இருவரும் மாடியில் இருந்து இறங்கி வந்தபோது ரம்யா ஹாலில் தான் அமர்ந்திருந்தார்.
“ரெண்டு பேருக்கும் டீ போட்டு வைச்சு இருக்கேன் சக்தி..”
இவர்களை கண்டதும் சொல்ல, “சரிங்கத்தை..” என சக்தி எடுத்துவர உள்ளே போய்விட ஆரியன் அன்னையோடு அமர்ந்து அளவளாவினான்.
அவரும் எப்போதும் போல் தான் பேசினாரே தவிர, ‘இன்னைக்கு உன் பொண்டாட்டி என்ன பண்ணினா தெரியுமா..’
என்று குற்றம் படிக்கவில்லை. இப்பொழுது மட்டும் அல்ல.. என்றுமே சக்தியை பற்றி மகனிடம் குறை சொல்லவோ கலகம் உண்டு பண்ணவோ மாட்டார். எதுவாக இருந்தாலும் யாராக நேரடியாய் பேசி தீர்ப்பதோடு சரி..!!
சக்தி கணவனுக்கும் டீயை கொடுத்துவிட்டு தானும் அவர்களோடு அமர்ந்துக் கொள்ள மேக்னாவும்,
“என்ன.. என்ன.. இங்க நான் இல்லாம மாநாடு..”
என்று வந்து சேர்ந்துக் கொள்வே இடமே கலகலப்பானது. விளையாட்டாய் போய் கொண்டு இருந்தபோதே திடீரென ரம்யா,
“ஆமா.. நானும் ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன்.. ஏன் சக்தி அம்மா வீட்டுக்கு போகவே இல்லை.. நீயும் அழைச்சுட்டு போகலை.. கல்யாணம் பண்ணி வந்ததோடு சரி.. அவங்க வீட்டில் ஆச்சும் அழைப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்.. அதுவும் இல்லை..”
என்று இருவரையும் கேட்க அங்கே சட்டென்று ஒரு அமைதி நிலவியது. ஆரியனும் சக்தியும் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்க்க,
“இப்படி.. ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துகிட்டா என்ன அர்த்தம்..?”
பதில் வந்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம்..
ரம்யா அவ்வாறு கேட்பதற்கு பதில் கூட சொல்ல முடியாத நிலையை எண்ணி மனம் காயப்பட்டது சக்திக்கு. அவர் கேள்வி நியாயம் தான்.. எந்த பெண்ணும் கல்யாணத்திற்கு பின் தன் அம்மா வீட்டிற்கு செல்ல எப்போதடா என்று தான் இருப்பாள். ஆனால் இங்கே ஒரு அலைபேசி தொடர்பு கூட இல்லை என்பதை எங்கனம் புரிய வைப்பது.
மீண்டும் மீண்டும் தன் பெற்றோர் மேல் கோபம் வந்தது.
‘ஐயோ.. நல்ல நேரம் பார்த்தீங்க ம்மா.. இப்ப தான் அவளே கொஞ்சம் தெளிஞ்சா..!! மறுபடியுமா.. ‘
என்று ஆயாசமாய் எண்ணி,
“போகணும் தான் ம்மா.. சக்தியும் சொல்லிட்டு தான் இருந்தா.. எனக்கு தான் லீவ் கிடைக்கல..”
என்று சமாளிக்க பதிலுக்கு அவர் பார்த்த பார்வையில் அப்படியே ஆஃப் ஆகிவிட்டான்.
“அந்த அளவுக்கு கூடயாடா.. எனக்கு விபரம் இருக்காது..”
என்று கேட்டவர் திரும்பி சக்தியை பார்க்க அவள் தலையை நிமிர்த்தவே இல்லை.
தன் அண்ணியை பார்க்கவே பாவமாக,
“ம்மா.. அவங்க முடியுறப்ப போவாங்க.. நீ ஏன் இப்ப இதை பெருசாக்கிற..”
என்று பரிந்து பேச,
“உனக்கு இதெல்லாம் புரியாது.. பேசாம இரு..” என்று அவளை அடக்கிவிட்டு,
“எனக்கு தெரியும் பிரச்சனை என்னானு..”
என்று சொல்ல இருவருக்குமே அதிர்ச்சி தான். எப்படி தெரியும் என்று..!!
