காதல் 16:
கதவைத் திறந்த வசுந்தரா, கைகால்களில் கட்டுடன் வந்த ஈஸ்வரனைப் பார்த்து பதட்டமடைந்து விட்டார்.
“என்னாச்சு ஈஸ்வர்? எப்படி அடி பட்டது..?” என்று அவனை ஆராய்ந்தவர், அடுத்தநிமிடம் கண்ணீர் விட,
“அம்மா அழாதிங்கம்மா..! சின்ன ஆக்சிடென்ட். வேற ஒண்ணுமில்லை..” என்றான் சமாதானமாய்.
“சின்ன ஆக்சிடன்ட்டா..? இவ்வளவு பெரிய கட்டுப் போட்ருக்கியேப்பா..?” என்றார் வசுந்தரா.
“அம்மா, நிஜமாவே சின்ன காயம் தான். ரெண்டு நாள்ல சரியா போய்டும். கட்டு தான் பெருசா தெரியுது..” என்றான்.
“என்னமோ போப்பா.. நடக்குறது எதுவுமே நல்லாதவே இல்லை. அடுத்தடுத்து எவ்வளவு பிரச்சனை..?” என்று பேசி கொண்டே, அவனுக்கு டிபன் செய்ய போனார்.
இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு வெளியே வந்த மகா, ஈஸ்வரனை அப்படிப் பார்த்தவுடன், அதிர்ச்சியாகிவிட்டாள்.
“என்னங்க ஆச்சு..? என்ன இவ்வளவு பெரிய கட்டு..? என்ன பிரச்சனை..? அந்த அசோக் எதுவும் பண்ணிட்டானா..?” என்று பதட்டத்தில் அவள் பேசிக் கொண்டே போக,
“யாரு அசோக்..? என்ன பண்ணிட்டான்..? நீ என்ன சொல்ற மகா..?” என்றார் வசுந்தரா புரியாமல்.
வசுந்தரா கேட்ட பிறகுதான், தான் உளறியது அவளுக்குத் தெரிந்தது.
“அது வந்து அத்தை..” என்று அவள் இழுக்க,
“அதானே..? யாரு அந்த அசோக்..? என்ன கனவு ஏதும் கண்டியா..? சின்ன ஆக்ஸிடென்ட், அவ்வளவு தான். அம்மா, நீங்க சாப்பாட்டை வைங்க..” என்றான்.
“ரெண்டு நிமிஷம் ஈஸ்வர்.. தோசை ஊத்திட்டு வரேன்..” என்றவர்,அவனின் பேச்சில் மேற்கொண்டு எதையும் ஆராயவில்லை.
“நான் ஊத்தித் தர்றேன் அத்தை..” என்றவள் சமயலைறைக்குள் புகுந்து கொள்ள, மனதிற்குள்ளும் பயம் லேசாக எட்டிப் பார்த்தது.
“எதுன்னாலும் பார்த்து போக மாட்டியா ஈஸ்வர். ஏதோ சின்ன அடிங்க போய் பரவாயில்லை. உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நாங்க என்ன செய்வோம்..” என்று இன்னமும் புலம்பிக் கொண்டு தான் இருந்தார் வசுந்தரா.
“அம்மா..! எனக்கு ஒண்ணுமில்லை. இந்த கட்டைப் பிரிச்சு வேணும்ன்னா காட்டட்டுமா..?” என்றான்.
“இல்ல வேண்டாம்..! இருக்கட்டும்ப்பா. டாக்டர் சொன்னதுக்கு அப்பறம் பிரிச்சிக்கலாம்..” என்றார்.
“நீங்க போய் தூங்குங்கம்மா..! அதான் மகா தோசை ஊத்துறாளே..” என்றான்.
“உனக்கு வேற ஏதாவது வேணுமாப்பா. கையை அசைக்காம வச்சுடு. தண்ணி எதுவும் பட்டுற போகுது..” என்றார் வசுந்தரா.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்ம்மா..” என்றான்.
“சரிப்பா..! ஏதாவது வேணும்ன்னா கூப்பிடு. நாளைக்கு விடிஞ்சதும் முதல்ல கோவிலுக்கு போய்ட்டு வரணும். அப்பத்தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..” என்றவர் தூங்கப் போக, அதற்குள் தோசையை சுட்டு எடுத்து வந்தாள் மகா.
