Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

37. துளசி - காட்டுப்பாதையில் ஒற்றை பூ

காட்டுப்பாதையில் ஒற்றை பூ – 21

சிவபாலனுக்கு வீட்டிற்கு செல்லவே பயமாக இருந்தது,  ஆம் பயம் தான் வெகுகாலமாக அவனைச் சூழ்ந்திருந்த தனிமை மீண்டும் அவனை வாரிச் சுருட்ட காத்திருப்பதாக அவன் உள்ளம் சொல்லியது.

 

அவள் இல்லாத வீடு அவள் இல்லாத அறை அந்த நினைவே நெஞ்சை அறுத்தது,  நேரே மாமனார் வீடு சென்றுவிடலாமா என்று ஒரு யோசனையும் ஓடியது.



Advertisement

 

“வரமாட்டேன்னு சொல்லிட்டான்னா என்ன செய்ய…  அப்படி சொன்னா தூக்கிட்டு வந்துட வேண்டியது தான் நம்ம வீட்டில வெச்சு சமாதானம் செஞ்சுக்கலாம்” என்று இதுவா அதுவா என்று ஏதேதோ சிந்தனைகள்.

Advertisement

 

Advertisement

நேரம் இரவு எட்டை கடந்திருந்தது அவன் அலைபேசி ஒலியெழுப்ப அவசரமாக எடுத்துப் பார்த்தான் ஒருவேளை மனைவியோ என்று இல்லை அவனின் மாமனார்தான் அழைத்திருந்தார்.

Advertisement

 

“மாப்ள ப்ரியா இங்க வரல காலைல இருந்தே பார்லர்ல தான் இருந்தா இப்போவும் உங்க வீட்டுக்குத் தான் போயிருக்கா,  சண்டையோ வருத்தமோ உங்களை  விட்டு எங்கேயும் போக மாட்டா மாப்ள நிம்மதியா வீட்டுக்குப் போங்க” என்றவர் வைத்தும் விட்டார் அவனின் பதிலையெல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை.

 

அப்படியொரு நிம்மதி அவனிடம் சட்டென்று ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது,  அவன் அறையிலிருந்து வெளியில் வர உள்ளே நுழைந்தான் முத்து.

 

“அண்ணே இன்னைக்கு நைட் சாப்பாடு பூரணியம்மாவே கொடுத்துட்டாங்க உங்களுக்கு அங்க வீட்டில பிரியமாகிட்ட குடுத்துட்டேன்,  ஆமா என்னாச்சு தங்கச்சிக்கு முகமே சரியில்ல கேட்டேன் வேலை நிறைய அதான் டைர்ட் சொன்னுச்சு” என்று பேசிக்கொண்டே  அவன் குளிக்க தயாராகச் சிவபாலன் வேகமாக வண்டியை நோக்கி நடந்தான்.

 

இவன் சென்றபோது அவனுக்கான உணவு அங்கே மூடி வைக்கப்பட்டிருக்க அவன் மனைவி கட்டிலை முழுதாக ஆக்கிரமித்துப் படுத்திருந்தாள் சுவர் பக்கம் தலையணை வைத்து நடுவில் படுத்துக் கால்களை மடக்கி என்று அவன் படுக்க முடியாத படி அணைத்து வேலையும் செய்திருந்தாள்.

 

பார்த்தவனுக்கு அப்படியொரு சிரிப்பு நெஞ்சம் நிறைந்து தளும்பியது அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள் இன்றும் அழுதிருக்கிறாள் மனதின் அலைப்புறுதல்  அந்தக் களைப்பு  என்று புரிந்தது.

 

குளித்துவந்தவன் உணவை உண்டுவிட்டு கட்டிலில் அமர்ந்தான் அவன் நினைத்தால் அப்படியே அவளை அள்ளி மேலே போட்டுக்கொண்டு இறுக்கிக்கொள்வான் வேண்டாம் அவளுக்கான நேரம் கொடுக்க விரும்பினான்.

 

அவள் தலையை மெல்ல கோதினான் விழி அகற்றாமல் அவளையே பார்த்திருந்தான் எங்கும் செல்லவில்லை தன்னை விட்டுச் செல்லவில்லை இத்தனைக்கு பிறகும் தன்னிடமே வந்திருக்கிறாள்,  மெல்ல மெல்ல கண் மூக்கு நெற்றி இதழ்கள் என்று முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தான்.

