கைதி-10(1)
மிருணாவின் சத்தம் கேட்டதும், விக்ரம் போனை கட் பண்ணிவிட்டு, வேகமாக அவள் அறைக்கு சென்று லைட்டை போட்டான். “வேணாம் வேணாம் என்னைய விடு, நான் உன்கூட வர மாட்டேன் விடு”, என்று தூக்கத்திலேயே கத்திக்கொண்டு இருந்தாள்.
விக்ரம் வேகமாக பக்கத்தில் வந்து கன்னத்தை தட்டி, “மிரு என்னாச்சுடா? முழிச்சு பாரு”, என்று பதறினான்.
“வேணாம் விடு, நான் உன்கூட வர மாட்டேன்”, என்று கதறினாள்.
“மிரு முழிச்சு பாருடா”, என்று பெட்டில் உட்கார்ந்து, அவளை ஒரு கையால் அணைத்துக் கொண்டே, கண்ணீரை துடைத்து கன்னத்தை தட்டினாள்.
“என்னைய காப்பாத்துங்க. நான் இவன் கூட போக மாட்டேன், என்னைய விடு”, என்று உடல் நடுங்க அவன் மார்பில் புதைந்து, இருக்கமாக அணைத்துக் கொண்டாள்.
மொத்த குடும்பமும் இவள் சத்தத்தில் பதறி ஓடி வந்தனர். “மிரு”, என்று விலகி அவளை குலுக்கினான். மிருணா அவனை முழித்து பார்த்துவிட்டு, அவன் மார்பில் புதைந்து கொண்டாள். “மிரு என்னடா? இங்க பாரு தண்ணி குடி, ஸ்ரீ தண்ணிய எடு”, என்றான். ஸ்ரீ தண்ணீரை டம்ளரில் ஊற்றி கொடுத்தாள். விக்ரம் மிருணாவை விலகி தண்ணீரை குடிக்க வைத்தான், அவள் கொஞ்சம் குடித்து விட்டு மீண்டும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவள் உடலில் நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது. விக்ரம் அவளை ஒர் கையால் அணைத்து, அவள் தலை முடியை கோதினான்.
“என்னாச்சு விக்கி?” ,என்றார் சக்கரவர்த்தி.
“அப்பா அவ பயந்துட்டா, அதான் இப்படி கத்துற”.
“இவள வெளியில அனுப்பாமலே இருந்திருக்கலாம் போல, பாரு இப்படி பயப்படுறா?”, என்றார் மீனாட்சி வருத்தமாக.
“ஆமாக்கா”, என்றார் வாணி.
“விக்கி நான் மிருணாவ பார்த்துக்குறேன், நீ போ”, என்று பக்கத்தில் வந்தான் அமர்.
“இல்ல வேணா நானே பார்த்துக்குறேன், எல்லாரும் போய் படுங்க”, என்று சாய்ந்து உட்கார்ந்தபடி அணைத்துக் கொண்டான்.
“சரி வாங்க! நாம போலாம். அவனே பார்த்துப்பான்”, என்று சோமு பெரியவர்களை அழைத்து சென்றார்.
“விக்ரம், நானே அவள பார்த்துக்குறேன். நீங்க எல்லாரும் போய் படுங்க”, என்றான் அழுத்தமாக.
“அமர், அவன் தான் பார்த்துக்குறேன்னு சொல்றான்ல, நீயே டிராவல் பண்ணி மார்னிங் தான் வந்த, போய் நல்லா ரெஸ்ட் எடு”, என்றான் ராகவ்.
“இல்ல ராக்கி நான் பார்த்துக்குறேன்”, என்றான் விக்ரமை அழுத்தமாக பார்த்துக் கொண்டே.
“நான் தான் அவள பார்த்துக்குறேன்னு சொல்றேன்ல? அப்புறம் என்ன அமர்?”, என்று லேசான கோபத்தில் கத்தினான்.
இவன் கத்தலில் மிருணாவின் உடல் பயத்தில் தூக்கிப்போட்டது. “ஒன்னுமில்ல டா! ஒன்னுமில்ல!”, என்று இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
“விக்கி, நான் பாத்துக்குறேன், உனக்கு எதுக்கு சிரமம்? ஹனி உன் அண்ணா கிட்ட சொல்லு”.
விக்ரம், ராகவ் மற்றும் ஸ்ரீயை முறைத்தான். “நீங்க ரெஸ்ட் எடுங்க அமர், அண்ணா பார்த்துக்கட்டும். உங்க பார்த்தாவே தெரியுது ரொம்ப டயர்டா இருக்கீங்கன்னு”, என்றாள் தயங்கியபடி.
