Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கானலானாயோ காதலே-15

    மாமியார் சாட்டிய குற்றத்தில் திகைத்து நின்ற நீரதிக்கு அங்கே நடப்பது என்னவென்றே புரியவில்லை.

    “இதோ சமைக்கிறேன் அத்தை பாப்பா இப்ப தான் தூங்கினா”என்று பரபரப்பாக சமையலறை பக்கம் செல்லப் போக



Advertisement

    “அப்படியே நடிச்சு கொட்டாதடி விடிய விடிய இவனுக்கு தூபம் போட்டு ஏத்தி விட்டுட்டு இங்கே வந்து நாடகமா ஆடுற”என்று கத்த ‘இவர் என்ன குட்டி சாத்தானா இல்லை நான் தான் சூனியம் வைக்கிற மந்திரவாதியா எதுக்கு இந்தம்மா காலங்காத்தால இப்படி உளறி கொட்டுது’என்ற நீரதியின் மனதின் குரலையோ

Advertisement

Advertisement

    “அம்மா”என்ற ஆழியனின் குரலையோ பொருட்படுத்தாமல் இன்னும் திட்டினார் வளர்மதி.

    “இதோப் பாரும்மா இது நானா எடுத்த முடிவு. இந்த விஷயம் அவளுக்கு தெரியவே தெரியாது”என்று அவன் பேச

Advertisement

    “இதை என்னை நம்ப சொல்றியா?”என்று அம்மாவும்

    “இதை எங்களை எல்லாம் நம்ப சொல்றீங்களா?”என்ற தரங்கினியின் குரலும் ஒரு சேர ஒலித்தது.

    “அது உங்க விருப்பம். நான்”என்று சொல்லும் முன்பே சுபாஷ் இடையிட்டவன் “சும்மா கதையளக்காதீங்க மச்சான். எவ்வளவு சுவாதீனமா உங்களுக்கு னு தனி அக்கவுண்ட் ஆரம்பிச்சு பணம் போட்டு வச்சிருப்பீங்க. எல்லாம் உங்க வீட்டுக்காரம்மா சொல்லாமலா.. ஏன் தரு உனக்கு இந்த சாமர்த்தியம் எல்லாம் வந்துச்சா”என்று கேட்க

    “நீங்க கொஞ்சம் வாயை மூடறது நலம்”என்று நேரடியாகவே பேசிவிட்டான் ஆழியன்.

    “நான் ஏன் பேசக் கூடாது? நீங்க சுரண்டின பணத்தில் என் தங்கச்சி, தங்கச்சி புருஷனோட உரிமை இருக்கு. அதோட ஒரு பெரிய மனுஷன் ராப்பகலா உழைச்சு கொண்டு வந்த தொழிலில், நீங்க ஒருத்தர் மட்டும் சுரண்டி எடுக்கறீங்களே நியாயமா அதை பேசினா உனக்கு நோவுதா?”என்று நக்கல் பேச

    “இங்கே இருக்க எல்லாருக்கும் சொல்லிட்டேன் அது என் உழைப்பு. என் பணம் அதைப் பத்தி யாருக்கும் கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. கடை கணக்கு வழக்கோ மில் கொடுக்கல் வாங்கலோ அதில் ஏதாவது துளி தப்பு இருந்தாலும் நீங்க பேசலாம்”என்றவனை வீடே அதிர்ந்து பார்த்தது என்றால் நீரதி விழிகள் விரிய ஆச்சரியமாகப் பார்த்தாள்.

    “உங்க உழைப்பா? மர மில்லில் வேலை பார்க்க மாமா கிட்ட இருந்து சம்பளம் மட்டும் தானே வாங்கறீங்க அப்புறம் ஏது இவ்வளவு பணம்?. “என்று தரங்கினி கேட்க

    “ப்ப்ச் எல்லாம் பேசாம இருக்கீங்களா…?தரு தேவை இல்லாம பேசாத சொல்லிட்டேன்”என்று அதுவரைக்கும் அமைதியாக நின்ற அமுதன் மனைவியை சத்தம் போட்டு விட்டு, “அந்த பணம் அவனுக்கு ஒரு கண்காட்சியில் அவனோட படைப்பு வெற்றி பெற்றதுக்காக கிடைச்ச பரிசு. அதைத் தனியா ஷேவ் பண்ண சொன்னதே நான் தான். அப்பாவுக்கும் இந்த விஷயம் தெரியும்.”என்று விளக்கம் தந்த அமுதன், “இதுக்கெல்லாம் எதுக்கு டா சத்தம் போட்டுட்டு இருக்க?”என்று தம்பியை அதட்டி விட்டு சுபாஷைப் பார்த்தான்.

