கால்மேல் கால் போட்டு தோரணையாய் ஆரியன் அமர்ந்திருக்க கையை பிசைந்தபடி நின்றாள் சக்தி.
“ஆமா..தெரியாம தான் கேட்குறேன்..நான் உன்னிடம் வல்கரா பேசினேனா..”
என்றான் எடுத்த எடுப்பிலே..
திருதிருவென விழித்தவள் இல்லை என்று தலையசைக்க,
“உன் கைய பிடிச்சு இழுத்தேனா..இல்லை அதுக்கும் மேலே எதாவது பண்ணேனா..”
என்றதற்கும் வேகமாக மறுத்து தலையசைக்க,
“அப்புறம் என்ன இதுக்கு என்னை பொறுக்கினு சொல்லுவ..பொறுக்கின்னு யாரை சொல்லுவாங்க தெரியுமா..?? இல்லை என்னை பார்த்தால் உனக்கு பொறுக்கி மாதிரி இருக்கா…”
என்றவன் குரலில் கோபம் அப்பட்டமாய் இருக்க அச்சத்தோடு,
“சாரி சீனியர்..ஏதோ கோபத்தில..”
என்று மென்று விழுங்கி சொல்ல,
“எனக்குகூட தான் கோபத்தில் பொலீர்னு ஒன்னு வைக்க தோனுது வைக்கவா..”
பட்டென்று எழுந்து கையை ஓங்கி அருகில் வந்துவிட கண்களை இறுக்கிமூடி தலையை திருப்பிக் கொண்டாள்.
பயத்தில் அதரங்கள் துடிக்க மூக்கு சிவந்து விடைக்க நின்றவளை அத்தனை அருகில் பார்த்த ஆரியன் பேசின்றி பார்த்தபடி நிற்க அடிவிழுகவில்லை என்பதை உணர்ந்து மெல்ல கண்களை திறந்து பயத்தோடு அவளும் அவன் முகத்தை பார்த்தபடி நின்றுவிட்டாள்.
உடனே சுற்றியுள்ள நட்புகள் எல்லாம்,
“டேய்…டேய்…டேய்..”
“மச்சான் டேய்..”
“ஹோஓஓஓஹோ..”
பொறுக்க முடியாமல் கிண்டலாய் கத்தி கூச்சல் போட்டதில் தன்னிலை அடைந்தவன்,
“சீனியர் மேல இந்த பயம் எப்பவும் இருக்கனும்..”
சமாளிப்பாய் கூறி மீண்டும் பழைய நிலையில் அமர்ந்துவிட,
“சாரி சீனியர்..”
என்றாள் இத்துடன் விட்டுவிட மாட்டானா என்ற நப்பாசையோடு.
சக்திக்கு எப்பொழுதுமே சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாய் இருப்பது பிடிக்காது.இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இருக்கின்ற இடம் தெரியாமல் இருந்திட்டு போய்விடனும் என்னும் ரகத்தை சேர்ந்தவள்.புல்லாங்குழல் அன்று இசைக்க ஆசைப்பட்டது கூட அவளுக்கு மிகவும் பிடித்த விஜய்முன் வாசிக்கும் ஆசையாலும் சந்தியா,ஏஞ்சலினின் வற்புறுத்தலாலும் தான்.அப்படி உள்ளவளை இன்று இத்தனை பேருக்குமுன் காட்சிப் பொருள் ஆகுவது அவளுக்கு அறவே பிடிக்கவில்லை.
ஆனால் அவன் அத்தோடு விட்டுவிடவில்லை.
“உன் சாரியை வைத்து நான் என்ன பண்றது..ஏதோ தெரியாமல் சொல்லிட்டே..சரி அந்த தப்ப நீயே சரி செஞ்சிடு..சிம்பிள்..”
என்று அலட்சியமாய் தோளை குலுக்க அவள் பேந்த பேந்தவென விழித்தாள்.
“என்ன புரியலையா..உன் வாயாலே எல்லாரிடமும் போய் ‘ஆரியன்…நல்லவர்,உத்தமர் தேடினாலும் இப்படி ஒரு தங்கத்தை பார்க்க முடியாது…தங்கமுனா தங்கம் சொக்க தங்கம்..’ அப்படினு சொல்லிட்டு வா போ..’
‘அடப்பாவி..இது உனக்கே அடுக்குமா….உன்னை தங்கமுனு சொல்லனும்மா..வேணுனா தறுதலைனு சொல்றேன்..ஆண்டவா என்னையேன் இப்படி கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிற..’
என்று மனதில் எண்ணியவள் வெளியே பச்சமண்ணாய் முழித்தாள்.
