சரண்யா அலட்டி கொள்ளவே இல்லை. வெற்றியை, அவள் குறைந்த பட்சம் பார்வையால் கூட தொடர வில்லை. முழுதாக நான்கு வருடம் கடந்தும், கோபத்தில் கூட அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க வில்லை. அவள் வீடு ஒரு கிளி கூடு, அதில் அவளோடு பிள்ளைகளுக்கு மட்டுமே இடம். வெற்றி என்ற ஒருவன் அவர்களின் நினைவில் கூட இல்லை. அவனோடு, அவள் வாழ்ந்த வாழ்வை வெறுப்பாக, கோபமாக கூட திரும்பி பார்க்க மனம் வரவில்லை. ஆயிரம் நடைமுறை கொண்ட நிகழ்காலம் கண் முன் நிற்க, இறந்து போன நினைவுகளை தூசி தட்டி இவனை மீட்டெடுக்க அவசியமே இல்லை. ஏனென்றால் வெற்றி வேல் என்ற ஒருவன் அவள் வாழ்வில் எங்கும் இல்லை. இனி, எப்போதும் இல்லை…
ரகம், ரகமாக பட்டு சேலையை கடை பரப்பிய போதும், எதுவும் எடுக்க தோன்றாமல், என்ன செய்வது என்றும் புரியாமல் முழித்து நின்றாள் அபிராமி. வெண்ணெய் திரண்டு வரும் நேரம் பானை உடைந்த கதையாகி போனது… சரண்யா என்ற ஒருத்தி அவளுக்கு யாருமே இல்லை. அவள் மீது கோபம், விரோதம், பயம் என்று எதுவுமில்லை. அவளின் நேர் கொண்டு எண்ணம் எல்லாம் வெற்றியை கொண்டது. அவனின் அங்கீகாரம் தான். காதலிப்பது பெரிய விசயமே இல்லை. ஆனால், காதலுக்கான அங்கீகாரம், அது பெரிய விசயம் தானே… அந்த அங்கீகாரம் தனக்கு கொடுக்க பட வில்லையென்றால், தனது காதல் பொருள் அற்றது, நியாயமற்றது, அத்தோடு தகாதது. வெற்றியின் முகம் பார்த்தாள் அபி…
வெற்றி முகம் செத்து கிடந்தான். அவனால் நடந்ததை நம்பவே முடியவில்லை. அவன் மனநிலை அவனுக்கே விசித்திரம் தான். மனம் அறிந்து காதல் என்ற உணர்வு வந்தது அபிராமி மீது தான். சரண்யா உடனான அவன் வாழ்க்கை திணிக்க பட்டது. நிச்சயம், அவன் அறிவான். அபி மீது கொண்ட அவன் ஈடுபாடு, சரண்யா மீது துளி வந்தது இல்லை. ஆனால், சரண்யா அவன் மனைவி. அந்த எண்ணம் தான் அவனை கூறு போட்டது. என்ன தடுத்தும் சரண்யாவை ஒதுக்கி வைக்க முடியவில்லை.
பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம். ஒரு கட்டத்தில் அவர்களே முடித்தும் வைத்து விட்டார்கள். ஊர் வழக்க படி உறவு முடிந்து விட்டது. அவரவர் பாதையில் சென்று வருடமும் கடந்து விட்டது. இன்று சரண்யா அவளுக்கான நிலையில் நிற்கிறாள். அன்று அபியின் கை தொட்டத்திற்கு ஆட்டமாக ஆடியவள். இன்று ஜோடியாக இருவரும் சேர்ந்து நிற்கும் போது கொஞ்சமும் முகம் மாற வில்லை. அவ்வளவு ஏன் அவர்களை கவனத்தில் கூட அவள் வைக்க வில்லை. நிதர்சனத்தை எல்லோரும் பிடித்து கொண்டார்கள். அபி, சரண்யா தொடங்கி வீட்டார் எல்லோரும் நிகழ்காலத்தில் ஒன்ற, தன்னால் மட்டும் முடியவில்லை. எது என்னை ஆட்டி வைக்கிறது. முதல் திருமணம் எல்லோருக்கும் வெற்றியை தருவது இல்லை. தனக்கென மீண்டும் ஒரு வாழ்க்கையை பல பேர் அமைத்து கொள்கிறார்கள். அவ்வாறு தான் இவன் வாழ்வும். எதார்த்தமாக நிகழ்காலத்தில் தனக்கென ஒரு வாழ்வை இவன் தொடங்கலாம் தானே…
ஊர் முன் அத்து விட்ட உறவை பார்த்து அஞ்சி ஒதுங்குவது ஏன்?… அது தான் அபியின் எண்ணமும், ஊரறிய ஒத்து வராது என்று ஒதுங்கி கொண்டாச்சு. இருவருக்கும் தொடர்பு இல்லை என்று அவரவர் வழியில் சென்ற பின்னும், எந்த நினைப்பு இவனை உறுத்துகிறது. கள்ள காதல் செய்து மனைவியிடம் மாட்டி கொண்ட கணவன் மாதிரி பயந்து, பம்மி கொண்டு நிற்பது ஏன்?…
இதே எண்ணம் தான் சரண்யாக்கும். மூன்று மாத பிள்ளை வயிற்றோடு மனைவி நிற்கையில், என் மனதில் அபிராமி மட்டும் தான் என்று நெஞ்சில் தீ வைத்தவன். இன்று நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நிற்பான் என்று எதிர்பார்க்க, கூனி குறுகி கொண்டு நின்றான்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்த அகிலா, கொஞ்ச நேரத்திற்கு பின்பு தான் வெற்றியை கண்டு கொண்டாள். அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து சரண்யாவை பார்க்க, அங்கு ஒரு ரியாக்சனும் இல்லை. எப்பவும் போல தான் இருந்தாள். அபிராமி ஏதோ ஒரு சிந்தனையில் இருக்க, வெற்றி தலை நிமிரவே இல்லை. அத்தோடு, அவன் நின்று இருந்தது சரண்யா பக்கம். அது மேலும் ஒரு அதிர்ச்சி அகிலாக்கு, என்ன நடக்குது இங்க… சினிமால கூட இப்படி ஒரு நிலையை பார்த்தது இல்லை. இந்த சரண்யா என்ன எதுவுமே நடக்காத மாதிரி இருக்கா… எவ்வளவு நேரம் இந்த மெளன நாடகத்தை பார்ப்பது.
“அக்கா, சேலை பாக்குறீங்களா இல்லை வேற எதுவும் காட்டடுமா…” என்று அபியை பார்த்து அகிலா கேட்க. நிமிர்ந்து சரண்யாவை பார்த்த அபி, ஒன்றும் சொல்லாமல் வெளியேறி விட்டாள். என்ன அர்த்தத்தில் பார்த்தாள் என்றே சரண்யாக்கு புரியவில்லை.
“அண்ணா, சேலை இங்க இருக்கு…” என்றாள். சரண்யா, அவன் பார்வையை ஒரு பொருட்டாக கூட பார்க்க வில்லை. ஆரம்பத்தில் அவனை கவனித்து முகம் பார்க்க வில்லை. உண்மையில் அடையாளமும் தெரியவில்லை. இவளை பார்த்து பேச்சு வராமல் அரண்டு போய் நின்றவனின் முகத்தை உற்று பார்த்த பின் தான் கணவன் என்று கண்டு கொண்டாள்.