 

அப்படியே அமர்ந்துகொண்டே விழிகள் மூடினான் இடையில் சட்டென்று விழித்துப் பார்த்தான் பிள்ளையைப் பெற்ற புதிய  தாய் இடையிடையே இரவில் விழித்துப் பார்ப்பாள் தன் பிள்ளைக்குச் சுவாசம் வருகிறதா என்று மூக்கிலும் நெஞ்சிலும் கை வைத்துப் பார்ப்பாள் அந்த நொடி அவளுக்குக் கிட்டும் அந்த நிம்மதி இருக்கிறதே அப்பப்பா.

 

இந்த உணர்வைப் பல தாய்மார்களும் கடந்துதான் வந்திருப்பார்கள் அப்படியொரு உணர்வில் இருந்தான் சிவபாலன் அவளைத் தொட்டு தொட்டு உணர்ந்துகொண்டிருந்தான் தன்னுடன் அவள் இருக்கிறாள் என்பதை மீண்டும் மீண்டும் தன் மனதுக்கு சொல்லிக்கொண்டிருந்தான்  அவன் கடந்துவந்த தனிமை அப்படி வலிகள் அப்படி அதை அனைத்தையும் துடைத்துத் தூர போட்டவள் அவன் சரிபாதி.

 

அவள் பிரிவைத் தாங்கும் திடம் அவனுக்கு இல்லை அவள் இல்லையென்றால் அந்த நொடி அவன் உலகம் நின்றுவிட வேண்டும் என்று விரும்பினான் சிவபாலன் அவள் கோபத்தை மதித்தான் தன்னுடன் சண்டை போடட்டும் பேசாமல்  இருக்கட்டும் அனைத்தையும் அருகிலேயே இருந்து  செய் என்கிறான்.

 

ஒரு வாரமாக அவனிடம் பேசாமல் அவனுக்குப் போக்கு காட்டுகிறாள் அவன் மனைவி காலைச் சமைத்து அவனுக்காகக் காத்திருந்து அவனுடன் சேர்ந்துதான் சாப்பிடுகிறாள் மதிய உணவையும் முத்துவிடம் கொடுத்துவிடுகிறாள் என்ன ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை.

 

அவள் குரல் கேட்க்காமல் அவனால் அதற்குமேல் தாக்கு பிடிக்க முடியவில்லை அன்று இரவு எட்டு மணிபோலப் பார்லர் சென்றான் அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர் பையன்கள்  இருவர் இருந்தனர் பெண் பிள்ளைகள் கிளம்பியிருந்தனர்.

 

“அக்கா நாங்க நிக்கவா” என்றான் அதில் ஒருவன்.

 

“வேண்டாம் நீங்கக் கிளம்புங்க” என்று சக்திப்ரியா சொல்லிக்கொண்டிருக்க சிவபாலன் கதவு திறந்து உள்ளே சென்றான்,  யாரோ கஸ்டமர் என்று நினைத்து இன்றைக்கு முடியாது என்று சொல்ல வாய்திறந்த அந்தப் பையன் அப்படியே நின்றுவிட்டான்.

 

சிவபாலன் எப்பொழுதுமே மேலே வரமாட்டன் இன்று வந்து நிற்க “வாங்க சார்” என்றான்.

 

தலை அசைத்தவன் விழிகளைச் சுழற்ற உள்ளே பெண்களுக்கான தனி பிரிவில் ஏதோ வேலையாக இருந்தாள் சக்திப்ரியா “யாருடா” என்றாள் அங்கிருந்தே சத்தமாக.

 

சிவபாலன் இவனிடம் ஏதோ கூறிவிட்டு உள்ளே சென்று அந்தச் சூழல் நாற்காலியில் அமர்ந்தான்.

 

 

“அக்கா சார் வந்திருக்கார் ஆயில் மசாஜ் பண்ணணுமாம் அப்படியே தாடி எடுக்கணுமாம்” என்க.

 

“இந்த நேரத்திலயா காலைல வரச்சொல்லு டைம் ஆயிடுச்சுல்ல” என்றாள்.

