மீண்டும் ஒரு பயணம் அவனுடன். எப்படி உணர்கிறாள் என்று சக்திக்கே தெரியவில்லை. கொஞ்சம் பாதுகாப்பாகவும் உணர்ந்தாள். அதே சமயம் அதிக பயமாகவும் உணர்ந்தாள்.
அவளின் எண்ணப் போக்கு எதுவுமே வருணின் கருத்தில் படவில்லை.அவனுக்கு கருத்தில் இருந்தது எல்லாம் வேறு சில சிந்தனைகள் மட்டுமே. காரில் ஒலித்த இளையராஜா பாடல்களில் மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருந்தது.
பாட்டை ரசித்துக் கேட்டுக் கொண்டு வரும் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள் சக்தி.
“என்ன அப்படிப் பார்க்குற..?” என்றான் சின்ன சிரிப்புடன்.
“இல்லை..! போலீஸ்க்காரங்க இப்படி ரசனையோட பாட்டெல்லாம் கேட்பாங்களா..?” என்றாள் சக்தி.
“ஏன் எங்களைப் பார்த்தா எப்படித் தெரியுது. வேற கிரகத்தில் இருந்து நேரா போஸ்ட்டிங் வாங்கிட்டு வந்திருக்கோமா என்ன..? நாங்களும் நார்மலான ஹுமன் பீயிங் தான..? இது ஆச்சர்யப் பட என்ன இருக்கு..?” என்றான்.
“பொதுவாவே எப்பவும் டென்ஷனோடவே இருப்பாங்க..! அதான் கேட்டேன்..!” என்றாள்.
“உனக்கு மட்டும் இல்ல…எல்லாருக்கும் இருக்குற பொதுவான சந்தேகம் தான். என்ன பண்றது எங்க வேலை அப்படி. எந்த நேரமும் பிரச்சனையோட திரியனும்ன்னு எங்களுக்கு என்ன ஆசையா…? எங்க வேலை அப்படி…!” என்றாள்.
“எனக்கு போலீஸ் அப்படின்னாலே பிடிக்காது..!” என்றாள் கொஞ்சம் வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன்.
“ஏன்..? நீங்க செய்ற தப்பைக் கண்டுபிடிக்கிறதாலையா..?” என்றான் படக்கென்று.
“நான்..நான் என்ன தப்புப் பண்ணேன்..?” என்றாள் படபடப்புடன்.
“பேச்சுக்கு சொன்னேன்..!” என்பதோடு முடித்துக் கொண்டான். அதற்கு பிறகு அவன் வாயைத் திறக்கவில்லை. அவளுக்குத் தான் ஒரு மாதிரியாகிப் போனது.
“சாரி சார்..! நான் வேணும்ன்னு சொல்லலை…!” என்றாள்.
“உன்னைச் சொல்லி தப்பில்லை. எங்களைப் பார்த்தாலே சில பேருக்கு கடுப்பு. தான் செய்ற தப்பு எவன் கண்ணுக்கும் தெரியாது. அதே சமயம் நாங்க ஒரு சின்ன தப்புப் பண்ணிட்டா போதும், உடனே ஒன்னு கூடி வந்துடுவானுக..!” என்றான் கோபமாய்.
“போலீஸ்ல நிறைய பேர் தப்பு பண்ற போலீஸ் தான் சார்..!” என்றாள் அவளும் எகத்தாளமாய்.
“சோ வாட்..? இங்க எவன் யோக்கியமா இருக்கான். சிக்னல்ல நூறு ரூபா கேட்குற போலீஸ் தப்புன்னா, அதே ரோட்ல எந்த லைசென்சும், ஆர்சி புக்கும் இல்லாம ஓட்டுற வண்டிக்காரனும் தப்பு தான்..!” என்றான்.
“ஒரு நாள் மறக்குறது தப்பில்லை சார்..!” என்றாள்.
“அப்போ நாங்களும் ஒரு நாள் வாங்கிக்கிறதுல தப்பில்லை தானே..?” என்றான் பட்டென்று.
“சார்..!”
