காதல் 9:
அனிதாவின் போட்டோவைப் பார்த்த மகாவிற்கு அப்படி ஒரு ஷாக். எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று தெரியாது. அவளை ஆளைக் காணோம் என்று உள்ளே வந்த வசுந்தரா, அவள் நின்றிருந்த விதம் பார்த்து யோசனையுடன் அருகில் வந்தார்.
“என்னாச்சு மகா..? அங்க ஈஸ்வரன் உன்னைக் கூப்பிடுறான்..” என்ற வசுந்தரா, அவள் கையில் இருந்த போட்டோவைப் பார்த்து, அதை வாங்கினார்.
“இந்த ஒரு போட்டோ எப்படியோ வீட்டுலையே இருக்கு மகா. இதையும் போய், ஆத்துல விடணும். இதைப் பார்த்துகிட்டா இவ்வளவு நேரம் நின்னுட்டு இருக்க..? அங்க அவன் பறந்துகிட்டு இருக்கான்.கிளம்பு மகா..” என்றார் வசுந்தரா.
“இவங்க தான், இறந்து போனவங்களா அத்தை..?” என்றாள் மகா.
“ஆமா மகா. உனக்குத் தெரியாதா..?” என்றவர்,
“உனக்கு தெரிஞ்சிருக்கவும் வாய்ப்பில்லையே..நிவேதா இறந்த விஷயம் கேட்டு நீங்க தான் அங்க போய்ட்டிங்களே..?” என்று பதிலையும் அவரே சொன்னார்.
மகாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் எங்கோ எதுவோ இடித்தது அவளுக்கு. அமைதியாக கிளம்பி வெளியே வந்தவளைப் பார்த்த ஈஸ்வரனின் விழிகள் ஒரு நிமிடம் அவளை ஆர்வமாய் பார்த்து, பிறகு அப்படியே பார்வையை மாற்றிக் கொண்டது.
“கிளம்பலாமா..?” என்றான்.
“ம்ம்..!” என்று அவள் அமைதியாக சொல்ல, முதன் முறையாக அமைதியாக இருந்த மகாவை அந்த குடும்பமே ஆச்சர்யமாகப் பார்த்தது.
“என்னடி இவ..? உலக மகா அதிசயமா அமைதியா இருக்குறா..?” என்று ருக்கு பாட்டி மஞ்சரியிடம் கேட்க,
“எப்படியோ அமைதியா இருந்தா போதும் பாட்டி..” என்றாள் மஞ்சரி.
வெளியே ஈஸ்வரன் பைக்கை எடுக்க, யோசனையுடனேயே சென்று அவன் பின்னால் ஏறிக் கொண்டவளின் கைகள் இயல்பாக அவன் தோளைப் பிடித்துக் கொள்ள, ஏதோ ஒன்று அவனுக்குள் சிலிர்த்து அடங்கியது.
“என்னாச்சு இவளுக்கு..? எதுக்கு இப்படி இருக்கா..?” என்று அவனுக்கும் யோசனை தோன்ற, இப்போது கேட்கவேண்டாம் என்று நினைத்தவன், வண்டியை எடுக்க, சற்று பலமில்லாமல் அமர்ந்திருந்தவள், அவன்மீதே மோதி,மீண்டும் இருப்பிடம் வந்தாள்.
“பார்த்து உட்கார் மகா..! யோசனையெல்லாம் எங்க இருக்கு..?” என்ற ஈஸ்வரனின் பேச்சில், திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தாள். அவள் முழித்துக் கொண்டிருப்பதை முன்னால் இருந்து மிரர் வழியாகப் பார்த்தவனின் இதழ்களில் முதன் முறையாக புன்னகை தோன்றி மறைந்தது.
அவள் வீடு செல்லும் வரைக்கும் அவன் எதுவும் பேசவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. மஞ்சரி அடித்த வேப்பிலை கொஞ்சம் சரியாக வேலை செய்தது. மகாவை அப்படி அமைதியாக பார்ப்பதே பேரானந்தமாக இருந்தது ஈஸ்வரனுக்கு.
