கள்வன் – 33
ஐயம். அன்பு, பாசம், காதலுக்கு பிறகு உலகையே ஆட்டிப்படைக்கும் ஒற்றை உணர்வு. காதல் எதையும் மறக்கவைக்கும் என்றால் அதற்கு சற்றும் குறையாமல் ஒருவரை தன்வசப்படுத்தி சரியா, தவறா என்று யோசிக்கவிடாமல் தன் இழுப்புக்கு இழுத்துச் செல்லும் இந்த அச்சம். அச்சத்தின் விளிம்பில் சில நேரம் முடிவு நாம் எதிர்பார்த்ததாகவே இருக்கும் பலநேரம் அது இழுத்துவிட்ட பிரச்சனைக்கு நாம் தீர்வு கண்டுபிடித்து நம் வாழ்க்கையை நாம்தான் முறைபடுத்திக்கொள்ள வேண்டும்.
அப்படியொரு பயத்தில் சிக்கி அதைவிடுத்து வெளிவர வழியறியாது, வாழ்க்கை பறிபோய்விடுமோ என்ற பீதியில் ஒரு முடிவெடுத்து அதை வெற்றிகரமாக நிறைவேறியிருக்க, தன் விழியில் வழியும் விழிநீர் விருப்பம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியால் வந்த ஆனந்த கண்ணீரா இல்லை விருப்பம் நிறைவேறவென தெரிந்தே தவறவிட்டு இழந்தவற்றை நினைத்து வருவதா என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் மனம் நிறைவாயிருந்தது.
இது சாத்தியமா என்ற கேள்வி ஆழ்மனதில் பதிந்திருந்தாலும் யாரிடமும் அதை வெளிப்படுத்தாமல் இரும்புமனிதியாக, நேர்மறை எண்ணங்களை மட்டுமே பிரதிபலிப்பவளாகவும் இதுநாள் வரை இருந்திருக்கிறாள். இனியும் இப்படியே தான் இருப்பாள். ஆனால் இந்த பழக்கத்தின் விளைவு தானோ என்னவோ அவளின் விருப்பை அடைவதில் இத்தனை போராட்டம். இவளின் நேர்மறை எண்ணங்களுக்கு மாறாக எதிர்மறையாய் அவள் பெற்றோர் சிந்தித்ததன் வினை இப்படி திடீர் திருமணத்தில் வந்து முடிந்திருக்கிறது.
பெற்றோரின் மனக்கலக்கத்தை சம்பாரித்துக்கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று என்றுமே விரும்பியது இல்லை. ஆனால் அவள் விதி அப்படிதான் எழுதியிருக்கிறது போல…
“நீதான் இது நடந்தே ஆகனும்னு பிடிவாதமா இருந்த. இப்போ அழுது என்ன ஆகப்போகுது?”
வெகுநேரமாகவே சன்னல் ஓரத்தில் சாய்ந்து நின்று ஓசையின்றி மெளனமாக கண்ணீர் சிந்துபவளை கண்டவன் பொறுமையிழந்து பேச்சை துவங்க, கண்களை துடைத்துக்கொண்டு திரும்பியவள், “நான் ஆசைப்பட்ட வாழ்க்கைதான். ஆனாலும் வருத்தமா இருக்காதா. அம்மா, அப்பாவை மீறி முதல்முறையா இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கேன். என் மேல அவங்க கோவமா இருக்காங்க.” என்று அடக்கப்பட்ட குரலில் பதில் கூறினாலும் இறுதியில் அவளையும் மீறி விசும்பல் வெளிப்பட்டது.
“இன்னும் கொஞ்ச நாள் ஆனதும் அவங்களே புரிஞ்சிக்கிட்டு உன்கூட பேசுவாங்க. உன் அப்பா, அம்மா தானே உன்னை எவ்வளவு நாள் ஒதுக்கி வைக்கமுடியும்? உன் மேல ரொம்ப பாசம் அவங்களுக்கு. நீ வேண்டுமென்றால் பாரேன், ஒரு மாசமோ ரெண்டு மாசமோ பாப்பானு உன்கிட்ட வந்திருவாங்க. வரவைப்போம். நாம சந்தோசமா வாழ்ந்து காண்பிப்போம். உன்னோட முடிவு தப்பில்லைன்னு புரிய வைப்போம். நீ அழாத.” என்று இதயன் அவளை சமாதனப்படுத்த, புறங்கை கொண்டு கலங்கிய கண்களை அழுந்த துடைத்தவள், மெத்தையில் படுத்திருந்தவனை நெருங்கி அமர்ந்து அவனின் வலக்கை விரல்களுடன் தன்விரல்களை பிணைத்துக் கொண்டாள்.
