Skip to content
Post Views: 5,640
அன்று காலையே பிரியமிற்கு நல்ல செய்தி வந்து சேர்ந்தது ஆர்.வீ குரூப்ஸ் இவர்களுக்கே வாய்ப்பு கொடுத்திருந்தனர், அத்தனை சந்தோசம் சக்திப்ரியாவிற்கு அன்று பார்லரில் அனைவருக்கும் பிரியாணி விருந்து நடந்தது.
சும்மாவா இரண்டு மாதங்களில் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் கூடியிருந்தனர் லாபமும் கணிசம் அதோடு சுற்றுவட்டாரத்திலேயே இது கொஞ்சம் பெரிய விசேஷம்.
Advertisement
வீட்டிற்கும் இரண்டு பிரியாணி ஆர்டர் போட்டு அனுப்பிவிட்டவள் கணவனுக்கும் முத்துவிற்கும் தனக்குமானதை எடுத்துக்கொண்டு அங்குச் சென்றாள்.
Advertisement
Advertisement
“அட பிரியாமா பிரியாணியா என்ன விசேஷம்” என்று வாசம் பிடித்துக்கொண்டே வந்தான் முத்து.
Advertisement
அவள் விவரம் கூறவும் “ஏய் செம்ம போத்தஞ்சாவூர்ல பெரிய ஆளாயிட்ட இனிமே கைல பிடிக்க முடியாது” என்றான் கணவன் ஒன்றும் கூறவில்லை தீவிரமாக ஏதோ கணக்கு பார்த்துக்கொண்டிருந்தான்.
‘கோவா போகணும் நாலு நாளுன்னு சொல்றேன் ஏதாவது ரியாக்க்ஷன் இருக்கா நான் இருந்தாலும் போனாலும் ஒண்ணுமில்ல இவருக்கு’ என்று கோபம் சுறுசுறு என்று ஏறியது.
“ஆமா” என்றவள் “நீங்க ஸ்வீட் எடுங்க” என்று முத்துவுக்கு மட்டும் பேடா கொடுத்தவள் தானும் ஒன்றை எடுத்து வாயில் போட்டுச் சிவபாலனை முறைத்து பார்த்தாள்.
சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் விழிகள் அவள் இதழ்களில் மையம் கொண்டது சக்திப்ரியா மெல்ல தடுமாற அவளை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே சாய்ந்தமர்ந்தான்.
“சீக்கிரம் சாப்பிடுங்க” என்றவள் வேகமாக ஓடிவிட்டாள்.
அவன் மெலிதாகப் புன்னகைத்தான் “கேடி ஊருக்கே பேடா குடுத்து சுத்திட்டு எனக்குப் போக்கு காட்டுற என்கிட்டே மாட்டற அன்னைக்கு இருக்கு உனக்கு” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
பெரிய வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மழிச்சிதான் ஆனால் என்னவோ போகவே மனமில்லை, இவனானால் போகிறாயா போ வருகிறாயா வா என்பதாகக் கடந்துகொண்டிருந்தான்.
திருமணம் முடிந்து இரண்டு மாதமும் முடிந்திருந்தது ஒரே கட்டிலில் உறக்கம் என்பதை கடந்து எதுவும் மாறவில்லை, மறுவீடு விருந்து கூடத் திருமணம் முடிந்து இருபது நாட்களுக்குப் பிறகுதான் சென்றனர்.
விருந்து என்றால் ஒருவேளை உணவு மட்டும் அங்கு உண்டான் அவ்வளவுதான் அவர்களும் விட்டுவிட்டார்கள் அவனுக்காய் ஓட்டுதல் வரட்டும் என்று.
அன்று கோவா செல்லவேண்டிய நாள் வேலை விஷயமாகச் சிவபாலன் வெளியூர் சென்றுவிட்டான் மகேந்திரன் தான் மகளைத் திருச்சி விமானநிலையம் கொண்டு சென்று விட்டார் பெரும் மன வருத்தம் சக்திப்ரியாவிற்கு.
அவனிடம் கேட்கவா முடியும் ஏதாவது குதர்க்கமாகப் பேசுவான் அவள் அவனுக்கு அழைத்துக் கிளம்புவதாகச் சொல்ல “ஓகே பத்திரமா போய்ட்டுவாங்க” என்று வைத்துவிட்டான்.
“உன்னையெல்லாம் செருப்பால அடிக்கணும் இப்போ எதுக்கு போன் போட்டுச் சொன்ன” என்று தன்னையே திட்டிக்கொண்டாள்.
