அனைத்தையும் முடித்து வீடு வர காலை ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. சக்தியையும் கட்டாயப்படுத்தி அவன் வீட்டிற்கே அழைத்து வந்திருந்தான். அவளை அந்த நிலையில் தனியாக விடவும் வருணுக்கு மனமில்லை.வந்த வேலையை முடித்து விட்டு…திரும்பி செல்லும் போது, அவனுடனேயே கூட்டிச் சென்று திண்டுக்கல்லில் விட்டுவிடுவது என்பது அவனின் எண்ணம்.ஆனால் சக்திக்குத் தான் அதில் உடன்பாடு இல்லை. முடியாது என்று சொல்லவும் முடியாமல், வேறு வழியில்லாமல், வருணின் பேச்சிற்கு தலையை ஆட்ட வேண்டியிருந்தது அவளுக்கு.
அழகான அந்த வீட்டின் முன்பு கார் நிற்கும் வரை, சக்தி அவளது புத்தியில் இல்லை. அவள் மனதிற்குள் ஓடும் விஷயங்களை வெளியே சொல்ல முடியாத நிலையில் இருந்தாள் சக்தி.
“இது தான் எங்க வீடு..!” என்றான் வருண்.
அவன் கார் சத்தம் கேட்டு, அவனின் அம்மா நித்யா உள்ளிருந்து வேகமாய் வர, அவனுடன் இறங்கிய சக்தியைக் கண்டு, ஒன்றும் புரியாமல் குழம்பித் தவித்தார். மகன் திடீரென்று ஒரு பெண்ணுடன் வந்து நின்றால், சாதாரணமாக எல்லா அம்மாக்களும் என்ன நினைப்பார்களோ…அதையேதான் நித்யாவும் நினைத்தார்.ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“வா கிருஷ்ணா..!” என்றார் நித்யா.
“அம்மா..! வருண் கிருஷ்ணா..!” என்றான் சிரித்தபடி.
“எனக்கு கிருஷ்ணா தான்..!” என்றவர் சக்தியை யோசனையுடன் பார்க்க, அவரின் பார்வையைக் கண்டவன்,
“தெரிஞ்ச பொண்ணும்மா…ஒரு இக்கட்டான சூழ்நிலை. அதான் கூடவே கூட்டிட்டு வந்துட்டேன்..! உள்ள கூட்டிட்டு போங்க..!” என்றான்.
“கிருஷ்ணா..! அது வந்து…!” என்று கைகளைப் பிசைந்தார் நித்யா.அவர் யோசிப்பதை கண்டு மனதிற்குள் அடி வாங்கினாள் சக்தி.
“இப்படி வந்து நிக்கணும்ன்னு உனக்குத் தலை எழுத்தா சக்தி..!” என்று மறுகிக் கொண்டிருந்தாள்.
“ஏன்ம்மா என்னாச்சு..?” என்றான் கூறிய பார்வையுடன்.
“இல்லை..! உள்ள உங்கத்தை…அப்பறம் எல்லாரும் வந்துட்டாங்க..!” என்றார் நித்யா.
“சோ வாட்..! அதுக்கும், இந்த பொண்ணை உள்ள கூட்டிட்டு போறதுக்கும் என்ன சம்பந்தம்..?” என்றான் சற்று கோபம் கலந்த குரலில்.
“டேய் மெதுவா பேசுடா..? உங்கத்தை மோகனாவைப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே..? ஏற்கனவே நம்ம மேல கோபத்துல இருக்கா. இப்பன்னு பார்த்து எந்த விஷயம் கிடைச்சாலும், அவ வாய்க்கு கிடைச்ச அவுல் தான்..!” என்றார் நித்யா.
“அதெல்லாம் பார்த்துக்கலாம்ம்மா..!” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, சத்யமூர்த்தி வெளியே வந்தார்.
