Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Iangaathu Veesuthae

சமீராவின் இளங்காத்து வீசுதே – 20(1)

அத்தியாயம் 20(1)

 

“ரியலி டாட்..எனக்கு தங்கையா..?”

கண்கள் விரிய ஆச்சரியமும் ஆர்வமும் போட்டிப்போட வினவினான் ஆறு வயது சிறுவன் விஜய்வரதன்.



Advertisement

ஓட்டுநர் இருக்கையில் இருந்த அவன் தந்தை சிவகுமார் அருகில் இருந்த மகனின் முக பாவனையை ஆசையாய் இரசித்தபடி,

“ஆமா..தங்கச்சி தான்..இந்த குட்டி விஜயிக்கு குட்டி தங்கை..”

என்று உற்சாகமாய் கூறி அவனுக்கு கிச்சுகிச்சு மூட்ட சிரித்தவன்,

Advertisement

“ஆனா எப்படி ப்பா ஒண்டேல பாப்பா வரும்..தாத்தா கூட எனக்கு தம்பியோ தங்கச்சியோ வராதுனு சொன்னாரே..”

Advertisement

என்று அவன் விடாமல் கேள்வி கேட்க,

‘இந்த அப்பாவ..’ என்று தனக்குள்ளே நொந்துக் கொண்ட சிவா மகனிடம்,

“காட்ஸ் கிஃப்ட் டா.. நமக்காக ஒரு குட்டி தேவதை அனுப்பி இருக்கிறார்.. நாம தான் பத்திரமாய் பார்த்துக்கணும்..பார்த்துப்பே தானே…”

Advertisement

என்று கேட்க வேகமாய் அமோதித்து தலையை உருட்டியவன்,

“குட்டி பாப்பான்னா..கைக்குள்ள இருக்கும்மா..?”

என்று கையை ஏந்தலாய் வைத்து இன்னோர் பாதையில் மீண்டும் கேள்வி கேட்டவனிடம் பொறுமையாகவே,

“இல்ல..இவ்வளவு பெருசா..”

என்று அவன் இடுப்பளவு உயரம் காட்டி சொன்னார்.சிறுவயதில் இருந்தே அவன் கேள்விகளுக்கு பழக்கப்பட்டதால் அவன் எந்த மாடுலேஷனில் எந்த கேள்வி கேட்டாலும் அசராமல் பதில் அளிக்கும் கலையில் கற்று தேர்ந்திருந்தார்.இவ்வாறாக கேள்வி பதிலோடு அவர்கள் பயணம் ஓட வீட்டிற்கு வந்ததும் பள்ளி பையை ஒருபக்கம் வீசிவிட்டு, 

“மாம்.. “என்றபடி அன்னையை தேடி ஓடியவன் மாடியில் உள்ள ஊஞ்சலில் கீதாவும் அவர் மடியில் இருந்த இரண்டு வயது உள்ள சிறுமியையும் பார்த்து அப்படியே நின்று விட்டான்.

திருதிருவென முழித்தபடி கீதாவை ஒருகையில் பிடித்துக்கொண்டு மறுக்கையின் ஆள் காட்டி விரலை கடித்தபடி இருந்த அப்பிள்ளையை பார்த்ததும் விஜயிக்கு பிடித்துவிட்டது.

“விஜய்..இங்க வா..வா..யாரு வந்திருக்காங்க பாரு..”

என்று கீதா அழைக்க வேகமாய் அருகில் ஓடியவன் அன்னையின் மறுபுறம் சாய்ந்துக் கொண்டு, ” ஹாய் பேபி”

என்று ஆர்வமாய் சொல்ல அவளோ இன்னும் விழியை விரித்தபடி கீதாவிடம் ஒண்ட விஜயிக்கு பின்னால் ஏறிவந்த சிவா,

“ஹேய்..உன் அண்ணன் தான் செல்லம்..எங்க அண்ணனுக்கு ஹான் சேக் பண்ணுங்க..”

என்று சொன்ன போது அவள் அதே பாவனையில் இருக்கவும் விஜய்,

“வெய்ட்..வெய்ட்.. நான் ஒன்னு வச்சிருக்கேன்..”

என்று வேகமாய் பாக்கேட்டில் கையை விட்டு துலவி ஒரு டெயிரிமில்கை எடுத்தவன்,

“ட்டடான்..”

என்று அவள் முன் காட்டி, “உனக்கு சாக்லேட் பிடிக்குமா..?”

