சரண்யா வாய் திறக்கவே இல்லை. வெற்றி முகத்தை தான் பார்த்தாள்.
“பெத்த தாய் இல்லாம, உன் முகத்தை முன்னாடி வச்சா மொட்டை எடுக்க. பேசுறா பாரு பேச்சு…” என்று வேல் முருகன் கடுப்பாக சொல்ல.
“சாமி காரியம் வெற்றி. தள்ளி போடாத, உம் பொண்டாட்டி வேணா கோவிலுக்கு வெளிய நிக்கட்டும்.” என்று பெருந்தன்மையாக தனம் சொல்ல.
“அம்மா, நான் கல்யாணம் முடிச்சதுல இருந்து குல தெய்வத்துக்கு நான் பொங்கல் வைக்கல. அஞ்சு வருசம் ஆச்சு, இனி செய்ற எதுவும் எம் குடும்பத்தோட தான் நிக்கணும். சரண்யா விட்டு யார் பொங்கல் வைப்பா. சொந்தம் இருந்தாலும் எம் பிள்ளைகளை கூட்டி போய் சாமி முன்னாடி என்னை தனியாவ நிக்க சொல்ற, அதுவும் சரண்யா இருக்கும் போது… இந்த மாதிரி பேச்சு இனி வேணாம்.” என்று சொன்னவன் தந்தை முகம் பார்க்க,
“நீ சொல்றது தான் சரி வெற்றி. இம்புட்டு வருசம் கழிச்சு குல தெய்வத்தை பார்க்க குடும்பமா தான் போகணும். நாங்க எல்லாம் இருந்தா ஆச்சா, மருமக வராம நாம போய் நிக்குரது சரி வராது. பொங்கல் வேண்டாம் கெடா வெட்டு வெற்றி. ரெண்டு பிள்ளைக, புது தொழில்ன்னு முன்னரே நிக்கும் போது நம்ம குல தெய்வம் துணை வேணும்…” வேல் முருகன் சொல்ல
முனங்கி கொண்டே தனம் எழும்ப, “அம்மா, சாப்பிட்டு போங்க…” என்று தாயை பார்த்து சொல்ல.
“எனக்கு வேணாம், வீட்டுல சோறு பொங்கி தான் வச்சேன். இந்தா வீட்டுக்கு வா…” என்று கணவனை பார்த்து சொல்ல.
“சாப்பாடு வேணாமா இல்லை மகனே வேணாமா?…ரெண்டு மகன் இருக்குறதால ஒருத்தன் இளப்பம் தான்…” என்று சொன்னவன் மனைவியை பார்க்க,
சரண்யா அவசரமாக உணவை எடுத்து வைத்தாள். அடுத்து தனம் முறுக்க வில்லை. “தாய்க்கு தலை பிள்ளைன்னு உன்னை தலையில வச்சதுக்கு தான் பேசுற…”
“அப்படியா! என்கிட்ட சொன்ன மாதிரி, சக்தி கிட்ட சொல்லுவியா, இல்லை அவன் தான் பொண்டாட்டிய விட்டு எதுவும் செய்வானா. உங்களை வேனா ஒதுக்கி வைப்பான்…” என்று வெற்றி சொல்ல, சரண்யா பேச வில்லை. அமைதியாக உணவை எடுத்து வைத்தாள்.
வெற்றி மனைவியிடம் சொன்னது ஒன்று தான்.
“சரண்யா, இனி அடிக்கடி எங்கம்மா வரும். ஏதாவது தேவையில்லாம பேசுனா, நீயும் பதிலுக்கு பேசு. ஒவ்வொரு தடவையும் நான் தலையிட மாட்டேன். நீ எதுத்து வாய் பேசினாலும், வந்ததும் சாப்பாடு போட்டு வச்சுடு.தள்ளி மட்டும் வைக்காத, நிக்காத… என்ன பேசினாலும் மகன் வீடுன்னு எங்க அம்மா, அப்பா சாப்பிடுவாங்க. வேணுமான்னு கேட்காத இருக்குறத குடுத்து விடு…” வெற்றி சொல்ல, சரண்யா புரிந்து கொண்டாள்.
அடுத்தடுத்த நாட்களில் கோவிலுக்கு செல்ல மட்டும் நேர மில்லை, தடங்கல் தான் வந்தது. ஏதோ சரண்யா தான் காரணம் என்பது போல தனம் பேசி கொண்டிருந்தார்.
