வீராவின் அலுவலக அறையில் அவனது நாற்காலியில் அமர்ந்திருந்தார் பரசுராம். எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வீரா, “இப்போதான் அங்கிள்… கையில் இருந்தது எல்லாம் புரட்டிப்போட்டு தியேட்டர் ஒன்னு வாங்குனேன்! அதுக்குள்ள இன்னொரு செலவுன்னா ரொம்ப சிரமம்” என்றான் யோசனையாய்.
“தியேட்டரா? சொல்லவே இல்ல நீ”
“உங்களை நேர்ல கூப்பிட்டு சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு இருந்தேன்! ரெநோவேஷன் வேலை நடந்துட்டு இருக்கு!”
“ஹும்! நீ என்னை சர்ப்ரைஸ் பண்றதுக்குள்ள நான் உன்னை ஷாக் பண்ணிட்டேனா?”
வீரா, “ஷாக்’ன்னு இல்ல! நானே இதை பத்தி பேசனும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்! ஆனா இவ்ளோ சீக்கிரமே எதிர்ப்பார்க்கல”
“எனக்கும் இவ்ளோ அவசரமா காசு தேவப்படும்ன்னு தெரியாது வீரா. இல்லன்னா இப்படி கடைசி நேரத்துல வந்து உனக்கு நெருக்கடி கொடுக்க மாட்டேன்” என்றார் பரசுராம் தயக்கமாக.
“உங்களை பத்தி எனக்கு தெரியாதா அங்கிள்? இது உங்க இடம்! இப்போ உங்களுக்கு ஒரு அவசரம்ன்னு வந்து நிக்குறீங்க… என்னை இந்த அளவு வளர்த்து விட்ட உங்களுக்கு ஒரு தேவைன்னு வரப்போ உடனே செய்ய முடியாம ‘லாக்’ ஆகி நிக்குறேனேன்னு தான் சங்கடமா இருக்கு அங்கிள்”
“இன்னும் ஒரு மாசம் டைம் எடுத்துக்கோ! ஒன்னும் அவசரமில்ல… நான் வேற யார்க்கிட்டயும் இது பத்தி பேசல! முடிஞ்சவரை நீயே பாரு! ஒரு வேலை உன்னால முடியாம போய்ட்டா, என்னோட அறுபது பர்சன்ட் ஷேரை மட்டும் கைமாத்தி விட்டுடலாம்”
அவனது சுருங்கிய முகம் இதில் அவனுக்கு ஒப்புதல் இல்லை என்பதை சொன்னது.
இருப்பினும், “சரிங்க அங்கிள்… நான் யோசிச்சு சொல்றேன்… ஒரு……. ஒருவாரம் டைம் குடுங்க” என்றான்.
“ப்ச்! என்னடா டைமு அது இதுன்னு கேட்டு என்னை யாரோ மாதிரி நடத்துற? நீயே வாங்கிக்கணும் இந்த பங்க்’கை… அவ்ளோதான்! அதுக்கு என்ன செய்யணுமோ அதை ஆரம்பி.. சொல்லிட்டேன்” என்றார் பரசுராம்.
என்ன செய்யலாம் என தெரியாவிட்டாலும், எதாவது செய்வோம் என்ற எண்ணத்தில் எழுந்த வீரா, “ஓகே அங்கிள்… நானே பாக்குறேன்! நீங்க நாளைக்கு வரை இருப்பீங்க தானே இங்க?” என்றான் அவரிடம்.
எப்போதும் வந்தால் இரு நாட்கள் இருப்பாரே என்ற எண்ணத்தில்.
லேசாக சிரித்த பரசுராம், “டேய், இன்னும் பத்து நாளைக்கு நான் இங்கயே தான் இருக்கப்போறேன்! நீ பங்க் பக்கமே வரக்கூடாது சொல்லிட்டேன்” என்றுவிட,
“பத்து நாளா? ஏன் அங்கிள் எதுவும் வேலை இருக்கா இங்க?”
