Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

48. கலாராணி பாஸ்கர் - காதல் எனும் மாயன்

காதல் எனும் மாயன்-3

அத்தியாயம்- 3

சிருஷ்டியில் சேர்ந்து மூன்றுமாதங்கள் முடிந்திருந்தது.கல்லூரி வாழ்க்கையும் ஹாஸ்ட்டல் வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாக பழகத் தொடங்கியிருந்தது.

வீட்டை, அம்மா சாப்பாட்டை மிஸ் செய்வது குறைந்து,அன்றாட வழக்கம் ஒருவகையில் அதிதிக்கும் வர்ஷினிக்கும் செட் ஆகியிருந்தது.

 ஷிவாங்கியிடம் கேட்டு அறையை மாற்றிக்கொண்டு இப்போது இருவரும் ஒரே அறையில் தங்கியிருப்பதும் ஒருவகையில் ஹாஸ்டல் வாழ்க்கையை எளிதாக்கியது.



Advertisement

காலையில் எழுந்து அரக்க பறக்க கிளம்பி ஹாஸ்ட்டல் கேண்டீனில் போடுவதை அரை குறையாக சாப்பிட்டுவிட்டு கிளாஸுக்கு ஓடினால் ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு இடத்தில் என்று அலைந்து திரிந்து கிளாஸ் அட்டெண்ட் செய்து மாலை மீண்டும் ஹாஸ்ட்டல் திரும்பும் வரை பிஸியாகவே காலம் ஓடியது.

இதற்கு நடுவில் வகுப்பிலும் ஒரு நட்புவட்டம் உருவாகியிருந்தது. எந்த பெரிய நிகழ்வேதும் இல்லாமல் அமைதியாக போய்க்கொண்டிருந்த கல்லூரி வாழ்க்கையில், அதிதியின் அதிகாலை சாகசம் மட்டும் ரகசியமாகத் தொடர்ந்தது..

அந்த நேரத்தில் எழுந்து அவள் ஏன் வாக்கிங் போகிறாள் என்று வர்ஷினியிடம் சொல்லவே இல்லை. அது அவளுக்கே அவளுக்கான பொக்கிஷ நிமிடங்களாக மனதின் நெருக்கத்தில் வைத்துக்கொண்டாள்.

Advertisement

காலை நடையில் வசீகரனின் வசியப்புன்னகையை பார்ப்பதற்கும், அவனின் காந்தக்குரலில் காலை வணக்கம் சொல்வதை கேட்பதற்குமே அந்தநாள் விடிவதாகத் தோன்றியது அதிதிக்கு.

Advertisement

குட் மார்னிங்கிற்கு மேல் அவனும் எதுவும் பேசவில்லை, அவளும் அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்கவும் இல்லை, அவளாக பேசவும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அவனை பார்க்கும் அந்த தருணம் ஏதோ தேவவினாடிபோன்றும், பலநாள் பிராத்தனையின் பலன் போன்றும், அத்தனை தூய நிகழ்வாக மனதிற்கு பட்டது.

அந்த கணம் அவர்கள் இருவருக்கும் மட்டுமே உரித்தான கடவுளின் உன்னத ஆசிர்வாதமோ என்ற பிரமை கூடத் தோன்றும்.

Advertisement

ஆனால் அவனைப் பார்க்க முடியாத நாட்களில் அன்று முழுவதும் ஏதோ டல்லடிப்பதாக தோன்றும்,. அப்படிப்பட்ட நாள்தான் இன்று.

 ஞயிற்றுகிழமையன்று சுகமான காலை தூக்கத்தையும் தியாகம் செய்து, ஒருமணி நேரமாக இங்கும் அங்குமாக அவன் வரும் வழிபார்த்து சுற்றித் திரிந்தும் தேவன் தரிசனம் கிடைக்கவில்லை.. சலித்து கால் ஓய்ந்து திரும்பியவளை ஒரு மாதிரி பார்த்தாள் வர்ஷினி..

“என்ன ஆச்சி அதி?? லவ் பிரேக் அப் ஆன மாதிரி இருக்கு மூஞ்சி..”

“ச்சி..போடி இவளுக்கு வேற வேலை இல்ல.. நானே நடந்து நடந்து டயர்ட் ஆகி வந்திருக்கேன்..” என்று அலுத்துக்கொண்டாள்

“அதான் நானும் கேக்குறேன்… சண்டே கூட தூங்காம அப்படி என்ன வாக்கிங் உனக்கு? எப்ப இருந்து இவ்ளோ ஹெல்த் கான்ஷியஸ் ஆன நீ..??நானும் வர்றேன்னு சொன்னாலும் ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக்கழிக்கிற.. எனக்கு என்னமோ டவுட்டா இருக்கே..”