“இன்னும் என்ன பண்றிங்க நித்யா வெளியே..?” என்றபடி அவர் வர, அவரைக் கண்ட சக்திக்கு சகட்டுக்கும் நடுங்கியது. அவரின் மீசை அப்படி.
“என்ன வருண்..? உன்னைத் தனியா கார்ல வர வேண்டாம்ன்னு சொன்னேன். ஆனா கேட்காம கிளம்பிட்ட சரி. அதுவும் நேரத்துக்கு வந்திருக்கணும். எதுக்கு இவ்வளவு நேரம்..?” என்று ஆரம்பித்தவர், சக்தியைப் பார்த்துவிட்டு,
“யாருடா இந்த பொண்ணு..!” என்றார்.
ஏனோ நித்யாவிடம் பேசியதைப் போல் சத்தியமூர்த்தியிடம் பேச முடியவில்லை அவனுக்கு. அவரின் கண்களைப் பார்த்தாலே உள்ளதைச் சொல்லி விடுவான்.வருண் நடந்ததை எடுத்துச் சொல்ல,
“இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிறவன்…! இது உன்னோட கடமை…!” என்றவர்,
“இங்க பாருமா..! உன்னோட இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும் என் பையன் இதைத்தான் பண்ணியிருப்பான்..! உன்னைத் திருப்பி..உன்னோட இடத்துல பத்திரமா விட்டுடுவான்..! வாங்க உள்ள..!” என்றார்.
“மீசையைப் பார்த்து பயந்தது எவ்வளவு தப்பு. பார்வைக்கு கரடுமுரடா இருக்கவங்க எல்லாம்…கடுமையானவங்க இல்லை…” என்பதை சத்யமூர்த்தியிடம் உணர்ந்து கொண்டாள் சக்தி.
“தேங்க்ஸ் அங்கிள்..!” என்று சொல்ல, நித்யா அவளை யோசனையுடன் பார்த்தார்.
ஒருவழியாக அனைவரும் உள்ளே செல்ல, ஹாலில் இருந்த அனைவரும் இவர்களையே பார்த்திருந்தனர். வருணின் அக்கா கௌசல்யா கிச்சனில் இருக்க, அவளின் கணவன் முரளி அங்கு அமர்ந்திருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“வா மாப்பிள்ளை..!” என்று முரளி அழைக்க, அவனை முறைத்தான் வருண்.
“என்ன வருணு…? இப்பத்தான் வர வழி தெரிஞ்சதா…? ஆமா இந்த பொண்ணு யாரு..?” என்றார் மோகனா. அவரின் முழுப் பெயர் மோகனாம்பாள்.
“தெரிஞ்ச பொண்ணுதான் அத்தை…!” என்பதோடு முடித்துக் கொண்டான். அங்கிருந்தவர்களுக்கு அந்த பதில் போதுமானதாக இல்லை போலும். மேலும் ஏதாவது சொல்..என்பதைப் போன்றே இருந்தது அவர்களின் பார்வை.அதிலும் சக்தியின் நலுங்கிய உடை, கலங்கிய தோற்றம் இப்படி எதுவும் அவர்களுக்கு சரியாகப் படவில்லை. அவளின் அழகும் கூட அவர்கள் பயத்திற்கு காரணம் என்றே சொல்லலாம்.
“என்ன தம்பி..! உங்களைப் பார்க்கத்தான் நாங்க இவ்வளவு தூரம் வந்திருக்கோம். பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் பொண்ணு வீட்டுக்கு வரணும். உங்களுக்கு நேரம் இல்லைன்னு சொன்னாதால தான் நாங்களே வந்தோம்..!” என்று அங்கிருந்தவர்களில் ஒருவர் சொல்ல,
“உங்க பொண்ணு சென்னைல வேலை பார்க்குறாங்க.அவங்க கோயம்புத்தூர் வந்துட்டு திரும்பி வரணும்.நாங்களும் வந்துட்டு வரணும். இவ்வளவு அலைச்சல் வேண்டாம்ன்னு தான் நீங்க வந்திருக்கிங்க..? இதுல எனக்காக மட்டும் பார்த்து வந்த மாதிரி பேசுறிங்க..?” என்றான் வருண் பட்டென்று.