“ஹனி, மிருணா எழுந்து இவனப் பார்த்தா, ரொம்ப டென்ஷன் ஆயிடுவ, இப்ப அவ பயத்துல இருக்கா. அதனால்தான் அவன பிடிச்சிருக்கா, இல்லனா நடக்குறதே வேற”, என்றான் லேசான கோபத்துடன்.
“அமர், விக்கி அத பார்த்துக்குவான்”.
“அமர், உன் தங்கச்சிய நான் ஒன்னும் பண்ண மாட்டேன், நீ போய் படு”.
அமர் கோவமாக அவன் அறைக்குச் சென்றான். “போறப்ப லைட்ட ஆப் பண்ணிட்டு, கதவை மூடிட்டு போங்க”, என்றான். ஸ்ரீ எதுவும் பேசாமல் அவள் அறைக்கு சென்றாள்.
“விக்கி, ஹாப்பி பஸ்ட் நைட் டா”, என்றான் கிண்டலாக.
“டேய்! நாயே கிளம்பு டா முதல்ல, வந்துட்டான் வாழ்த்து சொல்ல”, என்றான் கோவமாக. ராகவ் வேகமாக லைட்டை அணைத்து கதவை மூடிவிட்டு சென்றான். மிருணா பயத்தில் நடுங்கினாள்.
“மிருக்குட்டி, உனக்கு என்னாச்சுடி? பத்து ரவுடிங்க வந்ததுக்கு இப்படி பயப்படுற”, என்றான் இரவு லைட்டின் வெளிச்சத்தில், அவள் முகத்தில் இருந்த முடிகளை கோதிக் கொண்டே அவளைப் பார்த்து. மிருணா நன்றாக அவன் மார்பில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள். அவள் நெற்றியில் லேசாக இதழ் ஒற்றி விட்டு அவளை படுக்க வைத்தான்.
“ஏய்! குட்டிமா, ஏற்கனவே உன் அண்ணன் என் மேல செம காண்டுல இருக்கான். நீ இப்படி என் சட்டைய பிடிச்சிருந்தா அவன் என்னடி நினைப்பான், நான் எப்படி படுக்குறது?”, என்றான் கொஞ்சலாக அவள் கன்னத்தை தட்டிக்கொண்டே.
‘ம்ம்…. தூக்கம் வேற வருது, சரி நம்மளும் இங்கேயே படுத்துப்போம்’, என நினைத்துக் கொண்டே அவள் பக்கத்தில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான்.
பனி தூரலால் தொட்டாசினிங்கி தன் சிறகை மூடியது. சூரியன் தன் வரவை கொண்டு, அதன் சிறகை விரிக்க வைத்தது. மறுநாள் காலையில் மிருணாவுக்கு முழிப்பு வந்ததும், ‘என்ன தலைகாணி இப்படி இருக்கு?’, என்று நினைத்துக் கொண்டே அவன் மார்பில் இருந்து எழுந்தாள்.
விக்ரம் நன்றாக தூங்கிக் கொண்டே இருந்தான். “டேய்! என் ரூமுல நீ என்ன பண்ற?”, என்றாள் கோபமாக.
விக்ரம் நல்ல தூக்கத்தில் இருந்ததால், இவள் பேசியது கேட்கவில்லை. மிருணா அவன் கையை தட்டி, “எரும இங்க என்ன பண்ற? அறிவு இருக்கா? ஒரு பொண்ணு இருக்குற ரூம்ல இப்படி நீ இருக்குறத யாராச்சும் பார்த்தா என்ன நினைப்பாங்க டா? எந்திரிடா லூசு”, என்று தட்டிக் கொண்டே இருந்தாள். அவனிடம் எந்த அசைவும் தெரியவில்லை. மிருணா அவன் காதின் பக்கத்தில் குனிந்து, “டேய்! லூசு எழுந்திரி டா”, என்று கத்தினாள்.
விக்ரம் வேகமாக அவள் வாயை பொத்தி, அவளை அப்படியே படுக்க வைத்து அவள் பக்கம் திரும்பி நெருங்கினான். மிருணாவின் முகத்தில் வேர்வை துளிகள் பூத்தது. விக்ரம் வாயில் இருந்து கையை எடுத்துவிட்டு, “எதுக்கு டி காலையில்லயே கத்திட்டு இருக்க?”, என்றான் அவள் கண்களைப் பார்த்து.
“நீ என் ரூம்ல எ…ன்…ன ப…ண்…ண…ற?”, என்று வார்த்தைகள் தந்தி அடித்தது.