அன்றைய விடுமுறை தினத்தில் வெற்றி வீட்டில் தான் அனைவரும் இருந்தார்கள். மாயா உடன் இருக்க சரண்யாக்கு வேலை குறைவு தான். பிள்ளைகள் அவர்களுக்குள் விளையாடி கொண்டு இருந்தார்கள்.
அஜி, ஏதோ எடுக்க… விஜி அதை பறிக்க முயல, சின்ன சண்டை தான். இதில் அஜி குட்டி, “அப்பத்தா, இவ என்னை அடிக்கிற, எனக்கு வலிக்குது…” என்று குழந்தை குரலில் கத்த.
பதறி போன தனம். ஓடி சென்று விஜி முதுகில் ஒரு அடி வைக்க, குழந்தை துடித்து போனது. பதறி போய் தூக்கிய வேல் முருகன் கன்னம் வீங்கும் அளவுக்கு மனைவிக்கு ஓங்கி ஒரு அறை வைத்தார்.
வீட்டில் எல்லோரும் பார்க்க தான். சரண்யா வந்து பிள்ளையை வாங்க, தாய் செய்தது தவறு என்று தெரிந்தும் அந்த நேரம் கண்டிக்க முடியவில்லை. வளர்ந்த பிள்ளைகள் இருக்க, தாய் அடி வாங்கியது கொஞ்சம் சங்கடம் தான். அதன் கொண்டு தான் சரண்யாவும் வாய் மூடி கொண்டாள்.
“ரெண்டு பேரும் தான அடிச்சு கிட்டாங்க, அப்ப ரெண்டு பேர் முதுகுலையும் அடி போட வேண்டி தான. அது என்ன சின்ன குட்டி மேல கை வைக்கிறது. கைய ஒடச்சு போடுவேன் பார்த்துக்க…” என்று வேல் முருகன் கத்த, அமைதியாக வெளியேறினார் தனம்.
கிடா வெட்டுக்கு நாள் குறித்து இருக்க, இப்படி ஒரு தகராறு… எதுவும் குழப்பம் செய்வாரோ என்று கவலையில் இருக்க, எதுவும் நடக்காதது போல் மறுநாள் வந்து விட்டார்.
உண்மையில் சரண்யாக்கு ஆச்சர்யம் தான். நேற்று தான் மருமகள், மருமகன் முன்னே அடி வாங்கி இருக்க, அதை தூசி போல தட்டி விட்டு மருமகளை அதிகாரம் செய்ய வந்தாச்சு…
அவள் முன் வந்து நின்றவர், “என்ன…” என்று கேட்க.
எனக்கு எதுக்கு வம்பு என்று நினைத்தவள், மெளனமாக சாப்பாட்டை எடுத்து வைத்து வெளியேறினாள்.
அவள் பின் கட்டில் இருக்கு, அங்கும் வந்தவர்,
“என்னடா, நேத்து அடி வாங்குனவ வெட்கமில்லாமல் வீடு வரான்னு நினைக்கிறய…” என்று கேட்க. அவள் இல்லை என்று தலையசைத்தாள்.
“எம் மகன் வீடு நான் வருவேன். எனக்கு தான் மொத உரிமை. என்னை தாண்டி நிக்க நினைக்காத. அப்புறம் முன்ன மாதிரி உங்கத்தா வீட்டுல ஒண்டி வாழணும்…” என்று எகத்தாளமாக சொன்னார். உண்மையில் தனதுக்கு தான் மருமகள் முன் அடி வாங்கியது அசிங்கமாக, அவமானமாக இருந்தது. அதை போக்க தான் இந்த உருட்டல்…
அவர் பேச்சை சரண்யா ஆதரிக்க வில்லை. சரியில்லாத ஆள் எதற்கு வம்பு என்று தான் ஒதுங்கி கொள்வாள். கணவன் சொல்லியது போல், வந்தால் வயிறார சாப்பாடு, அத்தோடு ஒதுங்கி கொள்வாள். இவர் பேச்சு கோபத்தை கொடுக்க, ஒதுங்கி தான் சென்றாள்.
தனம் விடவில்லை, “அது என்ன பொம்பளைக்கு கூச்சம், வெட்கமில்லாம ரோட்டுக்கு நேர உட்கார்ந்து ஊஞ்சல் ஆடுற… எத்தனை ஆம்பிளைக போக வர இருப்பாங்க. ஒரு அடக்கம் வேணாம். இனி, நீ ஊஞ்சல் பக்கமே போக கூடாது…” என்று கட்டளை போட,
“போன…” இனி விடுவதில்லை.