“எ..என்ன டவுட்டு?”

“எனக்கு தெரியாம எதாவது நல்லதா சாப்ட்டுட்டு வரியோன்னு??

“ஆமா.. இந்த அமேசான் காட்டுல அப்படியே கேஎஃப்சியும்  ஸ்டார்பக்ஸும் தொறந்து வச்சிருக்காங்க..போடி..”

“ஆனா என்னோட செவன்த் சென்ஸ் நீ எதையோ என்கிட்ட மறைக்கிறன்னு சொல்லுதே..”

“உன்னோட செவன்த் சென்ஸுக்கு நம்ம காண்டீன்  பொங்கலைப் கொஞ்சம் போட்டு தூங்கவை.. ஓவர் டைமா  வேலை செய்யுது.” என்று எதுவும் நடக்காதது போல பேசி சமாளித்தாள். அப்போதும் வர்ஷினி அவளை சந்தேகத்தோடே பார்க்க

 “வர்ஷ்..சும்மா எதாவது பேசிட்டு இருக்காத…செமஸ்டர் வருதுல்ல நான் படிக்க போறேன்..” என்று அவளின் துப்பறியும் பார்வையிலிருந்து தப்பித்து லாப்டாப்பையும் புக்கையும் எடுத்துக்கொண்டு லைப்ரரிக்கு சென்றாள் அதிதி.

என்னதான் வர்ஷினியிடம் பொய் சொல்லி தப்பித்து வந்திருந்தாலும், அவளுக்கு மனம் ஒருமாதிரியாகவே இருந்தது.

நெருங்கிய தோழியிடமே மறைத்து ஒரு காரியம் செய்வது ஏதோ தவறு போல மனம் உறுத்தியது. இப்படி மறைத்து செய்யும் செயல் எப்படி நல்லதாக இருக்கமுடியும்? என்று அவளது மனசாட்சியே அவளை கேள்விகேட்டது.

 எதிர்காலமே இல்லாத இந்த கிரஷ்ஷை ரொம்ப தூரம் நீட்டித்துக்கொண்டு போகிறோமோ என்ற சந்தேகமும் எழுந்தது.

‘போதும் இந்த டிஸ்ட்ராக்‌ஷன், இனி அந்த வசீகரனைப் பற்றி யோசிப்பதை நிறுத்த வேண்டும். படிக்க வந்திருக்கோம் அந்த வேலையை மட்டும் பார்ப்போம்..’

என்று மனதில் உறுதியேற்றுக்கொண்டு தேவையில்லாத எண்ணங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு படிக்கத்தொடங்கினாள்.

அவளுக்கு எப்போதுமே சின்ன அறையில் அடைபட்டுப் படிப்பதைவிட இப்படி அகன்ற விசாலமான இடத்தில் படிப்பதற்குதான் பிடிக்கும். அந்த நேரத்தில் நூலகத்தில் ஒரு ஈ காக்காயை கூட காணவில்லை, ஒருவகையில் நூலகத்தின் அந்த அமைதியும் உதவ, நிஜமாகவே கவனித்து ஆழ்ந்து படித்தாள்.

சில மணி நேரங்கள் இப்படியே கழிய வயிறு பசிக்கத்தொடங்கியது, நேரம் பார்த்தால் 11 மணி, ‘காண்டீன் மூடியிருப்பார்களோ..? எதுவும் சாப்பிடகிடைக்குமோ இல்லையோ தெரியலையே..!!’ என்று யோசித்தபடியே தன் பொருட்களை அள்ளியபடி கிளம்பினாள்.

ஆனால் வெளியே மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது.

‘அடக் கடவுளே.. இப்ப எப்படி அவ்ளோ தூரம் மழையில நனைஞ்சிட்டே போக முடியும்? ஹாஸ்டல்  கட்டடத்திற்கு அரை கிலோமீட்டர் நடக்கவேண்டுமே..பரிட்சை சமயம் உடம்பு கெட்டா வம்பாகிடும்.. லாப்டாப் நனைஞ்சாலும் கஷ்டம்.’

“பசிவேற உயிர் போகுது..இந்த மழை எப்ப நிக்குமோ தெரியலையே..” என்று கவலையாக முணுமுணுக்க

“இப்போதைக்கு நிக்காது போல..” என்ற ஆணின் குரலில் அதிர்ந்து நிமிர்ந்தாள்.

