என் காதல் கனா 17
பெரும்பாலான சமயங்களில் மனதிற்கு பிடித்த முடிவினை எடுக்க முடியா வண்ணம் சந்தர்பங்கள் வாய்த்துவிடும். இதுவும் சதீஷைப் பொறுத்தவரையில் மனதிற்குப் பிடிக்காத முடிவு என்றாலும், சரியான முடிவு.
இந்த எண்ணத்துடன் புரண்டவனுக்கு மனதில் சுஜினியும், தன் பழைய காதலி சுபாவும் வந்து சென்றனர். சுபாவை மூன்று வருடங்கள் நானா காதலித்தேன் என்ற அளவிற்கு மூளை கேள்வி கேட்டது. இதற்கும் மேல், சுபாவுடன் திருமணம் என்னும் அளவிற்குக் கூட சென்றுவிட்டதை நினைக்கையில் ஒருவித பிரமிப்பே மிஞ்சியது.
சுஜினியுடன் உண்டான துள்ளலோ, ஆத்மார்த்தமான சந்தோஷமோ, உரிமையுடன் கூடிய நட்போ சுபாவிடம் கண்டதில்லை. அதிலும் சுஜியின் கண்களைக் கண்ட போது தோன்றிய அந்த படபடப்பு, அவள் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டு உலகம் மறந்து போய்விட்ட நொடிகள் என அந்தக் கெமிஸ்டரி, சுபாவிடம் உண்டானதேயில்லை.
பெரும்பாலான நேரங்களில் ஏதாகிலும் ஒரு சிறுவிஷயத்தைப் பற்றி சுபா புலம்பிக் கொண்டிருப்பாள், அல்லது உப்பு சப்பில்லாத விஷயத்திற்கு குழந்தைப் போல் முகத்தை தொங்கப்போட்டு அமர்ந்திருப்பாள்.
“சுபா, சுபி “என்று கொஞ்சி சமாதானப்படுத்தி, வெளியே அழைத்துச் சென்று, அவள் செய்யும் ஷாப்பிங்கிற்கு உறுதுணையாக இருந்து, ஒவ்வொரு உடையாக போட்டு அவள் சலிப்படையும் வரை மால்களில் கால்கடுக்க காத்திருந்து என காதலித்த வருடங்கள் முழுவதும் தன்னிலை இழந்து முழுக்க அவளுக்காகவே தன் நேரம், மகிழ்ச்சி அனைத்தையும் அர்பணித்தவே அவனுக்குப்பட்டது.
[the_ad id=”6605″]
“இதெல்லாம் நானா செஞ்சேன்”என வியந்த சதீஷிற்கு அப்போது தவறாகத் தெரிந்திறாத விஷயங்கள், தள்ளி நின்று சுயபரிசீலனை செய்யும் போது அபத்தமாகத் தோன்றின. சுபாவுடனான அந்த உறவில், தான் எங்குமே இருந்ததாக தோன்றவில்லை. இப்படி கலவையான எண்ணங்களுடன் உறங்கிப்போனான்.
அடுத்த வாரம் முழுக்க, இப்படியான எண்ணங்களுடன் கழிந்தது. வார இறுதியில் சுஜினியை மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. எதற்கு தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே எண்ணினான். ஆனால் விவேக், நிறைய ஆர்வமாக இருந்தான்.
“நான் வரலைடா…”என்று சதீஷ் மறுத்த போதும், விடாப்படியாக சதீஷை இழுத்துக் கொண்டு சுஜினியைக் காணச் சென்றான். விவேக்கிற்கு தன் நண்பனை தவறாக நினைத்துவிட்டோமே என்ற குற்றஉணர்வு நிறைய இருந்தது.
அதைவிடவும் அன்று பேசிய போது சதீஷ் கூறிய ஒருவார்த்தை மிகவும் உருத்தியது. அதனால் நண்பனை சகஜமாக்கும் முயற்சியில் வெகுவாக ஈடுபட்டான்.