“வருண் நீ கொஞ்சம் பேசாம இரு..!” என்று மோகனா சொல்ல,
“அம்மா..! நான் இன்னும் பல்லு கூட விலக்கலை.முதல்ல நான் பிரஷ் ஆகணும்..!” என்றவன்,சக்தியை பார்க்குமாறு நித்யாவிற்கு கண் ஜாடை காட்டி விட்டு சென்று விட்டான்.
நித்யா, கொஞ்சம் சங்கடத்துடன் சக்தியை உள்ளே அழைத்து சென்றார். சக்திக்கு முள்ளின் மேல் நிற்பதை போல் இருந்தது.
“என்ன இது தேவையில்லாத சங்கடம்..! இங்க வந்தது எவ்வளவு பெரிய தப்பு..!” என்று எண்ணிக் கொண்டே, நித்யாவின் பின்னால் சென்றாள்.
முரளிக்கு கொஞ்சம் ஆச்சர்யம்.வருண் ஒரு பெண்ணுடன் வந்து நிற்கும் போது அனைவரும் சந்தேகமாய் பார்க்க, முரளி மட்டுமே ஆச்சர்யமாய் பார்த்தான். அவன் அறிந்த வருண் இல்லையே அவன். அதற்காக வருணுக்கு பெண்களைக் கண்டால் பிடிக்காது, முசுடு என்றெல்லாம் இல்லை. அதே சமயம் வீட்டுப் பெண்களைத் தவிர வெளியில் உள்ளவர்களிடம் அவ்வளவு எளிதில் பழகிவிடமாட்டான்.
இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த முரளி, தன்னுடைய மனைவி கௌசல்யாவை மறந்தான். வருணின் மேல் இருக்கும் கோபத்தில் அவள் கிச்சனை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால் வெளியில் நடந்த சம்பாஷனைகளைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.
பையனுக்கு கொஞ்சம் முன்கோபம் வருமோ..?” என்றார் பெண்ணைப் பெற்றவர்.
“போலீஸ்காரனுக்கு கோபம் வரலைன்னா தான் ஆச்சர்யம்..!” என்றார் சத்யமூர்த்தி.
“என்னவோ அண்ணா..! எனக்கு சரியாப்படலை..” என்றார் மோகனா.
“கொஞ்ச நேரம் வாயை மூடு மோகனா..!” என்றார் சத்யா மூர்த்தி.
அதே நேரம் நித்யாவின் பின்னால் சென்ற சக்திக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரு தயக்கத்துடன் நித்யாவை அழைத்தால்.
“ஆன்ட்டி..!”
“சொல்லுமா..?”
“இல்லை..! கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காதிங்க..! இன்னைக்கு உங்க வீட்ல ஏதாவது விசேஷமா..?” என்றாள் தயங்கிய குரலில்.
“விஷேசம்ன்னு சொல்ல முடியாது.ஆனா விஷேசம் தான்..!” என்றார் கொஞ்சம் மலர்ந்த முகத்துடன்.
என்ன விஷேசம் என்று அவள் கேட்கத் தயங்க…
“இன்னைக்கு வருணை மாப்பிள்ளை பார்க்க வந்திருக்காங்க..!” என்றார் சிரிக்காமல்.
“மாப்பிள்ளை பார்க்கவா..?” என்றவளின் மனம் ஒருநிமிடம் அதிர,நொடியில் அதை மறைத்துக் கொண்டாள்.
