கள்வனே கள்வனே – Epilogue
ஐந்து வருடங்கள் ஓடிட…
அனைத்தும் சீராகி இருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியிருந்தது. இவர்களுடையதும் தான். இரு ஐ-ஸ்கொயரும் சென்னைக்கு வந்து சேர்ந்தாகிவிட்டது. தற்போது இதயன் பகுதிநேர பேராசிரியனாகவும், மீதிநேரம் மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே நோயாளிகளுக்கு சிகிச்சையும் கொடுக்கிறான்.
“வாங்கக்கா…” இதழ்கள் பரந்து விரிந்து முகம் கொள்ளா புன்னகையுடன் வந்த பெண்மணியை அழைத்தார் சிவகாமி. இப்போதெல்லாம் அந்த புன்னகை ஒருசில நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் இணைபிரியாததாய் அப்படியே அவரிடம் ஒட்டிக்கொண்டது. வேலை முடிந்து சற்று நேரம் ஓய்வெடுத்த பின், இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த இனியாவும், யுக்தாவும் பேச்சு குரல் கேட்டு வெளியே வந்து வந்திருந்தவரை இன்முகமாய் வரவேற்றனர். இன்பனும், இதயனும் மரியாதை நிமித்தமாய் எழுந்து நிற்க,
அந்த பெண்மணி, “குங்குமம் எடுத்துக்கோங்கமா…” என்று இருவரையும் பார்த்து குங்குமச்சிமிழை நீட்ட, மென்னகையுடன் தோழிகள் இருவரும் நெற்றியில் இட்டுக்கொண்டு பின் வகுட்டிலும் வைத்துக் கொண்டனர்.
“என்ன விஷேஷம் ஆன்ட்டி?” இனியா இன்முகமாய் கேள்வி எழுப்ப,
அவளை ஒருமுறை பார்த்து மெலிதாய் முறுவலித்தவர் பின் என்ன நினைத்தாரோ யுக்தா புறம் திரும்பி, “மருமகளுக்கு வர ஞாயிற்றுக்கிழமை லீ பேலஸில் வளைகாப்பு வச்சிருக்கோம். நீங்க எல்லாரும் அவசியம் வந்துடனும்.” என்று வந்த விஷயத்தை கூற, சுருக்கென்றது இனியாவுக்கு. அவர் எதற்கு தன்னை மறைமுகமாய் தவிர்க்கிறார் என்பது புரியாத புதிர் ஒன்றும் இல்லையே. சடுதியில் அவள் முகம் தொங்கிவிட அதை கவனித்த அவள் வீட்டினருக்கும் முகம் கூம்பிவிட்டது. இருந்தும் வந்தவர் முன் வெளிப்படுத்த இயலாது அமைதி காத்தனர். இதயன் நிலைமையை கேட்கவே வேண்டாம்… அவன் அகம் அவனவளுக்காக குற்றவுணர்ச்சியில் தன்னுடைய கையாளாதனத்தை எண்ணி நொந்து அழுது கொண்டிருந்தது. விழிகளோ தவிப்புடன் அவளை வட்டமிட்டது.
யாரும் அறியாவண்ணம் இனியா மெல்ல நகர்ந்து அடுப்பறைக்கு சென்றுவிட, வலியுடன் தொடர்ந்தது இதயனின் விழிகள்.
சைகை
“வந்துறோம் ஆன்ட்டி.” யுக்தா இழுத்து பிடித்து வைத்த புன்னகையுடன் சொல்ல, அந்த பெண்மணி அமைதியாய் கிளம்பிவிட்டார்.
அவர் கிளம்பிய மறுநொடி இனியாவிடம் விரைந்தாள் யுக்தா. அங்கு குனிந்த தலை நிமிராமல் ஏற்கனவே பெரிதாக வெட்டி வைத்த வெங்காயத்தை சிறியதாய் நறுக்கிக் கொண்டிருந்தாள் இனியா.
“பேபி இங்க பாரு.” யுக்தா வலுக்கட்டாயமாய் இனியாவின் முகத்தை நிமிர்த்த, கண்கள் குளம் கட்டியிருந்தது. அது உள்ளத்தில் இருந்த வலியினால் வந்தது என்று யுக்தாவிற்கு நன்கு புரிந்தாலும், பழியை வெங்காயத்தின் மீது போட்டாள் இனியா.
