”
மது, “அங்க யாருடா இருக்கா?”
“நான் ஸ்கூல் அங்கதானே படிச்சேன்! என்னோட ஒரு ஸ்கூல் பிரன்ட் இருக்கான்! அவனை தேடி கண்டுப்புடிச்சு போவோம்!”
மது, “அவன் எங்கயாவது பாரின் பக்கமோ, இல்ல வேற எங்கயோ வேலைல இருந்தா?”
ஆர்ப்பாட்டமாய் சிரித்தவன், “உன் அண்ணனுக்கு வாய்க்குற அடிமைகள் எப்படி இருக்கும் உனக்கு தெரியாதா குட்டிமா? கண்டிப்பா அந்த பக்கி உள்ளூருல தான் எருமை மேய்ச்சுட்டு இருக்கும்! கொஞ்ச நாள் அவனைப்போய் கொஞ்சிட்டு இருக்கேன்! நீ அப்பா கோவம் போனதும் சொல்லு! உடனே வந்துடுறேன்! இல்லன்னா ‘எனக்கு ரெண்டே புள்ள தான்’னு அந்த ஆளு ஊருக்குள்ள புரளிய கிளப்ப ஆரம்பிச்சுடுவான்” என சொல்ல,
தெய்வா, “ஹாஹா ஆமாடா! அந்த ஆளு செஞ்சாலும்…….ஆஆஆ” அவர் சிரிப்போடு சொல்லிக்கொண்டிருக்கயிலேயே, அவர் தொங்கிக்கொண்டிருந்த ஏணி பலமாய் ஆட்டம் காண, ஏணியை இறுக்கிப்பிடித்தபடி, கீழே பார்த்தவர், ஜெயதேவன் உக்கிரமூர்த்தியாய் ஏணியை பிடித்து உலுக்கிக்கொண்டிருப்பது கண்டு வெடவெடத்துப்போனார்.
மதில் மேல் அமர்ந்திருந்த மதுவுக்கும், இந்த பக்கம் குதிப்பதா, இல்லை அந்த பக்கம் குதிப்பதா என தெரியாது வியர்த்துக்கொட்ட, ஜெயதேவன், “என்னமா நடிக்குறீங்க? நீயே அவனை கழுத்தை புடிச்சு வெளில தள்ளுவியாம்! ராத்திரி ஆனதும், பையும் காசும் குடுத்து ‘டாட்டா’ காட்டுவியாம்!! என்னைப்பார்த்தா கேனயன் மாறி இருக்கா உங்களுக்கு?” என்றார் கர்ஜனையாய்.
அவர் ஏணியை உலுக்குவதை நிறுத்தாததால், “ஏங்க… ஏங்க… ஏணியை நிறுத்துங்க, வயசான காலத்துல பொண்டாட்டி இல்லாம கஷ்டப்படுற நிலை உங்களுக்கு தேவையா? வரலாறு உங்களை தப்பா பேசாதா? உங்களை ‘ஹிட்லர்’ன்னு எல்லாரும் சொல்லிட மாட்டாங்களா? ப்ளீஸ்ங்க என்னை பத்திரமா கீழ இறக்கிவிட்டுட்டு எவ்வளோ வேணாலும் திட்டுங்க, வாங்கிக்குறேன்” என கெஞ்ச,
“அடச்சை! வந்து சேர்ந்துருக்குங்க பாரு எனக்குன்னு!” என்ற சொல்லோடு அவர் ஏணியை சுவரில் சாய்க்க, ஏணியின் ஆட்டம் நின்றதும், நிம்மதி மூச்சு விட்டவர், அப்போதும் அடங்காமல், “ஆதி! வேளாவேளைக்கு நல்லா சாப்புடுப்பா! எங்கே இருக்கன்னு அப்றமா அம்மாவுக்கு வாட்சப் பண்ணு” என உரக்க கத்திக்கொண்டே ஏணியை விட்டு இறங்க, உருத்து முறைத்த கணவரை கண்டு, ‘ஹீஹீ’ என அசடு வழிந்தவர், “அவன்கிட்ட நான் பேச மாட்டேனே, பேசவே மாட்டேன்! வாட்சப் தான் பண்ண சொன்னேன்” என சொல்ல,
தன் நெற்றியில் ஓங்கி அறைந்துக்கொண்டு அங்கிருந்து சென்றார் ஜெயதேவன்.
மதுவும் தெய்வாவும் அவனுக்கு கேட்கும்படி ‘டாட்டா’ சொல்ல, உற்சாகமாய் கிளம்பினான் ஆதித்யதேவ்!
மகாராஷ்டிராவில் இருந்து மதராசை நோக்கி!!!