Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காற்றே எனைக் கிள்ளாதிரு 21

சித்தார்த்தை எதிர்பார்த்திராத ஆதவன் ‘குட்மார்னிங் ஸார்’ என எழுந்து நின்றான்.  இவர் என்ன இங்க வந்துருக்காரு என நினைத்தவன், ஏதும் அவனிடம் கேட்க முடியாமல் நின்றிருந்தான்.

அங்கே ஆதவன், கனிமொழி மட்டும் இருக்க கண்டவனது பார்வை கனியின் மீது படிந்தது.  இவன் வந்தது தெரியாமல் அவள் போனில் டீலருடன் பேசிக் கொண்டிருந்தாள்.  அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

இவனது பார்வையை பார்த்தவன் “பூபதி ஸார் பொண்ணு ஸார்.  இங்க இன்டர்ன்ஷிப்காக வந்திருக்காங்க” என்றான் சித்தார்த்திடம்.

இன்று சேன்டல் கலர் லெக்கின்ஸ், அதே கலரில் ஷால், அடர் பச்சையில் எம்பிராய்டரி செய்த டாப்ஸ் என வந்திருந்தாள்.   ஆதவனிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே பார்வை அவள் மீதுதான் இருந்தது.



Advertisement

இவர்களது பேச்சு சத்தம் கேட்டும் அவள் கண்டுகொள்ளவில்லை.  எப்போதும் மத்த டிபார்ட்மென்டிலிருந்து யாராவது வந்து ஆதவனிடம் வேலை சம்மந்தமாக பேசி செல்வார்கள்.  அது போல என நினைத்து அவள், அவளது வேலையை சின்சியராக செய்து கொண்டிருந்தாள்.

சில நிமிடம் திரும்புவாளா என நின்று பார்த்தவன், சென்றுவிட்டான்.

ஆதவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது சித்தார்த் அவனது கேபினுக்கு வந்தது குறித்து.  எப்பவும் வராதவர் இன்னைக்கு என்ன அதிசயமா இந்த பக்கம் என நினைத்தான்.

Advertisement

வந்தது முதல் சித்தார்த்தின் பார்வை கனிமொழியின் மீதே படிந்திருந்ததையும் கவனித்தான்.  திரும்பி கனியைப் பார்த்தான் அவள் போனில் பேசிக் கொண்டிருந்தாள்.  இவனது பார்வையை உணர்ந்ததாலோ என்னவோ ஆதவனை திரும்பிப் பார்த்து முறுவலித்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.  அவளது வெகுளித்தனம் இவனை ஆகர்ஷித்தது.  பெரு மூச்சுவிட்டவன் அமர்ந்து அவனது வேலையில் கவனமானான்.

Advertisement

அடுத்த பத்து நாளில் கனிக்கு வேலை கொஞ்சம் பிடிபட்டிருந்தது.  ஆதவனின் வழிகாட்டுதலில் ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்தாள்.  சொல்லித் தந்ததை கவனத்தில் வைத்து சரியாக துவங்கியிருந்தாள்.

அவளுக்கு தடுமாற்றம் வரும் போதும், திணறும் போதும் ஆதவனையே நாடுவாள்.  அவனும் அலுத்துக் கொள்ளாமல் பொறுமையாக சொல்லிக் கொடுப்பான்.

அவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் இப்படிதான் ஒவ்வொன்றையும் அக்கறையுடனும் சிரத்தையுடனும் கற்றுக் கொள்வான்.  அதனால் அவனுக்கு கனியைப் பார்க்கும் பொழுது ஆரம்பகாலத்தில் அவனைப் பார்த்தது போலவே இருந்தது.  ஆதலாலேயே அவளது ஆர்வத்தையும், திறமையையும் மனதில் மெச்சி அவளுக்கு விருப்பத்துடனே சொல்லிக் கொடுத்தான்.

Advertisement

அவளுக்கு சேல்ஸ் ரிப்போர்ட் தயார் செய்வது, கொட்டேஷன் தயாரிப்பது, விளம்பரங்கள் மூலம் எப்படி வாடிக்கையளர்களை கவர்வது, அப்பப்ப பருவநிலை, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப எப்படி ஆப்ஃபர்ஸ் கொடுத்து விற்பனையை அதிகரிக்கச் செய்வது போன்றவற்றை எல்லாம் அவளுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்தான்.

கனிமொழி வேலையின் மேல் உள்ள ஆர்வத்தால் மாலை ஆதவன் வீட்டிற்கு செல்லும் வரை அவனுடன் இருந்து வேலைப் பார்ப்பாள்.  அவன் கூட அவளைக் கிண்டலடிப்பான் ஒரே நாளில் எல்லாத்தையும் கத்துக்க முடியாது என.