வெற்றியிடம் ஒரு கேள்வி இருந்தது. அது என்னவென்று சரண்யா அறிவாள். யார் என்று தெரியாது போல் காட்டி கொண்டாலும், அவள் வெற்றியின் மனைவி என்ற அடையாளத்தை தான் சுமந்து கொண்டு இருக்கிறாள். அவள் கழுத்தில் கிடக்கும் மஞ்சள் கயிறை நூல் பிடித்தால், வரும் முடிவு வெற்றி வேல் தான். இவள் ஆதர் அட்டை முதல் பிள்ளைகள் ஆதார் அட்டை வரை வெற்றி வேல் தான் முதன்மை, நான் சிங்க பெண் என்றால் யார் மதிக்கிறா!… திருமணம் ஆகி விட்டதா? கணவன் பெயர் சொல் என்று தான் கேட்கிறார்கள். விவாகரத்து ஆகி விட்டதா என்று யார் கேட்கிறார்கள். சேர்ந்து வாழ்வதும், வாழாமல் போவதும் கணவன், மனைவி பிரச்சனை தானே தவிர அரசாங்க பிரச்சனை அல்லவே…
பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது, பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு என்று எதுக்கும் குடும்ப தலைவன் பெயர் தான் முன் நிற்கிறது. நான் கணவன் உடன் வாழ வில்லை என்று எத்தனை இடத்தில் சொல்ல முடியும். அப்படி தைரியமாக சொல்லும் நவீன நாகரீக சமூகத்தில் இவள் இல்லை. ஒன்றை வயதில் அஜி,விஜிக்கு ஆதார் எடுக்கும் போது, அங்கு கண்ணாடி போட்ட ஒரு நடுத்தர வயது ஆள்…
“பிள்ளைக பேரு, அப்பா பேரு, ஊர், அட்ரஸ், பிறப்பு சான்றிதழ், ரெண்டு பேரோட ஆதார் எண் கொடுங்க…” என்று கேட்க.
தனியா வந்த சரண்யா, “நாங்க பிரிஞ்சு இருக்கோம்…” என்றாள் தயங்கியவாறே.
அவர் எந்த கடுப்பில் இருந்தாரோ, கண்ணாடியை துணியால் துடைத்து கொண்டே, “நீங்க சேர்ந்து இருங்க, பிரிஞ்சு இருங்க, அது உங்க பஞ்சாயத்து… பிள்ளைகளுக்கு அப்பன்னு ஒருத்தன் இருப்பான் தான, அவன் பேர் சொல்லுங்க…”
கொஞ்சம் தயங்கி, தயங்கி தான் வெற்றி வேல் என்ற பெயரை சொன்னாள் சரண்யா. அன்று தொடங்கியது, அவன் பெயரை முன் நிறுத்தி தன்னை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம்.
நாம் வாழும் சமூகத்தில் குடும்பம் என்ற சொல்லுக்கு பெரிய மதிப்பு உண்டு, மரியாதை உண்டு. குடும்பம் என்ற கூட்டுக்குள் வாழும், வளரும் பிள்ளைகள் எளிதாக நன்மதிப்பை பெற்று விடுவார்கள். நம் சமுதாயமும் குடும்பத்தை அடிப்படையாக கொண்டது தான். அந்த குடும்ப கூட்டில் முதன்மை பெறும் ஒரு ஆள் யார் என்றால் தந்தை தான். அவரை கொண்டே அவரின் குடும்பத்தை மற்றவர்கள் எடை போடுவார்கள்.
தனி ஒருத்தியாக பிள்ளைகளை வளர்க்கும் சரண்யாவும், அவள் பிள்ளைகளும் ரொம்ப எளிதாக விமர்சனம் செய்ய பட்டு விடுகிறார்கள். ஆம்பிள்ளை இல்லாத வீடு, மூணு பேரும் பொண்ணுங்களாவ இருக்கீங்க போன்ற வார்த்தைகளை தவிர்க்க, வெற்றி வேல் என்ற பெயர் இணை கூட்டி கொண்டாள். வேற வழியும் இல்லை… தாயின் பெயரை முன் எழுத்தாக கொண்டு வர சட்டத்தில் இடம் உண்டு என்ற போதும் பழக்கத்தில் வரவில்லையே… தந்தையின் பெயரை தன் பெயரோடு இணைப்பதையே ஒரு மதிப்பாக, பெருமையாக, கர்வமாக கூட நினைக்கிறார்கள்.