” என்ன பார்க்கிற..ரொம்ப எல்லாம் வேண்டாம்..ஜெஸ்ட் இந்த கேன்டீனில் உள்ளவங்களுட்ட மட்டும் சொல்லிட்டு வா போதும்..”
என்றான் பெரிய மனித தோரணையில்.சுற்றியும் பார்த்தாள்..கல்லூரியின் பாதி கூட்டம் இங்கே தான் கூடியிருந்தது.
‘ரொம்பபபபப பெரிய மனசு..’
“வேணாம் சீனியர்..எனக்கு ஒரு மாதிரி இருக்கு..”
“ஏன் உனக்கு அந்த டீன்னை மட்டும் தான் புகழ்ந்து பேச தெரியுமோ..அப்ப மட்டும் இனிச்சிதோ…”
என்று நக்கல் செய்தவனின் நடுமண்டையில் நங்கென்று கொட்ட துடித்த கையை கட்டுபடுத்திக் கொண்டு வேறு வழியில்லாமல் அவன் சொன்னதை செய்வதற்காக நகர முற்பட,
“ஏம்மா..நில்லு..எங்களை எல்லாம் பார்த்தால் மனுஷனா தெரியலையா..எங்களுட்டேந்தே ஸ்டார்ட் பண்ணு..”
ஆரியரின் நண்பன் ஒருவன் கூற பல்லை கடித்தவள் சரி என்று மண்டையை உருட்டி ஆரியன் சொன்னதை அடிபிறழாமல் அப்படியே ஒவ்வொருவரிடமும் சொல்ல வந்த சிரிப்பை உதட்டை மடித்து கடித்து கட்டுப்படுத்திக் கொண்டான் ஆரியன்.
அவன் கை ஓங்கவுமே பதறி எழுந்து அருகில் வந்திருந்த ஏஞ்சலினும் சந்தியாவும் விளையாட்டாய் நினைத்தது இப்படி சீரியஸாய் ஆவதை கண்டு கவலையோடு அவளை பார்த்தபடி நின்றனர்.
“ஏய்..இது தான் சும்மா பேசுற லட்சணமா..இவனுங்களுக்கு போய் நீ வக்காலத்து வாங்குனீயே..பாவம்டி.. ஏற்கெனவே அவ ரொம்ப சென்ஸிட்டிவ்..”
“நான் நல்லவிதமாக தான்டி கேள்விபட்டேன்..இப்படி எல்லாம் பண்ணுறானுங்க…பேசாமல் போய் ஸ்டாஃப் யாரையாவது சொல்லி அழைச்சுட்டு வரட்டுமா..”
“வேற வினையே வேண்டாம்..அன்னைக்கு அவ ஏதோ கோபத்தில் முணுமுணுத்ததுக்கே இன்னைக்கு இப்படி பண்றான்.. இன்னும் கம்பளைய்ன்ட் பண்ணி அந்த வென்ஜென்ஸ்ல எதாவது மறுபடியும் தொல்லை கொடுத்தா என்ன பண்றது..”
இவ்வாறு இவர்கள் இருவரும் தங்களுக்குள்ளே கிசுகிசுக்க அந்நேரம் சக்தி அவன் சொன்னதை செய்ய தொடங்கியிருந்தாள்.
நடப்பதை எல்லாரும்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் அவள் வந்து அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் சொல்லும் போது கிண்டலான பார்வையிலும் ‘தங்கமா..எப்படிம்மா சொல்லற..உரசி பார்த்தா..’
போன்ற கேவலமான கேலி பேச்சிலும் அவளுக்கு அப்படியே பூமி பிளந்து உள்ளே போய்விட மாட்டோமா என்று இருந்தது.
கிட்டதட்ட முக்கால்வாசி பேரிடம் அவள் சொல்லி முடித்த நிலையில் அவனுக்கே பாவமாக இருந்ததோ எழுந்து அவளருகில் சென்றவன்,
“போதும்..விடு..”
என்று கூற நிமிர்ந்து அவனை ஏறிட்டவள் கண்கள் கலங்கி கண்ணீர் விழுந்துவிடவா என்று தள்ளாடிய நிலையில் அவனை சுற்றிக் கொண்டு விடுவிடுவென கேன்டீனை விட்டு வெளியேற அவள் பின்னே ஓடினர் ஏஞ்சலினும் சந்தியாவும்..
அவளது அந்த பார்வை அவனை என்னவோ செய்தது.உள்ளத்தின் ஊந்துதலில் நான்கே எட்டில் அவளுக்குமுன் சென்று நிற்க திடீரென அவன் வழிமறிக்கவும் திடுக்கிட்டு விழித்தாள். கண்ணீரின் சாயல் கன்னத்தில் இருந்தது.