அப்போது தான் அவளை நன்றாகப் பார்த்தான் ஈஸ்வரன். பர்ப்பிள் கலர் சிந்தட்டிக் சேலையும், எப்போதும் இல்லாமல் தலையில் அதிகமாய் வைத்திருந்த மல்லிகைப் பூவும் அவனை வேறு உலகத்திற்கே அழைத்து சென்றது. புது மாப்பிள்ளைக்கு உரிய உணர்வுகள் அனைத்தும் விழித்துக் கொள்ள, தன் காயத்தைப் பார்த்தவன் மனதிற்குள் நொந்து போனான்.
“எனக்கு மட்டும் தான் இந்த சத்திய சோதனையெல்லாம் வரணுமா..?” என்று அவன் மன்றாடிக் கொண்டிருக்க,
“என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க..? சாப்பிடுங்க..” என்றாள்.
“சாப்பிடலாம்ன்னு தான் பார்க்குறேன்..முடியலையே..?” என்றான் ஒரு மார்க்கமாய்.
“என்ன சொன்னிங்க..?” என்றாள்.
“என்னைய சொன்னேன்.. என் கையை சொன்னேன்..” என்றவன், அவனுக்கு மறுபுறம் திரும்பி,
“இவ ஒருத்தி மனுஷனோட பீலிங்ஸ் புரியாம… மத்த நாளெல்லாம் ஏனோ தானோன்னு ஒரு நைட்டில இருந்துட்டு, இன்னைக்குன்னு பார்த்து தான் மனுஷனை சோதிப்பா..ஈஸ்வரா..” என்று அவனால் புலம்ப மட்டும் தான் முடிந்தது.
“அந்த பக்கம் திரும்பி யாருகிட்ட பேசிட்டு இருக்கீங்க..?” என்றாள்.
“ஒன்னுமில்லையே..” என்றவன்,
“ஆமா, இன்னைக்கு என்ன சேலை, மல்லி பூ எல்லாம் பலமா இருக்கு..?” என்றான்.
“அதுவா.. நான் மாட்டேன்னு தான் சொன்னேன். அத்தை தான் இப்படி எல்லா பூவையும் வைக்க சொன்னாங்க..” என்றாள்.
“ஏதாவது ஒரு வகையில எங்கம்மா எனக்கு நல்லது செய்யனும்ன்னு நினைச்சிருக்காங்க. என்ன நினைச்சு என்ன செய்ய..? எல்லாத்துலையும் இடி விழுந்திடுச்சே..” என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே சாப்பிட்டான்.
வலது கை விரல்களிலும் லேசாய் சிராய்ப்பு இருக்க, எரிச்சல் தாங்க முடியவில்லை. அந்த எரிச்சலுடனே சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“இப்படி எரிச்சலோட சாப்பிடுறதுக்கு என்னை ஊட்டி விட சொல்லியிருக்கலாம்..” என்றாள்.
“அதெல்லாம் சொல்லி செய்யக் கூடாது. தானா செய்யணும்..” என்றான்.
அவன் சொல்லி முடித்தது தான் மாயம், வெடுக்கென்று அவன் முன்னால் இருந்த தட்டை எடுத்தவள்,
“வாயைத் திறங்க..” என்று திணித்தாள்.
“இதுக்கு பேரு உங்க ஊர்ல ஊட்டி விடுறதா..? சிமிண்ட்ட எடுத்த சுவத்துல அப்புன மாதிரி அப்பிட்டு இருக்க..?” என்றான்.
“அப்படியா..? இந்தாங்க சாப்பிடுங்க. இப்படி ஊட்டவா..?” என்றாள் சிரித்துக் கொண்டே.
“இது கூட நல்லாத்தாண்டி இருக்கு..” என்றான் அவளை மேலும் கீழும் பார்த்துக் கொண்டு.
“எது..” என்றாள் அவனை முறைத்துக் கொண்டு.
“நான் தோசையை சொன்னேன்..நீ என்ன நினைச்ச..?” என்றான் சிரிப்புடன்.
“அய்யா சாமி, நான் ஒன்னையும் நினைக்கலை..” என்றவள், அமைதியாக அவனுக்கு ஊட்டிக் கொண்டிருக்க, அதற்கு மேல் அவனும் வாயாடாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஏனோ அந்த அமைதி கூட அழகாகத்தான் இருந்தது.
“வேற என்ன வேணும்..?” என்றாள்.
“அப்படியே பாலை எடுத்துட்டு ரூமுக்கு வான்னு சொல்லத்தான் ஆசை..? எங்க..?” என்று தன் கட்டுகளை பார்க்க,
“இல்லைன்னா மட்டும் அப்படியே கழட்டிடுவாரு துரை..” என்று நொடித்துக் கொண்டாள் மகா.
