காதல் 2:
பதினாறாம் நாள் காரியங்கள் அனைத்தும் முடிந்திருந்தது. மகள் இறந்த சோகத்தில் அனிதாவின் பெற்றோர், மகளின் காரியத்திற்கு கூட வரவில்லை. பிரகதீஸ்வரனும் அவர்களை எதிர்பார்த்ததைப் போல் தெரியவில்லை. மஞ்சரியும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்தாள்.
தம்பியின் இறுகிய அந்த தோற்றம் உடன் பிறந்தவளுக்கு உயிரையே பறித்ததைப் போன்று இருந்தது.
“நான் இருந்தும் என் தம்பிக்கு இப்படி ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டேனே..?” என்று சொல்லி சொல்லி அழுது கொண்டிருந்தார்.
“மஞ்சரி, ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்து ஒரு நாள் கூட ஆகலை. நீ இப்படியே அழுதுகிட்டு இருந்தா, மறுபடியும் பிரஷர் கூடிடும். கொஞ்ச நேரம் அமைதியா இரு..” என்றான் சபரி.
“எப்படிங்க? என்னை அமைதியா இருக்க சொல்றிங்க..? ஊருக்கே என் தம்பி சொப்பனமா இருந்தானே.. ஆனா, இன்னைக்கு அவன் வாழ்க்கை இப்படி ஆகிப் போய்டுச்சே..” என்று தன்னுடைய பல்லவியை நிறுத்தாமல் பாடிக் கொண்டிருந்தார் மஞ்சரி.
“அம்மா, கொஞ்ச நேரம் அமைதியா இரும்மா. மாமா மறந்தாலும் நீங்க யாரும் மறக்க விட மாட்டிங்க போல..” என்று காயத்ரி தன்னுடைய அம்மாவைத் திட்ட,
“உனக்கு என்னடி தெரியும்..? அங்க பாரு உன் மாமன் முகத்தை..? எப்படி கம்பீரமா இருந்தான். இப்ப எப்படி இருக்கான் பாரு..?” என்றார் மஞ்சரி.
“எப்படி இருக்கார்..? மாமா எப்பவும் அதே மாமா தான். இடையில நடந்த விஷயம் இடையிலேயே போய்டுச்சு, அவ்வளவு தான். நீங்க திரும்ப திரும்ப இதையே சொல்லிட்டு இருக்காதிங்க..” என்றாள் காயத்ரி.
“இவர்களின் சம்பாஷனைகளை கேட்டும், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் பிரகதீஸ்வரன்.
“போனவ போய்ட்டா.. இனி அதைப் பத்தி பேசி என்ன பிரயோஜனம்…? என் பேரனுக்குன்னு ஒருத்தி பிறந்திருப்பா. அவளைத் தேடி கண்டுபிடிச்சு கூடிய சீக்கிரம் கல்யாணத்தை நடத்திடனும்..” என்றார் ராக்கு.
“இனி வெளிய இருந்து வர்ற யாரையும் நான் நம்புற மாதிரி இல்லை. நம்ம காயத்ரியையே அவனுக்கு முடிச்சு வச்சுடலாம்..” என்று மஞ்சரி சொல்ல, அதிர்ந்து விட்டாள் காயத்ரி.
அதுவரை அமைதியாக இருந்த பிரகதீஸ்வரன், பட்டென்று எழுந்து தான் அமர்ந்திருந்த சேரை தூக்கி ஒரே போடாக போட்டான். அவன் தூக்கிப் போட்டதில் அந்த சேர் கால் பகுதி உடைந்து பிளந்து போனது. அந்த சத்தத்தில் அனைவரும் மிரண்டு பார்க்க,
“அக்கா..! என்ன பேசறன்னு தெரிஞ்சு தான் பேசுறியா..? காயத்ரி நான் தூக்கி வளர்த்த பொண்ணு. எனக்கு எப்படி காயத்திரியை..? எப்படி உன்னால இப்படி யோசிக்க முடியுது..? என்னைப் பார்த்தா கல்யாணத்துக்கு அலையறவன் மாதிரி இருக்கா..? ஒருத்தி செத்து என்னை பாடாப் படுத்திட்டு இருக்கா. நீங்களும் உங்க பங்குக்கு இன்னும் என்னென்ன செய்யணுமோ செய்ங்க. ஆனா ஒன்னு, எல்லா நேரமும் நான் இப்படியே இருக்க மாட்டேன். நீங்க எல்லாரும் சேர்ந்து இதுவரைக்கும் செஞ்சதே போதும். இனி கல்யாணம், கருமாதின்னு எந்த பேச்சும் இந்த வீட்ல இருக்கக் கூடாது..” என்று உடைந்த சேரை மீண்டும் காலால் எத்தித் தள்ளிவிட்டு, கோபமாய் வெளியேறினான் பிரகதீஸ்வரன்.
