காதல் 5:
பத்திரங்களுடன் வந்த பாண்டியனைப் பார்த்த ஈஸ்வரனுக்கு ஒன்றும் புரியாத நிலை.
‘இவர் எதுக்கு இப்போ பத்திரத்தோட வந்திருக்கார்? என்ன விஷயமா இருக்கும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவனுக்கு, பதில் மட்டும் கிடைக்கவில்லை.
“என்ன மாமா இதெல்லாம்..?”
“இந்த பத்திரத்தை முதல்ல பிடி ஈஸ்வரா. என் பொண்ணுக்கு இதுக்குமேல என்னால எதுவும் செய்ய முடியாது. இந்த நிலத்தை வித்து அவளுக்கு செய்யனும்ன்னு நினைச்சேன். ஆனா, பூர்வீக நிலத்தை விற்க மனசு வரலை. அதான், அதையே சீதனமா குடுத்துடலாம்ன்னு கொண்டு வந்துட்டேன்..” என்றார் பாண்டியன்.
“என்னை அசிங்கப்படுத்தனும்ன்னு இதையெல்லாம் செய்யறிங்களா..?” என்றான் ஈஸ்வரன் கோபமாக.
“ஐயோ ஈஸ்வரா..! என் மனசுல அப்படி எந்த எண்ணமும் இல்லை. என் பொண்ண எப்படி வெறும் கையோட அனுப்ப முடியும்..? அதான்..” என்றார்.
“இப்ப இந்த நிலத்தையும் குடுத்து, உங்க பொண்ணையும் குடுத்தா மட்டும் கௌரவமா இருக்குமா என்ன..? இல்ல,இதையெல்லாம் வாங்கிட்டு கல்யாணம் பண்ணா, எனக்குத்தான் கௌரவமா இருக்குமா..?” என்றான் வெளிப்படையாய்.
அவர்களின் பேச்சைக் கேட்டு வந்து ராக்கு,
“பாண்டியனே விருப்பப்பட்டு குடுக்குறானே ஈஸ்வரா. வாங்குறதுல என்ன தப்பு..?” என்றார் ராக்கு.
“அவங்க பூர்வீக நிலத்தை வாங்கித் தான் சோறு திங்கனும்ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை பாட்டி. இந்த பேச்சை இதோட நிறுத்திக்கங்க..” என்றான்.
“அப்போ சும்மா வாங்க வேண்டாம். எப்படியும் நிலத்தை வெளிய விற்க போறது உறுதி தான். அதை நீயே வாங்கிக்க ஈஸ்வரா. நான் என் பொண்ணுக்கு நகையா செஞ்சு போட்ருவேன்..” என்றார் பாண்டியன்.
“நீங்க இவ்வளவு அவசரமா செய்ற அளவுக்கு இப்ப என்ன பிரச்சனை..? நாங்க எதுவுமே கேட்கலையே..?” என்றான் புரியாமல்.
“கேட்கலைன்னாலும், செய்ய வேண்டியது எங்க கடமை. இந்த நிலத்தை நீயே வாங்கிக்க. இல்லைன்னா, இதை மகா பேர்ல நானே மாத்திக் குடுத்துடுவேன்..” என்றார் பாண்டியன் முடிவாக.
“நானே வாங்கிக்கிறேன்..” என்ற ஈஸ்வரன், மனதில் என்ன நினைத்தான் என்று பாண்டியனுக்கு தெரியவில்லை.
இந்த பேச்சுக்கள் எதுவும் தெரியாத மகா பத்ரா, மறுநாள் தன்னுடைய கல்யாணத்தை எண்ணி அப்படி ஒரு பூரிப்பான கடுப்பில் இருந்தாள்.
ஈஸ்வரன் மேல் அவளுக்குத் தனிப்பட்ட கோபமோ, விரோதமோ எதுவும் கிடையாது. சொல்லப் போனால் அவனைப் பற்றி அவளுக்கு எதுவுமே தெரியாது. ஆனால் இடையில் நடந்த சில பிரச்சனையில் மட்டும் அவனைத் தெரியும் அவ்வளவே. இப்படி எதுவுமே தெரியாமல் இருந்தாலும், எல்லாமே தெரிந்தவள் போல் காட்டிக் கொண்டு, அவனுடன் வாயடித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன மகா தூங்கலையா..?” என்றார் கமலா.