“ஒரு நாள் இல்ல ஒரு நாள் கழட்ட தாண்டி போறேன்..” என்றான் குறும்புப் புன்னகையுடன்.
“ஏதே..” என்றவள் முழிக்க,
“என்ன..?” என்றான்.
“என்ன இப்படியெல்லாம் பேசுறிங்க..?” என்றாள் முறைத்துக் கொண்டு.
“எப்படியெல்லாம் பேசுனேன்.. நீ சொன்னதைத்தான நானும் சொன்னேன்..” என்றான் நக்கலாய்.
“அது..நான் வந்து பொதுவா சொல்ற மாதிரி சொன்னேன்..” என்றாள்.
“நானும் பொதுவா சொல்ற மாதிரி தான் சொன்னேன்..” என்றான் அவளைப் போலவே.
“இவன் பொதுவா சொன்ன மாதிரியா சொன்னான். இவன் வாய் ஒன்னு பேசுது, கண்ணு ஒன்னு பேசுது. இந்த மல்லு வேட்டி மைனரு லேசுப்பட்டவன் இல்லை. கொஞ்சம் அசந்தா போதும்..” என்று நினைத்துக் கொண்டிருக்க,
“இன்னும் இந்த மல்லு வேட்டி மைனரு, மைனர் மாதிரி நடந்துக்கலை. அப்ப இருக்குடி உனக்கு..” என்றான்.
“உங்களை..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்து வைத்தாள்.
பேசிக்கொண்டு இருந்தாலும் அவனுக்கு வெதும்ப பாலைக் காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தாள். அதை அவன் குடித்து முடிக்க, அவனுக்கு கொடுத்திருந்த மாத்திரைகளை எடுத்து பிரித்துக் கொடுத்தாள்.
“நீ மாத்திரை போட்டியா..?” என்றான்.
“ம்ம் அதெல்லாம் முழுங்கிட்டேன்..” என்றாள்.
“அடுத்த வாரம் உனக்கும் செக்கப் போகணும்..” என்றாள்.
“ம்ம்..! அதை அப்ப பார்க்கலாம். இப்ப தூங்குங்க..” என்றாள்.
“நீயெங்க போற..?” என்றான்.
“நான் கீழ தூங்க போறேன். உங்க காயத்து மேல கை கால் பட்டிருச்சுன்னா வம்பா போய்டும்..” என்றாள்.
“இது உனக்கே ஓவரா தெரியலை. தூக்கத்துலையாவது அப்படி ஒன்னு நடக்கும்ன்னு பார்க்குறேன். இது வரைக்கும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை. செஞ்சு வச்ச சிலை மாதிரி ஒரே இடத்துல தூங்க வேண்டியது. இதுல நீ எங்க தூங்குனா என்ன? மேலயே தூங்குடி..” என்றான் கடுப்புடன்.
“நான் உங்களுக்காகத் தான் பார்த்தேன்..” என்றவள், கட்டிலின் மறுமுனையில் படுத்துக் கொண்டாள்.
“ஏங்க..? இந்த காயம் எப்படி பட்டுச்சு..? எல்லாம் அந்த அசோக் செஞ்ச வேலையா..?” என்றாள் கவலையாய்.
“அந்த நாய் என்கிட்டே நேரா மோத துப்பில்லாம, என்னை ஆக்சிடென்ட் பண்றதுக்கு வண்டியை அனுப்பியிருக்கான். கடைசி நிமிஷத்துல எப்படியோ சுதாரிச்சுட்டேன். அதனால லேசான அடியோட போய்டுச்சு.. இல்லன்னா, இன்னைக்கு நான் கன்பார்மா காலியாகியிருப்பேன்..” என்றான் பெருமூச்சுடன்.
ஏனோ அவன் அப்படி சொல்லவும் அவளால் தாங்க முடியவில்லை. வெளி வந்த கண்ணீரை கஷ்ட்டப்பட்டு அடக்கினாள்.
“எல்லாம் என்னால தான்.. அதான் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு..” என்றாள்.
“இது ஒரு சின்ன விஷயம்.. இதுக்கு போய் ஏன் இவ்வளவு கவலைப்படுற மகா. அவனுக்கு இருக்கு கச்சேரி..” என்று பல்லைக் கடித்துக் கொண்டான்.
“ஏங்க? அத்தைகிட்ட சொல்லியிருக்கலாம்ல. அவங்க ரொம்ப பயந்து போயிருப்பாங்க..” என்றாள்.