“ஆத்தி…! இத்தனை நாள் அமைதியா இருந்த பயலா இது..? எப்படி கோபம் வருது..? கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டு போறானே..? மாசானி ஆத்தா, இதையெல்லாம் காதுல கேட்கவா நான் இன்னமும் உயிரோட இருக்கேன்…” என்று ராக்கு பாட்டி தனது தொண்டையைத் திறந்தார்.
“என்ன மஞ்சு..? அவன் குணம் தெரிஞ்சும் இப்படி சொல்லிட்ட..? சும்மாவே முறைச்சுகிட்டு இருப்பான். இப்ப இன்னும் அதிகமாத்தான் ஆகப் போகுது..கொஞ்ச நாளைக்கு எதுவும் பேச வேண்டாம்..” என்றார் வசுந்தரா.
“அவன் இப்படி இருக்கானேன்னு எனக்கு ஆதங்கம் இருக்காதாம்மா..?கூடப் பொறந்தவன் இப்படி தனிமரமா நிக்குறதைப் பார்த்து, மனசு தாங்காம சொல்லிட்டேன். அதுக்கு இப்படியா கோபமா பேசிட்டு போவான்..?” என்று மஞ்சரி மீண்டும் அழ ஆரம்பிக்க,
“அமைதியா இரு மஞ்சு..! அவனே தேறி வந்துட்டான். நீயேன் இன்னமும் ஒப்பாரி வைக்கிற. எதை எப்ப செய்யனும்ன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். நீங்க யாரும் அவனுக்கு சொல்லத் தேவையில்லை..” என்று சபரி அழுத்தம் திருத்தமாக சொல்ல, மஞ்சரி வாயை மூடிக் கொண்டாள்.
“அம்மா, நான் மகாவைப் போய் பார்த்துட்டு வரவா..?” என்றாள் காயத்ரி தயங்கியபடி.
“அவளை எதுக்கு நீ பார்க்க போற..? நல்லா இருக்குற உன்னையும் கெடுத்து விட்ருவா… ஆடுன ஆட்டத்துக்குத் தான் அக்காக்காரி போய் சேர்ந்துட்டா..” என்று மஞ்சரி வெடுக்கென்று பேச,
“வாயை மூடு மஞ்சு..” என்று சபரி குரலை உயர்த்தினான்.
“இப்ப எதுக்கு என்னைக் கோவிக்கிறிங்க..? நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்..” என்று எரிச்சலுடன் சொல்ல,
“இன்னேர வரைக்கும் உன் தம்பிக்கு ஒண்ணுன்ன உடனே எப்படி துடிச்சு போய் பேசுன..? ஊர்ல பேசுறது எல்லாம் தப்புன்னு சொன்ன..? இதேது அடுத்தவங்க விஷயம் அப்படின்ன உடனே நீயும் அதைத்தான பண்ற..?” என்ற சபரின் கேள்விக்கு பதிலில்லை மஞ்சரியிடம்.
“உங்க அண்ணன் குடும்பத்தை ஒன்னு சொல்லிடக் கூடாதே.. வந்திடுவிங்க சண்டைக்கு. நல்லவேளை கூடப் பிறக்கலை. அப்படி பிறந்திருந்தா உங்களை கையிலையே பிடிக்க முடியாது..” என்றாள்.
