மாப்பிள்ளை வீட்டார் வருவதற்கு முதல் நாள் வீட்டில் பேசிக் கொண்டிருக்க.,
இவளோ “எனக்கு பிடித்த புடவையாக இருக்க வேண்டும்” என்றாள்.
அவள் அப்பாவோ “அதுதான் நாங்கள் எல்லோரும் வருகிறோமே” என்று சொன்னார்.
இவளோ “இல்லை எனக்கு பிடித்தது போல சிலவற்றை எடுக்க வேண்டும். அதனால் எனக்கு தனியாக கையில் கொஞ்சம் பணம் தாங்க” என்று கேட்டாள்.
“அவள் கல்யாணத்திற்கு டிரஸ் தானே எடுக்க கேட்கிறா”., என்று அவள் அம்மாவும் சொன்னார்.
அவள் கையில் தனியாக சிறிய தொகையாக இருந்தாலும் கையில் ஒரு தொகையை கொடுக்க., அதுவே அவளுக்கு போதுமானதாக தோன்றியது.
ஏனெனில் முதல் நாள் தான் திருச்சியில் இருந்து சென்னை செல்வதற்கு பிளைட் டிக்கெட் விலையை பார்த்து வைத்திருந்தாள்.
சரி இது போதும் இங்கிருந்து சென்னை செல்ல., அதன் பிறகு சென்னை சென்று அங்கு தன் நண்பர்கள் யாரையாவது வைத்து ஊருக்கு செல்வதற்கு டிக்கெட் போட்டுக் கொள்ளலாம் என்ற தைரியத்தோடு அமர்ந்திருந்தாள்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை வேறு விதமாக அல்லவா சென்று விடும்., அது தெரியாமல் தான் அனைவரும் அவரவர் மனதிற்கு தோன்றியபடி பலவிதமான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.
துளசியும் அப்படித்தான் அவளுக்கு தோன்றிய திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்க மாப்பிள்ளை வீட்டினரும் வந்து சேர்ந்ததாக தகவல் வந்தது.