அவள் சிரித்துக் கொண்டாலும் “நான் அதுக்காக மட்டும் இல்லையே, அப்பா இங்க அவங்க வேலை முடிச்சிட்டு வர வரைக்கும், நானும் இருந்து வேலைப் பார்க்கிறேன்” என்று சமாளித்து விடுவாள் ஆதவனிடம்.

“அதனால தான் நானும் உன்னை இவ்வளவு நேரம் அலோவ் பண்றேன்.  இல்லைனா பொம்பளை பிள்ளையை எல்லாம் இவ்வளவு நேரம் இங்க வச்சி வேலை வாங்க மாட்டோம்.  அது சேஃப் இல்ல” என்பான்.

“ஓஹ்… அதான் எல்லாம் ஜென்ட்ஸா வேலைக்கு வச்சிருக்கீங்களா?” என்றாள் அவனிடம்.  அவனும் பதில் ஏதும் சொல்லாமல் அவளது புரிதலை அர்த்தமாகப் பார்த்து சிரித்துக் கொண்டான்.   ஆதவன் வேலையின் ஊடே அவளிடம் “பி.பி.ஏ முடிச்சிட்டு அடுத்து என்ன ப்ளான் வச்சிருக்க?” என்றான்.

“ம்ப்ச்… இன்னும் எதுவும் முடிவு பண்ணல ஸார்” என்றாள் அசிரத்தையாக.

அவளைத் திரும்பி பார்வையால் அளவிட்டவன், அவள் உண்மையாகத்தான் சொல்கிறாள் என்பதை உணர்ந்து, “ஏன்? மேல பி.ஜி. படிக்கலையா?” என்றான்.

“ஹ்ம்…. சில சமயம் பி.ஜி. பண்ணனும்னு தோணுது.  சில சமயம் பி.பி.ஏ. முடிச்சு கொஞ்ச வருஷம் வேலைப்பார்த்துட்டு அப்புறம் படிக்கலாமான்னு தோணுது.  இன்னும் டிசைட் பண்ணல”

“அப்படி நான் வேலைக்கு இங்க அப்ளை பண்ணா என்னை எடுப்பீங்களா?  எனக்கு இங்க வேலை கிடைக்குமா?” என்றாள் உற்சாகமாக.

அவளைத் திரும்பி பார்த்தவன் “நீ முதல்ல டிகிரிய முடி, அப்புறம் பார்க்கலாம்” என பேச்சை மாற்றிவிட்டான்.  தன்னால் அவளது மேற்படிப்பு வீணாகிடக் கூடாது என எண்ணினான்.  இந்த காலத்தில் பி.ஜி யையே யாரும் மதிப்பதில்லை நாம் ஏதாவது சொல்லி அதுதான் சாக்கு என்று இவள் பாட்டுக்கு மேலே படிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டாள் என எண்ணி ஏதும் சொல்லாமல் விட்டிருந்தான்.

ஆனால் கனியைப் போல சின்சியரான திறமையான வொர்க்கர் எல்லாம் கிடைப்பதில் அவனுக்கு சந்தோஷமே.  அவன் சரி என்று சொன்னால் மேலிடத்திலும் எந்த ஆட்சேபணையும் சொல்லமாட்டார்கள்.  அவள் முடிவு செய்து கொள்ளட்டும்.  வேலைதான் என்று வந்தால் அப்பொழுது பார்க்கலாம் என நினைத்து விட்டுவிட்டான்.

@@@@@@@@@@@@@@@@@@@

அன்று அமுதினிக்கு பொங்கல் சீர் கொடுப்பதற்காக பூபதி சாரதா கனிமொழி எல்லோரும் தாம்பரத்திற்கு வந்திருந்தனர்.  விடுமுறை தினம் என்பதால் எல்லோரும் வீட்டிலிருந்தனர்.

மகள் திருமணமாகி இதுதான் முதல்முறை அவளைக் காண பெற்றோர்கள் வருவது.   அவளும் வேலைக்கு செல்வதால் அம்மா வீட்டிற்கு என இதுவரை பெரிதாக செல்லவில்லை.  நடுவில் தாலி பிரித்து கோர்ப்பதற்காக வந்தது.  அவளைப் புரிந்து பெற்றவர்களும் ஏதும் தொந்தரவு செய்யாமல் அவ்வப்போது வீடியோ கால் செய்து மகளைப் பார்த்து பேசிக் கொண்டனர்.

ஆதலால் அன்று முழுக்க மகளுடன் இருக்க எண்ணி காலையிலேயே வந்திருந்தனர்.  கனியும் அக்காவைப் பார்க்க ஆசையிருந்ததால் அவளும் அவர்களுடன் வந்திருந்தாள்.