“ஆமாம்ம்மா..!இவ்வளவு நாள் வேலை வேலைன்னே சுத்திட்டான். வயசும் முப்பது முடிஞ்சு போய்டுச்சு..! எப்படியோ இப்பதான் சம்மதம் வாங்கியிருக்கேன்..! இந்தப் பொண்ணையாவது ஓகே பண்ணனும்..!” என்றார் நித்யா.
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான ஆன்ட்டி பொண்ணைப் பார்க்கப் போகணும்..? ஆனா, இங்க..” என்று அவள் இழுக்க,
“உண்மைதான் சக்தி..! ஆனா வருணுக்கு இதில் எல்லாம் உடன்பாடு இல்லை. பொண்ணும் சென்னைல தான் வேலை பார்க்குறா…ஏன் எல்லாரும் அலையணும்…வேண்டாம்ன்னு சொல்லிட்டான்..! அதான் அவங்க வந்திருக்காங்க..!” என்றார்.
“பொண்ணைக் காணோம் ஆன்ட்டி..!” என்று அவள் கேட்க,
“சம்பந்தம் முடிவாகாம பொண்ணை அழைச்சுட்டு வர மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க..!” என்றார்.
கேட்ட அவளுக்குத்தான் சப்பென்று ஆகியது. ஆனால் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சின்ன வலி அவ்வளவே.
“சரிம்மா..! நீயும் கொஞ்சம் பிரஷ் ஆகிக்கோ..! பாத்ரூம் அங்க இருக்கு..!” என்று சொல்ல,
“ஓகே ஆன்ட்டி..! ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி..!” என்றாள்.
“இருக்கட்டும்மா..! ஆனா இப்படி இனி தனியா எங்கயும் போகக் கூடாது சரியா..?” என்றார்.
“நான் என்ன வேணுமின்னா வந்தேன்…!” என்று மனதில் நினைத்து, பெருமூச்சை விட்டவள், நித்யாவிற்கு தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
தன் அறைக்கு சென்ற வருணுக்கு, ஏனோ களைப்பெல்லாம் நீங்கி, ஒரு புத்துணர்வு வந்த மாதிரி உணர்ந்தான்.முடிக்க வேண்டிய வழக்குகள் ஆயிரம் இருந்தாலும், அனைத்தையும் தாண்டிய ஒரு நிம்மதி அவனின் மனதிற்குள்.
“நம்ம வீட்டுக்கு வந்தாலே…அது ஒரு பீலிங் தான்..!” என்று நினைக்க,
“நீ வந்ததா..இல்லை அந்த பொண்ணும் கூட வந்ததா..?” என்று மனசாட்சி கேள்வி கேட்க,
“இதென்ன சந்தேகம்…எனக்கு எப்பவும் இருக்கிற சந்தோசம் தான்..அவளைப் பார்த்ததால என்ன தனி சந்தோசம் வந்துடப் போகுது..!” என்று பதில் சொன்னவன், சீக்கிரம் ரெடியாகிக் கீழே வந்தான்.
வந்தவனின் பார்வை ஒரு நிமிடம், சக்தி போன அறைப்பக்கம் செல்ல, அவனையே கண்கொத்திப் பாம்பாய் பார்த்துக் கொண்டிருந்த மோகனாவிற்கு அது போதுமே.
“என்ன வருண்..! கண்ணு அந்த பக்கமே போகுது..!” என்றார் இடக்காய்.
“தப்பில்லையே அத்தை..! அந்த பொண்ணு என்னோட பொறுப்பில் இருக்கு. கண்காணிப்போட இருக்குறதுல தப்பொன்னும் இல்லையே..?” என்றான் பட்டென்று.
அவனின் பதிலில் கப்பென்று வாயை மூடிக் கொண்டார் மோகனா.அதைப் பார்த்த முரளிக்கு சிரிப்பாய் வந்தது.
“நேத்து இருந்து இந்த அம்மா என்னென்ன பேசிச்சு..! இப்பப் பாரு வருண்கிட்ட வாங்கிக்கட்டுறதை..!” என்று கௌசல்யாவிடம் சொல்லி சிரித்தான் முரளி. அவளோ மருந்துக்கும் சிரிப்பில்லாமல் இருந்தாள்.
