நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“காய்கறி கூடை ஒன்னு மிஸ் ஆகுதுன்னு சமையல்காரர் கேட்கிறார்.” என்று கூறிக்கொண்டே அங்கு வந்தான் மாதவன்.
“என்னடா சொல்லுற?” என்று கேட்டான் ஆறுமுகம்.
“ நான் எல்லாத்தையும் சரி பார்த்து தானே வாங்கி வைத்தேன்.”
“அப்படியா எங்க வச்ச அண்ணா?”
“அந்த ஸ்டோர் ரூம் பக்கத்துல தான் வச்சேன்.” என்றான் ஆறுமுகம்.
“அப்படியா நீ கொஞ்சம் எடுத்துக் கொடுத்து விடு” என்றான் மாதவன்.
“அதுக்கில்லேடா. நான் கொஞ்சம் வெளியே போகணும். அப்பாவோட பிரெண்டு வந்து இருக்காங்களாம். நான் போய் கூட்டிட்டு வரணும்.”
“அந்த வேலையை நான் பார்த்துகிறேன். நீ இந்த வேலையை பாரு.” என்றான் மாதவன்.
“சரிடா. அப்போ நீ ரயில்வே ஸ்டேஷன் போய் அவங்களை கூட்டிட்டு வந்திடு.” என்றான் ஆறுமுகம்.
அப்போது அங்கு வந்த அண்ணாமலை
“ஆறுமுகம் நீ இன்னும் கிளம்பலையா? ட்ரெயின் வந்திருக்கும். சீக்கிரம் கெளம்பு பா.” என்று அவசரபடுத்தினார்.
“இல்லையப்பா எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு. அதான் மாதவன் போறேன்னு சொன்னான்.”
“சரி யாராவது சீக்கிரமா கெளம்புங்க.” என்றார் அண்ணாமலை.
“சரி யாரு வராங்க அப்பா? தெரிந்தால் தானே நான் அவங்களை கூட்டிட்டு வர முடியும். சொல்லுங்கள்.” என்று கேட்டான் மாதவன்.
“அதை எல்லாம் பேசிட்டு இருக்க நேரம் இல்லை. ரயில்வே ஸ்டேஷன் வெளிய வெயிட் பண்ணுவாங்க. உன்னை தேடி வருவாங்க. அவங்க கிட்ட நான் கார் நம்பர், கலர், எல்லாம் குடுத்து இருக்கேன். சும்மா பேசிக்கிட்டே இருக்காம சீக்கிரம் கிளம்பு.” என்று பரபரத்தார் அண்ணாமலை.
“சரிப்பா” என்றவன் காரை எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு வந்தான்.
காரை நிறுத்திவிட்டு இறங்கி ரயில் வந்துவிட்டதா என விசாரித்தான். வரவில்லை என்று தெரிந்ததும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி ரயில் சத்தம் கேட்கிறதா என்று கவனித்துக்கொண்டிருந்தான்.
கவனித்துக் கொண்டிருந்தவன் காலையிலிருந்து செய்த வேலை அனுப்பினால் தன்னையறியாமல் அப்படியே உறங்கி விட்டான்.
“யாரோ கார் கண்ணாடியை தட்டும் சப்தம் கேட்டு விழித்தான். ‘வந்துட்டாங்க போல இருக்கே’ என்று நினைத்துக்கொண்டு கண்களை கசக்கியபடி கதவை திறந்து வெளியே வந்தான்.
அப்போது அங்கு ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
“இவங்க அண்ணாமலை கல்யாணத்துக்கு வந்து இருக்காங்க.” என்று ஒருவர் கூறவும் நிமிர்ந்து அவரை பார்த்தான் மாதவன்.
அவர் மாதவனுக்கு தெரிந்தவர்.
“என்கிட்ட விசாரிச்சாங்க. அதனாலதான் வெளியே கூட்டிட்டு வந்தேன்.” என்றார் அவர்.
“சரிங்க அண்ணா. நான் பார்த்துக்கிறேன்.” என்று கூறிவிட்டு தன்னிச்சையாக பின் இருக்கையின் கதவினை திறந்தான் மாதவன்.
தூக்க கலக்கத்தில் வந்தவர்கள் முகத்தினை கவனிக்க வில்லை.
அப்போது அவன் காலில் ஒரு சூட்கேஸ் பலமாக விழுந்தது.