“அவ உன்னை லவ்பண்ணா, எத்தனை பசங்க பக்கத்தில நின்னாலும், அவளுக்கு நீ மட்டும் தான் தெரிவ, நானோ மத்தவங்களோ பெருசா தெரியமாட்டோம்… உனக்கும் அப்படித்தான்…நான் உங்கூட இருக்கறது தான் உன் பிரச்சனைன்னா நான் விலகிக்கறேண்டா…எனக்கு உன்னோட சந்தோஷம் முக்கியம்…யோசிச்சுக்கோ”என்று போகிறபோக்கில் சதீஷ் கூறிய வார்த்தைகள் விவேக்கின் மனதில் ஆழப்பதிந்து போயின.
அதனால் இந்த முறை நண்பனை அழைத்துச் செல்ல சங்கடம் தோன்றவில்லை. அந்த வார இறுதியில் அதே பூங்காவிற்கு ரானுடனும், சதீஷுடனும் சென்றான். இம்முறை மற்றவர்கள் பூங்காவை சுற்றச் செல்ல, விவேக் கையுடன் கொண்டுவந்திருந்த கதைப் புத்தகத்தை பிரித்துக் கொண்டு சதீஷின் அருகிலேயே இரண்டடி இடைவெளிவிட்டு அமர்ந்தான்.
சதீஷின் அருகில் அமர்ந்திருந்த சுஜினியின் எண்ணவோட்டம் குழப்பமாக மாறியிருந்தது. சதீஷைக் காணும் ஆவலில் அன்றும் தன்னை சிரத்தையாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தாள். வித்யாவும் எம்மாவும் அடித்த கிண்டல்களுக்கு எல்லாம் சிரித்துக் கொண்டே பூங்காவினை அடைந்தாள்.
ஆனால் சதீஷின் முகத்தில் காணப்பட்ட ஒதுக்கம் குழப்பத்தைக் கொடுத்தது. வந்ததில் இருந்து சதீஷின் கண்கள் சுஜினியின் கண்களை சந்திக்கவேயில்லை. ஒருவித இயந்திரத்தன்மையுடன் நடந்து கொண்டது போல் தோன்றியது.
“எல்லாரும் வாக் போகட்டும், அப்பறமா என்னன்னு கேட்கலாம்”ஏன்று தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஆனால் சுஜினி எதிர்பார்த்ததற்கு மாறாக, மற்றவர்கள் சென்றுவிட விவேக் அங்கேயே அமர்ந்திருந்தான்.
வித்யா முடிந்த மட்டும் விவேக்கை அழைத்தபோதும் விவேக் உடன் செல்ல மறுத்துவிட்டான். சுஜினிக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. சிறிது நேரம் அமைதியாக தன்போக்கில் பேசிக் கொண்டிருந்த சதீஷின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்தாள்.
சிறிது நேரம் செல்லவும் “தலை கொஞ்சம் வலிக்கறாப்ல இருக்கு…ஒரு காபி குடிச்சா தேவலாம்…”என்று பொதுப்படையாக மொழிந்தாள். சதீஷிடமிருந்து எந்த பதிலும் இல்லை. விவேக் ஏதோ பேசத் துவங்கும் முன்னர்,
[the_ad id=”6605″]
இடைமறித்த சுஜினி, “விவேக், இஃப் யு டோண்ட் மைண்ட் எனக்கு ஒரு காபிசீனோ வாங்கிட்டு வர்றீங்களா ப்ளீஸ்…பாதியில ப்ரேக் போனா, திரும்பவும் மனசு படிக்க உட்காராது…அப்பறம் அடுத்த வாரமும் வரவேண்டியிருக்கும்”என்று சடைந்து கொள்ள, விவேக் வேகமாக எழுந்தான்.
“உனக்கு ஏதாவது வேணுமாடா?”என்று சதீஷைப் பார்த்து வினவ, சதீஷ் வேணாம் என்று தலையசைத்தான். “ஐ வில் பி பேக்”என்று மொழிந்தவன், பூங்காவை அடுத்து கடைவீதிகள் அடங்கிய தெருவினை நோக்கி நடக்கத்துவங்கினான்.
விவேக்கின் தலை மறைந்ததும், கையில் பிடித்திருந்த டைரியினை பட்டென்று மூடியவள், “என்ன ப்ராப்ளம் சத்தீஷ்?” என்று நேரடியாக வினவினாள். விவேக்கை அனுப்பும் போதே இது போல் ஏதேணும் பேசுவாள் என பெரிதும் எதிர்பார்த்த சதீஷிற்கு சுஜினியின் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
“ஓண்ணும் ப்ராப்ளம் இல்லை…நீ டிபென்சர் பத்தி கவனிக்கறியா?”