 

“அப்படிலாம் அவர்கிட்ட சொல்ல முடியாது” என்றான் அவன்.

 

“அப்படி எந்த அப்பாடக்கர்டா வந்திருக்கிறது” என்று வெளியில் வந்தவள் ஆண்கள் பிரிவில் எட்டி பார்க்க அங்கே அவள் கணவன், உடன் இருந்த மற்றவன் தாடியை ஷேவ் செய்யத் தயார் செய்ய.

 

“அடிங்க தாடில கைவெச்ச நாளைக்கு வேலை செய்யக் கையிருக்காது கிளம்புடா” என்றாள்.

 

சிவபாலன் இதழ் கடித்து சிரிப்பை அடக்கினான் மற்றவர்கள் இருவரும் அர்த்தமாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டே “அப்போ ஹாப்பி நைட் அக்கா” என்றுவிட்டு ஓடியேவிட்டனர்.

 

அவள் அவனை முறைத்தே நிற்க ஒருவாரமா ரொம்ப டென்ஷன் தூங்க முடியல பொண்டாட்டி வேற பேசமாட்றா இங்க ஆயில் மசாஜ் இருக்கா இல்லையா” என்றான் விழிகளை மூடிச் சாய்ந்து அமர்ந்துகொண்டு.

 

சில நொடிகளில் அவள் விரல்கள் அவன் கேசத்தில் மாயம் செய்தது அவன் உடல் மெல்ல தளர்ந்தது உடல் எங்கும் புது இன்பம் மனம் லேசாக அவனை உறக்கம் தழுகிக்கொண்டது.

 

உறங்கும் அவனையே தான் பார்த்திருந்தாள் சக்திப்ரியா பார்லர் கதவைப் பூட்டியவள் ஒரே ஒரு விளக்கை மட்டும் போட்டுவிட்டு வந்து அங்கிருந்த சோபாவில்  படுத்துவிட்டாள் அவனாக எழட்டும் பிறகு வீட்டிற்கு போகலாம் என்று விட்டுவிட்டாள்.

 

நல்ல உறக்கத்தில் இருந்தவள் சட்டென்று விழிகளைத் திறக்கச் சிவபாலன் சோபாவில் படுத்து  அவளைத் தன் மீது படுக்க வைத்திருந்தான்.

 

“என்ன செய்றீங்க” என்று அவள் எழப்பார்க்க அவளை இறுக்கமாகத் தன்னோடு பிணைத்தான்.

 

“நான் கோவமா இருக்கேன் விடுங்க என்னை” என்றாள்.

 

“இருந்துட்டு போ ஆனா எனக்குக் கோவம் இல்லையே அதால நான் பிடிச்சுக்குறேன்” என்றான்.

 

“அவங்க சொன்னாங்கன்னுதானே…” என்றவள் வார்த்தைகளைத் தனக்குள் விழுங்கிக்கொண்டான் சில நொடிகள் கடந்து அவள் இதழ்களை  விடுவித்தவன்.

 

“என் காதலை நீ எங்கேயுமே உணரலயா சக்தி” என்றான் அவள் விழிகளைப் பார்த்து.

 

முகத்தைத் திரும்பியவள் “குழந்தையைத் தள்ளிப் போட்டீங்க தானே உங்க வேகத்துக்கு அடுத்த மாசமே பாப்பா வந்திடும் நினச்சேன்” என்றவளை பார்த்து அவன் கண்கள் சிரித்தது.

 

“என்கிட்டே உண்மையை மறச்சுடீங்க” என்றாள்.

 

ஆழ மூச்செடுத்தவன் “அது அப்படி இல்ல சக்தி…” என்றவனை தடுத்தவள் “எனக்குத் தெரியும்” என்றாள்.

 

“என்ன தெரியும்” என்றான் அவன்.

 

“உங்களுக்கு இந்த வீட்டில இருக்க பிடிக்கல நமக்கு நடக்குற எல்லா நல்லதும் நம்ம வீட்லதான் நடக்கும்னு சொன்னீங்கல்ல,  நீங்க எதுக்கோ வெய்ட் பண்ணிட்டு இருந்தீங்க அது முடிஞ்சதும் நம்ம வீட்டுக்கே நாம போறோம் அதுக்கு அப்புறம் தான் பாப்பா அதான” என்க.