“நைட்டு நமக்கு ஃபர்ஸ்ட்நைட் முடிஞ்சதுல்ல. அந்த களைப்புல அப்படியே தூங்கிட்டேன் டி”, என்றான் குறும்பாக விலகி உட்கார்ந்து.
“என்னது?”, என்று வேகமாக எழுந்து உட்கார்ந்தாள்.
“நமக்குள்ள என்ன நடந்துச்சுன்னு உனக்கு ஞாபகம் இல்லையா?”, என்றான் குறும்பாக.
“இல்ல நீ பொய் சொல்ற”, என்றாள் வேகமாக.
“இந்த விஷயத்துல யாராச்சும் பொய் சொல்லுவாங்களா குட்டிமா?”, என்றான் அவள் கன்னத்தை தட்டி.
“முதல்ல கைய எடு, என்னைய தொடாத”, என்று தட்டிவிட்டாள்.
“இப்ப இப்படி சொல்ற, நைட்டு என்னைய கட்டி பிடிச்சுக்கிட்டு கொஞ்சமாச்சும் விலகவிட்டியா? யப்பா… ஒரே டயர்டா இருக்கு. மாமாவுக்கு காபி போட்டு நம்ம ரூமுக்கு கொண்டு வா டி செல்ல குட்டி”, என்று பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு சென்றான்.
மிருணா அதிர்ச்சியுடன் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அமர் மற்றும் ஸ்ரீ உள்ளே வந்து பார்த்தனர். மிருணா அப்படியே உட்கார்ந்து இருப்பதை பார்த்ததும், “மிருணா”, என்று இருவரும் குலுக்கினர்.
அதில் சுய நினைவுக்கு வந்தவள், இருவரையும் பார்த்து முழித்தாள். “என்னாச்சு பாப்பா? ஏன் இப்படி உக்காந்து இருக்க? நைட் வந்த கனவு மாதிரி காலையிலேயும் வந்துச்சா?”, என்றான் பதறியபடி.
“கனவா?”, என்றாள் குழப்பமாக.
“ஆமாம் மிருணு, நீ நைட்டு பயத்துல கத்துன, நாங்க வந்து பார்த்தாப்ப நீ விக்கி அண்ணாவ கட்டி பிடிச்சுகிட்டு இருந்தா, அவங்கள நீ விலகவே விடல, அண்ணா தான் உன் கூட இருந்து பார்த்துக்கிட்டாங்க”, என்றாள் ஸ்ரீ வேகமாக.
“அது இப்ப ரொம்ப முக்கியமா ஹனி? மிருணா நீ போய் குளிச்சுட்டு கீழ வா சாப்பிடலாம், நைட் நடந்ததெல்லாம் நினைச்சு நீ பெருசா எடுத்துக்காத. அதெல்லாம் நாங்க தப்பா நினைக்கல, கீழே வெயிட் பண்றேன் நீ வா டா பாப்பா”, என்று ஸ்ரீயை இழுத்து சென்றான்.
‘அப்ப நான் பயந்துல தான் அவன பிடிச்சிருக்கேன். என் கிட்ட என்னமா புருடா விட்டுட்டு போறான், இருடா உனக்கு இருக்கு’, என்று மனதிலே திட்டிக்கொண்டே பாத்ரூமிற்கு சென்றாள்.
“ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க அமர்? நைட்ல இருந்து நீங்க சரியில்ல”, என்றாள் ஸ்ரீ புரியாமல்.
“உன் அண்ணேன் கூட தான் சரி இல்ல. அதுக்கு நான் ஏதாச்சும் சொன்னேனா? அவங்க ரெண்டு பேரும் எங்க?”, என்றான் எரிச்சலுடன்.
“தோட்டத்துல எக்ஸர்சைஸ் பண்ணிட்டு இருக்காங்க”, என்றாள் தயங்கியபடி.
“சரி”, என்று தோட்டத்திற்கு சென்றான். அங்கு விக்ரம் மற்றும் ராகவ் எக்ஸர்சைஸ் செய்து கொண்டு இருந்தனர். ஜாக்கி இவர்கள் செய்வதை பார்த்து, அந்த பக்கம் இந்த பக்கம் ஓடிக் கொண்டே இருந்தது.
“ஹாய்! அமர், எங்க கூட எக்சர்சைஸ் பண்ணு வா”, என்றான் ராகவ்.
“நான் கொஞ்சம் பேசணும்”, என்றான் எங்கேயோ பார்த்தபடி.