என்று கேட்க சாக்லேட்டிற்கு மயங்கிய அவளும் சமத்தாய் தலையசைத்து கை நீட்ட பின்னால் இழுத்துக் கொண்டு,

“நோ..நோ..மாம்ட்ட இருந்தால் தர மாட்டேன்..என்னுட்ட வா..”

என்று கை நீட்டி அழைக்கவும் அவளும் அவனிடம் நகர்ந்து வந்தாள்.

முகம் முழுக்க புன்னகையோடு அவளுக்கு வ்ராப்பரை பிரித்து தர இதனை ஆசையோடு பார்த்துக் கொண்டிருந்தனர் சிவகுமாரும் கீதாவும்.

மகனின் தலையை கோதிய சிவா, “பரவாயில்லையே மகனே…எங்கடா இப்படி ஐஸ் வைக்க கத்துக்கிட்ட..” என்று  கேட்க அவனோ தோளை குலுக்கி, 

“சிம்பிள் டாட்..என் க்ளாஸ் கேள்ஸ்ட்ட இப்படி தான் சாக்லேட் கொடுத்து ப்ரெண்டாவேன்..”

என்று அசால்ட்டாய் சொல்ல, “அடப்பாவி..” என்று வாயில் கைவைத்த கண்வனையும் மகனையும் பார்த்து வாய் விட்டு சிரித்த கீதா, 

“உங்க அப்பாக்கு தப்பாம இருக்கடா..” என்று அவரும் சிரிக்க ஒன்றும் புரியவில்லை என்றாலும் அவளும் கிளுக்கி சிரிக்க,

“பாப்பா அழகா சிரிக்கிறால்ல மாம்”

என்று கூறி அவளிடம், “உன் பேரென்ன பாப்பா..”

என்று கேட்க அப்பொழுது தான் முதல் முறை வாயை திறந்தாள் “அக்னிமித்ரா.. “என்று..

அதன்பின் அவளுடம் பேசிக்கொண்டு அப்படியே விஜய் ஒன்றிவிட பெற்றோரிற்கு நிறைவாய் இருந்தது.கீதாவை பார்த்துக்க கூறிவிட்டு கீழே வந்த சிவாவை எதிர்க்கொண்ட அவர் தந்தை கைலாஷ் முகத்தில் அதிருப்தி..

“நீ செய்ற எதுவும் எனக்கு பிடிக்கல சிவா..”

என்று கூறியவரிடம், “இதில் என்ன தப்பிருக்கு அப்பா..”

என்று மீண்டும் ஒரு வாததிற்கு தயாராகிய சிவாவை தடுத்து, “நீ எந்த விளக்கம் கொடுத்தாலும் என் மனசு ஆறாது.. நீங்க என்னவோ பண்ணிக்கோங்க பட்..டொண்ட் எக்ச்பெக்ட் எனிதிங்க் ஃப்ரம் மீ..”

என்று திட்டவட்டமாய் கூறி சென்றுவிட கவலையாய் பார்த்தார் சிவகுமார். விஜய் பிறந்த பின்பு கீதாவின் கற்பபையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அதனை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.இயற்கையாகவே பிள்ளை உண்டாகாமல் இருந்திருந்தால் தெரிந்திருக்காதோ என்னவோ..ஆனால் பிறக்க வாய்பில்லை என்று வரும்போது குழந்தை ஆசை கீதாவிற்கு அதிகரிக்க அதனை நினைத்து நிறைய கவலை கொண்டார்.இதில் விஜய் வேறு தனக்கும் தம்பி தங்கச்சி வேண்டும் என்று அடிக்கடி கேட்டு இன்னும் அதனை அதிகமாக்க கைலாஷ் தான் அவனிடம்,

“உனக்கு தம்பி தங்கை எல்லாம் வராது கண்ணா..அம்மாட்ட மறுபடியும் கேட்காதே அவங்க ஹர்ட் ஆவாங்க..”

என்று அவனுக்கு புரியும்படி கூறிவிட அன்றைக்கு பிறகு அந்த பேச்சே அவன் எடுப்பதில்லை.

ஆனால் கீதாவும் சிவகுமாரும் ஒருமித்தே சிந்தித்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்ய அதனை முழுமையாய் எதிர்த்தார் கைலாஷ்.யாரோ ஒரு பிள்ளை தங்கள் வீட்டு வாரிசு ஆவதில் அவருக்கு துளியும் விருப்பம் இல்லை.