 

அவளை விழிகள் விரித்துப் பார்த்தவன் “எப்படிடி! உண்மையா என்னை இவ்ளோ புரியுமா சக்தி உனக்கு” என்றான் ஆச்சர்யமாக அவள் முகத்தை வெட்டினாள்.

 

“அச்சோ என் தங்கமே” என்று அவளின் கன்னம்பற்றி அழுத்தமாக இதழ் ஒற்றினான் அவனைத் தள்ளிவிட்டவள் “நான் இன்னும் கோவமாதான் இருக்கேன்” என்றாள்.

 

“நீ என்னவா வேணா இருந்துட்டு போ” என்றவன் அவளை இழுத்து இதழ் பூட்டினான்,  அவன் விட்டதும் வேகமாக எழுந்தவள் ஹான்ட் பேகை எடுத்துக்கொண்டு வெளியில் செல்ல மார்க்க அவளைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டான் சிவபாலன்.

 

 

“ஐயோ என்ன பண்றீங்க விடுங்க விடுங்க” என்று கத்தினாள்.

 

“அடியே பேசாம இரு யாரவது பாத்தா கடத்திட்டு போறேன்னு நினைப்பாங்க” என்றவன் அவளைத் தோளில் போட்டுக்கொண்டே பார்லரை பூட்டிவிட்டு கீழே வந்து அவளை வண்டியில் ஏற்றினான்.

 

இன்று எப்படியும் அவளைத் தூக்கி செல்லும் முடிவில் தான் வந்திருந்தான் அவனுள் அப்படியொரு உற்சாகம் வண்டி வீட்டிற்கு செல்லாமல் வேறு எங்கோ செல்வதை பார்த்தவள் “எங்க போறீங்க” என்றாள்.

 

“உன்னைக் கடத்திட்டு போறேன்” என்றான் அவனை முறைத்தவள் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.

 

“பின்னாடி படுத்துக்கோ சக்தி அங்க போனதும் எழுப்புறேன்” என்றான்.

 

“முடியாது” என்றவள் வீம்பாக அமர்ந்துகொள்ள சிரித்துக்கொண்டான்.

 

வழியில் உணவுக்காக நிறுத்த ‘அப்படி எங்கதான் போறார்’ என்ற யோசனையோடு அவனைப் பார்க்க “பசிக்குது சக்தி” என்றான் உடனே இறங்கிவிட்டாள்.

 

சாப்பிட்டு வந்தவள் பின்னால் படுத்துக்கொண்டாள் எப்படியும் சொல்லமாட்டேன் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று உறங்கவும் தொடங்கிவிட்டாள், வண்டியின் கண்ணாடியைக் கொஞ்சமாக இறக்கிவிட்டான் குளிர் காற்று உடலைத் தழுகியது மெல்லிசையும் கூடவே சேர மனமும் சேர்ந்து பறந்தது அவனுக்கு.

 

ஐந்து மணி நேரத்தில் வந்து சேர்ந்திருந்தான் கொடைக்கானலுக்கு முதல் நாள் அனைத்தையும் முடிவு செய்து அதற்க்கு ஏற்றாப்போல வேலைகளை முடித்துவிட்டு மற்றதை முத்துவிடம் ஒப்படைத்திருந்தான்.

 

பார்லரின் இன்னொரு சாவி மகேந்திரன் கையில் இருக்க அவர் பார்த்துக்கொள்வதாகச் சொல்லியிருந்தார், அவளுடைய துணிகள் சிலது அவனுடையது என்று ஒரு பேக்கில் எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.

 

“சக்தி சக்தி எழுந்துக்கோ வந்திட்டோம்” என்றான் அவள் அப்படியே படுத்திருக்க “தூக்கிட்டு போகணுமா” என்றான்.

 

அவனை நிமிர்ந்து பார்த்தவள் கையை உயர்த்த அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டான்.

 

“ஹனிமூனா” என்றாள் அவன் செவிகளில்.

 

“ஹ்ம்ம்” என்றான் சிரிப்போடு.

 

“ஆனா எனக்கு மூடு இல்ல நான் இன்னும் கோவம்” என்றாள்.

