கள்வன் – 13
“எப்படியோ உனக்கு தேவையானதை சாதிச்சிட்ட…”
இனியா பதிலாய் தோள்களை குலுக்கிக்கொண்டே, “உனக்கு தேவையானதையும் செஞ்சி இருக்கேன்டி…”
“எனக்கு தேவையானதை செய்தியா? அப்படி என்ன பேபி எனக்கே தெரியாமல் எனக்கு தேவையானது?” புரியாமல் கேட்டாள் யுக்தா. கைகள் விசைப்பலகையை விடுத்து இருவருக்குமிடையில் இருந்த கேபினின் தடுப்பில் பதித்து இனியாவின் பதிலுக்காக காத்திருந்தாள்.
“அடிப்பாவி இது உனக்கே அடுக்குமா… நம்ம யுக்தா பாவமே அவளே மாமியாருக்கு அம்மா சொன்னது தெரிந்திருக்குமோனு பயந்துகிட்டு சுத்திட்டு இருக்கா நம்ம அதை கிளியர் பண்ணி விடுவோம்னு அங்கே கூட்டிட்டு போய் உன்னோட பயத்தை போக்கி இருக்கேன்டி… அது மட்டுமா நீ லவ்ஸ் விட வாய்ப்பு ஏற்படுத்தி குடுத்து இருக்கேன்… வந்துட்டா என்ன தேவைன்னு கேள்வியை தூக்கிக்கிட்டு…” என்று நீட்டி முழக்கினாள் இனியா.
“பேச்சு எல்லாம் ஒரு தினுசா இருக்கே பேபி… உன் காரியம் முடிஞ்சதும் உன்கிட்ட ஏதோ வித்தியாசம் தெரியுதே…” அவளின் கூர்மையாய் விழிகள் இனியாவை எடைப்போட,
“என் காரியம் முடிஞ்சிதுன்னு நான் சொல்லவே இல்லையே…” இலகுவாய் குண்டை இறக்கிவிட்டு கணினித்திரையினுள் தன் பார்வையை பதித்துக் கொண்டாள் இனியா.
ஏதோ புரிந்தும் புரியாத உணர்வுடன் இனியாவை நெருங்கி அவளின் சுழலும் நாற்காலியை தன் புறம் திருப்பிய யுக்தா, “என்ன சொல்ல வர பேபி? அத்தானிற்கு என்ன, ஏன் இப்படி ஆனது என்று தெரிந்து கொண்டால் போதும் என்பது போல் இருந்துவிட்டு இப்போது தெரிந்தவுடன் வேறு எதற்கோ அடித்தளம் போடுவது போல் இருக்கிறதே?”
நிமிர்ந்து நிதானமாய், விழிகளில் கேள்வியை தாங்கி நின்று கொண்டிருந்திருந்தவளை உட்கார்ந்து இருந்தபடியே ஏறிட்டவள், “தெரிந்து கொண்டால் போதும் என்ற ஆர்வம் இருந்தது உண்மை தான்… தெரிந்து கொண்ட பின்பு அவருக்கு ஏதாவது செய்யணுமுன்னு தோணுதுடி… பாவம் யாரோ செய்த தவறுக்கு மொத்த குடும்பமே தண்டனை அனுபவித்து வேதனையில் அல்லோலப்படுது… ஆன்ட்டி சொல்றபடி பார்த்தால் முப்பத்தோரு வயது தான் இருக்கும் அவருக்கு…
[the_ad id=”6605″]
இதயன் என்ற பெயர் தாங்கி இதய நிபுணராக இருக்கும் அவருக்கு இதயம் மட்டுமே ஒழுங்காக வேலை செய்யும் நிலை… யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது… பல உயிர்களை காக்கும் திறன் படைத்த ஒரு நல்ல மருத்துவரின் வாழ்க்கையே வீணாகிவிட்டது. எவ்வளவு ஆசையோடு கனவோடு இருந்திருப்பாங்க… அதெல்லாம் எவரோ செய்த அலட்சியத்தில், அவர்களின் விளம்பர போதையில் இவருடைய வாழ்க்கை வீணானதும் இல்லாமல் மொத்த குடும்பத்திற்கே மனஉளைச்சல், வேதனை, வருத்தம். இவர் நன்றாக இருந்திருந்தால் எத்தனை உயிர்களை இந்த ஆறு வருடத்தில் காப்பாற்றி இருப்பார். நீயே பார்த்த தானே அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தேற்றுவாரற்று நலிந்து போய் இருக்காங்க… ஏதாவது செய்து அவர்களை துக்கத்திலிருந்து மீட்கணும் போல தோணுதுடி… மேபீ என் உணர்வுகள் அதிக பிரசங்கித்தனமாய் கூடத் தெரியலாம், பட் ஐ வாண்ட் பீஸ் பார் மைசெல்ப் அண்ட் தெம்… என் மனசு சொல்லுது ஏதாவது செய்யுன்னு…” வேதனையின் உச்சம் அவள் மொழியிலும், அகத்திலும், முகத்திலும்.
