கள்வன் – 24
“எனக்கு எல்லாம் தெரியும்கா…” என்றபடியே கவலை தோய்ந்த இறுகிய முகத்துடன் அவள் எதிரில் வந்து அமர்ந்தான் இனியன். அவனின் சொல் புரியாத இனியா, “என்ன தெரியும்? என்ன பேசுறனு ஒன்னும் புரியல.”
அவளை ஆழ்ந்து நோக்கியவன் அவள் கேள்விக்கு நேரடியாய் பதில் அளிக்காது, “எல்லாத்தையும் விட்டிரு அக்கா…” என்று புதிராய் பேசி வைத்தான்.
சிந்தனை ரேகைகள் அவளை விட்டு அகலாது இன்னுமே அதிகரிக்க, ‛என்ன அக்காவா?’ என்று மனதில் குறித்துக் கொண்டவள், “எதை விடணும்? தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் என்ன மாதிரி வேண்டல் இது?”
“அங்க போறதையும், நீ இப்போ எடுத்துட்டு இருக்கிற முயற்சியையும் அக்கா,” இனியாவுக்கு குபீரென வியர்த்தது அவனின் பதிலில். யுக்தாவிடம் தயக்கமின்றி கூறியது போல தம்பியிடம் கூற நா எழவில்லை மாறாக பதட்டமே சூழ்ந்து கொண்டது.
“நான் எங்கேயும் போகலையே. சும்மா உளராம போய் தூங்கு.” என்று அவனை விரட்டுவதில் குறியாய் இருக்க, அவன் தன் வேலையில் குறியாய் இருந்தான்.
“அந்த வீடு அடுத்த தெருவில் தான் இருக்கு. நீ அங்க போறதை நான் பார்த்தேன். எதற்கு அங்கே போகிறேன்னும் விசாரிச்சிட்டேன். அதனால எதுவுமே தெரியாத மாதிரி காட்டிக்க முயற்சி செய்யாத அக்கா.”
‛என்னடா இவன் அக்கா அக்கான்னு கொஞ்சுறான்’ என்பதே அவளுள் தோன்றிய முதல் எண்ணம். பின்னர் தான் அவன் வாயடைக்க முயன்றாள்.
“டேய் என்னடா ரொம்ப ஓவரா பண்ற? நீ என்னை விட ஆறு வயசு சின்னவன். அதனால உன் வயசுக்கு ஏத்த மாதிரி இரு…” தந்தையிடம் பிரென்ட் என்றது போல இனியனிடம் மறைக்கக்கூடத் தோன்றவில்லை. உடன்பிறந்தவர்களுக்கென்ற பிரத்யேக பந்தம், நேரடி வார்த்தைகளின்றி அவள் மனதை அவனுக்கு படம்பிடித்து காட்டிவிட்டது.
அதற்குள் தன்னை விட சிறியவனாய் இருப்பவன் தன்னை குறுக்கு விசாரணை செய்வதா? அவனுக்கு நான் அஞ்சுவதா? என்று பதட்டம் விலகி அலட்சியம் குடிகொண்டது. அதை சரியாக உணர்ந்தவன்,
“எனக்கும் எல்லாம் தெரியும் இனியா…” தன்னிலையை ஒரே வரியிலும் மொழியிலும் அழுத்தத்தை கூட்டி, உணர்த்தி, “நான் சொல்றதை கேளேன்… இது உனக்கு வேண்டாம்?” என்று ஒலியில் கெஞ்சலை முன்னிறுத்தினான்.
அவன் கெஞ்சல் மனதை தொட, குற்றம் கொண்ட மனது அவன் விழியை எதிர்நோக்க முடியாமல் செய்ய, விழியை தாழ்த்தி, தானாக எதுவும் சொல்ல வேண்டாம் அவன் அப்படி என்ன தெரிந்துகொண்டான் என்பதை கண்டுகொள்ளும் நோக்குடன், “என்ன வேண்டாம்னு சொல்ற?”