“எது!… என்னடி குரல் ஒசருது. போனாவா போய் பாரு…” என்று தனம் கோபமாக கத்த.
அவர் பார்க்கும் போதே, அங்கிருந்த ஊஞ்சலில் ஏறி அமர்ந்தவள். அவள் வழக்கம் போல் காலை உந்தி அட்ட, கொதித்து போனார் தனம்.
“எம்புட்டு திமிரு, பெட்டி கட்டி வைடி சண்டாளசிரிக்கி… எம் மகன் வரட்டும் திரும்ப உன்னை ஓட விரட்டுறேன்…” என்று அகங்காரமாக கத்தினார்.
“முடிஞ்சா, முயற்சி பண்ணுங்க. ஆனா, தோத்து தான் போவீங்க…” எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாள்.
“ஓ… திரும்ப வீட்டுக்குள்ள நுழைஞ்சதால இந்த பேச்சா… என்னடி மறந்து போச்சா, அர்த்த ராத்திரியில போட்டு இருக்க உடையோடு ஓட ஓட விரட்டுனவ இந்த தனம். பிள்ளைகளை காட்டி வீடு வந்தவ நீ, மறந்துடாத… உம் பொழப்பு ஊர் நாறுச்சு. வாழ விதியத்து போய் கிடந்தது மறந்துட்டையா. ஒய்யார இருக்குமாம் தாழம்பூ உள்ளாரா பார்த்த ஈரும், பேனும்…”
சரண்யா அசரவில்லை. இவர் வாய்க்கு பயத்து எவ்வளவு நாள் தான் ஒதுங்கி போவது.
“எம் பொழப்பு இருக்கட்டும். உங்க பொழப்பு சந்தனமா மணக்குதா…” என்று கேட்க.
சரண்யா வாய் தனம் எதிர்பார்க்காதது. இவ்வளவு நடந்த பின்னும் ஒதுங்கி தான் போவாள். இன்று என்ன ஆனது. இந்த வாயை அடக்காமல் தனம் ஓயமாட்டார்.
“எனக்கு என்னடி, முத்து மாதிரி மூணு பிள்ளை பெத்தேன். மூணும் நல்லா வாழ்து. முப்பத்தாறு வருசம் ஆச்சு, கண் நிறைஞ்சு மரியாதையான வாழ்க்கை தான்…” மார்த்தட்டி சொன்னார் தனம்.
ஊஞ்சலில் இருந்து எழுந்து வந்தவள், “எது மரியாதை… கல்யாணம் பண்ணி, மூணு பிள்ளை பெத்து, சம்மந்தம் பண்ணி, பேரன் பேத்தி பார்த்தும் மருமகன், மருமக இருக்க புருசன் கிட்ட அடி வாங்கினது மரியாதையா… நல்ல மரியாதையான வாழ்க்கை தான்…” என்று சரண்யா சொன்ன உடன்,
“எந்த ஊர்ல புருசன், பொண்டாட்டி சண்டை இல்லை. இது எல்லாம் சகஜம் தான்…” என்று தனம் சொல்ல
“அப்ப எனக்கும் அது தான். எந்த ஊர்ல புருசன் பொண்டாட்டி சண்டை இல்லை. உங்களை மாதிரி தான் நாங்களும் சண்டை போட்டோம், சேர்ந்தோம். நான் கண் நிறைக்க கல்யாணம் பண்ணலைய, பிள்ளை தான் பெத்துகலையா…” என்று சொன்ன சரண்யா,
“ஆனா, இது ஒன்னும் மரியாதை கிடையாது. கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துகிறது மட்டும் மரியாதையான வாழ்க்கை கிடையாது. நமக்கான மரியாதைன்றது நம்ம செயல்ல, நடத்தையில, பேசுற வார்த்தையில இருக்கு. உங்க மூஞ்சிக்கு முன்ன சிரிச்சு பேசுற எல்லாம் உங்க முதுகுக்கு பின்னாடி ஆத்தே அவளா, சரியான சாக்கடை அப்படி தான் சொல்றாங்க…”
“ஏய்!… என்னடி சொன்ன” தனம் எகிறி வர
நிஜமா, இது தான் இத்தனை வருசமா நீங்க தேடி வச்ச மரியாதை. நம்ம முகத்துக்கு நேர பேசுற வார்த்தை தான் முதுகுக்கு பின்னாடியும் பேசணும். உங்களை யாராவது அப்படி பேசுவாங்களா… ஊரா விடுங்க. மொத உங்க புருசன் பேசுவாரா. உங்க பிள்ளைக சொல்லுமா… எங்கம்மா மாதிரி யாரும் இல்லன்னு… என்ன சொல்வாங்கன்னு நான் சொல்லட்டுமா. இந்த அம்மாவோட ஒரே ரோதனை, எங்க போனாலும் பஞ்சாயத்து இழுத்து வரும்… யாரு உங்க அருமை மக தான். சொந்தம்ன்னு ஒரு நாளும் யாரையும் சேர்க்க மாட்ட. எங்க போனாலும் வெட்டி பேசி வம்பு தான் வாங்குவா… இது என் மாமனார் தான். உங்க சின்ன மருமகளை விட்டுட்டேன் பாருங்க. எந்த நல்லதுலையும் ஒரு குறை கண்டு பிடிக்கிற ஆள் அத்தை தான்… இது எல்லாம் உங்க வீட்டு ஆளுக சொன்னது தான்…” என்று சொன்னவள்.