“தூக்கம் வரலைம்மா..! இவ்வளவு அவசரமா என்னை பேக் பண்ணி அனுப்புறிங்கள்ல. நான் போனதுக்கு அப்பறம் தான் தெரியும் என்னோட அருமை..” என்றவளுக்கு லேசாக கண்கள் கலங்கியது.
எப்போதும் சிரிப்புடனே இருப்பவள், அவ்வளவு சீக்கிரம் அழ மாட்டாள். அவள் கண் கலங்கியதைப் பார்த்து கமலாவிற்கும் ஒரு மாதிரி ஆனது.
“இதுக்கெல்லாமா கண் கலங்குவாங்க..? போற இடத்துல நீயாவது எங்க பேரை காப்பாத்து மகா. எங்களுக்கு உன்னை விட்டா யாருமில்லை. நீ சந்தோஷமா இருந்தாத்தான், நாங்க நிம்மதியா இருக்க முடியும்..” என்றார் கமலா.
“காலங்காலமா இந்த டயலாக் எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும் தான். ஆம்பிளைகளுக்கு கிடையாது. இதெல்லாம் நீங்க ஈஸ்வரன்கிட்ட சொல்லணும்..” என்றாள் இடக்காய்.
“அது என்னவோ உண்மைதான் மகா. எங்க மாமா தான் பாவம். உன்கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட போறாரோ..?” என்றாள் காயத்ரி.
“என்ன கிண்டலா..? உங்க அம்மா சமாதானம் ஆயாச்சா..?” என்றாள் மகா.
“அதுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. அப்பாதான் உன்கூட இருக்க சொல்லி அனுப்பி வச்சார்..” என்றாள் காயத்ரி.
“சபரி சித்தப்பா ரொம்ப அப்பாவி. உங்க அம்மா தான் அவரை பாடா படுத்துறாங்க. இதுல நீ என்னைய சொல்ல வந்துட்ட..” என்றாள் மகா.
“இந்த வாயெல்லாம் உனக்கு நாளைக்கு இருக்காது. எங்க மாமா அடக்கிடுவார் உன்னை..” என்றாள் காயத்ரி.
“நானென்ன காளையா, உங்க மாமா அடக்குறதுக்கு. அடிப் போடி இவளே..” என்ற மகாவிற்கு உள்ளூர கொஞ்சம் பயம் இருந்ததென்னவோ உண்மைதான்.
“என் கல்யாணம் எப்படியெல்லாம் நடக்கணும்ன்னு நினைச்சிருந்தேன் தெரியுமா..? அதெல்லாம் இப்படி கனவாவே போய்டுச்சு. காலேஜ் பிரண்ட்ஸ், ஸ்கூல் பிரண்ட்ஸ், கூட வேலை பார்க்குறவங்க இப்படி யாரையுமே கூப்பிடாம, யாருமே இல்லாத மாதிரி கோவில்ல நடக்கப் போகுது, அதுவும் எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஈஸ்வரன் கூட..” என்றாள் மகா நீட்டி முழக்கி.
“எனக்குத் தெரிஞ்சு, பிடிச்சு போய் கல்யாணம் பண்ணவங்க கூட பொறுமையா தான் பிள்ளை பெத்துக்குவாங்க. ஆனா, பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லி, அடுத்த மாசமே வாந்தி எடுத்தவங்க தான் அதிகம்..” என்ற காயத்ரி வாயைப் பொத்தி சிரிக்க,
“உனக்கு பதினெட்டு வயசுன்னு சொன்னா, யாரும் நம்ப மாட்டாங்கடி..” என்ற மகா, வாயைப் பிளக்க,
“நானா நம்ப சொன்னேன். இப்பல்லாம் பிறந்த பிள்ளையே அவ்வளவு தெளிவா இருக்கு. நாங்க இருக்க மாட்டோமா..?” என்று அசால்ட்டாய் சொன்னால் காயத்ரி.