“என்ன பார்க்கிற சக்தி.. உன் அம்மாக்கு இந்த கல்யாணம் நடந்தது சுத்தமா பிடிக்கலைன்னு அன்னைக்கே தெரிஞ்சுது.. உங்க அப்பா கூட நின்னு பார்த்தார்.. ஆனா உங்க அம்மா கிட்ட கொஞ்சமும் ஒட்டுதல் இல்ல.. ஏதோ கடமைக்கு நின்னாங்க.. அவ்வளவு தான்…”
என்று பிட்டு பிட்டு வைக்க,
“அப்படி எல்லாம் இல்ல அத்தை..”
என்று பலவீனமாய் மறுத்தாள். அவளுக்கு பிடிக்கவில்லை இந்த பேச்சு எதுவும்..!!
“ஆனா அவங்களையும் குறை சொல்ல முடியாது.. பெத்தவங்களா எங்களுக்கு இருந்த அதே கோபம் தானே அவங்களுக்கும் இருக்கும்.. இப்ப எல்லாம் எங்க பெத்தவங்க ஆசை எல்லாம் மதிக்கிறிங்க.. உங்களை வளர்த்து விடறதோட எங்க கடமை முடிஞ்சுது.. “
“அம்மா.. எதுக்கு இப்ப அதெல்லாம்.. விடுங்க ம்மா..”
என்று ஆரியன் அமைதியாக்க முயல.. எங்கே அவரா கேட்பார்..?
“தேவை இருக்க போய் தான் பேசுறேன்.. அவங்களை பார்த்தாலே நல்ல வசதியான குடும்பம்ன்னு தெரியுது.. ஒரே பொண்ணு எவ்வளவு செல்லமா வளர்த்து இருப்பாங்க.. எவ்வளவு பெரிய இடத்தில் கட்டி வைக்க ஆசைப்பட்டாங்களோ.. நீங்க செஞ்சு வைச்ச வேலைல வருத்தமா, கோபமா தான் இருப்பாங்க..”
ரம்யா பேச பேச, ‘செல்லமா.. நானா..’ என்று விரக்தியாய் வந்தது அவளுக்கு..
“அதுக்குன்னு அப்படியே ஒதுங்கிடுவீங்களா..?? மனசு உறுத்தல.. அவங்களை சமாதானம் செய்ய ஏன் ரெண்டு பேரும் எந்த முயற்சியும் எடுக்கல..”
என்று திட்டவே செய்ய கணவன் மனைவி இருவரும் வாயே திறக்கவில்லை.
“ஒரு பொண்ணுக்கு அம்மா வீடு ஆயுசுக்கும் வேணும்.. விட கூடிய உறவு இல்ல.. மொதல்ல அவங்களை எப்படியாவது சமாதானம் செய்ங்க.. மேக்னா கல்யாணத்தில் உன் அம்மா – அப்பாவும் நிறைஞ்ச மனசோட வந்து வாழ்த்தணும்.. அதுக்கு என்ன செய்வீங்களோ தெரியாது..”
இறுதியாய் ஒரு கட்டளையோடு எச்சரித்துவிட்டு எழுந்து செல்ல,
“முழுசா மாமியாரை மாறியிருக்கும் நம் அம்மா ரம்யாவை பார்..”
என்றாள் மேக்னா அதிர்ச்சியாய்..
எதுவும் பேசாமல் சக்தியும் சட்டென்று அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ளவே,
“அண்ணியும் கோபமா தான் இருக்காங்களோ..”
என்று ஆரியனை வினவ,
“அப்படி தான் நினைக்கிறேன்..”
என்று பெருமூச்சு விட்டான்.
“அம்மா ரூடா சொன்னாலும் சொன்ன விஷயம் தப்பில்லை தான் அண்ணா.. உங்க நல்லதுக்கு தானே சொல்றாங்க.. நீயாச்சும் பேசி பாரேன்..”
என்று எடுத்து சொல்ல, “பேசலாம் தான் மேகி.. ஆனால் இங்க பிரச்சனையே வேற.. ம்ஹும்.. விடு.. நான் பார்த்துகிறேன்..”
என்று யோசனையோடு சொல்லவும்,
“சரி போ.. அண்ணியை பார்..”