இனியாவிற்கு அவளின் உணர்வுகள் புரியவில்லை எனினும் யுக்தாவிற்கு புரிவது போல் இருக்க, “இதெல்லாம் என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தானே செய்ற பேபி?” என்று போட்டு வாங்க முற்பட்டாள்.
“ஆஹான்… ஐ வாண்ட் ஹிம் டூ கெட் ரிட் ஆப்(of) தி பெட் அன்ட் ஹிஸ் சல்கி ஐஸ்(eyes)” கண்களில் கனவையும், உறுதியையும் தேக்கி விழிகள் ஒளிர கூறினாள் பெண்.
அந்த ஒளி யுக்தாவிற்குள் ஆபாயமணி அடித்தது. இருந்தும் மேலும் என்ன செய்ய காத்திருக்கிறாள் இவள் என்ற ஆர்வம் மேலோங்க அதை கேட்டும்விட்டாள், “ஹோ…! என்ன செய்யப் போறதா உத்தேசம் பேபி?”
“வெய்ட் அண்ட் சீ…”
பெருமூச்சிழுத்தவள், “ஆனாலும் அந்த வீட்டிற்கு போனதும் நீ என்னைப் போலவும் நான் உன்னைப் போலவும் நடந்துக்கிறோம் பேபி…” ஒரு அங்கலாய்ப்புடன் வந்தது யுக்தாவின் வார்த்தைகள்.
“தட்ஸ் பிகாஸ் அது உன்னோட வருங்கால வீடு… எங்கே முதல் நாளே உன் வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சிடும்னு அடக்கி வாசிக்கிற… பட் எனக்கு அதுபோல எந்த கட்டுப்பாடும் கிடையாது. என்னமோ எனக்கே ஆச்சர்யமாகத் தான் இருக்கு, நான் எப்படி அங்கு அவ்வளவு பொருந்திப் போறேன்னு. தயக்கம் எல்லாம் எங்க ஓடிபோச்சுன்னே தெரியல… திடீரென்று ஏதோ ஒரு துள்ளல் வந்தது மாதிரி இருக்கு. ஆனாலும் இதுகூட நல்லாத் தான் இருக்கு.” அதரங்களில் ஒட்டியிருந்த புன்னகை பெருநகையாய் மாறியிருக்க அவளுள் ஏற்பட்ட மாற்றத்தை எண்ணி சிலிர்த்துக் கொண்டாள்.
“நீ எங்கயோ கனவுலகத்தில் மிதக்கிற பேபி… பார்த்து இருந்துக்கோ அவ்வளவு தான் சொல்ல முடியும்…” என்ற எச்சரிக்கை தாங்கி வந்த செய்தியை சொல்லவும் முடியாமல் சொல்லாமலும் இருக்க முடியாமல் மனதில் ஒரு பட்டிமன்றமே நடத்தி முடிவாய்க் கூறி இருந்தாள் யுக்தா.