“என்ன சாரு…? மக்கள் மேல தப்பு இல்லைன்னா..? ஏன் பயப்படுறாங்க. லைசென்ஸ் இல்ல, ஹெல்மட் இல்லைன்னு போலீஸ் நிறுத்துனா…ஏன் உடனே காசை நீட்டுறாங்க. நீங்க கேஸ் போடுங்க. நாங்க கோர்ட்ல பைன் கட்டி வண்டியை எடுத்துக்கிறோம்ன்னு சொல்ல வேண்டியது தானே..! ஆனா அப்படி சொல்ல முடியாது. ஏன்னா அவங்க வேலை கெடும். ரெண்டு நாள் அலையணும். அதுக்கு அவங்களால முடியாது.
ரூல்ஸ் பாலோ பன்ன மாட்டாங்க. கோர்ட்க்கு போய் பைன் கட்ட மாட்டாங்க. உடனே போகணும்ன்னு காசைக் குடுப்பாங்க. ஆனா வாங்குற போலீஸ்காரன் மட்டும் தப்பு. அப்படித்தான..?” என்றான் கோபமாய்.
“ஏன் சார் இவ்வளவு கோபம். அப்ப உங்க டிப்பார்ட்மென்ட்ல கெட்டவங்களே இல்லையா..?” என்றாள்.
“ஏன் இல்லை..! அதெல்லாம் இருக்காங்க.ஒரு ஊருன்னு இருந்தா, நாலு பேர் நல்லவன் இருப்பான்,நாலு பேர் கெட்டவன் இருப்பான், நாலு திருடன், நாலு கொலைகாரன் இப்படி எல்லாருமே இருப்பாங்க. அதே மாதிரி தான். எல்லா டிப்பார்ட்மென்ட்லயும் நல்லவங்களும் இருப்பாங்க.கெட்டவங்களும் இருப்பாங்க..!” என்றான்.
“அந்த கெட்டவங்களைத் தான் நான் சொல்றேன்..!” என்றாள்.
“இவங்க ஆட்சிக்கு வந்தா ஒண்ணுமே நடக்காதுன்னு உங்களுக்குத் தெரியும். இந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டா நாட்டையே சுரண்டிடுவான்னும் தெரியும். இருந்தாலும் தேர்தல் நேரத்துல காசை வாங்கிட்டு ஓட்டுப் போட்டு, நாட்டை விக்குற மக்கள் எல்லாம் எங்களைப் பத்தி பேசக் கூடாது. ஓட்டுப் போட்ட உங்களாலேயே அவங்களை எதிர்த்து ஒன்னும் பேசமுடியலை. அப்பறம் அவங்ககிட்ட சம்பளம் வாங்குற நாங்களும் அவங்க சொல்றதைத் தான் செய்ய முடியும்.
எல்லாருக்கும் போலீஸ்ன்னா…அரசியல் கட்சிக்கு செம்படிக்கிறவங்க அப்படின்னு தான் எண்ணம். வேற வழி, அவனை பகைச்சா இவன் வேலை போகும். வேலை போனா இவன் குடும்பம் தான் தெருவுக்கு வரும். அப்போ சட்டம் பேசுன யாரும் அவன் குடும்பத்தை பார்க்க மாட்டாங்க. ஒரு போலீஸால ரவுடி செத்தா மனித உரிமைகள் ஆணையம் கேள்வி கேட்கும். அதே அமைப்பு, ரவுடியால ஒரு போலீஸ் செத்தா கேள்வி கேட்காது. ஏன்னா…? எங்க உசுரு அவங்களுக்கு மசுருக்கு சமானம் போல..!” என்று கோபத்தில் கவனிக்காது வார்த்தையை விட்டான்.
“தெரியாம சொல்லிட்டேன் சார்..! என்னை விட்ருங்க..!” என்றாள் சக்தி.
“இப்படித்தான் நாட்ல பல பேர் திரியறாங்க. ஒரு வாரம் எல்லா போலீஸ் ஸ்டேஷனுக்கும் லீவு விட்டா தெரியும் எங்களோட அருமை..!” என்றான் நக்கலாய்.
“அவன் சொல்வதும் உண்மைதானே…! ஒரு வாரம் எந்த இடத்திலும் போலீஸ் இல்லாமல் இருந்தால்…!” என்று அவள் யோசிக்க, கண் முன் விரிந்த காட்சிகள் அவளுக்கு அவ்வளவு கொடூரமாய் இருந்தது.
“என்ன பயமா இருக்குள்ள..?” என்றான்.
“கொஞ்சமா சார்..!” என்றாள் சக்தி.