அவன் “ஆ” என்று கத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான். பார்த்தவன் தன் கண்களையே நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் கண்களை கசக்கி விட்டு திரும்பி பார்த்தான்.
அங்கு நின்று கொண்டிருந்தது அவனுடைய நினைவில் என்றும் நின்றுகொண்டிருக்கும் மதுமிதாவே தான்.
‘நாம பாக்குறது கனவா நினைவா? இவள் எப்படி இங்கே? கார்ல உட்கார்ந்துகிட்டு தூங்கிட்டு இருந்தோமே அந்தக் கனவில் இவள் வந்துட்டாளா? யாராவது என்னை கிள்ளி விடுங்க’ என்று நினைக்கும் பொழுதே
மதுமிதா “சாரி ரியலி சாரி. தெரியாம கால்ல சூட்கேசை போட்டுட்டேன். சாரி.” என்று அவள் கெஞ்சும் குரலில் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவனிடம் முதன் முறையாக நேரடியாக பேசினாள்.
அதுவரை அவளையே நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு இருந்த அவனுக்கு அப்போதுதான் அவனது வலி தெரிந்தது.
‘வலிக்குது, அப்போ நிஜம்தானா?’ என்று நினைக்கும் பொழுதே அவர் மீது யாரோ பூமாரி பொழிந்தது போலிருந்தது.
அப்போது சிதம்பரம்
“என்னம்மா பார்த்து தூக்கிட்டு வரக்கூடாதா? பாரு தம்பி கால்ல ரத்தம் வருது.” என்று மகளை கடிந்துகொண்டார் சிதம்பரம்.
“சாரிப்பா. நான் பார்க்கல.” என்று மீண்டும் மன்னிப்பு கேட்டாள் மதுமிதா.
“இப்படி உட்காருங்க தம்பி.” என்று வள்ளி அவனை அங்கே இருந்த படியில் உட்கார வைத்தார்.
“வாட்டர் பாட்டில் எடு மதுமிதா.” என்று சிதம்பரம் கூற அவள் எடுத்தாள்.
“தம்பி காலை கழுவுங்க.” என்று தண்ணீர் ஊற்றினார் சிதம்பரம்.
அவன் இன்ப அதிர்ச்சியில் திகைத்து பார்த்துக்கொண்டிருந்தான்.
“தம்பி தம்பி” என்று மீண்டும் அழைத்தார் சிதம்பரம்.
“ஆம் சொல்லுங்க.” என்று அப்போதுதான் சுய நினைவுக்கு வந்தான் மாதவன்.
அவர் ஊற்றிய தண்ணீரில் காலில் அடிபட்டு இருந்த அந்த இடத்தை கழுவினான்.
“நான் பக்கத்துல மெடிக்கல் ஷாப்ல இருந்து பேண்ட் எய்ட் வாங்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டார் சிதம்பரம்.
“இல்லை வேண்டாம். கார்ல முதலுதவி பெட்டி இருக்கு.” என்றவன் எழுந்துசென்று பெட்டியை எடுத்து வந்தான்.
பெட்டியை திறந்து கட்டுப்போட முயற்சித்தான். அவன் கை காயத்தின் மீது பட்டதும் “ஆ” என்றான்.
“ரொம்ப வலிக்குதா தம்பி?” என்று பரிவுடன் கேட்டார் சிதம்பரம்.
“ஆமாம்” என்று கூறுவதுபோல அவன் தலை தன்னிச்சையாக ஆடியது.
“மது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்து இருக்கலாம் இல்ல? இப்ப பாரு. எப்படி அடிபட்டு இருக்கு?” என்று மீண்டும் மகளிடம் கடிந்து பேசினார்.
“தெரியாம பண்ணிட்டேன். சாரி அப்பா. இருங்க நான் கட்டு போடுகிறேன்.” என்றவள் அந்த முதலுதவி பெட்டியை வாங்கி அவனுக்கு கட்டு போட்டாள்.
அவளது கை கூட அவன் காயத்தில் லேசாக பட்டது. எனினும் அது அவனுக்கு மயிலிறகால் வருடியது போல சுகமாகவே இருந்தது.
கட்டுப் போட்டு முடித்தவள் “அவ்வளவுதான்” என்று அவனைப்பார்த்து புன்னகைத்தாள்.
அவன் பதில் புன்னகை செய்தான்.