“எனக்கெந்த வேலையும் இல்ல… உன் அம்மா தான் எனக்கு ஃபோன் பண்ணாங்க! ஹனிமூன் போ’ன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறியாமே? அதான் உன்னையும் அஷ்டாவையும் பத்து நாளுக்கு தனியா விடலாம்ன்னு ‘பங்க்’ பார்த்துக்க என்னை வர சொல்லிட்டாங்க”
அதை கேட்டதும், ‘ஐயோ’ என்றானது அவனுக்கு.
‘இந்த அம்மா இப்படி மானத்த வாங்குறாங்களே’
“ஒழுங்கா புள்ளைகுட்டியை பெத்து ஸ்கூலுக்கு அனுப்புற வேலையை பாருடா… உன் வயசுக்கு எல்லாம் எனக்கு ரெண்டு புள்ளை இருந்துச்சு! கிளம்பு கிளம்பு! சீக்கிரமா வீட்டுக்கு போய் வேலையை பாரு” என நமட்டு சிரிப்பு சிரிக்க, அசடு வழிந்தது வீராவுக்கு.
நேர்கொண்டு அவர் முகத்தை பார்க்க முடியாமல் “நான் வரேன் அங்கிள்” என கிளம்பிவிட்டான் வீரா.
“எந்த வேலையா இருந்தாலும் எனக்கு போன்’ல சொல்லுடா! நேர்ல வராத” என உரக்க சொல்லி அவனை வழியனுப்பினார் பரசுராம்.
****
“என்னடா இது அடுக்கடுக்கா பணப்பிரச்சனையே வந்து நிக்குது?” சலித்துக்கொண்டார் விஜயா.
“அவருக்கு தேவை இருக்கு… கேட்குறாரு… என்ன செய்ய?” வீரா சொல்ல,
“எதுக்காக இப்போ அவர் இப்போ விற்க்கனும்ன்னு நினைக்குறாரு?” என்றார் விஜயா.
“நான் ரொம்ப நோண்டி கேட்கலம்மா! அவர் பையனுக்கு வீடு வாங்க பணம் தேவைப்படுது… அங்கிளும் இந்த பங்க்’க்காக வேண்டி திருச்சி வந்து போறது அலைச்சலா இருக்கு… அதான் பங்க்’கோட அவர் பங்கை மட்டும் வித்து பையனுக்கு குடுக்கலாம்ன்னு நினைக்குறாரு! அதை நானே வாங்கிக்கிட்டா நமக்கு நல்லது. வெளியாள் வந்தா எந்த அளவு கூட்டுத்தொழில் சாத்தியமாகும்ன்னு சொல்ல முடியாதுல?”
“ஆமாம்டா!” என ஒப்புக்கொண்டார் விஜயா.
இருவரும் யோசனையில் இருக்க, இவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அஷ்டாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
“யாருக்கு நாம பணம் குடுக்கணும்?” என்றாள் புரியாது.
“அன்னைக்கு கல்யாணத்துல காட்டுனோம்ல? பரசுராம் அங்கிள்… அவருக்கு தான்” என விஜயா சொல்ல, “ஓ…” என கேட்டுக்கொண்டவள், “எதுக்கு குடுக்கணும்?” என்றாள்.
வீரா, “நம்ம பங்க்’ல அவர் பார்ட்னர்… இப்போ அவரோட ஷேரை விற்க போறாரு.. அதை நம்மளே வாங்கிக்கிட்டு, அதுக்கான காசு குடுக்கணும் அவருக்கு”
‘ஹா?’ என திகைத்தாள் அஷ்டா.
“ஷேரிங்கா? அப்போ அது உங்க பங்க் இல்லையா?”
வீரா சிரிக்க, விஜயாவும் அதே சிரிப்புடன் அவர்களுக்கு தனிமை குடுத்து எழுந்து சென்றார்.