தனம் வெறித்து பார்க்கும் போதே, “இதே உங்க மக கிட்ட, புருசன் கிட்ட என்னை பத்தி கேட்டு பாருங்க. மதினி, மருமகன்னு சொல்ல தாண்டி வேற வார்த்தை வராது. இப்ப சொல்லுங்க யார் பொழப்பு நாறி போய் இருக்கு. பெத்த பிள்ளைகளும், கட்டுன புருசனும் மதிக்காத ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு அடுத்தவங்க வாழ்க்கையை நீங்க விமர்சிக்கலாமா… உங்களை பார்த்து ஒதுங்கி போறது சாக்கடை மேல ஏன் கல்லு எரியனும்ன்னு தான். நாங்க எல்லாம் நமக்கு மேல ஒருத்தன் இருக்கான், அவன் கிட்ட கூலு வாங்க கூடாதுன்னு நினைப்பையும், சொல்லையும் அடக்கி வாழ்றவங்க. உங்களை மாதிரி இஷ்டத்துக்கு வாய் இருக்குன்னு பேசுற ஆள் இல்லை…”
“எனக்குனு ஒரு மரியாதை இருக்கு, என் நடத்தைக்கு என் கிட்டயே மதிப்பு இருக்கு. கண்ட மாதிரி வாய் பேசுற ஆள் நான் இல்லை. உங்களோடு சரிக்கு சமமா பேசி, நம்ம தரத்தை ஏன் குறைக்கணும்ன்னு ஒதுங்கி போறாங்க. அது என்னவோ உங்களை பார்த்து பயந்து போற மாதிரி உங்களுக்கு ஒரு கர்வம். நம்ம குடும்பத்தை அடக்கி ஆள்ரது என்னைக்கும் நமக்கு பெருமையை தராது. நீங்க என்னை பேசும் போது நான் ஒதுங்கி போனதும் சாக்கடை மேல ஏன் கல்லு எரியனும்…”
தனத்திற்கு கோபம் அடக்க முடிய வில்லை, “நீ வாழ்ற வாழ்க்கை எம் மகன் போட்டது. அந்த மகன், இந்த தனம் பெத்தவன்…”
“உங்களை மாதிரி தரம் கெட்டு வார்த்தை விடாம வாயடக்கி, கையடக்கி நின்னதுக்கு கடவுள் கொடுத்தது. நீங்க சொன்ன ஒண்டி குடுத்துனத்துல, அடுத்தவங்க கைய எதிர் பார்த்தாலும் அடுத்தாளு குடி கெடுக்காம என் வாழ்க்கைக்கு நான் உண்மையா இருந்ததுக்கு கடவுள் கொடுத்தது. அந்த வீட்டுல என்னை துரத்தி விட்டீங்களே, இந்த வீட்டு படியேறி என்னை வெளியேத்த முடியுமா உங்களால?… எம் பிள்ளைகளை தெருவுல போட்டீங்களே அங்க போய் முன்ன நின்னு பாருங்க வீடு, கடை எல்லாம் எம் பிள்ளைக பேரு தான். கடவுள் யாரை தூக்கி ஒய்யாரமாக வச்சு இருக்கார்… வாயில விடுற வார்த்தைக்கு கூட சாமிக்கு பயப்படனும். மாசமா இருக்குற பொண்ணுன்னு பார்க்காம எத்தனை நாள் என் சாப்பாட்டுல கை வச்சீங்க, இன்னைக்கு என் கையால சாப்பாடு போடுறேன். ரொம்ப பெருமையா இருக்கு.”