என்று போய்விட்டாள். அவனை கேட்டால் ரம்யா சொல்வது போல் அவள் வீட்டிற்கு சென்று பேசலாம் என்று தான் சொல்வான். விவாகரத்து என்ற முடிவை எடுத்தபின் அவர்கள் நிலை தான் என்ன..?? அடுத்து என்ன செய்ய இருக்கிறார்கள்..?? இவர்கள் பிரச்சனையை தீர்த்து வைக்க ஒரு வழி கூடவா இருக்காது என்று தெரிந்துக் கொள்வது ஆயிரம் இருந்தாலும் மகளாய் சக்தியின் கடமை தானே..!!
‘நான் விலகி வந்துவிட்டேன்.. இனி எப்படியோ அவர்கள் போகட்டும்..’ என்று சக்தி நினைக்க மாட்டாள் என்றாலும் அவளின் செயல் அப்படியான அர்த்தத்தை மட்டுமே கொடுக்கும் என்று ஆரியன் அறிந்தே இருந்தான். ஆனாலும் சக்தியிடம் பேசினாள் வாக்குவாதமும் சண்டையும் தான் மிஞ்சும்..!! எனவே அவள் போக்கில் விட்டு விட்டான். இன்று ரம்யாவே அதனை பேசியிருக்க நாமும் இதை மீண்டும் பேசி பார்ப்போமா என்ற யோசனையாய் இருந்தது.
அறையில் சக்தி ஜன்னலில் தலை சாய்த்து வெளியே பார்த்து அமர்ந்திருக்க அவள் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
“சக்தி..”
என்று அவன் கூப்பிட அப்போது தான் அவனை கவனித்தவள்,
“நான் ஒன்னு கேட்பேன்.. நீ உண்மையை சொல்லணும்..”
என்று கண்களை சுருக்கி பார்க்க,
“என்னடி..” என்று பார்த்தவனை,
“நீ சொன்னால் கேட்க மாட்டேன் என்றதால.. நீதான் அத்தைகிட்ட இப்படி பேச சொன்னீயா..?”
என்று கத்த, “ம்ச்.. தெரியாமல் கேட்டுட்டேன்.. சாரி.. சாரி.. சாரி.. போதுமா.. இப்ப கொஞ்ச நேரம் என்னை அமைதியா விடு..”
என்று அவன் கோபத்தைவிட அதிக எரிச்சலாய் சொல்லிவிட்டு மீண்டும் தன் யோசனைக்குள் போய்விட வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டான்.
நல்ல வேளை.. ‘பாரு.. அம்மா கூட சொல்றாங்க’ன்னு எதுவும் ஆரம்பிக்காம இருந்த.. இல்லை மொத்தமா அம்பை உன் பக்கம் திருப்பி இருப்பா..
என்று உணர்கிறது அவனின் மனசாட்சி..!!
உண்மையும் அது தான்..!! அந்த நேரம் அவளுக்குள் அப்படி ஒரு கோபம் எரிந்து கொண்டிருந்தது. ரம்யா மேல் அல்ல..!! தன்னை பெற்ற அன்னை மேல் தான்..!!
ஒரு நாள் தான் அத்தை அவரை பார்த்தது. அதிலேயே அம்மாவின் ஒதுக்கத்தை சரியாய் சொல்லிவிட்டார். அப்படி என்ன நான் செய்து விட்டேன்..
எனக்காக சந்தோஷமே படமாட்டாரா..?? இப்ப வரையிலும் தன்னை தேடவே இல்லையே..!! அந்த வீட்டில் வசித்ததே இருவர் தான்.. அவளுடைய ஆப்சென்ஸ் அவரை துளி கூடவா பாதிக்கவில்லை…
அந்த ஆதங்கத்தோடே சுற்றியவள் ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் அவருக்கு பேசிவிட வேண்டும் என்ற உந்துதலில் இரவு என்றும் பாராமல் அவர் எண்ணிற்கு அழைத்தாள்.
சில ரிங்களுக்கு பின்,
“ஹலோ..”
என்று யாமினியின் குரல் கேட்க அதுவரை வாயில் வந்த எல்லாம் மறந்து போனது பழைய சக்தியாய் அவரிடம் பேச தயங்கி மௌனம் காத்தவள்,
என்றாள் குத்தலாய்.. அதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லாமல் போக,
“அமைதியா இருந்தால் என்ன அர்த்தம்..?? உங்க பொண்ணு தானே நான்.. உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லையா ம்மா..??? உங்களுக்கு யார் வந்தாலும் போனாலும் பிரச்சனை இல்லை.. எப்பவும் உங்க வேலை மட்டும் தான்.. இப்படி வாழ்ந்து என்ன சாதிச்சுட்டீங்க..”