“நம்ம பங்க் தாங்க அது! என் அப்பாவும் அங்கிளும் சேர்ந்து இந்த தொழில் செய்யணும்ன்னு திட்டம் போட்டுட்டு இருந்தாங்க. அங்கிள் கிட்ட காசு இருந்துச்சு… என் அப்பாட்ட இல்ல.. பேங்க்ல லோன் கேட்டு அலைஞ்சுட்டு இருந்தப்போ தான் அவருக்கு ஆக்சிடென்ட்” சரளமாய் பேசிக்கொண்டிருந்தவன், சில நொடிகள் தடுமாறினான்.
பின்னே, “அதுக்குப்பிறகு இன்சூரன்ஸ் பணத்தை வச்சு இந்த வீட்டை வாங்குனோம்… மீதி இருந்த கொஞ்ச பணத்தை வாங்கிக்கிட்டு அவர் பங்க்’ல நாற்பது பர்சன்ட் ஷேரை எங்களுக்கு குடுத்தாரு அங்கிள். அப்புறம் அவர் பசங்க வளர்ந்ததும் இந்த ஊரை விட்டு பெங்களூருல குடும்பமா செட்டில் ஆகிட்டாங்க. இப்போ நான் எடுத்து நடத்திட்டு இருக்கேன்…
அங்கிள் எப்பவாது தான் இங்க வருவாரு. நான் மாசாமாசம் அவர் பங்கு பணத்தை அவர் அக்கவுன்ட்ல போட்டுவிட்டுடுவேன்…” என்றான். இதெல்லாம் அவன் ஏற்கனவே சொன்னது தான். அவன் சொல்லியபோதெல்லாம் கனவில் மிதந்துவிட்டு இப்போது வந்து கதைக்கேட்டுக்கொண்டிருந்தாள் அஷ்டா.
“அப்போ வெறும் நாற்பது பர்சன்ட் தான் உங்களுக்கா?”
“ஆமாங்க”
உள்ளுக்குள் கொதித்தது அவளுக்கு. ‘மூணு லட்சம், நாலு லட்சம்ன்னு சொன்னதெல்லாம் பொய்யா? வெறும் நாற்பது பர்சன்ட் வச்சுக்கிட்டு தான் இப்படி உண்மையை மறைச்சு கல்யாணம் செஞ்சாங்களா?’ என தோன்ற,
“அப்புறம் எதுக்கு அதை உங்க ‘பங்க்’ன்னு சொன்னீங்க?” என்றாள்.
அவள் குரல் மாறுபாட்டை கூட கவனியாதவன், அவள் இயல்பாய் கேட்பதாய் எண்ணி, “ஹஹா… அட என்னங்க நீங்க? இப்பவும் இது நம்ம பங்க்’கே தான்! சரி நான் கொஞ்சம் வெளில போயிட்டு வரேன்… பார்த்துக்கோங்க” என்று எழுந்துவிட்டான்.
பணம் புரட்ட வேண்டி, கொஞ்சம் அலைய வேண்டி இருந்தது.
அவனோடு பின்னாலே சென்றவள், “வேணுனா எங்க அப்பாட்ட கேளுங்களேன்” என்றாள்.
உண்மையில் அவன் என்ன சொல்வான் என அறிய, போட்டு பார்க்கத்தான் அவள் சொன்னது.
அவனோ, “ரொம்ப முடியாதுன்னா கேட்டுக்குறேங்க! இப்போ வேண்டாம்” என்றுவிட்டான்.
‘பாரேன்… அப்போ காசு பத்தலைன்னு என்னை அப்பா வீட்டுக்கு அனுப்பி வாங்கிட்டு வர சொல்லுவாரு போலே!!!’ என யோசனையில் நிற்கும்போதே, அவன் பைக்கில் ஏறிவிட்டிருக்க, பரபரவென யோசித்தவள், அவன்முன்னே சென்று நின்று,
“எனக்கு பணம் வேணும்!” என்றாள்.