[the_ad id=”6605″]
இனியாவால் தன் வருங்கால குடும்பத்திற்கு ஏதோ ஒரு நன்மை விழையப் போகிறது என்று உள்ளுணர்வு ஒன்று அடித்துக் கூற, அவளின் உதவியை நாடினால் அவளின் உணர்வுகளும் இதில் சிக்குண்டு சில பல சிக்கல்களை உருவாக்கும் என்பதும் உரைக்க, தோழியின் உணர்வை பாதுக்காப்பதா இல்லை தன் குடும்பத்திற்காக தோழியின் உணர்வுகளோடு விலைபேசுவதா என்றதொரு சூழலில் மாட்டி சுழன்றாள் யுக்தா. ஆயினும் இதயன் குணமானால் எவ்வித சுழலுமின்றி இந்த சிக்கலிலிருந்து வெளிவர முடியும், இனியாவின் அலைபாயும் மனதிற்கும் விடை தெரியும் என்று மனதை சமன் படுத்திக்கொண்டு இனியாவிற்கு துணை நிற்கும் முடிவை எடுத்தாள் யுக்தா. ஆனால் அதை எந்த அளவுக்கு கடைபிடிக்க முடியும் என்று தான் தெரியவில்லை.
◆◆◆
பரந்து விரிந்த அந்த பிரம்மாண்ட வியாபார கடலினுள் வளைய வந்து சுழன்று கொண்டிருந்தாள் இனியா. கூடவே யுக்தாவும் கை நிறைய பைகளை சுமந்து கொண்டு அவளுக்கு சுமைதூக்கும் வேலையை செவ்வென விருப்பமின்றி செய்து கொண்டிருந்தாள்.
கூடவே தோராயமாய் ஒரு நூறு முறை அவளின் கேள்வியை கேட்டிருப்பாள், “டி இனியா… எதுக்குடி இப்போது இவ்வளவு ஹோம் டெகோர் வாங்கிட்டு இருக்க? இதெல்லாம் நம்ம பிராஞ்ச் இல்லையேடி… ஆன்ட்டி பார்த்து வாங்கிக்க மாட்டாங்களா?” ஆனால் பதில் தான் வந்த பாடில்லை.
“இன்னும் கர்டைன்ஸ் வாங்கணும், பிளாண்ட்ஸ் வாங்கணும்… நீ என்னை டிஸ்டர்ப் பண்ணாமல் வா…” என்று இழுக்காத குறையாய் அந்த மால் முழுவதும் இழுத்துச் சென்றாள் இனியா.
“இப்போது சொல்லவில்லை என்றால் நான் இங்கேயே உட்கார்ந்திடுவேன்டி… ஒழுங்கா நீ அலைவதும் இல்லாமல் என்னையும் எதற்கு இப்படி படுத்தி எடுக்கிறேன்னு சொல்லு… கால் வலிக்குதுடி லூசு…” அழுகாத குறையாய் சிணுங்கினாள் யுக்தா.
அவளுக்கு ஒரு முறைப்பை பரிசளித்துவிட்டு, “இதெல்லாம் உன் வீட்டுக்கு தான் வாங்குறேன். கொஞ்ச நேரம் வாயை அடக்கிகிட்டு வா…” என்று கழுத்தை ஒரு வெட்டு வெட்டினாள் இனியா.
“என்ன என் வீட்டுக்கா? சும்மா உளறாதே பேபி… உண்மையை சொல்லு யாருக்குக்காக இவ்வளவும் வாங்குற? நீ வாங்கி இருப்பதை வைத்து ஒரு வீட்டையே அலங்கரித்து விடலாம்… இதில் ஏற்கனவே நிரம்பி வழியும் பொருட்களுக்கு இடையில் நம் இருவரின் வீட்டிலும் இதை எங்கே கொண்டு சென்று வைப்பது?”
“உனக்கு எல்லாமே அவசரம் தான்டி… இதையெல்லாம் செட் பண்ணக்குள்ள நீயே தெரிஞ்சிப்ப…” இதற்கு மேல் உன் கேள்விகளுக்கு பதில் இல்லை என்பது போல் இனியா அங்கிருந்து நகர, அவளுக்கு தோழியாய் இருக்கும் கடமைக்காக யுக்தா அவளைப் பின் தொடர்ந்தாள்.