காலையில் எழுந்ததிலிருந்து மனைவியின் முகத்தில் தெரிந்த முகமலர்ச்சி கௌதமிற்கு சிரிப்பைத் தந்தது.  பார்ரா… என் பொண்டாடிக்கு காலையிலிருந்து அவள் முகம் தவுசண்ட் வாட்ஸ் பல்ப் போட்ட மாதிரி பளிச்சின்னு இருக்கறத என கேலி செய்துகொண்டான் உள்ளுக்குள்ளே.

நேற்றே ஷ்யாமளா அவர்களது வருகையைப் பற்றி சொல்லியிருந்தார் அவனிடம்.   முதன்முறை அவர்கள் இங்கே வருவதால் நன்கு உபசரிக்க எண்ணி, மகன்களை எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டில் இருக்குமாறு சொல்லியயிருந்தார்.

அமுதினிக்கு தனது வீட்டினரை பார்த்ததில் அத்தனை சந்தோஷம்.  அவர்களை வரவேற்று உபசரித்து பேசிக்கொண்டிருந்தவள், அவர்களுக்கான மதிய சமையலை கவனிக்கவென்று கிட்சன் சென்றுவிட்டாள்.  சாரதா தானும் அவளுக்கு உதவுவதாக கூறினாலும் மறுத்துவிட்டாள்.

அங்கே வீட்டில் தான் ஓயாது உழைக்கிறார்.  வந்த இடத்திலாவது உட்காரட்டும் என்று அவரை வேண்டாம் என மறுத்து அவளே பார்த்து கொள்வதாக வந்து சமையலைக் செய்ய ஆரம்பித்தாள்.

சாரதா ஷ்யாமளாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.  பூபதியும் அவர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.  கௌதம் அவர்கள் வந்ததும் சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்து பேசியிருந்தவன், பிறகு எழுந்து அவனது அறைக்கு சென்றிருந்தான்.

அரவிந்தன் இவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருந்தாலும் எண்ணமெல்லாம் கனியிடமே.  அவளை வெகு நாட்கள் கழித்து பார்க்கிறான்.  அமுதினியும் இவர்கள் வந்ததிலிருந்து அரவிந்தனையும் கனியையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அதையெல்லாம் அரவிந்தன் கண்டு கொள்வதாக இல்லை.  அவனது பார்வை முழுக்க கனியிடமே இருந்தது.

அவனது மனம் ரக்‌ஷியின் செயலுக்கு பிறகு மிகுந்த தீவிரத்தை அடைந்திருந்தது.  அதில் கனியின் படிப்பு முடிந்ததும் அன்னையிடம் சொல்லி திருமணத்தை எவ்வளவு சிக்கிரம் முடியுமோ அவ்வளவு சிக்கிரம் செய்து கொள்ள வேண்டும், இனியும் தள்ளி நிற்பதில் அர்த்தம் இல்லை என நினைத்தான்.

அவள் மேற்கொண்டு படிப்பது என்றாலும் வேலைக்கு போக வேண்டும் என்றாலும் திருமணத்திற்கு பின்பு செய்யட்டும் என முடிவு செய்திருந்தான்

மனதில் எப்போது சான்ஸ் கிடைக்கும் அவளிடம் தெளிவாக பேச என எதிர் பார்த்திருந்தவனுக்கு, நேற்று ஷ்யாமளா இவர்கள் வருவது பற்றி சொன்னதும் முடிவெடுத்திருந்தான்.  இன்று கனியிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும்.  போதும் இந்த கண்ணாமூச்சி விளையாட்டு என நினைத்தான்.  அவனது மனதை அவளிடம் கூறி அவளின் சம்மதத்தை அறிய நேரம் பார்த்து காத்திருந்தான்.

அமுதினிக்கு உதவுவதற்காக கனியும் எழுந்து கிட்சனிற்கு சென்றிருந்தாள்.  அக்காவும் தங்கையும் பேசிக் கொண்டே சமையல் செய்து கொண்டிருந்தனர்.

கனிமொழி, “ஏன் க்கா…. வீட்டுக்கு வரது இல்ல?  கல்யாணம் ஆனதும் எங்களை எல்லாம் மறந்துட்டயா…?” என்றாள் கிண்டலாக.

அமுதினி, “அப்படிலாம் இல்லடி.  இங்கயே நேரம் சரியாயிருக்கு.  வேலைக்கும் போறதால டைமே கிடைக்க மாட்டேனுது” என்றாள்.  அவள் எப்படி சொல்லுவாள் அங்க வரனும்னா புருஷனோட வரனும்னு அம்மா அப்பாலாம் எதிர்பார்ப்பாங்க.  இவர் அப்படியே என்னை கூட்டிட்டு வந்துட்டாலும் என சலித்துக் கொண்டாள் மனதில்.