“ஆயிரம் தான் இருந்தாலும் அண்ணன்ற உறவு இல்லைன்னு ஆகிடுமா..? மகாவும், நிவேதாவும் என் பொண்ணுங்க தான். ஒருத்தியைத் தூக்கிக் குடுத்துட்டு அந்த குடும்பமே அங்க பரிதவிச்சுப் போயிருக்கு. இந்த நேரத்துல கூட வன்மத்தை காட்டணுமா..?” என்ற சபரி,
“நீ அங்க போய் இருடா காயத்ரி…” என்றார் மகளிடம்.
“சரிப்பா..!” என்ற காயத்ரி அடுத்த நிமிடம் அங்கு இருக்கவில்லை.
“அத்தை, நாமளும் ஒரு எட்டு போய்ட்டு வந்தா என்ன..?” என்று வசுந்தரா, ராக்கு பாட்டியிடம் கேட்டார்.
“அந்த ராங்கிக்காரி வீட்டுக்கு நான் வர மாட்டேன். அது மட்டுமில்லாம, முப்பது நாள் ஆகாம எங்கயும் போகக் கூடாது…” என்றார் ராக்கு.
அதற்கு மேல் வசுந்தராவால் அவரிடம் எதுவும் பேச முடியாது. ஆனால் மனதில் அவர்களை நினைத்தும் அவருக்கு வருத்தம் இருந்தது.
“இந்த நிவேதா பொண்ணு ஏன் இப்படி பண்ணுச்சு..?” என்று மனதில் ஓராயிரம் முறை யோசித்திருப்பார்.
மகாவின் வீட்டில்…
பாண்டியனும், கமலாவும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் அப்படியே இருக்க, மகா, கொஞ்சம் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, எழுந்து ஒவ்வொரு வேலையாக செய்து கொண்டிருந்தாள்.
கூந்தலை ஒன்றிரண்டாய் தூக்கிக் கொண்டையிட்டவள், நலுங்கிப் போயிருந்த புடவையை தூக்கி சொருகியபடி வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். கைகள் வேலையை செய்து கொண்டிருக்க, மனமோ அவளின் அக்காவின் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. அந்த கலையிழந்த சோகத்திலும், அவளுடைய அழகு மிளிர, அவளின் செய்கைகளை பார்த்தபடி இருந்த பாண்டியனின் மனதிற்குள் புளியைக் கரைத்தது. பெண் பிள்ளையை பெற்றவரின் ஒவ்வொரு வலியையும் அவர் அனுபவித்தவர் ஆயிற்றே.
யாரோ தன்னை சாட்டையால் அடிப்பதைப் போன்று உணர்ந்தார் பாண்டியன். மகா பத்ராவைப் பார்க்கும் போது, அவருடைய கடமை மிச்சம் இருப்பதை உணர்ந்து கொண்டே இருந்தார்.
“இனி நீ வேலைக்கு போக வேண்டாம் மகா..” என்ற குரலில் விலுக்கென்று நிமிர்ந்தாள் மகா.
‘கேட்ட விஷயம் உண்மைதானா என்ற சந்தேகம் அவளுக்கு..’
“என்னப்பா சொல்றிங்க..?” என்றாள்.
“ஆமாம்மா..! இனி நீ வேலைக்குப் போக வேண்டாம். ஒரு பொண்ணைத் தூக்கிக் குடுத்துட்டோம். நீயாவது எங்களுக்கு வேணும்மா…” என்றார்.
“அப்பா, இதுக்கும் நான் வேலைக்கு போறதுக்கும் என்ன சம்பந்தம்..? அக்கா கல்யாணத்துக்கு வாங்குன லோன் வேற இருக்கு. அதையெல்லாம் எப்படி கட்டுறது..? அக்கா போன சோகத்துல பேசுறிங்ப்பா..நடைமுறையில சாத்தியப்படாது..” என்றாள்.
