காதலும் கடத்தப்படும் – 33

காதலும் கடத்தப்படும் – 33
மூவரும் அமைதியாக காரில் அமர்ந்திருக்க, மிதமான வேகத்தில் கார் சென்றுகொண்டிருந்தது.
Advertisement
முன் இருக்கையில் சாம் ஓட்ட, அருகே அர்ஜுன் அமர்ந்திருக்க, பின் இருக்கையில் மதன் அமர்ந்திருந்தான்.
“நல்லா வாசிச்சீங்க சாம், எல்லா பாட்டுமே பிரமாதமா இருந்தது…” – மனதார பாராட்டினான், அர்ஜுன்.
Advertisement
“ப்ரோக்ராம் ஹைலைட்டே நீங்கதான்… வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டிங்க. எல்லா வாய்ப்பையும். யாருக்கும் அந்த திறமை வராது?” – சாம் கூறியது சற்று குதர்க்கமாக இருக்க, நெற்றி சுருங்க யோசித்த அர்ஜுன்,
Advertisement
“நீங்க சொல்றது புரியல?!!” என்றான்.
“கண்ணீர் துடைக்க வந்த தேவதையோ… ‘காதலி’னு சொல்ல வேண்டியதை, ‘தேவதை’னு சொன்னீங்க… மத்தபடி அதோட அர்த்தம் ‘காதலி’னு எல்லாருக்கும் புரிஞ்சுது…”
அந்த பதிலை சற்றும் எதிர்பார்த்திராத அர்ஜுன், அமைதியாகவே இருந்தான்.
Advertisement
“ஏதோ ஊருபேரு தெரியாத ஊர்லேர்ந்து வரீங்க. பொண்ண இம்ப்ரெஸ் பண்றீங்க. அவ செலவுல வாழ்க்கையை செட்டில் பண்ணிக்கறீங்க. கடைசில அந்த பொண்ணை உஷார் பண்ணிடறீங்க. எப்படினு தான் புரியல? சிட்டில வளர்ந்த பசங்களுக்கு இந்த மாதிரி திறமையெல்லாம் இல்ல.
காலேஜுல அஞ்சலி பின்னாடி சுத்தாதவன் இல்லை. என்னையும் சேர்த்து. மினிஸ்டர் பொண்ணுனு இல்லை, அஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணும் கூட. ரொம்ப கியூட். சுத்துனவங்களும் எல்லாம் பெரிய இடம் தான். ஆனா யாருக்கும் அவ மடங்கல. அப்படியிருந்த பொண்ண, பழைய பாட்டு பாடியே கவுத்துட்டீங்க… செம டேலண்ட் தான் உங்களுக்கு…”
“சாம்…” மதன் குறுக்கிட, அர்ஜுன் முறைக்க, அவனும் அமைதியாகிப் போனான்.
பின்புறம் நோக்கும் கண்ணாடி வழியே மதனைக் கண்ட சாம், “என்னப்பா அண்ணன் பாசம் பொங்குதா?” என்றான்.
“அத்தனை பேர் முன்னாடி மேடையில வச்சு லவ் ப்ரொபோஸ் பண்ண பெரிய தைரியம் வேணும்”
“அந்த அர்த்தத்துல நான் அந்த கவிதையை படிக்கல சாம். உண்மையாவே நன்றி சொல்லத்தான்…” – அர்ஜுன் வருத்தத்தோடு கூறினான்.
“ஹாஹா… நம்பிட்டேன் நம்பிட்டேன்… அஞ்சலி வாயைத் திறந்தாலே அஜூ, அஜுன்னு ஜபம் பண்ற மாதிரி உன் பெயரை தான சொல்றா. அதுலயே எல்லாருக்கும் புரிஞ்சுபோச்சு. யூடியூப் சேனல் என்ன, ஸ்டூடியோ என்ன, இப்போ கான்சர்ட் என்ன – இந்த மாதிரி ஜாக்பாட் யாருக்கும் அடிக்காது.
நாம எங்கிருந்து வந்திருக்கோம்னு யோசிக்கணும். இந்தமாதிரி ஒரு பொண்ண உஷார் பண்ண நமக்கு என்ன தகுதி இருக்குன்னு யோசிக்கணும். ‘அஞ்சலி’ங்கற ஒரு விஷயம் உன் வாழ்க்கையில வரவே இல்லனா, இந்நேரம் நீ எங்க இருந்திருப்ப’னு யோசிக்கணும். அதெல்லாம் யோசிச்சா செட்டில் ஆக முடியாதுல?!”
மதன் ஏறத்தாழ அழும் நிலையில் அமர்ந்திருந்தான்.