“வீடு வந்திருச்சு..” என்றான் ஈஸ்வரன்.
“ம்ம்..” என்று இறங்கியவள், நெடுநெடுவென்று உள்ளே செல்ல, ஈஸ்வரனுக்கு தான் உள்ளே செல்ல தயக்கமாக இருந்தது.
முன்னே சென்றவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திரும்பியவள்,
“உள்ள வாங்க..!” என்றாள்.
ஏனோ அவள் அழைத்த பிறகு கொஞ்சம் தயக்கமில்லாமல் உள்ளே சென்றான் ஈஸ்வரன்.
“வாங்க தம்பி..! வாம்மா மகா..!” என்றார் கமலா.
“அம்மா, மறுவீட்டுக்கு தான் முறையா கூப்பிடலை. வீட்டுக்கு வந்தவரை வாசல்ல வந்தாவது கூப்பிடலாம்ல. நல்லா இருக்கு உங்க மரியாதை..” என்றாள் பட்டென்று. மஞ்சரியிடம் பதில் பேச முடியாத ஆதங்கம் எல்லாம் கமலாவிடம் வார்த்தைகளாய் வந்து விழுந்தது.
மகளின் பேச்சில் ஒருநிமிடம் முகம் கசங்கியவர், அடுத்த நிமிடம் தன்னை சரிப்படுத்திக் கொண்டார்.
“பரவாயில்லையே..? என் பொண்ணுக்கு பொறுப்பு வந்திடுச்சு போல. புருஷனுக்காக சண்டை போடுற அளவுக்கு வந்துட்ட..” என்று சந்தோஷமாய் சொல்ல,
“இங்க வந்தா புருஷனுக்காக சண்டை போடுவா, அங்க வந்தா புருஷன் கூட மட்டும் தான் சண்டை போடுவா. அவ டிசைன் அப்படி..” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ஈஸ்வரன்.
“உட்காருங்க தம்பி..!” என்று கமலா சொல்ல,
“அப்பா எங்கம்மா..?” என்றாள் மகா.
“அப்பாவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலைடா. அதான் உள்ள படுத்திருக்கார்..” என்று கமலா சொல்லி முடிக்கவில்லை,
“ஏன்? அப்பாவுக்கு என்னாச்சு? என்கிட்டே யாரும் ஒன்னும் சொல்லலை..?” என்று அவரைப் பார்க்க செல்ல முற்பட,
“அவருக்கு சாதாரண காய்ச்சல் தான். மாத்திரை போட்டுட்டு தூங்குறார். அதான் நேர்ல வந்து விருந்துக்கு அழைக்க முடியலை..” என்றார் கமலா.
“என்னம்மா நீங்க..? விருந்தா முக்கியம்..? அப்பாதான் முக்கியம்..” என்று மகா சொல்ல,
நிஜமாகவே அவளைப் புரிந்து கொள்ள முடியாமல், மண்டையை உடைத்துக் கொண்டான் ஈஸ்வரன்.
தாயும், மகளும் பல வருடம் கழித்து பார்த்தவர்களைப் போல் பேசிக் கொண்டிருக்க, ஈஸ்வரனுக்கு நேரத்தை நெட்டித் தள்ள வேண்டியிருந்தது.
“மகா ஒரு முக்கியமான வேலை இருக்கு. போயிட்டு கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்..!” என்றவன், அவளின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பி விட்டான்.
“அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க மகா..?” என்றார் கமலா.
“எல்லாரும் நல்லா இருக்காங்க. நான் தான் நல்லா இல்லை..” என்றாள் மகா.
