சூர்யாவின் சத்தமான சிரிப்பில் எரிச்சலாய் உணர்ந்தாள் அஞ்சலி. அவள் நினைத்தும் பார்க்காத ஒன்று அவளுக்கு நடந்து கொண்டிருந்தது.
தன் சுதந்திர வாழ்க்கை பறிபோகுமோ என ஜெய்யை வேண்டாம் என்றவளுக்கு இப்படி கேள்வி கேட்டு தன்னை குற்றவாளியாக்கி நிற்க வைத்த சூர்யா முன் நிற்கவும் பிடிக்கவில்லை.
“சூர்யா! நீ என்ன பேசுறனு யோசிச்சு பேசு.. அப்புறம் கவலைப்பட்டு எந்த யூசும் இல்ல” அஞ்சலி கூற,
“ஓஹோ! அப்படியா? நான் கவலைப்படுற மாதிரி மேடம் என்ன செய்ய போறீங்க?” என்றவன்,
மீண்டும் யோசிப்பது போல பாவனை செய்து, “எவ்வளவு யோசிச்சாலும் ஒன்னே ஒன்னு தான் தோணுது.. ஏற்கனவே நீ பேட் கேர்ள் தான்.. இதுல இன்னும் என்ன செஞ்சு வச்சு நான் கவலைப்பட? வீட்டை விட்டு போலாம்னு நினைச்சின்னா….” என்றவன் சோம்பலாய் கைகளை மேலே தூக்கி நெட்டி முறித்தவன்,
“காலை உடைச்சுடுவேன்!” என்று கூறி விட, அதிர்ந்த பார்வை பார்த்தாள் அஞ்சலி.
“நீயா இப்படி பேசுற?”
“ஏன் எனக்கு என்ன? ஆமா! என்னை பத்தி என்ன தெரியும்னு என்னைய போய் கல்யாணம் பண்ண ஒத்த காலுல நின்ன.. நானே என் பேச்சை நம்ப மாட்டேன்.. சரி போ! அரை மணி நேரம் உன்னால என் வாழ்க்கைல வேஸ்ட்டா போச்சு..” என்றவன்,
“இந்த பெட்ல படுக்குறது, கீழ படுக்குறது, சோபால படுக்குறது.. எல்லாம் உன் இஷ்டம்.. அதுல எல்லாம் நான் தலையிட மாட்டேன்.. ஓகே! ஆனா கிட்ட வர கூடாது.. மேல கை பட்டுச்சு…” என்றவன் ஆட்காட்டி விரலைக் காட்டி நாக்கை மடித்து எச்சரிக்க, பேய் முழி விழித்தாள் அஞ்சலி.
“என்ன எல்லாம் பொண்ணுங்க டைலாக்கா இருக்கா.. இங்க நானா கட்டுனா இவள கட்டணும் டா’னு பாட்டு பாடி கூட்டிட்டு வந்தேன்.. நீயா தானே என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்னு வந்த.. அப்ப நான் தான் பேசுவேன்” என்று பேசுபவனை பிடிக்காமல் பார்ப்பது போல பார்க்க,
“என்ன லுக்கு மாறுது? ஒரு நாள் கூட ஆகல.. இவனை ஏன் டா கல்யாணம் பண்ணினோம்னு நினைக்குற போல.. அப்படிலாம் நினைக்காத.. ஐ மீன்! அப்படி நினைக்க இன்னும் டைம் இருக்கு.. இது ஜஸ்ட் சாம்பிள், ப்ரோமோ, ஆர் டீஸர்.. ப்ச் எப்படி வேணா வச்சுக்கலாம்” என்று கூறி,
“ஷாப்பா! வாயெல்லாம் வலிக்குது..” என்றவன்,
“குட்… இல்ல இல்ல.. பேட் நைட் டெவில் பேபி” என்று கூறி ஏசியை அதிகமாக்கி படுத்துக் கொள்ள, தொப்பென சென்று சோபாவில் அமர்ந்தாள்.
“சோஃபா பத்திரம் டி.. உன் வீட்டுல மாதிரி இல்ல.. நூறு ருபாய்க்கு நாலுன்னு வாங்கினது” என அதற்கும் போர்வைக்குள் இருந்தே கிண்டல் பேச்சுடன் கூற, கண்ணீர் முட்டியது அஞ்சலிக்கு.
