அவசரத்தில் அங்கே கிடைத்த ஒரு கயிற்றை எடுத்து தான் கட்டியிருந்ததால் அது பலமில்லாமல் அறுந்திருக்க பூட்டிய கதவை திறக்க முடியாமல் அங்கிருந்த பொருட்களை போட்டு உடைத்தவள் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தானாகவே இறுதியில் ஒரு டெஸ்ட் டியூப்பை கொண்டு கையை ஆழமாய் அறுத்துக் கொண்டிருக்கிறாள்.
இதனை அறியாது வெளியே நெடுநேரம் என்ன செய்வது என்று விவாதித்துவிட்டு உள்ளே வந்து அவர்கள் பார்க்கும் போது அக்னிமித்ரா பிணமாக தான் இருந்தாள்.
மூவருமே பதறி அவளை தாங்க அவள் உடம்பில் உயிரில்லை என்பதை உணர்ந்த நொடி விஜயிக்கு அப்படி ஒரு அழுகை.அவனால் அதனை ஏற்கமுடியவில்லை.சிறு வயதில் முதன்முறை அப்பாவியாய் விழித்த மித்ராவை ஆசையாய் தான் பிடித்துக் கொண்ட கை இன்று ஏகப்பட்ட வெட்டுகளோடு இரத்தில் ஊறி இருப்பதை அவனால் தாங்க முடியாமல் தன் கர்வம் எல்லாம் மறக்க கதறி அழுதான் விஜய்.
அன்றைய நினைவு இன்றும் கண்களில் கண்ணீரை ஊற்றுவிக்க அதனை விரலால் ஒதுக்கி,
“அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் கனவு மாறி இருக்கு..மித்ரா..அப்பா-அம்மாவை விட நான்தான் என் பிள்ள மாதிரி பார்த்துக்கிட்டேன்..அவள் இறப்பை என்னால ஏற்க முடியல..அவள் கொலை செஞ்சப்போ கூட இந்த பிரச்சனையில் இருந்து அவளை காப்பாற்ற முடியாதான்னு தான் என் மூளை யோசித்தது.. அவள் உயிரைவிட்டதும் உலகமே நின்னு போச்சு..அவ உயிரோட இருந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ ஆனால் இறந்த பிறகு இது எதுவும் யாருக்கு தெரியுறதை நான் விரும்பலை..எங்களோடவே இந்த இரகசியமும் புதைந்து போக நினைச்சேன்..”
“அஸ்வதன், நித்யாவோட உடம்பை அங்கேயே குழித்தோண்டி புதைச்சோம்..யாருக்கும் சந்தேகமே வராத மாதிரி ஒரு ஆதாரம் இல்லாமல் அழிச்சோம்..அக்னிமித்ரா விபத்தில் இறந்ததாக அம்மாவில் தொடங்கி எல்லாரையும் நம்ப வைச்சோம்..அது தான் உண்மைனு எல்லாரும் நம்பினாங்க..அஸ்வதன் – நித்யா ரெண்டு பேரை காணும்னு தெரியவும் ஊரை விட்டு ஓடிப்போயிட்டதாய் தானே ஒரு வதந்தி பரவுச்சு..அந்த கோபத்தில் யாரும் அவங்களை தேட கூட முனையல..ஓடிப்போனதுங்க எப்படியோ போகட்டும்னு தல முழுகிட்டாங்க..
நாள் ஆக ஆக எல்லாம் நார்மல் ஆகிடுச்சு..ஆனால் என்னால முடியல..மித்ராவோட தாக்கம் என்னை ஒரு நிமிஷம் கூட நிம்மதியா இருக்க விடலை..கண்ணை மூடினால் கூட அஸ்வதன் – நித்யா- அக்னிமித்ரா இவங்க இறந்த முகம் தான் கண்ணுமுன்னால தெரியும்..சக்தியை பற்றி யோசிக்க கூட இல்லை.கடைசியில் அவள் சொன்னது போல் தானே ஆகிவிட்டது.அவள் முகத்தில் முழிக்க கூட எனக்கு தகுதியில்லேன்னு தோணுச்சு..பைத்தியம் புடிக்கிற நிலையில் இருந்த என்னை அப்பா கெனடா அனுப்பிட்டார்.இந்த ஊரே வேண்டாம் நீ அங்கேயே இருன்னு சொல்லி வருஷம் ஓடிருச்சு..நானும் அங்கேயே என்னை பொருத்திக்கிட்டேன்..என்னை துரத்தும் அந்த நினைவெல்லாம் மறந்து நிதர்சனம் புரிய ஆரம்பிச்சது..”
“அப்பா-அம்மாக்காக ஊருக்கு திரும்பி வந்துட்டேன்..எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ நினைச்சப்போ தான் மறுபடியும் மித்ரா..”
என்று நிறுத்திய விஜய்வரதன் மெல்ல விடிய தொடங்கிய வானை வெறித்தபடி இருக்க அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆரியனும் மனோஜும் திகைத்து அமர்ந்திருந்தனர்.அவன் காரில் தான் மூவரும் அமர்ந்திருக்க நேரம் போனது தெரியாமல் தன் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தான் விஜய்.