“இந்த வெங்காயத்தை முதலில் தடை செய்யணும். எப்படி அழ வைக்குது பாரு என்னை…”
“நீ ஏன் பேபி அடுத்தவர்கள் பேச்சுக்கு செவி சாய்க்கிற? உன் அளவில் நீ சந்தோஷமாகத் தானே இருக்க… மத்தது எல்லாத்தையும் தலையில் ஏத்திக்க கூடாது. நீ நகரு நான் குருமா செய்றேன். நீ சப்பாத்தி போடு.” என்று அவளிடமிருந்து கத்தியை பிடுங்கி சப்பாத்தி மாவையும், தண்ணீரையும் கொடுத்து பிசையுமாறு கண்களால் சைகை செய்ய, கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டஇனியா சப்பாத்தி மாவை பிசைய நினைவலைகள் மனதிற்குள் சுழன்றது.
சென்ற வாரம் நடந்த இனிய நிகழ்வு ஒன்று மனதில் தென்றலாய் வீச, கண்கள் உப்பு நீரைச் சிந்த தயாராய் இருந்தது.
ஒற்றை விடுமுறையான அந்த ஞாயிற்றுக்கிழமையில் வீடே சோம்பலாய் இருக்க, அனைத்து வேலைகளும் தாமதமாகவே நடந்து கொண்டிருந்தது. அந்த சோம்பலிலும் குளியலறையில் அந்த வீட்டின் சில்வண்டு லூட்டி அடித்து அனைவரையும் ஒரு வழி ஆக்கிக்கொண்டிருந்தது.
“நிகில்…” கோபமாய் தன் மகனை முறைத்தான் இன்பன்.
[the_ad id=”6605″]
தந்தையின் அதட்டலை சிறிதும் சட்டை செய்யாது நிகில் தன் பெரியப்பனை பாவமாய் பார்க்க, இதயன் உருகித் தான் போனான்.
“இப்போ எதற்கு குட்டியை திட்டுற? நீ பேசாம போய் உன் வேலையை பாருடா…”
“எல்லாம் நீ கொடுக்குற இடம்தான் அவன் இப்படி ஆடிட்டு இருக்கான் அண்ணா…” மகன் இருந்ததால் அனிச்சையாய் அண்ணன் என்று வந்தது.
“இப்போ ஆடாம கிழவன் ஆனதுக்கு பிறகா ஆட முடியும்? பொறாமைப்படாம அங்குட்டு போடா…” என்றவன் இன்பனை ஒரு பொருட்டாய் மதியாமல் நிகிலை இழுத்து அவனின் குண்டு கன்னங்களில் முத்தம் வைத்தான். நிகில் கிளுக்கிச் சிரிக்க,
போலி பொறுமளோடு அவர்கள் இருவரையும் முறைத்த இன்பன் அங்கிருந்தபடியே, “ஏய் அண்ணீ உன் புருஷன் என்ன பண்றானு வந்து பாரு…” என்று கத்த,
“என்ன ரகளை பண்ணிட்டு இருக்கீங்க அப்பாக்களும் பிள்ளையும்?” என்றபடி வந்து எட்டிப் பார்த்தார் சிவகாமி. கூடவே வந்த இனியா அவர்கள் நிலையை கண்டு பட்டென சிரித்துவிட்டாள்.
“என்னங்க பண்ணி வச்சிருக்கீங்க?” கண்களில் நீர் சுரக்கும் அளவுக்கு களிப்பு கூடியிருக்க, இயல்பாய் குளியல் அறைக்குள் நுழைந்து கீழே அமர்ந்திருந்த இதயனின் இதழ்களில் ஒட்டியிருந்த சோப் நுரையை துடைத்துவிட்டாள். நிகிலுக்கு முத்தம் வைத்தபோது அவன் கன்னத்தில் இருந்தது அப்படியே இவன் அதரங்களில் தஞ்சம் புகுந்துவிட்டது.
“பெரிய பாத் டப் முழுதும் நுரையை நிரப்பி குளிக்கணுமாம்… அதற்கு எங்க போறது? அதான் இந்த சின்ன டப்பில் சோப்பை போட்டு கரைத்து நுரை வரவச்சி குளிச்சிட்டு இருக்கோம்…” என்று மனைவிக்கு வாய் பதில் கூறினாலும் விழியும், மனமும் நிகிலின் ஆர்ப்பாட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தது.