“இனியாவது பேசுறப்போ பார்த்துப் பேசு..!” என்றான்.
“இருந்தாலும் உங்க டிப்பார்ட்மென்ட்டை குறை சொன்ன உடனே இப்படி ஒரு பாடம் எடுப்பிங்கன்னு நான் நினைக்கவே இல்லை சார்..!” என்றாள்.
“நேர்மையா இருக்கனும்ன்னு நினைக்கிற எல்லாருக்குமே வர தார்மீக கோபம் தான் இது. ஆனா, இதைக் கூட போலீஸ் திமிருன்னு தான் சொல்வாங்க..!” என்றான்.
“இருக்கட்டும் சார்..! இந்த திமிர் கூட அழகாத்தான் இருக்கு…!” என்றாள் கொஞ்சம் மலர்ந்த முகத்துடன்.
“திமிர் அழகா இருக்கா..? இல்லை நான் அழகா இருக்கேனா…?” என்றான் விரிந்த சிரிப்புடன்.
“நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும் சார்..!” என்றாள்.
“அது நல்ல நினைப்பா இருந்தா கெடுக்காதுங்க மேடம்..!” என்றான்.
அதுவரை நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. வருணுக்கு போன் வரும் வரை.
“சொல்லுங்க கார்த்தி..!” என்றான் இறுகிய முகத்துடன். கார்த்தி என்று போன் டிப்ளேயில் நம்பர் வந்தாலே அவன் முகம் அப்படித்தான் மாறி விடுகிறது.
“அந்த டெட்பாடி சம்பந்தமா ஒரு க்ளூ கிடைச்சிருக்கு சார்..! டோல்கேட் சிசிடிவி புட்டேஜ் கிடைச்சிருக்கு சார். அதே சமயம் இதே வயசு, உயரம் கொண்ட ஒருத்தர் காணாமல் போய் பத்து நாள் ஆனதா,மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் ஒன்னு ரிஜிஸ்டர் ஆகியிருக்கு சார்..!” என்றான் கார்த்தி.
“கோயம்புத்தூர் மேட்டுப்பாளையமா..?” என்றான் வருண்.
“ஆமா சார்..!” என்றான்.
“ஓகே..! ஐம் ஆன் தி வே. நீங்க அடுத்து என்ன செய்யணுமோ செய்ங்க..! கம்ப்லேயின்ட் பார்ட்டிய வர சொல்லி, அடையாளம் காட்ட சொல்லுங்க..” என்றான் வருண்.
“சார்..! பாடியை ஸ்டஷனுக்கு பக்கத்துல இருக்குற சுடுகாட்டுல புதைச்சாச்சு சார்..!” என்றான் கார்த்திக்.
“வாட்..?” என்று அதிர்ந்த வருண்,
“யாரைக் கேட்டு இப்படி பன்னிங்க..?” என்றான்.
“இல்ல சார்..! பாடி ரொம்ப அழுகின கண்டிஷன்..! தாங்காது. அதான். எப்பவும் பண்றது தான சார்..!” என்றான்.
கொஞ்சம் நிதானத்திற்கு வந்த வருண்…
“ஓகே..! ஸ்பாட்ல எடுத்த போட்டோஸ் இருக்கும். அதை மேட்டுப்பாளையம் ஸ்டேஷனுக்கு மெயில் அனுப்புங்க. அவங்க கன்பார்ம் பண்ணிட்டா, பாடியை வெளிய எடுக்க ஏற்பாடு பண்ணுங்க..!” என்றான்.
“ஓகே சார்..!” என்றான் கார்த்திக்.
“நோ டிலே. குய்க் பாஸ்ட்..!” என்றான் உத்தரவிடும் குரலில்.
“ஷுர் சார்..!” என்ற கார்த்திக் மேற்கொண்டு எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டான்.
போனை வைத்துவிட்டு, காரை எடுத்தான் வருண். ஆனால் யோசனை முழுவதும் அந்த கேசிற்கு சென்றிருந்தது. அந்த சிந்தனையில் இருந்தவன் சக்தியை கவனிக்க மறந்தான்.மேட்டுப் பாளையம் என்ற ஊரைக் கேட்டவளின் முக பாவனைகளை அவன் கவனிக்க மறந்தான்.