“நீ அங்கு அடிக்கடி போகுற… அந்த வீட்டுக்கு நிறைய உதவி செய்யுற மட்டும் தான் வெளியில் தெரியும் அந்த வீட்டு பையனை குணப்படுத்துவதில் ரொம்ப தீவிரமா இருக்கேன்னு பார்த்தாலே தெரியுது. ஆனால் இதெல்லாம் நீ ஏன் செய்யுற… செய்ய ஆரம்பித்தவுடன் எப்படி மாறிட்டேன்னு உன் கூடவே இருக்குற எனக்கு புரியாதுனு நினைச்சா அது உன்னோட அசட்டுத்தனம் என்றுதான் சொல்லணும்.” தம்பிதானே என்று அவள் காட்டிய அலட்சியத்திற்கு இறுதியாக கொட்டு வைத்தே முடித்தான் இனியன்.
நான் இன்னுமே சிறுபிள்ளை இல்லை என்று சொல்லாமல் அவன் செயலில் காட்டும் அக்கறை அவளுள் உருவமில்லா உருண்டையை உருட்ட, தொண்டை அடைத்துக்கொண்டு வார்த்தைகள் வெளிவர மறுத்தது. குனிந்த தலை நிமிராமல் தன்னை எதிர்கொள்ள சங்கடப்படும் தமக்கையை பார்த்தவன் உள்ளத்திலும் உணர்ச்சி குவியல் முட்டி மோதிக் கொண்டிருக்க, அவளின் மீதான அக்கறை பலமடங்கு பெருகியது. பிடித்தத்தை அடுத்த நிலைக்கு கொண்டுபோக முடியாமல் அவள் குழம்பிக் கொண்டிருக்க, அவள் தம்பியோ அவளின் பிடித்ததின் அளவை தெளிவாய் கண்டுகொண்டு விட்டான்.
[the_ad id=”6605″]
“என்னை என் போக்கில் விட்டுவிடு. எல்லாம் சரியானதும் நானே வீட்டில் பேசிப்பேன்.” குனிந்த தலை நிமிராமல் சன்னமாய் அவள் குரல் மட்டுமே ஒலிக்க, அவளின் மனதை மாற்றிவிடலாம் என்றே எண்ணினான் இனியன். ஆனால் அது அத்தனை சுலபமாக இருக்கப் போவதில்லை என்பது போகப்போக புரிந்தது.
“இதற்கு எப்படி வீட்டில் சம்மதிப்பார்களுனு நீ நம்புற? உன் வாழ்க்கை எக்ஸ்பிரிமெண்ட் இல்லை அக்கா. சரியா வந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி திரும்ப முயற்சிக்கலாம் என்று இதை கடந்து போக…” யதார்த்தம் உணர்ந்து, அதனின் தாக்கத்தை கணித்து அவன் வெளிப்படுத்த,
“நான் எக்ஸ்பிரிமெண்ட் பண்ணல.” என்று மென்மையாய் இனியா மறுத்தாள்.
“வேற என்ன செய்யுற?”
“ப்ச்… சும்மா கேள்வி கேட்டுட்டே இருக்காத. போ… போய் தூங்கு.”
இனியாவின் பொறுமை மெல்லக் கரையத் துவங்குவதை உணர்ந்தவன் சுற்றி வளைக்காது, “நாளைப்பின்னே உன் மனசு உடைந்து விடக்கூடாது அக்கா. தங்கமே என்றாலும் தங்கஊசியை எடுத்து கண்ணை குத்திக்கொள்ள முடியுமா? நீ இப்போ செய்வது நல்ல காரியம் தான் ஆனாலும் உன் வாழ்க்கை என்று வரும்போது இது பெஸ்ட் இல்லை. நான், அப்பா, அம்மா எல்லோரும் உனக்கு ஒரு பெஸ்டான வாழ்க்கை அமையனும்னு தான் விரும்புறோம். ஆனால் நீ என்ன செய்திட்டு இருக்க?”