“என்னடி சொல்ற..?” என்று கமலா அதிர்ச்சியாக கேட்க,
“எனக்கு மனசு என்னவோ ஒட்டவே மாட்டேங்குதும்மா. எந்த விஷயத்தை எடுத்தாலும் நிவேதா முகம் தான் முன்னாடி வருது. இப்பல்லாம் நான் அதிகமா பேசுறேன். நான் வாய் பேசுறதா நினைச்சுக்குறாங்க. ஆனா, எனக்குள்ள இருக்குற பயத்தை மறைக்கத் தான் அப்படி பேசுறேன்னு யாருக்கும் தெரியாதுல்ல..?” என்றாள் மகா.
“போனவ போய்ட்டா..! இனி நினைச்சாலும் திரும்பி வரப்போறது இல்லை. அவளை நினைச்சு உன்னோட வாழ்க்கையை கெடுத்துக்காத மகா..” என்றார் கமலா.
“எப்படிம்மா நினைக்காம இருக்க முடியும்..? அப்படி கிராண்டா கல்யாணம் பண்ணி வச்ச அவ வாழ்க்கையையே அழிச்சுட்டாங்க. அப்போ என்னோட நிலைமையெல்லாம் யோசிச்சு பாருங்க..” என்றாள் ஆதங்கமாய்.
“நாங்க எதுவும் செய்யலைன்னு சொல்றியா மகா…” என்றார் கமலா.
“நான் அப்படி சொல்லலைம்மா..! அவங்க ஏதாவது பேசிடுவாங்களோ அப்படின்ற பயத்துலயே நான் முதல்ல பேசிடுறேன். அதைத்தான் சொன்னேன்..” என்றாள்.
“உனக்கு நாங்க பொருளா செய்யலைன்னாலும், அப்பா நிலத்தைக் குடுக்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தார் மகா..” என்றார் கமலா.
“என்னம்மா சொல்றிங்க..? ஈஸ்வர் அதை வாங்கிக்கிட்டாரா..?” என்றாள் கோபமாக.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது மகா. ஆனா, அப்பா உங்க கல்யாணத்துக்கு முதல் நாளே சொன்னார்..” என்றார் கமலா.
அவளறியாமல், மனதின் மூலையில் ஈஸ்வரனுக்கு இருந்த இடம் சரிந்து விழுவதைப் போல் உணர்ந்தாள் மகா.
‘எதுவும் வாங்கலைன்னு உன்னை கொஞ்சம் நல்ல விதமா நினைச்சேன். நீயும் எல்லா ஆம்பிள்ளைங்க மாதிரி தான்னு நிரூபிச்சுட்ட..’ என்று மனதிற்குள் குமைந்து போனாள்.
“அவங்க கேட்டாலும், கேட்கலைன்னாலும் செய்ய வேண்டியது நம்ம கடமை. உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறோம்.. நீ இதைப் பத்தியெல்லாம் நினைக்காம, ஒழுங்கா மாப்பிள்ளை கூட குடும்பம் நடத்துற வழியைப் பாரு..” என்றார் கமலா.
மதியவாக்கில் வந்தான் ஈஸ்வரன். வந்தவனுக்கு, மகாவின் மாற்றம் எதுவும் கண்ணில் படவில்லை. கட்டாயத்திற்காக சாப்பிட்டவன், சாப்பிட்டு முடித்தவுடன்,
“கிளம்பலாமா..?” என்றான்.
“நீங்க வேணும்ன்னா கிளம்புங்க. நான் ரெண்டு நாள் கழிச்சு தான் வருவேன்..!” என்றாள்.
“ஏன்? என்னாச்சு..?” என்றான் பொறுமையாக.
“சும்மாதான்..!” என்றாள்.
“மகா, கிளம்புற வழியைப் பாரு. ரெண்டு நாள் கழிச்சு வேணும்ன்னா வந்துட்டு போ. இப்ப மாப்பிள்ளை கூட கிளம்பு..” என்று கமலா உறுதியாக சொல்லிவிட, கமலாவை முறைத்துக் கொண்டே பாண்டியனின் பக்கம் திரும்பினாள். சிறிது நேரத்திற்கு முன்பு தான் எழுந்து வந்து சோர்வாய் அமர்ந்திருந்தார் பாண்டியன்.