எவ்வளவு முயன்றும் அவளால் சில நினைவுகளில் இருந்து வெளியே வர முடியவில்லை. நடந்ததை நினைத்துப் பார்த்தவளுக்கு தலைவலி அதிகம் ஆனது.
அதற்கடுத்து அவனுக்கு போன் அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க, ஒவ்வொன்றாய் பேசி முடித்தவன் அப்பொழுது தான் கவனித்தான் அவளின் முக மாறுதலை.
“என்னாச்சு பிரியா…?” என்றான்.
“ப்ரியாவா..?” என்றாள்.
“உன் பேரு சக்தி பிரியதர்ஷினி தானே..! அதான் பிரியான்னு கூப்பிட்டேன்..!” என்றான் வேண்டும் என்று.
“ங்கா..ஆங்..! எப்படிக் கூப்பிட தோணுதோ அப்படியே கூப்பிடுங்க சார்..!” என்றாள்.
“ஆமா, ஷிவானியோட ஹஸ்பண்ட் ரிலேஷன்ஸ் எல்லாம் இல்லையா. அவங்க அம்மா, அப்பா..” என்றான்.
திடீரென்று அவன் அப்படிக் கேட்கவும் முழித்தாள் சக்தி.
“இருக்காங்க சார்..! ஆனா தொடர்பில் இல்லை..” என்றாள்.
“அவரோட டெத்துக்கு கூட வரலையா..?” என்றான்.
“அவரோட இறப்பே இன்னைக்குத் தான் எனக்குத் தெரியும். அவங்க வந்தாங்களா..? இல்லையான்னு எனக்கு எப்படித் தெரியும்..?” என்றாள்.
“உங்க பிரண்ட்.. உங்ககிட்ட சொல்லலையா..?” என்றான்.
“இல்ல சார்..! சொல்லி இருந்தா நான் உடனே வந்திருப்பேன்..!” என்றான்.
“உடனே வர கூடிய அளவுக்கு ஒரு பிரண்ட் இருந்தும், சொந்த கணவர் இறந்ததை ஏன் அவங்க உனக்கு சொல்லலை..!” என்றான்.
“அது தான் தெரியலைன்னு சொல்லிட்டேனே சார்..! நீங்க லிப்ட் குடுத்ததும் போதும்.. என்னைக் கேள்வி கேட்டே கொன்னதும் போதும்..!” என்று டென்ஷன் ஆனாள் சக்தி.
“கூல்..கூல்..! ஏன் இப்ப இப்படி டென்ஷன் ஆகுற? நான் எதார்த்தமாத்தான் கேட்டேன்..!” என்றான் வருண்.
“நீங்க கேட்கிற தொனியைப் பார்த்தால் அப்படித் தெரியலை சார்..!” என்றாள்.
“வேற எப்படித் தெரியுது..?” என்று அவளைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, அந்த செய்கையில் சக்தியின் மனம் அவள் வசம் இல்லை.
‘நல்லாத் தான் தெரியுது. நல்லா ஹேண்ட்சம்மா தெரியுது. இவனைப் பார்த்தாலே வேற எதுவும் மூளைக்குள்ள ஓட மாட்டேங்குது. இதையெல்லாம் வாய்விட்டு இவன்கிட்ட சொல்ல முடியுமா..?’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தாள் சக்தி.
“ஹெல்லோ மேடம்..! உங்களைத்தான்..!” என்றான் வருண்.
“சார்..! எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் உங்ககிட்ட சொல்லிட்டேன் சார். திரும்பத் திரும்ப கேட்டா நான் என்ன பண்றது..?” என்றாள்.
“சரி..! கொடைக்கானல்ல எந்த ஸ்கூல்ல வேலை பார்க்குற..?” என்றான் வருண். ஸ்கூலின் பேரைச் சொன்னவள்,
“இப்பப் பார்க்கலை சார்..?” என்றாள்.
“ஏன்..? நேத்து தான் டீச்சரா இருக்கேன்னு சொன்னிங்க. இப்போ இப்படி சொல்றிங்க..?” என்றான்.
“நான் டீச்சரா இருந்தது உண்மை. ஆனா, அந்த ஸ்கூல்ல இருந்து வந்துட்டேன். இப்போ வேற வேலை தேடிட்டு இருக்கேன்..!” என்றாள்.