“சொல்றது பெரிய விஷயமில்லை. அம்மாகிட்ட சொன்னா, கண்டிப்பா விஷயம் அக்காவுக்கு தெரிய வரும். தேவையில்லாம என்னைக்காவது ஒரு நாள் பிரச்சனையா வரும். எதுக்கு? வேண்டாம்ன்னு தான் சொல்லலை. நீயும் எதுவும் சொல்ல வேண்டாம். சில விஷயங்களை சொல்லாம இருக்குற வரைக்கும் தான் நல்லது..” என்றான்.
அவன் எதை நினைத்து அப்படி சொன்னான் என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் எந்த வகையிலும் அவளை யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அதையெல்லாம் நினைத்துப் பார்த்தவளுக்கு ஏனோ, அந்த நிமிடமே அவனை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.
மெல்ல அவன் பக்கம் நகர்ந்தவள், அவன் வலது தோளில் தலையை வைத்து, ஒரு கையால் அவனை அணைத்துக் கொண்டாள். அஷோக்கைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவன், மனைவியின் திடீர் செய்கையில் ஆச்சர்யப்பட்டுப் போனான்.
“என்னடி உலக அதியம் இது..?” என்றான்.
“இதுல என்ன அதிசயத்தை கண்டுட்டிங்க..?” என்று படக்கென்று நகரப் போக,
“இல்ல..இல்ல.. இப்படி இருந்துகிட்டே சொல்லு..” என்றவன், அவளை கைவளைவுக்குள் கொண்டு வந்தான்.
“சொல்றதுக்கெல்லாம் ஒண்ணுமில்லை. என்னமோ கட்டிக்கனும்ன்னு தோணுச்சு..” என்றாள்.
“இப்பவாவது தோணுச்சே..” என்று மனதிற்குள் நினைத்தவன்,
“மனுஷன் இப்படி இருக்குறப்ப தான் உனக்கு இப்படியெல்லாம் தோனுமாடி. நேத்தெல்லாம் தொனியிருக்காதே..? என் நேரம்..? இப்படி கை கால்ல கட்டைப் போட்டுட்டு வந்து படுக்கனும்ன்னு..” என்று அவன் புலம்புவதைப் பார்த்தவளுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது..” என்றான்.
“தேங்க்ஸ்ங்க..” என்றாள்.
“எதுக்குடி..? அடிபட்டு வந்ததுக்கா..?” என்றான் சிரிப்புடன்.
“உங்களை..!” என்று முறைத்தவள்,
“பின்ன என்னடி..? நான் என்ன நிலமையில வந்திருக்கேன்.. இன்னைக்கு பார்த்து இப்படி கும்முன்னு கண்ணு முன்னாடி வந்து நிக்கிற..? நான் என்னென்னத்தை நினைப்பேன்..” என்றான் பாவமாய்.
“ஒன்னையும் நினைக்க வேண்டாம். பேசாம தூங்குங்க..!” என்றாள்.
“கடவுளே..! என்னை மாதிரி ஒரு நிலைமை எந்த மனுஷனுக்கும் வரக் கூடாது..” என்று புலம்பியவன், ஏனோ மனைவியின் அருகாமையில் சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான். அவன் போட்டிருந்த மாத்திரையும் ஒரு காரணம்.
அந்த இரவு நேரத்திலும் தூங்காமல் நடை போட்டுக் கொண்டிருந்தான் அசோக்.
“அவன் கதையை முடிச்சுட்டு வர சொன்னா..? இப்படி தப்பிச்சுட்டான்னு சொல்லிட்டு வந்து நிக்கிறிங்க..?” என்றான் கோபமாய்.
“நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு சுலபம் கிடையாதுண்ணே..! அவன் லேசுப்பட்டவனும் இல்லை. ரொம்ப சாமர்த்தியமா தப்பிச்சுட்டான்..” என்றனர் எதிரில் இருந்த இருவர்.
“அவனுக்கு இந்நேரம் விஷயம் புரிஞ்சிருக்கும். இதுக்குப் பின்னாடி நான் தான் இருக்கேன்னு அவனுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கும். இனி அவன் சும்மா இருக்க மாட்டான். சும்மா இருந்தவனை நானே வலிய இழுத்து உள்ள போட்ட மாதிரி ஆயிடுச்சு..” என்று அசோக் கத்திக் கொண்டிருந்தான்.