“நல்லா கரைச்சீங்க ரெண்டு முழு சோப்பையும்….” என்றவளும் நிகிலை ஆசையாய் பார்க்க,
தன் பெரியப்பா டப்புக்குள் ஏற்படுத்திய நுரைக் குவியலில் அமர்ந்து தன் உடல் முழுதையும் மறைத்துக் கொண்டு காலை வெளியில் தொங்கவிட்டு கையையும், காலையும் ஆட்டிக் கொண்டிருந்தான் அந்த சின்னவன். அவன் விளையாடிய வேகத்தில் நீர் வெளியில் தெறிக்க ஏற்கனவே நனைந்திருந்த இதயன் இன்னுமே நனைய, இனியாவையும் சேர்த்து நனைத்துவிட்டான். பதிலுக்கு அவளும் விளையாட்டாய் அவன் மீது தெளிக்க அங்கு அப்போதுதான் வந்துசேர்ந்த யுக்தா,
“அவனுக்கு ரெண்டு பேரும் ரொம்பவே செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க… சொல்ற பேச்சையே கேட்க மாட்டேங்கிறான்… நிகில் குளிச்சது போதும் எழுந்து வா. ஜலதோஷம் பிடிச்சுடும்.” என்று அதட்ட, அவன் மாட்டேன் என்று தலையசைக்க இனியா தான் சமாதானம் செய்து அவனை ஒருவழியாய் தண்ணீரிலிருந்து வெளியே தூக்கினாள்.
[the_ad id=”6605″]
இதயன் பிடியிலிருந்து இனியா அவனை தூக்கிக்கொண்டு வெளியே வரவும் யுக்தா அவனை வாங்கிக் கொள்ள, எப்போதும் போல அவனை கொடுக்கவே மனமில்லை இனியாவிற்கு… நிகிலும் அவ்வளவு நேரம் தன் பெற்றோரிடம் போக்கு காட்டிக் கொண்டிருந்தவன், யுக்தா தூக்கவும் அவள் கழுத்தை கட்டிக்கொண்டு அவள் கன்னத்தை கடித்து செல்லம் கொஞ்ச, அந்தக் கடியை வாங்க ஏங்கியது எப்போதும் அவனிடம் முத்தம் மட்டுமே வாங்கிய அவளது கன்னங்கள்… என்ன இருந்தாலும் அவள் பெரியம்மா தானே…
“பேபி சப்பாத்திக்கு மாவு பிசைய சொன்னால் கோதுமை தோசை தயார் பண்ணிட்டு இருக்க?” என்ற கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்த இனியா, நினைவுகளில் இருந்து வெளியே வந்து தன் விரல்களில் பிசுபிசுவென ஒட்டியிருக்கும் மாவை பார்த்தவள், தண்ணீர் அதிகம் ஊற்றி வைத்ததை உணர்ந்து பாவமாய் யுக்தாவை பார்த்து வைக்க, அவளின் பாவனையில் வருத்தமாகிப் போனது யுக்தாவிற்கு.
“விடு தோசையே ஊத்திக்கலாம். நீ போய் நிகில் ஹோம்ஒர்க் எல்லாம் முடிச்சிட்டானான்னு பாரு.” என்று யுக்தா சொல்ல, மெளனமாய் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் இனியா. அவள் செல்வதையே பார்த்த யுக்தாவிற்கு என்ன செய்வதென்றே விளங்கவில்லை…
அதன் பின்னான உணவு மேசையில் நிகிலின் குரல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.
“அம்மா எனக்கு இந்த தோசை வேணாம்மா…” நிகில் யுக்தாவிடம் சிணுங்க,
“எப்போதும் நூடுல்ஸ் மட்டுமே சாப்பிடக் கூடாது நிகில். இந்த தோசையை சாப்பிடு.” என்று அதட்டலுடன் தட்டை அவன் புறம் தள்ளினாள் யுக்தா.
