நீலத்தை அள்ளியிறைத்த தெள்ளிய நீரலைகளாக காட்சித் தந்த ஏஜியன் கடற்பரப்பில், ஆனந்தம் கூத்தாடிய ரினீவா தீவை, பார்க்க நாமும் செல்வோம்.
கோட்டை கதவுகள் தொட்டு, ஸ்கெட்ஸ் மரக்கலன் நின்றிருந்த இடம் வரை, கடலில் உருவாகியிருந்த கல் திண்டில் ரினீவாவாசிகள் திரண்டனர்.
ஒவ்வொருவரும் தங்கள் கையில் வைத்திருந்த இசைக்கருவிகளை இசைத்தும், பாடியும், ஆடியும் எழுப்பிய உற்சாக குரல் ரினீவாவின் தீவெங்கும் எதிரொலித்து திரும்பியது.
ஸ்கேட்ஸ் மரக்கலனிலிருந்து விசை மூலம் இறக்கப்பட்ட பலகையில் நின்று கொண்டிருந்தாள் ஆலிமா. அவள் ஸ்கேட்ஸிலிருந்து இறங்கியது..!!
“கடல் தாய் தன் செல்வமகளுக்கு, தன் நீரலைகளில் உடையிடுத்தி, தலையில் பொன் கிரீடம் சூட்டி இரு கரங்களில் ஏந்தி கீழே இறக்கிவிடுவது போல இருந்தது”.
“கடலரசி ஆலிமா வாழ்க!!”, “ரினீவாவின் நாயகி போற்றப்படுக!!”, என்றெல்லாம் வாழ்த்தொலிகள் எழும்ப, ஆலிமா ஸ்கேட்ஸிலிருந்து இறங்கினாள்.
அவளுக்குப் பின், நூலேணி பிடித்து இறங்கிய பாஹ்லாஸ், அவளின் அருகில் வந்து நின்று கொள்ள, ஆலிமாவை சவ்ஜித்தா அணைத்துக் கொண்டாள்.இருவரும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
“ஆலிமா என் தலைவியே!, உன்னை மீண்டும் வரவேற்பதில் பேருவகை கொள்கின்றேன்,” என்றாள் சவ்ஜித்தா.
“நானும் தான் தோழி”, என்று அவளை இறுக்க அணைத்துக்கொண்ட ஆலிமாவை, சவ்ஜித்தா ஒரு அர்த்த புன்னகையில் பார்த்து விட்டு கூறினாள்…
“நாம் நீண்ட காலமாக தேடியும், எத்தனையோ முறை கைவிட்டுப் போனதுமான, ஒரு பொக்கிஷத்தை உனக்கு பரிசளிக்கப் போகின்றேன் அரசி”, என்றாள் சவ்ஜித்தா.
“அப்படியா சவ்ஜித்தா? எங்கே அந்த பரிசு காட்டு பார்க்கலாம்?”, என்றாள் ஆலிமா.
சவ்ஜித்தா கைகளை தட்ட, அங்கு நின்று கொண்டிருந்த வீரர்கள் விலகினர். அங்கே சங்கிலிகளால் பிணைக்கப்பட்டும், கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் டையோனிஸ் முழங்காலில் நிறுத்தப்பட்டு இருந்தான்.
ஆலிமாவுக்கு அது யாரென்று புரிந்தது. ஆலிமா சவ்ஜித்தாவை அணைத்துக்கொண்டு அவளின் தலை உச்சியில் முத்தமிட்டாள்.
“மிகவும் சரியான செயலை செய்து இருக்கின்றாய் சவ்ஜித்தா. உண்மையில் இது எதிர்பாராத பரிசுதான். ஆனால் இவனோடு இருந்திருக்க வேண்டிய மற்றவன் எங்கே?”, என்றாள், ஆச்சரியம் மேலோங்க.
“அந்த கிழட்டு சிங்கம் நீருக்குள் மூழ்கடிக்கப்பட்டது. என்னுடைய இரு குறும் வாளைக் கொடுத்து, மூழ்கடித்தேன்,” என்றாள் சவ்ஜித்தா.
அப்போது பலமாக சிரித்த ஆலிமா, “நிச்சயமாக அந்த சிங்கம் இந்நேரம் நீருக்குள் இருந்து மீண்டு இருக்கும். அந்த சிங்கத்தின் பலம் நானறிவேன்”, என்றாள்.