அதை வெளியே வரவிடாமல் இழுத்துக் கொண்டவள், அப்படியே அமர்ந்திருக்க, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான் சூர்யா.
காலையில் எழுந்தவன் அவளை தேடவும் இல்லை இருக்கிறாளா என பார்க்கவும் இல்லை.
எப்பொழுதும் போல எழுந்து குளித்து உடைமாற்றி என கீழே வர, மல்லிகாவும் பிரேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“குட் மார்னிங் மல்லிம்மா.. குட் மார்னிங் ம்மா.. மார்னிங் டா அண்ணா!” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்க்கும் கூற,
“இன்னுமா அஞ்சலி தூங்குறா?” என்ற பிரேமாவின் கேள்வியில், காலை உணவை திறந்து பார்த்துக் கொண்டிருந்தவன் கை அப்படியே நின்றது.
ஒரு நொடி தான்.. அதற்குள் சமாளித்துக் கொண்டான் சூர்யா. ஜெய் கேட்டாலும் கேட்காததைப் போல சாப்பாட்டை தான் கவனித்திருந்தான்.
“ப்ச்! அவளை விடுங்க ம்மா.. செம்ம பசி.. சோ ப்ளீஸ்!” என்றவன் தட்டை தன் முன் வைத்துக் கொண்டு அமர, பிரேமா இட்லிகளை எடுத்து வைத்தார்.
“ஒன்னும் இல்லை டா.. என்ன அவசரம் மெதுவா பார்க்கலாம்” என்று ஜெய் கூற,
“அதுக்குள்ள உன் அப்பா முந்திப்பார் பரவால்லயா?” என்று மல்லிகா கேட்க,
“கோவில்ல எந்த பொண்ணு மல்லி ம்மா?” என்றான் சூர்யா.
“அதான் டா அந்த பொண்ணு.. உன் கூட ஸ்கூல் படிச்சது.. பிரண்ட்டுன்னு சொன்னியே!” என்றதும், சட்டென வெளிச்சமாய் நியாபகம் வந்து விட்டது அது ஜனனி தான் என்று ஜெய்க்கு.
“ம்மா!” என்று ஜெய் அழைக்க,
“வாவ்! வாட் அ சாய்ஸ்!” என்ற சூர்யாவின் சத்தத்தில் ஜெய் குரல் வெளியே கேட்காமல் போக,
“சீரியஸ்லி செம்ம சாய்ஸ் மல்லி ம்மா.. ஆனா வாய் கொஞ்சம் ஜாஸ்தி.. பார்த்துக்கோங்க.. ஆனா சூப்பரா அப்ட் ஆகும் அண்ணனுக்கு” என்று மகிழ்வுடன் கூற,
“ப்ச்! என்னை கொஞ்சம் பேச விடுங்க டா!” என்ற ஜெய் அனைவரும் அவன் புறம் திரும்பவும்,
“என்னனு போய் கேட்பிங்க.. நேத்தைக்கு வேண்டாம்னு சொன்ன மாப்பிள்ளைக்கு உங்க பொண்ணை தாங்கன்னு கேட்பிங்களா?” என்றதும் சூர்யா பேச வர,
“நீங்க கேட்பிங்க.. அவங்க என்ன சொல்வாங்க?” என்று மூவரின் முகத்தையும் அமைதியாய் பார்த்தவன்,
“என் கேரக்டரை யாரும் பேச நான் அனுமதிக்க முடியாது..” என்று அழுத்தமாய் கூறியவன்,
“பொண்ணு தானே பர்க்கலாம்.. கொஞ்ச நாள் போகட்டும்” என்று அமைதியாய் அவன் சாப்பிட, சில நொடி அமைதிக்கு பின்
“அதுவும் சரி தான் க்கா.. நம்ம ஜெய்க்கு என்ன பொண்ணா கிடைக்காது.. அந்த பொண்ணையே கூட கேப்போம்.. ஆனா அவன் சொல்ற மாதிரி ஒரு ஒரு மாசமாச்சும் போகட்டும்”
ஜெய் கொஞ்ச நாள் என்றதை அந்த இடத்திலேயே ஒரு மாதம் தான் உனக்கு நேரம் என கூறிவிட்டார் பிரேமா.