“இப்ப சொல்றேன் கேளுங்க. என் வாழ்க்கைக்கு எந்த குறைச்சலும் இல்லை. நாலு பேர் மத்தியில் அடிச்சாலும், நாலு சுவத்துகுள்ள கால பிடிக்கிற எம் புருசன் நல்லவன் தான். அதான் ஒய்யாரமாக ஊஞ்சல் ஆடுறேன்…”
“எம் மகன் வரட்டும், உனக்கு இருக்கு…”
“வரட்டுமே, எனக்கு எந்த பயமும் இல்லை. முப்பத்தாறு வருசமா நீங்க காணத ஒன்னு எங்க வாழ்க்கையில இருக்கு. அது தான் நம்பிக்கை. இங்க நாம தான் இருக்கோம். உங்களை நான் அடிக்கிறேன்னு வைங்க…”
என்ன என்று அதிர்ந்து தனம் பார்க்க.
“சும்மா ஒரு பேச்சுக்கு. நான் அடிச்சேன்னு உங்க மகன் கிட்ட சொல்லுங்க. நீங்க என்ன பண்ணீங்கன்னு தான் முதல் வார்த்தை வரும். எம் பொண்டாட்டி தப்பு பண்ண மாட்டான்னு எம் புருசனுக்கு ஒரு நம்பிக்கையா நான் கொடுத்திருக்கேன். உங்க வாழ்க்கையை, உங்களை நீங்களே கேட்டு பாருங்க…” சரண்யா சொல்ல.
வேக வேகமாக போனார் தனம். வேற எங்க மகனை பார்க்க தான். இன்றைக்கு இவளுக்கு ஒரு முடிவு காட்டாமல் விட கூடாது.
சரண்யா அமைதியாக அமர்ந்து விட்டாள். இன்றைய கோபம் அல்ல, பல நாள் மன அழுத்தம் வெடித்து விட்டது. கணவன் மேல் நம்பிக்கை இருந்தாலும், சிறு உறுத்தல் இருந்தது. பெற்ற தாய் அல்லவா…
சாப்பிட வீட்டுக்கு தான் கிளம்பி கொண்டு இருந்தான். வெற்றி என்ற சத்தம் கேட்க. “யாரு, அம்மாவா… என்னம்மா வெயிலுல வந்திருக்க, வா, உட்கார்…” என்று அமர வைத்து தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க.
அப்படி ஒரு திருப்தி தனம் முகத்தில்.
“சாப்பிட வீட்டுக்கு தான் வாரேன். எதுக்கு இவ்வளவு தூரம் வந்த…” என்று கேட்க.
கண்களில் நீர் நிறைய தலை குனிந்து அழுதவாரு இருந்தார்.
பதறி போனவன், “என்னம்மா…”
“இந்த வீட்டு மூத்தவ தான்.”
“சரண்யாவா…”
“ஆமாடா, நான் சாக்கடையாம். என்ன வார்த்தை சொல்லிட்டா பாரு…” என்று அழுக.
“சரண்யாவா சொன்னா… அவளே சொல்ற அளவுக்கு நீங்க என்னம்மா சொன்னீங்க… காரணமில்லாம அவ ஏன் கோபப்பட போறா, அவ கிட்ட எதுவும் சண்டை போட்டீங்களா…” என்று ஒரு வார்த்தை தான் வந்தது.
“மூணு பிள்ளை மூத்தது முத்துன்னு பொத்தி வச்சேன். நல்ல பேரு தான் எனக்கு…” என்று மூக்கை சிந்த,
தாயை அழுத்தமாக பார்த்தவன், உடனே மனைவிக்கு போன் செய்து விட்டான். “சரண்யா, என்ன நடந்துச்சு…”
மறைக்க ஒன்றும் இல்லை, பயமும் இல்லை எல்லாவற்றையும் சொல்லி விட்டாள்.