பின் சவ்ஜித்தா தோளை தட்டிய ஆலிமா, “வரட்டும் பார்த்துக் கொள்ளலாம், ஆயினும் நம் தீவில் கண்காணிப்பு கூடுதலாக இருக்கட்டும்”, என்றாள்.
டையோனிஸ் மற்றும் தயாளன் தவிர, பிற கைதிகளை அரண்மனையின் அருகில் இருக்கும் சிறையில் அடைக்க உத்தரவிட்டாள் சவ்ஜித்தா.
பாஹ்லாஸ், சவ்ஜித்தா உள்ளிட்டோர் புடைசூழ, ஆடம்பர வரவேற்புடன் ரினீவா கோட்டைக்குள் அவள் பிரவேசித்தாள்.
நேராக அரண்மனைக்குள் நுழைந்த ஆலிமா, அங்கே டையோனிஸ் மற்றும் தயாளன் ஆகியோரை கொண்டுவர கட்டளையிட்டாள். சிறிது நேரத்தில் அவர்கள் அங்கு கொண்டுவரப்பட்டனர். சைகை மூலம் டையோனிஸ் கண்களின் கட்டை அவிழ்க்க ஆலிமா உத்தரவிட, டையோனிசின் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது.
வெளிச்சத்தை பார்த்தவுடன் டையோனிஸ் கண்கள் பலமாக கூசியது. சிறிது நேரம் பார்வை பிடிப்பட தேவை ஏற்பட்டது. பார்வை தெளிவுப் பெரும் போது, ஆலிமாவை கண்டு பிரம்மித்துப் போனான் டையோனிஸ்.
“ஓ… நீ தான் ஆலிமாவா? உன்னைத்தான் கடல் தேவதை, கொள்ளைக்காரி, ஏஜியன் கடலின் அரக்கி என்றெல்லாம் கூறினார்களா? நீ ஏதோ திண்பண்டத்திற்கு அழும் பச்சிளம் பிள்ளை போல இருக்கின்றாய்?”, என்றான் டையோனிஸ் கிண்டலாக.
உண்மையில் அவனுக்கு ஆலிமாவை கண்டு மிதமிஞ்சிய பிரம்மிப்பு ஏற்பட்டு இருந்தது. அவளின் அழகும், ஆண்களை கண்டு அஞ்சாத துணிவும், சீரிய கூரிய ஊடுருவும் பார்வையும், தன் சகோதரிக்குப் பிறகு இவளிடம் இருப்பதை, உளமார உணர்ந்து இருந்தான்.
டையோனிஸ் கிண்டல் குரல் கேட்டதும் சவ்ஜித்தாவிற்கு அளவில்லாத கோபம் ஏற்பட்டது. ஆசனத்தில் இருந்து எழுந்து சென்று, அவனை அறைய பாய்ந்தாள்.
“சவ்ஜித்தா வேண்டாம் நில்”!!… என்று கூறிய ஆலிமா, அவளை அமைதியாக இருக்க சைகை செய்தாள். பின் டையோனிசை பார்த்து ஏளனப் புன்னகை உதிர்த்தவள்….
“டையோனிஸ், கிரேக்கத்து இளவரசன்….!! கடல் அரக்கன் அக்கோட்டஸின் மருமகன், என்றெல்லாம் உன்னைப் பற்றி நிறைய கட்டுக்கதைகள் உலா வருகின்றது. உன் நிலையோ, உன் மாமா இல்லையென்றால் வேறாக ஆகிவிடுகிறதே?!”.
“சரி இப்போது பழகிக்கொள்..!!! ஏனெனில், உன் மாமாவின் துணையின்றி நீ, பல காலம் வாழவேண்டி இருக்கும்… உன்னுடைய இகழ்ச்சி பேச்சுக்கள் என்னிடம எடுபடாது… என்றவள் அந்த சேரத்து உளவாளி எங்கே? அவனை கொண்டு வாருங்கள்”. என்றாள்.
மேலும் டையோனிஸ் பக்கம் திரும்பி,
“இப்போது ஒருவன் உன் மாமாவை குறித்தும், உன் ராஜாங்க விஸ்தரிப்பு குறித்தும் விவரிப்பான், கேள். அதுவரை நீ பேசக்கூடாது. நீ யார் என்பதையும் அவன் அறியக் கூடாது என்றவள், அந்த விசாலமான அறையின் ஒரு தூணுக்குப் பின் டையோனிசை வாயைக் கட்டி, மறைந்து நிற்க செய்ய உத்தரவிட்டாள்.