“நான் டிபென்சருக்காக இங்க வரலை இன்னைக்கு….அது உங்களுக்கும் தெரியும்…சோ ரொம்ப அலட்டிக்காம ஏன் இப்படி இருக்கீங்கன்னு சொல்லுங்க…”
“நான் நார்மலாத்தான் இருக்கேன்…நீ கவனி” என்றவனின் முகவாயைத் தொட்டு தன்பக்கம் திருப்பினாள். கொஞ்சம் திடுக்கிட்ட போதும், சதீஷ் சுஜினியின் கைகளை கீழே இறக்கிவிட்டான்.
“என்ன தெரியனும் உனக்கு. அவன் உன்மேல பைத்தியமா ஆனாத்தான் புரிஞ்சுக்குவியா?நான் உன்கூட பேசறதும் பழகறதும் அவனுக்குப் பிடிக்கலைப் போதுமா”
“உங்களுக்கு பிடிக்கலைன்னு சொல்லுங்க நான் விலகிக்கறேன்…அவனுக்கு பிடிக்கலைன்னு சொல்லறது என்ன வகையில நியாயம்…யு டோண்ட் லைக் மீ சத்தீஷ்?” என்று நேரடியாக விஷயத்தை கேட்டுவிட்டிருந்தாள்.
“சுஜினி ப்ளீஸ்…யு ஆர் எம்பராஸிங்க மீ…”
“என்னைவிட உங்களுக்கு ரொம்ப எம்பராஸ் ஆகிடாது…ஒரு பொண்ணு தானா வந்து பேசினா அது சீப்பா இருக்கில்ல உங்களுக்கு?”
“லூசுத்தனமா நீயா ஏதாவது உளறாத சுஜி…”
“அப்பறம் என்ன பிரச்சனை உங்களுக்கு? என் கூட பேசறது பிடிக்கலையா? வந்ததில இருந்து நானும் பார்க்கறேன், ஏதோ நான் ஒருத்தி இல்லாத மாதிரியே நடந்துக்கறீங்க…இந்த புக், நோட்டு மாதிரி ஒரு ஜடப்பொருள்ட்ட பேசறாப்ல பேசறீங்க….ஐ காண்ட் டாலரேட் இட் சத்தீஷ்….விவேக் வரட்டும் நான் நேராவே சொல்லிடரேன்…”
“ஹே…ப்ளீஸ் டோண்ட் டு எனிதிங் ரேஷ்…என்ன தெரியனும் உனக்கு இப்போ? கேளு….”
“வந்ததில இருந்து என் முகத்தை பார்த்துகூட நீங்க பேசலை..”
“பார்க்கறமாதிரி இல்ல, அதனால தான் பார்க்கலை”என்று நீண்ட நேரம் கழித்து கண்களில் கொஞ்சம் குறும்பு மின்ன, சதீஷ் பேசியபோது தான் சுஜினிக்கு நிறைவாக இருந்தது.
[the_ad id=”6605″]
“யூ”என்று ஆரம்பித்தவள், “பீ சீரியஸ்….என்ன நடந்தது.. ஏன் என்னை அவாய்ட் பண்ணறீங்க? உங்க மனசில என்ன நினைக்கறீங்கன்னு சொல்லுங்க ” என சதீஷின் கண்களை கொக்கி போட்டு தன் பக்கம் திருப்பி, அவன் இமைகளில் இருந்து பார்வையை விலக்காமல் வினவினாள்.
கோபத்தில் கொஞ்சம் சிவப்பேறிப்போன மூக்கின் நுனியையும், நெற்றியில் பளிச்சிட்ட சிறிய கருப்பு பொட்டையும், காதுகளில் அசைந்தாடாமல், காதுடன் ரகசியம் பேசிக் கொண்டிருந்த ஒற்றை முத்து தோட்டையும் அளவெடுத்தவன், ரகசியம் போல் குரலை வெகுவாக தாழ்த்திக் கொண்டு “பார்க்க ரொம்ப சகிக்காம இல்லை, கொஞ்சம் சுமாரா இருக்க…”என மெங்குரலில் மொழிந்தான்.