“அப்போ எனக்கு ஊட்டிவிடு…” என்று யுக்தாவின் மடியில் ஏற தயாராய் சேரின் மீது ஏறிக்கொண்டான் நிகில். அவளுக்கு புரிந்துவிட்டது தானாக தோசையை பிய்த்து சாப்பிட சோம்பேறிபட்டுக் கொண்டு அவள் மடியில் ஏற காரணம் தேடிக் கொண்டிருக்கிறான் என்று… அவளும் மேசை நாற்காலியில் அமராது இன்பனுக்கு தோசை பரிமாறிக்கொண்டே,
“பெரிய பசங்க தானாவே சாப்பிட்டுப்பாங்க… நம்ம நிகில் சின்ன பையனா பெரிய பையனா?” என்று கேள்வியாய் நிகிலை பார்க்க, புருவங்கள் சுருங்க ஏதோ யோசித்தவன் பட்டென்று நாற்காலியில் அமர்ந்துகொண்டான், “நிகில் இஸ் அ பிக் பாய். நீங்க தோசை வைங்க.” என்று சட்டமாய் சொல்ல, மெலிதாய் சிரித்துக்கொண்டனர் மற்ற அனைவரும்…
“அத்தை நீங்க சாப்பிடுங்க நான் தோசை ஊத்துறேன்.” இனியா சிவகாமியை நகரச் சொல்ல,
“நீங்க எல்லோரும் முதலில் சாப்பிடுங்கமா. நான் ரெண்டு கல்லு போட்டு சீக்கிரம் ஊத்திடுவேன்… அப்புறம் எனக்கு ஊத்தலாம்.” என்று அடுப்பை விட்டு நகர மறுத்துவிட்டார் சிவகாமி. அவளுக்கும் பசி எடுக்க ஒன்றும் பேசாமல் இதயன் அருகில் சென்று அமர்ந்துகொண்டாள்.
சிவகாமி ஊற்றிய தோசைகளை யுக்தா எடுத்துவந்து பரிமாற, இனியா நிகில் சாப்பிட ஏதுவாய் தோசையை பிய்த்து அவன் தட்டில் போட்டாள். அந்த நேரம் கிச்சனில் இருந்து எட்டிப்பார்த்த சிவகாமி,
“இனியா சொல்ல மறந்துட்டேன்… காலையில் சீக்கிரமே எழுந்து கிளம்பிடுமா. கோவிலில் பூஜைக்கு சொல்லி இருக்கேன் நாம போகணும்.” இனியா தலையாட்டிக் கொள்ள, யுக்தா குறுக்கிட்டாள்,
“எத்தனை மணிக்கு கிளம்பணும் அத்தை?”
“ஐந்தரை மணிக்கு யுக்தா. நீ காலை டிபன் செஞ்சிடு… நானும் இனியாவும் போயிட்டு வந்துறோம்.”
“என்ன திடீர்னு பூஜை? அதுவும் பெரிய மருமகளுக்கு ஸ்பெஷலா?” இன்பன் யதார்த்தமாய் கேட்க, சற்று தயங்கிய சிவகாமி,
“இந்த பூஜை செய்தால் சீக்கிரம் புத்திர பாக்கியம் கிடைக்கும்னு சொன்னாங்க… செஞ்சு தான் பார்ப்போமேன்னு…”
சிவகாமியின் பதிலில் அமைதி குடியேறிக்கொள்ள, இதயன் முகத்தில் சலிப்பு தோன்றியது, “ஸ்… இது எல்லாத்தையும் விடும்மா. எப்போ கிடைக்கும்னு இருக்கோ அப்போ எல்லாம் கிடைக்கும். நீ சும்மா எதையாவது சொல்லிட்டு இருக்காதா.”
“அதற்கு இல்லைடா… உங்க ரெண்டு பேருக்குமே வயசு ஏறிட்டே போகுது. இப்போவே உனக்கு முப்பந்தைந்தை தாண்டிவிட்டது. இனியாவுக்கும் முப்பது ஆகிட்டு… இனியும் லேட் ஆனா…”
“நான் வரேன் அத்தை.” குரல் கமற அவளுக்கே கேட்காத குரலில் இனியா குறுக்கிட்டு சம்மதம் தெரிவிக்க, இதயனின் இதயத்தை யாரோ கீறிவிட்டது போன்றதொரு வலி.
அதே வலியுடன் கண்டிப்புடன், “இனியா நான் தான் பேசிட்டு இருக்கேன்ல… நீ சும்மா இரு.” என்று இனியாவை அடக்கிவிட்டு சிவகாமியை காண,
“அவளே வரேன்னு சொல்கிறாள். நீ ஏன்டா இடையில் குழப்பம் பண்ற?”