வீரர்கள் டையோனிசை கொண்டு சென்று மறைக்கவும், தயாளன் அறைக்குள் கொண்டு வரப்படவும் சரியாக இருந்தது.
தயாளன் மிகவும் சோர்ந்து போய் இருந்தான். ஒரு புறம் ஆலிமா, மறுப்புறத்தில் அக்கோட்டஸும், சேரனும். யாரிடமாவது உண்மையை கூறினால் மற்றவர் கொல்வர், சொல்லாவிடில் ஆலிமா கொல்வாள்..!!! என்ற உளவியல் வலி அவனிடம் அதிகம் இருந்தது. ஒருவாறு தன்னை தேற்றிக்கொண்ட தயாளன் முழுவதையும் கூற தீர்மானித்தான்.
“என்ன தயாளா கடலில் உள்ள சுறாக்களுக்கு விருந்தாக தயாராக உள்ளாயா?”, என்று கேலியும் கோபமும் கலந்த குரலில் கேட்டாள் ஆலிமா.
“கடலரசி உங்களிடம் சிறையிலேயே இருந்து விடுகின்றேன். உங்களிடம் உண்மையை சொன்ன பிறகு, சேரத்துக்கு சென்றாலோ அல்லது கிரேக்கத்திற்கே திரும்பினாலோ நிச்சயம் என் உயிர் என்னிடம் இருக்காது. அதற்கு இந்த தீவின் சிறையிலேயே என்னுடைய வாழ்வை முடித்துக் கொள்கின்றேன்” என்றான் தயாளன்.
“உண்மையில் அகோட்டஸ் மற்றும் கிரேக்க சக்கரவர்த்தியின் ஆசை தென் இந்தியாவில் உள்ள சேர, சோழ பாண்டிய தேசத்து வளங்கள். அந்த ஒட்டு மொத்த வளத்தையும் பெரும் மரக்கலன்கள் மூலம் அதிகாரத்தோடு சுரண்டி எடுத்து மேற்கு நாடுகளில் கொள்ளை லாபத்திற்கு விற்பதும், தென்னிந்தியாவின் கிழக்குக்கரை துறைமுகங்கள் வழியே கீழை நாடுகளுக்கு செல்லும் வணிகத்தை முற்றாக முறியடிப்பதும் முதல் திட்டம்”.
“அந்த திட்டத்தை நிறைவேற்ற தலையாட்டி அரசர்கள் தமிழகத்தில் இருக்க வேண்டும், அடிமைகளாக!!!
“சேர அரசர் தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக, சோழத்து துறைமுகங்கள் உள்ளடக்கிய பகுதியையும், பாண்டிய துறைமுகப் பகுதியையும், கிரேக்கத்திற்கு விட்டுத்தரவும், கிரேக்க அரசு ஒன்றை அந்த பகுதியில் உருவாக்கிக் கொள்ளவும் சம்மதித்து, ஒப்பந்தம் போட்டுள்ளார்”.
“இதன் மூலம், ஏற்கனவே தமிழகத்தில் தங்கியிருக்கும் கிரேக்க மக்கள், உள்ளடக்கிய அரசை ஸ்தாபித்து, கொஞ்சம் கொஞ்சமாக கிரேக்க மக்களை குடியேற்றம் செய்யவும் திட்டம் உள்ளது”.
“சேர வேந்தன் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி கிரேக்கத்திற்கு கட்டுப்பட்டவனாக, மீதமுள்ள பகுதிகளுக்கு மும்முடி அரசனாக இருப்பான். இனி பாண்டிய, சோழ அரசுகள் எழுவதற்கு வாய்ப்பற்ற வகையில் கிரேக்கமும், சேரமும் கட்டுப்படுத்தி வைக்கும்.
கிரேக்கத்தின் தமிழக அரசுக்கு கிரேக்க மணிமகுடம் தரித்து இருக்க கிரேக்க பேரரசரும், அக்கோட்டஸும், ராணியும் தீர்மானித்து உள்ள நபர் !???!! என்று நிறுத்தினான் தயாளன்.
“யார் அது தயங்காமல் கூறு என்றாள் சவ்ஜித்தா”.
பாஹ்லாஸ் அவனை ஏறிட்டுப் பார்க்க!, தொடர்ந்து வந்த தயாளனின் வார்த்தைகளை கேட்ட அனைவரும், ஏன் டையோனிசும் கூட அதிர்ந்து போயினர்.