உண்மை தான். ஒரு பெண் பிள்ளையின் பெயரோடு தந்தையின் பெயரை சேர்த்து சொல்வது கௌரவம், அந்தஸ்து என்பதை விட அது ஒரு பாதுகாப்பு, துணிச்சல், தைரியம், நாம் தனி இல்லை என்ற உணர்வு. அதனால் எப்போதும் அஜிதா வெற்றி வேல், விஜிதா வெற்றி வேல் தான். எங்கேயும் மாற்றம் செய்ய வில்லை சரண்யா. அந்த ஒன்று தான் நமக்கு அப்பா இல்லை என்று முழுதாக உணராமல் பிள்ளைகள் இருந்தார்கள்.
கணவனாக வாழ்வில் வந்து, தன் பிள்ளைகளின் தந்தையாக நிலை பெற்றவனை நான்கு வருடங்கள் கழித்து பார்த்ததும், சரண்யாவின் தற்போதைய மனநிலை துளி மாற வில்லை. அன்றாட ஓட்டம் ஓடி கொண்டு தான் இருந்தது. ராத்திரி நேரத்தில் தனியாக இருக்கும் பிள்ளைகளை நினைத்து வேகமாக ஓடி வந்தாள். வெளி வாயிலில் வீட்டு ஓனரின் அம்மா அமர்ந்து இருக்க, அவரை பார்த்து நியாபகம் வந்தவளாக தன் பையில் இருந்த சட்டை துணியை எடுத்து கொடுத்தாள்.
“இந்த கலர் தான். சரியா தான் எடுத்து வந்து இருக்க சரண்யா. இவ்வளவும் நேரம் மாடியில் இருந்துட்டு இப்ப தான் வந்தேன்…” என்றார் தில்லையம்மாள்.
புரிந்து கொண்டு தன் வீட்டின் மாடி ஏறினாள் சரண்யா. மனது சுணங்கி போனது. இப்படி எப்போதாவது சட்டைக்கு பிட்டு துணி, பேத்திக்கு துப்பட்டா என்று ஏதேனும் எடுத்து வர சொல்வார். ஆனால், காசு தர மாட்டார். தன் வீட்டில் தான் குடி இருக்கிறார்கள் என்று எண்ணம். வீட்டில் வாடைக்கு தான் குடி இருக்கிறோம், வீட்டவே தூக்கி கொண்டு போக மாட்டார்கள் என்று யார் சொல்வது. வாடகை சரியாக கொடுத்தாலும், இப்படி ஏதேனும் ஒரு செலவை வைத்து விடுவார்.
தங்கள் வீட்டை தேய்ப்பதற்கு எண்பது ரூபாய் பெரிய செலவு இல்லை என்பது அவரது எண்ணம். ஆனால் தனக்கு… மூன்று நாள் பிள்ளைகளின் மாலை உணவு செலவு. என்ன செய்ய?… ரேஷனில் கொடுத்த சுண்டல் இருக்கு, வேக வைத்து ஒரு நாள் கொடுக்கலாம். அரிசி வடாகம், கோதுமை இனிப்பு வடை என்று எப்படியாவது சமாளிப்போம். இந்த வாரம் பிள்ளைகள் அசை பட்ட முட்டை பேப்ஸ் இல்லை.
வெற்றியை மறந்தவளாக தன் பிள்ளைகள் உடன் சேர்ந்து கொண்டாள். உண்மையை சொல்ல போனால், வெற்றியை மறந்தே விட்டாள். எட்டரைக்கு மேல் வந்து சமையை முடித்து, பிள்ளைகள் உண்ண வைத்து, தான் உண்டு, பிள்ளைகள் தூங்க மணி பத்தை தொடும். அதன் பின் துணி துவைக்க உட்கார்ந்து விடுவாள். பிள்ளைகள் சீருடை இருப்பதால் தினமும் துணி துவைத்து விடுவாள். வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அவளுக்கு அவசியம் அல்லவா!…
துணியை உதறி காயப்போட அமுதாவின் கணவன் சுகுமார் போன் பேசுவது போல் அவளை நோட்டம் விட்டு கொண்டிருந்தான். வீட்டு ஓனர் கெடுபிடியாக இருந்தாலும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க காரணம் உப்பு தண்ணி பிரச்சனை கிடையாது. குடி தண்ணீர் மட்டும் தான் தகராறு. அதை வெளியில் வாங்கி கொள்வாள், துவைக்க, குளிக்க தண்ணீர் தாராளம். வீட்டு வாடகை இவளின் வருமானத்தில் கச்சிதமாக அடங்க, வேற என்ன வேண்டும். போன் பேசியபடி நோட்டம் விடும் நாதாரியை தவிர்த்து பாதுகாப்பு என்ற பிரச்சனை இல்லை.