“நீங்களாவது சொல்லுங்கப்பா..!” என்று அவரிடம் முறையிட,
“இல்லம்மா, அது தப்பு. நீ மாப்பிள்ளை கூட கிளம்பு மகா..!” என்றார் அவரும்.
“என்னவோ போங்க..! இந்த வீட்ல இருக்குறதுக்கு கூட எனக்கு உரிமையில்லாம போய்டுச்சு..” என்று வேண்டா வெறுப்பாய் அவனுடன் கிளம்பினாள் மகா. அவளின் ஒவ்வொரு செய்கையையும் பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரனுக்கு, வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறின கதை கொஞ்சமாக புரியத் தான் செய்தது.
“இதையெல்லாம் நான் ஆள் விட்டு எடுத்துக்கிறேன் அத்தை..” என்று அவள் பேக் செய்து வைத்திருந்த அவளுடைய பெட்டிகளைப் பாரத்துச் சொன்னவன், அவளை அழைத்துக் கொண்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்துவிட்டான்.
வீட்டிற்குள் வந்தவள், நேராக வசுந்தராவிடம் சென்று நகைகளைக் கழட்டிக் கொடுத்தாள்.
“எதுக்கு மகா வந்ததும் வராததுமா கழட்டுற? போட்டுக்கோமா..?” என்றார் வசுந்தரா.
“இருக்கட்டும் அத்தை..! அதான் போயிட்டு வந்துட்டோமே..? பத்திரமா வைங்க. எனக்கு பொறுப்பு பத்தாது..” என்றவள், அமைதியாக அறைக்குள் சென்று விட்டாள்.
“என்னாச்சு ஈஸ்வரா..? ஏன் மகா முகமே சரியில்லை..” என்றார் வசுந்தரா.
“தெரியலைம்மா..! நான் அங்க விட்டுட்டு வெளிய கொஞ்சம் வேலையிருக்குன்னு போயிட்டு வந்தேன். என்னன்னு எனக்கு ஒன்னும் புரியலை..” என்றான் யோசனையுடன்.
“என்ன ஈஸ்வரா..? போனதும் கிளம்பி போயிருக்க..? அது தப்பில்லையா..? ஒருவேளை மகாவுக்கு அது தான் கோபமோ என்னவோ..?” என்றார் வசுந்தரா.
“நானும் முயற்சி பன்றேன்ம்மா. ஆனா, அங்க போனாலே ஏதோ முள்ளு மேல நிக்கிற மாதிரி இருக்கு…” என்றவன், மகாவைத் தேடி சென்றான்.
அங்கே அவளுடைய லேப்ட்டாப்பில் எதையோ செய்து கொண்டிருக்க,
“என்ன பண்ற? எதுக்கு வந்த உடனே நகை எல்லாத்தையும் கழட்டி குடுத்த..?” என்றான் ஈஸ்வரன்.
“எப்பவுமே எனக்கு மத்தவங்க பொருள் பிடிக்காது, அது பொருளா இருந்தாலும் சரி புருஷனா இருந்தாலும் சரி..” என்றாள் பட்டென்று.
“அப்பறம் ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட..?” என்றான் முகம் இறுக.
“என்ன செய்ய..? என்னோட தலைஎழுத்து பண்ணிக்கிட்டேன். இனி தலைஎழுத்தேன்னு வாழ வேண்டியது தான்..” என்றாள்.
“அப்படி தலை எழுத்தேன்னு நீ வாழ வேண்டிய அவசியம் இல்லை..” என்றான் ஈஸ்வரன் முகம் இறுக.