“எப்படின்னாலும் அவனுக்கு காயம் பட்டது உண்மை. எப்படியும் கைகால் உடைஞ்சிருக்கும்..” என்றான் ஒருவன்.
“அஷோக்கு.. கொஞ்ச நாளைக்கு அந்த பாண்டியன் பிரச்சனையை தள்ளிப் போடு. அடுத்தடுத்து பிரஷர் குடுத்தா, அந்த ஆளு வேற முடிவைத் தேடிகிட்டா, அது நமக்குத் தான் பாதகமா அமையும்..” என்றான் அசோக்கின் நண்பன்.
“நீ சொல்றதும் சரி தான். ஆனா, அந்த மகா எனக்கு வேணும். அவளை ஒருநாளாவது அனுபவிக்காம விட மாட்டேன்..” என்றான் அசோக்.
“அடுத்து நம்ம டார்கெட் யாரு அசோக்..” என்றான் அவன் நண்பன்.
“லிஸ்ட்ல அடுத்து இருக்குற ஆளைப் பிடி. அவன் நம்மகிட்ட போக்குக் காட்டிட்டே இருக்கான். பொண்ணோட மானம் அவனுக்கு முக்கியமில்லை போல..?” என்றான் அசோக்.
“ரைட்டு..” என்றவன் அடுத்த வேலையை ஆரம்பிக்கப் போக, அசோக் மட்டும் ஈஸ்வரன் மேல் இருந்த வன்மத்திலேயே இருந்தான். அவனுக்கு உண்மையான பயமே பாண்டியன், ஈஸ்வரனிடம் எதையும் சொல்லிவிடக் கூடாது என்பது தான். அப்படி அவர் மட்டும் சொல்லிவிட்டால், ஏதோ ஒரு வகையில் தங்களின் குட்டு வெளிப்பட்டு விடும் என்று அவனுக்குத் தெரியும்.
மறுநாள், ஈஸ்வரனுக்கு முன்பாகவே எழுந்து விட்டாள் மகா. அவன் அசந்து தூங்கிக் கொண்டிருக்க, வெளியே வந்தாள். வசுந்தரா அவளுக்கு முன்பாகவே எழுந்து வேலைகளை செய்து கொண்டிருக்க,
“ஈஸ்வரன் எந்திருச்சுட்டானா மகா..?” என்றார்.
“தூங்குறார் அத்தை..” என்றாள்.
“சரிம்மா..! நான் கோவிலுக்கு போயிட்டு வந்திடுறேன். காலையில சமைச்சிடுறியா?” என்றார்.
“நான் பார்த்துக்கிறேன் அத்தை..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“ஈஸ்வரன் எங்க வசுந்தரா. ராத்திரி பய அடிபட்டு வந்தான்னு சொன்ன..?” என்றார் ருக்கு.
“தூங்குறாரு பாட்டி..” என்றாள் மகா.
“யாரு கண்ணு பட்டுச்சோ தெரியலை, என் பேரனுக்கு இப்படியெல்லாம் நடக்குது. ஒரு நாளும் இவ்வளவு நேரம் தூங்க மாட்டான்…” என்று ருக்கு பாட்டி தன் ஆதங்கத்தை சொல்ல,
“எதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சேன்னு நினைச்சுக்க வேண்டியது தான் அத்தை..” என்றார் வசுந்தரா.
“அதுவும் வாஸ்தவம் தான் வசுந்தரா..” என்றார் ருக்கு.
வசுந்தரா கோவிலுக்கு செல்ல, விஷயத்தைக் கேள்விப்பட்ட மஞ்சுவும், சபரியும் காலையிலேயே வந்து விட்டனர்.
ஈஸ்வரன் அப்போது தான் எழுந்து வந்து வெளியே அமர்ந்திருந்தான். மகா அடுப்படியில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள்.
“என்ன மாப்ள? வண்டியில பார்த்து போக மாட்டியா..?” என்று சபரி அவனிடம் பேசிக் கொண்டிருந்தார். மஞ்சுவோ எதுவும் பேசாமல் அவனின் கையைத் தடவி தடவி அழுது கொண்டிருந்தாள்.
“இப்ப எதுக்கு மஞ்சு இப்படி அழுது வடியற..? அவனுக்கு ஒண்ணுமில்லை..” என்றான் சபரி.
“அம்மா போன் போட்டு விஷயத்தை சொன்ன உடனே எனக்கு எப்படி இருந்துச்சுன்னு தெரியுமா ஈஸ்வரா..?நமக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது..?” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
“ஆமாடி.. வேற யாருக்கும் ஆக்சிடென்ட் நடக்கவே நடக்காது. அவனே தெம்பா இருக்கான், நீயேண்டி அழுது வடியிற..?” என்றான் சபரி.