“அஸ்வதன் – நித்யா – இதோ இப்போ சந்தானம் அங்கிள் -என்னால இந்த மரணத்தை எல்லாம் தாங்க முடியல..எல்லாம் மூளையில பேயாய் பிடிச்சு ஆட்டுது..அடுத்து யாருனு தெரியல..அப்பா பாதி உயிரா போரட்டத்தில்…யாருக்கும் முன்னாடி நான் செத்துட்டால் பரவாயில்லை..இனிமேலும் இந்த கொடுமையை சகிச்சு இந்த உலகத்தில் என்னால வாழ முடியாது..”
என்று வெறுத்துப்போய் சாய்ந்தவனை பார்க்குபோது மனம் கனத்து தான் போனது.
“அந்த பொண்ணு சக்திஸ்ரீ முதல்முறை அக்னிமித்ரான்னு மயக்கதில் சொன்னப்போவே எனக்கு சின்ன சந்தேகம் தான்.ஆனால் பிரச்சனை உன்னாலன்னு திசை மாறவும் அதை மறந்துட்டேன்..ஆனால் போலீஸிடம் அந்த டெட்பாடிஸ் பத்தி கம்பளைண்ட் இந்த சக்திஸ்ரீ தான் கொடுத்துச்சுன்னு தெரிஞ்சபோது என்னவோ இந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்குனு நினைச்சேனே தவிர இப்படி மித்ராவே ஆத்மாவாய் மீண்டு வந்திருப்பாள்னு நான் நினைக்கல..”
என்றவன் ஆரியனையும் மனோஜையும் பார்த்து,
“இதெல்லாம் ஏன் உங்களுட்ட சொல்றேன்னா நீங்க இதில் தலையிடாதீங்க..அது உங்க உயிருக்கும் ஆபத்து..நீங்க சொல்றதை வைச்சு பார்க்கும் போது இன்னும் இரண்டு நாள் இருக்கு..அதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம்..சின்ன பசங்க நீங்க…இதில் நீங்களா உள்ள வந்து ஆபத்தில் மாட்டீக்காதீங்க..என் உயிரே போனாலும் சரி சக்திஸ்ரீயை காப்பாற்றுவது என் பொறுப்பு”
என்று உறுதியாய் சொல்ல அதுவரை வாயே திறக்காத ஆரியன்,
“சாரி சர்..உண்மை தெரியாமல் நான் உங்களை ரொம்ப பேசிட்டேன்..ஆனால் உங்களோடவே நாங்க இருக்கோம் சர்..எந்த பிரச்சனை வந்தாலும் நாங்களும் கூட உங்களுக்கு துணையா இருப்போம்..”
என்று ஆரியன் சொல்ல மனோஜூம் அதனை ஆமோதித்து தலையசைத்தான்.எதுவும் சொல்லாமல் காரை இயக்கி சற்று நேரத்தில் வி.எஸ் இல்லத்தை அடைந்தவன் ஆரியனின் பைக்கின் அருகில் வண்டியை நிறுத்தி,
“இறங்குங்க..”
என்றான் அழுத்தமாய்.
“சர்.. “என்று இழுத்தவர்களை” நான் உங்களுட்ட பர்மிஷன் கேட்கல..இட்ஸ் மை ஆர்டர்..முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க..மறுபடியும் எந்த இடத்திலும் நான் உங்களை பார்க்க கூடாது..நாளைக்கு நீங்க க்ளாஸில் இருக்கீங்களான்னு நான் பெர்ஷனலா செக் பண்ணுவேன்..இல்லேன்னு தெரிஞ்சுது உங்க பேரண்ட்ஸ் வர வைச்சு அவங்களுட்ட பேசுற விததில் பேசுவேன்..மைண்ட் இட்..”
என்று கல்லூரி நிர்வாகியாய் மாறி ஆணையிட மறுப்பேச்சு இன்றி இறங்கினர்.
வண்டியை எடுக்க சென்ற ஆரியன் மீண்டும் விஜயிடம் வந்து,
“நீங்க அதுக்கப்புறம் சக்திப்ரியா…அவங்களை பார்க்கவே இல்லையா சர்”
என்று கேட்க இறுகிய முகத்தோடு ‘இல்லை’ என்று தலையசைக்க “ஏன் சர்..?”
என்றான்.
“அக்னிமித்ரா இறுதி சடங்கில் அவள் வந்திருந்தாள்…என்னிடம் பேச எவ்வளவோ ட்ரை பண்ணினாள்..ஆனா என்னால முடியல..அவ சொன்னது தான் உண்மையாகிடுச்சு.. அதை அவளுட்ட ஒத்துக்க என்னால முடியல..அவளுக்கு உண்மை தெரிஞ்சால் என்னை கண்டிப்பா வெறுத்துப் போயிடுவா..அவ என்னால தான் அக்னிமித்ரா இறந்தால்னு சொல்லிட்டால்… அதை என்னால தாங்கவே முடியாது..அந்த வார்த்தையை அவள் சொல்லி கேட்டுவிட கூடாதுனே அவளை விட்டு மொத்தமா விலகிட்டேன்..”