“ஏன் நல்ல ஸ்கூல்..! பெரிய மேனேஜ்மென்ட். அப்பறம் எதுக்காக வேலையை விட்டிங்க..?” என்றான்.
“எனக்குப் பிடிக்கலை விட்டுட்டேன். இதெல்லாம் ஒரு கேள்வியா சார்..?” என்றாள்.
“நான் சாதரணமா தான் கேட்டேன்..!” என்றான்.
“எனக்கு என்னமோ அக்யூஸ்ட்டை விசாரிக்கற மாதிரியே தோணுது..!” என்றாள்.
“உண்மை தானே..!” என்றான் பட்டென்று.
“சார்ர்ர்..!” என்று அதிர்ந்தாள் சக்தி.
“இல்ல, போலீஸ்காரன் பேச்சே அப்படித்தான் இருக்கும். நாங்க சாதாரணமா கேட்குற கேள்வி கூட உங்களுக்கு அப்படித்தான் தோணுது. அதுக்கு நாங்க என்ன பண்ண..?” என்று சமாளித்தான் வருண்.
“சார்..! எனக்கு ரொம்ப தலை வலிக்குது..!” என்றாள்.
“காபி சாப்பிடலாமா..?” என்றான்.
“கண்டிப்பா எனக்கு இப்போ காபி வேணும் சார்..! இல்லைன்னா தலையே வெடிச்சிடும்..!” என்றாள்.
“ஓகே..! நீ உள்ளே உட்கார். நான் வாங்கிட்டு வரேன்..!” என்று சொல்ல,
“நோ சார்..! நானும் வரேன். எனக்கும் கொஞ்சம் பிரஷ் ஏர் வாங்கணும்..!” என்றாள்.
“என்கிட்டே இருந்து தப்பிக்கலாம்ன்னு பார்க்குறியா..?” என்றான்.
“என்ன சார் சொல்றிங்க…?” என்றாள்.
“இல்லை..! என் பேச்சில் இருந்து தப்பிக்கலாம்ன்னு பார்க்குறியா…? அப்படின்னு கேட்டேன்..!” என்றான்.
“சார்..! நிஜமாவே தலைவலிக்குது..!” என்றாள் கண்கள் கலங்க.
“ஹேய் சாரி..! வா..!” என்றவன் அந்த ரோட்டோர கடையில் இருவருக்கும் காபி சொன்னான்.நேரம் இரவு பதினோரு மணியைத் தாண்டி இருந்தது. அந்த இரவு நேர காற்று அவளுக்கு குளிரை ஏற்படுத்த, இரு கைகளையும் சேர்த்து இறுகக் கட்டிக் கொண்டாள்.
அந்த காபி இதமாய் அவள் தொண்டைக்குள் இறங்கியது. ஏனோ ஒவ்வொரு மிடக்கும் உள்ளே போகும் போது… கொஞ்சம் பயமும் சேர்ந்தே உள்ளே போனது. சுற்றும் முற்றும் அவள் விழிகள் பார்த்த படி அந்த காபியை குடிக்க, வருணின் பார்வையை உணராமல் போனாள்.
‘வெளிய இந்த சூழ்நிலையை அவளுக்கு ரசிக்கப் பிடிக்குது. ஆனா, சுதந்திரமா இல்லாம ஏதோ பயந்து பயந்து நிற்கிற மாதிரி இருக்கே..!’ என்று மனதிற்குள் எண்ணியவன், சுற்றுப் புறம் நோக்கி பார்வையை செலுத்தினான். வேறுபாடாக ஒன்றும் தெரியவில்லை. ஒரு காரின் மேல் அவன் பார்வை செல்ல, கண்கள் கொஞ்சம் கூர்மையானது. உள்ளே இருப்பது யார் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த உருவம் இவர்கள் இருவரை மட்டும் பார்ப்பதைப் போல் தோன்றியது வருணுக்கு. சக்திக்கும் அப்படித் தோன்றியதோ என்னவோ..
“போகலாமா சார்..!” என்றாள்.
“என்ன அவசரம் சக்தி..! ஒரு டென் மினிட்ஸ் கழிச்சுப் போகலாம்..!” என்றான் அவளின் எண்ணத்தை பதம் பார்க்கும் பொருட்டு.
“இல்ல சார்..! போகலாம்…!” என்றவன், அவனின் சந்தேகப் பார்வையைப் புரிந்து கொண்டு,
“இல்ல குளிர் அடிக்குது…!” என்றாள். அந்த நேரத்திற்கு அந்த பதிலில் அவன் கொஞ்சம் உடன்பட்டான்.