கைவலி உயிர்வரை சென்று தாக்கினாலும் அவளுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்ட இதயன் பற்களை கடித்துக்கொண்டு தன் இடக்கையை மெல்ல உயர்த்தி அவள் கன்னம் ஏந்தி, தன் கட்டைவிரல் கொண்டு வழிந்த நீரை துடைத்துவிட்டான்.
“எத்தனை முறை சொல்வது, நீ அழுதால் எனக்கு கஷ்டமா இருக்கு.”
தன் கன்னத்தில் பதிந்த அவனின் கையை தன் இருகரம் கொண்டு இறுக பற்றிக்கொண்டவள், “உங்களால் கையை அசைக்க முடியும்னு சொல்லவே இல்லை.”
பதில் அளிக்காது கடைநரம்பு வரை சரேலென்று பாய்ந்த வலியை பொறுத்துக்கொண்டு, தன் வலக்கரத்தை மேலுயர்த்தி அவள் கழுத்தில் புதிதாய் இடம்பெற்று பளிச்சென்று மின்னிய மங்கள நாணை கொக்கியிட்டு உடையிலிருந்து வெளியே இழுத்தவன், “இதை கட்டுங்கனு பயத்திற்கு மத்தியில் கண்ணீரோட என்கிட்ட கேட்ட பாரேன், அப்போ அந்த நொடி உன் கழுத்தில் இதை கட்டக்கூட முடியாத கையாலாகாதவனா இருக்கேனேன்னு என்னக்குள் ஒரு குற்றவுணர்ச்சி. அதுவே உன்னையும், உன்னோட ஆசையையும் தோற்க விடக்கூடாதுன்னு ஒரு வெறியாக மாறுச்சு. அந்த வெறியில் சிரமப்பட்டு உன் கழுத்தில் மூன்று முடிசிட்டது கூட நானே தான், அதுவும் இதே கையால் தான்.” என்று தன் நடுங்கும் விரல்களை பெருமிதத்துடன் காட்டியவன், “ஆனால் நீ தான் அப்போ அதை கவனிக்கும் நிலையில் இல்லை. ஆனால் உங்க அம்மாக்கு பெரிதாக உன் மேல கோபம் இல்லை இனியா. நம்ம கல்யாணம் நிகழ்ந்ததும் அவங்க முகத்தில் ஒரு நிம்மதியை நான் கவனிச்சேன்.” என்றதும் அவள் சற்று தெம்பாய் உணர்ந்தாள்.
[the_ad id=”6605″]
“உண்மையாவா? அம்மாக்கு என்மேல கோவம் இல்லைனு சொல்றீங்களா?” ஆர்வம் பீறிட, முகத்தில் தனி பொலிவு. என்னதான் மனம் கவர்ந்தவனை மணந்து கொண்டாலும் பெற்றவர்கள் பாசம் தனிதானே…
“அப்படிதான் தெரியுது. உங்க அம்மாக்கு அஜய் மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. உனக்கு நேரடியா அவர்களால் ஆதரவு கொடுக்க முடியல. எப்படி கொடுக்க முடியும்னு நீ நினைக்குற? உன் விருப்பத்திற்கு சம்மதம் சொல்வது மறைமுகமா என் சார்பா பேசுற மாதிரி தான் ஆர்த்தம். என் சார்பா யார் பேசினாலும் என்னோட இந்த நிலையை இப்போதைக்கு மாற்ற முடியாது என்பது தான் உண்மை. அவர்களின் வாதம் எடுபடாது. அதை தான் அந்த அஜய் தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிறான்.”
கோபமும், ஆற்றாமையும் அவனை சூழ்ந்துக்கொள்ள, மனம் பாரமாகித்தான் இருந்தது அவனுக்கு. தன் மீது பாசம் வைத்த ஒரே காரணத்திற்காக இத்தனை வருடம் வளர்த்த பெற்றோரை இழக்கும் நிலை அவளுக்கு. அதற்கு தூபம் போடும் அந்த அஜய்யின் மீது கட்டுக்கடங்கா வெறுப்பும் வெறியும் வந்தது. சுயநலமாய் இனியாவுக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் என்றாலும் பொதுநலத்திற்காகவும் அவன் சீக்கிரமே குணமாகிடத்தான் வேண்டும். அதுவும் அஜய் அவனை முடக்க முயற்சிக்கும் முன்னே தகவல்களையும், ஆதாரத்தையும் திரட்ட துவங்க வேண்டும். அதற்கு எங்கிருந்து எப்படி துவங்க என்ற யோசனையில் அவன் இறங்கிவிட,
“இன்னும் என்ன எங்க அம்மானு சொல்றீங்க? அத்தைன்னு கூப்பிடுங்க.” என்று குறுக்கிட்டாள் இனியா.