அவளும் விடாது, “பெஸ்ட்னு எதை வைத்து அளக்குறீங்க? உங்கள் பார்வை பெஸ்ட்கும் என் பார்வைக்கும் வித்தியாசம் அதிகம்.”
அவளின் பிடிவாதத்தில் இயலாமை அவனை சூழ்ந்துகொள்ள, “யதார்த்தத்தில் இதெல்லாம் நடக்கக் கூடியது இல்லை அக்கா… ஆறு வருடமா இப்படி இருப்பவர் நீ வந்ததும் சரியாகிவிடுவாரா என்ன? அதுவும் நம் கையில் இல்லாத, நம்மால் சாதிக்க இயலாத ஒன்றை வச்சிக்கிட்டு நீ ரிஸ்க் எடுக்குற. உனக்கு இவரைவிட உசத்தியானவர் கிடைப்பாரு.”
“எனக்கு நம்பிக்கை இருக்கு சரியாகிடுவாரு.”
அவனுடைய பொறுமையும் பறந்துவிட, “ஆமா அப்படியே நீ வசூல் ராஜா எம்பிபிஸ் கமல்ஹாசன்… நீ சிரிச்சு பேசி, அவரை வெளியில் அழைத்து வந்ததும் குணமாகிவிட… சின்னப்புள்ள மாதிரி பேசாத. எனக்கு கடுப்பாகுது.”
“கடுப்பாகுதுன்னா போக வேண்டியதுதானே? எதற்கு என் நேரத்தையும் வீணடிச்சிட்டு இருக்க? நீ என்ன சமாதானம் பேச நினைத்தாலும் என் முடிவில் நான் உறுதியாய் இருக்கேன்.”
முன்னர் பரவியிருந்த உணர்ச்சிகள் உடைபட்டு நீயா நானா என்றொதொரு வார்த்தையாடல் நடைபெற இருவருமே தங்களின் வாதத்திலிருந்து பின்வாங்குவதாக இல்லை.
[the_ad id=”6605″]
“இந்த வறட்டு பிடிவாதம் உன் மனசை பதம்பார்த்திடும் அக்கா. வீட்ல ஒத்துக்க மாட்டாங்க, எனக்குமே இதில் உடன்பாடு இல்லை. அவரோட வாழ்க்கை முடங்கிடுச்சு அது தான் உண்மை. உன்னோட மனசை அதில் கொண்டுபோய் வைத்து நீயும் உன் வாழ்க்கையை வீணடிச்சிக்காத…”
“நான் ஒன்றும் நாளைக்கே எல்லாம் நடக்கும்னு சொல்லல… நேரம் காலம் கைகூடும் போது எல்லாமே சரியாக நடக்கும். ஆனால் அந்த நேரம் இதில்லை. நீ சொல்வது போல இப்போது வேண்டுமென்றால் அவர் முடங்கியிருக்கலாம். ஆனால் அதுவே தொடரும்னு நீ எப்படி சொல்ற?” பிடித்தம் என்று மட்டுமே உணர்ந்திருந்தவள் அவளறியாமலேயே எல்லாம் உறுதி என்பது போல் பேச,
‘இதற்கு மேல் இவளிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எல்லாம் தெரிந்தும், அறிந்தும் வாழ்க்கையை பணயம் வைக்க துணிந்துவிட்டாள். காதல் நோய் அழிக்கமுடியாத அளவிற்கு அவள் இதயத்திலும், மூளையிலும் பரவிக்கிடக்கிறது. நேரம் வரும்போது மெல்ல இதை வீட்டிற்கு தெரியப்படுத்தி விடவேண்டும்,’ என்ற முடிவிற்கு வந்த இனியன் கட்டிலை விட்டெழுந்து, “நாளைக்கே நீ செய்வது முட்டாள்தனம்னு புரியும் போது நாங்க தான் உன்கூட இருப்போம் அக்கா.” என்றுவிட்டு அங்கிருந்து வெளியேறினான். அதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவது என்றும் புரியவில்லை. ஆழம் தெரிந்தே காலை விட்டால் என்னதான் செய்ய முடியும்?