“மாமியார்ன்னா நாலு வார்த்தை கூட, குறையா வந்து விழ தான் செய்யும். அதுக்காக என்னை என்னவும் பேசலாமா… அவளை பயமுறுத்தி வை மகனே. நீ நல்லா ஒய்யாரமா தூக்கி வச்சுட்ட, அவ ஆடுறா… பின்னாடி உன்னையவே மதிக்க மாட்டா…”
“நீங்க சொல்றது சரி தான்மமா. அப்ப என்ன செய்யலாம்…” யோசிப்பது போல பாவனை காட்டியவன்,
“அவளை அடிச்சு வீட்டை விட்டு அனுப்பிறேன். நானும், பிள்ளைகளும் தனியா நிக்கிறோம். ஆனா, சரண்யா பிள்ளைகளை விட மாட்டா. அப்போ அவ பிள்ளைகளை கூட்டி போகட்டும் நான் அனாதையா நிக்குறேன். சரிதானா, அப்ப தான் அவளுக்கு புத்தி வரும்…” என்று வெற்றி சொல்ல.
“என்ன வெற்றி, நான் என்ன அப்படியா சொன்னேன்…”
“வேற என்னம்மா பண்ண சொல்றீங்க. நீங்க சொல்றது அப்படி தான் இருக்கு. அவ என்ன அடிமையா… எங்கம்மா சொல்றத தான் கேட்கணும், இல்லன்னா வீட்டை விட்டு துரத்திவிடணுமா… இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா. அவ என்ன வழி இல்லாமவா என் கூட வாழ வந்தா. உன் மகன் தான் கால்ல விழுந்து கெஞ்சி கூத்தாடி கூட்டி வந்துருக்கேன். என்னை பத்தி யோசிக்காம இஷ்டத்துக்கு பேசி வச்சு இருக்கீங்க…” என்று சத்தம் போட
கால்ல விழுந்தையா வெற்றி…” என்று அதிர்ந்து போய் தனம் கேட்க.
“பின்னே, நான் என்ன அவ்வளவு பெரிய உத்தமனா. நான் போய் நின்னதும் கூடவே வர. நான் பண்ணது எல்லாம் அயோக்கிய தனம் தானம்மா. எந்த பொன்னும் யோசிக்க தான் செய்வா…” என்று சொன்னவன். கண் மூடி யோசித்தான், பின் தாயை பார்த்து அமர்ந்தவன்,
“கட்டாயபடுத்தி எந்த உள்ளார்ந்த உறவும் வராது. உங்களுக்கு சரண்யாவ பிடிக்கலையா ஒதுங்கி போங்க. எதுக்கு வீம்புக்கு போய் சண்டைக்கு நிக்குறீங்க…”
“நான் என்ன சண்டைகாரியா?…”
“என்னை முழுசா பேச விடுங்க. உங்களுக்கு பிடிக்கலை. சரிதான், அதுக்கு நான் என்ன பண்ண… அவளை நான் என்ன கூட்டி ஓடியா வந்தேன். நீங்க தான பார்த்து கட்டி வச்சீங்க. இன்னைக்கு தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்றது சரி கிடையாது…”
“நான் எதுவுமே பண்ணலை வெற்றி…” விட்டு குடுக்காமல் தனம் பேச, கோபம் ஏறியது வெற்றிக்கு…
“அம்மா, நான் ஒடைச்சே பேசுறேன். அபிராமிய காதலிச்சது நான் தான். உங்க கிட்ட சொல்லி பேச சொன்னதும் நான் தான்… விதி எல்லாம் மாறி போச்சு. இன்னைக்கு எனக்கு மனைவி சரண்யா தேவி தான். இரண்டு பிள்ளைகளுக்கு பெத்தவங்களா மாறியாச்சு. எல்லாத்தையும் கடந்து நிக்குறேன். நீங்க தான் அங்கையே நின்னு, என்னையும் சேர்த்து இழுக்குறீங்க… உங்களுக்கு பிடிக்கலன்ன அவ போற பாதையில கூட போகாதீங்க. உங்க மகன்றதுக்காக நானும் அதைவே செய்வேன்னு நினைக்காதீங்க. என் குடும்பம் சரண்யா தான்…” என்று தெளிவாக சொன்னவன்.