“சரி இனி மாத்திக்கிறேன். இங்க சன்னல் பக்கத்தில் இருக்கும் என் பீரோவில் ஏதாவது டைரி இருக்கானு தேடிப்பாரு. இல்லைனா என் காலேஜ் சம்மந்தமான பைலை எடுத்துட்டு வா,” என்று ஏவ,
“அது எதுக்கு இப்போ?”
“எடுத்துட்டு வா இனியா. முக்கியமான வேலை ஒன்று இருக்கு. போ,” என்று அவளை விரட்ட, இதழை சுழித்து பழுப்பு காட்டிவிட்டு நகர்ந்தாள்.
“என்கிட்டையே என்னத்தையோ மறைக்குறீங்க,” என்று அங்கலாய்த்தபடியே அவன் பீரோவை அலசினாள்.
“ஏற்கனவே மனதில் எதையெதையோ போட்டு குழப்பிக்கிட்டு, வருத்திக்கிட்டு இருக்க. அதில் இதுவும் சேர வேண்டாம்.” என்று அவளை சமாதனம் செய்யும் நோக்கில் சொன்னாலும், நிதர்சனம் வேறு. அஜயின் திருட்டுத்தனம் இனியாவிற்கு தெரிந்தால் அவள் சும்மா இருப்பாளா என்பதில் சந்தேகமே. அதோடு இவளுக்கும் உண்மை தெரிந்துவிட்டது என்று அஜய்க்கு தெரிந்தால் இனியாவிற்கு ஆபத்து வந்தாலும் வரலாம் என்பது அவனது ஐயம்.
“ஒரேஒரு டைரி இருக்கு.” என்று டைரியை எடுத்துவந்து அவன் அருகில் அமர்ந்து அதை படிக்க முயல,
“அதை வச்சிட்டு இன்பனை கூப்பிடு இனியா. அம்மா தனியா என்ன செய்றாங்கன்னு தெரியல, நீ போய் அம்மாகூட பேசிட்டு இரு,” என்று அவளை விரட்ட முயலும்போதே சுடசுடச் இனிப்புடன் அவசரமாய் உள்ளே நுழைந்தார் சிவகாமி.
“திடுமென இப்படி வந்து நின்று இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்க ரெண்டு பெரும்.” முகம் கொள்ளா புன்னகையுடன் ஸ்பூனில் கேசரியை எடுத்து இதயனுக்கு ஊட்டிவிட்டு பின் இனியாவிற்கும் ஊட்டிவிட்டார்.
“இவன் பேசுறான் இனியா, என்னால நம்பவே முடியல.” என்று உணர்ச்சி மிகுதியில் விளித்த தாயின் கண்களில் ஆனந்தத்திற்கான சாயல். இனியாவும் பதிலுக்கு சிரிப்பை உதிர்க்க,
“அதோட இப்படி அவசரமா யாருமே இல்லாம கல்யாணம் நடக்கும்னு நான் நினைக்கல.” என்றவர் குரலில் வருத்தமெல்லாம் தெரியவே இல்லை. இது நடக்கவே நடக்காது என்ற வருத்தத்தில் இருக்க, நிகழ்ந்தேறிவிட்ட நல்ல காரியத்தில் மனநிறைவே…
“நான் ஆசைப்பட்ட மாதிரியே இன்பன் கல்யாணத்தில் நீ தான் முன்னே நிற்குற மாதிரி ஆகிடுச்சு பாரு… நான் படையல் போட எல்லாம் தயார் செஞ்சுட்டேன். இன்பன் கல்யாணத்திற்கு உனக்கு புது சேலை எடுத்து வச்சிருக்கேன் அதை இப்போ கட்டிட்டு வந்து சாமி கும்பிட்டுட்டு யுக்தா கல்யாண புடவை படைக்கணும்டா… யுக்தாவிடம் சொல்லி அந்த புடவைக்கு ஏற்ற ரவிக்கையும் சேர்த்தே தைத்து வாங்கி வைத்திருக்கேன். அது சரியா இருக்கானு பார்த்து அந்த புடவையையே கட்டிக்கோ இப்போ. இன்பன் கல்யாணத்திற்கு உங்க ரெண்டுபேருக்கும் புது துணி எடுத்துக்கலாம்.” என்று மடமடவென இனியாவிடன் அவர் பேசிக்கொண்டே செல்ல,
[the_ad id=”6605″]
“மருமக வந்ததும் பையனை கண்ணுக்கே தெரியல,” என்று உட்புகுந்து கேலியாய் இழுத்தான் இதயன்.