மகன் கூறியதில் வருத்தம் இருந்தாலும் இந்த அளவுக்கு தெளிவாய் இருப்பதில் மகிழ்ந்தவர்,
“அது இருக்கட்டும்! மணி பத்தாச்சே டா.. அஞ்சலி எழுந்துட்டாளா இல்லையா?” என்று மல்லிகா கேட்க,
“அப்படியே அதே ஃபார்ம்ல போய் ரெண்டு அடி போட்டு கூட்டிட்டு வாங்க!” என்றான் மல்லிகாவிடம் சூர்யா.
அவர் விளையாடுகிறான் என புரிந்து முறைத்துப் பார்க்க,
“ஏன் நீ வரும் போது அந்த ரெண்டு அடியைப் போட்டு கூட்டிட்டு வர முடியாதா?” என்றார் பிரேமா.
“கத்துக்கோங்க மல்லிம்மா! பிரேமா யாரு!” என்று பெருமையாய் சூர்யா கூற,
“எழுந்துட்டாளா இல்லையா டா.. சும்மா சீண்டிக்கிட்டு”
“ப்ச்! ஒரு சின்ன ஷாக் டிரீட்மென்ட்.. நைட் டின்னர்க்கு வந்திடுவா.. டோன்ட் ஒரி” என்றதும் அன்னைகளுடன் அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெய்யும் திரும்பிப் பார்க்க,
“என்ன டா சொல்ற? இப்பவே லேட்டு.. இதுல மதியம் என்னவாம்? வேண்டுதலா?” என்ற பிரேமாவிற்கு,
“இந்த வார்த்தையை வச்சுக்கிட்டு.. உன்னை என்ன பண்றேன் பாரு!” என்றவர் படியேற போக,
“அங்கே போறது வேஸ்ட்!” என்றான் திரும்பாமல்.
“ஏன் டா.. என்ன தான் பண்ணின?” அருகே நின்ற மல்லிகா கேட்க,
“ஹே! என்ன நீங்க? எல்லாரும் என்னவோ என்னை போய் வில்லன் மாதிரி பார்த்துகிட்டு.. ஐம் அ ஹீரோ மெட்டிரியல் யூ க்நொவ்?” என விளையாட தான் செய்தான் சூர்யா.
“ப்ச்! சூர்யா! என்ன ப்ரோப்லேம்?” ஜெய் வாய் திறந்து கேட்க,
“ண்ணா! நீயுமா? சரி நான் கேட்குறேன்.. நீங்க பதில் சொல்லுங்க” என்றவன்,
“நான் எதுவும் தப்பு பண்ணி இருப்பேன்னு நினைக்குறிங்களா?” என்று கேட்க,
“தப்பா இல்லையானு நீ சொல்ல கூடாது” என்றார் பிரேமா.
“என் அம்மான்னு அடிக்கடி ப்ரூப் பண்றீங்க ம்மா.. எவ்ளோ அறிவு உங்களுக்கு?” என்ற சூர்யா,
“உங்க மருமக மேல எவ்வளவு பாசம்னு எனக்கு புரியுது.. என்ன அவளை பார்க்கணும்! அவ்வளவு தானே?” என்று கூறவும்,
“ஆமா!” என்றார் பிரேமா,
“இன்னைக்கு மாமனார் வீட்டு விருந்து தானே? போறேன்! போயி…” என்று இழுத்தவன்,
“கூட்டிட்டு வர்றேன்” என்று கூற,
“கூட்டிட்டு வர்றியா? அப்ப அஞ்சலி இங்கே இல்லையா? எப்ப டா போனா? எப்படி போனா? நாங்க ஆறு மணிலேர்ந்து இங்க தானே இருக்கோம்.. எப்ப டா போனா சொல்லு.. நீ என்ன டா சொன்ன?” மல்லிகா, பிரேமா இருவரும் மாறி மாறி கேட்க,
“பெரியப்பா வர்றார்!” என்று கூறவும் சட்டென அமைதியாகி தனித்தனியாய் நின்று அங்கே நடந்ததை மறைக்க முயலும் விதமாய் நின்றனர். பின் தெரிந்தால் ஆடுவாரே!
“ஹாஹா! சும்மா சொன்னேன்.. போய்ட்டு அந்த எலியை சோதனைக்கு கூட்டிட்டு வர்றேன்” என்று கார் சாவியுடன் நிற்காமல் பறந்து விட்டான்.