புரிந்ததும் கீதாவின் மீது கோபம் பொங்கியது.
“என்னடி சொல்ற? அவன் என்னை லவ் பண்றான்னு சொல்றியா? லூசா நீனு? யாராவது முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணை லவ் பண்ணுவாங்களா?” என்று தனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டாள் மதுமிதா.
“அவன் உன்னை முன்ன பின்ன தெரியாத பொண்ணு மாதிரி பார்க்கல. அவன் முதலில் உன்னை பார்த்த போது அவன் வாய் ‘இவளா?’ அப்படின்னு கேட்ட மாதிரி எனக்கு இருந்துச்சு.” என்று சந்தேகமாகவே கூறினாள்.
“என்னடி புதுசு புதுசா ஏதேதோ கதை சொல்லிக்கிட்டு இருக்க. எனக்கு தலையே சுத்துது. சரி நீ வந்து உட்காரு முதல்ல.” என்று கூப்பிட்டாள்.
“நான் வரமாட்டேன். நான் வந்தா நீ அடிப்ப. “ என்று அங்கேயே நின்றுகொண்டு கூறினாள் கீதா.
“இப்போ நீ வரலைனா தான் உன்னை அடிப்பேன். ஒழுங்கா வந்துடு. இங்க இருக்கிறவங்க எல்லாரும் நம்மள ஒருமாதிரி பார்க்க போறாங்க. வா இங்க.” என்று கூப்பிட்டாள்
“கண்டிப்பா அடிக்க மாட்ட இல்லை?” என்று உறுதியாக கேட்ட பின்பு வந்து பக்கத்தில் அமர்ந்தாள் கீதா.
“சரி கீதா. இப்போ மொத்தமா நீ என்ன தாண்டி சொல்ல வர?”
“எனக்கு தெரிஞ்சு அவன் மேல எந்த தப்பும் கிடையாதுனு சொல்ல வரேன். நீ அவனை கண்மூடித்தனமா வெறுப்பதில் எந்த அர்த்தமும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல.”
“அப்பாவும் அம்மாவும் கிட்டத்தட்ட இதையே தான் சொல்றாங்க. சரி இதைப்பத்தி நாம அப்புறம் பேசலாம். எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு.” என்று மேலும் அதைப் பற்றி பேசிக் குழம்ப விரும்பாமல் அப்படி கூறினாள் மதுமிதா.
“சரி. மது இப்போ நீ எல்லாத்தையும் போட்டு குழப்பிக்காத. அப்புறம் எப்பயாவது நீயே நான் சொன்னதை யோசிச்சு பாரு. நீ புத்திசாலி உனக்கு எல்லாமே புரியும். “
“நீ சொல்றது எல்லாமே உண்மையாவே இருந்தாலும் நான் அதை எல்லாம் நம்ப மாட்டேன். முக்கியமா எனக்கு அந்த நகை கிடைக்கணும்.” என்றாள் மதுமிதா திட்டவட்டமாக.
“சரி நாம ரொம்ப நேரமா இந்த விஷயத்தை பேசிக்கிட்டு இங்கேயே உட்கார்ந்து கிட்டு இருக்கோம். வா இந்த பெரிய அழகான பார்க்கில் ஒரு ரவுண்ட் வாக்கிங் போகலாம்.” என்று மதுமிதா கூப்பிட கீதா அவளுடன் அந்த பூங்காவில் நடக்க ஆரம்பித்தாள்.
இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை அதே பூங்காவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த அவன் கேட்டான்.
இவ்வளவு நாட்களாக இவள் நம்மை வெறுக்கிறாளே என்று நினைத்து கவலையுடன் இருந்த இவனுக்கு இப்பொழுது அவன் மீது தவறில்லை என்று அவளுக்கு தெரிய வந்தால் வெறுக்க மாட்டாள் என்று தெரிந்தது ஆறுதலாக இருந்தது. ஆனால்lஅவன் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிக்க இப்போது அவனால் முடியாது என்று நினைக்கும் போது வருத்தமாக இருந்தது.
எனினும் அவள் கூறிய நகையை பற்றி அவனுக்கு எதுவும் புரியவில்லை .
“அக்கா அந்த கல்லை எடுங்க.” என்று மதுமிதா பக்கத்தில் இருந்த அந்த கற்கள் நிரம்பிய டப்பாவை எடுத்து தரும்படி கேட்டாள் சரளா.
மதுமிதா ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். சரளா கேட்டது அவள் காதில் விழவே இல்லை.
“அக்கா அக்கா” என்று மதுமிதாவை தொட்டு குலுக்கினாள் சரளா.
“என்ன? என்ன கேட்ட?” என்று புரியாமல் விழித்துக் கொண்டு கேட்டாள் மதுமிதா.
“அக்கா என்ன கனவுலகத்தில் இருக்கீங்களா? நான் அந்த கல்லை எடுத்து தர சொன்னேன்.” என்று மீண்டும் கூறினாள் சரளா.