தீபக்காவது மனைவியை மாமியார் வீட்டில் தங்க அனுமதிக்க மாட்டானே தவிர, அழைத்து வராமல் எல்லாம் இருக்க மாட்டான்.  அவனே அழைத்து வந்து கூடவேயிருந்து அவளை அழைத்துச் சென்றுவிடுவான்.  அதற்கே குழலியை தங்க அனுமதிப்பதில்லை என சாரதா குறைபட்டுக் கொள்வார்.

இங்கு அமுதினி கௌதம் இல்லாமல் தான் மட்டும் தனியாக தன் வீட்டிற்கு சென்றால் அவ்வளவு தான் என பயந்து வீட்டுக்கு செல்லும் எண்ணத்தையே தவிர்த்திருந்தாள்.  அதை வெளிப்படையாக சொல்லாமல் சமாளித்துக் கொண்டிருந்தாள் தங்கையிடம்.

கனி, “ஹ்ம்ம்… தீபக் மாமா பொண்டாட்டிய தனியா விடமாட்டேன்ராருன்னா…  இந்த மாமா அவர் பொண்டாட்டிய கண்லயே காட்ட மாட்டேன்றாரு” என்று குறைப்படித்தாள் அமுதினியிடம்.

“நம்ம வீட்டுக்குன்னே எப்படிக்கா…, இப்படிப்பட்ட மாப்பிள்ளைங்களா வந்து வாய்க்கறாங்க…?”

“ஹேய்… வாலு.  வாய்… அதிமகாகிடுச்சி உனக்கு.  என் புருஷனை என் முன்னாடியே பேசுவியா நீ…?”

“ஆங்…. உன்கிட்ட தான் பேச முடியும்.  அம்மாகிட்டயா சொல்ல முடியும்? அவ்வளவுதான் என் முதுகுல டின்னு கட்டிட மாட்டாங்க” என்றாள் கேலியாக.

“அப்படியே நீ பயந்துட்டுதான் வேலை பார்ப்ப.  வாய்டி… உனக்கு”.

“உண்மைய சொன்னா வா….யா… எனக்கு.  சரி, நீயே கரெக்டா சொல்லு பார்ப்போம்.  தீபக் மாமா என்னைக்காவது நம்மளோட சிரிச்சு கலகலன்னு பேசியிருக்காரா…? பழகியிருக்காரா…?”  அவர்தான் அப்படின்னா இந்த மாமா…. அதுக்கு மேல…  சுத்தம்.  சிரிப்புக்கு… கூட பஞ்சமாயிருக்கு” என்றாள் கிண்டலாக சிரித்துக் கொண்டே.

அவள் சொன்ன பாவனையில் வெடித்துச் சிரித்துவிட்டாள் அமுதினி.

“ஹா… ஹா…. ஹேய்… சொல்ல… சொல்ல… என் முன்னாடியே.. என் வீட்டுக்காரரை… கேலி பேசுவியா..” என அவள் தலையில் குட்டு வைத்து திரும்பியவள் அங்கே கௌதம் இவர்களைப் பார்த்தபடி நின்றிருப்பதைப் பார்த்து சிலையாக நின்றுவிட்டாள்.

அமுதினியிடம் எந்தச் சலனமும் இல்லையென்பதால் கனியும் அக்காவை ஒட்டித் திரும்பிப் பார்த்தாள்.  அங்கே கௌதம் நிற்பதைப் பார்த்தவள், நாக்கைக் கடித்துக் கொண்டு, அச்சோ… இந்த மாமா எப்ப வந்தார்ன்னு… தெரியலையே என பதற்றமானாள்.

கனி உனக்கு எல்லாரும் சொல்றமாதிரி வாய் அதிகம் தான்டி.  இல்லனா கரெக்டா நீ பேசும் போதா… கௌதம் மாமா வந்து நிக்கனும்.   தேவையா.. உனக்கு?  பேசுவியா…?  பேசுவியா..? என தன்னையே மானசீகமாக திட்டிக் கொண்டிருந்தாள்.

அய்யோ இவர் என்ன அக்காவ இப்படி முறைக்கிறார்.  அச்சோ நான் சொன்னது கேட்டு மாமாக்கு கோவம் வந்துடுச்சோ?  திட்டுவாரோ?  அம்மாக்கு மட்டும் தெரிஞ்சுது தொலைஞ்சேன் என புலம்ப ஆரம்பித்துவிட்டாள் மனதில்.

பேசாம மாமாகிட்ட ஸாரி சொல்லிடுவமா… என அவள் நினைக்கும் போதே சர்ரென வேகமாக சென்றுவிட்டான் கௌதம்.  அமுதினிக்கும் மனதில் உதைப்பு.  எப்ப வந்தாங்கன்னும் தெரியலையே?  நாங்க பேசுனத கேட்டுட்டாங்களா என முழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

கௌதம் போகும் போது அமுதினியைப் கோவமாக வேறு பார்த்துவிட்டு சென்றிருந்தான்.

அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.  ஏற்கனவே ஒட்டமாட்டாங்க.  இவள் பேசனத கேட்டுட்டாங்க போலயே.  என்ன பேசுவாங்களோ? என படபடப்பும் பயமும் நெஞ்சில் எழுந்தது.

இப்படியே நின்று தவிப்பதிற்கு பதில் அவனிடம் நேரில் சென்று சமாதானப்படுத்தி ஸாரி கேட்டு விடுவோம் என நினைத்து அமுதினி கௌதமை தேடிச் சென்றாள்.

அச்சோ அக்கா எதுவும் சொல்லாம கொள்ளாம போறாளே?  மாமா உண்மையிலே கோச்சுக்கிட்டாரா?  அவரை சமாதானப்படுத்த தான் போறாளா..?  அதுக்குன்னு இங்க செஞ்சிட்டிருக்க வேலையக் கூட அப்படியே விட்டுட்டா போவாள் என சலித்துக் கொண்டாள் கனிமொழி.

“கனி இன்னிக்கு உன் சமையல சாப்பிடனும்னு எல்லாருக்கும் விதிச்சிருக்கும் போது அதை யாரால மாத்த முடியும்” என கிண்டலாகப் பேசியபடியே அமுதினி பாதியில் விட்டுச் சென்ற சமையலைக் கவனிக்க ஆரம்பித்தாள் கனிமொழி.

“யார் கிட்ட பேசிட்டிருக்க?” என வந்து நின்றான் அரவிந்தன் அவள் அருகில்.  அவன் குரலைக் கேட்டு திடுக்கிட்டு.. திரும்பி தடுமாறி.. விழ.. இருந்தவள், சுதாரித்து நின்றாள்.

அரவிந்தன், அவள் திரும்பியதில் தடுமாற்றத்துடன் விழ இருந்தவளை “ஹேய்… பார்த்து” என விழாமல் அவளை தாங்கிக் பிடிக்க கையை நீட்டுவதற்குள், அவளே தன்னை சுதாரித்து நின்று விட்டதைப் பார்த்து, கையை இழுத்துக் கொண்டான்.

கனிமொழி அவனை முறைத்து நின்றாள்.

அரவிந்தன், ஆரம்பிச்சிட்டா…டா… முறைக்கறதுக்கு.  என்னவோ வேணும்னே நான் இவளை பிடிச்சு தள்ளன மாதிரி என நினைத்து சிரித்துக் கொண்டான்.

கனி, “இங்க எதுக்கு வந்தீங்க?  அம்மா அத்தைலாம் அங்க இருக்காங்கல்ல, என்ன நினைப்பாங்க..?  யாராவது வரதுக்கு முன்னாடி.. வெளிய போங்க முதல்ல.  அக்கா இப்ப வந்துருவா…” என அவனை விரட்ட நினைத்தாள் கையை வெளியே காட்டி போ சொல்லிக் கொண்டே.

“ஹேய்…. ஹால்ல யாரும் இல்ல.  அம்மா அத்தை மாமாவ கூட்டிட்டு வீட்டைச் சுத்தி காட்ட போயிருக்காங்க.  ரிலாக்ஸ்…  நீ எதுக்கு இப்ப டென்ஷன் ஆகற?” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு,  இவன் வந்ததை யாரும் பார்க்கவில்லை என ஆசுவாசப்பட்டவள், “என்ன வேணும்?” என்றாள் அவனைப் பார்த்து கண்களை உருட்டி.

ப்பாஹ்… பார்வையிலே முழுங்கிடுவா முட்டக்கண்ணி என எண்ணியவன் இது என்ன கேள்வி? என பார்த்து நின்றான்.

“எப்படியிருக்க மொழி?” என்றான் வாய்திறந்து அவளிடம்.

“இது என்ன புதுசா மொழின்னு கூப்பிடறீங்க?”  ஏற்கனவே ஒரு முறை இப்படி கூப்பிட்டதாக அவளுக்கு நினைவு.  அப்பொழுது அதனை பெரிதாக எடுக்காதவள், இன்று நேராகவே கேட்டுவிட்டாள் அவனிடம்.

“இப்பதான் புதுசா கூப்பிடல. நான் உன்னை எப்பவும் அப்படிதான் கூப்பிடறேன்.  நீ கவனிக்கல”.

“எப்படியிருக்கன்னு கேட்டேன்?” என்றான் அழுத்தமாக “முதல்ல நேரா பேச பழகு.  எப்ப பேசுனாலும் எதிர் கேள்வி கேட்டுட்டு” என பற்களைக் கடித்தவன், “கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றான் மிரட்டலாக.