“அது வந்து…!! வீரத்திலும் ஆளுமையிலும், அரசாட்சி நெறிமுறைகளில் சாணக்கியத்தனமும், அனைவரையும் ஈர்க்கவும், கட்டுப்படுத்தவும், திறமையுடனும், பொறுமையுடனும் எல்லாவற்றையும் வழிநடத்த சகல பொருத்தங்களும் உள்ள “கிரேக்கத்தின் பெண் அன்னம், கிரேக்கத்தின் இளவரசி ஏதன்னா!!!”, என்று நிறுத்திய போது….
டையோனிசால் அதை நம்பவே முடியவில்லை. டையோனிசின் உள்ளத்தில் எழுந்த கேள்வியை பாஹ்லாஸ் எதிர்கேள்வியில், தயாளனிடம் கேட்டான்..
” கிரேக்கத்தின் இளவரசி அரசாள எதற்கு அக்கோட்டஸ், டையோனிசை முன்னிறுத்த வேண்டும்?. மேலும், தமிழ்நாட்டில் உள்ள சோழ, பாண்டிய மன்னர்கள் எப்படி, சேரனின் திட்டத்திற்கு ஒத்துழைப்பார்கள்?. அவர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லவே!?” என்றான்.
“உண்மையில் டையோனிஸ் இளவரசருக்கே தமிழகத்தில் தங்கி ஆட்சி செய்ய விருப்பமும் கனவும் இருந்தது. அவர் பலவழிகளில் இதற்கு முயற்சித்து வந்தார். அக்கோட்டஸை இதற்காக ஆழமாக நம்பினார்.
“அக்கோட்டஸ் மட்டுமல்ல, ஒட்டு மொத்த கிரேக்க அரச குடும்பத்திற்கும் டையோனிசின் முடிவில் விருப்பம் கிடையாது. கிரேக்கத்தை மட்டும் டையோனிஸ் கவனித்தால் போதும் என்றும், ஏஜியன் தொடங்கி இந்துமாக் கடல்வரையிலான மொத்த கடல், நில பரப்பையும், கட்டுப்படுத்தவும் தன்வசப்படுத்தி நிலை நிறுத்தவும் ஏதன்னாவே சிறந்த ஆளுமை என்று அவர்கள் எண்ணியதாலும், டையோனிசின் முன்னெடுப்புகளை புறம் தள்ளினர்”.
“மேலும் பவளத்தீவில் அரசியல் கைதி போல டையோனிசை வைத்து, இன்று நாளை என்று நாட்களை கடத்தியும் வருகின்றனர்”.
“அக்கோட்டஸை மீறியும், ராணியின் வார்த்தையையும் மீறி டையோனிஸ் செயல்பட்டால், டையோனிஸ் பவளத்தீவில் நிரந்தரமாக சிறை செய்யப்படுவார்”.
“அக்கோட்டஸ் கடல் பகுதியை தன் கட்டுப்பாட்டிலும், இளவரசி ஏதன்னா தென் இந்தியாவையும் கட்டுப்படுத்த….. பேரரசு விரிவாக்கம் எளிமைப்படும். இது மூன்றாண்டுகளாக நடக்கும் திட்டம்”.
“கிரேக்கத்தின் ஒரு இலட்சம் வீரர்கள் இதுவரையில், சேரம், பாண்டிய நாடுகளிலும், புத்தன் தலை தீவிலும், பலர் மரக்கலன்களிலும் உள்ளனர். சேரன் தன் மொத்த படையையும் தயார் செய்து வருகின்றான்.
சோழத்து வாரிசுகளிடையே சண்டையை மூட்டிவிட்டு இரு அணிகளாக ஆக்கியுள்ள சேரவேந்தன், இப்போது வேறு சில வகையிலும், மேலும் அவர்கள் உறவைச் சிதைக்க வியூகம் வகுத்துள்ளான். பாண்டிய அரசும் இந்த சதுரங்க வேட்டையில் வீழும்”. என்றான் தயாளன்.
“ஆக தமிழக அரசர்களிடையே பகைமையை மூடிவிட்டு, முட்டாள்களாக்க பகைமை விஷம் தூவப்படுகிறது. கிரேக்கத்து மணிமகுடம் இளவரசிக்கு என்று தீர்மானமும் செய்யப்பட்டுள்ளது. இங்கும் சதி, அங்கும் சதி…!!!, அற்புதம் என்றாள்” ஆலிமா.