அவன் செல்வதையே பார்த்தவள் மனதில் ஒரு வைராக்கியம். இதயனை குணப்படுத்தி அவளின் உள்ளுணர்வும், நம்பிக்கையும் பொய்யில்லை என்று நிரூபிக்க வேண்டுமென்ற வெறி. யுக்தாவும், இனியனும் மாறிமாறி இதை விட்டுவிடு, இது உனக்கு உகந்தது அல்ல என்று சொல்வதே அவளை உசுப்பியது. ஆசிரியர் கூறும் அறிவுரைகளை போன்று இதையும் ஒரு செவியில் வாங்கி மறுவழியே விட்டுவிட்டாள்.
‘ஏதாவது செய்து அவரை சரி செய்தே ஆகணும். என்ன செய்யலாம்? அஜயின் பதில் மேலோட்டமாக பார்த்தால் நம்பிக்கையூட்டுவதாக இருந்தாலும், உறுதியாக ஒன்றும் கூறவில்லையே? அது மட்டுமில்லாமல் அவர் ஏன் அஜயை முறைத்தார்? அஜயும் பதிலுக்கு முறைத்தாரே? ஏன் ரெண்டு பேரும் முட்டிக்குறாங்க? என்ன காரணமாக இருக்கும்? ஒன்றாக வேலைப் பார்த்த போது ரெண்டு பேருக்கும் கைகலப்பு ஆகிருக்குமோ? ஏன்? ஏன்? இவங்க மற்றவர்கள் முன் தங்களின் உணர்ச்சிகளை மறைத்து நடந்துகொள்வதை பார்த்தால் வீட்டில் ஆன்டிக்கும், இன்பனுக்கும் இதைப் பற்றி ஒன்றும் தெரியாது போலிருக்கே?’ என்று அவனுக்காக சிந்திக்க துவங்கி அவனின் செயல்களை ஆராயும் திசையில் செல்ல, புருவங்கள் முடிச்சிட யோசனையுடன் போர்வையை கழுத்துவரை இழுத்துக் கொண்டாள். உள்ளமும், சிந்தையும் தீர்வை எதிர்நோக்கி ஓடிட, ஒன்றும் உருப்படியாய் சிக்கவில்லை. தேடல் தான் நீண்டுகொண்டே சென்றது, அவளும் கட்டிலில் உருண்டு கொண்டே விளிம்பை நோக்கி சென்றாள்.
“விழப்போற பாப்பா…” என்ற தந்தையின் குரலில் திடுக்கிட்டு கட்டிலின் நடுவிற்கு உருண்டுவந்தவள் பார்வையில் பதட்டம் சூழ்ந்து பின் விடுவித்தது.
“தூக்கம் வரலையா பாப்பா?” என்று அவளின் அலைபுரிதலை கண்டு கேள்வி எழுப்பிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ரமேஷ். அவர்கள் வீட்டில் இது ஒரு எழுதப்படாத விதி. பிள்ளைகள் இருவரும் தங்களின் அறையை தாழிடாமல் தான் உறங்க வேண்டும். தோளுக்கு மீறி வளர்ந்த பிள்ளைகள் என்றாலும் சுதந்திரத்திற்கு இணையாக சில கட்டுப்பாடுகளும் அவ்வீட்டில் நடைமுறையில் இருந்தது. கதவை தாழிட்டு உள்ளே தங்களுக்கு தெரியாமல் எதுவும் செய்வார்களோ என்ற பயம் கொணர்ந்த விதிமுறை அல்ல, தங்களின் ஆத்ம திருப்திக்காக செய்வது… நடுசாமத்தில் ஒன்றிரண்டு முறை பிள்ளைகள் எவ்வித மனசஞ்சலமும் இன்றி ஆழ்ந்து உறங்குவதை உறுதி செய்தால் ஒழிய அவர்களின் கண் சொருகாது. ஓடி ஓடி உழைப்பதே அவர்களுக்காக தானே… அவர்களின் நிம்மதி தான் இவர்களின் நிம்மதி.