வருண் அக்காவைப் பார்க்க… அவளோ, அவன் முகத்தைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
பிறகு அங்கிருந்தவர்களைப் பார்த்துத் திரும்பியவன்,
“உங்களை இவ்வளவு நேரம் காக்க வச்சதுக்கு சாரி. நான் வருண் கிருஷ்ணா ஐபிஎஸ். வேலைக்கு சேர்ந்து ஆறு வருஷம் ஆகுது.முப்பது வயசு முடுஞ்சு மூணு மாசம் ஆகுது. இது வரைக்கும் யாரையும் லவ் பண்ணலை.எப்பவாவது தண்ணி அடிப்பேன். டென்சன் அதிகமான எப்பவாவது சிகரெட் பிடிப்பேன்.வேற எந்த பழக்கமும் இல்லை.கொஞ்சம் கோபம் அதிகமா வரும்.ஏன்னா என்னோட வேலை அப்படி.என்கூட வாழனும்ன்னா நிறைய விட்டுக் குடுக்க வேண்டி இருக்கும்.பல எதிர்பார்ப்புகள் நிறைவேறாமலேயே போகலாம்.அடிக்கடி கல்யாணம், காதுகுத்துன்னு என்னால கூட்டிட்டு போக முடியாது. அதுக்காக போகாமவே இருக்க மாட்டேன்.கல்யாணத்துக்கு அப்பறம் உங்க பொண்ணுக்கு வேலைக்குப் போறதுல இஷ்ட்டம்ன்னா கண்டிப்பா போகலாம்.இது தான் நான்…இது தான் என் குடும்பம்..! உங்களுக்கு எப்படின்னு முடிவு பண்ணிக்கங்க..!” என்றான்.
அவன் பேசி முடிக்கும் வரை யாரும் பேசவேயில்லை.கௌசல்யா அவனை முறைத்துப் பார்க்க, அதையெல்லாம் அவன் சட்டை செய்யவே இல்லை.
“என்ன தம்பி..? அப்பா முன்னாடியே, தண்ணி அடிப்பேன்,தம் அடிப்பேன்னு சொல்றிங்க..?” என்றார் பெண்ணின் அப்பா.
“எங்கப்பாவுக்கும் தெரியும். நான் எதையும் எங்கப்பாவுக்குத் தெரியாம செஞ்சதில்லை. இனிமே செய்யவும் மாட்டேன்..!” என்றான் கொஞ்சம் நிமிர்ந்து.
சத்தியமூர்த்திக்கு பெருமையாய் இருந்தது வருணை நினைத்து. இப்போது என்றில்லை, அவன் சிறுவனாக இருந்த போதே அப்படித்தான்.எதையும் முகத்திற்கு நேராக பேசிவிடுவான். அவனுக்கு மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாது.அதே போல் கோபத்தையும் கொட்டி விடுவான். பிறகு அவனே தெளிந்தால் தான் உண்டு.
பெண்ணின் அப்பாவிற்கு வருணைப் பிடித்திருந்தது. ஆனால் அவரின் மனைவிக்கு கொஞ்சம் யோசனையாக இருக்க,
“நாங்க பொண்ணுகிட்ட பேசிட்டு சொல்றோம் தம்பி. அப்பா, அம்மாகிட்ட பொண்ணோட போட்டோ இருக்கு…ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு ஆகுறதைப் பார்ப்போம்..!” என்று அவர்கள் கிளம்ப, அதுவரை கோபத்தை இறுக்கிப் பிடித்து வைத்திருந்த கௌசல்யாவிற்கு அதற்கு மேலும் அப்படியே இருக்க முடியும் என்று தோணவில்லை.
“அப்பா..! என்னப்பா இதெல்லாம்..?” என்று பொங்கியே விட்டாள்.