“ஓகே..! டன்..!” என்று அவனின் வாய் சொன்னாலும், காரில் சென்று ஏறி காரை ஸ்டார்ட் செய்யும் வரை, பக்கத்தில் இருந்த காரின் மேல் ஒரு கண்ணாகவே இருந்தான்.
காரை ஸ்டார்ட் செய்து கொஞ்ச தூரம் சென்றவுடன் சைட் மிரரில் பார்த்தான் வருண். அந்த கார் என்னவோ அவர்களைப் பின் தொடர்ந்து வருவதைப் போன்று இருந்தது.
“யாரா இருக்கும்..?” என்று யோசிக்க,
“ரோட்ல ஆயிரம் கார் போகும். எல்லாமே உன்னை பாலோ பண்றதா நினைக்காத வருண்..!” என்று அவனின் மனம் சொல்ல,
“சரித்தான்..!” என்றான் வாய்விட்டு.
“என்ன சரித்தான்..!” என்றாள் சக்தி.
“நத்திங்..!” என்றவன்,
“உன்னை எங்க இறக்கி விடனும்..?” என்றான்.
அவன் அப்படிக் கேட்டதும், அவளின் கண்கள் முன்னால் இருந்த மிரரில் பார்க்க, பின்னால் வந்த காரைப் பார்த்தவளுக்கு வியர்த்து விறு விறுத்தது.
“உன்னைத் தான்… எங்க இறக்கி விடனும்..!” என்றான்.
“திண்டுக்கல்..” என்றாள்.
“ஆர் யு ஷுர்..!” என்றான்.
அவனை முறைத்தாள் சக்தி.
“இல்லை கொடைக்கானல் போகணும்ன்னு சொன்னதா நியாபகம்..!” என்றான் வருண்.
“திண்டுக்கல்ல இருந்து நான் பஸ்ல போய்டுவேன் சார்..!” என்றாள்.
“நாம திண்டுக்கல் ரீச் பண்ணும் போது, ரெண்டு மணியா இருக்கும். அந்த டைம்ல எப்படி கொடைக்கானலுக்கு பஸ்ல போவ..? என்றான்.
“அது என்னோட கவலை சார்..? நீங்க ஏன் கவலைப் படுறிங்க..?” என்றாள்.
“சரி ஓகே..! திண்டுக்கல் அவுட்டர்ல இறக்கி விட்டுடுறேன்..! இறங்கிப் போய்க்கோ..!” என்றான் அசால்ட்டாய்.
“என்ன சார் நீங்க..? அவுட்டர்ல இறங்கி நான் எப்படிப் போவேன்..?” என்றான் சற்று பயந்த பார்வையுடன்.
“அதுக்கு நான் என்ன பண்ண..? எனக்கு குவார்டர்ஸ் அவுட்டர்ல தான் இருக்கு..!” என்றான் வருண்.
இப்போது என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. திண்டுக்கல்லும் அவளுக்கு அவ்வளவு பரீட்சியமில்லை. யாரையும் தெரியாது. இருக்கும் நிலையும் சரியில்லை. வெகுவாக குழம்பிப் போனாள் சக்தி.
“நான் பஸ்ல வந்திருந்தா, காலைல தான் இங்க வந்திருப்பான். எனக்கும் கொடைக்கானல் போக சரியா இருந்திருக்கும்..!” என்றால் எரிச்சலாக.
“அதுக்கு நான் என்ன பண்ண…?” என்றான்.
“நீங்க தான கூட்டிட்டு வந்திங்க..! அப்ப நீங்க தான் பொறுப்பு..!” என்றாள்.
“அப்படி வா வழிக்கு..!” என்று மனதில் நினைத்தவன்,
“ஓகே..! அப்போ என் கூட குவாட்ரஸ்க்கு வா..! விடிஞ்சதும் கிளம்பிப் போ..!” என்றான்.