“இருக்குற நிலத்தை வித்தாவது உன்னோட கல்யாணத்தை முடிச்சுடுவேன் மகா. லோனையும் மொத்தமா கட்டிடலாம். ஏற்கனவே நிவேதா விஷயத்துல நான் முட்டாள் தனம் பண்ணிட்டேன். இன்ஜினியர் மாப்பிள்ளைன்னு பெருமையா சொல்லிக்கிட்டு பொண்ணைக் கட்டிக் குடுத்தேன். ஆனா, இப்போ என் பொண்ணையே எனக்கு இல்லாம ஆக்கிட்டானே…!” என்றவருக்கு கண்கள் கலங்கி துடிக்க,
“அவனை நான் சும்மா விட மாட்டேன்ப்பா. அவன் காலத்துக்கும் வெளிய வரவே கூடாது..” என்று கோபத்தில் சொன்னவளுக்கு, முகம் அப்படியே சிவந்து போனது.
“இனி அவன் உள்ள இருந்தா என்ன? வெளிய இருந்தா என்ன..? நம்ம பொண்ணு திரும்பி வரப்போறாளா என்ன..? என்னோட உடம்பு என்னமோ செய்து மகா. எனக்கு எதுவும் ஆகுறதுக்கு முன்னாடி உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிடனும்..” என்றார் பாண்டியன்.
“அக்காவுக்கு பண்ணின மாதிரியாப்பா..?” என்ற அவளின் கேள்வி, அவரை சாட்டையால் அடித்ததைப் போல் இருந்தது.
“மகா…!!!” என்று கமலா அதட்ட,
“எல்லா பிரச்சனைக்கும் தீர்வு பொண்ணுங்களோட கல்யாணம் தான் இல்லையாப்பா..?? கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டா உங்க கடமை முடிஞ்சுடும்ன்னு நினைக்கிறிங்க..?” என்றாள் விரக்தியாய்.
“ரெண்டும் பொண்ணா பிறந்ததை நினைச்சு நான் என்னைக்குமே கவலைப் பட்டதில்லை மகா. உங்க ரெண்டு பேரையும் பையன் மாதிரி தான் வளர்த்தேன். உங்க அக்கா இப்படி கோழைத்தனமா ஒரு முடிவு எடுப்பான்னு நான் நினைக்கலை” என்றார்.
“என்னால வேலையை விட முடியாதுப்பா..” என்றாள் நிமிர்வாய். இந்த நிமிர்வு தான் அவளின் அழகு. அவளின் துணிச்சல் தான் அவளின் ஆயுதம்.
“கல்யாணத்தை பண்ணிக்கிட்டு நீ என்ன வேணும்ன்னாலும் செய்ம்மா..!” என்றார்.
“முடிவே பண்ணிட்டிங்க போல..?” என்றாள்.
“சரின்னு நினைச்சது தப்பா இருந்திருக்கு. தப்புன்னு நினச்சது சரியா இருந்திருக்கு..கண்ணுக்குத் தெரியாத பேயை விட, தெரிஞ்ச பிசாசு மேல்..” என்றார்.
மகா புரியாமல் பார்க்க,
“ஈஸ்வரனுக்கே உன்னை கட்டி வச்சுடலாம்ன்னு நினைக்கிறேன் மகா..” என்று அவர் சொன்ன பின்பு அப்படி ஒரு அமைதி அந்த வீட்டில்.
“அப்பா..!!!!” என்றவளுக்கு பேரதிர்ச்சி.
“என்னங்க சொல்றிங்க..?” என்று கமலாவும் அதிர்ந்தார்.
“நான், நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான் இது. இது மட்டும் தான் சரியா இருக்க முடியும்ன்னு என் மனசு சொல்லுது.” என்றார் பாண்டியன்.
“அக்காவை கட்டுனவனாவது ரெண்டு மாசம் கழிச்சு தான் அவளைக் கொன்னான். ஆனா இவன், ஒரு ராத்திரியிலேயே பொண்டாட்டியை கொன்னுட்டான். அவனை நான் கல்யாணம் பண்ணிக்கனுமா..? இதை எப்படிப்பா உங்களால யோசிக்க முடிஞ்சது?” என்றவளுக்கு ஆதங்கம், ஆத்திரம் எல்லாம் ஒரு சேர தோன்றியது.