“ரைட்டு விடு..!” என்ற மகா, போர்த்தி படுத்துவிட்டாள்.
“விடிஞ்சா கல்யாணம், இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்காளே..” என்ற கமலாவிற்கு தான் கவலை அப்பிக் கொண்டது.
காலையில் எழுந்து காட்டன் புடவையைக் கட்டிக் கொண்டிருந்த மகாவைப் பார்த்த கமலாவிற்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது.
“என்ன பண்ற மகா..?” என்று பதட்டமானார்.
“சிம்பிளான கல்யாணத்துக்கு சிம்பிளா கிளம்பிட்டு இருக்கேன்ம்மா..” என்று அவள் சாதரணமாய் சொல்ல,
“அவங்க எடுத்துக் கொடுத்த பட்டுப்புடவையை கட்டுடி. உங்கப்பா பார்த்தாரு அவ்வளவுதான்.”என்று சொல்ல,
“இந்த உலகம் திருந்தாது முருகா..” என்றவள், வேகவேகமாய் புடவையை மாற்றினாள். அதற்குள் ஈஸ்வரன் குடும்பத்து சொந்தக்கார பெண்கள் சிலர் வர, அவர்களிடம் அவளை ஒப்படைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போனார் கமலா.
“புடவை ரொம்ப நல்லாயிருக்குல்லக்கா..” என்று ஒரு பெண் சொல்ல,
“ஈஸ்வரன் முதல் பொண்டாட்டிக்கும் இந்த கலர் புடவை தான் எடுத்திருந்தாங்க. இப்பவும் இதே கலர் புடவை தான் எடுத்திருக்காங்க..” என்று ஒருத்தி வாயிருக்க மாட்டாமல் சொல்ல, மகாவின் மனதிற்குள் துணுக்குற்றது.
“அதே கலர் புடவையா..? இல்லை அதே புடவையா..?” என்ற ஆராய்ச்சிக்குப் போனாள் மகா. அவளுக்கு அதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்று வேகம்.
போனை எடுத்து ஈஸ்வரனுக்கு அழைத்துவிட்டாள். அங்கே யாருடனோ கடுப்பில் கத்திக் கொண்டிருந்தவன், இவளின் அழைப்பைப் பார்த்து ஏகத்துக்கும் எரிச்சலானான்.
“என்ன சொல்லு..” என்றான் எடுத்த எடுப்பில்.
“என்ன சொல்லுன்னு சொல்ற..? நானென்ன ஆடா, மாடா..?” என்றாள் கோபத்தில்.
“இப்போ இந்த ஆராய்ச்சி முக்கியமா..? என்ன விஷயம்..?” என்றான் சற்று பொறுமையாகவே.
“எனக்கு எடுத்துக் கொடுத்த புடவை, உன்னோட முதல் பொண்டாடிக்கு எடுத்த அதே கலர் புடவையா இல்லை அதே புடவையா..?” என்றாள் எரிச்சலாக.
“ஏய்..! இப்போ இந்த ஆராய்ச்சி மட்டும் ரொம்ப முக்கியமா? அதே கலரா இருந்தா என்ன? இல்ல அதே புடவையா இருந்தா என்ன..? அதே புருஷனை கட்டும் போது, அதே புடவையையும் கட்டலாம் தப்பில்லை. ஒவ்வொரு தடவையும் லட்சம் போட்டு புடவை எடுக்க, பணம் மரத்துலையா காய்க்குது. வை முதல்ல போனை..” என்று பட்டென்று சொல்லிவிட்டு வைத்து விட்டான் போனை.
அவன் அப்படி சொல்லிவிட்டு வைக்கவும், டேமை திறந்து விட்டதைப் போல், கண்ணீர் உடைப்பெடுத்து வந்து, அவள் முகத்தில் இருந்த மையெல்லாம் அழித்தது. மனதில் இருந்த தைரியம் எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது. வாய் துடுக்கு எல்லாம் வாலைச் சுருட்டிக் கொண்டது.