அங்குச் சென்றபிறகும் அழைப்போ விசாரிப்போ ஒன்றுமில்லை அவன் எப்பொழுதும் போல இருந்தான் சக்திப்ரியாவிற்கு அவனிடம் எதிர்பார்ப்பு கூடி ஏமாந்துபோனாள்.
அழுகையாக வந்தது, அவளுக்கு அவளையே பிடிக்கவில்லை இப்படி அல்ல அவள் அவனிடம் எதிர்பார்க்காதே என்று மனதிற்கு புரியவைக்க முயன்றாலும் அது மீண்டும் மீண்டும் அங்கேயே சென்று நின்றது.
அவனுடைய குணம் நடவடிக்கை அனைத்தும் தெரிந்ததுதானே கட்டிக்கொண்டாய் இப்பொழுது என்ன புதிதாக என்று தன்னையே கடிந்துகொண்டாள், திருமணத்தை முடித்துத் திரும்பி வந்த அன்றும் அவன் வரவில்லை மகேந்திரன்தான் வந்தார் மகள் சாதாரணமாக இல்லை என்று தந்தைக்கு புரிந்தது அவராக எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.
அன்று இரவு அவன் அறைக்கு வந்தபோது அவள் சுவர் பக்கமாகப் பார்த்துப் படுத்திருந்தாள், உறங்கவில்லை என்றாலும் எழவும் இல்லை வந்தவன் சில நொடிகள் அவளை நின்று பார்த்தான் தான் அழைக்கவில்லை விசாரிக்கவில்லை அவனுக்கே தெரியும் எப்பொழுதும் அவள்தான் அழைப்பது அதே போல அவளே அழைத்துப் பேசுவாள் என்று அவன் நினைத்திருக்க அவளும் அழைக்கவில்லை.
“கோவமா இருக்காளா” என்று யோசித்தவன் குளித்துவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தான், உணவு இன்றும் பூரணி கொடுத்தனுப்பியிருந்தார் உண்டு முடித்ததும் அவள் உறங்கட்டும் என்று இவன் விளக்கை அணைத்துவிட்டு வெளியில் சென்றான்.
சிவப்ரியாவிற்கு மனதே ஆறவில்லை என் நினைவே வரவில்லையா இவருக்குக் கொஞ்சமாகக் கூட நான் இவரைப் பாதிக்கவில்லையா என்று கண்கள் கசிந்தது எப்பொழுதோ உறங்கிபோயிருந்தாள்.
அவனுக்கும் புரிகிறது… என்ன சமாதானம் செய்யத்தான் தெரியவில்லை அவனுக்கு அது வரவும் இல்லை “என்னடி பிரச்சனை உனக்கு” என்று கோபமாக வேண்டுமானால் கேட்க முடியும்.
‘இப்படி இப்படி வேலை இருந்தது அதுதான் வரமுடியவில்லை உன்கிட்ட பேசினா உன்னைப் பாக்கணும் போல இருக்கும் அதான் கால் பண்ணல’ இப்படியெல்லாம் பொண்டாட்டிக்கு ஐஸ் வைக்கத் தெரியாத அப்பாவியாக அவன் இருந்ததால் அவளும் முறுக்கிக்கொண்டு சுற்றினாள்.
என்றாலும் அறையைத் தாண்டி வெளியில் வந்துவிட்டால் சக்திப்ரியா மொத்தமாக மாறிவிடுவாள் சின்ன முக சுழிப்பை கூடக் காட்டமாட்டாள் தங்களுடைய அந்தரங்கம் அது தங்களோடு என் புருஷன்கூட சண்டை போடுவேன் பேசாம இருப்பேன் அதை ஏன் வெளியில் காட்ட வேண்டும் என்ற சிந்தனை கொண்டவள்.
ஆகையால் காலை வெகுசாதாரணமாக அடுப்படியில் வேலை செய்தாள், ஷர்மி இப்பொழுதெல்லாம் எந்த அவசியமில்லாத பேச்சுக்களும் வைத்துக்கொள்வதில்லை.
“புருஷன் மனசை ஜெயிக்க முதல்ல அவங்க வயித்தை நிறைக்கணும் அந்தப் பிரியாவை பாத்தியா வந்த உடனேவே எப்படி மாத்திட்டா பாரு இன்னைக்கு வரைக்கும் உன் சின்ன மாமியார் கையால கூட அந்த வீட்டில சாப்பிடாதவன் இப்போ பொண்டாட்டி கையால சாப்பிடுறானாம்”.