“அதுக்குத்தான், என்னோட ஆபீஸ்க்கு மெயில் போட்டுக்கிட்டு இருக்கேன்.. என்னோட லீவ் முடியுது. நான் ரீ-ஜாயின் பண்ணனும்..” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.
“உரிமையில்லாத எந்த இடத்துலையும் நானும் கருத்து சொல்றது இல்லை. உன்னோட இஷ்ட்டம்..!” என்றான் ஈஸ்வரன்.
“நீங்க இஷ்ட்டப்பட்டு கட்டியிருந்தாத்தான என்னோட இஷ்ட்டத்தைப் பத்தியெல்லாம் கவலைப் படுவிங்க..?” என்றாள்.
“இப்ப என்ன பிரச்சனை உனக்கு..?” என்றான் ஈஸ்வரன்.
“எங்கப்பாகிட்ட எதுக்கு நிலத்தை வாங்குனிங்க? அவர் குடுத்தா நீங்க வாங்கிடுவிங்களா..? உங்களுக்கு எங்கப்பா மேல ஏகப்பட்ட கோபம். அதையெல்லாம் இப்ப தீர்த்துக்கலாம்ன்னு பார்க்குறிங்க, அப்படித்தானே? அது நான் இருக்குற வரைக்கும் நடக்காது. அந்த பத்திரத்தை எல்லாம் குடுங்க..” என்றாள் கோபமாய்.
அதுவரை பொறுமையாய் இருந்தவனின் பொறுமை எங்கு சென்றது சென்று தெரியவில்லை.
கோபத்தில் அவள் கழுத்தையே பிடித்துவிட்டான்.
“நானும் பார்த்துகிட்டே இருக்கேன், ரொம்ப ஓவராத்தான் போற..? நான் பழிவாங்குற அளவுக்கு உங்கப்பா வொர்த் கிடையாது. பெரிய இவ மாதிரி பேசிட்டே போற..?” என்று கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்க,
அவனது கைகளை கஷ்ட்டப்பட்டு விலக்கியவள்,
“சொன்னாலும் சொல்லாட்டியும் அது தான் உண்மை. நிவேதாவை உனக்குக் கட்டிக் குடுக்கலைன்ற கோபத்துல தான, நிவேதாவோட பெஸ்ட் பிரண்ட் அனிதாவை கல்யாணம் பண்ணியிருக்க. அந்த கோபத்துல தான் அனிதாவையும் கொலை பண்ணியிருக்க. இப்ப என்னையும் கழுத்தை நெரிக்கிற.? கொன்று.. என்னையும் கொன்று..” என்று அவள் ஆவேசமாய் கத்த,
“இதென்ன புதுக்கதை..?” என்றான் ஈஸ்வரன்.
“புதுக்கதையில்லை மிஸ்டர். பழைய கதைதான்..” என்றாள் அவளும்.
“வேண்டாம் மகா.. என்னோட பொறுமைக்கும் ஒரு அளவுதான். என்னை சீண்டிகிட்டே இருக்காத, அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்லை..” என்றான் ஈஸ்வரன்.
“இந்த கதையெல்லாம் எனக்குத் தேவையில்லை. எங்கப்பா குடுத்த எல்லா பத்திரமும் என் கைக்கு வந்தாகணும்..உசுரா வச்சிருந்த நிலத்தைக் குடுத்ததுனால கூட அவருக்கு உடம்புக்கு முடியாம போயிருக்கலாம்..?” என்றாள்.
“ஏய்..! உங்கப்பன் கிட்ட வரதட்சணை வாங்கி, அதை வச்சுத் திங்கிற அளவுக்கு நான் வக்கத்தவன் இல்லை. உங்கப்பன் வெளி ஆளுக்கு அடமானம் வச்ச நிலத்தை தான் திருப்பிட்டு வந்து வச்சிருக்கேன். காசைக் குடுத்துட்டு பத்திரத்தை வாங்கிக்க. சும்மா குடுக்க என்கிட்டே ஒன்னும் கொட்டிக் கிடக்கலை. எல்லாம் என்னோட உழைப்பு. வறட்டு கவுரம், வெட்டி பந்தா காட்டி உங்கப்பா கடன் பட்டா, அதுக்கு நான் பொறுப்பாக முடியுமா..?” என்றான் ஈஸ்வரன் கோபத்தில்.