அனைத்தையும் வாங்கிக் கொண்டு ஆளுக்கு பாதியாய் பைகளை பிரித்து தத்தம் வண்டிகளில் மாட்டிக் கொண்டு, இனியா முதலாய் செல்ல அவளை பின் தொடர்ந்தாள் யுக்தா. வண்டி பிரதான சாலைகளை விட்டு நகர்ந்து உள் அடங்கிய தெருக்களில் நுழையும் போதே யுக்தாவிற்கு எங்கு செல்கிறோம் என்று பிடிபட்டுவிட்டது. அவள் மனமும் அப்போதே இன்று தாமதமாய் வீட்டிற்கு செல்லப் போவதற்கு என்ன காரணம் கூறுவது என்ற யோசனைக்கும் தாவியது.
வீட்டு வாசல் முன் வண்டி நிறுத்தும் சத்தம் கேட்டு வீட்டுக்கு உரிமை பட்டவர் வெளியே வந்து ஆனந்தமாய் இவர்களை வரவேற்றார்.
“இந்த இன்பன் கூட நீங்க வரீங்கன்னு சொல்லவே இல்லடாமா… உள்ளே வாங்க…”
“அவருக்கும் தெரியாது ஆன்ட்டி…” என்று பதிலுரைத்து யுக்தாவின் பார்வையை தவிர்த்து பொருட்கள் உள்ள பையை உள்ளே எடுத்துச் சென்றாள் இனியா.
அவளை முறைப்பதா, மகிழ்வதா என்று புரியாமல் இனியாவை பின் தொடரும் வேலையை மட்டுமே செய்ய முடிந்தது யுக்தாவால்…
“இது என்னடா கை நிறைய பை எடுத்துட்டு வந்து இருக்கீங்க? கீழே வைங்கமா கை வலிக்கப்போகிறது…” கரிசனத்துடன் இனியாவிடமும், யுக்தாவிடமிருந்தும் பைகளை வாங்கி கீழே சுவரை ஒட்டி சாய்த்து வைத்தார் சிவகாமி.
[the_ad id=”6605″]
“மால் முழுக்க சுத்தியதில் சோர்வாய் இருக்கு… உங்க கையால் ஒரு சூப்பர் காபி போட்டு கொடுங்களேன் ஆன்ட்டி…” உரிமை எடுத்துக் கொண்டு உரிமையாய் வந்தது இனியாவின் மொழி.
அதைவிட உரிமையாய் வந்தது பதில், “காபி என்ன காபி… நான் டிபன் எடுத்து வைக்கிறேன்மா சாப்பிட வாங்க… மணியும் ஏழுக்கு மேல் ஆகிவிட்டது…”
இவ்விருவரின் உரிமைப் பேச்சில் யுக்தாவிற்கு தனித்து விடப்பட்டதாய் ஒரு உணர்வு… தனித்து விடப்பட்டது என்பதைவிட தயக்கம் பிடித்து வைத்துக் கொண்டது… ஏனோ இனியா போல் அவளால் சகஜம் பாராட்ட முடியவில்லை… தனிமை போக்க எண்ணி தன்னவனை மனம் நாட, விழிகள் தேட அவளுக்கு மாயம் காட்டிக் கொண்டிருந்தான் அவளவன்.
“எங்க உங்க ரெண்டாவது பையன் அதான் மிஸ்டர் யுக்தாவை ஆளை காணோமே…” யுக்தாவின் மெளன வேண்டலுக்கு மொழி கொடுத்து கேள்வி தொடுத்து, நேற்று தோழி செய்ததற்கு பிரதி உபகாரம் செய்தாள் இனியா.