“உங்களுக்கு என்ன தெரியும்..? எங்க பாசத்தை பத்தி..?” என்றாள்.
“எது..? நீ அழுதா தான் உனக்கு பாசம் இருக்குன்னு அர்த்தமா..?” என்று சபரி கேட்டுக் கொண்டிருக்கும் போதே,
‘டீ’ எடுத்துக்கோங்க சித்தப்பா..! என்று வந்து நின்றாள் மகா.
“அடடே..! மகா போட்ட டீயா..?” என்றவாறே சபரி எடுத்துக் கொள்ள,
“நீங்களும் எடுத்துக்கோங்க சித்தி..” என்றாள்.
“எனக்கொன்னும் வேண்டாம். நான் எங்க வீட்லயே குடிச்சுட்டு தான் வந்தேன்..” என்றாள்.
“இதுவும் உங்க வீடுதான..?” என்றாள் எதார்த்தமாய்.
அவள் சொன்ன வார்த்தை அவளுக்கு சாதாரணம். ஆனால் மஞ்சுவுக்கு அப்படியில்லை. மனதிற்குள் கொஞ்சம் இதமாய் இருந்தது.
“இதுவும் என் வீடுதான்..யாரு இல்லைன்னு சொன்னா?” என்றபடி டீயை எடுத்துக் கொண்டாள்.
மகா, வெந்நீரை எடுத்து வைக்க, சபரியின் உதவியுடன் குளித்து முடித்து வந்தான் ஈஸ்வரன். அவனைப் பார்க்க பாண்டியனும், கமலாவும் வந்தனர்.
“இவங்களுக்கு யார் சொன்னது..?” என்று ஈஸ்வரன் கேள்வியாகப் பார்க்க,
“நான் தான் சொன்னேன் மாப்ள..” என்றான் சபரி.
பாண்டியனுக்கும், கமலாவிற்கும் நன்றாகத் தெரியும் இது அசோக்கின் வேலை தான் என்று. அவர்களுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
அவர்களின் நிலைமையை ஈஸ்வரனும் நன்கு உணர்ந்து கொண்டான்.
“எனக்கு ஒண்ணுமில்லை மாமா. சும்மா சின்ன காயம் தான்..” என்றான்.
“இருந்தாலும் மாப்ள..” என்று பாண்டியன் இழுக்க,
“நீங்க கண்டதையும் நினைச்சு கவலைப் படாதிங்க. என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும். நான் கவனமா இருந்துப்பேன் மாமா..” என்றான் மறைமுகமாய். சபரிக்கும், மஞ்சுவிற்கும் அவன் சாதரணமாய் சொல்வதைப் போல் தான் இருந்தது. ஆனால், அதன் உள்ளர்த்தத்தை பாண்டியன் உணர்ந்து கொண்டார்.
கமலா, மகாவிற்கு உதவி செய்ய சமையலறைக்குள் சென்று விட, மஞ்சுவும் ருக்குவிடம் பேசிக் கொண்டிருந்தாள். சபரி ஒரு வேலையாய் வெளியே சென்று விட, மாமனாரும், மருமகனும் மட்டும் அமர்ந்திருந்தனர்.
“எதை வச்சு மாமா உங்களை பிளாக்மெயில் பன்றான்..?” என்றான் பட்டென்று.
“நீங்க எதைக் கேட்குறிங்க மாப்ள..?” என்றார் பாண்டியன்.
“நான் என்ன கேட்டேன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும் மாமா. அப்பறம் ஏன் இப்படி தெரியாத மாதிரி கேட்குறிங்க..? எந்த விஷயமா இருந்தாலும், நீங்க நம்பி என்கிட்ட சொல்லலாம். உங்களுக்கு ஒரு மகன் இருந்தா சொல்ல மாட்டிங்களா..? அப்படி நினைச்சுக்கோங்க..” என்றான் தன்மையாய்.
அவன் அப்படி சொல்லவும், அந்த பெரிய மனிதரின் கண்களும் கலங்கிவிட்டது.
“உங்ககிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல போறேன் மாப்ள. உங்களுக்கு முதல்ல சரியாகட்டும். கண்டிப்பா சொல்றேன் மாப்ள..” என்றார் பாண்டியன். வசுந்தரா கோவிலில் இருந்து வர, அந்த பேச்சு அதோடு நின்றது.