“மச்சான் ஏதாவது வேணும்ன்னா சொல்லு உடனே வாங்கி தாரேன். உனக்கு இல்லாததா… ராத்திரி வேற தனியா இருக்க, எனவும் தேவை, அவசரம்ன்ன ஒரு சத்தம் போதும், ஓடி வந்துறேன். எம்புட்டு நாளைக்கு தனியா கிடப்பா, யாரும் இங்க யோக்கியம் கிடையாது மச்சான்…” சுகுமார் போனில் தொடர,
இந்த வார்த்தை தனக்கானதது தான் என்று தெரியும். தூது விடுறான் பரதேசி நாய்… மத்த பெண்களிடம் இதே மாதிரி பேச முடியுமா… தனியாக இருந்தால் என்ன, இவன் வீட்டு வாசலிலா தாவு கிடந்தேன். தனியாக இருக்கும் பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா… யார் சொன்னது புருசன் கூட இருக்கும் பெண்கள் தான் குடும்ப பெண்கள் என்று… ஆண் துணை இன்றி தனியாக இருக்கும் பெண் பொது சொத்தா?… இஷ்டத்திற்கு பார்வையால் மேய்கிறான். கணவனை பிரிந்து தனியே இருக்கிறாள், இள வயது வேற, மடங்கி விடுவாள் என்று ஒரு எண்ணம். நான் தான் என் உணர்ச்சிகளுக்கு என்றோ தீ வைத்து விட்டேனே…
வாளி முதற்கொண்டு கழுவி வைத்த பின் உறங்க வீட்டை நோக்கி எட்டு வைத்தாள் சரண்யா. காலில் பொத்தென்று ஏதோ விழுந்தது. அதிர்ந்து போய் குனிந்து பார்த்தால்… மல்லிகை பூவும், கொஞ்சம் பணமும் ஒரு கவரில் போட்டு தூக்கி போட்டிருக்கிறான். ஆக, வெறும் பேச்சோடு ஒதுங்கி கொள்பவன் இல்லை, துணிந்து விட்டான். எப்படி தன்னை தற்காத்து கொள்ள, நெஞ்சில் பயம் கவ்வியது. வேகமாக அதை எடுத்தவள், அவன் வீட்டு மாடியை நோக்கி எரிந்து விட்டு உள்ளே சென்று கதவடைத்து கொண்டாள். வீட்டில் அமுதா அக்கா இருப்பதால், மேற்கொண்டு எதுவும் செய்ய மாட்டான். கொஞ்சம் நிம்மதி வர, உறங்க தொடங்கினாள்.
அங்கு உறக்கம் என்பதையே மறந்து போய் இருந்தான் வெற்றி வேல். பேய் பிடித்த மாதிரி அமர்ந்து இருந்த மகனை பார்த்து தனத்திற்கு பயம் கவ்வியது. இத்தனை வருடம் சென்று இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை. மகன் எப்பவும் போல இருந்தால், அது ஒரு சாதாரண நிகழ்வு தான். அவன் தான் பிரம்மை பிடித்த மாதிரி இருக்கானே…
அபியின் பெற்றோரும் அமர்ந்து இருக்க, தர்ம சங்கடமாக இருந்தது. கல்யாணத்துக்கு நாள் குறிக்கும் வரை சென்று இருக்க, எல்லாம் தலைகீழ் தான். முன்பே திருமணத்திற்கு பிடி கொடுக்க வில்லை. அவன் எண்ணம் என்னவென்று தெரியவும் இல்லை.