“ஆனா இந்த பொண்ணுங்களும் யோசிக்கறதில்லை. நம்ம லெவல் என்ன, யாரோட பழகுறோம், நம்ம குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம் – எதையும் யோசிக்கறது இல்லை. நம்மகிட்ட சம்பளத்துக்கு வேலை பார்க்கற ட்ரைவர்னு அந்த பொண்ணு யோசிச்சிருந்தா இன்னைக்கு நீயில்லை. இதுல அவளோட அப்பா தான் பாவம். சீரோல ஆரம்பிச்ச மனுஷன் இன்னைக்கு இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்காருன்னா அது சாதாரண விஷயம் இல்லை. அதெல்லாம் இந்த பொண்ணுங்க கண்ணுக்கு தெரியாது. எவனோ ஒருத்தனுக்காக அப்பா சொத்தை அடமானம் வைக்க கூட தயங்கறது இல்லை…”
அர்ஜுன் புரியாமல் அவனை பார்க்க,
“நாலஞ்சு நாள் முன்னாடி ரிஹெர்சல் முடிச்சுட்டு கிட்டாரை ஸ்டூடியோல வச்சுட்டு வேற ஒரு வேலையா வெளியில போயிருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு ஸ்டூடியோக்கு கிட்டார் எடுக்க வந்தபோது, உள்ளிருந்து ஒரே சத்தம். பார்த்தா அவளோட அப்பா அவளை கத்திக்கிட்டிருந்தாரு. கம்பெனிக்காரங்க ஷியூரிட்டி கேட்டாங்கன்னு ஸ்டூடியோ வீட்ட அஞ்சலி கொலெட்டரலா காட்டியிருக்கா, அவங்க அப்பாகிட்ட சொல்லாம. விஷயம் தெரிஞ்சு அவங்க அப்பா ருத்ர தாண்டவம் ஆடிட்டு போனார். என்னால நிக்க முடியல. நான் கிளம்பி போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு திரும்பி வந்து பார்த்தா, அவ அழுது அழுது மூஞ்சி வீங்கியிருந்தது. என்னனு கேட்டதுக்கு ஒண்ணுமில்லன்னு சமாளிச்சுட்டா.
பாவம் அவ! காலேஜ் படிக்கும்போது அவளுக்கும் அவங்க அப்பாவுக்கும் ஒத்துவராதுன்னு ஊருக்கே தெரிஞ்சிருந்தது. எத்தனையோ தடவை அவங்க அப்பாவை நினைச்சு அழுதிருக்கா. இவ்வளவு வருஷம் கழிச்சு இப்பதான் அவ அப்பாவுக்கும் அவளுக்கும் கொஞ்சம் இணக்கம் வந்தது. அதையும் சிறப்பா முடிச்சு விட்டுடீங்க.
காசுக்கே அவளை ஒரு வழி பண்ணவரு, இப்ப சார் சொன்ன கவிதைக்கு வீட்ல வெடிகுண்டு வெடிச்சிருக்கும். நீங்க சாதிச்ச சந்தோஷத்துல இருக்கீங்க. பாவம் அஞ்சலி, திட்டுவாங்கிக்கிட்டு, அடிவாங்கிக்கிட்டு அழுதுகிட்டு இருப்பா…” என்றான் சாம்.
பேருந்து நிறுத்தத்தை அடைந்திருக்க,
“கார்ல லிஃப்ட் கேட்டு கொஞ்ச தூரம் வரலாம் தப்பில்லை. ஆனா அதையே சொந்த காரா நினைச்சு எப்பவுமே பயணிக்க முடியாது. ஒரு கட்டத்துல இறங்கி தான் ஆகணும்” என்று சாம் கூற,
“தேங்க்ஸ்” என்றுவிட்டு அர்ஜுன் இறங்க, உடன் மதனும் இறங்கிக்கொண்டான்.
அடுத்த நொடியே கார் அவ்விடம் விட்டு மறைந்திருந்தது.
“ரொம்ப பொறாமை பிடிச்சவன் போல. பொறாமையில வாய்க்கு வந்ததை பேசறான்” என்று பற்களைக் கடித்துக்கொண்டு, புகைந்து கொண்டு நின்றான், மதன்.
“எப்படி பேசினாலும் அவன் சரியா தான பேசினான்…” என்ற அர்ஜுன், உள்ளுக்குள் உடைந்திருந்தான்.
வீட்டிற்கு செல்லும் வரை அர்ஜுன் அமைதியாகவே இருந்தான். பேசிட எண்ணியும் ஏனோ மதனும் அமைதியாகிப்போனான். வீட்டினுள் இருவரும் நுழைய, நேரே அறைக்குள் சென்றான், அர்ஜுன். தனது பெற்றோரை கண்டு வணங்கினான். கண்மூடி நின்ற மதன், “அம்மா! அப்பா! அஜூ இவ்வளவு மனசு வருந்தி நாம பார்த்ததில்லை, எல்லாத்தையும் சரி பண்ணி கொடுங்க” என்று வேண்டினான்.
கட்டிலின் மேல் சென்று அமர்ந்த அர்ஜுன், அருகே கிடந்த அஞ்சலியின் புடவையைத் தொட கையெடுத்தான். ஏனோ தயங்கி பின்வாங்கியவன், எழுந்து பாய் விரித்து தரையில் படுத்துக்கொண்டான்.
அஞ்சலி வீட்டிற்கு வந்து சென்ற நாள் முதல், அவளுடைய புடவையை மேலே போர்த்தியபடி கட்டிலில் உறங்கியவன், இன்று பாயில் கிடப்பதைப் பார்த்து மதனுக்கு கண்ணீர் வந்தது. அதனை பொறுக்க முடியாமல் வெளிய வந்தவன், வெறும் தரையில் படுத்தான். அழுதபடி அர்ஜுனை எண்ணி வருந்தியவன், தன்னையறியாமல் உறங்கிப்போனான்.