“உங்க பையனுக்கு பொறாமை அத்தை,” என்று பதிலுக்கு நொடித்தாள் இனியா.
இவர்களின் சீண்டலில் சிவகாமியின் முகம் கனிந்துவிட இதயன் அருகில் அமர்ந்தவர், அவன் கன்னத்தை மெலிதாய் தட்டியபடியே, “உண்மை தான். இனியாவுக்கும் உனக்கும் கல்யாணம் நடந்ததை இன்னுமே என்னால நம்பமுடியலை. அதற்கு சிகரம் வச்சமாதிரி நீ பேச ஆரம்பித்ததில் மனசெல்லாம் நெகிழ்ந்து போயிடுச்சு இதயா. ஆறு வருஷம் பட்ட துயருக்கு விடிவு கிடைச்சிருக்கு. இப்போ இன்பன் கல்யாணமும் நெருங்க, எதை நினைச்சி சந்தோசப்படுறதுனே எனக்கு தெரியல. இன்பன் கல்யாண வேலை வேறு தலைக்கு மேல இருக்கு. யாரை பார்க்குறது, யாருடன் நேரம் செலவழிக்கணும்னு கூட எனக்கு புரியல.” என்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடி அமர்ந்திருப்பவர் கண்களில் என்ன செய்ய என்பது போன்ற பாவனையே…
“அம்மா,”
“இன்னொரு முறை அம்மானு கூப்பிடேன்,” நெகிழ்ந்துபோய் சிவகாமி வேண்ட, இதயனுமே உணர்ச்சியின் பிடியில் சிக்கினான். தன்னுடைய நடுங்கும் விரல்களை அருகில் இருந்த அன்னையின் கையின் மேல் வைக்க, அதை கெட்டியாக பிடித்துக்கொண்டார் சிவகாமி.
“நம்முடைய இருண்ட காலம் முடிஞ்சிடுச்சு, இனி நீ எதற்கும் கலங்கக்கூடாது அம்மா.”
“இனி நான் கவலைப்பட என்ன இருக்கு? எனக்குத் தெரியும் இனியா உன்னை நல்லா பார்த்துப்பா, நீயும் பழையபடி சரியாகிடுவ.” என்று இதழ் வளைத்து சிரிக்க, இனியாவும் நெகிழ்ந்து தான் போனாள். என்னதான் அவள் மேல் நன்றியுணர்வு இருந்தாலும் மகனை முழுவதாய் அவனின் மனைவியிடம் ஒப்படைப்பது அவ்வளவு எளிதாய் அனைவருக்கும் வந்திராது. அதை சிவகாமி எளிதாய் செய்ய எதிர்காலம் வசந்தமாய் விரிந்தது.
“சரி சரி எனக்கு நிறைய வேலை இருக்கு. இனியா வாடா புடவையெல்லாம் படைச்சிட்டு உன்வீட்டுக்கு ஓரெட்டு போயிட்டு வந்துருவோம். அவங்க கோவமா இருந்தாலும் அப்படியே விட்டுற முடியுமா? ஒருதரம் பேசிப்பார்ப்போம்.” என்று சொல்லவும் இனியாவின் முகம் ஒளிர்ந்து பின் கூம்பியது.
அதை கவனித்து அவளை தேற்றும் விதமாய், “நீ ஒன்னும் கவலைப்படாத இனியா. சீக்கிரமே எல்லாம் சரியாகிடும். எழவே முடியாதுனு நினைச்சவனையே தூக்கி நிமிர்த்திட்ட, இதெல்லாம் சின்ன சுணக்கம் தான்,”
அவரின் பேச்சை ஏற்கும் விதமாய் மெலிதாய் சிரித்துவைக்க, அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார் சிவகாமி.
“இன்பனை வரச்சொல்லு இனியா.” இதயனின் குரல் அவள் செவியை எட்டவும், இன்பனை அறைக்கு அனுப்பி வைத்தாள்.