டையோனிசிற்கு எல்லாம் புரிந்தது. தன் மீது வீசப்பட்ட கத்தியும், அக்கோட்டஸ் தன்னை கோட்டையை விட்டு வெளியேறாது இருக்கவேண்டும் என்று கூறியதையும் எண்ணிப்பார்த்த டையோனிஸ் தன்னை ஏமாற்றி, அத்தனை காரியங்களும் நிறைவேறிப் போனதையும், ஆலிமாவிற்கு அவன் பயந்த காரணத்தையும் உணர்ந்து கொண்டான்.
போர் செய்து தமிழகத்தின் கடல் நகரங்களை வெல்ல விரும்பிய தனது ஆசையை நீர்த்து போகச் செய்து, மொத்தமாக சதி மூலம் நிறைவேற்றி தம்மை முடக்க நினைத்த தன் குடும்பத்தை எண்ணி முதல் முறை மனம் நொந்தான் டையோனிஸ்.
“தயாளன் தொடர்ந்தான். இதுவரை நான் கூறியது அடிப்படை திட்டம். இதை நிறைவேற்ற அக்கோட்டஸும், சேரமானும் சூழலுக்கு ஏற்ப காய்களையும், திட்டங்களையும் மாற்றுவர்கள்”.
“அது குறித்து எனக்குத் தெரியாது. ஆயினும் இளவரசி ஏதன்னா என்ன விரும்புகின்றார் என்பதை அக்கோட்டஸ் மட்டுமே அறிவான்?”, என்றான் தயாளன்.
அனைத்தையம் நிதானமாக கேட்ட ஆலிமா உள்ளிட்ட அனைவரும் தீவிரமான சிந்தனையில் மூழ்கினர். நின்ற நேரம் அறையில் அமைதி நிலவியது. டையோனிஸ் உடைந்து போயிருந்தான். அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வது, என்ற குழப்பம் மேலோங்கி நின்றது.
அதே வேளையில் குடந்தை சீத்தலையார் மாளிகையில் மயக்கம் தெளிந்து இருந்த, இரும்பிடையான், நெடுங்கிள்ளி மயக்கமுற்று கிடப்பதையும், வேல்விழி அங்கு இல்லாததையும் கண்டான்.
அவனுக்கு ஞானபிரம்மர் மீது சந்தேகம் வந்தது. அதை அடிப்படையாக கொண்டே, அவரை கைது செய்ய உத்தரவு விட்டிருந்தான். அதே வேளையில் நெடுங்கிள்ளி மீது பாசம் மாறி, இரும்பிடையானுக்கு கோபம் விஞ்சியது. வேல்விழியை அவன் அடைய முற்பட்டது, இரும்பிடையான் இதயத்தில் மிகவும் குரோதமான உள்ளதை ஏற்படுத்தி இருந்தது.
அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் மருமகனை பாதுகாப்பது போலும், அவனுக்கு உதவுவது போலும் நடித்தான். அப்போது சேந்தன் ஏற்பாடு செய்த வீரர்கள் இருவர் வேகமாக இரும்பிடையானை நோக்கி ஓடிவந்தனர்.
“சோழத்தின் ராஜ நிர்வாகி அவர்களுக்கு வணக்கம்.. குடந்தை தெற்கு எல்லை சோதனைச்சாவடி காவலர்கள் நாங்கள். சோழத்தின் அரச ஜோதிடர் சீத்தலையார், ஒரு பெண்ணுடன் தங்களின் தேரில் விரைவாக நாகை நோக்கிப் பயணப்படுகின்றார். தேரில் பெண் இருந்ததால் தடுக்க முற்பட்ட நம் காவலர் இருவரை, வாளால் வெட்டி வீழ்த்திவிட்டார்”, என்று நடக்காத ஒன்றை நடந்ததாக கூறினர்.
இரும்பிடையானுக்கு மட்டுமல்ல நெடுங்கிள்ளிக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
“அப்படியென்றால் வேல்விழியை கவர்ந்தது சீத்தலையாரா?”, என்று தனக்குள் குழம்பிய இரும்பிடையானுக்கு, விளக்கம் ஒன்று தோன்றியது.