“என்னாச்சு மகா..? எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க..? மேக்கப் எல்லாம் கலைஞ்சு போய்டுச்சு..” என்று காயத்ரி பதற,
“இவ ஒருத்தி.. இங்க வாழ்க்கையே கலைஞ்சு போய்டுச்சு. மேக்கப் கலைஞ்சதைப் பத்தி பேசிட்டு இருக்கா..” என்று விரக்தி சிரிப்பு சிரித்தவள், அப்படியே கிளம்பினாள்.
“மகா, அதை சரி பண்ணிட்டு கிளம்புவோம்..” என்று காயத்ரி சொன்னதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
கோவிலில் திருமணம் என்றாலும், இருவீட்டு நெருங்கிய உறவுக்காறர்களும் இருந்தனர். திருமண கோலத்தில் அம்சமாய் அம்மனைப் போல் இருந்தவள், இப்போது அழுது வீங்கிய முகத்துடனும், கலந்த மையுடனும் இருப்பதைப் பார்த்த கமலா, மனம் பதைபதைக்க என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார்.
“எதுக்கு, மகா முகம் இப்படி இருக்கு..?” என்று ஆளாளுக்கு பேசிக் கொள்ள, அப்போதுதான் அவளைப் பார்த்தான் பிரகதீஸ்வரன். தனக்கு அருகில் இருந்தவளைப் பார்த்தவனுக்கும் சற்று அதிர்ச்சி தான்.
“ஏய்..! எதுக்கு இப்படி அலங்கோலமா வந்து நிக்கிற..? என் மானத்தை வாங்கவா..?” என்று வார்த்தையை கடித்துத் துப்ப,
மகாவின் பொறுமை கொஞ்சம் பறந்தது.
“எப்படி இருந்தாலும், உனக்கு ரெண்டாவது கல்யாணம் தான. அழகா இருந்தா என்ன? அலங்கோலமா இருந்தா என்ன..? மேக்கப்பை திருப்பி போடணும்ன்னா பணம் செலவாகும். பணம் என்ன மரத்துலையா காய்க்குது. மூடிகிட்டு தாலியை கட்டுற வேலையை மட்டும் பாரு..” என்றாள் அவளும் பல்லைக் கடித்துக் கொண்டு.
“ஏய்..! என்ன வாய் நீளுது..” என்றான்.
“எனக்கு ஏற்கனவே வாய் நீளம் தான். தெரிஞ்சு தான கல்யாணம் பண்ற? அப்பறம் என்ன..?” என்றாள்.
ஈஸ்வரனுக்கு அப்படியே சுவரில் போய் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.
“கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறமா போய் முட்டிக்க. இப்பவே போய் முட்டுனா, மூஞ்சி வீங்கிக்கிறும். ஏற்கனவே உன் மூஞ்சி வீங்கிப் போய் தான் இருக்கு. அப்பறம் பார்க்க சகிக்காது..” என்றாள் கடுப்புடன்.
“உன்னை..” என்று அவன் பல்லைக் கடிக்க,
“ஈஸ்வரா பேசாம இரு..” என்றார் வசுந்தரா.
‘நிஜமா சொல்லு மகா. அவன் முகம் வீங்கிப் போயா இருக்கு. தேக்கு மரம் மாதிரி நிக்கிறான். அவனைப் போய் இப்படி சொல்றியே..?’ என்று அவளின் மனசாட்சி கேட்க,
“மரம் மாதிரி இருக்கிறாதால தான், மத்தவங்க உணர்வுகள் புரியறதில்லை..”என்றாள் மனதிடம்.
தம்பியின் திருமணத்திற்கு கோபத்துடன் தான் வந்திருந்தாள் மஞ்சரி. அவளுக்கு இன்னமும் மகாவை தம்பியின் மனைவியாக பார்ப்பதில் விருப்பமில்லை. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவர் நடமாட, சபரி அனைத்தையும் கவனித்துக் கொண்டான்.
சரியாக ஐயர் சொன்ன நல்ல நேரத்தில் மகாவின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டு, அவளை தன்னில் சரி பாதியாய் ஏற்றுக் கொண்டான் ஈஸ்வரன்.
