காலை ஆறு மணிக்குஎழுந்த
சிதம்பரம், மகன் மதுசூதனன் உடன் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் வாக்கிங் செல்வதற்காக கிளம்பினார்.
பொதுவாக தூங்கிக்கொண்டு இருக்கும் வீட்டு பெண்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று
சிதம்பரம் தன்னிடம் இருந்த சாவியை கொண்டு வெளி கதவை பூட்டிவிட்டு செல்வார் .
அந்த பூட்டை உள்ளிருந்தும் திறந்து கொள்ளலாம். சிறிது நேரம் கழித்து 6:30 மணிக்கு எழுந்த மதுமிதா வாக்கிங் செல்வதற்காக டி ஷர்ட் பேண்ட் அணிந்துகொண்டு தயாராகி தன் அறையில் இருந்து வந்தாள்.
தாயை சமையலறையில் தேடினாள். அவர் அங்கு இல்லை. பின்பு பெற்றோர்களின் அறைக்கு சென்று பார்த்தாள். அங்கு அவர் படுத்துக் கொண்டிருந்தார். பொதுவாக அவர் ஆறரை மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். மணி இப்போது 7 ஆகிறது. இன்னும் எழுந்திருக்க வில்லை என்றால் ஒரு வேளை உடம்பு சரி இல்லையோ என்று நினைத்துக்கொண்டு அவரின் அருகில் சென்றாள் மதுமிதா. அவர் தூங்கவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. தாயின் நெற்றியில் கை வைத்தபடி
“என்னம்மா உங்களுக்கு உடம்பு சரி இல்லையா? இவ்வளவு நேரம் படுத்துட்டு இருக்கீங்க.” என்று கலக்கத்துடன் விசாரித்தாள் மதுமிதா.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை மது. கொஞ்சம் மனசு சரியில்லை. அவ்வளவுதான்.” என்று கூறினார்.
“மனசு சரியில்லையா வீட்ல ஏதாவது பிரச்சனையா? சொல்லவே இல்லையே?” என்று விசாரித்தாள் மதுமிதா.
“வீட்ல ஒன்னும் பிரச்சனை இல்லை மது. இன்னைக்கு எங்க அம்மாவோட இறந்தநாள். அதான் அவங்க ஞாபகம் வந்துடுச்சு.” என்று சோகமாக கூறினார்.
“ஓ அப்படியா? சரி நீங்க வீட்ல இருந்தா இதைப் பற்றியே நினைச்சிக்கிட்டு இருப்பீங்க. என் கூட வாங்க. வாக்கிங் பண்ணிட்டு காத்து வாங்கிட்டு வரலாம். மனசுக்கு ஆறுதலா இருக்கும்.” என்று தாயை கூப்பிட்டாள்.
“இல்லமா. நான் இன்னிக்கு வாக்கிங் வரல.” என்று மறுத்தார் வள்ளி.
“அம்மா நீங்க இன்னிக்கி தான் கண்டிப்பா வாக்கிங் வரணும்.” என்று அவர் கையை பிடித்து எழுப்பினாள் மதுமிதா.
“சொன்னா கேக்க மாட்டியே” என்று கூறியபடியே எழுந்து சல்வார் அணிந்துகொண்டு மதுமிதா உடன் கிளம்பினார் வள்ளி.
“கார்ல போலாமா, இல்லை நடந்து போகலாமா அம்மா?”
“பத்து நிமிஷம் நடந்தா பார்க்க வரப்போகுது. இதுக்கு எதுக்கு கார்? நடந்தே போகலாம் மது.”
“சரி மாவாங்க.” என்று அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
இருவரும் நடந்து கொண்டிருந்தனர். வள்ளி பேச ஆரம்பித்தார்
“நானும் உங்க அப்பாவும் லவ் பண்ணினோம். அப்போ உங்க அப்பாவுக்கு சென்னையில சேல்ஸ் டாக்ஸ் ஆபீஸரா வேலை கிடைச்சது. ஒரு மாசம் சம்பளம் வாங்கின அவர், வந்து என்னை பெண் கேட்டார். எங்க வீட்டில ஒத்துக்கவே இல்லை. அதனால நாங்க ரெண்டு பேரும் இங்க ஓடி வந்து கல்யாணம் பண்ணி இங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆயிட்டோம்.
அதனால எங்க ரெண்டு பேர் வீட்லயும் எங்களை சேர்க்கவில்லை. எங்க அப்பா உயிரோடு இருந்த வரைக்கும் என்கிட்ட பேசவே இல்லை. அவர் இறந்த செய்தி கேட்டு போய் பார்த்துட்டு வந்தேன். அப்பவும் என்கிட்ட யாரும் முகம் கொடுத்து பேசவில்லை. எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் அப்படியே எங்க அப்பா மாதிரி. அதனால அவனும் என்கிட்ட பேசவே இல்லை. ஆனால் அம்மாவுக்கு தான் என்கிட்ட பேசாம இருக்கறது ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்பா இறந்த கொஞ்ச நாளில் அம்மாவுக்கும் உடம்பு சரியில்லாம போயிடுச்சு. அவங்க கடைசி காலத்திலே நான் போய் பார்த்தேன். அப்போது தான் இந்த நகை செட்டை எனக்கு குடுத்துட்டு இறந்து போயிட்டாங்க.