என படபடவென பொரிந்தவள்,
“எப்படி இருக்கேன்னு ஒரு வார்த்தை கேட்க தோணலைல..”
என்றாள் ஆற்றமாய்..
அவள் பேசி முடிக்கும் வரை இடையிடாமல் கேட்ட யாமினி,
“இதை எல்லாம் நானும் உன்னை பார்த்து கேட்கலாம் சக்தி.. நானா உன்னை போக சொன்னேன்.. நீயா போன.. அப்போ நீயா தான் வரணும்.. யாரையும் என்னை விட்டு போக சொன்னதே இல்லை.. தானா போற யாரையும் தடுத்து வைக்கணும்ன்னு எனக்கும் அவசியம் இல்ல.. அண்ட் வேண்டிய அளவு என் லைப்ல நிறையவே சாதிச்சுட்டேன்..”
என்று சளைக்காமல் வார்த்தைக்கு வார்த்தை திருப்பி கொடுத்தவர்,
“என்னை கேள்வி கேட்கும் முன்னாடி நீ பண்ணது மட்டும் எல்லாம் ரொம்ப சரின்னு நினைச்சுட்டு இருக்கியோ..”
என்று நக்கலாய் கேட்க,
“ஏன்.. ஏன்.. நான் என்ன பண்ணேன்..”
என்றாள் வேகமாய்..
“வீட்டை விட்டு போகும்போது ஒரு நிமிஷம் யோசிச்சு பார்த்தியா.. அப்படி என்ன உன்னை கொடுமை படுத்திட்டாங்க.. நாம ஒன்னும் பரம்பரை பணகாரங்க இல்ல.. ஆனாலும் சின்ன வயசுல இருந்து ஒரு விஷயம் கூட உனக்கு கிடைக்கலன்னு ஏங்க வைச்சு இருக்கோமா..? இல்லை எதுக்காக வாச்சும் உன்னை கட்டாயப்படுத்தி இருக்கேனா..?? என்ன செய்யல உனக்கு..?? எனக்கும் உன் அப்பாக்கும் நீ பொறந்ததுல இருந்தே பிரச்சனை தான்.. ஆனால் ஒரு இடத்தில் உன்னை அப்படி உணர வைச்சு இருப்போமா.. இல்லை.. இத்தனை வருஷத்தில் உன் முன்னாடி ஒரு தடவை ஆர்கியூ பண்ணி இருப்போமா.. எதுக்காக உன்னோட மென்டல் ஹெல்த் ஸ்பாயில் ஆக கூடாதுன்னு தான்.. அதனால் தான் எங்களை விட்டு தூரமாவே உன்னை வைச்சு இருந்தேன்..
யூ ஆர் 26 நௌ.. ஆனால் ஒரு வாரம் எங்க பிரச்சனை தாக்குபிடிக்க முடியல.. அப்போ இத்தனை வருஷம் அதை பியர் பண்ற என்னோட மனநிலை என்னவா இருக்கும்னு நினைச்சு பார்த்து இருப்பீயா..??
ஆமா.. என்னால உனக்கு ஒரு மதர்லீ பாண்ட் கொடுக்க முடியல.. நானும் சாதாரண மனுஷி தான்.. நான் கடந்து வந்த பாதை என்னை பத்தி மட்டும்தான் யோசிக்க வைச்சது.. என்னை தாண்டி தான்.. என் நலனை தாண்டி தான் என் பொண்ணு எல்லாம்.. நான் ஒரு தெய்வீக அம்மா இல்லை.. அதுக்கு என்ன இப்ப.. உன்னை எப்படியோ போன்னு நினைச்சது இல்லைல..
ஏன்.. இப்ப கூட உங்க அப்பா டிவோர்ஸ் வாங்கி போய் விட்டாலும் நாம எப்போவும் போல் இருப்போம்ன்னு தானே சொன்னேன்.. அதுக்கு அர்த்தம் உனக்கு எப்பவும் நான் இருப்பேன் என்றது மட்டும் தான்.. உனக்கு கல்யாணம் வேணாம்னு விஷாகன் கிட்ட சண்டை போட்டதும் கூட எங்க பிரச்சனையில் உனக்கு எதுவும் தவறுமா நடந்திட கூடாதுனு தான்.. ஆனால் நீ என்ன பண்ண..!! இவங்க சண்டை எல்லாம் எனக்கு எதுக்குன்னு தூக்கி போட்டு போயிட்ட.. மூழ்கிற கப்பலில் தப்பிச்சு போற எலி மாதிரி..”