“ஓ. ஓகே ஓகே.” என்றவள் கற்களால் நிரம்பியிருந்த டப்பாவை எடுத்து கொடுத்தாள்.
“என்னக்கா நான் சொன்னது சரியா போச்சு. நீங்க இந்த உலகத்திலேயே இல்லை. கனவுதான் கண்டு கொண்டு இருக்கீங்க.” என்று கூறி வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.
“என்ன? என்ன சொல்ற? நான்தான் டப்பாவை கொடுத்துட்டேன் இல்ல?” என்று லேசான சலிப்புடன் கேட்டாள் மதுமிதா.
“நீங்க தானே நீலக்கலர் கல் வெச்சு தைக்க சொன்னிங்க. இப்போ பச்சை கலர் கல் கொடுக்குறீங்க. “ என்று கேட்கவும் தான் மதுமிதா அந்த டப்பாவில் இருந்த கற்களை பார்த்தாள்.
அதில் பச்சை நிற கற்கள் இருந்தன.
“ஓ சாரி” என்று கூறியவள் அந்த டப்பாவை வைத்துவிட்டு நீல நிற கற்கள் இருந்த டப்பாவை எடுத்து கொடுத்தாள்.
“என்ன அக்கா ஏதாவது லவ் மேட்டரா?” என்று கேட்கவும் தூக்கிவாரிப்போட்டு திரும்பி சரளாவை பார்த்தாள் மதுமிதா.
அவளை கவனித்த சரளா “என்னக்கா இதுக்கு போய் இப்படி பாக்கறீங்க?” என்று சரளா ஆச்சரியமாக கேட்டாள்.
“அப்போ அது தானா? கரெக்டா கண்டுபிடிச்சிட்டேன் போல இருக்கே!” என்று மீண்டும் கிளிக்கி சிரித்தாள் சரளா.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ உன் வேலையை பாரு.” என்று அவளிடம் ஒரு அதட்டல் போட்டுவிட்டு எழுந்து ஜன்னல் பக்கம் சென்றாள் மதுமிதா.
வாடிக்கையாளர்கள் வந்த போக வசதியாக வீட்டின் முன் அறையினை தையல் வேலைக்கு பயன்படுத்திக் கொண்டாள் மதுமிதா.
எனவே ஜன்னல் வழியாக கார், இருசக்கர வாகனம், மற்றும் நடைபாதையினர் கண்ணில் பட்டனர்.
2400 சதுர அடியில் நடுவில் வீடும் வீட்டை சுற்றி சில மரங்களும் செடிகளும் போட்டிருந்தனர்.
அந்த தெருவில் இருந்த எல்லா வீட்டிலும் சில மரங்கள் மற்றும் செடிகொடிகள் இருந்தன.
சென்னையின் முக்கிய சாலையின் போக்குவரத்து சப்தம் இல்லாமல் ஓரளவிற்கு அமைதியாக இருக்கும் தெரு அது என்றாலும் அவரவர் வீட்டில் வைத்திருந்த மரம் செடி கொடிகளின் இலைகளில் எப்பொழுதும் போல தூசு படிந்து இருந்தது தெரிந்தது.
சரளா சொன்னது போல மதுமிதா அவனை தான் அப்பொழுது நினைத்துக் கொண்டிருந்தாள். காலையில் கீதா அவன் மீது எந்த தவறும் இருக்காது என்று கூறியதை அவளால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் கீதா கூறியது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கீதா கூறியதை ஒரு முறை நினைத்து பார்த்தாள்.
“அவன் உன்னை தூக்கிக்கிட்டு அந்த திருவிழா ரோட்டில் எப்படி ஓடினா தெரியுமா?
உனக்கு அடிபட்டது என்னமோ அவனுக்கே அடிப்பட்ட மாதிரி ஒரு வலி அவன் கண்ணில் தெரிந்தது.
அவன் உன்னை முன்னாடியே எங்கேயோ பார்த்து இருந்த மாதிரி எனக்கு தோணுச்சு.
அவன் உன்னை பார்த்த பார்வையில் காதல் தெரிஞ்சது.’ என்ற வாக்கியங்கள் அவள் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.
அவளால் பழையபடி அவனை இப்போதும் திட்டி ஒதுக்க முடியவில்லை. எனினும் கீதா கூறியதை வைத்து அவனை நல்லவன் என்று நம்பவும் முடியவில்லை. எனவே இதைப்பற்றி இனிமேல் நினைக்க கூடாது என்ற முடிவுக்கு வந்தாள். ஆனால் அது அவளுக்கு அவ்வளவு சுலபமாக இல்லை.
“மது சாய்ந்தரம் கோயிலுக்கு போகணும். எந்த வேலை இருந்தாலும் எல்லாத்தையும் இப்பவே முடிச்சுடு. அப்படி இல்லைன்னா நாளைக்கு பண்ணிக்கலாம். சரியா?” என்று கேட்டுக்கொண்டே அறைக்கு வந்தார் வள்ளி.