“ஈஸ்வரன் அந்த அளவுக்கு மோசமானவன் கிடையாதும்மா..” என்றார் பாண்டியன்.
“என்னைப் பொருத்தவரைக்கும் அவனும் கொலைகாரன் தான்..! அதுமட்டுமில்லாம, விவசாயம் பண்றவனை நான் ஒருநாளும் கல்யாணம் பண்ண மாட்டேன்..” என்றாள் தீர்மானமாய். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த காயத்ரிக்கு, நடந்த பேச்சு வார்த்தையைக் கண்டு அதிர்ச்சி தான்.
“நானும் விவசாயம் தான் பண்றேன் மகா. அந்த விவசாயம் தான் உங்களை படிக்க வச்சது. உன்னை இந்த அளவுக்கு பேச வச்சிருக்கு..” என்றார் பாண்டியன்.
“என்ன பண்ணி என்ன செய்யப்பா..? எங்க அக்காவை நல்லபடியா வாழ வைக்கலையே உங்க விவசாயம்..அவங்க கேட்டதை உங்களால செய்ய முடியலையே..? எத்தனை சித்திரவதையை அனுபவிச்சாளோ..?” என்று மரத்துப் போன குரலில் பேசிக் கொண்டிருந்தாள் மகா.
ஆம்..! பாண்டியன் மகளுக்கு போடுவதாய் சொன்ன நூறு பவுனில் அவரால் எழுபது பவுன் தான் போட முடிந்தது. போடாத முப்பது பவுனில் ஆரம்பித்தது பிரச்சனை. அதைத் தொட்டு ஒவ்வொன்றுக்கும் பிரச்சனை செய்தான் அவளின் கணவன். கடைசியில் அவள் செத்து தான், பிரச்சனையை முடித்திருந்தாள்.
என்னதான் காலங்கள் மாறினாலும், வரதட்சணை பெரிய விஷயம் இல்லையென்று மாறிப் போனாலும், இன்னமும் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் துடித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
“பெரியப்பா சொல்றதை கேளு மகா. நிஜமாவே ஈஸ்வரன் மாமா ரொம்ப நல்லவரு..” என்றாள் காயத்ரியும் தன் பங்கிற்கு.
“முடியவே முடியாது. இதைப் பத்தி இனி என்கிட்ட பேசாதிங்கப்பா..” என்றவள் அறைக்குள் சென்று விட்டாள். காயத்ரியும் அவளை பின்தொடர்ந்து செல்ல, பாண்டியனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
“நீங்க அவசரப்படுறிங்க..” என்றார் கமலா, கணவனைப் பார்த்து.
“இல்ல கமலா. நான் இப்போதான் நிதானமா இருக்கேன். இதுவரைக்கும் என் பொண்ணுங்களை நான் எந்த விஷயத்தை செய்ய சொல்லியும் கட்டாயப் படுத்தினது இல்லை. ஆனா, இந்த ஒரு விஷயத்தில் என்னோட எண்ணம் மாறாது..” என்றார்.
“என்ன திடீர்ன்னு ஞான உதயம்..? நீங்க பேசின பேச்சுக்கு, இனி அவங்க நம்ம வீட்ல பொண்ணு எடுப்பாங்களா..? வசுந்தரா சரின்னு சொன்னாலும், ராக்கு பாட்டி சம்மதிக்கவே மாட்டாங்க. முக்கியமா ஈஸ்வரன் தம்பி சம்மதிக்கும்ன்னு எனக்குத் தோணலை..” என்றார் கமலா, உள்ள நிலையை உணர்ந்தவராய்.
“எனக்கும் தெரியும் கமலா. ஆனா, இதை பண்ணியே ஆகவேண்டிய கட்டாயத்துல நான் இருக்கேன். அவங்க வீட்லயும் இப்ப ஒரு துக்கம் நடந்திருக்கு. இந்த சமயம் அவங்க ரொம்ப யோசிக்க மாட்டாங்க.. செஞ்ச தப்பை நேர்படுத்திக்க ஒரு வாய்ப்பு தான் இது. நீ மகா கிட்ட பேசு. நான் அவங்க கையில, கால்ல விழுந்தாவது பேசி முடிச்சுடுறேன்..” என்றார் பாண்டியன்.