“அந்தச் சாமர்த்தியம் உனக்கு இருக்கா எல்லாத்தயும் உன் மாமியார் கையிலே கொடுக்காத கவிதா அந்த வீட்டு பொண்ணுதான் ஆனா வாழப் போன உனக்குத்தான் அந்த வீட்டு அதிகாரம் இருக்கணும் அடுப்படில உன் மாமியார் கூடச் சேர்ந்து நில்லு கொஞ்சம் கொஞ்சமா அங்க உன் அதிகாரத்தை அதிகப்படுத்து”.
“நாளைக்கே அந்த வீடு உன் புருஷனுக்கா உன் நாத்தனாருக்கான்னு பிரச்சனை வர வாய்ப்பிருக்கு ஆயிரம்தான் இருந்தாலும் ஆம்பள பிள்ளைக்குத்தானே வீடு வரணும்”.
“அதனால அந்த வீடு உங்களுக்குத்தான் அப்படிலாம் நாங்களும் உங்களுக்குத் தராம அவங்களை விட்டுற மாட்டோம் பாத்து சூதனமா நடந்துக்கோ” என்ற தாயின் அறிவுரையின் பெயரில் இப்பொழுது காலையும் இரவும் மாமியாருடன் சமையல் வேலை செய்யத் தொடங்கினாள் ஷர்மி.
சிவபாலன் அன்று பேசியபிறகு கவிதா கொஞ்சம் ஒதுங்கி இருந்தாள் அவளுக்கு நிறைய குழப்பங்கள் ‘நாம சொன்னதுக்காக இவளைக் கட்டிகிட்டானா இல்ல பிடிச்சு கட்டிகிட்டானா இவளைப் பழிவாங்கமாட்டானா? அப்போ என் புருஷன் சாவுக்கு அந்த ஆள் என்ன பதில் சொல்லப் போறார்’.
‘மாமனாரை நம்மகிட்ட இருந்து காப்பாத்த பாக்குறானா’ என்று யோசித்து யோசித்து பைத்தியம் பிடித்தது பவுனுத்தாயிடமும் இதே சந்தேகங்களைப் பகிர்ந்திருந்தாள்.
தன் மகனின் மரணத்திற்கு காரணம் மகேந்திரன் தான் என்று திடமாக நம்பினார் பவுனுத்தாயி ஆனால் என்னசெய்ய அதற்க்கு நியாயம் செய்யத் தனக்கு யாருமே உதவ இல்லையே என்ற இயலாமை, மருமகனை நம்பி பிரோயோஜனம் இல்லை பேரன் கதிரேசனும் நியாயம் பேசுகிறான்.
“மாமா ஏதோ மனக்கஷ்டத்துல கவனிக்காம போயி அடிபட்டுட்டார் இதுல மகேந்திரன் மேலேயே தப்பில்லாதப்போ அந்தப் பொண்ணு மேல எதுக்கு கோபம் அம்மாச்சி இது தப்பு வேண்டாமே அவங்க உண்மையிலே தப்பு செஞ்சிருந்தா கடவுளே அவங்களுக்கு தண்டனை கொடுக்கட்டும் விட்டிருங்க” என்று கூறியிருந்தான்.
ஆகையால்தான் சிவபாலனிடம் நன்றிக்கடனாகச் செய் என்று கேட்டு இந்தத் திருமணத்தை நடத்தினார் இப்போ அதுவும் பொய்யா இவனும் நம்மள ஏமாத்துறானா என்ற கோபமும் ஆற்றாமையும் சேர சக்திப்ரியாமேல் வன்மம் வளர்ந்துகொண்டே சென்றது.
காலைச் சமையலை முடித்திருந்த பிரியா மதியத்திற்கு தேங்காய் பால் சாதம் செய்து கறிக்குழம்பு வைத்திருந்தாள் அதை அவள் அவர்கள் அமர்ந்து சாப்பிடும் வராந்தாவில் போட்டிருந்த டேபிளில் வைத்துப் பேக் செய்துகொண்டிருக்க சமையல் கட்டிற்கு வந்த பவுனுத்தாயி காபி போட்டுக்கொண்டிருந்த கவிதாவை பார்த்துவிட்டு எட்டி வெளியில் பார்த்தார் பிரியா அங்கு நின்றிருக்க.