அவன் எதற்கு? ஏன்? என கேள்விகேட்டால் ‘அன்னைக்கு உங்க அம்மா கேட்டப்போ மட்டும் ஒன்னும் கேட்காம குடுத்தீங்க?’ என சொல்லிக்காட்டலாம் என்ற எண்ணத்தில்.
இது அன்று விஜயா அவனிடம் பணம் வாங்கியதில இருந்தே அவள் மனதுக்குள் உழன்றுக்கொண்டிருப்பது தான். பண விஷயம் பேசவும் சட்டென பிடித்துக்கொண்டாள்.
எப்படியும் மறுப்பான், எகிறலாம் என நினைக்க, “நம்ம ‘கப்போர்ட்’ல இருக்கும். வேனுங்குறதை எடுத்துக்கோங்க” என்றவன் சிட்டாய் பறந்துவிட்டான் பைக்கில்.
அவன் போன திக்கை முறைத்துக்கொண்டு நின்றவளுக்கு தான், ‘ச்ச!! சிக்கவே மாட்டேங்குறான்’ என கடுப்பாய் வந்தது.
அதே கடுப்புடன் வீட்டுக்குள் வந்தவள், அவன் சொன்ன கப்போர்டை திறந்து ஒரு கத்தை பணத்தை எடுக்க, வீரா பணத்திற்கு என்ன செய்வானோ என்ற பதைப்பில் அமர்ந்திருந்த விஜயா கண்களில் பட்டது அது.
பணத்தை எடுத்தவள் அது எவ்வளவு என்று கூட எண்ணிப்பார்க்காது அப்படியே தன் கைப்பைக்குள் திணித்தாள்.
கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை விஜயாவால்.
“வெளில கிளம்புறியாமா?”
கைப்பையை எடுத்து ஆணியில் மாட்ட சென்றவளுக்கு அதுவரை வெளியே செல்லும் எண்ணம் இல்லை. இப்போது விஜயா கேட்டதும், ‘ஆமா, போறேன்’ என்றவள், பையை தோளில் மாட்டிக்கொண்டாள்.
“எதுவும் வாங்கனுமாம்மா?”
விஜயா ‘எதற்காக அவ்வளவு பணம் எடுத்தாய்?’ என நேரிடையாய் கேட்க சங்கோஜப்பட்டு வேறு விதமாய் கேட்க,
“ஒன்னும் வாங்கலையே” என்றாள் அவள்.
“வெளில எங்க போக கிளம்பிட்ட?”
அவளும் அதை தான் யோசித்துக்கொண்டிருந்தாள்.
சட்டென, “நான் என் அப்பாவை பார்த்துட்டு வரேன் அத்த” என்றாள் வாசலுக்கு சென்றபடி.
“இரும்மா! நம்ம ஆட்டோ வர சொல்றேன்”
“வேணாம்’த்த! ‘ஓலா’ புக் பண்ணிட்டேன்” என்றவள் நிற்கவே இல்லை.
விஜயாவுக்கு மனம் முரண்டினாலும், எதையும் தவறான கோணத்தில் யோசித்து பழகியிராதவர் என்பதால் அமைதியாய் இருந்துவிட்டார்.
எந்நேரமும் பரபரப்பாய் இயங்கும் திருச்சி ‘காந்தி மார்கெட்’ ஆர்ச் அருகே நின்றது ஆட்டோ.
“இதுக்குமேல உள்ள போக முடியாது மேடம்! ரொம்ப ரஷ்’ஷு!” என ஆட்டோக்காரன் சொல்ல, அவனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு இறங்கி நடந்தாள் அஷ்டா.
பழக்கடைகளும், லோட் இருக்கும் வண்டிகளும் அங்கும் இங்குமாய் தங்களால் முடிந்தவரை சாலையின் அகலத்தை குறைத்துக்கொண்டிருந்தன.