சில விஷயங்களை பற்றி எப்போதும் அவளிடம் பேசக் கூடாது என்று நினைத்திருந்தான். ஆனால் அவன் வாயாலையே இப்படி பேசும் அளவிற்கு கொண்டு வந்துவிட்டாள் மகா.
“நீ பொய் சொல்ற..?” என்றாள் கோபமாய்.
“நம்பிக்கையில்லைன்னா, போய் உங்கப்பாகிட்டையே கேளு. நீங்க இப்ப இருக்குற வீடு கூட அடமானத்துல தான் இருக்கு..” என்று அவன் சொல்ல, அவமானத்தில் அவளுக்கு ஆங்காரமாய் வந்தது.
ஏற்கனவே பேங்கில் விசாரித்ததில் அவளுக்கும் சில விஷயங்கள் தெரிந்திருந்ததால், அவமானத்தில், கழிவிரக்கத்தில் கண்கள் நிறைந்துவிட்டது கண்ணீரால்.
அவளுடைய கண்ணீரைப் பார்த்தவனுக்கு ஏனோ கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
“இதுக்கு எதுக்கு இப்படி கண்ணைக் கசக்கிட்டு நிக்கிற..? இப்ப கூட நீயாதான் வாயைக் குடுத்த. இல்லைன்னா, இதைப்பத்தி நான் பேசியிருக்கவே மாட்டேன். விடு மகா, பார்த்துக்கலாம்..” என்றான் ஈஸ்வரன்.
“எப்படி விட முடியும்..?உன்கிட்ட எல்லாம் தலைகுனிஞ்சு நிக்கிற மாதிரி ஆகிடுச்சு என்னோட நிலைமை..?” என்று பாண்டியன் மகள் என்பதை நிரூபித்தாள் மகா பத்ரா.
“என்கிட்டயெல்லாம் அப்படின்னா..?” என்றான் புருவம் இடுங்க.
“ஏன்? சொன்னது காதுல விழலையா..? உன்னைய கல்யாணம் பண்ணதையே என்னால இன்னும் ஜீரணிக்க முடியலை. இதுல வரிசையா ஒவ்வொன்னா சொல்லிட்டு இருக்க..? எப்படி பட்ட பையனை கல்யாணம் பண்ணனும்ன்னு நினைச்சிருந்தேன் தெரியுமா..? என்னோட கனவு எல்லாமே கலைஞ்சு போய்டுச்சு..” என்று விரக்தியாய் சொல்ல,
கோபத்தை கஷ்ட்டப்பட்டு கட்டுப் படுத்தினான் பிரகதீஸ்வரன்.
“உனக்கென்ன..? எவகிடைச்சாலும் கல்யாணம் பண்ணுவ..? நான் அப்படியா..?” என்று அவள் பேசி முடிப்பதற்கும், காது ‘ங்கொய்’ என்றது. ஓங்கி அறைந்திருந்தான் அவளை. பயத்தில் அவள் கன்னத்தில் கை வைத்தபடி நிற்க,
“போதும்..! இதுக்குமேல ஏதாவது பேசுன, நான் மனுஷனா இருக்க மாட்டேன். உன்னோட விஷயத்தில் பொறுமையா இருந்தது என்னோட தப்புத்தான். இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, உனக்கு எந்த மாதிரி பையனைக் கல்யாணம் பண்ணனும்ன்னு நினைக்கிறியோ அப்படியே பண்ணிக்க..” என்று சொன்னவன், கண்களை இறுக மூடி, உணர்வுகளை கட்டுப் படுத்தினான்.