ஏதோ பெரிய விஷயமாக சொல்லப்போகிறான் என ஆர்வத்துடன் அவன் முகம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் கேலியாகப் பேசியது சிரிப்பை வரவழைக்கவில்லை. மாறாக முகத்தில் ஒரு வித சோகமும், என்ன சொல்லப்போகிறானோ என்ற கவலையும் மேலோங்கியது.
தனது பேச்சினால் கொஞ்சம் லகுவாவாள் என எண்ணிய சதிஷிற்கு சுஜினியின் கவலை தோய்ந்த முகத்தினைக் காணப் பிடிக்கவில்லை. அவளது மனது புரியத்தான் செய்தது. இருப்பினும் முன்தினம் விவேக்கிற்கு கொடுத்த வாக்குறுதிகளும் தவறாமல் நினைவில் எழுந்தன.
ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டவன், “சுஜி….எனக்கு எதையும் காம்ப்ளிகேட் பண்ணிக்க விருப்பம் இல்லை. விவேக் லைக்ஸ் யு… அதுக்காக எனக்கு பிடிக்கலையா, பிடிச்சிருக்கான்னு தேவையில்லாம கேள்வி கேட்காத…ப்ளீஸ்…எனக்கும் பதில் சொல்லத் தெரியலை. இப்போதைக்கு நான் உங்கிட்ட பேசறதையோ, பழகறதையோ விவேக் விரும்பலை…”
“இதுல விவேக்கோட விருப்பு வெறுப்புகள் மட்டும் சம்பந்தப்படலை சத்தீஷ்….”
“தெரியும் சுஜி…ஆனா, என்னால அவனை கஷ்டப்படுத்த முடியாது. வாய்விட்டே நீ அவகூட பேசறது பிடிக்கலைன்னு அவன் சொன்னதுக்கு அப்பறமும் அவனோட மனசை நான் மதிக்கலைன்னா, நான் ஃப்ரெண்டே இல்லை….ஹோப் யு வில் அண்டர்ஸ்டேண்ட்…” என்று உணர்ச்சிகள் துடைத்த குரலில் விளக்கமளித்தான் சதீஷ்.
சுஜினிக்கு அவனது விளக்கங்கள் எதுவும் சமாதானமாகவில்லை. விவேக்கும், சதீஷும் ஒரு தலையாகவே முடிவெடுப்பதாகத் தோன்றியது. தன் மனதைப் பற்றியோ, தனக்கும் பிடித்திருக்கிறதா என்பதைப் பற்றியோ எவருமே யோசிக்கவில்லையே என கோபம் கொள்ளத் துடித்தது.
அதைவிடவும், “உன்னிடம் பேச விரும்புகிறேன்…என்னிடம் சகஜமாகப் பேசு”என தானாக ஒப்புக் கொண்ட போதும், சதீஷை விலகி வைத்துப் பார்ப்பது அவமானமாக இருந்தது.
சுஜினியின் கண்கள் மெல்லமாக கலங்குவதையும், வெகுவாக தன்னை கட்டுப்படுத்திக் கொள்வதையும் காண சதீஷிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவன் பார்த்த வரையிலும் சுபாஷினி வேறு ரகம்.
சட்டென கண்களில் கண்ணீர் மூண்டுவிடும். அதை கட்டுப்படுத்தவெல்லாம் நினைக்கமாட்டாள். அருகில் யார் இருக்கிறார்கள், எங்கே இருக்கிறோம் என சுற்றம் சூழல் எல்லாம் மறந்து, தனது துக்கமும் மனவருத்தமுமே பெரிது என கொட்டித் தீர்ப்பாள்.
சுஜினி தன் கண்கள் கலங்குவதை பிரயத்தனப்பட்டு மறைப்பதைக் கண்டு ஆறுதலாக சதீஷ் வாயைத் திறக்கும் முன்னர், “உன்னோட காபி சுஜி”என ஸ்டார்பக்ஸ் கோப்பையை கைகளில் நீட்டியபடிக்கு புன்னகையுடன் நின்றிருந்தான் விவேக்.