பிரகதீஸ்வரன்-மகா பத்ரா திருமணம் அந்த நிமிடத்தில் நடந்து முடிந்திருந்தது. பிடிவாதமும்,கடிவாளமும் ஒன்றாய் இணைந்திருந்தது.
பாண்டியன் முகத்தில் அப்படி ஒரு தெளிவு, மகிழ்ச்சி. அவரின் முகத்தைப் பார்த்த மகாவிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய தந்தையைப் பார்த்த உணர்வு. அதற்காகவே எதுவும் செய்யலாம் என்று தோன்றியது.
கோவில் மண்டபத்திலேயே சாப்பாடு தயாராகியிருக்க, சொந்த பந்தங்கள் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.
“பொண்ணு, மாப்பிள்ளையை சாப்பிட வைங்க..” என்று சொல்ல,
“எனக்கு பசியில்லை..” என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டாள் மகா.
“எனக்கும் வேண்டாம்..” என்றான் ஈஸ்வரன். அவர்களின் கல்யாண சாப்பாட்டையே அவர்கள் சாப்பிடவில்லை.
“இந்த பால் பழத்தையாவது சாப்பிடுங்க..” என்று கொடுக்க, பாலையும், பழத்தையும் அவளே முழுவதுமாக சாப்பிட்டு முடித்திருக்க, மஞ்சரி அவளை தினுசாகப் பார்த்தாள்.
“என் தம்பிக்கும் கொஞ்சம் மிச்சம் வைக்கணும்ன்னு நினைப்பிருக்குதான்னு பாருங்க..” என்று முனங்கிக் கொண்டிருந்தார்.
“விடு மஞ்சு..! சின்ன பொண்ணு தான..?” என்றார் சபரி.
“யாரு இவளா சின்ன பொண்ணு..? ஏதோ கொஞ்சம் அழகா இருக்கா. ஆனா, அதை விட திமிரு தான் அதிகமா இருக்கும் போல. ஈஸ்வரன் என்ன பாடு படப் போறானோ..?” என்றாள் மஞ்சரி.
“கவலைப் படாத..! என்னைய விட உன் தம்பி ஒன்னும் நிறைய கொடுமையெல்லாம் அனுபவிக்க மாட்டான்..” என்றான் சபரி.
“என்னங்க? குத்திக் காட்டுறிங்களா..?” என்றாள்.
“உனக்கு அப்படித் தோணினா அதுக்கு நான் பொறுப்பில்லை..” என்ற சபரி, அடுத்த வேலையை கவனிக்கப் போனான்.
சற்று நேரத்தில் கோவிலில் இருந்து வீட்டிற்கு கிளம்பியிருந்தனர். வீட்டு வாசலில் வைத்து மஞ்சரி ஆரத்தி எடுக்க, அவளை முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள் மகா பத்ரா.
ஆரத்தி முடிந்து, அவள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்ல, அதுவரை அவளுடன் இருந்த ஈஸ்வரன் சட்டென்று சென்று விட்டான். அவன் அப்படி சென்றதைப் பார்த்த மஞ்சரிக்கு அப்படி ஒரு ஆனந்தம்.
“என்ன வீட்டைப் பார்த்து மலைச்சுப் போய் நிக்குற..?” என்றாள் மஞ்சரி எடக்குடன்.
“ஏன்..? இதென்ன சினிமா..? அப்படியே பிரமிச்சு போய் உங்க வீட்டை சுத்தி சுத்திப் பார்க்கிறதுக்கு?.இந்த ஊர்ல இதைவிட பெரிய வீடெல்லாம் நான் பார்த்திருக்கேன். நானும் ஒண்ணுமில்லாத வீட்ல இருந்து வரலை. இந்த பேச்சுல குத்துறது, சைட்ல குத்துறது இதெல்லாம் என்கிட்டே வச்சுக்காதிங்க சித்தி. அப்பறம் நான் நேராவே குத்துவேன்..” என்றவள், அவளை இடித்து தள்ளி விட்டு,
“பூஜை ரூம் எங்க இருக்கு அத்தை..?” என்றாள் வசுந்தராவிடம்.