இருந்தும் மீறி அவர் தத்தெடுக்க கைலாஷ் ஒதுங்கிக் கொண்டார்.அவருடைய பாசம்,நேசம் எல்லாம் விஜயிடம் மட்டும் தான்.அக்னிமித்ராவிடம் பேசக்கூட மாட்டார்.

மற்ற சொந்த பந்தங்களுக்கும் அவள் வளர்ப்பு பிள்ளை என்று தெரியும்.கைலாஷே ஒதிக்கி வைக்கும் போது அவர்களை பற்றி கூறவும் வேண்டுமோ..?எல்லாருக்கும் விஜய் மட்டும் தான் சிம்ம சொப்பனம்..!!அக்னிமித்ராவை யாரும் அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை.

சிவக்குமார், கீதாவிற்கு இது கஷ்டமாய் இருந்தாலும் அவர்களை வற்புறுத்த முடியாது அல்லவா..?யார் எப்படி இருந்தால் என்ன என்று இவர்கள் அன்பு மழையை பொழிய விஜயிக்கு பெரிதாய் வேறு பாடு தெரியவில்லை.

ஆனால் வயது ஏற ஏற அக்னிமிதரா இதனை புரிந்துக் கொள்ள அவனை மட்டுமே எல்லாரும் தூக்கி வைத்து கொண்டாடுவது விஜய் மீது ஒரு பொறமையை தோற்று வித்தது.அவன் காட்டும் பரிவும் பாசமும் கூட அவளுக்கு எரிச்சலை தான் கொடுக்கும் இருந்தாலும் அவள் காட்டிக்கொண்டது இல்லை.ஆனாலும் அவளை மீறி அது வெளிப்பட்டது விஜயின் பனிரெண்டாவது பிறந்தநாளில்..

ஊரே வாயை பிளக்கும் அளவு பெரும்விழாவை அவன் பிறந்த நாள் விழாவை கைலாஷ் ஏற்பாடு செய்தார்.அனைவரின் அன்பிலும் கவனிப்பிலும் அன்றைய பொழுது இராஜாவீட்டு இளவரசனாய் வலம் வந்தான் விஜய்.அவன் பெற்றோரும் பிறந்த நாள் என்பதால் அவனை இன்னும் தாங்கு தாங்கென தாங்க இதெல்லாம் அந்த பிஞ்சு மனதில் நஞ்சை விதைத்தது.

அவள் பிறந்த நாளையும் கொண்டாடினாலும் இத்தனை ஆர்பாட்டமும் கொண்டாட்டமும் இருக்காது என்பதால்,’ இவனுக்கு மட்டும் என்ன..? ‘என்ற கோபம் வந்தது.

ஆனால் அதெல்லாம் உணராமல் தங்கையை கையில் பிடித்துக் கொண்டு போற இடமெல்லாம் அவளையும் இழுத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் இருந்தான்.கேக் வெட்டும் போது கூட அவளையும் தன்னோடு சேர்ந்து கத்தியை பிடிக்க சொல்ல கைலாஷ் தான் உன் பிறந்தநாள் நீ வெட்டு அவள் பிறந்தநாள் போது அவள் வெட்டுவாள் என்றுவிட்டார்.

இப்படியே அன்றைய தினம் சென்றிருக்க இரவு அனைவரும் கிளம்பிய பின் எதார்த்தமாய் அவன் பரிசுகள் இருந்த அறை பக்கம் வந்தாள் அக்னிமித்ரா.அறை முழுவதும் அடுக்கப்பட்டிருந்த அவன் பரிசு பொருட்களை பார்க்கும்போது எரிச்சல் வர வேகமாய் உள்ளே சென்றவள் யோசிக்காமல் அனைத்தையும் எடுத்து போட்டு உடைத்தாள்.அதனை உடைக்க உடைக்க அவளுக்கு ஏதோ ஆசுவாசமானது போல் இருந்தது.

இவளை தேடி திரிந்த விஜய் இக்காட்சியை கண்டு,

“மித்ரா..”

என்று அவள் கையை பிடித்து நிறுத்தியவன், “ஏன் இப்படி பண்ற மித்ரா..?”

என்று கேட்க அவளோ பதில் சொல்லாமல் அவனை பார்த்து கண் கலங்க தேம்பலோடு அழுதாலே அன்றி பதில் கூறவில்லை.