[the_ad id=”6605″]
அவரின் குரல் கேட்டு எழுந்தமர்ந்தவள், “நீ இன்னும் தூங்கலையா அப்பா?”
தன் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்கும் மகளை வாஞ்சையுடன் பார்த்தவர் மெத்தையின் நுனியில் அமர்ந்து, “கீழ விழப்போறோம் என்ற சுதாரிப்பு கூட இல்லாது அப்படி என்ன யோசனை பாப்பா?”
தந்தையை பார்ப்பதை தவிர்த்தவள் மனதில் குழப்பம் நீங்கி குற்றவுணர்வு தலைதூக்கியது. அவர்களின் வளர்ப்பின் மேலிருந்த நம்பிக்கை அவளுக்கு அளவில்லா சுதந்திரத்தை வாரியிறைத்திருந்தது. அவள் எது கேட்டாலும் அது அனாவசியமாக இருக்காது தேவையின் பொருட்டே இருக்கும், எதையும் மறைக்கவும் மாட்டாள் என்ற அவள் பெற்றோரின் ஆழ்ந்த நம்பிக்கையில் சிறிது சிறிதாய் ஓட்டையிடுவது போலிருக்கும் அவள் செயல்களின் வீரியம் தம்பி பேசிச் சென்ற பிறகு புரியத் துவங்கியது. அதுவும் அவன் சென்றவுடனேயே தந்தை வந்திருப்பது ஒருவித அழுத்தத்தை கொடுக்க, அந்த அழுத்தம் அவளை நிமிரவிடவில்லை.
“என்ன சஞ்சலம் பாப்பா? ஏன் குழப்பமாக இருக்க?” மகளை மாலையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்ததில் தான் கணித்தவற்றை கேட்டு அவளின் குழப்பத்தை சரி செய்துவிடவேண்டும் என்றே அவர் அங்கு வந்தது. அதற்கு ஏற்றாற்போல் இனியாவும் உறங்காமல் அறையின் விளக்கையும் அணைக்காமல் கட்டிலில் உருண்டு கொண்டிருந்தாள்.
“என்ன செய்வதுனு புரியலபா…” அவரின் வற்புறுத்தலை புறம்தள்ள மனமின்றி இனியா மொட்டையாய் சொல்ல,
“மனசுல பாரமோ கோபமோ சூழ்ந்திருக்கும் போது எந்தவொரு செயலையும் பாரபட்சமின்றி அலசி ஆராய்ந்து நேர்மையாக பார்க்க முடியாது இனியா. மனசுல இருக்குற எல்லா குழப்பத்தையும் சுத்தமாக துடைத்து எறிஞ்சிட்டு இளகுவான பிறகு யோசித்தால் தெளிவு கிடைக்கும். நீ இப்போ எதை பற்றியும் யோசிக்காம கண்ணை மூடி தூங்கு. அப்புறம் காலையில் பாரேன், உனக்கே அடுத்து என்ன செய்றதுன்னு புரிந்துவிடும். அப்போ நீ எடுக்குற முடிவு சரியா இருக்கும்டா. அப்பா தட்டிகொடுக்குறேன். நீ தூங்கு.” என்று எளிமையாய் அவள் மனதில் இருந்தவற்றை நீக்கியவர் சொன்னதை போல மகள் உறங்கும் வரை அவள் தோளில் தட்டிக்கொடுத்து, அவள் உறங்கியதை உறுதி செய்துகொண்டே வெளியேறினார்.
இளகுவான மனநிலையில் மகள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என்று இப்போதும் சொல்லும் இதே ரமேஷ் மகளின் முடிவு தெரியவரும் போது அதை சரி என்று எடுத்துக்கொண்டு அதை அனுமதித்து மகளின் முடிவிற்கு பச்சைக்கொடி காட்டுவாரா?
*^*^*