“ஹேய்..ஜெஸ்ட் ஃபார் ஃபன் யா..இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற…”
என்று தன்மையான குரலிலே கூறினான்.
“உங்களுக்கு வேணும்னா இதெல்லாம் விளையாட்டா இருக்கலாம்..ஆனால் எனக்கு அப்படி இல்ல..என்னை ஆனமட்டும் அசிங்கப்படுத்திட்டீங்க..இப்போ திருப்தில…ப்ளீஸ் என்னை இனி டிஸ்டர்ப் செய்யாதீங்க..கோடி புண்ணியமாய் போகும்..”
என்றவள் அவன் பதிலுக்கு காத்திருக்கவில்லை.
‘இப்போ என்னாகிடுச்சுனு இவ இப்படி சொல்றா..’
என்று குழம்பினான் ஆரியன்.அவளது மென்மையான குணம் இப்பவரை அவனுக்கு புரியவில்லை.இதனால் பின்னால் தான் சிக்க போகும் விபரீதத்தையும் அவன் அறிந்திருக்கவில்லை.
காலையில் அவள் இருந்த உற்சாகத்திற்கு மாறாக மீதி நாள் முழுவதும் உம்மென்றே இருந்தாள்.மனம் எதிலும் லயிக்கவில்லை.
அதன்பலனாய் வெகு நேரமாகியும் அன்றைக்கு செய்த ஆய்வக சோதனையில் ரிசெல்ட் வராமல் தவித்தாள்.அவளைப்போலவே சந்தியாவிற்கும் ரிசெல்ட் வரவில்லை.
முடித்தவர்கள் மட்டும் தான் போக வேண்டும் என்று லெக்சரர் கண்டிப்பாக கூறிவிட ஏஞ்சலின் முடித்துவிட்டாலும் தோழிகளை தனியே விட்டு செல்ல மனமில்லாமல் நின்றாள்.
அதுவும் பொறுக்காத அந்த லெக்சரர் ‘நீ தான் முடித்துவிட்டாயே..ஏன் நிற்கிறாய் கிளம்பு..’ என்றுவிட,
“நீ போ ஏஞ்சி..காலேஜ் பஸ்ஸை மிஸ் பண்ணிடப்போற….நாங்க ஹாஸ்டெல் தானே..முடித்ததும் போய்போம்..”
என்று கூறி அவளை அனுப்பி வைத்தனர்.
தட்டு தடுமாறி ஒருவழியாய் இருவரும் முடிக்கும் போது
மொத்தக் கூட்டமும் கலைந்திருக்க எஞ்சியது சந்தியாவும் சக்தியும் தான்.
ரிசெல்ட்டை லெக்சரரிடம் காட்டிவிட்டு கிளம்ப எத்தனித்தவர்களை,
“கேர்ள்ஸ்..ஒரு ஹெல்ப் பண்றீங்களா..”
என்று தடுத்தார்.
“சொல்லுங்க மேம்..”
“நாளைக்கு க்லோரிஃபிகேஷன் அனலைஷிஸ் நடத்த வேண்டும்.அதற்கு XYZ ரீயேஜென்ட் ப்ரீப்பேர் செய்ய வேண்டும்..போன செம்மில் கூட செய்தோமே அதுதான்..நானே செய்திடுவேன்.பட் எனக்கு டிபார்ட்மெண்டில் ஒரு முக்கிய வேலை இருக்கு..ஸோ அதை மட்டும் ப்ரீப்பேர் செய்துவிட்டு போறீங்களா..?ஹாஸ்டெல் தானே..”
‘மாட்டேன்னு சொன்னால் மட்டும் விடவா போறே..’
“ஓகே மேம்..”
“அப்போ சரி…செய்து முடித்ததும் லேப்பை பூட்டி சாவியை டிபார்ட்மெண்டில் வந்து கொடுத்துடுங்க..ப்ரோஸீஷர் நியாபகம் இருக்குல..”
என்றபடி தனது உடமைகளை எடுத்துக் கொண்டு அவர் வெளியேறிவிட அவர் சென்றபின்,
“இந்த அம்மாக்கு மனசாட்சியே இல்லையாடி..இன்னைக்கு சொல்லிக் கொடுத்ததை செய்து முடிக்கவே திக்கி திணறி நின்றோம்..இதில போன செம்மில் உள்ளதை செய்து வைக்க சொல்லுது..”
என்று சந்தியா புலம்யதற்கு சக்தி நிமிர்ந்து பார்த்தாளே தவிர ஒன்றும் சொல்லவில்லை.
‘இவ ஏன் டல்லாவே இருக்கா..’