“சீத்தலையார் சேரனின் தூதன் என்பது அவருக்கு முன்னமே தெரியும்!. அப்படியென்றால் வேல்விழியை கடத்தி சென்று, அவள் மூலம் நம்மிடம் ஏதோ பேரம் பேச, சேரன் தீர்மானித்து விட்டான். நாம் ஒன்று நினைக்க வேறொன்று நடக்கிறது”, என்று தனக்கு மட்டுமே தெரிந்த உண்மையின் அடிப்படையில் சிந்தித்தான் இரும்பிடையான்.
“கிழட்டு ஜோசியன், என்னை அடித்து வீழ்த்திவிட்டு, வேல்விழியை அடைய தூக்கி சென்று விட்டானா?. ஆனால் நலங்கிள்ளி இங்கு அல்லவா தொங்கிக்கொண்டு இருந்தான். அவன் எங்கே? என்று, பேந்த பேந்த விழித்தான் நெடுங்கிள்ளி.
“மாமாவே, இங்கு நலங்கிள்ளியை தொங்க விட்டு இருந்தேன். அவன் எப்படி, எங்கே போனான்? என்று கேட்டான் அப்பாவியாக.
ஆனால் இரும்பிடையானை நோக்கி சைகை செய்தனர் காவல் வீரர்கள்.
“நெடுங்கிள்ளி போதையில் உளருகின்றான்” என்று இரும்பிடையான் காதருகே கிசுகிசுதான் வீரன் ஒருவன். உண்மையில் இங்கு கட்டப்பட்டு கிடந்தது அவன்தான் என்றனர் வீரர்கள்.
நெடுங்கிள்ளியை சமாதானம் செய்த இரும்பிடையான்,
“கிள்ளி.. பொறுமை! பொறுமை! நீ கவலை கொள்ளாதே மருமகனே, நான் வேல்விழியை மீட்டுக் கொண்டு வருகின்றேன். நீ வருந்தாதே!!??. உடனே நம் படைகளை அனுப்பி நாலாபுறமும், நாகையிலும் தேட சொல்லி உத்தரவிடுகின்றேன். நீ சிறிது ஓய்வு கொள்!”, என்றவன்….
“யாரங்கே? இளவரசருக்கு நல்ல அராபிய மதுவையும், திராட்சை பழங்களும் கொண்டு வா”, என்றான்.
ஆனால் அதையெல்லாம் நெடுங்கிள்ளி கேட்கவும், அருந்தவும் விரும்பவில்லை. அவன் இரும்பிடையானிடம் தவறு ஏதோ நடந்ததாக கூறிப் புலம்பினான்.
ஒரு கட்டத்தில் இரும்பிடையானை திட்டவும் செய்தான். இரும்பிடையானுக்கு கோபம் உச்சத்திற்கு சென்றது. ஒரு குவளை மதுவில் தன் களையாணி ஒன்றைத் திறந்து அதிலிருந்த போதை வஸ்துவை கலந்து, வலுவில் நெடுங்கிள்ளிக்கு புகட்டினான்.
மது உள்ளே சென்றதும் தன் கடமையை செவ்வனே செய்ய, நெடுங்கிள்ளி பஞ்சணையில் மல்லாக்க விழுந்து மயங்கினான்.
பின் மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்த இரும்பிடையான், ஞானபிரம்மரை கைது செய்ய சொல்லியதை எண்ணி சிறிது குழப்பம் கொண்டான்.
“ஞானபிரம்மரை சிறையில் வைத்தால் பெரும் குழப்பம் சோழத்து அலுவலிலும், தேசத்திலும் ஏற்படும். அதன் மூலம் வீணான முரண்களை சந்திக்க நேரிடும் என்பதை உணர்ந்து கொண்டவன்… உடனே அவரை விடுத்துவிட, கோட்டைத் தலைவனுக்கு உத்தரவு ஓலை ஒன்றையும், வீரன் ஒருவன் மூலம் கொடுத்து அனுப்பினான்.
அதே வேளையில் அவன் இதயம் பலவாறு குழம்பியது. சீத்தலையார் மூலம் சேரன் தன்னை ஏமாற்றிவிட்டானோ? என்று குழம்பியவனுக்கு தெளிவு கிடைக்க மறுத்தது.
விடியலை நோக்கி காலம் பயணித்திருந்த வேளையில் காந்தளூர்ச்சாலையில் இருந்து ஒற்றன் ஒருவன் அவசரமாக இரும்பிடையானை சந்திக்க வந்திருந்தான். அவன் கூறிய செய்தியை கேட்ட இரும்பிடையானுக்கு இதயமே நின்று விடும் போலிருந்தது.
தொடரும்.