“அங்க யார் நிக்கிற நீ பேச?”, என்று கிண்டலாக சொல்லிவிட்டு விக்கியிடம் ஹை-ஃபை அடித்தான்.
“விளையாட்டு போதும் ராக்கி. நான் விக்கி கிட்ட பேசணும்”, என்றான் முறைப்புடன். ஸ்ரீ காபி எடுத்து வருவது தெரிந்தது.
“சரி வா உட்கார்ந்து பேசலாம்”, என்று அங்கு போடப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்தான் விக்ரம். மற்ற இருவரும் அவனுடன் உட்கார்ந்தனர். ஸ்ரீ காபியைக் கொடுத்தாள் மூவரும் வாங்கி கொண்டனர்.
“ஸ்ரீ, நீ போ”, என்றான் விக்ரம்.
“நான் இருக்கேன் அண்ணா”, என்றாள் தயங்கியபடி.
“ஸ்ரீ, மிரு எழுந்திருப்பா, அவள போய் பாரு”, என்று அனுப்பிவிட்டு, “சொல்லு அமர்”, என்றான் காபி குடித்துக் கொண்டே.
“விக்கி, மிருணா நீ நினைக்கிற மாதிரி கிடையாது, நீ அவகிட்ட உரிமை எடுத்துக்குற மாதிரி எனக்கு தோணுது”, என்றான் முறைப்புடன்.
“நான் என்ன நினைக்கிறேன் அவள பத்தி?”, என்றான் கூர்மையான பார்வையுடன்.
“அது… மிருணா சாதாரணமா எல்லா பொண்ணுங்க மாதிரி இல்ல, ஒரு விஷயத்துக்கு ஆயிரம் தடவ யோசிப்பா”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே இடையிலே,
“சிவா கிட்ட மண்டபத்துல சண்டை போட்டாலே, அது மாதிரி யோசிச்சு பண்ணுவாளோ?, என்றான் நக்கலாக.
“அமர், நீ ஏன் இப்படி பேசுற?”, என்றான் ராகவ்.
“வேற எப்படி பேச சொல்ற ராக்கி? விக்கி மிருணா கிட்ட ஓவரா உரிமையை எடுத்துக்கிறான், இதெல்லாம் சரி இல்ல”, என்றான் கோபமாக.
“எது சரி இல்ல சொல்லு அமர்??”, என்றான் நிதானமாக அவன் கண்களை கூர்மையாக பார்த்துக் கொண்டே.
“மிருணாவ நைட்டு கட்டிப் பிடிச்சுக்கிட்டு இருந்தது, முட்டு சந்துல அவ கூட விளையாண்டது, கட்டிப் பிடிச்சது இது எல்லாமே தான் நான் சொல்றேன், என் தங்கச்சிக்கு மாப்பிள்ளைய நானே தேடிகிறேன்”, என்றான் அழுத்தமாக.
விக்ரம் உட்கார்ந்திருந்த நாற்காலியை கோபமாக எழுந்து, பின்னால் தள்ளிவிட்டான். இரு ஆண்களும் எழுந்தனர். “என்னைய பார்த்தா ப்ளேபாய் மாதிரி தெரியுதா? இல்ல இவன பார்த்தா தான் அப்படி இருக்கா? ஓ.. நாங்க ரெண்டு பேரும் பேசுறதப் பார்த்து ப்ளேபாய்ன்னு நினைச்சுட்டியா? நாங்க கலயிச்சு பேசுவோமே தவிர யார் மனசையும் புண் படுத்த மாட்டோம், ராகவ் இன்ன வரைக்கும் யார்கிட்டயும் ப்ரொபோஸ் பண்ணுனது இல்ல, ஃபர்ஸ்ட் டைம் அனு கிட்ட தான் சொன்னான், எல்லார் கூடவும் பேசுறனால ப்ளேபாய் ஆகிடமாட்டோம்”, என்றான் அழுத்தமாக.
“இங்க பாரு அமர், மிருணா கிட்ட வம்பு பண்ண பிடிக்கும் தான் ஒத்துக்குறேன், அதுக்காக நாங்க ரூட் விடுறோம்னு நினைச்சுறாத”, என்றான் ராகவ்.
“டேய்! நாங்க இல்ல டா நான்னு சொல்லு “, என்றான் விக்ரம் கிண்டலாக.
“அப்ப எதுக்கு மிருணாவ கட்டி பிடிச்ச?”, என்றான் வேகமாக.