அவள் அழுகவும் அவன் மனம் துடிக்க, “ஏய் பாப்பா..மித்ரா..சரி பரவாயில்ல..அழாதடா..”

என்று அவன் அணைத்துக்கொள்ள அதற்குள் அங்கே சிவகுமார்,கீதா மற்றும் கைலாஷ் அனைவரும் அங்கே வந்து விட்டனர்.

அறை இருந்த கோலத்தை கண்டு, “என்னடா இது..”

என்று அதிர்ச்சியாய் கேட்ட சிவகுமாரிடம் சற்றும் யோசிக்காமல்,

“நான் தான் டாடி ஒடைச்சேன்..”

என்றான் தயக்கமின்றி..

“வாட் ஒடைச்சியா..?உனக்கு வந்த கிஃப்ட் தானே..ஏண்டா..?”

“எனக்கு இந்த கிஃப்ட் எல்லாம் பிடிக்கலை டாட்..யுஸ்லெஸ் திங்க்ஸ்..”

என்று அலட்சியமாய் கூற கேட்டவர்களுக்கு அவன் பதிலில் கோபம் தான்.

“என்ன பழக்கம் இது விஜய்..?கிஃப்ஸ் ஆர் சிம்பிள் ஆஃப் லவ்..அது பெருசோ சின்னதோ அதை எப்டி நீ அலட்சிய படுத்துவ..இது தான் நான் உனக்கு சொல்லி கொடுத்தா..”

என்று அவர் திட்ட அவன் அசையாமல் நிற்கவும் அவருக்கு கோபம் மிகுதியில் அடிக்க கையோங்க வேகமாய் கீதாவும் கைலாஷூம் அவரை தடுத்து விஜயை அவர் கூட்டி சென்றுவிட கீதா சிவகுமாரை சமாதானப்படுத்தினார்.

இதை அக்னிமித்ரா சற்றும் எதிர்பார்க்கவில்லை தான் என்றாலும் காலையில் இருந்து அவனை தூக்கி வைத்து ஆடிய தந்தையே அவனை திட்டியது அவளுக்கு ஒருவித திருப்தியை தர அன்றில் இருந்து இந்த பழக்கம் அவளுக்கு ஒட்டிக் கொண்டது.

அவளுக்கு பிடிக்காமல் எதாவது நடந்தாலோ இல்லை அவளுக்கு கோபம் வந்தாலோ அப்பொழுது தோன்றுவதை அப்படியே செய்து வைப்பாள்.அதை யாருக்கும் தெரியாமல் மறைப்பது இல்லை அதனை தன் தலையில் போட்டுக் கொள்வது விஜயின் வழக்கமானது.அவள் மீது ஏன் இந்த பிரியம் என்று தெரியவில்லை.ஆனால் அவளை யாரும் ஒரு சொல் சொல்வது கூட பிடிக்காது.

உதாரணமாக அவள் மேக்ஸ் போடும் போது சம் வரவில்லை என்னும் போது நோட்டு,புக் எல்லாத்தையும் அக்குவேறு ஆணிவேராய் கிழித்து போட்டு விடுவாள் என்றால் அதனை எடுத்து போட்டு புதிது அவளுக்கு வர வைப்பது அவன் வேலை.

இவ்வாறு தன்னை அறியாமலே அவளின் ஆங்காரத்தன்மையை வளரவிட்டான் விஜய்வரதன்.அதுவும் கைலாஷ் மறைவுக்கு பின் இன்னும் அவளுக்கு வசதியாய் போகிவிட்டது.தனக்கு பிடிக்காத ஒன்று நடக்கும் போது வைலென்ட்டாய் நடந்துக்கொண்டால் அவளுக்கு ஒருவித திருப்தியை தர மனரீதியில் கொஞசம் கொஞ்சமாய் பாதிக்கப்பட்டாள்.ஆனால் அவளது இந்த செய்கைகள் விஜயை தவிர யாருக்கும் தெரியாது.மற்றவர்களுக்கு அதிகம் பேசாத அமைதியான பெண் அவ்வளவு தான்.அந்த பிம்பம் கலைந்து போவதை அவன் விரும்பவில்லை.

இப்படியாக வருடங்கள் ஓட அக்னிமித்ரா பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது அது விஸ்வரூபம் எடுத்தது.விஜயும் கல்லூரி சென்று மூன்று வருடங்கள் ஆகி விட்டதால் எப்பவும் அவன் பார்வைக்குள்ளே இருப்பவள் அந்த வலையத்தில் இருந்து சற்றே விலகினாள்.