“இத்தனை நாள் பேசாம இருந்துட்டு, எப்படிங்க திடீர்ன்னு பேசுறது? இப்ப போய் பேசுனா நல்லா இருக்காதுங்க..” என்றார் கமலா.
“அதுவும் சரிதான். ஒரு வாரம் போகட்டும், என்ன செய்றதுன்னு யோசிப்போம்..” என்று அப்போதைக்கு அந்த பேச்சிற்கு முற்று புள்ளி வைத்தார் பாண்டியன்.
உள்ளே மகாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.
“எதுக்கு மகா இப்படி கோபப்படுற..? பேசாம எங்க மாமாவை கட்டிக்கோ. உன்னை நல்லா பார்த்துப்பார்..” என்றாள் காயத்ரி.
“ஏன்..? என்னையும் அன்னைக்கே போட்டுத் தள்ளவா..?” என்றாள் இடக்காய்.
“நீ அவர நேர்ல பார்த்தா இப்படி சொல்ல மாட்ட..? எங்களால அவர் முகத்தை பார்க்கவே முடியலை. அப்படியே இறுகிப் போய் கிடக்குறாரு. அவர் அப்படி இருக்குறதை பார்க்க முடியாம, எங்கம்மா கூட காலையில என்னைய கட்டி வைக்கிறேன்னு சொன்னாங்க..”என்றாள் காயத்ரி.
“உடனே சரின்னு சொல்லியிருப்பானே..” என்றாள் மகா.
“இல்லவே இல்ல..! மாமா அம்மாவை கோபமா பேசிட்டு வெளிய போய்ட்டாங்க..” என்றாள் பாவமாய்.
“அதான் இவ்வளவு அக்கறைப் படுறியே.. உங்கம்மா சொன்ன மாதிரி நீயே அவனைக் கட்டிக்க வேண்டியது தான..?” என்றாள் மகா எரிச்சலுடன்.
“ஏன் மாட்டேன்..? எங்க மாமா சரின்னு சொன்னா நானே கட்டிக்குவேன். உன்கிட்ட இப்படி கெஞ்சிகிட்டு இருக்க மாட்டேன். ஆனா, மாமா தான் தூக்கி வளர்த்த பிள்ளை, எனக்கு பிள்ளை மாதிரின்னு சொல்லிட்டார்..” என்றவளின் முகத்தில் என்ன இருந்தது. எப்படியாவது தாய்மாமனின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்து விட வேண்டும் என்ற சிறு ஏக்கம் தான் இருந்தது. அதைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை.
“அக்கா இறந்ததுல அப்பா ஏதோ உளறிகிட்டு இருக்கார். கண்டிப்பா நான் சம்மதிக்க மாட்டேன். உங்க மாமனுக்கு வேற பொண்ணைப் பாருங்க..” என்று முடிவாக சொல்லிவிட்டாள் மகா பத்ரா.
அவர்கள் பெண்கேட்டு இவர்கள் வீட்டு வாசலில் தவம் கிடப்பது போல் இருந்தது மகாவின் பேச்சு. இந்த பேச்சில் சம்பந்தப்பட்டவனோ ஆழியார் அணைக்கட்டின் மேல் நின்று நிரம்பி வழிந்து கொண்டிருந்த நீரை வெறித்துக் கொண்டிருந்தான்.
எங்கே, எதில் தவறு நடந்தது என்று இதுவரைக்கும் அவனுக்குத் தெரியவில்லை. வெள்ளை வேட்டி சட்டையில் கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு நின்றிருந்தவனின் தோற்றம் அவன் எதையோ தீவிரமாய் யோசித்துக் கொண்டிருப்பதைக் காட்டியது.
அவன் கண்முன்னால் சடலம் எறிந்த காட்சியே அவனுக்கு வந்து வந்து போனது. கண்களை மூடினாலே தீ கொளுந்துவிட்டு எறிவதைப் போன்று இருக்க, இமைக்கவும் பயந்து அப்படியே இருந்தான்.