    “இதோப் பாருங்க மச்சான். மர மில்லுக்கு ஏதாவது போஸ்ட் வந்தா அது யார் பேருக்கு வருதோ அவங்க கிட்ட தர்றது தான் முறை. வீடு பார்க்க கடை பரப்பி அதை வச்சு பேசறது நாகரீகம் கிடையாது. அதுசரி நீங்க ஷோரூமில் இல்லாம ஏன் மில்லுக்கு போனீங்க?”‌என்று பந்தை அவன் பக்கம் திருப்ப சுபாஷ் முழித்த முழியில் வளர்மதியை முறைத்தான் அமுதன்.

    “ஏன் டா நான் தான் வீட்டுக்கு ஒரு செலாப் வேணும்னு கேட்டேன். அதைத்தான் செய்ய போனாரு மருமவன்”என்று வக்காலத்து வாங்க

    “வேதம் ஓதறதை வேடிக்கை பார்த்தவன் எல்லாம் வேதாத்திரி ஆகிட முடியாது மா. உன் மருமகரு வேடிக்கை பார்க்க போனாரு வேதம் ஓத இல்லை”என்று கிண்டலாக சொல்லி விட்டு “செல்ஃப் வந்துச்சா?”என்றான் நக்கல் தொனியை மாற்றாமல்.

    சுபாஷ் வெடுக்கென்று உள்ளே போக “ஏன் ண்ணா?”என்ற ஆழியனின் கேள்வியிலும் மனைவியின் முகத் திருப்பலிலும் சிரித்த அமுதன் “விடுடா சும்மா பொம்பளையாட்டம் ஏதானும் ஊனிப் புடிச்சு பேசிக்கிட்டு. அப்பா வரட்டும் இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்”என்றான் அமுதன்.

    “நீ ஏன் மா நிற்கிற போய் தூங்கு போ !”என்ற அமுதன் “செல்வம் வா டிஃபன் வாங்கி கிட்டு வருவோம்”என்று தம்பியையும் அழைத்துச் சென்றான்.

    இருவரும் காலை உணவை வாங்கித் தந்து விட்டு மில்லிற்கு கிளம்பி விட்டனர்.

    “ஏம்மா நீரு கொஞ்சம் முட்டக்கலக்கி போட்டு எடுத்துட்டு வா. சளி பிடிச்சுட்டு விடலை. கொஞ்சம் பெப்பர் கூட போடு”என்று சுபாஷ் கேட்க பிள்ளைக்கு பால் ஆற்றி எடுத்து வந்தவள் “பாப்பா அழுவா நான் போகணும்”என்று சொல்லி விட்டு போக

    “தூங்குற பிள்ளை அழுகுமா உனக்கு. அவன் கேட்டதை செய்ய எவ்வளவு நேரம் ஆகும் போ நீரா செய்யி”என்ற வளர்மதியிடம் “உங்க கிட்ட அன்னைக்கே சொன்னேனே அத்தை அவருக்கு வேண்டியதை அவர் தங்கச்சி தான் செய்யணும் னு”என்று முடித்துக் கொண்டாள்.

    “என்ன வரவர வாய் நீளுது உனக்கு”என்று எகிற

    “என்னைப் பார்க்க வந்த என் அண்ணனுக்கு எத்தனை நாள் தரு டீ காபி தந்து உபசரிச்சு இருக்காங்க நான் செய்ய. “என்றவள் “ஸ்வரா இப்போ வரப் போறீயா இல்லையா நீ?”என சத்தமிட்டபடி போக பொன்னி அவளை அழைத்தார்.

    “சொல்லுங்க பாட்டி”என்றபடி ஸ்வர்ணிகா நிலஞ்சனா இருவருக்கும் பாலை ஊற்றிக் கொடுத்தாள்.

    “நீ இப்படி உட்காரு உன் கிட்ட கொஞ்சம் பேசணும் பாப்பா தூங்குறாளா”என்று இலகுவாக கேட்க அதுவே புருவம் முடிச்சிட செய்தது நீரதிக்கு.

    “ஹ்ம்ம் ஆமாம் பாட்டி”என்றவள் அவர் அருகில் அமர சற்று சாய்வாக அமர்ந்த பொன்னி அவளிடம் பேசத் துவங்கினார்.

    சற்று நேரம் வரை ஜனனி பற்றியும் நீரதியின் அண்ணன் விநோத் பற்றியும் கேட்டவர் பிள்ளை அழும் சத்தம் கேட்கவுமே “சரி நீ போய் புள்ளைய பாரு”என்றார்.

    எதற்காக அழைத்தார் ஏன் அழைத்து விட்டு ஏதேதோ பேசுகிறார் என்று யோசித்தவள் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் பிள்ளையைப் பார்க்கச் சென்றாள்.