“என்னது..?” என்று அவள் அதிர்ந்து பார்க்க, அவளின் பார்வையின் பொருள் உணர்ந்தவன்,
“என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது உனக்கு..? பார்த்த தானே, நானும் அக்கா, தங்கச்சியோட பிறந்தவன் தான். எனக்கும் குடும்பம் இருக்கு. பொறுப்பான ஒரு இடத்துல இருக்கேன். அதனால நம்பி வரலாம். அதுக்கு மேல உன்னிஷ்ட்டம். எனக்கு என்ன வேண்டுதலா..? உன்னை என்கூடவே கட்டிக்கிட்டு அழ..?” என்றான் கோபமாய்.
“சாரி சார்..! நான் அந்த அர்த்ததுல சொல்லை..!” என்றாள்.
“அது எனக்குத் தேவையில்லாத விஷயம்..!” என்று பட்டென்று பேச்சை முடித்துக் கொண்டான் வருண். அதற்குப் பிறகு பேசவில்லை. இடையிடையே வந்த போனை மட்டும் பேசிக் கொண்டே வந்தான்.
“இந்த போலீச்காரங்களுக்கு மட்டும் நைட்டெல்லாம் போன் வரும் போல…? அப்படி என்ன உத்தியோகமோ..?” என்று நினைக்க,
“அதைப் பத்தி என் பொண்டாட்டி தான் கவலைப் படனும். நீ ஏன் கவலைப் படுற..?” என்றான் படக்கென்று.
“நான் என்ன கவலைப் பட்டேன்..!” என்றாள் புரியாமல்.
“இப்ப நீ மைன்ட் வாய்ஸ்ன்னு நினைச்சு சத்தமா பேசிட்டு வர. தூக்கம் வந்தா தூங்கு. எதையாவது உளறாத..!” என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு சாலையில் பார்வையைப் பதித்தான்.
“எனக்குத் தூக்கம் எல்லாம் வரலை..!” என்று நிமிர்ந்து உட்கார்ந்தவள், அடுத்த பதினைந்து நிமிடத்தில் தூங்கி வழிந்தாள். தூக்கத்தில் தலையை நாலாபுறமும் நடமாட விட்டு, இறுதியில் அவன் தோளிலேயே தஞ்சம் அடைந்தாள்.
“தூக்கமே வரலைன்னு வீராப்பு பேசிட்டு, எப்படித் தூங்கி வழியற…?” என்று எண்ணியவன், ஏனோ அவளை விலக்கவில்லை.
“என்ன வருண் இதெல்லாம்..?இவ யாரு..? சாதரணமா லிப்ட் குடுத்து வண்டில ஏத்திட்டு, இப்ப அவளைக் கூடவே கூட்டிகிட்டு சுத்துற..!” என்று அவனின் மனசாட்சி கேட்க,
“ஏன் கூடவே கூட்டிட்டு சுத்துறேன்னு உனக்குத் தெரியாதா…? இந்த வருண் எதைச் செஞ்சாலும் அதில் ஒரு காரணம் இருக்கும். சும்மா கேள்வி கேட்குற வேலை எல்லாம் வச்சுக்காத..!” என்று மனசாட்சியை அடக்கினான் வருண்.
ஒரு இடத்தில் சட்டென்று பிரேக் போட, அந்த உலுக்கலில் சற்று கலைந்தவள், மீண்டும் அப்படியே தூங்கி விட்டாள். இந்த முறை அவன் கைகளுக்குள் கையை விட்டு, அவன் கைகளை இறுகப் பிடித்தபடி அவளாகவே தோள் சாய்ந்திருந்தாள்.
அவளையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன், அவள் வேண்டுமென்று செய்யவில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.
“இந்த பக்கி தெரிஞ்சு செய்தா..? இல்ல தெரியாம செய்தா..?” என்று நினைத்தவனுக்கு ஏனோ, அவளின் தலை தாங்கிய அவனின் தோள் பாரமாகத் தெரியவில்லை. சற்று சுகமாகத்தான் இருந்தது. ஆனால், அதை அவன் தான் உணர்ந்து கொள்ளவில்லை.
இவளுடன் பேசிக் கொண்டு வந்ததில் பின்னால் வந்த காரை மறந்திருந்தான் வருண். இன்னுமும் அந்த கார் அவர்களை பின் தொடர்ந்து வருவதை உணராமல் சென்று கொண்டிருந்தான்.
ஏனென்றால் பின்னால் வந்த கார் மாறியிருந்தது. ஆனால் ஆள் மாறவில்லை.
வரும் ஆபத்து வருணுக்கா..? இல்லை சக்திக்கா..?