“அக்கா, நாங்க மாப்பிள்ளை கிட்ட ஒன்னும் கேட்க முடியாது. அந்த பையன் என்னைக்கும் அபிய காட்டுகிறேன்னு சொல்லலை. ஆனா, நீ சொன்ன… எம் பிள்ளை தான் உம் மருமகன்னு சொன்ன, இப்ப நடக்குறது எல்லாம் வேற மாதிரி இருக்கு. எம் பிள்ளையோட பிடிவாதம் தான் எங்களை கட்டி போட்டுச்சு. இப்ப தப்பு பண்ணிடமோன்னு தோனுதுக்க…” என்று அபியின் தந்தை சொல்ல.
சாந்தாவும், “ வேற மாப்பிள்ளை பார்த்த செத்துடுவேன்னு சொல்றா… ஒத்த பிள்ளை, வேற வழி இல்லாம தான் ஒத்து கிட்டோம். உங்க மகன் பிடி கொடுக்கவே மாட்றான். என்னத்தை சரி கட்ட போறீங்க. ரெண்டு பேரும் ஆசை பட்டாங்க தானே… பொண்டாட்டி கூட வாழ்ற ஆம்பிள்ளையை எம் மக தேடலை. நீங்க தான் மதினி எம் வீடு வந்து சம்மந்தம் பேசுனது. இவ ஆசைப்பட்ட ஒரு காரணத்துக்காக தான் ரெண்டாந்தாரமா கட்டி கொடுக்க சம்மதிச்சோம். வேற எம் மகளுக்கு என்ன குறைச்சல். அந்த தம்பியும் எம் மக மேல ஆசை படுறாங்கன்னு நினைச்சா, நாலு வருஷம் செண்டும் பொண்டாட்டிய பார்த்து பொட்டி பாம்பா அடங்கி வந்திருக்கான்… என்னத்தை சொல்ல, எம் பிள்ளை வாழ்க்கை என்ன அவ்வளவு லேசா… எம் மகளுக்கு ஒரு பதில சொல்லுங்க, இல்லைன்னா மந்தைக்கு பஞ்சாயத்துக்கு வாங்க…” என்று ஒரு பிடி பிடிக்க, பதில் சொல்ல தெரியாமல் விழித்தார் தனம்.
வெற்றியின் தந்தைக்கும் ஒன்றும் புரியவில்லை. மகன் போக்கு சுத்தமாக சரியில்லை. பொண்டாட்டி கூட வாழ சொன்ன போது காதலியை மறக்க முடியலைன்னு சொன்னான். இப்ப விதி விட்ட வழின்னு அவன் காதலிச்ச பொண்ணு கூட சேர்த்து வச்சா பொண்டாட்டி நினைப்புங்குறான்… வீட்டுக்கு மூத்தவனா, பொறுப்பா கடமையா செய்றான்னு நினைக்க, எப்படி ஒரு குழப்பவாதியா இருக்கான்…
எல்லோருக்கும் மண்டை காய்ந்தது தான் மிச்சம். சரண்யாவோடு தனிப்பட்டு எந்த பிரச்சனையும் கிடையாது. கல்யாணம் முடிந்த ஆரம்பத்தில் சிறு சிறு பூசல் இருந்தது தான். ஆனால், ஒதுக்கி வைக்கும் அளவுக்கு வெறுப்பு ஒரு நாளும் இல்லை. சரண்யாவை ஒதுக்கி, இவர்கள் ஒதுங்கி நின்றது எல்லாம் வெற்றி என்ற ஒருவனுக்காக மட்டும் தான். இவனுக்காக தான் சரண்யாவை ஒதுக்கி, அபிராமியை ஏற்றது. இவன் நிலை தடுமாறினால் நாங்கள் எல்லோரும் கெட்டவர்கள் என்று ஆவோம்… புரியாமல் தான் முழித்து நின்றார்கள் அனைவரும்.
இப்படி நிலையில்லாத ஒருவனை வைத்து கொண்டு திருமண காரியத்தில் இறங்க பயமாக இருந்தது. சூழ்நிலையை தனம் கையில் எடுத்தார்.