இவள் துள்ளிகுதிப்பதை பார்த்து, “ஹேய்.. ஈஸி..ரிலாக்ஸ்.. நான் தான்..” என்று கைகளை உயர்த்தி அவளை ஆசுவாசப்படுத்தியவன் சாட்சாத் வசீகரன் தான்.

இலகுவான வெள்ளை நிற டீ-ஷர்ட்,அதன் மேல் ஹூடியுடன் கூடிய கருப்பு ஜாக்கெட் மற்றும் கிரே கலர் டிராக் பாண்ட்டில், கலைந்த கூந்தல் மற்றும் கலைத்த முகத்துடன் நின்றிருந்தான்.

“இவன் எப்போது வந்தான்?? நான் பார்த்தவரை லைப்ரரியில் யாருமே இல்லையே..”என்று யோசனை ஓடும் போதே அவள் மனதைப் படித்தவன் போல

“நான் வந்து ஒரு மணி நேரம் ஆச்சு.. நீ பக்கதுல ஆளு நிக்கறது கூட கவனிக்காம அவ்ளோ சின்சியரா படிச்சிட்டு இருந்த, அதான் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு அமைதியா இருந்திட்டேன். ஆனாலும் என்ன ஒரு டெடிகேஷன்.. சான்ஸே இல்ல…கோல்ட் மெடல் வாங்காம விட மாட்ட போலயே…” என்றான் இலகுவான சிறுகேலியுடன்..

அவன் பேசபேச அதிதிக்கு இதயத்துடிப்பு கூடிக்கொண்டேபோனது, “இவன் வந்தது கூட தெரியாமலா இருந்தேன்..!!எப்படி பார்க்காமல் மிஸ் செய்தேன்..? காலையில்தான் அவனை பார்க்க முடியாமல் அத்தனை ஏமாற்றமாக இருந்தது, இப்படி கண்முன்னே இருந்தவனை பார்க்காமல் தவறவிட்டுவிட்டேனே..” என்று வருந்தும்போதே

“கொஞ்சம் முன்புதான் இனி இவனைப் பற்றி நினைக்கக்கூடாது என்று தீர்மானம் எடுத்தேன் உடனேயே இவனைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறதே இந்தக் காலம்.. இதன்மூலம் இந்த பிரபஞ்சம் எதாவது மறைமுக செய்தியை உணர்த்துகிறதா??” என்று தனக்குள்ளேயே இப்படி பல யோசனைகள் ஓட இவள் பேச மறந்து நிற்க..

“ஹல்லோ பேச மறந்து போச்சா??” என்று கேட்டு சிரித்தான்.

“இல்ல அப்படிலாம் இல்ல சீனியர்..” என்றாள் முயன்று வரவழைத்தக்குரலில்.

“சரி..மழை இப்போதைக்கு விடுற மாதிரி தெரியல, ஒரு காஃபி சாப்பிடலாமா? இங்க இதே பில்டிங்ல காஃபி ஷாப் இருக்கு..”

இதெல்லாம் கனவில்லை நிஜமாகவே நடக்கிறது என்பதை கிரகிக்க முயன்றுகொண்டே சம்மதமாக இவள் தலையசைக்க, அவன் அவளை வருமாறு கையசைவில் உணர்த்திவிட்டு அந்த காரிடாரில் முன்னோக்கி வேகமாக நடந்தான், போகும்போதே அதிதி பின் தொடர்கிறாளா என்று அவ்வப்போது திரும்பி பார்த்துக்கொண்டான்.

காஃபி ஷாப்பில் காஃபியோடு சேர்த்து இரண்டு பிளேட் பிரெட் ஆம்லெட்டும் அவன் ஆர்டர் செய்யவும்,

“இல்ல வேண்டாம்..” என்று அதிதி மறுக்க

“இது என்னோட டிரீட்.. சோ நோ சொல்லக்கூடாது..” என்று அவன் திட்டவட்டமாக கூறிவிட அதிதியால் மறுத்துபேசமுடியவில்லை.

“ஒருவேளை பசிக்குதுன்னு சொன்னதை கேட்டிருப்பானோ..?” என்று யோசனையாக அவனைப்பார்த்தாள்.

இருவரும் அங்கே வட்டமாக போடப்பட்டிருந்த டேபிளில் எதிர் எதிராக அமந்தனர்.