விடமாட்டான் என்று அறிந்தவள், “ம்ம்… நல்லாயிருக்கேன். எப்படியிருக்கன்னு விசாரிக்கறது கூட இப்படிதான் மிரட்டி கேட்பீங்களா…?” என்றாள் குறையாக.

“அதுக்கு நீ முதல்ல கேட்கும்போதே மதிச்சு பதில் சொல்லியிருக்கனும்”. என்றவன் திருப்பி பேச்சுக்காவது எப்படியிருக்கீங்கன்னு கேட்கறாளா  இவ ள் என சலித்தவன், அரவிந்தா உன் நிலைமை கஷ்டம்டா என அவனுக்கு அவனே மனதில் சொல்லிக்கொண்டு, அவள் படிப்பைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.

படிப்பைப் பற்றி விசாரித்ததும் பதில் சொல்லிக் கொண்டு அவனிடம் சாதாரணமாக பேச ஆரம்பித்தாள்.

அடுத்து என்ன பிளான்?  பி.ஜி. படிக்க போறியா…? என்றான்.

“அதுக்குதான் நிறைய நாளிருக்கே.  அதைபத்தி இப்பவே ஏன் யோசிக்கனும்?  இன்னும் எதுவும் முடிவு பண்ணல”.

“ஓஹ்… உன் இஷ்டம் தான்.  எனக்கு எந்த அப்ஜெக்‌ஷனும் இல்ல”.

அவன் சொல்ல வருவது புரியாமல், “நான் படிக்கிறதுக்கு நீங்க ஏன் அப்ஜெக்‌ஷன் சொல்லனும்” என்றாள் புருவத்தைச் சுருக்கி கேள்வியாக.

“ஏன்னா, உன் புருஷன கேட்காம நீ எப்படி டிஸைட் பண்ண முடியும்?” என்றான் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி சிரிப்பை அடக்கி.

“புருஷனா…” என புரியாது திருதிருத்தாள்.

“ஹ்ம்ம்… உன் படிப்பு முடியறதுக்காக வெயிட் பண்றேன்”.

“நீங்க ஏன் வெயிட் பண்ணனும்?”

“ஹ்ம்ம்… ஏன்னா படிப்பு முடிஞ்சதும் நாம கல்யாணம் பண்ணிக்கதான்” என்றான் அகத்துடன் முகமும் மலர்ந்து.  இவன் பேசுவதைக் கேட்டு அவளுக்கு அதிர்ச்சி.

இவன் இப்படியெல்லாம் பேச பேச அவள் முக பாவனைகளும் அதற்கேற்றவாறு ஏற்ற இறக்கங்களுடன் மாறுவதைக் கண்டு அவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.  அவளைத் இழுத்து தன் மேல் சாய்த்து அணைக்க துடித்த கைளைக் கட்டுப்படுத்தவே வெகு சிரமமாயிருந்தது.

இருந்தும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட்டான்.

இப்படி வெளிப்படையாகவே தன்னிடம் நேரிடையாக பேசுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.  அவனது பார்வை புரிந்தாலும் இப்படி பேசியது அதிரடியாகதான் இருந்தது.

ஆங்… நம்ம கல்யாணமா… இது எப்போலயிருந்து?  இவன் என்ன… சொல்றான் என சில நொடி சமைந்து நின்றுவிட்டாள்.

அவனது சிரிப்பில் தன்னிடம் விளையாடுகிறான் என தெளிந்தவள் அவனை முறைத்தாள் நன்றாக திரும்பி நின்று கைகளை இடுப்பில் வைத்து,

“ப்பாஹ்… பயந்து வருது மொழி” என்றான் கிண்டலாக.

“என்ன பேசறதுன்னு இல்லையா உங்களுக்கு?  கல்யாணம் அது இதுன்னு.  ஒரு நொடி எனக்கு ஒன்னுமே புரியல.  வர வர உங்க கலாட்டா… அதிகமாயிட்டே போகுது”.

“ஏன்? உனக்கு பிடிக்கலையா….?”

“ம்ப்ச்… இது என்ன பேச்சு? ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க?  யார் காதுலயாவது விழப்போகுது” என்றாள் கிட்சனனுக்கு வெளியில் பார்த்து.

“நான் சீரியஸாவே கேட்கறேன்.  உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?  நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”.

“அய்யோ… ஏதோ கலாட்டா பண்றீங்கன்னு நினைச்சா, என்ன பேசறீங்க?” என்றவளுக்கு வாசலிலேயே பார்வையும், நெஞ்சில் பதட்டதும் நிறைந்திருந்தது.

பெற்றோரின் காதில் விழுந்தால் அவ்வளவுதான் என நடுங்க ஆரம்பித்துவிட்டாள்.

“மொழி நான் நிஜமாதான் கேட்கறேன்.  இது விளையாட்டுக்கு இல்ல” என்றான் அவளிடம் நெருங்கி நின்று.