“வாம்மா..” என்ற வசுந்தரா அவளை அழைத்துக் கொண்டு போக,
“உங்க பையனையும் கூப்பிடுங்க. வாழ வந்த பொண்ணு, வாழ வந்தவனோட தான விளக்கேத்தனும்..” என்றாள் பட்டென்று.
“ஈஸ்வரா..” என்று வசுந்தரா அழைக்க,
எதுவும் பேசாமல் அமைதியாய் வந்து பார்த்தான் ஈஸ்வரன்.
“வந்து சாமியை கும்பிட்டு போப்பா..!” என்று சொல்லவும், வேறு வழியில்லாமல் வந்து நின்றான்.
மகா விளக்கை ஏற்றி, கைகூப்பி நிற்க, ஈஸ்வரனும் கடவுளை வேண்டி நின்றான். ஏனோ அந்த கணம் மட்டும் ஒரு சிலிர்ப்பு அவளினுள் தோன்றி மறைந்தது. அவர்களை அப்படி ஜோடியாய் பார்த்த வசுந்தராவின் மனம் நிறைந்து போனது. அவர்களை அப்படி பார்க்கும் போது, பாந்தமாய் பொருந்தியிருந்தனர்.
“பாட்டி, நான் சொல்லலை. வந்த உடனே அதிகாரம் தூள் பறக்குது பாருங்க. இனி இவ ஆட்டமா ஆடுவா. நீங்கள்லாம் உட்கார்ந்து பாருங்க. நான் கிளம்புறேன்..” என்றாள் மஞ்சரி.
“என்ன மஞ்சரி இப்படி பேசிட்டு இருக்க..? இன்னைக்கு நீ கண்டிப்பா இங்க தான் இருந்தாகணும். தெரியாதா உனக்கு..?” என்று வசுந்தரா கண்டிப்புடன் சொல்ல,
“இருக்குறேன், இருந்து தொலைக்கிறேன்..” என்று வேண்டா வெறுப்பாய் இருந்தாள் மஞ்சரி.
“விளக்கேத்தியாச்சு..! அப்படியே பொண்ணு வீட்டுக்குத்தான் போகணும். போயிட்டு வந்திடுங்க. மஞ்சரி நீயும் கூடப் போம்மா..” என்று வசுந்தரா சொல்ல, பல்லைக் கடித்துக் கொண்டு சென்றது வசுந்தரா இல்லை, ஈஸ்வரன் தான். ஏனோ, மகாவின் வீட்டிற்கு செல்ல அவனுக்கு மனம் கொஞ்சம் கூட ஒப்பவில்லை. அதே நேரம் வசுந்தராவின் சொல்லையும் அவனால் தட்ட முடியவில்லை.
அவர்கள் வீட்டில் காயத்ரி ஆரத்தியை எடுக்க, உள்ளே செல்வதா? வேண்டாமா? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான் பிரகதீஸ்வரன்.
“வாங்க தம்பி..!” என்ற கமலாவின் அழைப்பில் கொஞ்சம் தயங்கித்தான் உள்ளே சென்றான். மகாவோ அவனையெல்லாம் சட்டை செய்யாமல் விடுவிடுவென்று உள்ளே சென்றாள்.
“எங்க போற மகா..? மாப்பிள்ளை கூட இரு..” என்று கமலா மெதுவாக சொல்ல,
“என்னம்மா இது அநியாயமா இருக்கு..? இப்போ அவங்க வீட்டுக்கு போனப்ப, அவர் பேசாம உள்ள போய்ட்டார். எங்க மாமியார் தான் கூட இருந்தாங்க. அதனால இங்க நான் பேசாம போறேன். மாமியார் நீங்க அவன் கூட இருந்து நல்லது கெட்டது சொல்லுங்க..” என்றவள் நிற்காமல் அறைக்குள் சென்று விட,அவளை முறைத்துக் கொண்டிருந்தார் கமலா.
ஈஸ்வரனுக்கோ முள்ளின் மேல் நிற்பதை போல் இருந்தது. அந்த சுவற்றில் இருந்த, மாலையிடப்பட்ட நிவேதாவின் ஆளுயர புகைப்படத்தைப் பார்த்தவன், பட்டென்று எழுந்து நின்று விட்டான்.