“அப்போ நானும் வரேன். மூன்று பேருமே போவோம்.”
“இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம். உன்னை கூப்பிடும் போது நீ வந்தால் போதும்.”
“அப்படியெல்லம் விடமுடியாது. எதற்கு அவள் மட்டும் வரணும்? எல்லோரும் அவளை குத்தமாய் பார்ப்பதற்கா?” என்று இதயன் வம்பு செய்ய, அவனை கண்டிக்கும் விதமாய் இனியா உட்புகுந்து,
“நான் போறேன்னு சொல்லிட்டேன், நீங்க ஏன் தேவையில்லாமல் அத்தைகிட்ட வாக்குவாதம் பண்ணிட்டு இருக்கீங்க?”
[the_ad id=”6605″]
மனைவியை முறைத்தவன் தன் கூற்றிலிருந்து பின்வாங்குவதாய் இல்லை, “சொல்லுங்கமா… நீங்களும் இனியாவுக்கு தான் குறையிருக்குனு நினைக்கிறீங்களா?” என்று அவர் முகம் பார்த்து கேட்க பதறிவிட்டார் சிவகாமி.
“என்னடா இப்படி பேசுற? நான் ஏன் அப்படியெல்லாம் நினைக்கப் போறேன்?”
“நீங்க தான் பரிகாரம், விரதம் அதுஇதுனு அவளை ஏதாவது செய்யச் சொல்றீங்க.”
“அதுக்காக நான் இனியாவை காரணமா நினைக்கிறேன்னு எப்படி சொல்லலாம்?”
“இது சம்மந்தமா எதுவென்றாலும் எல்லாத்துக்கும் அவளை மட்டுமே கேட்டு தானே கஷ்டப்படுத்துறீங்க? ஏன் குறை என்கிட்ட கூட இருக்கலாம். அதெல்லாம் யாரும் யோசிப்பது கிடையாது.” என்று கிடைத்த நேரத்தில் மனக் குமுறலை கொட்டினான் இதயன்.
“ஒழுங்கா சாப்பிடுறதுனா சாப்பிடுங்க, இல்லைனா எழுந்து போங்க… சும்மா எல்லோரையும் காய்ச்சாதீங்க.” என்று இனியா சாட, வாக்குவாதம் திசை திரும்பியது.
“எதற்கு இப்போ என் வாயை அடைக்கிற? உண்மையை தானே சொல்லிட்டு இருக்கேன். பிரச்சனை இருப்பது என்கிட்ட ஆனால் அதற்கான பழியை சுமக்கிறது நீ. பேச்சு வாங்குறது நீ. உன்கிட்ட கேட்குற யாரும் என்கிட்ட கேக்குறது இல்லை. அதெல்லாம் பார்க்கும் போது எனக்கு கஷ்டமா இருக்காதா?”
“அது தான் நிதர்சனம். அத்தை வந்து உங்ககிட்ட எப்படி கேட்பாங்க? இல்லை மற்றவர்கள் தான் எப்படி கேட்பாங்க? ஈசி டார்கெட் நாங்க தான அப்போ என்கிட்ட தான் கேட்பாங்க. அதையெல்லாம் நம்மால் மாற்ற முடியாது. அதை புரிஞ்சிகோங்க முதல்ல,”
“ஸ்… ஏன் இப்போ ரெண்டு பேரும் தேவையில்லாமல் வார்த்தையை வளர்த்து உங்களை நீங்களே வாட்டிக்கிறீங்க? மற்றவர்களை விடுங்க, நீங்க சந்தோஷமா இருங்க அது போதும்… நிகில் இருக்கான் நமக்கு.” இன்பன் சமாதானம் செய்ய,
“நல்லா சொல்லுங்க உங்க அண்ணனுக்கு.” என்றுவிட்டு எழுந்து தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள் இனியா.
அவள் செல்வதை கண்டு தலையை சிலுப்பியவன் இனியா தட்டில் இருந்த தோசைகளையும் தன் தட்டில் மாற்றிக்கொண்டு தேவையான சட்னியையும் வைத்துக்கொண்டு உணவுடன் அவளைத் தொடர்ந்து அறைக்கு சென்றுவிட்டான்.