என்று ஸ்டெயரிங்கை அழுத்தப்பிடித்துக் கொண்டு சொன்னவனை பார்த்து,
“அப்போ சரி..இப்போ கூடவா சர் பார்க்க முயற்சி பண்ணல..”
என்று மீண்டும் கேட்க “ம்ச்..நீ என்ன என்னை கேள்வி மேல கேள்வி கேட்கிற..கிளம்புங்க முதல்ல..”
என்று அதட்ட அவனோ அசராமல் “நீங்க இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க சர்..நாங்க போயிடுறோம்..”
கேட்க எரிச்சலாய், “என்ன பார்க்க சொல்ற..இத்தனை வருஷத்தில் அவளுக்கு கல்யாணம் அகி இருக்கும்..அவள் கல்யாணம் ஆகி குடும்பத்தோடு இருக்கிறதை பார்த்து வாழ்த்திட்டு வர சொல்றீயா..அந்த பெரிய மனசு எல்லாம் என்னிடம் இல்ல..”
என்றவன் சட்டென்று வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிவிட விஜய் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஆரியனின் தோளில் கைவைத்த மனோஜ்,
“நாணயத்திற்கு இரண்டு பக்கம்னு சொல்றா மாதிரி இவரோட இன்னோர் சைட்..ரொம்பவே பாவம்டா மனுஷன்..பாசம் வைச்சதை தவிர என்ன தப்பு பண்ணினார்..ம்ச்..”
என்று வருத்தமாய் கூறி, “அடுத்து என்ன பண்றது..?”
என்று கேட்க பெருமூச்சு விட்டவன் பைக்கில் ஏறி அதனை இயக்கி மனோஜ் ஏறியதும் புறப்பட்டான்.
“நாளைக்கு காலேஜ் போவோம்..அப்புறம் என்ன செய்றதுனு யோசிக்கணும்..ஏஞ்சலின் ஏதோ பேய் ஆராய்ச்சி பண்றவங்களை தெரியும்னு சொன்னுச்சுல..அவங்களை பார்க்கணும்..வீட்டுக்கு போனதும் முதலில் நீ அந்த பொண்ணுட்ட பேசி விஷயத்தை சொல்லு..”
என்று சொல்ல சரிடா என்றவன் பின்பே நினைவு வந்து,
“அய்யோ..என் ஃபோனை அந்த வீட்டிலே போட்டு வந்துட்டேன் டா..”
என்று தலையில் கைவைக்க, “வேணும்னா ஒரு யு டேன் போடுறேன்..போய் எடுத்துட்டு வாயேன் மனோஜ்..”
என்று கேலியாய் சொல்ல தலைமேல் கைக்கூப்பி,
“தெய்வமே..நான் புது ஃபோன்னே வாங்கிப்பேன்..நீ நல்லபடியா என்னை வீட்டில் சேர்த்திடுப்பா..”
என்றான் அவசரமாய்..
***
ஆரியனின் கேள்வியில் மனம் முழுதும் மீண்டும் சக்திப்ரியாவின் நினைவுகள்!!! அன்று சொன்னது தான் இன்று வரை..விஜய் வரதனிற்கு சக்திப்ரியா மட்டும் தான்..எத்தனை வருடங்கள் ஆனாலும் அவன் மனம் அதில் தளரவில்லை.ஒருநாளும் அவளை மறந்ததும் இல்லை.எத்தனை இரவுகள் அவள் நினைவில் உறங்காமல் தவித்திருக்கிறான் என்பதற்கு அவன் அறையில் உள்ள அத்தனை பொருளும் சாட்சி..!!
அவளோடு பேசிய ஒவ்வொறு வார்த்தைகளையும் நினைவு பெட்டகத்தில் பொக்கிஷமாய் சேமித்து கனவிலே அவளோடு வாழ்பவன் நிஜத்தில் அவளை தேட விழையவில்லை.
எங்கே அவள் இன்னொருவர் மனைவி என்று தெரிய வந்தால் அவளை கனவில் கூட நினைத்து வாழ முடியாது என்பதால் அதனை அவன் செய்யவே இல்லை.அதற்கு அவன் காதலித்த அதே பெண்ணாகவே மனதில் இருக்கட்டும் என்று இருந்தான்.ஆம்..!! காதல் விசித்திரமானது தான்..!!
பல சிந்தனைகளோடு மீண்டும் மருத்துவமனைக்கே வந்து சேர்ந்தான் விஜய்.தந்தையின் உடலில் எந்த மாற்றமும் தெரியவில்லை.அடுத்து என்ன செய்ய காத்திருக்கிறாளோ என்ற பதட்டத்தோடே நேரம் கரைந்தது.