ஒருநிமிட நடையின் முடிவில், தந்தையை அவள் கண்டுவிட, “ப்பா?” என ஆவலுடன் குதித்துக்கொண்டு ஓடினாள் அவரிடம்.
வெளியூருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்திருந்த வண்டிகளின் வரவு செலவு, ஆட்கூலி வேலையில் கவனமாய் இருந்தவர் அந்த நேரம், அங்கே மகளை எதிர்ப்பாராது முதலில் திகைத்து, பின் சந்தோசமாய் வரவேற்றார்.
“என்னடா இந்த வெயில்ல வந்து நிக்குற?” அருகே இருந்த கடையில் பழசாருக்கு ஜாடை சொல்லிக்விட்டு தனது சிறிய அலுவலக அறைக்கு அழைத்துசென்றார் மகளை.
“உட்காருடா! ஒரு வார்த்தை சொன்னா அப்பா வந்து நிப்பேனே?”
“ஏன்ப்பா? நான் வரக்கூடாதா?”
“அப்படி எல்லாம் இல்லடாமா! வீட்டுக்கு வராம இங்க வந்து நிக்கவும் ஒன்னும் புரியல”
“வீட்டுக்கு போனா அம்மா பிளேடு போடுவாங்கப்பா” என சலித்துக்கொண்டாள் அஷ்டா.
மனைவியை சொன்னதும் எப்போதும் போல நக்கலாய் சிரித்தார் சண்முகம்.
“அவளுக்கு வேற என்ன வேலை? அப்பத்தா தான் உன்னை பார்க்கணும் பார்க்கனும்ன்னு சொல்லிட்டே இருந்தாங்க”
“ம்ம்ம்! இன்னொரு நாள் வரேன்ப்பா”
சொல்லியிருந்த பழசாறு வந்துவிட, சூடான வெயிலுக்கு குளுகுளுவென்ற பானம் அவள் தொண்டையை இதமாய் தழுவியது.
மகள் குடித்து முடிக்கும் வரை பொறுத்தவர், “எதுவும் வேலையா வந்தியாமா?” என்றார்.
“இல்லையேப்பா!”
“பின்ன மாப்பிள்ளை கொண்டு வந்து விட்டாரா? எங்க அவர காணோம்?”
“ப்ச்!!! என்னப்பா? உங்களை பார்க்கலாம்ன்னு வந்தா ஏன் வந்த? எதுக்கு வந்த? யாரோட வந்தன்னு? நொச்சு பண்ணிட்டு இருக்கீங்க?”
மகள் சலித்துக்கொண்டதும் அதற்குமேல் தாளவில்லை பெற்றவருக்கு.
“சரிடா, சரிடா! கோச்சுக்காத! தனியா வந்துருக்கியேன்னு அப்பா கேட்டேன்”
“ம்ம்..ம்ம்…!!!” அஷ்டா வெளியே வேடிக்கை பார்க்க திரும்ப, சண்முகத்திடம் பேச இருவர் வந்து நின்றனர்.
தனியே சென்று பேசிவிட்டு திரும்ப வந்தார்.
அவரிடம், “என்ன ப்பா பிசினஸா?” என்றாள் அவள்.
“ஆமாடா! கேரளாவுக்கு சேனைகிழங்கு கொண்டு போக மூணு பெரிய வண்டி வேணும்ன்னு வந்தாங்க! இன்னைக்கு ராத்திரி லோடு ஏறுது! அதுவிசயமா பேசுனோம்”
“நம்ம கிட்ட ஏதுப்பா பெரிய வண்டி?” என கேட்டவள், வெளியே பார்க்க, புதியதாய் நின்றுக்கொண்டிருந்த பெரிய வண்டிகளை கண்டதும், “அட, புது வண்டிங்க வாங்கிருக்கீங்களா ப்பா? சொல்லவே இல்ல” என கேட்டபடி வண்டியின் அருகே சென்றாள்.