“எதுக்கு எல்லாம் இடிஞ்ச மாதிரி உட்கார்ந்து இருக்கிறீங்க… ஒரே ஊரு என்னைக்காவது ஒரு நாள் பார்க்க தான் வேணும். அவ கல்யாணம் காட்டாம ஒத்த குரங்க நின்ன, நாமளா பொறுப்பு. அவளை பார்த்து இவன் ஏன் சுணங்குறான். அப்படி ஒன்னும் நல்ல புருசன், பொண்டாட்டியா வாழலையே… எம் மகன போட்டு பாடா படுத்துனா… நாமல்லும் பார்த்து தான இருந்தோம், தினம் ஒரு சண்டைய போட்டு நாறி கிடந்துசுங்க… ரெண்டும் சேர்ந்து சிரிச்சா முகமா நாம பார்த்து இருப்போம்மா… அவளை கட்டி ஒரு நாளும் எம் மகன் நிம்மதியா இல்லை. அவ பவுசு தெரிஞ்சு தான் ஒருத்தனும் கிட்ட வரலை…” ஆதங்கம், கோபம் எல்லாவற்றையும் சரண்யா மீது கட்டி கொண்டு இருந்தார்.
ஏய் தனம், அடக்கு… நாலு பேர் பார்க்க சண்டை போட்ட புருசன், பொண்டாட்டிய தான் பார்த்திருப்பா… நாலு சுவத்துகுள்ள என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியுமா!… அதெல்லாம் புருசன், பொண்டாட்டி சமாச்சாரம். இத்தனை வருஷம் செண்டும் பொண்டாட்டியை நினைக்கிறான்னா என்ன அர்த்தம். எல்லா புருசன், பொண்டாட்டியும் சண்டை போடுவாங்க தான். அதனால், அந்த பிள்ளை சரியில்லாத பிள்ளையாக போகுமா… வாசலுக்கு வெளிய நின்னு நீ பார்த்ததை வச்சு தப்பு சொல்லாத, வாசலுக்கு உள்ள என்ன நடந்துச்சு உனக்கு தெரியுமா!… அவனுக்கு தெரியும் அதான் மருகி நிக்குறான். மூணு சம்மந்தம் பண்ணிட்ட, இன்னும் உனக்கு தாம்பத்தியம் புரியலை…” என்று வெற்றியின் அத்தை கேட்க.
யாராலும் பதில் பேச முடியவில்லை. அபிக்கு புரிந்தது… சரண்யா என்று சொல்லாமல் வெற்றியின் பொண்டாட்டி என்று தான் சொல்கிறார்கள். தாலி கட்டி கொண்டவள் உரிமைகாரியாகி போனாள்.
அறையின் உள்ளே படுத்து கிடந்த வெற்றிக்கு வெளியில் பேசிய அனைத்தையும் கேட்டு கொண்டு தான் இருந்தான். அவர் சொல்லியது உண்மைதான். பிடிக்காமல் செய்து கொண்ட கல்யாணம், கட்டாயத்தின் பேரில் வாழ்ந்த வாழ்க்கை தான்.