“உன்னை மாதிரி ஒருத்தியை வழிய வந்து கல்யாணம் பண்ண, நான் என்ன முட்டாளா..? உங்கப்பா கால்ல விழாத குறையா கெஞ்சுனதுனால தான் சரின்னு சொன்னேன். அது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பத்தான் புரியுது.. நான் திரும்பி வரும் போது, நீ வீட்ல இருக்கக் கூடாது. மீறி இருந்த, நீ சொன்ன மாதிரி நான் உண்மையாவே கொலைகாரனா மாற வேண்டியிருக்கும்..” என்றவன் அங்கிருந்த பொருட்களை எட்டி உதைத்து விட்டு சென்று விட்டான்.
அவர்கள் உள்ளே பேசிக் கொண்டது அனைத்தும் கேட்காவிட்டாலும், அறையும் குறையுமாக கேட்டதில் இருந்தே தெரிந்து போனது, ஏதோ வாக்குவாதம் என்று.
“ஈஸ்வரா நில்லுப்பா..!” என்று வசுந்தரா பின்னாடியே செல்ல,
“அம்மா பிளீஸ்..! எனக்கு ஏதாவது நல்லது செய்யனும்ன்னு நினைச்சிங்கன்னா அவளை முதல்ல அவங்க வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வந்துடுங்க. இது ஒத்து வராது..” என்றவன் கோபமாகவே சென்று விட்டான்.
“என்ன வசுந்தரா..? என்னதான் நடக்குது இந்த வீட்ல..? தினமும் ஒரு சண்டையா இருந்தா நல்லாவா இருக்கு..?” என்று ருக்கு பாட்டி ஆதங்கமாய் கேட்க,
“இப்ப ஆதங்கப்பட்டு என்ன செய்ய..? நான் தான் ஆரம்பத்துலேயே சொன்னேன்ல..? என் பேச்சை யாரு கேட்டிங்க..?” என்ற மஞ்சரி, தம்பியை நினைத்து கவலை கொண்டாள்.
வசுந்தராவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இனி எல்லாம் சரியாகிவிடும் என்று அவர் நினைத்திருக்க, இப்படி மறுபடியும் ஆரம்பிப்பார்கள் என்று தெரியாமல் போனது.
“நான் எங்க வீட்டுக்குப் போறேன்..” என்று வந்து நின்றவளைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. வசுந்தரா எதுவுமே பேசவில்லை அவளிடம். மஞ்சரி எதையோ பேசப் போக,
“மஞ்சு..” என்ற வசுந்தராவின் அழுத்தமான குரலில் அவளும் வாயை மூடிக் கொண்டாள்.
மூவரையும் ஒருமுறை பார்த்தவள், அவர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவும், ஒரு முடிவுடன் கிளம்பிவிட்டாள்.
அவள் சென்றவுடன், அதுவரை அடக்கி வைத்திருந்த வசுந்தராவின் கண்ணீர் எல்லாம் அடக்க மாட்டாமல் வெளியே வந்தது.
“நீ ஏம்மா அழற..?” என்ற மஞ்சுவிற்கும் கண்கள் கலங்க,
“கடைசி வரை, என் மகனுக்கு வாழ்க்கையில நிம்மதியே இருக்காதா..?” என்று மனதிற்குள் வெம்பிப் போனார்.
இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்பினான் ஈஸ்வரன்.
“சாப்பிடுப்பா..!” என்றார் வசுந்தரா.
“பசிக்கலம்மா..” என்று அறைக்கு சென்றவனுக்கு, கதவைத் திறந்த உடனே தெரிந்து போனது, மகா இல்லை என்று. ஏதோ ஒன்று வெறுமையாய் தாக்க,
‘இனி இது மட்டும் தான் நிரந்தரம் ஈஸ்வரா..’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன், விட்டத்தைப் பார்த்து வெறும் தரையிலேயே படுத்து விட்டான்.