“நான் என்னம்மா செய்ய..?” என்றார் சத்யமூர்த்தி.
“அப்பா..! அவன் ஒரு பெரிய ஆபீசர். அவன் ரேஞ்சுக்கு இப்படிப் போய் பொண்ணுப் பார்த்திருக்கிங்க..? அதுவும் அவங்க வந்து பார்த்துட்டு போறாங்க..?” என்று கத்த ஆரம்பித்தாள்.
“இதுல என்ன இருக்கு அக்கா..! மோகனா அத்தை எனக்காகப் பார்த்துப் பார்த்து தேடுன சம்பந்தம். நான் வேண்டாம்ன்னு சொன்னா அவங்க மனசு கஷ்ட்டப்படுமா இல்லையா..?” என்றான் நக்கலாய்.
“நீ பேசாதடா..!” என்று முறுக்கிக் கொண்டாள் கௌசல்யா.
“சரி நான் பேசலை..!” என்றவன் முதுகு சிரிப்பில் குலுங்க,
“அப்பா அவனை அமைதியா இருக்க சொல்லுங்க..! எனக்கு இருக்குற கோபத்துல ஏதாவது சொல்லிடப் போறேன்..!” என்று அவள் குதிக்க,
“அப்பறம் அத்தை..! பொண்ணு உங்களுக்கு சொந்தக்கார பொண்ணு வேற..? பொண்ணு எப்படி இருப்பா..?” என்றான்.
“அவளுக்கு என்னடா…அழகுன்னாலும் அழகு அப்படி ஒரு அழகு..! நம்ம தேடுனாலும் கிடைக்காது..!” என்றார் அவர்.
“கொஞ்ச நேரத்து முன்னாடி , இவன் கூட வந்த பொண்ணு கூடத்தான் தேவதை மாதிரி இருந்தது..!” என்றான் முரளி சைடு வாக்கில்.
“அழகு இருந்தா போதுமா..? அடக்க ஒடுக்கம் வேண்டாம். இவ்வளவு தனியா ஒரு பையன் கூட வரப்பவே தெரியலையா அவ ஒழுக்கம்..!” என்று மோகனா வார்த்தையை வாரி இரைத்தார்.
“அத்தை..!” என்று அதட்டினான் வருண்.
“சும்மா என்னை அதட்டாதே வருண்..! என் பொண்ணையே கட்டிக்கோன்னு சொன்னேன். ரொம்ப பிகு பண்ண. அதான் இப்ப ஒரு பொண்ணும் அமைய மாட்டேங்குது. நானா, ஒரு பொண்ணு பார்த்தாலும் உங்களுக்கு எல்லாம் கிண்டலா இருக்கு..!” என்றார்.
“பார்த்துப் பேசு மோகனா..! அந்த பொண்ணு காதுல கேட்டா சங்கடம் ஆகிடும்..!” என்றார் சத்யமூர்த்தி.
“நான் எங்க பேசுறேன்..! நீங்க எல்லாரும் தான் பேச வைக்கிறிங்க..! என் வீட்டுக்காரர் வகையில் ரொம்ப நெருங்கின சொந்தம். இந்தப் பொன்னைத் தான் நீ கட்டிக்கணும். இல்லைன்னா அவங்க மூஞ்சியில என்னால முழிக்கவே முடியாது..!” என்றார் மோகனா.
“அத்தை..! நீங்க என்ன சொல்றிங்களோ….அது தான் எனக்கு. கண்டிப்பா அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்..!” என்றான் வருண். அது பதிலா, இல்லை இடக்கா என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் முரளிக்கு நன்றாகத் தெரிந்தது அது இடக்கு என்று.
“அம்மா..! சக்தியை கூப்பிடுங்க..! சாப்பிட. எங்களுக்கு சாப்பாடு போடணும்ன்னு கூட தோணலை..!” என்றான்.