உங்க குணமே எனக்கு தெரியலை. ஒரு பொண்ணை எவ்வளவு தான் ஓரம் கட்டுவீங்க. நம்ம வீட்டுல நாங்க எல்லாம் கலரு, சக்தி அப்பா மாதிரி கருப்பு. உங்க பிள்ளையை நீங்க ஒதுக்கியா வச்சீங்க. எல்லாத்துக்கும் குறை சொல்லி அவளை அடக்கி, ஒடுக்கி அவளை பார்த்தா உங்களுக்கு என்னன்னு இருக்கு. தாலி கட்டுன நான் மனசு ஒப்பிதான் வாழ்றேன். இப்ப எங்க வந்து நிக்குது தெரியுமா… உங்க சொந்த மகன் வீட்டுல ஒரு நாள் தங்க முடியுமா. ஒரே ஊர்ல ரெண்டு குடும்பமா நாம வாழ்றோம். அந்த வலி உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லை…”
“இதுவரைக்கும் உங்களை நான் ஒரு வார்த்தை கேட்டது இல்லை, ஏன் முதல் குற்றவாளியே நான் தான். தண்டனை முதல எனக்கு தான் வரணும். எம் பிள்ளைகளை தெருவுல தூக்கி போட்டீங்க. ஒரு வார்த்தை கேட்டேன… என் இடத்துல எந்த ஆம்பிளையாவது விடுவானா. ஆனா, நான் எல்லா தப்பும் என் தலையில போட்டு அமைதியா தான் கடந்து போனேன். எப்பவும் என் வாழ்க்கையை நான் தான் சரி செஞ்சு வாழ்றேன். தயவு செஞ்சு எந்த குழப்பமும் பண்ணிடாதீங்க…”
“எம் மகனே இப்படி எல்லாம் பேசுற, அம்மாவுக்கு கஷ்டமா இருக்கு…”
“சரி விடுங்க. நீங்க மகன், மருமக, பேத்தின்னு பொதுநலமா யோசிக்க வேணாம். கொஞ்சம் சுயநலமா யோசிங்க. சரண்யா இடத்துல வேற பொண்ணு இருந்தா எண்ண ஆகும். நீங்க அந்த வீட்டு படியேற முடியுமா…. உங்களுக்கு எதுக்கு இவ்வளவு விரோதம். நிஜமாவே விரோதமா இருக்க வேண்டியது சரண்யா தான். ஆனா, அவ தான் விட்டு குடுத்து போறா… என்னையும், எம் பிள்ளைகளையும் துரத்தி விட்ட நீங்க, எம் வீட்டுக்கு வராதீங்கன்னு ஒரு வார்த்தை சரண்யா சொன்னா. யாரால என்ன செய்ய முடியும். நியாயம் அவ பக்கம் தான் இருக்கு. ஆனா, அவ தான் எல்லோரையும் அனுசரிச்சு போறா… உங்களை பார்க்கலையா, சரியா கவனிக்கலையா, சாப்பாடு போடலையா…” என்று சொன்னவன்.
“அவ்வளவு ஏன்?… உங்க மகன், மகள கூட அவ தான் பாக்குற. இன்னைக்கு நீங்க எல்லாத்தையும் முடிச்சு விட்டீங்க..”
“நான் என்ன மகனே செஞ்சேன்…” அவர் குரலில் அழுகை நிறைந்து இருந்தது.
இன்னும் என்னம்மா செய்யணும். நீங்க பாட்டுக்கு பேசிட்டு போவீங்க. அவ கோபம் யார் பக்கம் திரும்பும். இன்னைக்கு வேறுபாடு இல்லாம நாத்தனார், கொழுந்தன்னு இழுத்து போற… நாளைக்கு ஒதுங்கி தான் போவா… மாமியார் சரி இல்லை நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி போனா. உம் பிள்ளைகளுக்கு பிறந்த விடுன்னு ஒன்னு இல்லாமவே போகும். இன்னைக்கும் அவங்க ரெண்டு பேரும் வந்தா தங்குறது சரண்யா வீடு தான். உங்களை கூட தேடுறது இல்லை. நம்ம அண்ணன் வீடுன்னு வாராங்க. நாளைக்கு அண்ணன் உறவே இல்லாம போகும்…”
“வெற்றி” என்று நெஞ்சில் கை வைத்த தனம்.
“நான் இல்லாம போனாலும், எம் பிள்ளைக ஒற்றுமையா தான் இருக்கணும்…” அழுகை பொங்கியது தனதுக்கு.