வார்த்தையால் அடிப்பது இது தான் என்பது போல் கடுமையாய் பேச அதனை தாள முடியாமல் கண்ணீர் பொங்கியது.
“உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைச்சு இருந்தேன் தெரியுமா..?? உனக்கு எல்லாமே பெஸ்ட்டா தான் இருக்கணும்னு நினைப்பேன்.. உன்னோட மியூசிக் டேலண்ட் பார்த்து எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா..?? எத்தனையோ பேருக்கு கிடைக்காதான்னு ஏங்கிய வாய்ப்பு வாய்ஸ் எக்ஸ்பெர்ட்ஸ்.. ஆனால் உனக்கு கிடைச்சும் துச்சமா போட்டு போயிட்ட.. உன்னை பெரிய பெரிய இடமெல்லாம் கொண்டு சேர்க்கணும் ஆசை பட்டேன்.. ஆனால் எதை பத்தியும் யோசிக்காமல் முட்டாள் தனமா ஒரு முடிவு எடுத்து இருக்க.. அதை பாராட்டி நான் உன்னை தலையில் தூக்கி வைச்சு ஆடுவேன்னு எப்படி நினைக்கிற..??”
அதில் ரோஷம் வர பெற்றவளாய்,
“உங்களுக்கு முட்டாள்தனமா தெரியுற என்னோட முடிவில் நான் சந்தோசமா தான் இருக்கேன்.. கல்யாணம் ஒன்னும் லைப் ஓட டெட் எண்ட் கிடையாது.. புரிதலும் நம்பிக்கையும் இருந்தால் இன்னும் இன்னும் உறுதியான பேஸ்மென்ட் ஓட வளர்ந்துட்டே இருக்கலாம்..”
என்று கோபமாய் சொல்ல முயன்றாள். ஆனால் குரல் தான் அழுகையை காட்டி கொடுத்தது.
“ஹோ ரியலீ.. இதெல்லாம் டயலாக்கா சொல்ல நல்லா தான் இருக்கும்.. ஆனால் நடைமுறையில் வாய்ப்பே இல்லை.. அது ஒரு புதை குழி.. ஒவ்வொரு அடி எடுத்து வைக்க நினைக்கும் போதும் வீடு, குடும்பம், குழந்தைன்னு உன்னை உள்ள இழுத்து போட்டுட்டே இருக்கும்.. ஒன்னு அதில் மீள முடியாம அதிலே சிறைப்பட்டு சராசரி பெண்களில் ஒருத்தியாய் இருப்ப.. இல்லைனா ஒரேடியாய் உதறி தள்ளி இன்னோர் யாமினியாய் இருப்ப.. இதை தவிர இந்த சமூகம் எதையும் தராது..”
என்று வெறுப்பாய் கூறியவர் அவளின் அழும் குரலில் அதற்கும் மேல் பேச விருப்பம் இன்றி அழைப்பை வைத்துவிட்டார்.
யாமினி பேச்சின் தாக்கம் குறையாமல் கண்ணீர் வழிய வெடவெடக்க அமர்ந்திருந்தாள் சக்தி.
இத்தனை குற்றசாடலை தன் மீது வைப்பார் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.
ஒவ்வொரு வார்த்தையும் மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்க
‘எப்படி எல்லாம் சொல்லி விட்டார்..’
நினைக்க நினைக்க மனம் தாளவே இல்லை. இரவு உணவு முடித்தபின் தந்தையுடன் ஏதோ பேசி கொண்டிருந்தவன் அப்போது தான் அறைக்கு திரும்ப சக்தியை கண்டதும்,
“ஹே.. என்னாச்சு..” பதறி அருகில் வந்தான்.
பதிலே சொல்லாமல் அவள் அழுது கொண்டே இருக்க,
“என்ன சக்தி.. என்னானு சொல்லாமல் இப்படி அழுதா.. நான் என்ன பண்ணுவேன்.. சொல்லுமா..”
என்றான் கெஞ்சலாய்..