“சாரி” என்றால் மீண்டும் கெஞ்சும் குரலில்.
அவன் “தேங்க்ஸ்” என்றான்.
என்னது தேங்க்ஸ்? கால்ல சூட்கேசை போட்டதுக்கு தேங்க்சா அப்போ இன்னொரு காலிலும் தூக்கி போடட்டுமா?” என்று சூட்கேசை தூக்கி அவன் இன்னொரு காலுக்கு நேராக வைத்து போடும் பாவனையில் கேட்டாள்.
அவன் லேசாக புன்னகைத்தபடி “போடுங்க” என்று மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறினான்.
“என்ன?” என்று அவள் விழி விரித்து அவள் காதில் விழுந்ததை நம்ப முடியாமல் அவனைப் பார்த்து கேட்டாள்.
“என்ன விளையாட்டு இது மது?” என்று கண்டித்தார் வள்ளி.
“இல்லமா இவர்தான் காலில் சூட்கேசை போட்டதுக்கு தேங்க்ஸ் சொல்றாரு. அதான் விளையாட்டா கேட்டேன்.” என்றாள் மதுமிதா.
“நீ கட்டு போட்டு விட்டதுக்கு தம்பி தேங்க்ஸ் சொல்லி இருப்பாரு. அது கூட உனக்கு புரியலையா? இல்லை தம்பி? என்று அவனைப் பார்த்துக் கேட்டார் வள்ளி.
“ஆமாங்க.” என்றான் மாதவன் ஒற்றை வார்த்தையில்.
“சரி சரி வாங்க போகலாம்.” என்று சிதம்பரம் அனைவரையும் அழைத்துக் கொண்டு கார் இடம் வந்தார்
வள்ளி, மதுமிதா பின் இருக்கையில் ஏற சிதம்பரம் முன்னிருக்கையில் மாதவன் பக்கத்தில் அமர்ந்தார்.
மாதவன் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
‘மதுமிதா கல்யாணத்துக்கு வந்துட்டாளா? நம்பவே முடியலையே’ என்று தன்னை சுற்றி நடக்கும் இன்ப நிகழ்வுகளை நினைத்து நினைத்து பூரித்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்.
“தம்பி கால் வலிக்குதா?” என்று விசாரித்தார் சிதம்பரம்.
“இல்லை சார்.” என்று புன்னகை மாறாமல் கூறினான் மாதவன்.
வீடு வரும்வரை சிதம்பரம் மாதவனை பற்றி கேட்டுக்கொண்டிருந்தார். அவனும் பொறுமையாக புன்னகையுடன் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
வீட்டை அடைந்ததும் காரை நிறுத்தி கீழே இறங்கினான் மாதவன்.
காரை பார்த்துவிட்டு அண்ணாமலை வீட்டு வாசலுக்கு வந்து இவர்களை வரவேற்றார்.
அனைவரும் உள்ளே சென்றனர்.
அண்ணாமலை “பார்வதி, மலர், ராணி, வாங்க. நான் அன்னைக்கு போட்டோ பார்த்து சொன்னேன் இல்லையா? என்னோட நெருங்கிய நண்பன் சிதம்பரம். இவன்தான் குடும்பத்தோடு நம்ம வீட்டு விசேஷத்துக்கு வந்திருக்காங்க.” என்று பெருமையுடன் கூறினார்.
“ஓ ரொம்ப சந்தோஷம். வாங்க வாங்க.” என்று பார்வதி வரவேற்றார்.
“மலர், மேல ஒரு ரூம் இவர்களுக்காக ரெடி பண்ண சொல்லி இருந்தேனே பண்ணியாச்சா?”
“பண்ணியாச்சு மாமா.” என்றார் மலர்.
“நல்லது மா. சரி. ராணி இவர்களை அந்த ரூமுக்கு கூட்டிட்டு போ.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது
ஆதித்யா அங்கு “அத்தை” என்று அழுதுகொண்டே அங்கு வந்தான்.
சுதாராணி அவனிடம் சென்று “என்ன ஆதி?” என்று கேட்டாள்.
“எனக்கு கெட்ட கெட்ட கனவா வருது. நீங்களும் வந்து என்கூட தூங்குங்க.” என்று தூக்கக் கலக்கத்தில் கண்களை கசக்கிக் கொண்டே சொன்னான்
சுதாராணி “சரிடா அழாத.” என்று சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள்.