“வேண்டாம் வருண்..! இன்னைக்கு காலைல பூஜைக்கு கண்டிப்பா வரேன்னு சொல்லிட்டு வரலை. பார்த்தா கூட ஒரு பொண்ணு வேற. அதான் வேற எதுவும் யோசிக்கத் தோணலை..” என்றார் நித்யா.
“சாரிம்மா..! நான்தான் நடந்ததைச் சொன்னேனே..! அக்கா பிளீஸ்…! நீயும் புரிஞ்சுக்கோ..” என்றான்.அவனது சாரியில் கொஞ்சம் சமாதானம் ஆனாள் கௌசல்யா.
அவனுக்கு ஜாதகத்தில் பெரிய தோஷம் இருக்கு என்றும், அதற்கு பரிகாரம் செய்து,வீட்டில் ஒரு பூஜை செய்ய வேண்டும் என்றும் ஜோசியர் சொல்லி இருந்தார். அதற்கு எப்படியும் அதிகாலையில் வந்து விடுவதாக சொன்ன வருண்…இவ்வளவு நேரம் கழித்து வந்தது தான் கௌசல்யாவின் கோபத்திற்க்கு காரணம்.
“பூஜை விஷயத்தில் விளையாடாதன்னு சொல்லி இருக்கேன் வருண்..!” என்றாள் கௌசல்யா கோபமாக.
“அக்கா பிளீஸ்..! இப்ப என்ன..? அதான் எனக்குப் பதில் எல்லாரும் இருந்து பூஜையை சிறப்பா முடிச்சுட்டிங்கல்ல..அப்பறம் என்ன..? நான் தான் முரளி மாமாகிட்ட சொல்லி இருந்தேனே..!” என்று சொல்லி சிரிப்பை அடக்க,
முரளியை முறைத்தாள் கௌசல்யா.
“அடப்பாவி..! இவனுக்கு உதவி செய்யப் போய்..என் குடும்பத்துல கும்மி அடிச்சு விடுறானே..!” என்று நினைத்த முரளியின் முகம் போன போக்கைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான் வருண்.
“நீ சாப்பிட உட்காரு வருண்..! நான் அந்த பொண்ணை கூட்டிட்டு வரேன்..!” என்று நித்யா சொல்ல,
“நீங்க இருங்கம்மா..! நான் கூட்டிட்டு வரேன்..!” என்றவன், அவரின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றான்.
வெளியில் இருந்து அறைக்கதவை லேசாக அவன் தட்ட, எந்த சத்தமும் இல்லாமல் கதவு திறந்து கொண்டது.
“சக்தி..!” என்றான் மெதுவாக. எந்த சத்தமும் வராமல் போக, கதவை சற்று திறந்து உள்ளே பார்த்தான்.
சக்தியோ…அங்கிருந்த கட்டிலில் உலகம் மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.முகம் கூட கழுவவில்லை. எப்படி அவனுடன் வந்தாளோ அப்படியே தூங்கிக் கொண்டிருந்தாள். அளவுக்கு அதிகமான மன அழுத்தமே அவள் தூக்கத்திற்கு காரணம் என்று வருண் அறிவானோ இல்லையோ விதி அறிந்திருந்தது.
“என்ன இப்படி தூங்குறா…?” என்று யோசித்தவன், அவள் அசந்து தூங்கும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுக்கு செல்போனில் அழைப்பு வர, அதை எடுத்துப் பேசியவனின் முகம் கோபத்தையும், சிந்தனையையும் குத்தகைக்கு எடுத்தது.
சக்தியை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்த அவன் விழிகள், இப்போது தீவிர யோசனையுடன் பார்ந்த்துக் கொண்டிருந்தது.
ஒருவன் தன்னை ஆராய்ந்து கொண்டிருக்கிறான் என்ற உண்மை தெரியாத சக்தி…நித்திரா தேவியின் அணைப்பில் இருந்தாள்.