“இவர் மட்டும் நம்ம தங்கச்சிய கட்டிக் பிடிப்பாரு, ஆனா நாம அத எதுவும் சொல்லக் கூடாது, இவர் தங்கச்சிய பிடிச்ச மட்டும் இவர் கேட்பாரு”, என்றான் நக்கலாக.
“ராக்கி, அது வேற இது வேற. ஹனிக்கும் எனக்கும் கல்யாணம் பண்ண வீட்ல முடிவு பண்ணிட்டாங்க, நாங்க லவ்வர்ஸ். விக்கியும் மிருணாவும் அப்படி இல்ல”, என்றான் கோவமாக.
“யாரு சொன்னா நாங்க லவ்வர்ஸ் இல்லன்னு? மிருவ நான் லவ் பண்ணுறேன்”, என்றான் கோவமாக.
“என்ன?”, என்றான் அதிர்ச்சியுடன்.
“மிருணாவும் இவனும் லவ் பண்ணுனாங்க. சமீபத்துல ஒரு ஆக்சிடென்ட் ஆச்சுல்ல, அதுல அவ இவன் கூட பழகினத மறந்துட்டா”, என்றான் ராகவ் வேகமாக.
“என்ன டா என்னென்னமோ சொல்ற? உன்ன லவ் பண்ணி இருந்தா, அவ என்கிட்ட சொல்லாம இருக்க மாட்டாளே?”, என்றான் சந்தேகமாக விக்ரமை பார்த்து.
“அவ டூருக்கு போனப்ப தான், நாங்க மீட் பண்ணுனோம். டூர் முடிஞ்சு போறப்ப தான் அவளுக்கு ஆக்சிடென்ட் ஆச்சு”, என்றான் விக்ரம் பொறுமையாக.
“என்னால இன்னமும் நம்ப முடியல”, என்றான் குழப்பமாக.
“மிருணாக்கு பிராப்ளம் வந்ததும், நான் எப்படி அங்க கரெக்டா வந்தேன்? உங்க எல்லாரோட மூலமா அவள நான் காப்பாத்துனனே, அது எப்படின்னு நீ யோசிச்சியா?”, என்றான் கேள்வியாக.
“அவ என் தங்கச்சின்னு, நீ ஹெல்ப் பண்ணுனன்னு நினைச்சேன்”.
“உன் தங்கச்சிக்கு நான் ஹெல்ப் பண்ணுவேன், கரெக்ட் தான். ஆனா நடு ராத்திரி கூர்க்கா மாதிரி இவனையும் இழுத்துக்கிட்டு, அவளுக்காக வெயிட் பண்ணி ட்ரெயின் எத்திட்டு இருக்க மாட்டேன், அத வேற ஆள வச்சு கூட நான் பண்ணலாமே?”, என்று புருவம் உயர்த்தினான்.
“அப்ப நீ சொல்ற எல்லாம் உண்மையா?”.
“ம்ம்….”, என்று தலையை ஆட்டினான்.
“அப்ப நீ அனு கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனது?”, என்றான் ராகவை பார்த்து.
“டேய்! என் அண்ணனுக்கும் உனக்கு மட்டும் தான் லவ் வருமா? எனக்கும் வரும்டா, ஒரு பொண்ணுகிட்ட ஐ லவ் யூன்னு சொல்லி விளையாடுற அளவுக்கு நான் கீழ்தனமான ஆள் இல்லை”, என்றான் கோபமாக.
“ரிலாக்ஸ்டா தெரியாம கேட்டுட்டேன், ரெண்டு பேரும் எப்போதுமே சேட்ட பண்ணிக்கிட்டே இருக்கீங்களே, அதான் அப்படி நினைச்சுட்டேன் சாரி”, என்றான் வருத்தமாக இருவரையும் பார்த்து.
“இட்ஸ் ஓகே டா “, என்றனர் சிரிப்புடன்.
“அப்ப ரெண்டு பேரும் என் ரெண்டு தங்கச்சிய லவ் பண்ணி கவுக்க பிளான் போட்டுட்டீங்க அப்படி தானே?”, என்றான் கிண்டலாக.
“கண்டிப்பா”, என்றனர் இருவரும் ஹி-ஃபை அடித்துக் கொண்டே.
மிருணாவும் ஸ்ரீயும் கேட்டின் பக்கம் வேகமாக போனார்கள். மூன்று பேரும் இருவரையும் பார்த்து வேகமாக இடையில் வந்து நின்றனர். இருவரும் முறைத்தனர். “எதுக்கு இப்படி குறுக்க வந்து நிக்கிறீங்க?”, என்றாள் ஸ்ரீ வேகமாக.
தொடர்ச்சி அடுத்த லிங்கில்…………