“எல்லாமே என் தப்பு தான்னு சொல்றாங்க டா.. அவங்களை பத்தி நினைக்காம நான் தான் சுயநலமா இருந்தேனாம்.. எப்படி எல்லாம் பேசுனாங்க தெரியுமா..”
சின்ன செறுமலோடு கரகரத்த குரலில் சொல்ல அவளின் அம்மாவை தான் சொல்கிறாள் என்று உடனே புரிந்தது அவனுக்கு..!!
“உங்க அம்மாட்ட பேசுனீயா..”
கை பற்றி மென்மையாய் கேட்க ஆமாம் என்பதாய் தலையசைத்த சக்தி ஒன்றுவிடாமல் அவர்கள் பேசியதை சொல்ல ஆரியனும் பொறுமையாக குறுக்கிடாமல் கேட்டான்.
“அவங்க சொல்றா மாதிரியா ஆர்யா நான் இருக்கேன்.. மூழ்கிற கப்பலில் தப்பிச்ச எலி மாதிரின்னு சொல்றாங்க.. எனக்கு தாங்கவே முடியலடா..”
பக்கத்தில் அமர்ந்து இருந்தவன் தோளில் முகம் வைத்து சொல்ல மறுக்கையால் அவள் தலையை வருடிக் கொடுத்தான்.
அவரின் குற்றசாடலில் அவனுக்குமே உறுத்தலாய் இருந்தது.
கல்யாணம் பற்றி பேச சென்றபோது விஷாகன் அதிர்ந்து நின்றார் என்றால் யாமினியோ வன்மையாய் மறுத்தார்.
இவரின் மறுப்பு தன் பெற்றோருக்கு தெரியாமல் தனியே சந்தித்து,
“எனக்கு தேவை சக்தியோட நிம்மதி தான் ஆண்ட்டி.. இங்க இருந்தால் அவளுக்கு அது கண்டிப்பா இருக்காது… அவ வாழவே பிடிக்காத மாதிரி பேசுறதை எல்லாம் இனி ஒரு தடவை கேட்க முடியாது.. அதுக்கு இந்த கல்யாணம் இப்ப நடந்தே தான் ஆகணும்..”
என்று தான் பேசியதை நினைத்து பார்த்தான். சக்திக்கு அறிவுரை கூறும் அவனும் அன்று அவளை மட்டுமே கொண்டு தானே யோசித்தான்.
“நான் கெட்டவளா ஆர்யா.. என்னை பத்தி மட்டுமே யோசிக்கும் சுயநலவாதியா..”
“சே.. இல்லை லூசு.. அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க நியாயம்.. இங்க யாரையும் குத்தம் சொல்ல முடியாது.. அத்தை ஒரு ஆதங்கத்தில் பேசிட்டாங்க.. இன்னும் சொல்லணும்னா அவங்க உன்னை ரொம்ப மிஸ் பன்றாங்க..”
என்று சொன்னவனை நிமிர்ந்து நம்பாமல் பார்த்தாள்.
“உண்மை சக்தி.. உங்க அப்பாவும் போனாலும் நீ இருப்பேன்னு நம்பி இருந்து இருக்காங்க.. உன்னுடைய இந்த முடிவு அவங்களுக்கு ஏமாற்றம் தான்.. அதுவும் இந்த மேரேஜ் லைஃப் உன்னை முடக்கி போட்டுடுமோன்னு ஒரு பயம்.. அதான் அதை இப்படி எல்லாம் வெளிப்படுத்துறாங்க..
அவங்களுக்கு புரியாத ஒரு விஷயம்.. யார் வாழ்க்கையையும் அளவுகோலா கொண்டு இன்னொர்த்தர் வாழ்க்கையை கணிக்க முடியாது.. ஒவ்வொரு மனுஷனும் வேற.. அவனவன் காண பாதையும் வேற..!! நம்ம பாதையும் வேற தான்.. காலம் போக போக அதை நம்மை பார்த்து உணர்வாங்க..”
வெகுவாய் தேற்ற சற்று நேரத்தில் அவன் தோளிலே தூங்கிவிட்டவளை மெத்தையில் சரியாய் படுக்க வைத்து தானும் அருகில் படுத்தவன் கண்ணீரின் ஈரம் காயாத கன்னத்தை லேசாய் தடவி கொடுத்து,
“சீக்கிரமே எல்லாம் சரியாகும் சக்தி.. அதுக்கு என்னால முடிஞ்சதை செய்வேன்..”