அந்த நகை எங்க பாட்டியோட நகை. அதை எங்க அம்மா எனக்கு கொடுத்தாங்க. அது நம்ம கிட்ட இருக்கும் போது எங்க அம்மா என் கூட இருக்கிற மாதிரி ஒரு நினைப்பு.” என்று முடித்தார் வள்ளி.
“அவ்வளவு சென்டிமென்டல் வேல்யூ இருக்கிற நகையை நான் எடுத்துட்டு போய் தொலைச்சிட்டு வந்துட்டேன். உங்களுக்கு என் மேல கோபம் வரல?”
“எனக்கு உன் மேல கோபம் எதுவும் இல்லை. ஆனால் நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்ககிட்ட இருக்கவேண்டிய நகை வேறு யார் கிட்டயோ இருக்கிறது எனக்கு வருத்தமா இருக்கு.”
“அம்மா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. நான் தான் தேனி போலீஸ் ஸ்டேஷன்ல அவன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறேன் இல்லையா? கிடைக்கும்.
ஏதோ அடிதடி பிரச்சனைனு தான் அவன் மேல நான் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறேன். காஸ்ட்லியான நகையை திருடிட்டு போயிட்டான்னு கம்ப்ளைன்ட் கொடுத்தா ஒருவேளை அவங்க கண்டுபிடித்து இருப்பாங்களோ என்னமோ!
நீங்கதான் நகையை பற்றி எதுவும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டீங்க. அதனால் நான் அதைப்பற்றி எதுவும் சொல்லல.”
“ஆமாம் மது . ஏற்கனவே அண்ணனுக்கும் அண்ணிக்கும் இந்த நகை எங்க அம்மா என்கிட்ட கொடுத்தது பிடிக்கவே இல்லை. என்மேல அவங்க ரொம்ப கடுப்பா இருக்காங்க. இந்த நேரத்துல நகை தொலைஞ்சு போச்சுன்னு தெரிஞ்சது, வீடு தேடி வந்து பரம்பரை நகையை பத்திரமா வச்சுக்க தெரியலைன்னு பிரச்சனை பண்ணிட்டு போவாங்க. எதுக்கு தேவையில்லாம பிரச்சனைனு தான் இதைப்பற்றி கம்ப்ளைன்ட் பண்ண வேணாம்னு சொல்லிட்டேன்.
சரி விடுங்கம்மா. எப்படியும் போலீஸ் அவனை தேடி கண்டுபிடிச்சுடுவாங்க. கண்டுபிடித்ததும் எனக்கு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க.
நானும் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி கேட்டுட்டு தான் இருக்கேன். அப்படி கண்டுபிடிச்சிட்டா நாம அந்த நகையை அவன்கிட்ட இருந்து வாங்கிடலாம்.”
“கீதா சொல்றதை வச்சு பார்த்தா அவன் திருடி இருப்பான்னு எனக்கு தோணல. அப்படியே திருடி இருந்தாலும்
எப்படிமா கண்டுபிடிப்பாங்க? நீ அவனை பார்க்கவே இல்லை. பார்த்து கீதா மட்டும்தான். அவளும் அவனோட போட்டோ எதுவும் வச்சு இல்ல. பப்ளிக் யாரும் சாட்சி சொல்ல வர மாட்டாங்க. அப்படி இருக்கும்போது எப்படி கண்டுபிடிக்க முடியும்?”
என்று தாய் கேட்க மதுமிதா பதில் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் இருவரும் பூங்காவை அடைந்திருந்தனர். பூங்காவில் சிதம்பரம் மதுசூதனன் இருவரும் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
இவர்களை பார்த்ததும் இவர்களிடம் வந்தனர் . இரு பெண்களும் அங்கு இருந்த சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தனர்.
மனைவியின் சோகமான முகத்தை பார்த்த சிதம்பரம் மகளிடம் ‘என்ன ஆச்சு’ என்பது போல கையை சைகை காட்டி கேட்டார்.
மதுமிதா அவரது காதில்
“இன்னிக்கி பாட்டியோட இறந்தநாளாம். அதனால அம்மா சோகமா இருக்காங்க.”
“ஓ அப்படியா?” என்று கேட்டுக் கொண்டவர் மனைவியிடம் திரும்பி
“வள்ளி என்ன அம்மா ஞாபகமா?” என்று விசாரித்தார்.
“ஆமாங்க. நம்ம ரெண்டு பேருக்கும் தான் சொந்தக்காரங்க யாருமே இல்லாம போயிட்டாங்க. நம்ம பசங்களுக்காவது நிறைய சொந்தங்கள் அமையனும்.” என்று ஏக்கத்துடன் கூறினார் வள்ளி.
“ ஆமாம் வள்ளி எனக்கும் அந்தக் குறை இருக்கு. உனக்கு அம்மா அப்பா உயிரோட இல்லை. எனக்கு அம்மா அப்பா உயிரோட இருந்தாலும் என் கூட இதுநாள் வரைக்கும் பேசவே மாட்டேங்குறாங்க.