 

“அதை நான் பாத்துக்குறேன்” என்றான்.

 

சொன்னதை போலவே இரண்டு நாட்களும் அவளைத் தாண்டி அவன் விழிகள் எங்கும் செல்லவில்லை “இது ஹனிமூனா இந்த ரூம் எங்க இருக்குனு கூட எனக்குத் தெரியல” என்றாள் அவன் அணைப்பில் கட்டுண்டு.

 

“அதெல்லாம் உனக்கு எதுக்கு என்னை மட்டும் தெரிஞ்சா போதும்” என்றான் எங்கேயும் அழைத்துசெல்லவில்லை மூன்றாம் நாள் அதிகாலை நான்கு மணிக்குப் புறப்பட்டுவிட்டனர்.

 

சக்திப்ரியா இதழ் கடித்து சிரிப்பை அடக்கிக்கொண்டிருந்தாள் “என்னடி” என்றான் அவனும் சிரிப்போடு.

 

“கொடைக்கானல்ல என்ன பாத்தீங்கன்னு கேட்டா என்ன சொல்ல” என்றாள்.

 

“ஏன் சொல்லலாமே… நீ என்னையும் நான் உன்னையும்” என்றான்.

 

அவள் திரும்பி அவனைப் பார்த்தாள் இருவர் நெஞ்சமும் நிறைந்திருக்க முகத்தில் அதன் பிரதிபலிப்பு,  அவனை நெருங்கி அமர்ந்தவள் அவன் கையேடு தன் கரம் கோர்த்து தோளில் சாய்ந்துகொண்டாள்.

 

“ஐ லவ் யு” என்றாள் அவன் அழுத்தமான முத்தம் பதித்தான் அவள் உச்சியில்.

 

அவனுடைய “ஐ லவ் யு” எப்பொழுதுமே முத்தங்களாக மட்டுமே பிரதிபலிக்கும்.

 

“சக்தி உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றவன் அவளுடனான திருமணம் பேசிய நாள் முதல் நடந்தது இனி நடக்கப்போவது என்று அனைத்தையும் அவளிடம் பகிர்ந்தான்.

 

“இன்னும் ஒரே ஒரு கடமை இருக்கு அது முடிஞ்சதும் நாம நம்ம வீட்டுக்கே போய்டலாம்” என்றான்.

 

“என்னால நம்பவே முடியல அத்தான் இவ்ளோ நடந்திருக்கா இது மறுபடியும் பிரச்சனை ஆகாதா” என்றாள் அவனைப் பார்த்து.

 

அவனிடம் பெருமூச்சு “ஆகும் கண்டிப்பா ஒரு பிரச்சனை இருக்கு ஆனா என்ன செய்ய முடியும் சமாளிக்கனும்” என்றவன்.

 

“உனக்கு அங்க ஓகே தான சக்தி அந்த வீடு பிடிச்சிருக்கா” என்றான்.

 

“அந்த வீட்டுக்கு என்ன அழகான அமைதியான வீடு எங்க இருந்தா என்ன அத்தான் நாம யார் கூட இருக்கோம்ன்றதுதானே முக்கியம்” என்றவள் கேள்விக்கு ஆமோதிப்பாகப் புன்னகைத்தான், காலை அத்திவெட்டி வந்து சேர்ந்தனர்.

 

அன்று கோவிலில் விளக்கு கீழே விழுந்து அணைந்ததிலிருந்து மனதில் ஒருவித பயத்தோடு நாட்களைக் கடத்திய பவுனுத்தாயி இப்பொழுது மகேந்திரன் கூறி சென்ற விஷயங்களில் இன்னும் பயந்து இருந்தார்.

 

‘வேற பல உண்மைகளும் உங்களுக்குத் தெரியவரலாம்னு சொன்னானே அது என்ன உண்மை இன்னும் என்ன வரப்போகுது’ என்று பதட்டத்தோடு நாட்களைக் கடத்த.

 

அடுத்த நாள் காலை அந்தப் பிரச்சனை வாசலில் வந்து நின்றது பார்த்த பவுனுதாயி அதிர்ந்து நின்றுவிட கவிதா நினைவிழந்து கீழே விழுந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!