அவனின் திருமண தினம் அவனுக்கு நியாபகத்திற்கு வர,பல விஷயங்கள் புரியாத புதிராகவே இருந்தது.
அவனின் வீட்டில்…
ராக்குவிடம் தயங்கி சென்ற வசுந்தரா,
“அத்தை, பேசாம மகாவை நம்ம ஈஸ்வருக்கு கேட்டா என்ன..?” என்று தயங்கிக் கேட்க,
“என்னது..?” என்ற சத்தம் கேட்டு நிமிர்ந்தார் அவர். கேட்டது ராக்கு பாட்டி இல்லை, மஞ்சரி தான்.
“நீங்க தெரிஞ்சு தான் பேசுறிங்களாம்மா..? இதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன். அவன் சம்மதிக்கலைன்னாலும் பரவாயில்லை, காயத்ரியவே அவன் கட்டிகட்டும்..” என்று மஞ்சரி ஆங்காரமாய் கத்த ஆரம்பித்தாள்.
“இப்படி நடந்ததுக்கு அப்பறம், வெளிய பொண்ணு கேட்டாலும், சந்தேகத்தோட தான் பார்ப்பாங்க. தெரிஞ்ச பொண்ணுன்னா பிரச்சனையில்லை பாருங்க..” என்றார் வசுந்தரா, ராக்குவிடம்.
“என்னம்மா..? நான் கத்திட்டு இருக்கேன். நீங்க கண்டுக்காம பேசிட்டு இருக்கீங்க..?” என்றாள் மஞ்சரி.
“அர்த்தம் இல்லாத பேச்சுக்கு பதில் சொல்ற நிலமையில நான் இல்லை மஞ்சு..” என்றார் வசுந்தரா.
“ஹோ..! அப்ப நீங்க பேசுறது மட்டும் அர்த்தமான பேச்சா..? ஏன்? ஏற்கனவே பட்ட அவமானம் பத்தாதா..? திரும்பவும் போய் அசிங்கப்படனுமா..?” என்றாம் மஞ்சு.
“என் மகனுக்கு ஒரு நல்லது நடக்குறதுக்காக அவமானப் பட்டாலும் தப்பில்லை..” என்றார்.
“அப்படி என்ன இருக்கு அந்த குடும்பத்துல. வக்கத்துல குடும்பத்துல தான் சம்பந்தம் பண்ணனுமா..?செய்றேன்னு சொன்ன சீர்வரிசையை செய்யாம விட்டதுனால தான் மூத்த மக தற்கொலை பண்ணிகிட்டான்னு சொல்றாங்க. இப்ப நம்ம போய் சிக்கனுமா..?”என்றாள் மஞ்சரி.
“நம்ம வீட்டுக்கு, எல்லா சீரும் கொண்டு வந்த பொண்ணு எப்படி செத்தா..?” என்ற வசுந்தராவின் ஒற்றை கேள்வியில் மஞ்சரியின் வாய் அடங்கியது.
“நீங்க சொல்லுங்க அத்தை..!” என்றார் ராக்குவிடம்.
“ஈஸ்வரனை கேட்டுக்க வசுந்தரா..” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
சம்மதிப்பான அவன்..?
அருகில் இருந்தும் அதன் மதிப்புத் தெரியாமல் நாம் இருக்கும் ஒரு விஷயம், பலருக்கு வாழ்வில் அண்ணாந்து பார்க்கும் வானம் போல தான். கிடைப்பதை வைத்து திருப்தி பட்டுக் கொண்டால், நாம் மனித இனம் தானா என்று நமக்கே சந்தேகம் வந்து விடுமே.
எட்டாக் கனியை எட்டிப் பறிக்க முயன்று, விழுந்து கால்,கையை உடைத்துக் கொண்டவர் எத்தனை பேர்? சிலரின் வாழ்க்கையும் அப்படித்தான். இதில் ஈஸ்வரன்,மகாவின் வாழ்க்கையும் அடங்குமா..???