இயல்பிலே அக்னிமித்ராவிற்கு படிப்பு அவ்வளவாக வராது.பத்தாம் வகுப்பை தத்தி தத்தி கடந்தவளுக்கு இப்பொழுது இன்னும் கடினமாய் இருக்க ஒவ்வொரு பரீச்சையிலும் தோல்வியுற்றாள்.

அதனால் ஒருமுறை பள்ளியில் சிவகுமாரையும் கீதாவையும் கூப்பிட்டு,

“இவள் இப்படியே இருந்தால் எங்கள் பர்செண்டேஜ் பாதிக்கும் என்றும் விஜய் இங்கே படித்து பள்ளிக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளான்.அவன் அளவுக்கு இல்லை எனினும் ஃபைல் ஆகமால் ஆவது இருக்க வேண்டும்..எதாவது ஒரு சப்ஜெக்ட் என்றால் பரவாயில்லை.ஆனால் எல்லாவற்றிலும்  இப்படி இருந்தாள்..நாங்க என்ன செய்வது..”

என்று இன்னும் அவர் குறைகளை அள்ளிவிட பெற்றோர் இருவருக்குமே இது மிகுந்த வருந்தம் தான்.இப்படி படிப்பில் கவனமில்லாமல் இருக்கிறாளே என்று கவலையோடு அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்க அவர்கள் அருகில் நின்றுக்கொண்டிருந்த அக்னிமித்ராவின் முகமாற்றத்தை கவனிக்கவில்லை.ஆசிரியர் பேச பேச அவளின் அதீத கோபம் ஏற ஒரு நிமிடத்தில் தான் நினைத்ததை செய்தாள்.

ஆம்..!தன் முன் டேபிளில் இருந்த பென் ஸ்டாண்டை எடுத்து அவர்மேல் வீச மூவருமே அதிர்ந்து எழுந்துவிட்டனர்.

“மித்ரா..”

என்று கீதா அதிர்ச்சியில் கத்த அவளோ அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லை.அந்த ஆசிரியரை பார்த்து மேலும் கையில் கிடைத்த பொருள் எல்லாம் எடுத்து வீசியவள்,

“ஹவ் டேர் யூ..என்னை யூஸ்லெஸ் என்று எப்படி நீ சொல்லுவ..என்னை பத்தி நீயாரு கம்லெய்ண்ட் பண்ண..படிக்கிறதும் படிக்காததும் என் இஷ்டம்..என் ஸ்டேடஸ் தெரியுமா உனக்கு..நீயெல்லாம் என்னை பேசிறீயா…”

என்று அவள் கத்தி கூச்சலிட அதிகமாய் பேசவே செய்யாத அக்னிமித்ராவின் இந்த தாக்குதலில் அந்த ஆசிரியரே அதிர்ச்சியின் விளும்பில் இருந்தார் என்றால் சிவகுமார்,கீதாவை பற்றி சொல்லவும் வேண்டுமோ..?

அவளை அடக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்து செல்வதற்குள் பிரளயமே நடந்தது.மீண்டும் மீண்டும் அந்த ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வீடு திரும்பினர்.

அப்பொழுதும் அவள் அடங்காமல் துள்ளிக் கொண்டும் கத்திக் கொண்டுமே இருக்க சிவகுமார் கோபத்தில் அறைந்தே விட்டார்.ஒரு நிமிடம் அமைதியானவள் கண்களில் கனல் கொதிக்க,

“ஆயிரம் இருந்தாலும் நான் உங்க பிள்ளை இல்லை தானே..அதானே என்னை அடிக்கிற அளவு போறீங்க..இதே உங்க பையனா இருந்திருந்தால் அவனை விட்டு கொடுத்திருப்பீங்களா..?”

என்று கேட்டுவிட இருவருக்கும் அந்த நிமிடம் உயிர் வலியை உணர்ந்தனர்.எத்தனை பாசம் கொட்டி எவ்வளவு செல்லமாய் வளர்த்த பெண் இப்படி ஒரு வார்த்தை சொல்லிவிடவும் அவர்களால் தாங்கவே முடியவில்லை.அப்படியே அவர்கள் சமைந்துவிட அவள் அன்று ஆடிய ஆட்டத்தை விஜய் வந்து தான் அடக்கினான்.அவன் ஒருவனுக்கு தானே அவளை கையாள தெரியும்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!