    மதிய சமையலை வளர்மதியும் தரங்கினியும் தான் செய்தனர். பெரிதாய் ஒன்றும் இல்லை. சாதமும் ரசம் வைத்து உருளை வறுவல் மட்டும் செய்திருந்தனர். ஆண்கள் யாரும் வீட்டில் இல்லாததால் எளிதான சமையல் என்று முடிந்திருக்க நீரதியை உணவருந்த அழைக்கவும் இல்லை. அவள் எழுந்து வருகையில் வெறும் சோறும் ரசமும் இருக்க அவள் அலட்டிக் கொள்ளவே இல்லை. சட்டென துவரம்பருப்பை எண்ணையில் வறுத்து பூண்டு அதிகம் வைத்து உப்பு சிறிதளவு புளியும் ஒரு மிளகாயும் மல்லித்தழை சேர்த்து துவையல் அரைத்தவள் எவரையும் கண்டு கொள்ளாமல் உணவருந்தினாள்.

    மாலையானதும் பிள்ளைகளை சமாளித்து துணிகளை மடித்து என்று அவள் வேவையை பார்க்கவே அவளுக்கு சரியாக இருக்க இரவு உணவை செய்யப் போக

    “மத்யானமே வந்து கிழிக்கலை இப்போ ஒரு சோறு பொங்க முடியாம கெடக்கு எனக்கு. நான் ஆக்கி வச்சுட்டேன்”என்று நொடிக்க

    ‘நிஜமாகவே இந்த அம்மா ஏன் சீரியல் வில்லி போல் செய்கிறது?’ என்று தோன்றிவிட்டது அவளுக்கு.

    உண்மை தான் ஆள் இருந்த பகட்டிற்கும் பேசிய பேச்சுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு பாவனை அவரிடம்.

    “சரிங்க த்தை.”என்றவள் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா என்று கூட கேட்கவில்லை. எப்படியும் நன்றாக தான் சமைத்திருப்பார் இல்லா விட்டால் தேசிகனுக்கு பதில் சொல்ல வேண்டுமே. அதனாலேயே விட்டு விட்டாள்.

    அவள் கண்டு கொள்ளாமல் செல்லவுமே சுறுசுறுவென ஏறியது வளர்மதிக்கு.

    “என்ன அத்தை இவ இந்த மாதிரி பண்றா அதுவும் அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்ததில் இருந்து பேச்சே ஒரு தினுஷா இருக்கு”என்று தரங்கினி வேறு தன் பங்கிற்கு எரிந்த விளக்கில் எண்ணெய் விட அது சுடராய் தகிக்க துவங்கியது.

    “இவளை இரு வர்றேன்”என்று பொங்கிக் கொண்டு சென்ற வளர்மதியை அடக்கிய பொன்னி “நீ இரு நான் போறேன்.”என்று நீரதியின் அறைக்குள் நுழைந்தார்.

    “என்ன ம்மா பண்ற…பேத்தி என்ன சொல்லுது”என்றபடி உள்ளே வந்து குழந்தையின் தொட்டிலைப் பார்த்தார்.

    குழந்தை ஸ்வாதிகா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அங்கே மெத்தையில் அமர்ந்து ஸ்வர்ணிகா வீட்டுப் பாடங்களை செய்து கொண்டிருந்தாள்.

    “வாங்க பாட்டி நல்லா தூங்கறா”என்று புன்னகையுடன் கூறியவள் இயல்பாய் இருக்க

  பொன்னி சுற்றி வளைக்காமல் நேரடியாக பேச்சைத் துவங்கினார்.

    “இந்தா பாரு நீரா நான் சொல்றேன் னு கோவிச்சுக்காத”என்று துவங்கியவர் பேசி முடிக்க நீரதியின் முகம் ரத்தமென சிவந்து போனது.

    “கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை நீரா. இதான் நிதர்சனம். நீ நடந்துக்கறதை பொறுத்து தான் நான் உனக்கு கூட நிக்க முடியும்”என்று நைச்சியமாக பேச

    “நான் இங்கே என்ன செய்யாம பாட்டி இருந்தேன் எனக்கு புரியலை”என்று கேட்டவளிடம் வந்ததில் இருந்து பேசியதையும் சமைக்காததையும் சொல்ல உள்ளூர பொங்கிய ஆத்திரத்தை அடக்கியவள் அப்படியே அமைதி காத்தாள். அந்த அமைதிக்கும் ஒரு நாள் அர்த்தம் உண்டு என்று தெரியும் நாள் வெகுதூரம் இல்லை தேசிகன் குடும்பத்தினருக்கு.

    …… தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!