அவன் தன்னருகே நெருங்கி வந்ததைப் பார்த்து இன்னும் பயந்து போனவள் அங்கிருந்து வெளியேற எண்ணி அடியெடுத்து வைத்தாள்.

அவளை தடுப்பதற்காக அவள் கையை கெட்டியாக பிடித்து கொண்டவன், “எங்க ஓடற? இன்னைக்கு எனக்கு பதில் சொல்லியே ஆகனும் நீ” என்றான் தீர்க்கமான பார்வையில்.

“என்ன பண்றீங்க…?  கையை எடுங்க” என்றாள் பற்களைக் கடித்து அடிக்குரலில்.  ஏதோ விளையாடுகிறான் என நினைத்து அசட்டையாக இருந்தவளுக்கு அவனது சீரியஸான பேச்சும் முகமும் படபடப்பையும் பயத்தையும் அதிகரித்தது.

கல்யாணம் எல்லாம் பெரியவங்க பார்த்து முடிவு பண்ணுவது என்ற முடிவில் இருப்பவளுக்கு இவனது தீவிரம் பதற்றத்தையும், படபடப்பையும் கூட்டி பீதியை கொடுத்தது.

கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள் அவனிடம், “ப்ளீஸ்… விடுங்க” என.

அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவன் முடியாது என தலையசைத்தான்.  “எனக்கு பதில் சொல்லிட்டுப் போ.  எவ்வளவு நாள் உன் பின்னாடி அலைஞ்சிட்டிருக்கேன்.  உனக்கு என்னைப் புரியலையா..? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா…” என்றான் கண்களில் கோவத்தைக் காட்டி.

கனிமொழிக்கு ஏதோ அவன் மீது எண்ணம் இருக்கப்போய் தானே இவனது சேட்டைகளை கண்டும் காணாமல் இருக்கிறாள்.  அப்படியில்லை என்றால் அவளாவது இவனது சேட்டைகளை அனுமதிப்பதாவது.

விருப்பமில்லையென்றால் அவளது உடல்மொழியும் பதிலும் வேறுமாதிரியிருக்கும்.  அவளைப் பொறுத்தவரை பெரியிவர்களின் விருப்பமில்லாமல் எதையும் நினைக்கவோ, பதில் மொழி தரவோ விருப்பமில்லை.

வீணாக மனதில் ஆசையை வளர்க்க பயமாக இருந்தது.  அரவிந்தனுக்கு உண்மையிலேயே விருப்பம் இருந்தால் பெரியவர்களிடம் பேசட்டும் என எண்ணிக்கொண்டாள்.  ஆனால் அதை அவனிடம் வெளியே சொல்லவும் அவளுக்கு தயக்கம் இருந்தது.  அதுதான் சாக்கென்று பெற்றவர்களிடம் இப்போதே போய் நின்றுவிட்டால் என்ன செய்வது என எண்ணம் போல அவளுக்கு.

அவனது கேளவிகளுக்கு பதில் சொல்ல முடியாமல்  முழித்துக் கொண்டு நின்றிருந்தாள், அவனைக் கெஞ்சலாகப் பார்த்துக் கொண்டே.

“இப்படி பார்க்காதடி.  இந்த மாதிரி அந்த முட்டை கண்ணால முழிச்சு முழிச்சு பார்த்துதான் உன்கிட்ட கவுந்து நிக்கறேன்” என்றவனுக்கு எரிச்சலாக வந்தது.

இவள் பார்க்க மட்டும் செய்வாளாம்.  ஆனால் கேட்டா பதில் சொல்ல மாட்டாளாம்.  கடிச்சா தின்னப் போறேன்?  கையைப் பிடிச்சா முறைக்கிறா…? கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டா பதில் சொல்ல மாட்டேன்றா என கோவமாக வந்தது அவளது செய்கையில்.

அவனது கையிலிருந்து அவளது கையை உருவ முயன்றாள்.  அவளது முயற்சி புரிந்து பிடியை இன்னும் இறுக்கினான்.  அவனது பிடியின் இறுக்கத்தில் கை வலிக்க ஆரம்பித்தது அவளுக்கு.

“என்ன பண்றீங்க?  கை வலிக்குது.  விடுங்க…”

“ம்ப்ச் இப்ப என்ன பண்றாங்க உன்னை?  இப்படி கட்டிப் பிடிச்சனா?  இல்ல இப்படி கிஸ் பண்ணனா?  இல்ல இப்படி கன்னத்தோட கன்னம் வைச்சனா?  என ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே செய்து முடித்திருந்தான்.