“ஏண்டி கவிதா இந்தப் பாலன் பய முதல்ல ஷர்மியை பிடிச்சிருக்கு கட்டிவைங்கன்னு தானே கேட்டான் இவன் பவுசு தெரிஞ்சுதான் அவங்க குடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க அதோட அவளும் நம்ம கதிரைதானே விரும்பினா இப்போ இவளை என்னமோ பிடிச்சிருக்குனு சொல்லிக் கட்டியிருக்கன் என்னவா இருக்கும் சங்கதி” என்றார்.
சக்திப்ரியாவின் விரல்கள் நடுங்கியது அவளிடம் தடுமாற்றம் மெல்ல ஒரு வலி பரவியது உள்ளே காதல் கொண்ட அவள் நெஞ்சம் காயம் பட்டது ‘அவனுக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருந்ததா அவளை மணக்கக் கேட்டானா மணக்கக் கேட்ட பெண் தம்பி மனைவியாக இதே வீட்டில்?’.
‘என்ன நினைக்கிறான்? நான் யார் அவனுக்குப் பின் ஏன் என்னை மணக்கக் கேட்டான்’ விழிகள் கலங்கி பார்வை மங்கியது, அவர்களுக்கு அதைக் காட்டாமல் ஷாலால் துடைத்துக்கொண்டாள் வேகமாக அனைத்தையும் எடுத்துவைத்தவள் திரும்பிப் பார்க்க அன்புக்கரசி அவளைப் பரிதவிப்போடு பார்த்து நின்றார்.
அவரிடமும் எதையும் கட்டிக்கொள்ள விரும்பவில்லை மெல்ல அவரை நோக்கிப் புன்னகை சிந்தினாள்.
“பிரியாமா…” என்றவரிடம் “நேரம் ஆச்சு அத்த இதைக் குடுத்துட்டு பார்லர் போகணும் இன்னைக்கு நிறைய வேலை இருக்கு” என்றவள் அதே புன்னகை முகமாக அவர்கள் இருவரையும் கடக்க பவுனுத்தாயும் கவிதாவும் ஒருவரை ஒருவர் குழப்பமாகப் பார்த்துக்கொண்டனர்.
“என்னடி இவ இவ்ளோ சொல்லியிருக்கேன் ஒண்ணுமே நடக்காத மாதிரி போறா” என்றார்.
“தெரியலையே அம்மாச்சி ஏற்கனவே இவளுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்குமோ” என்றாள் அவள் இருவரும் அதே குழப்பாத்தோடே அறைக்குச் சென்றார்கள்.
வண்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியவள் பாதி வழியிலே நின்றுவிட்டாள் அவளால் முடியவில்லை அப்படியொரு அழுகை எதிலோ தோற்றுவிட்டதாக, அவன் மனதில் இன்னொருத்தி என்பதை நினைக்கவே கசந்தது தனக்கு முன்பே அவனை ஒருத்தி சலனப்படுத்திருக்கிறாள் ஆனால் தான்… இத்தனை வருட தன்னுடைய காதல் அவனை எங்கேயும் சலனப்படுத்தவில்லை.
நெஞ்சை அடைத்தது வண்டியை நிறுத்தி இறங்கிவிட்டாள் வெகுநேர அழுகைக்கு பிறகு தன்னை சமன் செய்துகொண்டு முகத்தை நன்றாகக் கழுகிக்கொண்டு ஷால் வைத்துத் தலை முகம் அனைத்தையும் மூடிகட்டிக்கொண்டாள்.
நேரே லாரி ஆபிஸ் சென்றவள் உள்ளே செல்லாமல் முத்துவை வெளியில் அழைத்து “நேரம் ஆயிடுச்சு” என்று கூறி பையைக் கொடுத்தாள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை உடனே கிளம்பிவிட்டாள்.
“என்னடா இதுள்ள வராம போகுது தங்கச்சி” என்று சந்தேகமாகப் பார்த்தான் முத்து எவ்வளவு அவசரத்தில் இருந்தாலும் உள்ளே சென்று அவனை விழிகளில் நிரப்பிக்கொள்ளாமல் கிளம்பமாட்டாள்.
“என்னாச்சு இன்னைக்கு” என்று புலம்பிக்கொண்டே அவன் உள்ளே செல்லச் சிவபாலன் அவனையும் அவன் கையில் இருந்த பையையும் பார்த்துவிட்டு அவன் பின்னல் விழிகளை அலையவிட்டான்.