“என்னாச்சு ஈஸ்வரா..?” என்றார் பாண்டியன்.
“ஒண்ணுமில்ல மாமா. இங்க சாமி கும்பிட்டு முடிச்சுட்டா நாங்க கிளம்புவோம்..” என்றான் பட்டும் படாமல்.
அவனின் மனம் அவருக்கும் புரிந்ததோ என்னவோ..? மகாவையும் அழைத்தவர், பூஜையறையில் விளக்கேற்றி, இருவருக்கும் திருநீர் வைத்து விட்டனர்.
“கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க மகா..!” என்றார் கமலா.
“இன்னும் ஏதாவது சொல்ல பாக்கியிருந்தா சொல்லி முடிச்சுடுங்கம்மா..” என்றாள் மகா. அவளுடைய கையில் அவள் லேப்டாப் அடங்கிய பை இருக்க, அதைப் பார்த்த பாண்டியன்,
“இதை எதுக்கு மகா, எடுத்துட்டு போற..?” என்றார்.
“இது என்னோடது தானப்பா..! அதான் எடுத்துட்டு போறேன்..” என்றாள் பட்டும் படாமல்.
அங்கிருந்து விடைப்பெற்று ஒரு வழியாக, ஈஸ்வரனின் வீட்டிற்கு வந்துவிட்டனர்.
ஒன்றிரண்டு உறவுப் பெண்கள் மட்டும் இருந்தனர். அவர்களும் சிறிது நேரத்தில் சென்று விட, அந்த வீடே அமைதியாக இருந்தது. காலையில் திருமணம் நடந்து முடிந்தற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. வசுந்தராவின் அறைக்குள் சென்ற மகா, முதலில் அந்த கல்யாணப் புடவையை உருவி எறிந்திருந்தாள். சாதரான புடவைக்கு மாறி வந்தவளை பார்த்த ருக்குவின் கண்களில், கொஞ்சமும் சிநேக பாவம் இல்லை.
“என்னம்மா..? அதுக்குள்ளே சேலையை மாத்திட்ட..?” என்றார் வசுந்தரா.
“தேவையில்லாத கணம் அத்தை..” என்றாள் மெதுவாக.
“என்ன சொன்ன மகா..?” என்றார் மீண்டும்.
“ரொம்ப கனமா இருந்தது அத்தை. அதான் மாத்திட்டேன்..” என்றாள்.
“புது இடம்.. ஒரு மாதிரி தான் இருக்கும் மகா. போகப் போக சரியாகிடும்..” என்று வசுந்தரா சொல்ல,
“ஒரு வாரம் தான அத்தை. நான் அர்ஜஸ் பண்ணிப்பேன். அப்பறம், எப்பவும் போல வேலைக்குப் போய்ட்டா தெரியாது..” என்றாள் சாதாரணம் போல்.
“என்னது வேலைக்கா..?” என்று அதிர்ந்தாள் மஞ்சரி.
“ஆமா சித்தி..” என்றாள். ஈஸ்வரன் இதெல்லாம் கேட்டும், கேட்காதவன் போல் அமர்ந்திருந்தான். இப்படி ஒரு பூகம்பத்தை அவன் ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததை போல் இருந்தது அவனின் பாவனை.
“நீ என்ன சொல்ற மகா..?” என்று வசுந்தராவும் கேட்க,
“ஆமா அத்தை. உங்க மகன் கிட்ட ஏற்கனவே இதைப் பத்தி பேசி சம்மதம் வாங்கிட்டேனே..” என்று அலுங்காமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.
“நீ அனுமதி வாங்குன லட்சனம் எனக்கு மட்டும் தான தெரியும்..?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஈஸ்வரன்.