“என்னடா எதற்கு கூப்பிட்ட?”
விரல்களை மெத்தையில் கிடந்த டைரியின் மீது வைத்து, “இந்த டைரியில் யாருடைய போன் நம்பராவது இருக்கானு பாரேன், என் பிரெண்ட்ஸ் நம்பர் எல்லாம் இதில் எழுதி வைத்த நியாபம்.”
அவன் சொன்னதை செய்தாலும், எதற்கு என்ற கேள்வியும் எழுப்ப தவறவில்லை.
“அஜய்க்கு எதிராக ஆதாரம் திரட்டணும் இன்பா. அதற்கு அவன் மருத்துவமனையில் வேலை செய்யும் நேர்மையான மருத்துவரோ இல்லை செவிலியையோ யாரைவது நம் பக்கம் இழுக்க வேண்டும்.”
“அப்படி என்ன தப்பு பண்ணியிருக்கான் அவன்னு நீ சொல்லவே மாட்டேங்குற,”
“நம்பரை தேடிபிடித்து சொல்லுடா, உனக்கே போகக்போக புரியும்.” என்று அவனை துரிதப்படுத்த, சற்று தீவிர தேடல் மற்றும் மூளைசலவைக்கு பிறகு சில பல நட்புகளை பிடித்து இதயன் வேண்டியது போலவே அஜய் மருத்துவமனையில் வேலை செய்யும் ஒருவனை தன்கைக்குள் போட்டுக்கொண்டு உளவு வேலைக்கு அனுப்பினர். ஒவ்வொரு முறை இதயன் யாரிடமும் பேசும் போதும் இன்பனின் அதிர்வு கூடிக்கொண்டே போனது.
“நான் ஏதோ சின்ன விஷயமா இருக்கும்னு நினைத்தால் இவன் என்னடா இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா இருக்கான். அவனுடைய பேச்சை கேட்டால் அரசனும் அசந்துவிடுவான் ஆனால் எல்லாமே நாடகம். உன்னோட நிலையை ஆதாரமா வைத்து அவனை உள்ளே தள்ள முடியாதா?”
“முடியாது. என்னுடைய விபத்தும் அதற்கான சிகிச்சையும் அந்த மருத்துவமனையில் நடந்து ஆறு வருடம் ஆகிடுச்சுடா. சுலபமா கேசை உடச்சிடலாம். நாம் புதிதா ஆதாரம் திரட்டி தான் அவனை வளைச்சி பிடிக்கணும். முன்பைவிட இப்போது தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கு. அதை பயன்படுத்தி வெளிவராதபடி அவனை லாக் செய்யணும். அதெல்லாம் நீ கொஞ்சம் என்னனு அப்பப்போ பார்த்துக்கோ. எனக்கு இன்னும் அதைபற்றிய சரியான தெளிவில்லை. அதோடு இப்போ உன் நம்பரில் இருந்துதான் அனைவரிடமும் பேசி இருக்கேன், சோ உனக்கு தான் ஆதாரம் சம்மந்தப்பட்ட தகவல் எல்லாம் வரும். எனக்காக அதையும் கொஞ்சம் சேகரித்து வச்சிக்கோ.”
“செய்னு சொன்னா செய்யப்போறேன், அதென்ன எனக்காக செய்யுனு கெஞ்சுற?” என்று அந்த நேரத்திலும் முறுக்கிக்கொண்டான் இன்பன்.
“ஏற்கனவே உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திடேன்,” கமறிய குரலில் வருத்தத்தை தாங்கி இன்பனை பார்க்க,
“லூசு, நீ என்ன வேண்டுமென்றா எல்லாம் செஞ்ச? சொல்லப்போனால் உன்னை நல்லா பார்த்துப்பேன் என்கிற மிதப்பில் அஜய் செய்ததை எல்லாம் கண்டுப்பிடிக்காம நான் தான் ஆறு வருடமா உன்னை இப்படியே முடக்கி கஷ்டப்படுத்திட்டேன். எல்லாமே தெரிந்தும் வெளியில் சொல்ல முடியாமல் நீ எப்படி தவிச்சிருப்ப?” இளையவனின் குரல் தற்போது உடைந்து விழிகளில் துக்கம் வழிந்தது.
“ப்ச்… நீயும் வேண்டுமென்றா செய்த… விடுடா.”
