“வர்ஷும்மா, அப்பா சொல்றதை கேளு டா. நாம ஜெர்மெனி போலாம் டா.” என்று அவளின் தந்தை கிட்டத்தட்ட கெஞ்சினார்.
அவளின் தாயோ, அவரின் அறையிலிருந்தபடி, நடக்கும் காட்சிகள் அனைத்தையும் நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.
இன்னமும் திருமண உடையை கூட மாற்றாமல், அழுது கொண்டிருந்த மகளைக் காண, அவருக்கும் வேதனையாக தான் இருந்தது.
ஆனால், தான் இலகுவாக பேசி விட்டால், அவள் இன்னமும் பிடிவாதம் பிடிக்க ஆரம்பிப்பாள் என்பது அவருக்கு தான் தெரியுமே.
‘சின்ன வயசுல பிடிவாதம் பிடிக்கும்போதே கண்டிச்சு வளர்க்கணும்.’ – என்றோ உதிர்க்கப்பட்ட அந்த வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டன.
அப்போது கூடத்தில், “எல்லாம் உங்களால தான். என் உதய் எனக்கு கிடைக்காம போனது உங்களால தான்.” என்று அடிக்குரலில் கத்தியவள், தந்தையின் சட்டையை பிடித்து உலுக்க, அவரோ தன் செல்ல மகளின் இத்தகைய நிலையை கண்கொண்டு காண முடியாமல் கண்ணீரில் கரைந்தார்.
அந்த காட்சி அவளின் அன்னைக்கு கோபத்தை விளைவிக்க, அது அவளின் கன்னத்தில் அடியாக இறங்கியது.
அதிர்ச்சி!
இதுவரை அடித்திடாத அன்னையின் அடியை வாங்கியவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி!
“ம்மா…” என்று குரல் எழும்பாமல், வாயை மட்டும் அசைக்க, “உனக்கு செல்லம் கொடுத்து ரொம்ப கெடுத்து வச்சுருக்கோம். ஏதோ, வருத்ததுல புலம்பிட்டு இருக்கன்னு விட்டா, அப்பான்னு கூட பார்க்காம சட்டையை பிடிக்கிற ராஸ்கல். இனி, நாங்க சொல்றபடி தான் நீ நடந்துக்கணும், புரிஞ்சுதா? இப்போ ரூமுக்குள்ள போய் அமைதியா படு. இன்னமும் ஏதாவது கலாட்டா பண்ணனும்னு பார்த்த, இன்னொரு கன்னத்திலயும் அடி வாங்குவ.” என்று கறாராக கூறினார்.
அன்னையையும் தந்தையையும் அடிபட்ட பார்வை பார்த்தவள், எதுவும் பேசாமல் அறைக்கு சென்றாள்.
*****
முதலிரவு அறையில், தன் மனைவியானவளை மிரட்டிக் கொண்டிருந்தவனின் அலைபேசி ஒலியெழுப்ப, கவனத்தை அலைபேசிக்கு திருப்பினான்.
அதில் தெரிந்த பெயரைக் கண்டதும், புருவம் சுருக்கியவன், ஒருவித அவஸ்தையுடனே அதை ஏற்க, மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில், அவன் முகபாவனை தீவிரமாக மாறியது.
“எப்படி? என்னாச்சு?”
“…”
“எந்த ஹாஸ்பிடல்?”
“…”
“நான் உடனே வரேன்.” என்றவன் அழைப்பை துண்டித்த கையோடு, வெளியே சென்று விட்டான்.
“இவ்ளோ நேரம் என்னை வெளிய போன்னு கத்திட்டு, இப்போ அவனே போயிட்டான்!” என்று சத்தமாகவே சிந்தித்தவள், “என்னவா வேணா இருக்கட்டும். இன்னைக்கு ஃப்ரீயா படுக்கலாம்.” என்று மெத்தையில் விழுக, அந்த மெத்தையும் அவளை அழகாக உள்வாங்கிக் கொண்டது.