“அண்ணே என்னாச்சு நம்ம பிரியாம்மாக்கு உள்ளேயே வராம அப்படியே சாப்பாட்ட குடுத்துட்டு போயிருச்சு” என்றவன் பையை உள்ளே வைத்தான், சிவபாலன் விழிகள் கூர்மையானது இரண்டு நாட்களாக அவனைத் தவிர்க்கிறாள் அறைக்குள் வைத்து எதுவும் பேசுவதில்லை அவ்வளவே மற்றபடி அவனுக்கான அனைத்தையும் செய்கிறாள்.
ஏன் உணவை கூடக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு அவனை முறைத்துக்கொண்டே என்றாலும் பார்த்துவிட்டே செல்வாள் இன்று என்ன என்று அவன் மனம் கேள்விகேட்டது.
இரவு முத்துவுக்கு அழைத்த பிரியா “அண்ணா எனக்கு வேலை இருக்கு வர நேரம் ஆகும் வெளில சாப்பிட்டுருங்க ரெண்டு பேரும்” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் பிரச்னையில்லை ஆமா நேரம் ஆகும்னா எவ்ளோ நேரம் இப்போவே ஒன்பது ஆகப்போவுது தனியா எப்படி வருவ முன்னாடியே சொல்லவேண்டியதுதானே நானாவது வந்திருப்பேன்” என்றான்.
அன்றைக்கான லோடு ஏற்றப்பட்ட லாரி டிரைவரிடம் பேசிவிட்டு வந்த சிவபாலன் இவன் பேசுவதை கேட்டுக்கொண்டே அவனைக் கடந்து சென்றான்.
அவனுக்கு அவ்வளவு கோபம் அப்படி என்ன வீம்பு ஏன் எனக்குப் போன் செஞ்சு சொல்லமாட்டாளா இவ்ளோ நேரம் என்ன வேலை இன்னும் வேற நேரம் ஆகுமாம் ராத்திரில ஒத்தைல வர இடமா அது எல்லாம் அவ அப்பாவைச் சொல்லணும் ஓவரா செல்லம் குடுத்து வெச்சிருக்கார் என்று அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.
“இம்சை இம்சை உசிரை எடுக்குறா” என்று பல்லைக் கடித்தவன் வெளியில் வர ஏதோ புலம்பிக்கொண்டே வந்துகொண்டிருந்தான் முத்து.
“என்னடா சொன்னா உன் பாசமலர்” என்றான் கடுகடுவென்று.
“என்னவோ போண்ணே அது பேசுறதும் நடந்துக்குறதும் ஒன்னும் புரியல” என்றவன் ண்ணா “தங்கச்சியை எதுவும் திட்டிட்டீங்களா” என்றான்.
“செவுளை பேக்குறதுக்குள்ள ஓடிப் போய்டு” என்றவன் வண்டியை எடுத்தான் “நானே போய்க் கூட்டிட்டு வரேன் நீ போய்ச் சாப்பிடு” என்று சொல்லிச்சென்றான்.
இவன் சென்றபோது பாதி கடைகளை அடைத்திருந்தனர் இவன் மேலே சென்றபோது ஒருவரும் இல்லை இவள் மட்டும் சூழல் நாற்காலியில் விழிமூடி அமர்ந்து மெல்ல அபப்டியும் இப்படியும் ஆடிக்கொண்டிருந்தாள்.
“இதுதான் அந்த முக்கியமான வேலையா” என்றவன் குரலில் அடித்துபிடித்து எழுந்து நின்றாள் சக்திப்ரியா அவள் முகமே சரியில்லை அழுதிருக்கிறாள்.
இது தான் அவளை ஏர்போர்ட்டில் விடவோ அழைத்துவரவோ போகாமல் இருந்ததால் வந்த அழுகை அல்ல வேறு என்ன என்று அவளையே பார்த்திருந்தான்.
“இல்ல… அது… இப்போதான் முடிஞ்சிது” என்றாள் அவனை நிமிர்ந்து பார்க்காமலே.
வேக எட்டில் அவளை நெருங்கியவன் அவள் கன்னத்தை அழுத்திப் பிடித்துத் தன்னை பார்க்கவைத்து “என்னடி பிரச்சனை உனக்கு” என்றான்.
அவள் அமைதியாகவே நிற்க “வாயைத் திற” என்றான் அதட்டலாக.