அதிதிக்கு நல்லப் பசிதான் இருந்தாலும் வசீகரன் எதிரிலேயே பார்த்துக்கொண்டிருந்ததால் கவனத்துடன் நாசுக்காக மெதுவாக உண்டாள்.

“அப்புறம் காலேஜ்… ஹாஸ்ட்டல் எல்லாம் செட் ஆயிடுச்சா?”

“ம்ம் ஓகே தான்..”

“ஃபர்ஸ்ட் நாளைக்கு அப்புறம்  சீனியர்ஸ் யாரும் தொல்லை பண்ணாங்களா..??”

“இல்ல சீனியர்.. யாரும் எதுவும் பேசுறதில்ல..”

“குட், அவங்களும் சும்மாதான் எதோ விளையாட்டுன்னு நெனைச்சி பண்ணிட்டாங்க.. அவங்களுக்காக நான் சாரி கேட்டுக்கறேன்.”

“அய்யோ சீனியர்.. சாரிலாம் சொல்லாதீங்க..”

“சரி சொல்லல.. சாரி வாபஸ்..”

“அக்சுவலி.. நான்தான் உங்ககிட்ட தாங்க்ஸ் சொல்லனும், அன்னிக்கு சப்போர்ட் பண்ணதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சீனியர்..” என்று மனமாற நன்றி உரைத்தாள்.

“நான் உனக்கு சீனியர் தான் ஒத்துக்கறேன், அதுக்காக இப்படி அடிக்கடி எனக்கு ரிமைண்ட் பண்ணிட்டே இருக்கத்தேவையில்ல..

எனக்குன்னு ஒரு பேர் இருக்கு யு நோ..!! அதை சொல்லிக் கூட கூப்பிடலாம்.

ஹாய்.. ஐ ஆம் வசீகரன், ஃப்ரண்ட்ஸ் என்னை வசீன்னு கூப்பிடுவாங்க.” என்று விளையாட்டு போல தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஐயோ அது எப்படி.. நீங்க பெரியவங்க, பேர் சொல்லிக்கூப்பிடுறது மரியாதை இல்லாத மாதிரி இருக்காதா?”

“ஹல்லோ எனக்கு அவ்ளோ வயசு ஒன்னும் ஆகல, நான் என்ன வாடா போடான்னா கூப்பிட சொல்றேன், பேர் சொல்லி வாங்க போங்க சொன்னா போதாதா?அதுவும் இல்லாம எனக்கும் அதுதான் கம்ஃப்ர்டபிளா இருக்கும்.சோ வசீன்னே கூப்பிடு சரியா..?

“ஓகே”

“ஓகே..அப்புறம்..?” என்று அவன் ஒற்றைப்புருவம் உயர்த்தி வினவ

“ஓகே.. வ..சீ..” அவள் சங்கடத்துடன் தடுமாற, சரிபோகிறது என்று விட்டுவிட்டு வேறு பேசினான்.

“நான் இவ்ளோ லென்த் ஆ பேசுறேன் நீ ஹைகூ மாதிரி குட்டியா முடிச்சிடுற..” என்று கூறி சத்தமாக சிரித்தான்.

“நான் அவ்ளோ சீக்கிரம் யாருகிட்டயும் பழகிட மாட்டேன்,கொஞ்சம் டைம் ஆகும்..”

“ம்ம்.. அப்போ உன்னோட நம்பிக்கைய சம்பாதிக்க நான் இன்னும் உழைக்கனுன்னு சொல்ற.. ரைட்டு….”

“நான் அப்படி சொல்லல, பேஸிக்காவே நான் ஒரு இன்ட்ரோவர்ட்.ரொம்ப பேச மாட்டேன்.”

“யா ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.. நான் சும்மா வெளையாட்டுக்குதான் சொன்னேன்..”

அதன் பிறகு மௌனமான புரிதலில் சிறிது நேரம் கடந்தது.

“இவ்ளோ நேரம் கழிச்சி கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத..” என்று அவனே மீண்டும் மௌனத்தை கலைத்தான்..

“என்ன?” என்று இவள் கேள்வியாக பார்க்க..

“உன்னோட பேர் என்ன?அன்னிக்கு நீ சொன்ன.. நான்தான் மறந்துட்டேன், ஐயம்  ரியலி சாரி..”

அதிதிக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது, ஆனாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

‘நான் ஒன்னும் அவன் நியாபகத்துல வச்சிக்கிற  அளவுக்கு முக்கியமானவ இல்லையே..’

“அதிதி..” என்றாள் சன்னமான குரலில்.