வண்டி கொடுத்தது மாப்பிள்ளை தான் என சொல்ல நினைத்தவர், ‘நம்ம சொல்ல வேண்டாம்! மாப்பிள்ளையே சொல்லிக்கட்டும்!’ என விட்டுவிட்டார்.
“நான்கூட நீங்க கல்யாண கடன் அடைக்க கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்கங்ன்னு நினைச்சேன் ப்பா! வியாபாரம் நல்லா நடக்கவும் தானே இதெல்லாம் முடியுது உங்களால?!” அவளே பேசிக்கொண்டிருந்தாள்.
“இப்போ வண்டிங்க அதிகம் இருக்குறதால லாபம் அதிகம் வரும்ல?”
“ஆமாடா”
சந்தோசமாய் பேசிக்கொண்டிருந்தவள் சட்டென அவரை நெருங்கி, “ப்பா! காசு வருதுன்னு அசால்ட்டா இருந்துடாதீங்க! சேர்த்து வைக்க பாருங்க! யாராவது காசு இல்லன்னு சொன்னா தூக்கி குடுத்துடுவீங்க நீங்க!” என்றாள் சலிப்பாய்.
“நான் யாருக்குடா குடுக்கப்போறேன்?”
“யாருக்குமே தர வேண்டாம்ப்பா! நாளைக்கே உங்க மருமகன் வந்து பணம் வேணும்ன்னு நின்னாக்கூட எடுத்து நீட்டிடாதீங்க! சரியா?” என்றாள்.
“என்னடா இப்படி பேசுற? நான் சேர்க்குறதெல்லாம் பின்ன யாருக்கு?”
“எல்லாம் எனக்கு தான்! யாரு இல்லன்னு சொன்னா? ஆனா, இப்போதைக்கு எதையும் தூக்கி குடுக்காதீங்க!”
அஷ்டா இப்படி பேச, எதற்கு? என்ன? ஏன்? என்று எதுவும் புரியாவிட்டாலும், மகள் பேச்சிற்கு தலையாட்டியே பழகியவர் இதற்கும் ‘சரி’ என தலையசைத்தார்.
அதோடு, “ப்பா! இந்தாங்க” என பையில் இருந்த ஒரு லட்சத்தை எடுத்து அவர் கரத்தில் கொடுக்க, “எதுக்கும்மா?” என பதறிப்போனார் சண்முகம்.
“வச்சுக்கோங்கப்பா! செலவுக்கு ஆகும்!” என சொன்னதும் சண்முகம் பிடிவாத முகத்துடன் மறுக்க வர,
“இதை வாங்கிக்கலன்னா நான் பேசவே மாட்டேன் சொல்லிட்டேன்” என மிரட்டி அவர் கையில் பணத்தை கெட்டியாய் வைத்துவிட்டு,
“கல்யாண கடன் இருக்குமே, இதை கொண்டு போய் குடு! மாமா கஷ்டப்பட வேண்டாம்ன்னு உங்க மாப்பிள்ளை தான் கொடுத்து விட்டாரு!” என தந்தையின் முகவாட்டம் போக்க புளுகினாள்.
“இருந்தாலும், இது…” சண்முகம் மறுக்க,
“நான் குடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா?” என்றாள்.
“அதில்லம்மா! ஏற்கனவே மாப்பிள்ளை வண்டி எல்லாம் குடுத்து” அவரை பேசி முடிக்க கூட விடாமல் எழுந்து கோவமாய் வெளியே சென்றாள்.
“அம்மாடி! தங்கம்…” விளித்துக்கொண்டே அவர் பின்னே வர,
“நான் தரேன்! நீங்க வாங்கிக்க மாட்டேங்குறீங்க? போங்கப்பா! பேசாதீங்க என்கிட்ட!” வீராப்பாய் செல்லும் மகளிடம் மேற்கொண்டு தர்க்கம் செய்யாமல், ‘சரிம்மா!’ என சரணடைந்திருந்தார் சண்முகம்.