“நீங்க… உங்களுக்கு ஷர்மியை… நீங்க அவளைக் கல்யாணம் செய்யக் கேட்டீங்க தானே அவங்க சம்மதம் சொல்லியிருந்தா அவளை நீங்க… நீங்க” என்றவளுக்கு அதற்குமேல் பேசமுடியவில்லை.
‘அவளை மனதிருப்பாயா’ என்ற கேள்வியைக் கூடக் கேட்க முடியவில்லை சட்டென்று அவன் கரங்கள் அவளிலிருந்து விலகியது அதிலே பெரிதாக அடிவாங்கினாள் சக்திப்ரியா.
“சீக்கிரம் வா” என்றவன் வேகமாகக் கீழே சென்றுவிட்டான் நின்ற இடத்தில் அப்படியே நின்றுவிட்டாள் அவள், அப்படியானல் அது உண்மையா கால்கள் தளர கீழே அமர்ந்துவிட்டாள்.
வண்டியின் அருகில் வந்தவன் ஓங்கி ஜீப்பின் பானெட்ல் குத்தினான் அந்தக் கேள்விக்குப் பதிலை எப்படி சொல்ல அவளிடம் ஒருவேளை ஷர்மியின் வீட்டினர் சம்மதம் சொல்லியிருந்தால் அந்தத் திருமணம் நடந்திருக்கலாம்.
விரும்பிக் கேட்டானா?! சரியாக வரும் என்று தோன்றியதால் கேட்டான் ஆனால் இப்பொழுது அவன் கூறும் எந்த விளக்கமும் பதிலும் அவளை ஆற்றுப்படுத்தாது தன்னை போல அல்ல அவள் தன்னை உயிராய் நேசிப்பவள்.
அவனாலே இப்பொழுது உன் இடத்தில் அவள் இருந்திருப்பாள் என்று சொல்ல முடியவில்லை, அவள் இடத்தில் வேறு ஒருத்தியா அவனால் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை ஆனால் நடந்துவிட்ட நிகழ்வு உண்மைதானே.
அன்று அவனுக்கு யார் மீதும் விருப்பமோ பிடித்தமோ இல்லை ஆகையால் ஒரு பெண்ணைக் காட்டி கேளுங்கள் என்று சொல்லமுடிந்தது ஆனால் இன்று… அவனின் ஆதியும் அந்தமுமாக இருப்பவள் இவள் அல்லவா.
தன் பக்கம் தவறே இல்லாதபோதும் தன் பதில் நிச்சயம் அவளைக் காயப்படுத்தும் என்பதாலே கீழே வந்துவிட்டான் அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது பவுனுத்தாயி கவிதாதான் இதை இவளிடம் சொல்லியிருப்பார்கள் என்று.
“ஷர்மியை கல்யாணம் செய்யக் கேட்டீங்களா” என்று கேள்விக்கு “ஆம்” என்பதுதான் சரியான பதில், வேறு யாராக இருந்தாலும் “ஆமா அதுக்கு என்ன இப்போ” என்று முகத்தில் அடித்ததை போலக் கேட்டுவிடும் சிவபாலன் அந்த ஒற்றை வார்த்தையை உதிர்க்க தைரியம் அற்றவனாக அவளிடமிருந்து விலகி ஓடிவந்திருந்தான்.
அவளோடு சாதாரணமாக அவன் பேசத் தொடங்கியிருந்தால் கூட இப்பொழுது விளக்கத்தைக் கொடுத்திருக்கலாம், அவனுக்கு அது வரவில்லை என்னமோ ஒரு தவிப்பு அவனுள் அழுத்தமாக நெற்றியை நீவிக்கொள்ள ஜீப்பின் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தாள் சக்திப்ரியா.
அவன் பக்கம் திரும்பவும் இல்லை வேறு எதுவும் பேசவும் இல்லை அவளிடம் பேரமைதி முதல் முறையாக அவளை அப்படி பார்க்கிறான்.
அப்படியே இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்ள அவன் ஒவ்வொரு அணுவும் துடித்தது “அப்போ உன்னை எனக்குத் தெரியாதுடி உன் காதல் தெரியாது இப்போ உன்னைக் கடந்து எதையுமே யோசிக்க தெரியலடி” என்று அவள் விழி பார்த்துக் கூறிவிட துடித்தான் முடியவில்லை.
அமைதியாகவே வீடு வந்து சேர்ந்தனர் அவன் வரும் வரை காத்திருக்காமல் அப்படியே மெத்தையில் சரிந்திருந்தாள் சக்திப்ரியா.
error: Content is protected !!