“இதுக்குத்தான் இவளை மருமகளா கொண்டு வரணும்ன்னு அந்த ஆட்டம் ஆடுனிங்களா..?” என்று மஞ்சரி ஒரு பக்கம் வசை பாட,
“நீ பேசாம இரு மஞ்சரி. இன்னைக்கே இதைப்பத்தியெல்லாம் பேசணுமா..? எதுவா இருந்தாலும் ரெண்டு நாள் கழிச்சு பேசிக்கலாம். நைட்டுக்கு செய்ய வேண்டிய சடங்குக்கு ஏற்பாடு பண்ணு..” என்றார் வசுந்தரா.
“சடங்கா..??” என்ற மகாவின் மனதிற்குள் அபாய மணி அடித்தது.
ஓரக்கண்ணால் ஈஸ்வரனைப் பார்க்க, அவனோ அவளைத் தான் முறைத்துக் கொண்டிருந்தான்.
‘இவன் எதுக்கு இப்படி பார்க்குறான்..??’ என்று நினைத்தவள், ஹாலில் இருந்ததால் வாய்விட்டும் கேட்க முடியவில்லை.
“என் பேரனுக்கு உன்னைக் கட்டுனதுக்கு காரணம், அவன் கூட குடும்பம் நடத்தி, எங்க குலத்தை தழைய வைப்பன்னு தான். அதை விட்டுட்டு, வேலைக்குப் போறேன் அது இதுன்னு சொல்லிட்டு இருக்க..?” என்றார் ருக்கு.
“படிச்சிருந்தா தான படிப்போட அருமை தெரிய போகுது..” என்று முனங்கினாள்.
“யாரைப் பார்த்து படிக்காதவங்கன்னு சொல்ற?” என்று மஞ்சரி சண்டைக்கு ரெடியாக இருந்தாள்.
“என்ன மஞ்சு இதெல்லாம். இன்னைக்கு கல்யாணம் பண்ணி வந்த பிள்ளைகிட்ட சண்டைக்கு தொத்திகிட்டு இருக்க..?” என்று சபரி ஒரு அதட்டுப் போடவும் அமைதியாயிருந்தாள்.
மாலை மங்கி இருள் சூழ,எரிச்சலுடன் தான் உள்ளே சென்றாள் மகா.
‘என்ன மகா, ரூமை சுத்திப் பாரு.. இதெல்லாம் பண்ணாத்தான் இன்னைக்கு உனக்கு பர்ஸ்ட் நைட்ன்னு நம்புவாங்க..’ என்றது மனம்.
“இதுல சுத்திப் பார்க்க என்ன இருக்கு..? எல்லார் வீட்லயும் என்ன இருக்குமோ அதான் இருக்கும். ஒரு கட்டில்,மெத்தை..ஒரு டிவி, டேபிள்,அதுமேல பாலும், கொஞ்சம் பழமும். இதை நான் வேற ஆச்சர்யமா பார்க்கனுமா..?” என்று மனதிற்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் மனதுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே, வந்தான் பிரகதீஸ்வரன். அவனைப் பார்த்தவள்,
“வாங்க..” என்றாள்.
“இது என்னோட ரூம் தான். நீ ஒன்னும் அழைக்கத் தேவையில்லை..” என்றான் பட்டென்று.
“நான் என்ன, என்னோட ரூம்ன்னா சொன்னேன்..” என்றவள்,
“ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..” என்றாள்.
“என்ன..??” என்றான் கடுப்பாய்.
“போன தடவை உங்க பர்ஸ்ட் நைட் முடிஞ்சு மறுநாள் காலையில தான பொண்ணு தூக்கு போட்டு தொங்குச்சு. அதனால உங்களுக்கும் பர்ஸ்ட் நைட்டுக்கும் ராசியில்லன்னு நினைக்கிறேன். அதனால செக்கேன்ட் நைட்ல பார்த்துக்கலாம் எதுவா இருந்தாலும். எனக்குத் தூக்கம் வருது, குட் நைட்..” என்றவள் கட்டிலின் ஒரு முனையில் படுத்து தூங்கிவிட்டாள்.
“என்ன ரகம் இவ..?” என்ற யோசனை தான் ஈஸ்வரனின் மனதிற்குள்.
வாழ்க்கை அவளுக்கு வைத்திருக்கும் சவால்களைப் பற்றித் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள் மகா பத்ரா.