அவனது செயலில் மூச்சுவிட மறந்து, கண்களை விரித்து, அதிர்ந்து நடுநடுங்கி நின்றுவிட்டாள் கனிமொழி.  பட்டென இப்படி பண்ணினேனா பண்ணினேனா என கேட்டுக்கொண்டே அத்தனையும் பண்ணியே விட்டவனின் செயலில் விக்கித்து நின்றவளுக்கு கண்கள் கலங்கியிருந்தது.

அவனுக்கே அவனது செயலில் பிடித்தமில்லை.  கூடவே அவளது கண்களில் கண்ணீரையும், உடலின் நடுக்கத்தையும் பார்த்தவனுக்கு தன் மீதே கோவம் வந்தது.

“ம்ப்ச்…” சலிப்புடன் என அவளைப் பிடித்திருந்த கைகளை வேகமாக உதறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

அவன் அப்படி சலிப்பாக விலகி சென்றதுகூட அவளுக்கு அழுகையை கொடுத்தது.

அவனது முகம் கசங்கி கோவமாக சென்றதில் இவளுக்குதான் பரிதவித்தது நெஞ்சு.  அவளுக்கே அவளை பரிந்துகொள்ள விசித்திரமாக இருந்தது.

தான் என்ன எதிர்பார்க்கிறோம் அவனிடம் என குழம்பினாள்.  அவனது கோவமும் வருத்தமும் அவளையும் துயரப்பட வைத்தது.

கனிமொழியின் விருப்பத்தை தெரிந்து கொள்ள வந்தவன் அவளது செய்கையில் எரிச்சலாகி கோவப்பட்டுதான் அவளைக் கட்டி அனணத்ததும், கன்னத்தில் முத்தமிட்டதும்.  அது எல்லாம் எதிர்பாராமல் நடந்திருந்தது.

அவளது கையை அவனிடமிருந்து உருவ முயன்று கொண்டேயிருந்ததால், இப்ப என்ன பண்ணிட்டேன் இவளை இவள் வெளிய போயிடப் போறான்னு தான கையைப் பிடிச்சேன்.  அதுக்கு இவ்வளவு சீன் போடுவாளா என ஆத்திரம் வந்து அவன் கண்ணை மறைத்ததில் க்ஷண நேரத்தில் எதுவும் அவன் உணராமலே எல்லாம் நடந்திருந்தது.

உண்மையிலேயே அவனுக்கு கனியின் மீது கோவம்தான்.  தன்னை தெரிந்தும், அவள் தனக்கான பதிலை சொல்லாமல் அலைக்கழித்தது கோவத்தைக் கொடுத்திருந்தது.  அதன் விளைவால் தான் அவளை ஒரு கையால் அணைவாகப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டிருந்தான்.  அவன் செய்ததற்கு பிறகு தான் அதனை உணர்ந்து அவளை நிமிர்ந்து பார்த்தான்.  அவளது நடுக்கத்தையும், கண்ணீரையும் பார்த்தவனுக்கு, “ச்ச… இதுக்காடா அவள் பின்னாடி சுத்துன.  சின்ன பொண்ணு, சின்ன பொண்ணுன்னுட்டு நீயே என்னடா பண்ணி வச்சிருக்கே என தன்னையே கடிந்து கொண்டான்.

அறைக்கு வந்தும் மனம் ஒரு நிலையில் இல்லை.  அவளுக்கும் சமாதானம் சொல்ல முடியாமல், இவனும் சமாதானம் ஆகாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

அறையிலேயே குறுக்கும் நெடுக்கும் நடந்து ஆழ மூச்செடுத்து தணிய முற்பட்டான்.  இதில் உணர்ந்தும் உணராத பெண்ணின் முதல் ஸ்பரிசம் வேறு அவனை நிலை கொள்ளவிடவில்லை.

பெண்மையின் சுவாசமும், பஞ்சு பொதி போன்ற அவள் கன்னத்தில் ஒற்றி எடுத்தபோது தனது உதடுகளில் உணர்ந்த மென்மையும் அவளை மேலும் தீண்ட சொல்லி ஏக்கத்தை கூட்டியது.

எப்படி எல்லாம் அவள்கிட்ட லவ் சொல்லனும்னு பிளான் பண்ணி ஆசைப்பட்டேன்.  கடைசியில இப்படி பீல் கூட பண்ண முடியாத மாதிரி சொதப்பிட்டேனே ச்ச… என தன்னையே கடிந்து கொண்டவனுக்கும் நடந்ததை நினைத்து நினைத்து இலேசாக வெட்கமும் எட்டிப் பார்த்தது.  அதில் முகம்கூட சற்று கனியத் தொடங்கியது.

இருந்தாலும் அவனது மனமோ போடி உன் பின்னாடி அலையறதால தான என்னை மதிக்க மாட்டேன்ற?  இனி உன் பின்னாடி வந்தனா பாருடி என முறுக்கிக் கொள்ளவும் செய்தது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!