“யா..அதிதி.. இப்பதான் நியாபகம் வருது.. அதிதி தேவோ பவ.. ரைட்?”

‘நீயுமா..’ என்பது போல அவள் சிறு எரிச்சலுடன் கண்ணை மேலே உருட்டவும்,

“ஏன் நெறைய பேர் சொல்லி இருக்காங்களா?”

“ஆல்மோஸ்ட் எவ்ரிபடி.. எல்லாரும் இதையே சொல்லிதான் கிண்டல் பண்ணுவாங்க..”

அவன் அழகாக சிரித்துவிட்டு

“பட் நல்லா இருக்குல்ல.. நியாபகம் வச்சிக்கறதுக்கு ஈசியா இருக்கும்.”

“வாட்எவர்..” என்று அதிதி தோளை குலுக்கினாள்.

“பட் அதை விட உனக்கு பொருத்தமான பேர் ஒன்னு இருக்கு தெரியுமா..?நிக் நேம் மாதிரி..”

“நிக் நேமா என்னது”

“கிட்டி”

“கிட்டியா?”

“ம்ம் ஆமா..அன்னிக்கு ஃப்ரெஷ்ஷர்ஸ் டேல உன்ன ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ திருதிருன்னு முழிச்சிட்டு பாவமா நின்னியே..எதோ வழிதெரியாம தொலைஞ்சிபோன பூனைக்குட்டிய பார்க்கற மாதிரியே  இருந்தது..

அவ்ளோ கியூட்டா.. கிட்டிகேட்(kitty cat) மாதிரின்னு தோணுச்சு.. ‘கிட்டி’ கியூட் நேம் ல?” என்று அவளிடமே கேட்டு பல்வரிசை தெரிய சிரித்தான்.

அதிதிக்கு தலைசுற்றியது. நடப்பதெல்லாம் அவள் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. வசீகரன் அவளை திரும்பி பார்ப்பான் என்றோ, ஏன் அவளிடம் வழக்கமான முகமனுக்கு மேல் எதுவும் பேசுவான் என்றுகூட அவள் இதுவரை கனவிலும் நினைத்ததில்லை.

அப்படி இருக்க இப்படி சகஜமாக பேசுவது மட்டுமில்லாமல் அவளுக்கு செல்லப்பெயர் வைத்து அழைப்பதெல்லாம் மாற்று பிரபஞ்சத்தில்கூட சாத்தியம் என்று தோன்றவில்லை.. தன்னையே கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை சிரமப்பட்டு அடக்கினாள்…

“இவன் என்ன இப்ப என்கிட்ட ஃப்ளர்ட்(flirt) பண்றானா? என்ற யோசனை மனதின் ஓர் ஓரத்தில் தோன்ற “இருக்குமோ..” என்று அதிர்ந்து அவனைப்பார்த்தாள். ஆனால் அவன் சாதாரணமாக இருப்பதுபோலதான் தெரிந்தது.

அவளிடம் பதிலில்லாது போகவும்

“சாரி லிமிட் கிராஸ் பண்றேன்னு தோணுதா?”

“இல்ல அப்படிலாம் ஒன்னும் இல்ல..”

“ஓகே.. அப்போ இட்ஸ் ய டன் டீல்.. யு ஆர் கிட்டி டு மீ..”

என்றுவிட்டு தன் டிரேட் மார்க் புன்னகையை உதிர்த்தான்.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் இவளும் சரியென்று தலையாட்டி வைத்தாள்.

“சரி இப்ப உன்னைப்பத்தி சொல்லு கேக்கலாம், கம்பியூட்டர் டிபார்ட்மெண்ட்ன்னு தெரியும்,வேர் ஆர் யூ ஃப்ரம்??வாட் ஆர் யுவர் இண்டரெஸ்ட்ஸ்?”

‘ஸ்மால் டாக் வேறயா?’ என்று மனதில் நினைத்துக்கொண்டு

“நான் சென்னைபொண்ணு..” என்று மட்டும் சொன்னாள்

“சென்னையா..!!”என்று ஆர்வமாககேட்டான்

“என்னொட க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ் நெறைய பேர் சென்னைல இருக்காங்க….ஆனா  எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர் தான்..