“இனியா வரவில்லை என்றால் நானும் முட்டாள் மாதிரி அஜய் சிகிச்சையை நம்பி உன்னை முடக்கியே வச்சிருப்பேன்.” என்று வருந்திய இன்பனின் கண்கள் பனித்தது போல தெரிந்தது இதயனுக்கு.
[the_ad id=”6605″]
“ப்ச்… இங்க வா,” என்று இன்பனை அருகில் அழைத்தவன், “புது மாப்பிள்ளை அழக்கூடாது.” என்று அவனின் கன்னங்களை தட்டினான்.
“நீயும் தான் புதுமாப்பிள்ளை’,” என்று பதிலுக்கு சிரித்த இன்பன் அவன் அருகில் படுத்துக்கொண்டு, முன்புபோல இதயன் மேலே கைபோட்டுக் கொண்டான்.
“இனி இதுபோல உன்னை கட்டிப்பிடிச்சு தூங்குனா சண்டைக்கு வந்துருவா உன்னோட ஜான்சி ராணி.” இன்பன் கேலி பேச, தன்மேல் பதிந்திருக்கும் அவனின் கரத்தில் அடிப்பது போல நடுங்கிய கரம் கொண்டு பாவனை செய்துவிட்டு கலகலவென நகைத்தான் இதயன்.
“இன்னும் ரெண்டு நாளில் உன் பொண்டாட்டியும் சேர்ந்து வந்துருவாங்க சண்டைக்கு. அதுசரி, இனியா எப்போ ஜான்சி ராணி ஆனாள்?”
“அதெல்லாம் என்றைக்கோ ஆயாச்சு. ஆனாலும் ரொம்ப தைரியம் இனியாவுக்கு.”
“இன்னும் என்ன இனியா, அண்ணின்னு சொல்லு,”
“உன்னையே நான் அண்ணனு சொல்லல, இனியா என்னைவிட சின்ன பொண்ணு. அண்ணி என்றெல்லாம் கூப்பிட முடியாது.” என்று இன்பன் வம்புக்கு நிற்க, அவனை முறைத்தான் இதயன்.
“முறைச்சா செஞ்சுருவோமா நாங்க.” என்று புருவம் உயர்த்தியவன் முதலில் பாதியில் விட்ட பேச்சை தொடர்ந்தான், “ஆனாலும் இனியாவுக்கு தைரியம் அதிகம். அவங்க வீட்டினரையே எதிர்த்துக்கிட்டு அவங்க எதிரிலேயே உன்னை கல்யாணம் செய்தாச்சு,” என்று அவன் பேச இருவர் மனமுமே அந்த நிகழ்வை புரட்டிப்பார்த்தது. இனியாவின் மனதும் அதையே தான் அசைபோட்டுக் கொண்டிருந்தது.
கொச்சியிலிருந்து சென்னை வந்து இறங்கியதுமே இன்பனும் அவர்களுக்காக தயாராய் காத்திருந்தான்.
“பயணம் எல்லாம் எப்படி இருந்தது? தனியாக சமாளிச்சிட்டியா இனியா?” என்று கேட்டபடியே அவள் கையில் இருந்த இதயனின் பையை வாங்கிக்கொண்டான்.
“உதவி செய்யத்தான் ஆள் இருக்காங்களே, நாங்களே வந்துட்டோம்.” என்று பதில் கூறும்போதே இதயனை ரயிலிலிருந்து இறக்கி இருந்தனர்.
மலர்ந்த முகத்துடன் அவனை நெருங்கிய இன்பன், “எப்படிடா இருக்க?” என்று கேட்க,
“நல்லாயிருக்கேன் இன்பா,” என்று மலர்ந்த முகத்தோடு இதயன் வாய்மொழியாய் பதில் கூற, அந்த இடத்திலேயே பிரம்மித்து நின்றுவிட்டான் இன்பன்.
“டேய்,” பேச நினைத்தாலும் காத்துதான் வந்தது இன்பனிடமிருந்து.
“பாருங்க எப்படி அதிர்ச்சியில் உறைஞ்சி போய் நிக்குறாரு. வீட்டுக்கு போனதும் பேசி இருக்கலாம்.” என்று இனியா இதயனை கடிந்துகொள்ள,
தலைகுனிந்து மெல்ல சிரித்துகொண்டவன், “ஷாக்கை குறை இன்பா,” என்க,
கத்தியே விட்டான் இன்பன், “டேய் நீ பேசுறடா…”
“பேச மட்டும் தாண்டா செய்றேன்,” என்கவும், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த இதயனை நின்றபடியே கட்டிக்கொண்டான் இன்பன்.