“அது உங்க கைல தான்மா இருக்கு. நீங்க இப்படியே இருந்தா சரண்யாக்கு வெறுப்பு தான் வரும். அந்த வெறுப்பு கோபமா உங்க எல்லார் மேலையும் தான் திரும்பும். இன்னைக்கு உங்க கூட சண்டை, நாளைக்கு அப்பா கூட அடுத்து மாய, சக்தின்னு குடும்பமே ஒடைஞ்சு போயிடும். எல்லாருக்கும் ஒருத்தன் நல்லவனா ஆக முடியாது. எனக்கு அப்படி ஒரு நிலமை வந்துச்சுன்னா, தயங்காம என் குடும்பம் பக்கம் தான் நின்னு, உங்களை ஒதுக்கி வைப்பேன்…”
. “வெற்றி…” நெஞ்சில் கை வைத்தார் தனம்.
“நிஜமா தான்மா. எல்லோரும் குடும்பமா நிக்கும் போது நான் ஏன் தனியா நிக்கணும். கொஞ்சம் விட்டு கொடுத்து, பொறுத்து போன என்னவாம். சரண்யா விட்டு கொடுக்கலை. நாம அவளுக்கு செஞ்ச அநியாயத்துக்கு, நம்மளை ஒதுக்கி தான் வைக்கணும். அவ அனுசரிச்சு ஒரே குடும்பமா நம்மளை எல்லாம் இழுத்து போகல. நாமளும் விட்டு கொடுத்து போகலாம் தான…”
உங்க காலத்துக்கு அப்புறம் ஒருத்தருக்கொருத்தர் தாங்கி நிக்கிறது கூட பிறந்த உறவு தான். உங்க வாயால அதை கெடுக்காதீங்க. நாளைக்கு மாயாக்கு அண்ணன்னு ஒருத்தன் இல்லாம போயிடுவான். உங்களுக்கு என்னம்மா குறை. உங்க பிள்ளைக மூணு பேரும் நல்லாதான இருக்கோம். குடும்பம், தொழில், பிள்ளை, வருமானம்ன்னு நல்லா இருக்கு எங்க வாழ்க்கை. அதை பார்த்து சந்தோச படுங்க. என்னைக்கும் மருமகன்னு சரண்யாவ தேடி வாரிங்க. அபிராமியவ தேடி போறீங்க… உங்க குடும்பம் ஏதுன்னு முதல்ல யோசிங்க…”
“அம்மா, நான் உங்களை விட்டு தள்ளி நிக்குறேன். அதை நீங்க உணரவே இல்லையா…” என்றான்.
“வெற்றி…” குரல் உருகியது.
“உங்களுக்கான கடமைய தான் செய்யுறேன். உங்க கிட்ட உரிமையா நான் நிக்கவே இல்லை. என்னைக்கு அந்த வீட்டிலே இருந்து எம் பிள்ளைகளை தூக்கி போட்டீங்கன்னு தெரிஞ்சதுதோ அன்னிக்கு இருந்து அந்த வீட்டு படியேறல… உங்களை முன்ன வச்சு நான் நிக்க இல்லை. ஒதுங்கி போனேன்…” கண்களை மூடி திறந்தவன்.
“எங்க எல்லாருக்கும் தனித்தனியா பேர் சொல்ல குடும்பம் இருக்கும்மா… ஆனா, உங்களுக்கு குடும்பம்ன்னு யார் இருக்க. அது நாங்க தான். நாங்க தான் உங்க குடும்பம். அதை உடைச்சு போடாதீங்க…”
அம்மா, நான் பதினஞ்சு வயசுல லாரில வேலைக்கு சேர்ந்தேன். தம்பி படிப்பு, தங்கச்சி கல்யாணம், வீட்டை சரி பண்ண, புது வீடு கட்டன்னு உங்களை தான் பார்த்தேன். என் கடமையை சரியா தான் செஞ்சு இருக்கேன். இப்ப தான் என் குடும்பம்ன்னு நிக்கிறேன். அதை இழக்க மாட்டேன். உங்களுக்கான என் கடமை முடிஞ்சது. இனி எம் பிள்ளைகளை பார்க்கணும். ஊர் ஊரா ஓடிட்டேன். எம் பிள்ளைகளை பார்த்து தான் ஓர் இடத்துல உக்காருறேன். எம் பொண்டாட்டி, பிள்ளைக தாண்டி நான் என்னைக்கும் வர மாட்டேன். உங்களுக்காக தான் ஓடுனேன். தயவு செஞ்சு என்னை வாழ விடுங்க…”