அடுத்து நீ என்ன கேப்பேன்னு தெரியும், இதே ஊர்ல இருந்துட்டு ஹாஸ்டல் எதுக்குன்னு தானே..? எங்க வீடு இருக்கறது எதிர் மூலையில, தினமும் டிராவல் பண்ணி வந்து போக முடியாது, அதான் ஹாஸ்ட்டல்ல சேர்ந்துட்டேன்.. பட் ஒருநாள் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், யூ ஷுட் டெஃபனெட்லி கம். உனக்கு கண்டிப்பா பிடிக்கும் பாரேன்..” என்று அவளுக்கும் சேர்த்து அவனே பேசிக்கொண்டு போக, அதிதி அவன் வாய்மூடாமல் பேசுவதை மௌனமாக வியந்து பார்த்து கொண்டிருந்தாள்..

‘இவனோடு இருந்தால் நான் பேசவே தேவை இல்லைபோல, எனக்கும் சேர்த்து இவனே பேசிக்கொள்வான்   போலும்.’என்று நினைத்து உள்ளூற சிரித்துக்கொண்டாள்..

மேலும் அவன் எதோ பேசிக்கொண்டே இருக்க தன் யோசனையை விடுத்து அவன் பேசுவதை கவனிக்கலானாள்.

“முதல் ரெண்டு வருஷம்தான் நீங்க என்ஜாய் பண்ண முடியும், அதுக்கப்புறம் பிரெஷர் அதிகமாகிடும்.இப்ப பாரு நாங்கல்லாம் காம்பஸ்  இண்டர்வியூ பிளேஸ்மெண்ட்ன்னு ஓடிட்டு இருக்கோம்..”

“ஓ.. நீங்க பிளேஸ் ஆயிட்டீங்களா சீனியர்..?””

“இல்லயில்ல நான் காம்பஸே அட்டெண்ட் பண்ணல, மாஸ்டர்ஸ்க்கு பிரிபேர் பண்ணிட்டு இருக்கேன்..

எங்க ஃபேமலி பல தலைமுறையா பிசினஸ் குடும்பம், அப்பா கம்பனி வச்சிருக்காரு, படிச்சி முடிச்சதும் ஃபேமலி பிசினஸ்லதான் ஜாயின்  பண்ணபோறேன், சோ நோ கேம்பஸ் இண்டர்வியூ..”

பரம்பரை பணக்காரன் வேறயா? இப்ப இது ஒன்னுதான் குறைச்சல்.. எட்டாகனின்னு தெரியும் அதுக்குன்னு இப்படியா??

 எனக்கும் இவனுக்கும் இடையே சந்திரமண்டலதூரம் இருக்கே..இவ்ளோ குரூரமாவா இந்த கடவுள் என்னை தண்டிக்கனும்?

 இவனிடம் தனக்கு ஒரு இம்மியளவு வாய்ப்புகூட இல்லை என்பது இன்னும் அதிகமாகத் தாக்க, பெருமூச்சுவிட்டாள்.

பேச்சினூடே வெளியே எட்டிபார்த்தவன், “மழை குறைஞ்சிடுச்சின்னு நெனைக்கறேன் கிளம்பலாமா..?” என்றுகேட்டுக்கொண்டே எழுந்தான்,

“டேக் மை ஜாக்கெட், மழையில போகும் போது இதை போட்டுக்கோ.. பார்த்துப்போ சரியா..” என்று சிறுபிள்ளைக்கு சொல்லுவது போல் கூறிவிட்டு தனது ஜக்கெட்டை கழற்றி அவளிடம் கொடுத்து, கையசைத்து விடைபெற்றுவிட்டு மொபைலை எடுத்து யாரையோ அழைத்தபடி அவன் செல்ல,

சட்டென்று சுதாரித்து, “வந்து..இந்த ஜாக்கெட்டை எப்படி திரும்பி தர்றது?” என்று சற்று உரக்க கேட்டாள்

அவன் லேசாக இவள்புறம் திரும்பி “இட்ஸ் ஓகே.. கீப் இட் வித் யூ.. ஐ டோண்ட் மைண்ட்..” என்றவன் நில்லாமல்,லேசான தூரலில் நனைந்தபடியே வேகமாக ஓடிமறைந்தான்.

அவன் போன பிறகும் கையில் அவன் தந்த ஜாக்கெட்டையே வெறித்தபடி நடந்தது எதையும் நம்ப முடியாத அதிசயத்துடன் திகைத்து நின்றாள் அதிதி…

                                  தொடரும்

One thought on “காதல் எனும் மாயன்-3

  • அருமை அருமை… அடுத்த அத்தியாயத்தில அதிதிக்கு என்ன வைச்சிருக்கீங்கன்னு ஆவல் வந்திருச்சு இப்போ..

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!