ஆனால் நான் உனக்கு ஒரு வாக்கு தருகிறேன். என்னோட பிள்ளைகளுக்கு நம்மள மாதிரி கல்யாணம் நடக்காமல் நிறைய சொந்த பந்தங்கள் இருக்கிற குடும்பத்தில் பொண்ணு, மாப்பிள்ளை எடுத்து கல்யாணம் கோலாகலமா பண்ணலாம்.” என்று கூறினால்c சிதம்பரம்.
அதற்குள் மதுசுதன்
“என்னது நீங்க மட்டும் ஜாலியா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி கொள்வீர்கள். நான் மட்டும் நீங்க பார்க்கிற பொண்ணை கல்யாணம் பண்ணிகொள்ளணுமா? நல்ல நியாயமா இருக்கே.” என்று போர்க்கொடி தூக்கினான்.
“அடப்பாவி அப்போ நீ யாரையாவது லவ் பண்றியா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் மதுமிதா.
“நான் நிறைய பேரை லவ் பண்றேன். ஆனால் யாரும் என்னை லவ் பண்றது கிடையாது.” என்றான் சோகமாக இதனை கேட்டதும் வள்ளி சிரித்தார்.
பின்னர் இந்த மக்கு பையனை யார் லவ் பண்ணுவா?” என்று கிண்டல் அடித்தாள் மதுமிதா.
“என்னடி? என் பையனை பார்த்து மக்குனு சொல்ற. இன்ஜினீயரிங் முடிச்சுட்டு கை நிறைய சம்பளம் வாங்கிட்டு இருக்கான். அவனுக்கு என்னடி குறைச்சல்?”
“ அறிவுதான்! அறிவுதான் கொஞ்சம் குறைச்சலா இருக்கு.” என்றாள் மதுமிதா.
“அப்படி குறைச்சலா இருந்தால் அவனால் வேலை செய்யற இடத்துல நல்ல பேரை வாங்க முடியுமா?” என்று மகனுக்காக பரிந்து பேசினார் வள்ளி.
“ ஆமாம் அதே டவுட்டுதான் எனக்கும். எப்படியோ இந்த மக்கு அண்ணன் அந்த கம்பெனியில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கு. அது எப்படின்னு அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.” என்று வானத்தை நோக்கி கை காட்டினாள் மதுமிதா.
“அப்பா அம்மா இந்த மக்கு அண்ணன் எப்படியாவது போகட்டும். நான் உங்களுக்கு ஒரு பிராமிஸ் பண்றேன். நீங்க சொல்ற மாப்பிள்ளையை தான் நான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன். அது எந்த கழுதை, குதிரை, எருமை மாடாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்க எனக்கு போட்டோ கூட காட்ட தேவையில்லை.”
என்று கூறினாள் மதுமிதா.
“ என்னோட கல்யாணம் உங்க ரெண்டு பேரோட இஷ்டம். ஓகேவா? நிறைய சொந்தக்காரர்கள் இருக்கிற இடமா நீங்க ரெண்டு பேரும் பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க.” என்று உறுதியாக கூறினாள் மதுமிதா.
“பார்த்தியா என் பொண்ணை! சரி மா. நான் உனக்கு மாமியார், மாமனார், நாத்தனார் அப்படின்னு நிறைய சொந்தக்காரங்க இருக்கிற இடமா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.
நாங்க ரெண்டு பேரும் தஞ்சாவூர் பக்கத்துல இருக்குற கிராமத்திலே பிறந்து வளர்ந்தவர்கள். உனக்கு அந்த ஊர் பக்கம் மாப்பி
ள்ளை அமைந்தால் நல்லா இருக்கும். பார்க்கலாம். நம்ம கையில என்ன இருக்கு எல்லாமே அவன் கையில தான் இருக்கு.” என்று மேலே கை காட்டினார்.
அப்போது மதுசுதன் மேலே தெரிந்த மரத்தை பார்த்தான்.
“அந்த மரத்துல யாருமே இருக்கிற மாதிரி தெரியலையே?” என்று தலைமீது கைவைத்து தேடியபடி கேட்டான்.
“இப்ப தெரியுதா அம்மா உனக்கு? நான் எதுக்கு அண்ணனை மக்கு அண்ணன்னு சொல்றேன்னு.” என்று தாயை பார்த்து கேட்டாள் மதுமிதா.
“சும்மா காமெடி பண்ணினேன்.” என்று சிரித்தான் மதுசூதனன்.
“இந்த மாதிரி மொக்கை காமெடி எல்லாம் பண்ணாத மக்கு அண்ணா. ப்ளீஸ்.” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் மதுமிதா.
இவர்களைப் பார்த்த பெற்றவர்கள் கவலையை மறந்து சிரித்தனர்.
மதுமிதாவிற்கு மாப்பிள்ளை அமைவது அந்த மரத்திற்கு மேலே அல்ல, பின்னால் ஒளிந்திருந்த அவனது கையில் தான் இருக்கிறது என்பதை அப்போது அந்த குடும்பத்தினர் எவரும் அறியவில்லை.