என்று கலவையாய் எண்ணியவள் அவளோடு பேச்சுக் கொடுத்தபடியே இருந்தாள்.
“தெரியவில்லைனு சொல்லிட்டால் அதற்கு வேறு தனியா சாமி ஆடும்..தேவையா…அந்த மேன்னுவல் எடு..அதை பார்த்து செய்வோம்..”
என்றவள் மேலும் தொடர்ந்து,
“ம்ஹூம்.. இதில் பூட்டி சாவியை கொண்டு போய் டிபார்ட்மெண்டில் கொடுக்க வேண்டுமாம்..இங்கேந்து அங்கே போயிட்டு வரதுக்குள்ளே தாவு தீர்ந்திடும்..ம்ச்..ஏன் சக்தி..பழையபடி நம்ம பில்டிங்கிலே லேப் இருந்திருக்கலாம்..”
என்க அதற்கு சக்தி,
“அக்ச்சுவலி..இது தான் பயோ கெமிஸ்ட்ரிகான லேப்-ஆம்..ஏன்னு தெரியல..கொஞ்ச வருஷத்திற்கு முன்னால இந்த C ப்ளாக்கில் உள்ள க்ளாஸ்,லேப் எல்லாத்தையும் வேறு இடத்திற்கு மாற்றியிருக்காங்க..இப்போ விஜய் சர் தான்..ஏன் இந்த ப்ளாக் சும்மா கெடகுதுனு பழையபடி மாறிவிட்டாராம்..”
என்றாள் ஒருவழியாக வாயை திறந்து..
ஆம்.. அன்று கந்தன் வந்து பார்த்த ஆய்வகம் தான் இது.தூசியும் ஒட்டடையுமாய் இருந்த இடம் தற்போது இன்றைய தேவைக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்பின் இருவரும் வேலையில் கவனமாகிவிட சற்று நேரத்தில்,
“மச்சி..ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடுறேன்டி..”
என்று சந்தியா கூறி செல்ல சக்தி தனித்திருந்தாள்.அவள் மனம் மீண்டும் காலையில் விஜயுடன் நடந்த சந்திப்பில் தொடங்கி மதியம் ஆரியனை சந்தித்ததுவரை ஒவ்வொன்றாக ஆசைப்போட்டது.
அந்த அமைதி சூழலில் பின்னால் டெஸ்ட் டியூப் எடுக்கும் சத்தம் கேட்க சந்தியா வந்துவிட்டாள் என்றெண்ணிய சக்தி,
“சந்து…ஆனாலும் பாரேன்..அந்த லேப்பைவிட இது பெருசாக வசதியா இருக்குல.. ப்லஸ்..எல்லா அட்வான்ஸுடு இன்ஸ்ரூமென்ட்டும் சேர்த்திருக்காங்க..விஜய் சர் எது செய்தாலும் ஓர் அர்த்தம் இருக்கும்டி…”
என்று சிலாகித்து சொல்ல மெல்லிய குரலில் ஆனால் ஏளனமாய் ஒர் சிரிப்பொலி அவள் காதுகளை வருடவும் கைகள் வேலை நிறுத்தம் செய்ய ஸ்தம்பித்தாள்.
‘இது சந்தியா குரல் அல்லவே..யாரிது…’
மெல்ல திரும்பியவள் எதிரே யாருமில்லை.
“சிரிப்பொலி கேட்டதே..”
என்று அவள் எண்ணும்போதே,
“வெளுத்ததெல்லாம் பாலாகிடுமா ச.க்.தி..”
என்று அசிரீரி போல் ஒலித்த குரலில் தூக்கிவாரி போட்டது.உடல் வெடவெடக்க கண்கள் அலைபாய தொண்டைகுழி ஏறியிறங்கியது.கத்துவதற்கு கூட குரல் எழுப்ப முடியவில்லை.
‘ஓடிவிடு..’ என்று உள்ளம் கூப்பாடு போட்டாலும் கால்கள் தரையோடு ஒட்டியதை போல் ஒரு அடிக்கூட நகர்ந்த முடியவில்லை.
அச்சமயம் அவள் தலையை ஒரு கை மென்மையாய் தீண்ட
அந்த வருடல் அவளுள் என்னென்னவோ செய்தது.
காற்றாய் வருடிய கை துகளாய் உருவம் பெற மெல்ல மெல்ல முழுதாய் ஓர் பெண் உருவம் அவள்முன் தோன்றியது.அஃது அதே துகளுருவம்.
அவளை பார்த்து புன்முறுவல் பூக்க விழிவிரிய நின்றவள் சற்றே கண்கள் சொருக மயங்கி சரிந்தாள்.