“இன்பன் வேலை முடிஞ்சி வந்ததும் தானே அண்ணனை பார்த்துக்குறேனு செல்வியை வீட்டுக்கு அனுப்பிட்டு இதயன் கூட ரூம்ல அடஞ்சிக்குவான்மா… இப்போதும் அங்க தான் இருக்கான்…”
“ஓ… எங்க சத்தம் கேட்டும் வரலையா அதான் வீட்டில் இல்லையோனு கேட்டேன் ஆன்ட்டி…”
“அதான்மா நானும் யோசிச்சிட்டு இருந்தேன். யார் குரல் கேட்டாலும் உடனே வந்துருவான் இன்னும் ஆளை காணோம்…”
இயல்பான உரையாடல் இரு பெண்களுக்குள்ளும் இயல்பாய் வந்தது. ஓரிரு நிமிடம் யோசித்த இனியா மலர்ச்சியுடன்,
“நீங்க எங்களுக்கு டிபன் ரெடி பண்ணுங்க ஆன்ட்டி… நாங்க வெயிட் பண்றோம்…” என்க, யுக்தா இனியாவை நெருங்கி, “ஏய்… நேற்றே தாமதமா தான் வீட்டுக்கு போனோம்… இன்னைக்கும் லேட்டா போக பிளான் ரெடி பண்ணிட்டியா? ஏதோ உன் அத்தை வீட்டுக்கு வந்த மாதிரி சாவகாசமா சாப்பாடு கேட்டுட்டு இருக்க… இன்னைக்கும் தாமதமாக போனால் வீட்டில் செமத்தையா வாங்க வேண்டியது தான்… ஒழுங்கா அடக்க ஒடுக்கமா வீட்டுக்கு கிளம்புறேன்னு சொல்லுடி…” என்று காதை கடிக்க,
யுக்தாவின் கிசுகிசுப்பை பார்த்த சிவகாமி, “என் மருமக என்ன சொல்றா?”
யுக்தா திருதிருவென மாட்டிக்கொண்ட பாவனையில் விழிக்க, இனியா நமட்டு சிரிப்புடன், “உங்க பையனை பார்க்க ஐடியா கேக்குறா ஆன்ட்டி…” என்று கேலி செய்ய, அவள் கையில் நறுக்கென்று கிள்ளினாள் யுக்தா.
“அதான் எல்லோரும் போன் வச்சி இருக்கீங்களே… அதை ஒரு தடவு தடவுனா அவன் பதறியடிச்சி ஓடி வரப்போறான்…” என்றவர் குரலிலும் கேலி இழையோடியது. யுக்தா அசடு வழிந்து மெல்ல இனியாவின் பின் நகர்ந்து தன்னை மறைத்துக் கொண்டாள். எல்லாமே புதியதாய் இருக்க மீண்டுமே தன் இயல்பை இனியாவுக்கு தத்துக்கொடுத்து விட்டதொரு உணர்வு.
“இலட்சணமா வெட்கப்படுறா என் மருமக…” என்று திருஷ்டி சுற்றிய சிவகாமி அவர்களிடம் ஒரு முறுவலை உதிர்த்துவிட்டு சமையலறைக்குச் சென்று மறைந்தார்.
அவர் மறைந்ததை உறுதி செய்து கொண்டு, யுக்தா நறுக்கென்று இனியாவின் கையை கிள்ளினாள், “லூசு ஏன்டி என்ன படுத்துற? உனக்கு வாய் நீளமாகிடுச்சுடி…”
[the_ad id=”6605″]
“ஷ்… உனக்கு தான்டி கை நீண்டுவிட்டது…” என்று அவள் கிள்ளிய இடத்தை தேய்த்து விட்டுக்கொண்டே கடிந்தாள் இனியா.
“பேச்சை வளர்க்காம சீக்கிரம் கிளம்புற வழியைப் பாருடி… ஒரு நாள்னா பொய் சொல்லலாம் நீ டெய்லி பொய் சொல்ல வைத்துடுவ போலிருக்கு…”
“நாம என்ன இப்போது தான் புதுசா லேட்டா போகிறோமா? எவ்வளவு நாள் ப்ராஜெக்ட் நேரத்தில் தாமதமாய் போயிருக்கோம்? அப்போதெல்லாம் என்ன சொன்னியோ அதையே சொல்லு இப்போதும்… சரி வா வா உன் ஆளை தேடுவோம்…” என்று அனாசியமாய் மொழிந்துவிட்டு இதயன் அறைக்கு சென்றாள் இனியா.
அதுவும் இதுவும் ஒன்றா? என்ற கேள்வி யுக்தா மனதில் எழுந்தாலும் அதை கேட்க இடம் தரவில்லை இனியா. யுக்தா தான் வாயில் கைவைத்து அவள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் செல்ல வேண்டியிருந்தது. வேறு வழி?!…
*^*^*