“என்னமா திடீர்ன்னு?” என்று அவரிடம் கேட்டுக் கொண்டே அவள் வேலைப்பாடு செய்து முடித்த புடவையை மடித்துக் கொண்டிருந்தாள் .
“இன்னிக்கி கிருத்திகை அதான் கோயிலுக்கு போகலாம்னு கூப்பிடறேன். என்னை ஏன் கூப்பிடுறீங்க? நீங்கள் எப்பவும் ஜோடியா அப்பா கூட தானே போவீங்க?” என்று தாயை பார்த்து கண்சிமிட்டி கேட்டாள் மதுமிதா.
“உங்க அப்பா கூட நான் கோயிலுக்கு தானே போறேன். அதுக்கு எதுக்கு டி கண் அடிக்கிற?” என்று முறைத்தார் வள்ளி.
“கோயிலுக்கு போயிட்டு, அப்படியே ஹோட்டல் போயிட்டு, அப்படியே ஷாப்பிங் போயிட்டு, அப்படியே ……..”என்று மதுமிதா இழுக்க வள்ளி பொறுக்க முடியாமல்
“அப்படியே லண்டன் போயிட்டு அப்படியே அமெரிக்கா போயிட்டு வருவோம் இல்லை?” என்று மகளைப் பார்த்து முறைத்தார்.
“ இல்லம்மா நீங்க ரெண்டு பேரும் ஜாலியா பேசிக்கொண்டே போயிட்டு வருவீங்க. இதுல நந்தி மாதிரி நான் எதுக்குன்னு நினைச்சேன்.” என்றாள் லேசாக சிரித்தபடி மதுமிதா.
“ஆமாண்டி பசங்களை விட்டுவிட்டு ஜோடி போட்டுகிட்டு ஜாலியா ஊரை சுத்த இப்போ தான் எங்களுக்கு 25 வயசு ஆகுதா? கூப்பிட்டா நீயும் சரி உன் அண்ணனும் சரி வரவே மாட்டேன் என்கிறீர்கள். அதனாலதான் நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கும் சேர்த்து வேண்டிக்க கோயிலுக்கு போறோம். இதுல நீ என்ன கிண்டல் வேற பண்ற. கொழுப்பு தாண்டி உனக்கு.” என்று மேலும் முறைத்தார் வள்ளி.
“நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.அப்படியே நீங்க ஜாலியா வெளியே சுத்திட்டு வந்தாலும் என்ன தப்பு? நீங்க ரெண்டு பேரும் ஒத்துமையா சண்டை போடாம ஹாப்பியா இருந்தா தானே எங்களுக்கும் சந்தோஷம்.” என்று மனதில் நினைப்பதை வெளிப்படையாக கூறினாள் மதுமிதா.
“ என்னோட பிரண்ட் வீட்ல அவங்க அப்பா அம்மா போட்டுக்குற சண்டையை பத்தி என்கிட்ட சொல்லும்போது உங்க ரெண்டு பேரையும் நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். நீங்க ரெண்டு பேரும் பெருசா சண்டைபோட்டு நானும் அண்ணனும் பார்த்ததே கிடையாது.
நீங்க ரெண்டு பேரும் பற்பெக்ட் கப்புல். மேட் பார் ஈச் அதர்.” என்று வாயாரப் புகழ்ந்தாள்.
“சரி சரி எங்களை புகழ்ந்தது போதும். வேலையில்லாத்தையும் முடிச்சுட்டு சாயந்தரம் ரெடியா இரு. கோயிலுக்கு போகணும் ஞாபகம் இருக்கட்டும்.” என்று மீண்டும் கூறினார்.
அப்போதுதான் அவள் மடித்து வைத்திருந்த புடவையை பார்த்தார்.
“மது இந்த புடவை ரொம்ப அழகா வந்திருக்கு. ஒரு பிளைன் கிரீன் புடவையை இவ்வளவு அழகா மாற்றி இருக்க. இந்த கிரீன் பேக்ரவுண்ட்ல இந்த ரெட் கலர் ஸ்டோன் ரொம்ப அழகா இருக்கு. நீ கூட இந்த மாதிரி ஒரு புடவை ரெடி பண்ணி வச்சுக்கோ.” என்று அவளது திறமையை பாராட்டி விட்டு சென்றார் வள்ளி.
சின்ன வயதில் இருந்து குழந்தைகள் எது செய்தாலும் அதனை அந்த வீட்டு பெற்றோர்கள் எப்பொழுதும் பாராட்டுவர். அது குறையுடன் இருந்தாலும் அதிலிருக்கும் குறைகளை மெல்ல அவர்கள் மனம் நோகாத வாறு எடுத்துக்கூறி பாராட்டிவிட்டு தான் செல்வார்கள்.