ஆனால், ஒரு பெண்ணோடு முழுமையாக வாழ்ந்து விட்டான். நாலு சுவத்துக்குள் யாரும் அறியா விட்டாலும், மற்றவர்கள் கட்டாய படுத்தினாலும்… ஒரு பெண்ணோடு வாழ்ந்து விட்டான். இன்று இவர்கள் சொல்லும் யாரோ ஒருத்தி, அன்று அவனோடு கலந்து, அவன் பிள்ளைக்கு தாயானவள். அதை தான் இருக்கிறது தூக்கி எறிய முடியாமல் தவித்து நிக்குறான். ஊர் பார்க்க தாலி கட்டி, தன் சரிபாதி ஆக்கி கொண்டு, அவளின் முழுமையை அறிந்து கொண்டு, ஒரு பிள்ளையையும் கொடுத்த பின்… ஒத்து வரவில்லை என்று ஒதுங்குவது எவ்வாறு நியாயம். வெற்றி வேல் மனைவி என்ற அடையாளத்தில் அவள் நிற்க, இவன் மட்டும் அபிராமியின் கணவனாக எவ்வாறு மாற முடியும்… காதலியாக இருந்த அபிராமியின் கையை கூட தொட தயங்கியவன். ஆனால், மனைவி என்று சரண்யாவை மொத்தமாக எடுத்து கொண்டான். ஒரு பெண்ணின் மெல்லிய உணர்வுகளை, அவளின் ரகசியங்களை, பெண்மையை முழுமையாக சரண்யாவிடம் அறிந்து கொண்டான். தாய் முன்பு கூட ஆடை மாற்ற கூச்சபடும் பெண்ணின் அந்தரங்கத்தை அறிந்து கொண்டு, வளர்த்த தந்தையின் முன் வெளிப்படுத்தாத தன் அந்தரங்கத்தை, மனைவி என்ற ஒருத்திக்கு மட்டும் உணர்த்தி, அவளோடு கலந்து வாழ்ந்து விட்ட பின்னாடி, வருசம் போச்சு, ஊர் முன் அத்து விட்டாச்சு என்று ஒதுங்கி கொள்ள நியாய மனம் வரவில்லை. யாருக்கு எதுவும் புரியாவிட்டாலும் மனைவியை கணவன் அறிவான், கணவனை மனைவி அறிவாள். அது ஒன்று தான் இவர்களிடம் முட்டி கொண்டு நின்றது.
பச்சையில் சின்ன கரை வைத்த சேலை அணிந்து, அகிலா உடன் சேர்ந்து வேகமாக நடந்த போய் கொண்டிருந்தாள் சரண்யா. பின் தொடர்ந்து வந்தது வெற்றி வேல் தான். சரண்யா கவனிக்கவில்லை. வெற்றி யாரிடமும் எதையும் அறிய நினைக்க வில்லை. எல்லாவற்றையும் மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்ளவே விரும்பினான். அதன் பொருட்டு தான் அவளை காண வந்தது. ஆனால், அவளோ வேகமாக முன் செல்ல, பின் தொடர்கிறான்.
பிள்ளைகளுக்கு ஆண்டு விழா, அதற்கு செல்ல தான் இத்தனை வேகம். பள்ளியின் உள் செல்லும் மனைவியை பார்த்து திகைத்து நின்றான் வெற்றி. பள்ளி செல்லும் பிள்ளையா தனக்கு இருக்கு?… மெதுவாக அவனும் உள் சென்று மனைவியை தேட, மறைந்து விட்டாள். கூட்டத்தில் தேட முடியவில்லை. விழா தொடங்க, ஒரு சேரில் அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் கழித்து சரண்யா வந்து அவனுக்கு நான்கு சேர் முன் அமர, அவளை கவனித்து கொண்டான். ஒரு பரபரப்பு தன் பிள்ளை யார் என்று… என்ன பிள்ளை, எதுவாக இருந்தாலும் சரி தான். படபடப்பை அடக்கி கொண்டு அவன் அமர்ந்திருக்க,
சிறுவர்களுக்கான விழ தொடங்கியது. சிறு பிள்ளைகளை ரொம்ப நேரம் வைக்க முடியாது என்று அவர்களுக்கு பாடல் தொடங்கியது. முதல் இறை வணக்க பாடல் என்று ஆரம்பிக்கும் போதே அகிலா கை தட்ட தொடங்கினாள். இரட்டையர் என்பதால் இவர்கள் இருவரை தான் தேர்வு செய்து இருந்தார்கள்.
அஜிதா வெற்றி வேல், விஜிதா வெற்றிவேல் என்று பெயர் அறிவிக்க, அதிர்ந்து போய் மேடையை பார்த்தான் வெற்றி. மஞ்சளில், தாமரை வண்ணம் கலந்த பட்டு பாவாடை சட்டையில் வெட்கம், தயக்கம் கலந்து கொஞ்சம் சிரித்த படி இருவரும் கை பிடித்து மேடை ஏற,
அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தான் வெற்றி வேல். அஜிதா அவனின் மறுபதிப்பு, விஜிதா சரண்யாவின் அச்சு. யாரும் சொல்லாமலே தன் பிள்ளைகள் என்று புரிந்து கொண்டான்.